கவிதை – 4
பூஜை முடிந்து அங்கே பிரகாரத்தில் அமைத்திருந்த மேடையில் சென்று அமர்ந்தார்கள் இரு குடும்பத்தினரும்.
சுரேன் இன்னும் முறைப்புடனே இருக்க அதை பார்க்க முடியாமல் ஸ்ரீநிவாஸ் அங்கு தான் இருக்கவேண்டுமா வேண்டாமா என்னும் குழப்பத்தினூடே அக்னியிடம் வந்து நின்றான்.
“ஸார்…”
“ஹ்ம்ம்…” என திரும்பி பார்க்க “என்னன்னு கேட்டுட்டா முத்து கொட்டிடும்” என உள்ளுக்குள் திட்டியபடி,
“அங்க அன்னதானம்…”
“நடந்துட்டு தானே இருக்கு?…”
“இல்ல நான் போகவான்னு கேட்கத்தான் வந்தேன் ஸார்…”
“அங்கே போய் நிக்கத்தான போறீங்க ஸ்ரீநிவாஸ், வெய்ட் பண்ணுங்க. மாமாவை சென்ட்ஆஃப் பண்ணனும்…” என்று சொல்லிவிட்டு வேஷ்டியை நீவிவிட்டு அடைக்கலத்தின் அருகே சென்று நின்றான்.
“என்னது இவங்களை நான் வழியனுப்பனுமா?” என அவன் அதிர்ந்து பார்க்க,
“வாட்?…” என்றான் எரிச்சலாக அக்னி.
அக்னிக்கு மட்டுமல்ல அந்த ஊரில் இருப்பவர்கள் அனைவருக்குமே ஸ்ரீநிவாஸ் குடும்பத்தை பற்றியும் தங்கதுரை குடும்பத்தை பற்றியும் நன்றாகவே தெரியும்.
வேலையில் அவன் கெட்டிக்காரனாக இருந்தாலும் சுயநலத்தில் அவன் மன்னனாக இருந்தான். அதுவே அவனின் மதிப்பை இறக்கியது.
“நத்திங் ஸார்…” என்று சற்று தள்ளி நின்றுகொண்டு பொருமியபடி அவர்களை பார்த்தான்.
“மூணு வருஷம் கழிச்சு இந்த கோவிலுக்கு வந்திருக்கீங்க தங்கதுரை. வருஷத்துக்கு ஒருக்கா வரது. தவற விடலாமா?…” என பன்னீர்செல்வம் பேசவும் சந்கோஜமாய் பார்த்தார் தங்கதுரை.
“ஆமாங்க ஸார். ஒரு வருஷம் வரலைன்னா அது மூணுவருஷமா தடையா போயிருச்சு. கடைசியா ராகா கல்யாணத்தப்போ வந்தந்து திருவிழா. அடுத்து இப்பதான் வந்திருக்கோம். உங்களை எல்லாம் பார்த்தது ரொம்ப சந்தோஷம்…” என சொல்ல,
“என்ன இது ஸார்ன்னு பேசிட்டு இருக்கீங்க? நெருக்கமில்லைன்னாலும் உறவுமுறையில நீங்க மச்சான் முறை வருதுல…” என்ற அடைக்கலம்,
“என்னம்மா தங்கச்சி உன் புருஷன் எங்களை ஸார் சொல்லி பேசிட்டு இருக்காரு?…” என அடைக்கலம் சிரித்தபடி கேட்க கனகாவுக்குமே என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
வேலைக்கென்று வெளியூரில் பிழைக்க சென்றுவிட்டாலும் அக்னியின் குடும்பத்திடம் இலகுவான பேச்சுவார்த்தை என்பது என்றுமே இருந்ததில்லை.
அவர்கள் குடும்பத்தில் யாருக்கும் மரியாதையை குறைவாக பேசும் பழக்கம் இல்லை என்றாலும் அவர்களின் பாரம்பரியம் மற்றவர்களை தள்ளி நின்றே பேச வைக்கும்.
பார்க்கும் நேரங்களில் சிறு புன்னகையும், நலம் விசாரிப்பும் மட்டுமே தான். ராகாவின் திருமணத்திற்கு அழைப்பிதல் வைக்க சென்றது அவரின் வீட்டிற்கு. அதிலும் முன் வரவேற்பறையில் வைத்து வைத்துவிட்டு வந்துவிட திருமணத்திற்கு கூட அக்னியும் அவனுடன் சுபாவும் தான் வந்தார்கள்.
அவர்களுடன் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை கூட நம்ப இயலாமல் உள்ளூர உண்டான படபடப்புடன் தான் இருந்தார்கள் கனகாவும், தங்கதுரையும்.
ராகாவிற்கோ தனது கணவன் அக்னியின் பி.ஏ என்பதனால் அமர்த்தி பேசிக்கொண்டு இருக்கிறார்களோ? என அப்பாவியாய் நினைத்துக்கொண்டு இருந்தாள்.
தங்கதுரையின் இலகுவற்ற தன்மையையும் ஒரு சங்கடத்தையும் பார்த்த அக்னி தந்தையிடம் காண்பிக்க அவரும் கண்மூடி திறந்து ஆமோதித்தவர்,
“சரிங்க தங்கதுரை, உங்கக்கிட்ட பேசுவோம். இப்போ உங்களுக்கும் வேலை இருக்கும்…” என சொல்ல,
“ஆமாங்க ஆமாங்க…” என்றார் வேகமாய்.
பாவமாய் இருந்தது அக்னியின் குடும்பத்தினருக்கு. சந்திரிகா தன் மகனை பார்க்க அவனும் கவலையுடன் தான் இருந்தான்.
ஐந்துநிமிடம் சேர்ந்து இயல்பாக பேச கூட முடியாமல் இருக்கிறார்களே என்று பார்த்தவனின் பார்வை மெதுவாய் கீர்த்தனாவை தீண்ட அவனின் பார்வை உணர்ந்தோ என்னவோ அவளும் அதே நேரம் அவனை பார்க்க நொடிநேர பார்வை தீண்டலில் அவனிடமிருந்து பார்வையை விலக்கிக்கொண்டாள்.
அவளின் பதட்டத்தில் இதழ்களுக்குள் புன்னகைத்துகொண்டவன் மார்பின் குறுக்கே கையை கட்டிக்கொண்டு சாய்ந்து நின்றான்.
“அக்கா, அங்க பாரேன் தீப்பொறி முறைக்கிறதை…” என்று ராகாவின் காதை கடிக்க,
“கீர்த்தி, என்ன இது? யாருக்காச்சும் கேட்க போகுது…” என அவளும் அதட்டி மெல்லிய குரலில் கேட்க,
“நீங்க யார தீப்பொறின்னு சொல்றீங்க? எனக்கு கேட்டுடுச்சே…” என சாதனா சிரிப்புடன் ரகசியம் பேச சகோதரிகள் இருவருக்கும் திக்கென்று ஆனது. அவர்களின் முகம் போன போக்கில் சிரித்தவள்,
“பயப்படாதீங்க, நான் அக்னி மாமாட்ட சொல்ல மாட்டேன்…” என்று அவர்களின் கூட்டாளியாக அது இன்னுமே அச்சத்தை விதைத்தது இருவருக்கும்.
“அட நிஜமாவே சொல்லமாட்டேன்…” என்று அவர்களிடம் கை நீட்ட இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துவிட்டு அவளின் கையில் கை வைக்க அதை பார்த்தபடி இருந்தவன் முகம் இப்பொழுது வெளிப்படையாக புன்னகைக்க,
“என்ன நடந்துச்சுன்னு ஸார் சிரிக்காரு…” என்ற யோசனையில் ஆழ்ந்தான் ஸ்ரீநிவாஸ்.
அவனின் பார்வை மொத்தமும் அக்னி மற்றும் சுரேனிடம் தான் இருந்தது. அங்கே என்ன நடக்கிறது என்று கூட ஆராய தோன்றாமல் இருவரையும் மாறி மாறி பார்த்துக்கொண்டு நின்றான்.
“சரிங்க துரை கிளம்புங்க…” என்று பன்னீர்செல்வம் கீழே இறங்கிவிட வேகமாய் தங்கதுரையும் இறங்க பார்த்தார். ஏனோ படபடப்பாக இருக்க தடுமாறி போய் இறங்கமுடியாமல் லேசாய் சாய அவரை அடைக்கலம் தாங்கிக்கொண்டார்.
“அப்பா…” என்ற அலறலுடன் இரு பெண்களும் ஒடி வர அவர்களிடம் ஒப்படைத்து அடைக்கலம் நகர கனகா அழுகையுடன் அவரை மடிதாங்கினார்.
“ஒன்னும் இல்லைம்மா. ஒண்ணுமில்லை. வெயில் நேரம். கசகசப்புல ஒரு மாதிரி வந்திருக்கும். பயப்படாதீங்க…” என்று பன்னீர்செல்வம் அவரை தேற்ற கனகாவின் பக்கத்தில் சந்திரிகாவும், சுபாவும் நின்றனர்.
“ஸ்ரீநிவாஸ்…” என்று அக்னி அழைக்கும் முன் சுரேன் தண்ணீருடன் வந்துவிட்டான்.
“இதை முகத்துல தெளிச்சு குடிக்க குடுங்க…” என பதட்டத்துடன் சொல்லிவிட்டு யாருக்கோ போன் செய்து டாக்டர் இருந்தால் அழைத்துவர சொல்லி பேசினான்.
“அக்னி…” என பன்னீர்செல்வம் திரும்பி பார்க்க அங்கே அவன் இல்லை.
“அக்னி எங்க சுரேன்…” என அடைக்கலம் கேட்க,
“இப்பத்தான் இங்க போனான்…” என அவனை தேட அதற்குள் ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கு குடிக்க மோரும், ஜூஸும் கொண்டுவந்தான்.
அவனுக்குமே பதட்டம். அதிலும் மனைவி அழுவது இன்னமும் கஷ்டமாய் இருந்தது.
சில நொடிகளுக்குள் ஒரு பெண்ணுடன் வந்தான் அக்னி. அவர் அந்த ஊரின் மருத்துவர்.
“என்னன்னு கொஞ்சம் பாருங்க டாக்டர்…” என சொல்லி தள்ளி நின்றவன் கலங்கிப்போய் நிற்கும் கீர்த்தனாவை பார்த்துவிட்டு தங்கதுரையை பார்த்தான்.
“லோ பிபி தான். காலைலே டேப்லெட் எடுத்தாரா?…” என கேட்க,
“நான் தான் குடுத்தேன் டாக்டர்…” என்று கனகா சொல்லவும்,
“ஒன்னும் பயப்பட வேண்டாம். ரொம்ப அலைச்சல், மனஉளைச்சல்ல இருந்தா கூட இப்படி ஆகும். எதையும் நினைச்சு கவலைப்படாம பத்திரமா பார்த்துக்கோங்க. உங்க திருப்திக்கு வேணும்னா ஈவ்னிங் கிளினிக் வாங்க. எல்லா டெஸ்ட்டும் எடுப்போம்…” என சொல்லிவிட்டு அவர் செல்லவும் கனகாவின் முகம் தெளியவே இல்லை.
அக்னி இப்பொழுது அப்பட்டமாய் ஸ்ரீநிவாசை முறைத்து பார்த்தான். பார்வையில் அத்தனை கோபம்.
“நான் என்ன பண்ணேன்னு என்னை முறைக்கிறாரு?” என பயந்தவனாக அவன் நிற்க,
“சுரேன்…”
“சொல்லுங்க பெரியப்பா…” என்று வர,
“இவங்களை…”
“நான் ட்ராப் பன்றேன். ஒரு இஷுவும் இல்லை…” என்றான்.
சுரேன் அடிப்படையில் நல்ல குணமிருந்தாலும், மனிதாபிமானம் மிக்கவன் தான் என்றாலும் அவனின் தற்போதைய சில செயல்கள் சொல்லிக்கொள்ளும் படி இல்லை தான்.
ஆனாலும் தங்கதுரை சாய்ந்துவிட்டதும் உடனடியாக அவன் செயல்பட்டதில் இன்னும் அவனிடமிருக்கும் நல்லவன் மிச்சமிருக்கிறான் என்பதிலேயே குடும்பத்தினருக்கு அவன் மீதான வருத்தம் குறைந்துவிட்டிருந்தது.
“இருக்கட்டும் சுரேன், இங்க நீ இருக்கனும். நம்ம ஆபீஸ் கார் இங்க தான இருக்கு. கீ யார்க்கிட்ட இருக்கு?…” என கேட்க,
“ஸ்ரீநி க்கிட்ட தான் இருக்கு பெரியப்பா…” என்றான்.
“அப்ப ஓகே, ஸ்ரீநி போய் அவங்களை வீட்ல ட்ராப் பண்ணிட்டு வரட்டும்…” என சொல்லி அவர்களுக்கு தேறுதல் சொல்லியே அனுப்பி வைத்தனர்.
தங்கதுரையை கை தாங்கலாக ஸ்ரீநிவாஸ் பிடித்துக்கொள்ள கோவில் வாசலுக்கே காரை கொண்டு வந்து நிறுத்தினான் சுரேன். அவர்களை காரில் ஏற்றி அனுப்பிய பின்னர் சுரேனை பன்னீர்செல்வம் லேசாய் அணைத்துக்கொள்ள,
“விடுங்க பெரியப்பா, இது ஒரு விஷயம்னு. இங்க யாரா இருந்தாலும் பதட்டமும் பயமும் வரும் தானே? அந்த இடத்துல யார் என்னன்னு யோசிக்க முடியாது. அது ஒரு உயிர். அதை தான் பார்க்கனும்…” என்று சொல்லி செல்ல,
“மாமா, இவரை என் அப்பாக்கிட்ட இருந்து தள்ளி வச்சாலே போதும். இப்படியே இருப்பார்…” என சாதனா சொல்லி சிரிக்க,
“நல்ல பொண்ணும்மா. சரி நாமளும் கிளம்புவோம். அக்னி இருந்து பார்த்துப்பான். கூட சுரேனும் இருக்கான்…” என சொல்லி அவளின் தலையை பிடித்து ஆட்டிவிட்டு நகர்ந்தார் பன்னீர்செல்வம். அவரின் பின்னே சந்திரிகா, சுபா செல்ல அடைக்கலம் கோவிலில் இருப்பதாக சொல்லி சுரேனுடன் சென்றார்.
மெதுவாய் அவர்களோடே சென்ற சாதனா மீண்டும் அக்னியை நோக்கி ஒடி வந்தாள்.
“என்னம்மா…” என்றான் அவளின் வேகத்தை பார்த்து.
“மாமா, கீர்த்தி உங்களுக்கு ஒரு நிக் நேம் வச்சிருக்கா…” என சொல்லி சிரிக்க,
“என்னது எனக்கா?…” என்று லேசாய் முறுவல் பூக்க,
“ஆமா, உங்க பேர் சம்பந்தப்பட்டது தான்….” என்றதற்கும் யோசனையாய் புருவம் சுருக்க,
“முடிஞ்சா கண்டுபிடிங்க…” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள் சாதனா.
“என்ன பேர்? அக்னி, தீ, பயர், நெருப்பு, கனல். ஹ்ம்ம் வேற என்னவா இருக்கும்?…” என யோசித்து பார்த்தவனுக்கு அந்த பெயர் மட்டும் தோன்றவே இல்லை.
வீட்டில் சென்று அவர்களை இறக்கிவிட்ட ஸ்ரீநிவாஸ் மாடி ஏறி செல்ல சிரமமாக இருக்குமோ என யோசித்து,
“கீழே வேணும்னா ரெஸ்ட் எடுங்களேன் மாமா?…” என்றான் அவரிடத்தில்.
அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தவர் பின் சோர்வான ஒரு புன்னகையுடன் மறுப்பாய் தலையசைத்து,
“பரவாயில்லை மாப்பிள்ளை. உங்களுக்கு வசதிப்படாது…” என சொல்லிவிட்டு மெதுவாய் கைப்பிடி சுவற்றை பிடித்துக்கொண்டு ஏற ஆரம்பித்தார். அப்போதும் கூட உரிமையாய் இருக்க சொல்ல தோன்றவில்லை அவனுக்கு. அமைதியாகிவிட்டான்.
கனகாவும், கீர்த்தனாவும் ஸ்ரீநிவாஸ் முகத்தை கூட பார்க்கவில்லை. அவரை பிடித்துக்கொண்டு செல்லவும்,
“தாதா ம்மா…” என தாத்தாவை நோக்கி கை நீட்டிய மகனை தட்டிகொடுத்தபடி கணவனை பார்த்த ராகா,
“சில பாவங்களை எத்தனை கோவிலுக்கு போனாலும் கழுவ முடியாது மாமா. கோவிலில சேவை செஞ்சாலும் மறையாது. மனசாட்சி இருந்தா குத்தட்டும்…” என்று அழுகையுடன் சொல்லியவள் தந்தையை பின்பற்றி மாடிக்கு செல்ல,
“ராகா…” என்றான் கோபமாய்.
“வந்துருவேன். ஒரேடியா பெத்தவங்க கூட போய் அவங்களுக்கு பாரமா இருக்கமாட்டேன். எத்தனை நடந்தாலும் மழுமட்டையா என் வாழ்க்கை உங்க கூட தான். வேற என்ன? ஹ்ம்ம், உங்க அம்மாக்கிட்ட பையனை குடுக்கறீங்களா? இந்தாங்க தூக்கிட்டு போங்க. எனக்கு பிரச்சனை இல்லை…” என்று சத்தமில்லாமல், கோபமில்லாமல் அவள் பேச பேச திகைத்து நின்றான்.
“ஓஹ் கிளம்பறீங்களா? சிரிக்கனுமா?…” என கேட்டு அழுகையுடன் வேகமாய் சிரித்தவள்,
“போதுமா இன்னும் சிரிக்கனுமா?…” என கேட்க,
“இப்ப என்ன நடந்துருச்சுன்னு நீ இப்படி ரியாக்ட் பன்ற ராகா? இது நல்லதுக்கில்லை…” என்று அவன் முறைக்க,
“இனி என்ன நடக்கனும்? நெஞ்சை பிடிச்சுட்டு சரிஞ்சா மனுஷனுக்கு அவரோட வீட்டுக்குள்ள வர மனசில்லை. இது போதாதா? எல்லாம் அவங்கவங்களுக்கு நடந்தா தான் தெரியும். ஏனா இப்ப கஷ்டம் என் அப்பாவுக்கு தானே வந்திருக்கு. உங்களுக்கு துடிக்கனும்னு அவசியமில்லை…” என சொல்ல,
“வாய் நீளுது உனக்கு? புதுசா பேசற? இரு வந்து பேசிக்கறேன் உன்னை…” என்று கோபமாக சொல்லிவிட்டு காரை கிளப்ப போக அக்னி வீட்டின் வேலையாள் வந்து நின்றான்.
“ஸார் முதலாளி சாப்பாட்டை குடுத்துட்டு வர சொன்னாரு. உங்களை இருந்து அவங்களை சாப்பிட வச்சுட்டு வர சொன்னாரு…” என்றும் கூடுதலாக தகவல் சொல்ல,
“மாடில கொண்டு போய் வை…” என்றவன் ராகாவை பார்த்தான்.
“போ போயி எடுத்து வை எல்லாத்தையும். நானும் வரேன்…” என்று சொல்லி அவளை மேலே அனுப்பியவன் கூடவே தானும் வந்து அமர்ந்தான்.
“வாங்க மாப்பிள்ளை…”என்று அவனை வரவேற்றவர்கள் அவனுக்கு முதலில் பரிமாறினார்கள்.
“நீங்களும் சாப்பிடுங்க…” என அவன் பொதுவாய் சொல்ல,
“இருக்கட்டும், அவர் படுத்திருக்கார். கொஞ்சம் நேரம் கழிச்சு சாப்பிட்டுக்கறோம்…” என்று சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே அக்னி அழைத்துவிட்டான்.
“ஸார்…” என அடுத்தவனிடம்,
“சாப்பாடு வந்திருச்சா?…”
“ஆங் வந்திருச்சு ஸார். இப்பதான்….”
“ஹ்ம்ம்…” என்று சொல்லி வைத்து விட்டான்.
“சாப்பிடறப்போ கூட நிம்மதியா சாப்பிட விடமாட்டேன்றாரு…” என எரிச்சலுடன் சொல்லியவன் ராகாவை பார்க்க அவள் தங்கதுரை கையை பிடித்தபடி அமர்ந்திருந்தாள். அருகில் வினய் தாத்தா தாத்தா என கொஞ்சிக்கொண்டு இருக்க ஓர் நொடி அசையாது பார்த்தவனின் பார்வையை உணர்ந்தார் கனகா.
“ராகா, வந்து மாப்பிள்ளைக்கு பரிமாறு…” என சொல்லி பேரனை வாங்கிக்கொள்ள இப்பொழுது ஒரு திருப்தியான முகபாவம் அவனிடத்தில்.
எரிச்சலுடன் வந்து அவனுக்கு அவள் பரிமாற கீர்த்தி வினய்க்கு சாப்பிட பிசைந்துகொண்டுவந்து தரவும் கனகா அவனுக்கு ஊட்ட ஆரம்பித்தார்.
அங்கொரு பார்வையும் மனைவியிடம் ஒரு பார்வையுமாக மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு இருந்தவன்,
“கொஞ்சம் சிரிச்ச மாதிரி பரிமாறேன் ராகா…” என்றான் அவளிடம் பல்லை கடித்துக்கொண்டு.
“மறந்துட்டேன்…” என்றாள் இவளும் அதே மெதுவான குரலில்.
“என்ன திரும்ப திரும்ப பேசறா? இன்னைக்கு சரியில்லையே? என யோசித்தவன், ஒருவேளை அப்பாவுக்கு முடியலைன்னு இப்படி இருப்பா போல? எப்படியும் என்கிட்டே தான வரனும் என இறுமாப்புடன் நினைத்துக்கொண்டான்.