“என்ன நடக்குது அங்க?…” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்க நடந்ததை சாதனாவும் விவரிக்க,
“நான் பேசிக்கறேன்…” என சொல்லி வைத்துவிட்டவன் உடனே தன் தந்தைக்கு அழைத்தான்.
“சொல்லு அக்னி…” என்றவரின் குரலில் எல்லோரின் பார்வையும் அவரிடம் மையம் கொண்டது.
“என்ன பன்றீங்க அங்க?…” என்றான் இறுகிய குரலில்.
“அக்னி…”
“முதல்ல கிளம்பி வீட்டுக்கு வாங்க. பேசிக்கறேன்…” என சொல்லிவிட்டு வைத்துவிட அவர் நேராக சாதனாவை பார்க்க அவளும் ஆமோதிப்பாய் தலையசைத்தாள்.
“நாங்க கிளம்பறோம் யோகேஷ்…” என பன்னீர்செல்வம் எழுந்துகொள்ள பார்க்க,
“இன்னும் பேசியே முடிக்கலை. அதுக்குள்ளே கிளம்பினா எப்படி?…” என கேட்டவருக்கு பதில் சொல்லும் முன்,
“ஆமாம் பெரியப்பா. மாமா இவ்வளவு தூரம் சொல்றாரே…” என சொல்லிய சுரேனை ஒற்றை பார்வையில் அடக்கியவராக,
“தம்பி கிளம்புவோம்…” என அடைக்கலத்தை பார்த்து சொல்ல,
“தாராளமா. கிளம்புவோம் அண்ணா…” என்றவர் எழுந்து கொள்ள,
“சம்பந்தி…” என யோகேஷ் மீண்டும் பேச,
“அப்பா, கிளம்பறோம். ஊர்ல ஆயிரம் வேலை இருக்கு. ஒத்தையா அக்னி மாமா பார்த்திட்டு இருக்கார். பூஜை தான் முடிஞ்சதுல…” என சொல்லியவள் வழக்கம் போல ஓரமாய் இருந்த தாய் பரிமளாவிடம்,
“இன்னைக்கு அப்பாட்ட பேச்சு குடுக்காதீங்கம்மா. அதே மாதிரி இந்த சம்பந்தம் நடக்காது. தங்கச்சியை பார்த்துக்கோங்க. வரேன்…” என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.
இவர்கள் வீட்டிற்கு வந்து சேரும் நேரம் அங்கே அக்னி அமர்ந்திருந்தான். கோபத்துடன் அமர்ந்திருப்பான் என்று பார்த்தால் யோசனையுடன் அமர்ந்திருந்தான்.
“அக்னி…” என சந்திரிகா வேகமாய் மகனிடம் வந்தவர்,
“உன்கிட்ட சொல்லாம போனது தப்புதான். ஆனா நீ இப்படியே இருக்கலாமா? எவ்வளவு நாள் ஆச்சு, எனக்கும் என் பையனுக்கு கல்யாணம் செய்யனும்னு ஆசை இருக்கும்ல. இதுக்கு கோபப்படாத அக்னி…” ஒரு சராசரி தாயாய் அவர் பேச,
“எனக்கு எந்த கோபமும் இல்லைம்மா. நீங்க ஏன் அப்படி நினைக்கறீங்க?…” என்றவன்,
“கல்யாணம் தானே பண்ணிட்டா போச்சு…” என்றான் இலகுவான குரலில்.
“நிஜமாவா? அப்ப சஹானாவை பேசிருவோமா?…” என வேகமாய் சுரேன் கேட்க அவனை ஒரு பார்வை பார்த்தவன்,
“அப்பா எனக்கு ஒரு பொண்ணை பிடிச்சிருக்கு. கல்யாணம் செஞ்சு வைங்க…” என அதிரடியாய் சொல்ல திடுதிப்பென்று அவன் சொல்லியதில் பன்னீர்செல்வமும், அடைக்கலமும் லேசாய் புன்னகைக்க சந்திரிகா அதிர்ச்சியுடன் பார்க்க, சாதனா ஆச்சர்யத்துடன் பார்த்தாள். சுரேன் இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.
“அக்னி நிஜமாவா சொல்ற?…” என்று சுபா தான் வாயை திறந்தார்.
“ஆமாம் சித்தி…” என்றவன்,
“பொண்ணு யார் என்னன்னு சொல்லுப்பா முதல்ல…” என கேட்டபடி அமர்ந்தார் பன்னீர்செல்வம்.
“இனியகீர்த்தனா. தங்கதுரை அவரோட பொண்ணு…” என்றதும் அனைவருக்குமே யார் என ஒரு நொடி புரியவில்லை.
“நீ யாரை சொல்ற அக்னி? அந்த ஸ்ரீநிவாஸ் மச்சினிச்சியவா?…” என சரியாக சுரேன் கேட்டதும் தான் கீர்த்தனாவின் முகமே ஞாபகத்திற்கு வந்தது.
அவள் இங்கு வரும் பொழுதுகளில் எல்லாம் பொது இடங்களில் பார்த்திருக்கிறார்கள் தான். பேசியதில்லை. இது எப்படி? என அக்னியை பார்க்க அவனின் முகத்தில் இருந்த தீவிரமே அவன் எந்தளவிற்கு உறுதியுடன் இருக்கிறான் என்பதை காட்டியது.
“நல்லா யோசிச்சு தான் முடிவு செஞ்சிருக்கியா அக்னி…” சந்திரிகா கேட்க,
“பொண்டாட்டின்னு வரும் போது என்னால வேற யாரையும் யோசிக்க முடியலை. அவ முகம் தான் ஞாபகத்துக்கு வருது. எனக்கும் பிடிக்குது…”
“இதை முன்னாடியே சொல்லிருக்கவேண்டியது தானே?…” என சுபா கேட்க,
“ப்ச், இப்ப தான் சொல்ல தோணுச்சு…” என்றவிதமே இதை பற்றி மேலும் துருவாமல் இருங்கள் என்பது போல இருந்தது.
பன்னீர்செல்வமும், அடைக்கலமும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள சுரேனின் முகத்தில் அப்பட்டமான அதிருப்தி.
“அக்னி, எனக்கென்னமோ இது சரிப்படும்னு தோணலைப்பா…” என சந்திரிகா சொல்ல,
“அதைப்பத்தி யோசிக்கலைம்மா. செஞ்சு வைங்கன்னு சொல்லிட்டேன். இனி உங்க விருப்பம்…” என்றவன் இனி உங்கள் பாடு என்பதை போல கிளம்பி தொழிற்சாலைக்கு சென்றுவிட்டான்.
“என்னங்க இது?…” என கணவரிடம் கேட்க,
“இரும்மா, உடனே ஏன் முடிவு பண்ணனும்? பார்ப்போம்….” என்ற பன்னீர்செல்வம்,
“தம்பி, உங்கட்ட பேசனும், வாங்க…” என்று அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.
இருவரும் ஒரு வீட்டில் பெண் எடுத்திருந்தாலும் அடைக்கலத்தின் மரியாதைக்கு எந்த குறைவும் வந்ததில்லை பன்னீர்செல்வத்தின் பக்கமிருந்து.
தம்பி, அண்ணா என்று அழைத்தாலும் மரியாதை நிமித்தம் சிறு இடைவெளி இருந்தாலும் அவர்களுக்குள் புரிதலுடனான நட்புணர்வு இழையோடியது. அதுவே இத்தனை வருடம் அவர்களை பிடித்துவைத்திருந்தது.
“பெரியம்மா இதுக்கு சம்மதிக்காதீங்க. அந்த குடும்பம்…” என வேகமாய் சுரேன் பேச,
“சுரேன், இன்னொரு குடும்பத்தை மதிப்பிட நமக்கு உரிமை இல்லை. பேசாம இரு…” என்று அவனை அதட்டினார் சுபா.
“இங்க பாருக்கா, இது அக்னி வாழ்க்கை. அவன் விருப்பம் முக்கியம். அவசரப்பட்டு வேண்டாம்னு மறுக்காத. மாமா சொன்ன மாதிரி பொறுமையா யோசி…” என சுபா அடைக்கலத்தின் மனைவி என நிரூபித்தார்.
ஒருவழியாக அனைவரும் பேசி திருமணத்திற்கு சம்மதமும் சொல்லிவிட இதோ நினைக்கவே இனித்தது அவனுக்கு.
“பேச வைக்கிறதுக்கு அவசியமில்லை. ஆனா நான் அவக்கிட்ட பேசனுமா? என்ன பேச?” என நினைத்தவனின் முகத்தில் ஒரு விரிந்த புன்னகை.
“இந்த விளையாட்டை எல்லாம் என்கிட்டே வச்சுக்காத. என் பேர் மட்டுமில்லை, நானும் அக்னி தான். அப்பறம் பத்திக்கிச்சுன்னு பஞ்சாயத்து பண்ண கூடாது. புரியுதா?…” அவளிடம் அவன் பேசிய முதல் பேச்சே இது தான்.
“ரொம்ப ஓவர்டா உன் பேச்சு. ஏடாகூடமா பேசி வச்சிருக்க. ஊரெல்லாம் நீ பேசறதில்லைன்றாங்க. அவகிட்ட நீ பேசினதை கேட்டா நம்ப மாட்டங்க யாரும்” என நினைத்தவன் தலையை கோதிக்கொண்டான்.
சஹானா போன் செய்து சொன்ன பொழுது கூட அவனுக்கு அப்பட்டமான கோபம் தான். வீட்டிற்கு வந்தவன் மனது நிலைகொள்ளாமல் தவித்தது.
பேச்சளவில் கூட இன்னொரு பெண்ணோடு சேர்த்து நினைக்கவே ஒப்பவில்லை. அந்த நினைவே கசந்தது.
“பொண்ணு பார்க்கறாங்களாம் பொண்ணு. ப்ச், கல்யாணம் பண்ணியே தீரனுமா? எனக்கு புடிச்சா பண்ணிக்க மாட்டேன்” என தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தவன்,
“பண்ணிக்கலாமே. ஆனா எனக்கு புடிக்கனுமே” என்றவன் தனது முகத்தை கண்ணாடியில் பார்க்க பார்வை சட்டையில் பதிந்தது.
இளமஞ்சள் நிற சட்டை. வழக்கம் போல அதை தடவிப்பார்த்தவன் கண்களுக்குள் கீர்த்தனா. அந்த நிறத்தை எங்கு பார்த்தாலும் அவனுள் அவளின் முகம் மின்னி மறையத்தான் செய்யும். உதட்டில் ரகசியமாய் நகைப்பு தோன்ற,
“பண்ணிக்கலாம் தான். கீர்த்தனாவை பண்ணிக்கலாம்…” என வாய்விட்டே சொல்லியவன் மனது இப்பொழுது சமன்பட்டது.
“இது தெரியாம இத்தனை நாள் இருந்துட்டேன். என்ன ஆள் நான்? எனக்கு அவளை பிடிச்சிருக்கு. கல்யாணம் செஞ்சுக்கவும் ஆசை இருக்கு. அவளுக்கு என்னை ஞாபகம் இருக்குமா?” இப்படி யோசித்தவன்,
“அது எப்படி மறக்கும்? நிச்சயம் என்னை மறந்திருக்கமாட்டா. ஆனா பிடிக்கனுமே. பிடிக்க வச்சிடுவோம்.” என உறுதியாக நம்பினான்.
அதன் பின்னரே கோபம் குறைந்து மனது ஒரு நிலைக்கு வந்தது. அதன் பின் இதை வீட்டினர் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்ற யோசனை. அதனோடே கீழே சென்று அவர்களுக்காக காத்திருந்தான். தனது விருப்பத்தை முடிவாய் சொல்லிவிட்டான்.
“நாளை திருவிழா. கீர்த்தனா கோவிலுக்கு வருவா. பார்ப்போம்” என நினைத்தபடி அங்கேயே கண்மூட உறக்கம் கண்களை தழுவவும் எழுந்து அறைக்கு சென்றான்.
—————————————————————–
“என்னக்கா மாமா இந்நேரம் எங்க கிளம்பறார்?…” என மாடிப்படியில் அமர்ந்திருந்த கீர்த்தனா கேட்க,
“ப்ச், வேற எங்க போவார்? எல்லாம் அத்தை வீட்டுக்கு தான். அங்க கொண்டு வர சொல்லிட்டாங்க. அவருக்கும் சேர்த்தே வச்சுவிட்டுட்டேன். சாப்பாடு கொண்டு போய் குடுத்துட்டு வினயை கூட்டிட்டு வருவார்…” என்ற ராகா,
“சாப்பிட்டாச்சா நீங்க?…”
“ம்ஹூம், இன்னும் இல்லை. வாயேன் அம்மா கோதுமை தோசை சுடறாங்க…” என்று அவளையும் இழுத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைய அந்த ஹாலே மணத்தது.
நன்றாக கரைக்கப்பட்டிருந்த கோதுமை மாவில் வெந்தையம், கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, தனியா, வத்தல் எல்லாம் எண்ணையில்லாமல் வறுத்து அரைக்கப்பட்ட பொடியை கலந்து கறிவேப்பிலை, வெங்காயத்தை பொடியாக அரிந்துபோட்டு மணக்க மணக்க தோசை வார்த்துக்கொண்டு இருந்தார்.
தோசைக்கல்லில் ஊற்றும் பொழுது சுர்ரென்ற சத்தத்துடன் அதில் கலந்திருந்த பெருங்காய தூளும், பச்சை வெங்காயமும், கறிவேப்பிலையும் வாசனையுடன் பசியை கிளப்பியது.
“அம்மா தோசைக்கு என்ன சட்னி செஞ்சிருக்க?…” என கேட்க,
“உனக்கு புடிச்ச வரமிளகாய் சட்னி தான்…” என்றபடி ராகாவுக்கு ஒரு தட்டில் போட்டு கொடுக்க வாங்கிக்கொண்டவள் சாப்பிட ஆரம்பித்தாள்.
“எப்படி இருக்கு, சுள்ளுன்னு ருசி அள்ளுதுல…” என கேட்ட தங்கைக்கும் ஒரு வாய் ஊட்ட இருவரும் ஒரே தட்டில் வைக்க வைக்க சாப்பிட்டனர்.
“அப்பா அதுக்குள்ளே தூங்கிடாங்கம்மா…” என அங்கே கட்டிலில் பட்டது உறக்கத்தில் இருந்த தந்தையை பார்த்துக்கொண்டே கேட்க,
“ஆமான்டி, அசதி போல. அதான் அவருக்கு சீக்கிரமே சுட்டு குடுத்துட்டேன். உன் தங்கச்சிக்கு கரைச்ச மாவு அரைமணி நேரம் ஊறனும்ல. அதான் இப்ப ஊத்தறேன்…”
“ம்மா, உண்மையை சொல்லு, அக்காவுக்காக நீ வெய்ட் பண்ணிட்டு என்னை சாக்கு சொல்ற?…” என்று கீர்த்தனா சிரிக்க,
“ஒழுங்கா சாப்பிடுங்கடி வாலுங்களா…” என்று சிரித்தபடி உண்டு முடித்து வெளியே வந்து அமர்ந்திருந்தார்கள்.
பேரனை பார்ப்பதற்கு கனகா காத்திருக்க நேரம் செல்வது பொறுக்கமாட்டாமல் ராகா அவனுக்கு அழைத்துவிட்டாள்.
“இன்னும் வரலையே நீங்க?…” என,
“ப்ச், இப்ப என்ன ராகா? வினய் தூங்கிட்டான். அம்மாவோட பேசிட்டு இருக்கேன். வருவேன் வை. உனக்கு தூக்கம் வந்தா தூங்கு…” என சொல்லி வைத்துவிட இயலாமையுடன் போனை வைத்தவளின் முகம் பார்க்க முடியாத கனகா,
“கீர்த்தி, படுப்போமா? அம்மாவுக்கு இந்த குளிருக்கு தலை வலிக்குது. தூங்கி எந்திச்சா சரியாய் போகும்னு நினைக்கேன். நாளைக்கு கோவிலுக்கு போகனும்ல…” என சொல்லி சின்ன பெண்ணை மாடிக்கு அனுப்பியவர்,
“கதவை பூட்டிட்டு படு ராகா. மாப்பிள்ளை வந்துடுவாரு…” என்று சொல்லிவிட்டு தானும் மாடியேறிவிட்டார்.
தான் இருக்கும் வரை சாரதா மகனை கிளம்பவிடமாட்டார் என்பதில் நிச்சயம் கனகாவிற்கு. எப்படியும் நாளை பார்த்து தானே ஆகனும். பார்த்துக்கொள்ளலாம் என வந்துவிட்டாலும் மனது கேட்கவில்லை.
படுத்திருந்தாலும் உறக்கமே இல்லை. கீழே பைக் சத்தம் கேட்கவும் விளக்கை போடாமலே ஜன்னல் வழியாக கீழே எட்டி பார்த்தார். ஸ்ரீநிவாஸ் தோளில் இரண்டு வயது பேரன் உறக்கத்தில் இருப்பதை.
அள்ளி அணைத்துக்கொள்ள ஆவி துடித்தது. முத்தமிட மனது பரபரத்தது. எதுவும் செய்யமுடியாதே. கலங்குவதை போல இருந்த கண்களை முயன்று நிறுத்தினார்.
“அம்மா…” என்ற இளையமகளின் தொடுகையில் திரும்பியவர்,
“என்னடாம்மா, முழிச்சுட்டியா? அம்மா தண்ணி குடிக்கலாம்னு எந்திச்சேன். இரு வரேன்…” என குடித்துவிட்டு வந்து படுக்க சவரின் இடையோடு கை போட்டு அணைத்துக்கொண்டாள் கீர்த்தனா.
மனதில் பலவகையான உணர்வுகள் ஆர்ப்பரித்துக்கொண்டு இருந்தது அப்பெண்ணுக்குள். அவளின் எதிர்காலத்தின் பயம் பயங்கரமாய் மிரட்டியது.
மறுநாள் காலை கிளம்பி மதியத்திற்கும் சேர்த்தே சமைத்து வைத்துவிட்டு கிளம்பி கீழே வர ராகாவும் மகனுடன் தயாராய் இருந்தாள்.அவ்வளவு நேரம் தங்களுடன் தான் இருந்தான் பேரன். வைத்து கொண்டாடிவிட்டார்கள்.
“மாப்பிள்ளை வந்து கூட்டிட்டு போறேன்னு எதுவும் சொல்லலை தானே?…” என கேட்டுக்கொண்டே பேரனை தனது தோளுக்கு மாற்றிக்கொண்டார் கனகா.
காலையிலேயே ஸ்ரீநிவாஸ் கிளம்பி கோவிலுக்கு சென்றுவிட்டான். அங்கே அக்னி அவனுக்கு கொடுத்திருந்த வேலைகளை கவனிப்பதற்கு. செல்லும் முன்பே,
“கோவிலுக்கு அம்மாவோட வரேங்க. நீங்க அங்க வரப்போ கூட வந்து நின்னா நல்லா இருக்கும். குடும்பமா சாமி கும்பிட்ட மாதிரி…” என ராகா கேட்க,
“உனக்கு காவலுக்கு நிக்க சொல்றியா என்னை? அக்னி ஸார் எவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்திருக்கார். என்னால நகரவே முடியாது. சாமி கும்பிட்டுட்டு போய்ட்டே இரு. அங்க வந்து டிஸ்டர்ப் பண்ணாத. பையனுக்கு வேணும்ன்றதை வாங்கி குடு…” என பணத்தையும் திணித்துவிட்டு சென்றுவிட்டான்.
அக்னியின் தொழிற்சாலையில் ஞாயிறு விடுமுறை என்றெல்லாம் இல்லை. வாரம் ஒருநாள் விடுமுறை. அது வார நாளாகவும் இருக்கும்.
இந்தந்த யூனிட்டில் இருப்பவர்களுக்கு இந்த நாளில் விடுமுறை என பிரிக்கப்பட்டிருந்ததால் அவனுக்கு அன்று வேலை நாள். திருவிழாவிற்கு கோவிலுக்கு செல்ல பர்மிஷன் கேட்பவர்களும் முன்கூட்டியே பதிவு செய்துவிட்டதால் எந்த குளறுபடிகளும் இன்றி வேலை நடக்கும்.
ஸ்ரீநிவாஸ்க்கு கோவிலில் தானே இருக்க போகிறோம். பிறகெதற்கு பர்மிஷன் என்று விட்டுவிட்டான். சிறிது நேரத்திற்கெல்லாம் சாரதா வந்துவிட்டார் தன் கணவன் மகேஸ்வரனுடன். அவனை பூஜைக்கு அழைக்க பத்து நிமிடம் தானே? என அக்னியிடம் சென்று நின்றான்.
“ஸார் ஒரு டென் மினிட்ஸ், அம்மாவும் அப்பாவும் வந்திருக்காங்க. அர்ச்சனை பண்ணனுமாம். போய்ட்டு வந்திடறேனே…” என கேட்க,
“இதுக்கு நீங்க பர்மிஷன் வாங்கிட்டு போயிருக்கனும் ஸ்ரீநிவாஸ். அப்பப்ப பொறுப்பில்லாதவர்ன்னு நிரூபிக்கறீங்க. சரி அந்த பத்து நிமிஷம் உங்களோட இடத்துல யாரை வச்சிடு போவீங்க?…” என கேட்க,
“ஸார்…” என திணறினான்.
“அன்னதானம் செய்யறோம். எல்லாருக்கும் ஒவ்வொரு பொறுப்பை ஒப்படைச்சிருக்கேன். உங்களுக்கு பதில் நான் போய் நிக்கட்டுமா?…” என கோபத்துடன் கேட்க பதில் சொல்லமுடியாமல் நின்றான்.
காலையில் இருந்து சுரேன் வேறு ஸ்ரீநிவாஸிடம் கய்ந்துகொண்டே இருந்தான். ஏன் எதற்கு என்று தெரியாமலே அவதிப்பட்டுக்கொண்டு இருந்தான் ஸ்ரீநிவாஸ். சுரேனுக்கோ இவன் தனக்கு சமமவதா? என்னும் கடுப்பு. முடிந்தளவிற்கு வாட்டினான்.
“உங்கக்கிட்ட நேத்தே கன்பார்ம் பண்ணவும் சொன்னேன் தானே? நீங்க தானே பர்மிஷன் வேண்டாம், கோவிலுக்கு செய்யறதே சேவைன்னு டயலாக் பேசினீங்க?…” என கேள்விகளாய் கேட்டு அவனை துளைத்துவிட அவனின் பேச்சு பொறுக்கமுடியாமல் போகவேண்டாம் என முடிவெடுத்த நேரம்,
“கிளம்புங்க. பத்து நிமிஷத்துக்குள்ள நீங்க வந்து நிக்கனும்…” என்று கத்திவிட்டு செல்லவும் விட்டால் போதும் என்பதை போல தப்பித்து ஓடினான். சரியாக அவன் சொல்லியதை போல மீண்டும் வந்துவிட்டான்.
சற்று நேரத்திற்கெல்லாம் தங்கதுரை மனைவி, இருபெண்கள், பேரனுடன் கோவில் அருகே வந்ததுமே பன்னீர்செல்வத்திடம் அடைக்கலம் வந்து சொல்லிவிட்டார்.
“அக்னி, தங்கதுரை வந்தாச்சு…” என சொல்ல அத்தனை டென்ஷனும் மறைந்து “ஊஃப்” என மூச்சை இழுத்துவிட்டவன் மெல்ல அங்கே கூட்டம் அதிகமில்லாமல் இருக்க சந்திரிகாவிடம் ஒதுங்கி அவரின் புடவை தலைப்பில் வியர்த்து இருந்த முகத்தை துடைத்துக்கொண்டான்.
என்றாவது அத்திபூத்தார் போல நடக்கும் இந்த அதிசய நிகழ்வெல்லாம். பூரிப்புடன் மகனை பார்த்து அவர் புன்னகைக்க,
“தங்கதுரை மாமா வந்தாச்சு…” என்றான் சிரிப்புடன். அதுவே அந்த தாய் மனதை நிறைக்க போதுமானதாய் இருக்க,
“போய் வர சொல்லு. ஸ்பெஷல் பூஜை செஞ்சிருவோம்…” என அவரும் சொல்ல அங்கே வந்த ஸ்ரீநிவாஸிடம்,
“ஸ்ரீநிவாஸ் தங்கதுரை மாமா வராங்க. போய் அழைச்சுட்டு வாங்க…” என சொல்ல,
“எந்த தங்கதுரை மாமா ஸார்?…” என அவன் விளக்கம் கேட்டதில் அவனை முறைப்புடன் பார்க்க,
“சத்தியமா தெரியலை ஸார்…”
“உங்க மாமனார் பேர் என்ன?…”
“தங்கதுரை…”
“போய் அவங்க எல்லாரையும் பத்திரமா அழைச்சுட்டு இங்க வாங்க…” என உத்தரவிட ஆவென்று வாயை பிளந்தான் ஸ்ரீநிவாஸ்.
அப்பொழுதும் கூட தங்கதுரை மாமா என்ற விளிப்பு அவர் தன்னுடைய மாமா என அறிவுறுத்துகிறான் என்பதனால் என நினைத்துக்கொண்டான். யோசிக்க எங்கே முடிகிறது. அடுத்தடுத்து அதிர்ச்சிகள்.
அதிலும் சாமிக்கு அருகில். அந்த இடத்தில் அக்னிசெல்வன் குடும்பத்தை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை. எதுவோ நிரடியது. அதை யோசிக்கும் அவகாசமின்றி அவன் அவர்களை தேடி ஓட அப்பொழுதுதான் திருவிழா நடைபெறும் நுழைவாயில் அருகே வந்திருந்தனர்.
“மாமா, வேலை இருக்குன்னு சொன்னீங்க? வந்துட்டீங்க?…” என ராகா சந்தோஷத்துடன் கேட்க,
“ப்ச், பேச நேரமில்லை வா…” என சொல்லி,
“வாங்க மாமா. அக்னி ஸார் அழைச்சுட்டு வர சொன்னார்…” என சொல்ல,
“அவரா?…” என கேட்டாலும் சேர்ந்தே நடந்து சென்றார்கள்.
அவர்கள் தங்கள் அருகே வந்ததுமே கீர்த்தனாவை தொட்டு அவளை கண்களுக்குள் வாங்கியபடி பார்வையை திருப்பிக்கொண்டான். அவள் தான் அவன் இருக்கும் திசையில் பார்வையை திருப்பவே இல்லை. சாதனாவுக்கு சந்தோஷம். கீர்த்தனாவை பார்த்த மாத்திரத்தில் பிடித்தது.
“வாங்க முதல்ல சாமியை கும்பிட்டுடலாம்…” என பன்னீர்செல்வம் சொல்ல இரு குடும்பமும் ஒரு குடும்பமாய் இணைந்து நிற்க ராகாவின் அருகில் ஸ்ரீநிவாஸ். அவளுக்கு அதில் நிரம்ப மகிழ்ச்சி.
என்ன நடக்கிறது? எது நடக்கிறது என புரியாமல் சாமியும் கும்பிட முடியாமல் பார்வையை சுழற்ற அங்கே ஒரு தூணின் அருகே இருந்து இவனை முறைத்தபடி நின்றார் சாரதா. வெளியே பட்டாசு வெடிக்க அது நெஞ்சில் வெடிப்பதை போன்ற பிரம்மையில் நின்றுவிட்டான்.
“வீட்டுக்கு வா” என வாசித்து சுட்டுவிரலை கொண்டு மிரட்டியபடி சென்றார் சாரதா.
“சட்ட கிழிஞ்சிருந்தா தச்சு முடிச்சிடலாம். நெஞ்சு கிழிஞ்சிருக்கு எங்க முறையிடலாம்? இன்னைக்கு என்னை கிழிச்சு தொங்கவிட போறாங்க. ஏற்கனவே உரிச்சு தொங்கவிட்ட ஆடாட்டம் தான் இருக்கேன். உண்மையா திருவிழா எனக்கு தான் போல” என புலம்பியவன் தெய்வத்தை பார்த்து,
“நீதான் என்னை காப்பாத்தனும்…” என்ற வேண்டுதலுடன் கை கூப்பி வணங்கி திரும்ப அங்கே சுரேன் அவனை முறைத்து நிற்க,
“இவர் ஏன் இந்த காட்டு காட்டுறாரு?” என அவனை பார்க்கவே அஞ்சியவனாக இருக்க,
“ஸ்ரீநிவாஸ்…” என்ற அக்னியின் அழைப்பில்,
“ஐயோ இவர் வேற. அடுத்து என்னவோ? இப்ப மட்டும் நான் என் பொறுப்பை செய்யக்கூடாதாமா? என நினைத்தவன் நினைக்க மட்டும் தான் முடிந்தது.