ஒருமனது அப்படித்தான் என்றும், ஒரு மனது அதற்கு வாய்ப்பில்லை என்றும் மாறி மாறி பாடாய் படுத்தியது. காத்திருந்த மாமியாரும், மனைவியும் அமர்ந்திருந்தும் மண்டைச்சூட்டில் எரிச்சலுடன் தனது கோபத்தை எல்லாம் வாசலில் இருந்த கேட்டில் காண்பித்துவிட்டு சென்றான்.
“என்னங்க இங்க தூங்கறீங்க?…” என நடு இரவிற்கு மேல் வந்து ராகா எழுப்பவும் தான் ஹாலில் இருந்த சோபாவிலேயே உறங்கிவிட்டது புரிந்தது.
“ப்ச், தள்ளு, அப்பவே எழுப்பறதுக்கு என்ன?…” என கோபத்துடன் உள்ளே சென்றான் அவளை தாண்டிக்கொண்டு.
ஒரு பெருமூச்சுடன் தானும் சென்று மறுபக்கம் படுக்க அவனோ இப்பொழுது உறக்கம் கலைந்து விழித்தபடி இருந்தான்.
“என்னாச்சு மாமா? ஒன்னும் பிரச்சனை இல்லையே? உடம்பு ஏதாவது பண்ணுதா?…” என கேட்க அவளை திரும்பி பார்த்தவன்,
“ஏன்டி பதறி என்னையும் பதறடிக்கிற? ஒரு யோசனை அதான்…”
“நீங்க தூங்காம இருக்கவும் என்னவோன்னு நினைச்சுட்டேன்…” என்றவளின் கையை எடுத்து தன் மீது போட்டுக்கொண்டதும் ராகா தானாகவே புன்னகைக்க தானும் கண் மூடினான்.
மறுநாள் எழும் பொழுதும் இதே யோசனை. கீர்த்த்தனாவை பார்த்ததும் இன்னும் கூடியது.
“கீர்த்தி இங்க வா…” என்றான் மாடியில் கைப்பிடி சுவற்றில் அமர்ந்தபடி இருந்தவளை பார்த்து.
“இதோ மாமா…” என வேகமாய் கீழே இறங்கி வந்தாள். உள்ளிருந்து ராகாவும் வந்துவிட இவனின் அழைப்பை பார்த்து தங்கதுரையும், கனகாவும் கூட வந்துவிட்டனர்.
அத்தனை பேரின் முன்னாலும் எப்படி கேட்பது அவளிடம் என யோசித்தவன் என்ன சொல்லி சமாளிக்க என திகைத்தான்.
“என்ன மாப்பிள்ளை?…” என தங்கதுரை கேட்க,
“இல்லை அது வந்து ராகாவுக்கு ஹெல்ப் பண்ணுன்னு சொல்லத்தான் கூப்பிட்டேன்…” என்றதும்,
“எதுக்குங்க மாப்பிள்ளை. நம்ம வீட்டுல சாப்பிடலாம். சேர்ந்தே சமைச்சிடறேன்…” என்ற கனகா,
“சொல்லுங்க…” என தங்கதுரையை பார்த்து சொல்ல,
“ஆமாங்க, எதுக்கு தனி தனி சமையல்? அதுவும் மூணு வருஷங்கழிச்சு கொண்டாடற திருவிழா. எல்லாரும் ஒண்ணா சாப்பிடனும்ன்றது தான் நல்லா இருக்கும்…” என சொல்லவும் ராகாவிடம் திரும்பி ஒரு பார்வை பார்த்தவன்,
“சரிங்க மாமா, நீங்க இவ்வளவு தூரம் சொல்றதால சரி…” என சொல்ல,
“நான் போய் கறி எடுத்துட்டு வரேனுங்க…” என கிளம்ப,
“இருங்க மாமா…”
“இருக்கட்டும் மாப்பிள்ளை. நானே எடுத்துட்டு வரேன்…” என்றார் தங்கதுரை.
“கறி மேற்க்குதெருவில எடுக்காதீங்க. சப்பையா போடுவான். வடக்க போய் எடுங்க. நான் வழக்கமா அங்க தான் எடுக்கறது…” என சொல்லிவிட்டு கிளம்பிவிட,
“வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டீங்களா நீங்க? எவ்வளவு விலை விக்குது கறி…” என்றவளின் மொபைலுக்கு அழைப்பு வர எடுத்து பார்த்தவள் தாயை முறைத்துக்கொண்டே எடுத்து பேசினாள்.
“சொல்லுங்க…” என சொல்ல,
“ராகா, அம்மா வீட்டுக்கும் சேர்த்து செய்ய சொல்லு. மட்டன் பிரியாணியும், மட்டன் பிரட்டலும். மறந்துடாம…” என சொல்லிவிட்டு என்ன ஏதென்று கூட கேட்காமல் போனை வைத்துவிட ஆத்திரமும் அழுகையும் பொங்கியது.
“போங்க இருக்கற காசுக்கு அந்த மனுஷங்களுக்கு ஆக்கிப்போட்டு நீங்க மட்டும் தண்ணிய குடிச்சுட்டு வாழுங்க…” என கேவி அழுதபடி வீட்டிற்குள் ஓடிவிட்ட மகளை சமாதானம் செய்ய பின்னாலே சென்றார் கனகா.
“இங்க பாரு, ராகா. விடுடி. இப்ப என்ன? உனக்கு செய்யறதுல எங்களுக்கு என்னம்மா வந்திட போகுது?…” என கொஞ்சம் கொஞ்சமாக பேசி சமாதானம் செய்து மாடிக்கு அழைத்து சென்றான்.
வினயுடன் பேசியபடி விளையாடிக்கொண்டு இருந்த இருந்த தங்கதுரை மகளை பார்த்து புன்னகைத்தவர்,
“விடுடா. சரி நான் வெளில போய்ட்டு வரேன்…” என சொல்லி கனகாவை பார்க்க அவரும் சாமியை கும்பிட்டுவிட்டு கீர்த்தனாவின் ஜாதகத்தை எடுத்து கொடுத்தார்.
பெண்கள் இருவருக்குமே புரிந்தது என்னவென்று. ஆனாலும் அமைதியாக இருந்தார்கள்.
“போய்ட்டு வரேன்ம்மா…” என கிளம்பிவிட்டார்.
“சரி சரி அப்பா வரப்போ கறி எடுத்துட்டு வரட்டும். அதுக்குள்ளே நாம ஆகற வேலையை பார்ப்போம்…” என கனகா சொல்ல,
“இப்ப ஒன்னும் பார்க்க வேண்டாம். அதான் அப்பா வர நேரமிருக்கே…” என்ற கீர்த்தனா ராகாவை கண் காண்பித்து சொல்ல கனகாவும் மகள்களுடன் அமர்ந்துவிட்டார் அரட்டையடிக்க.
தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்த தங்கதுரை இரண்டாம் தெருவின் வளைவில் திரும்பினார். கோவிலுக்கு பக்கத்தில் தான் தரகர் வீடு என்பதால் அந்த பாதையில் சென்றுகொண்டு இருக்க எதிரே பைக்கில் அக்னி வந்துகொண்டு இருந்தான்.
அவனை பார்த்ததும் மரியாதை நிமித்தம் புன்னகைக்க அவனோ இவரின் அருகே வந்து வண்டியை நிறுத்திவிட்டான்.
“என்ன மாமா உடம்புக்கு பரவாயில்லையா இப்போ?…” என கேட்க உறவுமுறை சொல்லி அழைப்பது அந்த ஊரில் புதிதில்லை என்றாலும் அவன் அழைத்தது புதிது தான் அவருக்கு. ஆனாலும்,
“நல்லா இருக்கேன் தம்பி. கோவிலுக்கு போய்ட்டு வரீங்களா?…” என கேட்க,
“ஆமா, மூணு நாள் கோவில்ல நம்ம சாப்பாடு தான். அதான் பார்த்துட்டு வரேன். நீங்க என்ன இந்த பக்கம்?…” என பைக்கை விட்டு இறங்கியேவிட்டான்.
“சும்மா தான் தம்பி. ஒருத்தரை பார்க்கனும்…” என பொதுவாய் சொல்ல அவனின் பார்வை அவரையும் கையில் இருந்ததையுமாக மாறி மாறி பார்க்க,
“யார்ன்னு சொல்லுங்க நான் கொண்டுபோய் விடறேன்…” என்றான் இப்பொழுது உறுதியாக.
“ஐயோ, உங்களுக்கு எதுக்குங்க சிரமம்? நான் போய்ப்பேன். நீங்க கிளம்புங்க. இதோ அடுத்த கட்டுல தரகர் வீடு…” என சொல்ல இப்பொழுது அக்னியின் பார்வை கூர்மையாக உதட்டில் சிறு புன்னகை.
“தரகரா? கல்யாணமா மாமா?…” என்றவன்,
“நானே குடுத்திடறேன். குடுங்க…” என வாங்க திகைத்தவர் கை தானாக அவனிடம் கையில் இருந்த மகளின் ஜாதகத்தை நீட்டியது.
வாங்கிக்கொண்டவன் பைக்கில் பத்தரப்படுத்திவிட்டு பன்னீர்செல்வத்திற்கு அழைத்தான்.
“அப்பா, தங்கதுரை மாமா கீர்த்தனா ஜாதகத்தோட தரகர் வீட்டுக்கு போறாங்க…” என சொல்ல ஒரு நிமிடம் யோசித்தவர்,
“அக்னி, நீ அவர்க்கிட்ட போன் குடு…” என்றதும் தங்கதுரையிடன் நீட்டியவன்,
“அப்பா பேசனும்னு சொன்னார்…” என தர தங்கதுரைக்கு என்ன நடக்கிறது என புரியாத சுழலில் சிக்கிக்கொண்டதை போல் ஆனது.
“சொல்லுங்க ஸார்…” என பேச,
“உங்கக்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனுமே துரை. அக்னியோட வந்துட்டு போங்க…”
“இல்லை இப்ப நான்…”
“ஒன்னும் பதட்டம் வேண்டாம். எல்லாம் நல்ல விஷயம் தான்…”
“அது வந்துங்க, இல்ல இன்னொரு நாள்…” என தடுமாற,
“சரி உங்களுக்கு வர விருப்பம் இல்லைன்னா நாங்களே உங்க வீட்டுக்கு வரோம்…” என சொல்ல,
“அய்யோ, இல்லை இல்லை. வரேன். வரேன்…” என சொல்லிய தங்கதுரை அக்னியிடம் போனை நீட்டிவிட்டு அவனை பயத்துடன் பார்த்தார்.
“சொல்லுங்கப்பா. ஹ்ம்ம். ஓகே, வரோம்…” என்றவன் சிரிப்புடன் போனை வைத்துவிட்டு,
“வாங்க மாமா. பைக்ல ஏறுங்க…” என அழைக்க,
“தம்பி இது எனக்கு…”
“அப்பா ரெடியா இருக்காங்க. இல்லைன்னாலும் பரவாயில்லை உங்களை உங்க வீட்டுக்கே கொண்டு போய் இறக்கி விடறேன்…” என சொல்ல பதில் பேசமுடியாமல் வேறு வழியின்றி,
“நீங்க முன்னாடி போங்க, வீட்டுக்கு கறி எடுத்து குடுத்துட்டு வந்திடறேன்…” என்று சொல்ல,
“பார்த்துக்கலாம். இப்ப வாங்க நீங்க…” என ஒரு வழியாக அவரை ஏற்றிக்கொண்டு அவர்களின் வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டான்.
நேராக அலுவலக அறைக்குள் சென்றுவிட முதலில் தாங்கள் பேசிவிட்டு வருகிறோம் என சொல்லிவிட்டனர் பன்னீர்செல்வமும், அடைக்கலமும்.
“உடகாருங்க துரை, இப்போ பரவாயில்லையா?…” என கேட்ட பன்னீர்செல்வத்திடம்,
“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. இது சரிவரும்னும் தெரியலை…” என்றார் அவர் நேரடியாக.
“அப்போ உங்களுக்கு புரிஞ்சது தானே?…” என கேட்க தலையை அசைத்தார் அவர்.
பின்னே ஜாதகத்தை வாங்கியவன் அதனை புரட்டி பார்க்கும் பொழுதி அவனின் முகத்தில் இருந்த புன்னகையும் சந்தோஷமும் அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. அதுவே பயத்தை தந்தது.
“ஆமாம், எங்க பையன் அக்னிக்கு உங்க கீர்த்தனாவை கேட்கலாம்னு தான் நினைக்கறோம். அவனுக்கு பிடிச்சிருக்கு…” என்று சொல்ல அப்படியே தான் அமர்ந்திருந்தார் தங்கதுரை. முகத்தில் அப்பட்டமான மறுப்பு.
“நீங்க எதுக்கு தயங்கறீங்க துரை? எதுவானாலும் சொல்லுங்க…”
“இல்லைங்க இது சரிப்படாது. தப்பா நினைக்காதீங்க….” என எழுந்துகொள்ள பார்க்க,
“உட்காருங்க தங்கதுரை…” என அவரை அமரவைத்த அடைக்கலம் அங்கே நின்றுகொண்டு இருந்த அக்னியை கிளம்ப சொல்லிவிட்டு பேச ஆரம்பித்தார்.
அடைக்கலத்தின் தன்மையான அனுசரணை பேச்சில் கொஞ்சம் தெளிவு பிறக்க ஆனாலும் தயக்கம் தடுத்தது.
“வீட்டம்மாட்ட கலந்து பேசனும்ங்க. நானா முடிவு சொல்ல முடியாது. மூத்த பொண்ணுக்கே அவசரப்பட்டுட்டேன்…” என ஒரு வேகத்தில் வார்த்தையை விட்டுவிட்டவர் பின் பதறி பார்க்க,
“நாங்க இருக்கோம் உங்களுக்கு. எங்களை எங்க குடும்பத்தை பார்த்துட்டு தானே வரீங்க? அப்பறம் என்ன பயம் உங்களுக்கு?…” என்று கேட்க கண்கள் கலங்கியது அவருக்கு.
இன்மையில் வறுமை வேறு. இருக்கும் அனைத்தும் கண்முன்னே காலாவதி ஆவதை போல தங்கள் குடும்ப நிலமை. அது சொன்னால் இவர்களுக்கு புரியுமா? பணத்தில் பிறந்து வளர்ந்தவர்கள்.
சந்தோஷம் தான். மகிழ்ச்சி தான். பெண்ணிற்கு பெரிய வாழ்வு. ஆனால் சொந்தத்தில் முடித்தே இதோ ஒரு வார்த்தை பேசமுடியவில்லை. ஏன் என கேட்க கதியில்லை. இத்தனை பெரிய இடம், தகுமா? மனது சந்தோஷத்தை விட சஞ்சலம் கொண்டது.
நல்ல ஒரு வாழ்க்கை வந்தும் மகளுக்கு அமைத்துக்கொடுக்கமுடியாத நிலையில் நிற்கவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேனே, கொடுத்து உதவ கூட ஒருவரும் இல்லை. மனம் மருகியவரின் கண்களில் இருந்து சொட்டு கண்ணீர் அடைக்கலத்தின் கையை நனைத்தது.
திடுக்கிட்டு அடைக்கலம் நிமிர்ந்து பார்க்க தங்கதுரை தலை குனிந்தபடி இருந்தார். யோசனையில் இருக்கிறார் என நினைத்தால் கலங்குகிறாரே என கவலையுடன் பார்த்தவர் பன்னீர்செல்வத்திடம் பார்வையை திருப்பி விஷயத்தை சொல்ல அவருக்குமே வருத்தம் தான்.
“இங்க பாருங்க துரை. ம்ஹூம் சம்பந்தி. இப்ப பாருங்க என்னை. உங்க பொண்ணுக்கு எந்த சீரும் நாங்க கேட்கலை. இந்த குடும்பத்து சுபிட்சத்துக்காக உங்க பொண்ணையே சீரா தாங்க. அவ இந்த வீட்டுல மகாராணியா சந்தோஷமா வாழ்வா. உங்களுக்கு நான் வாக்கு குடுக்கறேன்…” என அவரின் கையை பிடித்து சொல்ல உணர்ச்சிமிகுதியில் உதட்டை கடித்தபடி அவர் இருக்க,
“உங்களை நாங்க வற்புறுத்தலை. இத்தனை கஷ்டம் உங்களுக்கு வேண்டாம் துரை. எங்களுக்கு பிடிச்சிருக்கு. சம்பந்தியா தான் நான் நினைச்சேன். எங்க மேல நம்பிக்கை இருந்தா பொண்ணை குடுங்க. இதுக்கு மேல உங்க விருப்பம்…” என சொல்ல,
“ஐயோ உங்களை நம்பாம என்னங்க? ஆனா…” என சொல்லியவரின் கை இன்னமும் நடுங்க,
“வீட்டுக்கு போங்க. தங்கச்சிட்ட பேசிட்டு போன் பண்ணுங்க. நாங்க சாயங்காலம் வரோம்…” என சொல்ல,
“அதுக்குள்ளே எப்படி?…”
“முறையா பேசனும்ல. நல்ல விஷயத்தை தள்ளி போட வேண்டாம் பாருங்க. அதான்…” என சொல்ல,
“இது நான் மட்டும் முடிவு பண்ண முடியாது. என் மூத்த மாப்பிள்ளை, என்னோட அக்கா மாமா எல்லாரும் முடிவு பண்ணனும்…”
“உங்களுக்கு ஏன் கவலை? அதை நாங்க பார்த்துப்போம். நீங்க தங்கச்சிட்ட பேசுங்க. கீர்த்தனாக்கிட்டையும்…” என்று சொல்ல ஸ்ரீநிவாஸிற்கு போன் செய்து அவனை வரவழைத்தார் பன்னீர்செல்வம்.
அங்கே வந்தவன் தனது மாமனாரை எதிர்பாராமல் திகைக்க உள் நெஞ்சில் கண்ணிவெடியின் சிதறல்கள். மனதிற்குள் ஏன் வந்தார் எதற்கு வந்தார் என தெரியாமல் உள்ளே குறுக்கும் நெடுக்குமாய் கீரிகள் ஓட வெளியே காண்பித்துக்கொள்ளாமல் அத்தனை பணிவுடன் பவ்யமாக அவன் வந்து நிற்க மருமகனின் இன்னொரு பரிமாணம் பார்த்தபடி இருந்தார் தங்கதுரை.
“ஸ்ரீநிவாஸ்…” என பன்னீர்செல்வம் ஆரம்பிக்கும் முன்,
“அப்பா, ஸ்ரீநிவாஸ் வேண்டாம். மாமாவை கார்ல அனுப்பிருவோம். ஸ்ரீநிவாஸ்க்கு வேற வேலை இருக்கு…” என அங்கு வந்த அக்னி சொல்ல,
“மாமாவா?” என அடுத்த அதிர்ச்சி.
“அப்ப நேத்து சொன்ன மாமா என் மாமான்னு இல்லையா?” உள்ளங்காலில் இருந்த ரத்தம் முழுவதும் மொத்த நரம்புகளை சுருட்டிக்கொண்டு உச்சந்தலையில் வந்து பிடித்து இழுத்ததை போல இருந்தது அவனுக்கு.
“அப்பறம் நீங்க கிளம்புங்க சம்பந்தி…” என பன்னீர்செல்வம் சொல்ல தங்கதுரையை திரும்பி வேகமாய் பார்த்தான் ஸ்ரீநிவாஸ்.
“மாப்பிள்ளை…”
“மாமா, நீங்க கிளம்புங்க. அப்பறம் லஞ்ச் நம்ம வீட்டுல இருந்து வரும். அதனால ரிலாக்ஸா இருங்க…” என்ற அக்னியை பார்த்தவன்,
“உனக்கு இம்புட்டு நீளமா பேச வருமா?” என்பதை போல இன்னும் அதிர்ச்சி விலகாமல் பார்த்தவனின் அடிவயிற்றின் உருண்டைகள் எல்லாம் தொண்டைக்குழியில் ஆட்டம் போட்டது.
“இதுக்கு நான் சம்மதிக்கமாட்டேன்” என உள்ளுக்குள் நினைத்தான். வழக்கம் போல நினைக்கத்தான் முடிந்தது.
பன்னீர்செல்வம் சொல்லிய விஷயத்தை மறுக்க கூட வாய்ப்பின்றி தன் குடும்பத்தை தானே கிளப்பிக்கொண்டு வரும் பொறுப்பையும் இரக்கமின்றி தன்னிடம் ஒப்படைத்தவர்களை ஒன்றும் செய்யமுடியாமல் கோபத்துடன் தனது வீட்டிற்கு சென்றான்.
உள்ளே நுழையும் பொழுதே பாட்டுச்சத்தம் காதை கிழித்தது. அதுவும் தன்னை கேலி செய்வதை போல இருந்தது தான் அவனின் உட்சபட்ச கோபத்தை தூண்டியது.
“உன்குத்தமா என்குத்தமா யார நான் குத்தம் சொல்ல? பச்ச பசும்…” என்றதுடன் டிவியின் வயரை பிடுங்கி எரிந்திருந்தான் ஸ்ரீநிவாஸ்.
“போச்சு சும்மாவே என்னை கண்டா அவருக்கு ஆகாது. ஏதோ ஒழுங்கா வேலை பார்க்கறேன்னு வச்சிருக்கார். எட்டுமணிநேர வேலை போய் இனி சகலை சகலை. ஐயோ…” என கத்தியவன் தனது தலைமுடியை தானே இழுத்துக்கொண்டான் ஆத்திரத்தில்.
“ஸ்ரீநி…” என கத்திய தாய், தந்தையை கூட அருகில் வரவிடாதவன்,
“போச்சு போச்சு, எல்லாம் போச்சு. இப்ப என்ன செய்வேன். என் பேச்ச யார் கேட்பா? போச்சு…” என்று கன்னாபின்னாவென கத்த மகனுக்கு என்ன ஆனதோ என பயந்து அவர்கள் இருக்க ஸ்ரீநிவாஸ் நிலைகொள்ளாமல் தவித்தான்.
அவனுக்கு தெரியும் இத்திருமணத்தை நிறுத்த முடியாதென்று. தனது முக்கியத்துவம் இனி இங்கே எப்படி செல்லுபடி ஆகும்? தன்னை மதிப்பார்களா? இப்படித்தான் இருந்தது அவனின் எண்ணபோக்கு.
“ஸ்ரீநிவாஸ்…” என கம்பீரமாக அழைக்கும் அக்னியின் முன் மூத்த மருமகன் என நெஞ்சை நிமிர்த்தி நிற்க இயலுமா?
நினைத்து நினைத்து ஆற்றாற்று போனான் அவன். என்ன செய்வேன்? என பல்லை கடித்துக்கொண்டு அவன் இருக்க நினைத்ததை போல அக்னியிடம் இருந்து போன்.
“ஸ்ரீநிவாஸ்…” என அவன் அப்பக்கம் இருந்து அழைத்ததும் தன்னை போல எழுந்து நின்றவன்,
“ஸார்…” என்றான் மரியாதையாக வரவழைத்துக்கொண்ட இயல்பான குரலில். உறவாக போகிறானே என இலகுவாக பேச முடியாதபடி அவன் தவிக்க,
“வீட்டில பேசியாச்சா?…” என்றான் இன்னும் அதிகாரமாக.
அந்த மனுஷன்ட்ட மட்டும் குழைய தெரிஞ்சது. என்கிட்டே மிளகாய் காரத்தை விட தூக்கல். என கடுகடுத்தவன்,
“இப்பதான் ஸார் வந்திருக்கேன். இப்ப பேசிட்டு கூப்பிடறேன்…”
“ஹ்ம்ம்…” என்றவன் கட் செய்துவிட ஸ்ரீநிவாஸ் எதிர்காலம் கண்முன் பிரகாசமாய் தெரிந்தது.
ஆனால் சாரதாவின் கவலையோ வேறு. இவன் என்ன சாப்பாடு இல்லாமல் வெறுங்கையுடன் வந்திருக்கிறானே என அவனருகே கேட்க நெருங்கினார் அவனிருக்கும் நிலை புரியாமல்.