கவிதை – 6
அக்னி தங்கதுரை கிளம்ப சொல்லவும் அவரோ தயங்கி தயங்கி மூத்த மருமகனை பார்த்தார்.
“மாப்பிள்ளை அது வந்து…” என ஸ்ரீநிவாஸ் பக்கம் அவர் நெருங்க அவனோ ஒரு நொடி தன்னை மறந்து அவரை முறைத்தபடி இருந்தான். அவனின் அந்த வெறுத்த பார்வையை அங்கிருந்த ஆண்கள் மூவருமே கண்டுகொண்டனர்.
ஒரு புருவச்சுழிப்புடன் அவனையே பார்த்தபடி இருந்தான் அக்னிசெல்வன். மனதிற்குள் ஸ்ரீநிவாஸ் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியும், கோபமும், அதையும் தாண்டிய ஒரு ஆத்திரமும் கண்களுக்குள் தப்பாமல் விழுந்தது.
“ஸ்ரீநிவாஸ்…” என அக்னி அழைக்க திடுக்கிட்டு திரும்பியவன் மீண்டும் மாமனாரை பார்த்தான்.
“மாமா, நாங்க சொல்லிக்கறோம். நீங்க கிளம்புங்க…” என அக்னி மீண்டும் சொல்ல அங்கே எதுவும் பேச முடியாமல் அவனுக்கு தலையசைத்தவர்,
“கிளம்பறேன் மாப்பிள்ளை…” என ஸ்ரீநியிடம் சொல்ல அவனோ கடுகடுவென நின்றிருந்தான் பதில் சொல்லாமல்.
“ஸ்ரீநிவாஸ்…” என்ற அக்னியின் அழுத்தமான அழைப்பில் சுதாரித்து,
“ஸார்…” என அவனை பார்த்தான்.
“உங்கக்கிட்ட கிளம்பறேன்னு சொன்னா என்ன சொல்லனும்?…”
“ஸாரி ஸார்…” என்றவன்,
“சரி…” என சொல்லியவன் பார்வை தன்னைப்போல் அக்னியை நோக்க அவன் இன்னும் அதிருப்தியான பாவனையுடன் நிற்க,
“சரிங்க மாமா. கிளம்புங்க. பார்த்து பத்திரமா போங்க…” என வரிசையாக வார்த்தைகள் வந்து விழுந்தன. அக்கறையான வார்த்தை வெறும் வார்த்தையில் மட்டும். முகபாவனையோ சம்பந்தமின்றி இருந்தது. உதட்டிற்கு ஒட்டாத சிரிப்பு வேறு.
தங்கதுரைக்கு அப்பொழுதே தலைசுற்றியது. இரு மருமகன்கள், தன் இரு பெண்களின் எதிர்காலம். ஆரம்பமே இப்படி உள்ளதே என கவலையுடன் நினைத்தார்.
“வாங்க மாமா…” என வாசல் வரை சென்று அவரை வழியனுப்பி வைத்துவிட்டு உள்ளே வர அதற்குள் பன்னீர்செல்வம் ஸ்ரீநிவாஸிடம் கேள்விகனைகளை ஆரம்பித்து இருந்தார்.
“உங்க ரியாக்ஷனே சரியில்லையே ஸ்ரீநிவாஸ். சம்திங் ராங். ஒரு பெரியவர், அதுவும் உங்க சொந்த தாய்மாமா. இங்க வந்தவரை பார்த்து ஒரு ஸ்மைல் கூட இல்லையே உங்களுக்கு?…” என பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டு இருக்க,
“என்ன ஸ்ரீநிவாஸ் இந்த ப்ரபோஸல் உங்களுக்கு பிடிக்காத மாதிரி தெரியுதே? கீர்த்தனாவை நான் கல்யாணம் செஞ்சுக்கறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?…” என்றான் நேரடியாக.
“ஆமாம், ஸ்ரீநிவாஸ் வேலையில மட்டும் திறமையை காண்பிச்சா போதாது. மனுஷனா நமக்குள்ள அந்த தன்மை இருக்கனும். உங்ககிட்ட நான் இதை எதிர்பார்க்கலை…” என அடைக்கலம் சொல்ல,
“சித்தப்பா நான் ஏற்கனவே சொல்லிருக்கேன் எனக்கு வேலையும் பர்பெக்ட்டா இருக்கனும். அதே நேரம் எமோஷன்ஸும் இருக்கனும். இரக்கமில்லாதவன் மனுஷனே இல்லைன்னு. நீங்க இண்டர்வியு செஞ்சு தான் ஸ்ரீநிவாஸ் இப்ப நம்ம கம்பெனில வொர்க் பன்றார்…” என்றவனின் குரலில் அப்பட்டமான அதிருப்தி.
“ஸார் அப்படி எல்லாம் இல்லை ஸார்…” என பதறினான் அவன்.
தனக்கு பேச வாய்ப்பே தராமல் இப்படி மாற்றி மாற்றி தெளியவிடாமல் அடிக்கும் அவர்களை எதிர்க்கவும் முடியாமல் பல்லை கடித்துக்கொண்டு இருந்தான்.
“உங்கக்கிட்ட இதை பலதடவை வார்ன் பண்ணிருக்கேன். மனி மைண்டட் இருந்தாலும் மத்தவங்க சூழ்நிலையையும் நாம மைண்ட் பண்ணனும்னு…” என சொல்ல,
“எஸ் ஸார்…”
“அவர் யாரு?…”
“என்னோட மாமனார்…”
“அதுக்கு முன்னாடி?…”
“எனக்கு மாமா…”
“இனி அவர் தான் எனக்கும் மாமனார். புரியுதா?…”
இதற்கு மேலும் மறுக்க அவன் என்ன முட்டாளா? கடுப்பு தான். எரிச்சல் பலமடங்கு பெருகி அந்த புகைச்சல் காது வழியாக வெளியே வந்துவிடுமோ என பயந்தே போனான். அந்தளவிற்கு அடிவயிறு கபகபவென்று எரிந்தது.
எச்சிலை கூட்டி விழுங்கியபடி நின்றவனுக்கு உறுதியாக ஒன்றுமட்டும் புரிந்துபோனது. இந்த கல்யாணத்தில் அக்னி எத்தனை தீவிரமாக இருக்கிறான் என்று.
“உனக்கு வேற பொண்ணே கிடைக்கலையா?” என நாக்கை பிடுங்குவதை போல கேட்க ஆசை இல்லை. பேராசை தான். ஆனால் தன் நாக்கை பிடுங்கி கையில் கொடுத்துவிடுவானே?
“இவன் முன்னால மறுத்து கூட பேச முடியலை. கல்யாணம் முடிஞ்சா எதிர்க்க நின்னு முறைக்க கூட விடமாட்டானே? ம்ஹூம் இதை நடக்கவிட கூடாது. என்ன செய்யலாம்?” என சிந்தித்தான்.
தனக்கு சமமாக யாராவது இன்னொரு மாப்பிள்ளையாக வந்தாலே தனக்கு அங்கே மதிப்பீடு என்பது கொஞ்சம் குறைவு தான். இதில் தானே பயந்து பதுங்கும் இவன் வந்தால்? கோபத்தில் அவன் அக்னியை ஒருமையில் மனதிற்குள் பேசிக்கொண்டு இருந்தான்.
“என்ன ஸ்ரீநிவாஸ் யோசனை? இந்த மேரேஜை எப்படி ஸ்டாப் பண்ணலாம்ன்னா?…” என அக்னி கேட்க,
“ஐயோ இன்னைக்குன்னு இத்தன நீளமா பேசறானே” என்னத்த சொல்ல என நொந்து வெந்த மனதுடன்,
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை ஸார். என்ன இருந்தாலும் கீர்த்தி எங்க வீட்டு பொண்ணு…”
“தங்கதுரை மாமான்னு சொன்னப்ப யார் அதுக்கு கேட்டப்பவே எனக்கு தெரிஞ்சிருச்சு கீர்த்தி உங்க வீட்டு பொண்ணுன்னு…” என அக்னியும் பதிலுக்கு பதில் வாயாட,
“கரெக்ட்டான நேரத்துல இதான் இது ஞாபகத்துக்கு வருமோ இது?” என பேந்த பேந்த விழித்தான்.
“இவன் ஒருத்தன்?…” என வாய் தவறி சொல்லிவிட,
“மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சு சத்தமா சொல்லிட்டீங்க. அந்த இவன் ஒருத்தன் நானா ஸ்ரீநிவாஸ்?…” என்று கேட்கவும் அவ்வளவு தான். சகலமும் ஆடியது அவனுக்கு.
“ஐயோ சத்தியமா இல்லை ஸார். நான் என்னை சொன்னேன். நீங்க கேட்டும் இன்னும் பதில் சொல்லாமல் இருக்கிறேனேன்னு என்னை தான் சொல்லிக்கிட்டேன்…”
“ஓஹ் செல்ப் டேமேஜ்…” என கேட்க,
“ஆமா, அதே தான். அதே தான்…” என்றான்.
பார்த்துக்கொண்டு இருந்து பன்னீர்செல்வமும், அடைக்கலமும் அதுவரை அமைதியாகவே இருந்தார்கள்.
தங்கதுரை விட்ட கண்ணீரும், அதன் பின்னால் ஒளிந்திருக்கும் சஞ்சலமும், அச்சமும் அவர்களை அசைத்திருந்தது. அதிலும் அவர் தவறி விட்ட அந்த வார்த்தை.
“மூத்த பொண்ணுக்கே அவசரப்பட்டுட்டேன்” என கண்ணீருடன் அவர் சொல்லியது பெண்ணை பெறவில்லை என்றாலும் அவரின் வயதை ஒத்த தகப்பன்களாய் அவர்களுக்கு நன்றாகவே புரிந்தது.
ஏற்கனவே ஸ்ரீநிவாஸ் மேல் வேலையை தவிர்த்து சற்று அதிருப்தி தான். ஆனாலும் “அவனின் சொந்த விஷயம், நமக்கு தேவையும் இல்லாதது” என கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டார்கள். இனி அப்படி இருக்க முடியாதே.
ஒன்றுக்குள் ஒன்று. ஒரே வீட்டின் மருமகன்கள். இனி தங்கதுரை பெண்ணின் விஷயத்தில் கலங்கினால் தாங்கள் என்ன அவருக்கு சம்பந்தி என்று தான் உரிமையுடன் நினைத்தார்.
“ஸ்ரீநிவாஸ்…” என்ற பன்னீர்செல்வத்தின் குரலில் அவரிடம் திரும்பியவன்,
“ஸார், நான் எதுவும் அக்னி ஸார் சொல்ற மாதிரி நினைக்கலை…” என்று சொல்ல,
“எங்களுக்கும் தெரியும்ப்பா…” என்றார் அவர். குரலில் சிறு நக்கல் தெறித்ததோ?
“அது போதும் ஸார். அது போதும். எனக்கு சந்தோஷம் தான். ஆனா பாருங்க, என் மாமனாருக்கு அந்தளவுக்கு பொண்ணுக்கு செய்ய முடியாத சூழ்நிலை. என்ன பண்ணுவாரு? அதான் அவருக்காக தான் யோசிச்சேன். அதுவும் இப்ப நகை விக்கிற விலைக்கு? அதுவும் கடன் வேற இருக்குது. அதை அடைக்கவே ரொம்ப கஷ்டப்படறாரு…”
பரிதாபப்படுவதை போல தங்கதுரையின் இயலாமையை அவன் அழுத்தமாக சுட்டிக்காட்ட முயல்வதும் மறைமுகமாய் அவருக்கு தகுதியில்லை என்பதை இவர்களுக்கு அறிவுறுத்துவதை போல சொல்ல கேட்டவர்களுக்கு என்ன மனிதன் இவன் என்று தோன்றியது.
“வாவ் ஸ்ரீநிவாஸ், உங்களுக்கு அவர் மேல இவ்வளவு அக்கறை இருக்கும்னு எனக்கு தெரியாமலே போய்டுச்சு பாருங்க…” என அக்னி எள்ளலான புன்னகையுடன் சொல்ல அதை கூட புரியாதவன்,
“பார்த்தீங்களா ஸார், உங்களுக்கு தெரியுது அவர் மேல எனக்கு அக்கறை இருக்குன்னு. நான் எப்படி உங்க கல்யாணத்துக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லுவேன். எல்லாம என் மாமனாரை நினைச்சு தான் எனக்கு கவலை…” என்று உச்சுக்கொட்ட,
“சோ வாட் ஸ்ரீநிவாஸ், அதான் அவருக்கு ஹெல்ப் பண்ண நீங்க இருக்கீங்களே? உங்க சேலரியே சுளையா வருதே. பேசாம நகை எடுக்கற பார்ட் நீங்க செஞ்சிருங்க. இத்தனை அக்கறை இருந்து உங்களுக்கு செய்யனும்னு ஒரு ஆசை இருக்கும் இல்லையா?…” என்று அவனை மடக்க,
“ஆங் நானா?…” என மூச்சை இழுத்து பிடித்து திணறி நிற்க,
“நீங்க தான். உங்களோட அக்கறையை இதுல கட்டுங்க. இந்த கல்யாணத்தை எடுத்து நடத்துங்க. அவருக்கு நீங்க மூத்த மருமகன் இல்லை. ஒரு மகன்றதை நிரூபிங்க. மாமனாருக்கு தோள் குடுத்து அவங்க குடும்பத்துக்கு ஆலமரமா நிக்கறதா இந்த ஊருக்கு காண்பிங்க…”
வரிசையாய் அவனை எந்த பக்கமும் தப்பிக்க முடியாமல் அக்னி வட்டத்தை போட அந்த வட்டத்திற்குள் எலிப்பொறிக்குள் பிடிபட்ட எலியாய் தவித்து போனான் ஸ்ரீநிவாஸ்.
“யார் பெத்த பொண்ணுக்கு யாரு சம்பாத்தியத்தை அழறது?” என பத்திக்கொண்டு வந்தது. எரிச்சல் இப்பொழுது அடிவயிற்றில் இருந்து உடலெல்லாம் பரவ முகத்தில் காட்டாமல் இருக்கவே அவன் பேரும் பிரயத்தனப்படவேண்டியதாக இருந்தது.
“அக்னி சொல்றது சரி தான் ஸ்ரீநிவாஸ். இதை நான் கூட யோசிக்கவே இல்லை. அவர் உங்களுக்காக அந்த வீட்டையே விட்டுக்குடுத்து இருக்கார்ன்னு நினைச்சேன். ஆனா பாருங்க அவர் வீட்டுக்கு பாதுகப்பாவும் வந்து போறப்ப உதவியாவும் இருக்கத்தான் அங்க நீங்க இருக்கீங்கன்னு இப்ப புரியுது…”
பன்னீர்செல்வமும் இப்படி சொல்ல கதறும் கதறல் தொண்டையிலிருந்து துள்ளி வெளியே வரும் அபாயத்தில் பற்களால் உதட்டை கடித்தபடி நின்றான்.
“ஓகே இனி இந்த கல்யாணம் ஸ்ரீநிவாஸ் பொறுப்பு…” என்ற அடைக்கலம்,
“ஸ்ரீநிவாஸ், உன் திறமை மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. உன்னால நல்லபடியா இந்த கல்யாணத்தை பொறுப்பெடுத்துக்க முடியும். உன் வீட்டுல நீ பேசு. சாயந்தரம் நாங்க பொண்ணு கேட்டு வரும் போது அந்த வீட்டு மனுஷனா நீ தான் முன்னால நிக்கனும்…”
“ஸார் நான் எப்படி?…” இன்னுமே வார்த்தைகளை மென்று விழுங்கினான் ஸ்ரீநிவாஸ்.
“நீதான்யா இதுக்கு சரியான ஆளு. உன்னை வேலைக்கு எடுக்கும் போதே உன் மேல ஒரு நம்பிக்கை வச்சு தான் நான் எடுத்தேன். அந்த நம்பிக்கையை காப்பாத்தற நேரம் வந்திருச்சு உனக்கு. அக்னிக்கு ப்ரூவ் பண்ணு. நான் சரியான ஆளைத்தான் தேர்ந்தெடுத்திருக்கேன்னு…” என்று அடைக்கலமும் மகன் போட்ட வட்டத்திற்கு முலாம் பூச அந்தப்பக்கமும் திரும்ப முடியாமல் அவர்கள் பேசியதை கேட்டே களைத்து போனான்.
இப்பொழுது கோபம், ஆத்திரம் எல்லாம் மறைந்து யாருமற்ற தனிமையில் வாய்விட்டு ஓவென்று கதரத்தான் தோன்றியது ஸ்ரீநிவாஸிற்கு.
“மூணு பேரும் கொள்ளைக்கூட்ட ஆளுங்க மாதிரி என்னோட மொத்த சேவிங்க்சையும் உறிஞ்சிருவாங்க போல. இதுல நம்பிக்கையை காப்பாத்தனுமா? நான் கேட்டேனா என் மேல நம்பிக்கை வைங்கன்னு?” என பரிதாபமாக அடைக்கலத்தை பார்த்தவன்,