கவிதை – 5
வீட்டிற்குள் வந்ததில் இருந்து பயங்கர கோபத்துடன் இருந்தான் ஸ்ரீநிவாஸ். எரிச்சலான எரிச்சல் தாய் பேசியது.
“சாப்ட்டீங்களா?…” என்றாள் ராகா மெதுவாய்.
அவளை நிமிர்ந்து பார்த்தவன் ஒற்றை விரலை வாயில் வைத்து பேசாதே என்பஹை போல சைகை காண்பிக்க அமைதியாகிவிட்டாள். பின் சிறிது நேரம் கழித்து,
“ராகா, பால் எடுத்திட்டு வா…” என்றான் அமைதியாக. அவளும் சூடாக அவன் குடிக்கும் பதத்தில் கொண்டுவந்து தர வாங்கியவன் குடித்துவிட்டு ஹாலில் சென்று அமர்ந்தான்.
அவனின் பின்னால் செல்வதா வேண்டாமா என யோசனையில் இருந்தவள் மகன் சிணுங்கவும் அவனருகே சென்று படுத்துக்கொண்டாள். வேறெதுவும் கேட்டாலும் பதில் வராது.
சற்று நேரத்திற்கெல்லாம் உறங்கிவிட ஸ்ரீநிவாஸ் சுத்தமாக உறக்கமின்றி கோபத்துடன் இருந்தான்.
மாவிளக்கை கொண்டு சென்றவன் அங்கே வாசலில் யாரையும் காணாமல் உள்ளே செல்ல கோபமாய் அமர்ந்திருந்தார் சாரதா.
“ம்மா, தேர் வீட்டுப்பக்கத்துல வர போகுது. இன்னும் உள்ள என்ன பன்றீங்க?…” என கேட்க,
“பெத்த புள்ளையை தொலைச்சுட்டு நிக்கறேன். தேரு வருதாம் தேரு…” என்று சாரதா முகம் திருப்ப,
“ப்ச், இப்ப பேச நேரமில்லை. முதல்ல வெளில வாங்க, ராகா எல்லாமே குடுத்தனுப்பிச்சுட்டா…” என சொல்லி பரபரவென அவனே தட்டில் அனைத்தையும் அடுக்க,
“தள்ளு அங்குட்டு. நானே செஞ்சுப்பேன். உனக்கு உன் மாமனார் குடும்பத்தோட கோவில் வாசல்ல கும்மியடிக்கத்தான வரும். என்னை எல்லாம் சமைக்கிட்ட கூட்டிட்டு போவியா நீ?…” என்று கத்த,
“ப்ச், இப்ப பேச நேரமில்லைன்னு சொல்றேன்…” என சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே மேளச்சத்தம் கேட்க வேகமாய் வெளியே சென்று நின்றான்.
அவனின் பின்னோடு மகேஸ்வரனும் வந்துவிட தட்டை தூக்கிக்கொண்டு சாரதாவும் வந்தாள்.
“உங்க முதலாளி நடத்தற திருவிழா நம்ம வீட்டை தாண்டி தேர் போயிருமா?…”
“நீங்க வாயை மூடிட்டு இல்லைன்னா நாம நடு தெருவுக்கு தான். அவருக்கு கேட்டுட போகுது…” என ஸ்ரீநிவாஸ் கடுப்பாக,
“ம்க்கும்…” என்ற நொடிப்புடன் தேரில் சாமி வந்ததும் பூஜைக்கு தட்டை நீட்ட தேங்காய் உடைக்கப்பட்டு பிரசாதத்துடன் மீண்டும் தட்டு வந்தது.
“நாளைக்கு வரேன்…” என சொல்லி ஸ்ரீநிவாஸ் தேருடன் நடக்க போக,
“இன்னும் ஒரு சுத்து தான். நீங்க நாளைக்கு கோவிலுக்கு வாங்க…” என அக்னி சொல்லிவிட்டதும் நிம்மதியானான் ஸ்ரீநிவாஸ்.
சாரதாவும் மகேஸ்வரனும் பன்னீர்செல்வத்திடம் பம்மிக்கொண்டு வணக்கம் வைக்க இருவருக்கும் ஒரு தலையசைப்பு தான். அக்னி அது கூட இல்லை. ஒரு பார்வையுடன் நகர்ந்துவிட்டான்.
“சிடுமூஞ்சி முதலாளிடா உனக்கு. கொஞ்சமாவது சிரிக்க வருதா? வயசுல மூத்தவ பாக்கறேன்னு…” என்று உள்ளே சென்று சாமியறையில் தட்டை வைத்து மாலையை அங்கே வைத்துவிட்டு மாவிளக்கை பிட்டு தர வாங்கிகொண்டவன் அங்கிருந்த திவானில் ஆசுவாசமாய் அமர்ந்தான்.
“என்னத்த சொல்லு உன் மாமனாரு ராசிலையா நான் பொறந்திருக்கேன். அவனுக்கு நேரத்த பாரேன் அவங்க குடும்பத்தோட சேர்ந்து சாமி கும்பிடனும்னு யோகத்தை. எனக்குன்னு வந்து பிறந்திருக்க பாரு…” என மகனை திட்ட,
“இந்த பேச்சை விடறீங்களா நீங்க?…” என எரிச்சலில் முகத்தை சுண்ட,
“உன் பம்மாத்து பகுமானத்தை எல்லாம் அங்க வச்சுக்க. இங்க பாரு ஸ்ரீநி உனக்கு பிடிக்குதேன்னு தான் அவளை நான் கட்டி வச்சேன். இப்ப என்னையே எடுத்தெறிஞ்சு பேச வச்சுட்டா இல்ல அவ…”
“அவ தான் உங்களை பேச சொன்னாளா? பேசனும்னு சும்மா பேச கூடாது. நானே கடுப்புல இருக்கேன்…” என சொல்ல சாரதாவிற்கு கோபம் அதிகமாக இருவருக்கும் சண்டை பெரிதாகியது.
பேச பேச பதிலுக்கு பதில் பேசிய மகனிடம் வாய்ச்சண்டையில் ஜெயிக்க முடியாமல் கண்ணீருடன் பேச ஆரம்பித்தார் சாரதா.
“ஏன்டா சொல்லமாட்ட? பெத்து வளர்த்து படிக்கவச்சு ஆளாக்கினேன்ல. பெத்த தாயிக்கு என்னடா செஞ்ச நீ? அந்த சாமிக்கிட்டு கூட்டு போக முடிஞ்சதா உன்னால?…”
“என்னமோ உலகத்துல யாருமே பண்ணாததை நீங்க பண்ணிட்ட மாதிரி பேசறீங்க? நீங்க வளர்க்காம ஊர்ல உள்ளவனா வளர்ப்பான்?…” என அவனும் பதிலுக்கு பேச,
“நீ பேசுவடா, இப்ப கை நிறைய சம்பாத்தியம், பொண்டாட்டி புள்ளைன்னு வாழற தான? நீ பேசுவ. என் வயசுல உன் புள்ளை உன்னை எட்டி உதைச்சாதான் உனக்கு எங்க வேதனை புரியும்…”
“பரவாயில்லை அப்ப நான் பார்த்துக்கறேன். அனுபவிச்சுக்கறேன்…”என தெனாவெட்டாய் பேசினான் ஸ்ரீநி.
“பார்த்தீங்களா? இவன் ஆசைக்கு எல்லாம் செஞ்சு செஞ்சு இன்னைக்கு கொஞ்சமாச்சும் மதிச்சானா?…” என சாரதா உண்மைக்கும் கலங்கி கண்ணீர் விட அதை பார்த்தவன் எரிச்சலாகிநானே தவிர வருந்தவில்லை.
“ப்ச், இப்ப எதுக்கு சும்மா அழுது ஆர்ப்பாட்டம் பன்றீங்க? உங்களுக்கு என்ன குறை? மாசமானா என் சம்பளத்துல பாதி தரேன். தேவையானதை அங்க இருந்தே செஞ்சு தரேன். போதாதா?…” என்று இறுமாப்பாய் கேட்க,
“தரனும்ல, பின்ன சும்மாவா? உன்னை இந்த இடத்துக்கு கொண்டுவர என்ன பாடு பட்டிருக்கோம். நீ சொன்னியே கடமை. அதத்தான் நீயும் செய்யற…”
தாய் மகனுக்கான பேச்சுக்கள் போய் குடுக்கல் வாங்கல் பெச்சுக்கலாய் கடமையை முன்னிறுத்தி இருவரும் வாக்குவாதம் செய்ய,
“இப்ப இது எதுக்கு? பேச்சை வளர்க்காத சாரதா…” என மகேஸ்வரன் தான் மனைவியை அடக்கினார்.
வாக்குவாதங்கள் நீள நீள வார்த்தைகளுமே அதிக வீரியத்துடன் வெடிக்க பார்த்தது. சரியாய் தடை போட்டவர் ஸ்ரீநிவாஸ் முகத்தை பார்த்து அவனை அமர வைத்தார்.
“கோபப்படாதப்பா, அம்மா யார்க்கிட்ட சொல்லுவா? உன்கிட்ட தான உரிமையா பேச முடியும்?…” நயமான பேச்சென்றாலும் அதற்கு கொஞ்சம் தணிந்தான் ஸ்ரீநி.
“பார்த்து பேச சொல்லுங்க. சும்மா என்னை டென்ஷன் ஆக்கற மாதிரி பேசினா அப்பறம் இந்த பக்கமே வரமாட்டேன்…”
“பார்த்தீங்களா? இவனை பார்க்காம என்னால இருக்க முடியுமா?…” என்று சாரதா அதற்கும் அழ,
“ஏன் உங்க கூட பொறந்தவரை பார்க்காம, கண்டுக்காம இருக்கீங்க தானே? அப்படியே என்னையும் நினைச்சுக்கோங்க…”
“அப்ப அவங்களுக்காக தான் என்னை இப்படி தள்ளி வச்சு பாக்கறியா?…”
“எனக்கு யாரும் முக்கியமில்லை. யாருக்காகவும் நான் பார்க்கவும் இல்லை. பார்க்கவும் மாட்டேன். நான் இப்படித்தான். எனக்கு நிம்மதியில்லைன்னு தெரிஞ்சா அங்க நான் இருக்கமாட்டேன்…” என சொல்லவும் தாயும், தந்தையும் அடங்கினார்கள்.
மகனை அப்படி வளர்த்தது அவர்கள் தவறல்லவா? எதற்குமே கொஞ்சமும் இறங்காத தனது சுயநலம் மட்டுமே முக்கியம் என நினைக்கும் மனப்பான்மையை வளரவிட்டது தவறல்லவா?
சிறுவயதில் இருந்தே அப்படித்தான் பிடித்த பிடியிலிருந்து கொஞ்சமும் யாருக்காகவும் தன்னை மாற்றிக்கொள்ளாதவன்.
ராகதேவி. அவளை பிடிக்கும். எப்பொழுதும் முகத்தில் மலர்ந்த புன்னகையுடன் மென்மையான குணத்துடன் வளைய வரும் அவளை அத்தனை பிடிக்கும். அங்கேயும் சுயநலமே அவனிடத்தில் விஞ்சி இருந்தது.
சொந்த மாமாவின் பெண். தங்களை விட வசதியில் சற்று குறைவு. அதிர்ந்து பேசத்தெரியாத பெண். எந்த சூழ்நிலையிலும் தனது மதிப்பிற்கு பங்கம் வராமல் தன் பேச்சை கேட்டு நடக்கும் பெண். இப்படி பல கணக்கீடுகைகளின் கீழ் தான் அவளை திருமணம் செய்தது.
திருமணம் முடிந்து ஒரே வீட்டில் இருப்பதனால் தாயின் நச்சரிப்பான பேச்சும் அதில் எந்நேரமும் வாட்டமான மனைவியின் முகமும் பிடிக்காதவன் தாயிடம் சண்டையிட்டு தனியாக செல்லும் முடிவிற்கு வந்தான்.
“எனக்கு பிரைவேசி வேணும். சும்மா அவன் என்னை கவனிப்பாளா உங்களை கவனிப்பாளா? இப்போதைக்கு நாங்க தனியா இருந்துக்கறோம். அப்பறமா உங்களோட வந்து சேர்ந்து இருக்கறதை யோசிக்கறோம்…” என சொல்லி மறுத்த ராகாவையும் இழுத்துக்கொண்டு மாமனாரின் வீட்டில் குடியேறினான்.
அங்கே சென்று ஆக்கிரமிப்பு செய்தவனிடம் என்னவோ ஏதோ என பதறியபடி வந்து சமாதானம் பேச முயன்ற ராகாவின் பெற்றோரிடம்,
“இங்க பாருங்க மாமா, இப்போதைக்கு நாங்க இங்க இருந்துக்கறோம். நல்ல வீடு கிடைக்கிற வரைக்கும். என்னால அங்க திரும்ப போக முடியாது…” என்றவன் சில நாட்களிலேயே அங்கேயே தங்கிவிட்டான்.
தனது வீட்டில் இருந்த ராகாவின் சீர்வரிசை பொருட்களில் பாதியை இங்கே கொண்டு வந்துவிட்டான். அப்பொழுதுதான் ராகாவிற்குள் நெருடலாக இருந்தது.
“வீடு பார்க்கனும்னு சொன்னீங்க?…” என்ற ராகாவிடம்,
“அதெல்லாம் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். மாமா வீடே இவ்வளவு பெருசு இருக்கும் போது வெளில பார்த்தா எவன் மதிப்பான்? உனக்கும் உன் வீட்டுல இருக்கற மாதிரி பீல் ஆகும். சந்தோஷமா இருப்ப…” என சொல்ல திக்கென்று இருந்தது.
“அப்பாட்ட சொல்லவேண்டாமா?…”
“உங்கப்பாட்ட சொன்னாலும் இத தான் சொல்லுவாரு. எனக்கு தெரியாதா?…” என அசட்டையாக சொல்ல,
“அப்ப நாம மாடிக்கு வேணும்னா போவோமே? எதுக்கு நம்ம ரெண்டுபேருக்கு இந்த வீடு?…”
“என்னால எல்லாம் மாடி ஏறி இறங்க முடியாது ராகா. இப்ப என்ன வந்தா ஒன்னு ரெண்டு நாள் தான இருப்பாங்க? அதுக்கு மாடி போதாதா?…” என சொல்லவும் முட்டிக்கொண்டு வந்த அழுகையை அடக்கியபடி அவள் நிற்க,
“ப்ச், இங்க பாரு, உனக்காக தான் இந்த வீட்டுக்கே வந்திருக்கேன். உன்னோட தனியா சந்தோஷமா வாழனும்னு. உன்னை சிரிச்ச முகமா வச்சுக்கனும்னு. இப்படி கண்ணீரை கசக்கிட்டு இருந்தா மனுஷனுக்கு டென்ஷன் ஆகுது…” என்றான் கடுப்புடன்.
ராகா அவனை திருமணம் செய்த நாளில் இருந்தே அவனின் குணத்தை கண்டுகொண்டாள். அது தாயாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி அவன் ஒரு முடிவு செய்துவிட்டால் யாரும் அதில் தலையிடுவதை விரும்பமாட்டான் என.
கொஞ்சம் பற்றில்லாமல் இருப்பவனோட எதிர்காலத்தை எண்ணி பயத்துடன் தான் வாழ்ந்தாள். அவளிடம் மட்டும் கொஞ்சம் இளகி இருந்தாலும் எப்பொழுது முருங்கைமரம் ஏறுவான் என்று தெரியாத நிலை.
கசகசப்புக்கள், இடைஞ்சல்கள் என எதுவுமில்லாமல் வாழவேண்டும் என நினைப்பவன் வளைந்துகொடுக்கும் ஒரே இடம் வேலை செய்யும் இடம் மட்டுமே. அதுவும் சுயநலம் தான்.
சொந்த ஊரில் கை நிறைய சம்பளத்தில் மதிப்பான ஒரு வேலை. நாய்படாத பாடும், திட்டுக்களும் வாங்கினாலும் அந்த சம்பளமும் சலுகைகளும் அவனை வேறு வேலை தேட தூண்டவில்லை. உள்ளுக்குள் எத்தனை அடி வாங்கினாலும் வெளியில் அக்னி தொழிற்சாலையின் பி. ஏ என்பது அவனுக்கு ஒரு தகுதி, பெருமை.
இப்பொழுது அதை கொண்டே தனது சுட்டுவிரல் ஆட்டத்திற்கு ஆடவைக்கும் மனைவியின் குடும்பத்தினருக்கே வேலை செய்ய வைத்துவிட்டானே என பொருமி பொருமி அமர்ந்திருந்தான்.
“ஸ்ரீநி, அம்மாவை உனக்கு தெரியாதா? ஏதோ ஆத்தமாட்டாம உன்கிட்ட பேசிட்டா…” மகேஸ்வரன் சொல்ல,
“பின்ன என்னப்பா? அங்க அத்தனை வேலை இருக்கும் போதும் உங்க கூடத்தான் முதல்ல சாமி கும்பிட வந்தேன்? காலையில ராகா கேட்டப்ப கூட நீயா போய்க்கன்னு தான் சொல்லிட்டு வந்தேன். நானே நினைக்கலை இப்படி அவங்க கூட போவேன்னு…” என கோபத்துடன் அமர்ந்திருந்த கட்டிலை தட்டியவன்,
“அந்த வீட்டுல நான் எவ்வளவு மதிப்பா மூத்த மருமகன்னு இருந்தா இந்த அக்னி ஸார் அவங்களை பாதுகாப்பா கூட்டிட்டு வா கொண்டு போய் விடுன்னு பேசறாரு…” என எரிச்சலுடன் சொல்ல,
“என்னடா சொல்ற?…” என கண்ணீரை துடைத்துவிட்டு மகனருகே வந்து அமர்ந்தார் சாரதா.
“ஆமாம்மா, நானே அந்த கடுப்புல இருந்தா நீங்க வேற ஒப்பாரி வச்சுட்டு இருக்கீங்க…”
“அங்க பன்னீர் ஸார் பக்கத்துல சரிக்கு சமமா உக்கார்ந்து ராகா அப்பா பேசறார். அவரும் கையை பிடிச்சுட்டு பேசறாரு. எனக்கு ஒரே ஷாக். இதுல அவரு லேசா மயக்கம் போடவும் அக்னி ஸார் என்னை விரட்டறார் குடிக்க கொண்டுவான்னு…”
“ஸ்ரீநி இது என்னாடா அதிசயமா இருக்கு? கூட உக்கார்த்தினாங்களா?…” என்ற சாரதா தங்கதுரை மயங்கியதை பற்றி விசாரிக்கவே இல்லை.
“உன்னோட பொறந்தவர் சாய்ஞ்சிட்டார்ன்னு சொல்றேன், பாதறவே இல்லையா நீங்க?…” என கேட்டான் ஸ்ரீநி.
“எல்லாம் தெரியும். ஒரு ஊருக்குள்ள இருந்துட்டு இது கூட தெரியாம என்ன? விசாரிச்சுட்டேன். சும்மா மயக்கம் தான. அதுக்கு போயெல்லாம் பார்த்துட்டா இருப்பாங்க. நல்லாத்தான இருக்காங்க. விடு…” என்றார் அசால்ட்டாக.
“ஆமா, பதறி காரை குடுத்து என்னை ட்ராப் பண்ண சொல்றாங்க. எவ்வளவு ஏத்தம்? ஆனா என்ன செய்ய? முதலாளி சொல்லும் போது செய்யனும்ல. கூடவே சாப்பாடு வருது பின்னாடியே…”
“இம்புட்டுக்கும் அவங்க மதிச்சா உன் மாமனார் வீட்டுல குளிர்விட்டுல போய்டும். பார்த்துக்கடா…”
“நான் விடுவேனாக்கும்? மாடிக்கு போகவும் அத்தை கவனிப்பும், ராகாவை கவனிக்க சொன்னதும் பார்க்கனுமே. அவங்க எப்பவும் என்னை விட்டுகுடுக்கமாட்டாங்க. ஏனா பொண்ணை குடுத்திருக்காங்க தானே?…” என சிரித்தவன்,
“இவங்க ஏன்ம்மா திடீர்ன்னு இப்படி செய்யறாங்க?…” என யோசனையானான்.
“ஸ்ரீநி எனக்கென்னமோ சின்னதை பார்க்கறமாதிரி தோணுதே…” என சரியாக சாரதா பாயிண்ட்டை பிடிக்க,
“ச்சே, ச்சே. அவங்க அந்தளவுக்கு எல்லாம் இறங்க மாட்டாங்க. அதுவும் அக்னி ஸார். நீயே சொன்னியே சிடுமூஞ்சின்னு. ஒரு தேங்காய் மூட்டைக்கு உன் அப்பன் வீட்டு சொத்தான்னு என்னை வச்சு செஞ்சாரு. அம்புட்டு பார்க்கறவரு, அட போங்கம்மா…”
“எதுக்கும் பார்த்துக்க ஸ்ரீநி….”
“அம்மா, சும்மா சும்மா வெறுப்பேத்திக்கிட்டு. பேசாம இருங்கன்றேன்ல. அந்த வீட்டுல என்னை கேட்காம எதுவும் நடக்காது. எனக்கு பிடிக்காததும். நீங்க வாயை மூடிட்டு இருந்தாலே போதும்…” என எரிந்து விழுந்தவன் மனதும் லேசாய் ஆட்டம் கண்டிருந்தது.
“சரி சரி ஒன்னும் பேசலை, நாளைக்கு கறி எடுத்து இங்க கொண்டு வந்துடாத…” என தாய் சொல்ல,
“ராகாவை செய்ய சொல்லவா?…” என கேட்டான் ஸ்ரீநி.
“அதெல்லாம் வேண்டாம். கனகாட்ட எனக்குன்னு சொல்லி கறி பிரியாணிசெய்ய சொல்லு. அதுக்கு அவ ஒரு பிரட்டல் செய்வா. அதுவும் செய்ய சொல்லி மத்தியானம் சாப்பாட்டுக்கு வாங்கிட்டு வா…” என உத்தரவிட,
“இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை. ஏன் இங்க சமைச்சா என்னவாம்? உங்களை எல்லாம்….” என அவன் பல்லை கடிக்க,
“ஏன்டா எப்பவாச்சும் தான் வரா. செஞ்சு குடுத்தா குறைஞ்சு போய்டுவாளா? உனக்குன்னு சொல்லு நல்லாவே செய்வா…” என சொல்லிய சாரதாவிடம் மேலும் வாக்குவாதம் செய்ய பிடிக்காமல்,
“நான் கிளம்பறேன்…” என வேகமாய் கிளம்பி வந்தான்.
அவனின் பைக் இன்னும் கோவிலிலேயே இருந்ததால் விறுவிறுவென நடந்தே தனது வீட்டிற்கு வந்தான். வரும் வழியில் எல்லாம் சாரதா சொல்லிய விஷயமே மனதை குடைந்து கொண்டு இருந்தது.
அதிலும் கீர்த்தனா ஊருக்கு வந்த அன்று நடந்த நிகழ்வும் அவனை யோசிக்க வைத்தது. யோசிக்க யோசிக்க கடைசியில் குழப்பமே.