“நம்பிக்கையை காப்பாத்தலைன்னு வேலையை உருவிட்டு விட்டுடுவாரோ? குடும்பமா படுத்துறாங்களே? கல்யாணத்தை நடக்க விட கூடாதுன்னு நான் நினைச்சா என்னையே நகை எடுத்துபோட்டு கல்யாணத்தை நடத்த சொல்றாங்க, என்ன ஒரு வில்லத்தனம்?” பற்களை நறநறவென சத்தமில்லாமல் கடித்தவன் அப்படியே இருக்க,
“சித்தப்பா…”
“அட இருப்பா, ஸ்ரீநிவாஸ்க்கு நல்லாவே தெரியும் என்ன செய்யனும்னு. இந்த கல்யாணத்தை நல்லபடியா பேசி முடிப்பான். நம்ம குடும்பத்துக்கு விசுவாசி ஆச்சே. அதிலையும் மாமனாரை தாங்கும் மருமகன் வேற…” என்று அடைக்கலம் சொல்ல,
“ஐயோ நிசமாவே புகழ்றாங்கலோ? பார்த்தா வெறிகொண்டு பிராண்டுற மாதிரியே இருக்கே” என இன்னுமே குழம்பி போனான்.
“கல்யாணம் நடக்கனும். பார்த்துகோங்க ஸ்ரீநிவாஸ். முதல்ல வீட்டுக்கு போய் உங்க அப்பாம்மாட்ட பேசுங்க…” என சொல்லியே அவன் அனுப்பிவைத்த விதம் கிலியை பரப்பியது அவனுள்.
இதோ வீட்டிற்கு வந்து அமர்ந்திருந்தவன் தலைமுடியை தன் கைகளாலேயே பிடித்து இழுத்து ஓவென்று கத்தினான்.
“ஸ்ரீநி என்னன்னு சொல்லுடா, முதல்ல நடந்ததை சொல்லு. நீ ஏன் இப்படி இருக்க?…” என கேட்டார் சாரதா.
“எல்லாம் என் தலைவிதி, நான் நிம்மதியா இருக்க கூடாதுன்னே என்னை துரத்துது. நான் கல்யாணத்தை நடத்தனுமாம் கீர்த்திக்கு…”
“அப்படின்னு எந்த கிறுக்குப்பயடா சொன்னான்?…” என மகேஸ்வரன் கேட்க,
“எல்லாம் என் முதலாளி தான்…”
“அவங்களுக்கு என்னத்துக்குடா அடுத்த வீடு பஞ்சாயத்து?…” என்ற சாரதா,
“சரி அது எதுக்கு நமக்கு தேவையில்லாம. என்ன வெறுங்கையோட வந்திருக்க? பிரியாணி எங்கடா?…” என கேட்க மெதுவாய் நிமிர்ந்து பார்த்தான் ஸ்ரீநிவாஸ்.
“பிரியாணியா?…”
“என்னடா கனவுகினவு கண்டியா? உன்கிட்ட தான சொல்லிவிட்டேன். நீயும் சரின்னு தலையாட்டிட்டு தான போன? இப்ப வந்து ராப்பகலுக்கு என்னத்துக்கு ரப்பர் பேண்டுன்னு கேட்கற மாதிரில இருக்குது?…” என்று கையை தட்டி அவனை மட்டம் தட்ட,
“சோறு, சோறு சோறு. உனக்கு அதை விட்டா வேற ஒன்னும் தெரியாது அதானே? என்னை பார்த்தா எப்படி இருக்குது?…” என அவரின் கழுத்தை நெரிப்பது போல கேட்க,
“என்னடா பொசுக்குன்னு மரியாத இல்லாம பேசிட்ட? உன்னைய அருமை பெருமையா வளர்த்ததுக்கு…”
“ம்மா, வாயை மூடிரு. நானே கொலவெறில இருக்கேன்…” என்றவன் விஷயத்தை சொல்ல,
“அடி சக்கைனானா. நான் சொன்னப்ப என்னமோ அப்படி இல்லன்னா. பாத்துக்கிட்டியா உன் மாமன் வவுச. புடிச்சாலும் புடிச்சான் புளியங்கொம்பா…”
“இப்ப தம்பி புராணம் பாடற நேரமா? நானே என்ன செய்யன்னு தெரியாம உட்கார்ந்து இருக்கேன்…”
“அதெல்லாம் முடியாதுன்னு கட் அன்ட் ரைட்டா சொல்ல வேண்டியது தானே?…”
“அப்பறம் பிரியாணிக்கு பிச்சை தான் எடுக்கனும்?…” என்றான் பல்லை கடித்துக்கொண்டு.
அங்கே காண்பிக்க முடியாத கோபத்தை எல்லாம் இங்கே காண்பித்துக்கொண்டு அவன் இருக்க,
“இங்க பாரு ஸ்ரீநி, எப்படியும் உன் மாமன் இதுக்கு சம்மதிக்க நீ விடாத. மூத்த மருமகன்டா. நாளைப்பின்ன உனக்குன்னு அந்த வீட்டுல மவுசு இல்லாம போயிரும்….” என சாரதா தூபம் போட,
“நானும் அதான்ம்மா யோசிக்கறேன். ஆனா அக்னி ஸாரும், அவங்க அப்பாவும் வேற மாதிரி பேசறாங்க. என்னை நல்லவிதமா நினைக்கறாங்க. நான் தான் அப்படி இல்லையே. என்னால ஒத்த பைசா செலவு பண்ண முடியாது. ஏதோ அவங்க வீட்டுல இருக்கோமேன்னு தான் அப்பப்ப கொஞ்சம் நேக்கு போக்கா போயிட்டு இருக்கேன்…” என்று சொல்ல மீண்டும் போன். ஆனால் அடைக்கலத்திடமிருந்து.
“ஸார்…”
“என்ன ஸ்ரீநிவாஸ்…” என அவர் இறுக்கமாய் கேட்கும் பொழுதே அவனறியாமல் பதட்டத்தில்,
“ஸார் சாயங்காலம் வந்திருங்க. அம்மா நல்ல நேரம் பார்த்துட்டு இருக்காங்க. பார்த்து பேசறதுக்கு…” என சொல்லிவிட்டு தான் சொன்னதன் அர்த்தம் உணர்ந்தவன் நாக்கை கடித்து தலையில் அடித்துக்கொள்ள,
“இதுக்கு நாங்க போன் பண்ணி கேட்கனும் உனக்கு? ஹ்ம்ம், இது சரியில்லை…” என்று வைக்கும் பொழுது சொல்லிவிட்டு வைக்க இன்னும் பதறியது அவனுக்கு.
“போச்சு, என் வாயாலையே பேசிட்டேன்…” என்று அமர,
“ப்ச், இப்ப என்ன நடந்துச்சுன்னு ரெண்டு பேரும் குதிக்கறீங்க?…”
“இதுக்கு மேல என்ன நடக்கனும்?…” என சாரதா நொடிக்க,
“இங்க பாரு சாரதா, இந்த கல்யாணம் முடிஞ்சா நம்ம ஸ்ரீநி வெறும் பி.ஏ கிடையாது. முதலாளியோட சகலை. அப்ப வெளில இன்னும் மரியாதை தானே? அதோட ராகா ஸ்ரீநி பொண்டாட்டி. என்னதான் இவன் முதலாளி உன் தம்பிக்கு மருமகனா இருந்தாலும் மூத்த மக வாழ்க்கையை நினைக்காம போய்டுவானா உன் தம்பி?…” என கேட்கவும் ஸ்ரீநிவாஸ், சாரதா இருவரின் முகமும் யோசனையானது.
“ஆமான்டா மகனே, யோசிச்சு பாரு…” என சொல்ல தீவிரமாய் யோசித்தான் ஸ்ரீநிவாஸ்.
“சரி நீ உன் வீட்டுக்கு கிளம்பு. அங்க என்ன நடக்குதுன்னு பார்த்துட்டு போன் பண்ணு. நாங்க கிளம்பி வரோம்…”
“அவன் வீட்டுக்கு நான் போகனுமா?…” சாரதா முறுக்க,
“காரியம் ஆகனும்னா போய்த்தான் ஆகனும். இன்னொன்னு நம்ம மகனை அங்க விட்டுகுடுக்க கூடாதுல. அப்பத்தான் கொஞ்சம் பயம் இருக்கும்…” என மகேஸ்வரன் சொல்ல ஸ்ரீநிவாஸ் சரி என்று கிளம்ப போக,
“சாப்பாடு…”
“நான் எதையாச்சும் வாங்கிட்டு வரேன்…”
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். வீட்ல இருக்கறதை சமைச்சு சாப்பிடுங்க. திருவிழா அதுவுமா கடையில வாங்கி குடுத்தா பாக்கறவன் என்ன நினைப்பான்…” என அதற்கும் ஸ்ரீநிவாஸ் திட்டிவிட்டு சென்றான்.
தங்கதுரை வீட்டிற்கு செல்லும் வழியிலேயே ஒவ்வொரு வீட்டு வாசலிலும் கறி குழம்பின் மணம் வயிற்றை பிடித்து இழுத்தது.
“இன்னைக்கு அக்னி ஸார் வீடு சாப்பாடு வேற. மத்ததை அப்பறம் பார்த்துக்கலாம்…” என வண்டியை செலுத்த சுரேனிடமிருந்து அழைப்பு.
“ஸ்ரீநிவாஸ் எங்க இருக்க?…” என்றான் அவன்.
அக்னியை போலவெல்லாம் இவன் மரியாதையாக பேசவே மாட்டான். முறைப்பும், விரைப்புமாய் தான் இருப்பான்.
“சொல்லுங்க ஸார், வீட்டுக்கு சாப்பிட போய்ட்டிருக்கேன்…”
“வாட்? இங்க ரைஸ் பேக் தீர்ந்திடுச்சுன்னு உன்னை அனுப்பினா இன்னும் கோவிலுக்கு அனுப்பாம இருக்க? முதல்ல போய் அதை அனுப்பிவிடு…” என்று கத்த,
“ஸார்…”
“நான் அண்ணன்கிட்ட பேசிக்கறேன்…” என சுரேன் போனை வைத்துவிட சோறாவது ஒண்ணாவது என்று மீண்டும் சுரேனுக்கு அழைத்து தானே அனுப்பிவைப்பதாக சொல்ல கூடவே கோவிலுக்கு வரும் படி சொல்லிவிட்டு வைத்துவிட்டான் அவன்.
“சோதனை மேல் சோதனை” என குமிறிக்கொண்டு வண்டியை கிளம்பியவனை அதன் பின் மாலை மூன்றுமணி வரை சுரேன் விடவே இல்லை. கடைசியில் கோவிலிலேயே அமர்ந்து ரசம் சாதம் சாப்பிட்ட ஸ்ரீநிவாஸ் வீட்டிற்கு கிளம்பினான்.
நேராக மாடிக்கு சென்றவன் அங்கே ஆளுக்கொரு பக்கமாக அமர்ந்திருந்தவர்களை பார்த்தவனுக்கு பொங்கியது உள்ளுக்குள்.
“வாழ்வை பாரேன். இனி கைல புடிக்க முடியுமா? இருக்கட்டும் பார்த்துக்கறேன்…” என கருவிக்கொண்டு உள்ளே சென்றான்.
வீடே மணத்தது விருந்து வாசனையில். அங்கிருந்த டிபன்கேரியரில் சென்றுதான் நின்றது.
“எல்லாரும் சாப்பிட்டாச்சா?…” என்றான் பொதுவாய்.
அவனை அப்பொழுது தான் கவனித்தவர்கள் வேகமாய் எழுந்து கொள்ள அதை உள்ளுக்குள் ரசித்தபடி,
“என்ன மாமா,அ சொல்லிட்டீங்களா?…” என கேட்டான்.
“ஹ்ம்ம், சொல்லியாச்சு மாப்பிள்ளை. இதுல உங்களுக்கு…” என தங்கதுரை கேட்க,
“அதான் அத்தனை பெரிய இடமே உங்களை தேடி வர போகுது. இனி நான் என்ன நினைச்சா உங்களுக்கு என்ன?…” என்றான் குத்தலாக.
அவனின் இந்த பேச்சு தங்கதுரைக்கும், கனகாவுக்கும் பதட்டத்தை கொடுக்க ராகாவுக்கு யோசனையை கொடுத்தது.
இத்தனை தூரம் அதை பற்றி சந்தோஷமாக பேசாமல் உள்ளுக்குள் வைத்துக்கொண்டு குத்தல் பேச்சு பேசுகிறானே என கண்டுகொண்டவள் இப்படியே விட்டால் இவனுக்கு பயந்தேனும் தங்கைக்கு அமையவிருக்கும் வாழ்க்கையை இவர்களை வேண்டாம் என்றுவிடுவார்கள் என நினைத்தவள் இனியும் பொறுமை காக்க கூடாது என முடிவெடுத்தாள்.
தனக்கு மட்டும் நல்லவிதமாக இருந்தால் போதுமா? மற்றவர்களின் நிம்மதியை தனது சுயநலத்திற்காக கெடுக்கிறானே என்னும் ஆற்றாமை பெருகியது. அதிலும் தனது தங்கை எதிர்காலம்.
“என்னங்க அப்படி சொல்லிட்டீங்க? உங்களுக்கு பிடிக்கலைன்னா எங்கப்பா கண்டிப்பா இதுக்கு ஒத்துக்க மாட்டார். நீங்க இவ்வளவு தான் அப்பாவை நினைச்சு வச்சிருக்கறதா?…” என்றவள்,
“அப்பா யாரையும் வரவேண்டாம்னு சொல்லிருங்க. கேட்டா என் மாப்பிள்ளைக்கு பிடிக்கலைன்னு சொல்லிருங்க. அவங்களுக்கு தெரியாதா இவர் வேண்டாம்னு சொன்னா நம்ம வீட்டுல எதுவும் நடக்காதுன்னு…” என்று ராகா பேச திக்கென்று ஆனது ஸ்ரீநிவாஸிற்கு.
“இவளே என்னை கொண்டுபோய் அவங்கக்கிட்ட போட்டு குடுத்திருவா போல?” என அதிர்ந்து பார்த்தான்.
தங்கதுரைக்கோ இதுவரை மகள் இந்த திருமணத்திற்கு சம்மதிக்க சொல்லி தங்களை சமாதானம் செய்துகொண்டிருக்க இப்பொழுதானால் இப்படி பேசுகிறாளே என்று குழப்பமாக பார்த்தார்.
கனகாவிற்கு புரிந்தது அவள் ஏன் இப்படி பேசுகிறாள் என. தாயை பார்த்து ராகா ஜாடை காட்ட அவரும் புரிந்துகொண்டதை போல,
“ஆமாங்க மாப்பிள்ளைக்கு விருப்பம் இல்லைன்னா எவ்வளவு பெரிய சம்பந்தமா இருந்தா என்ன? வேண்டாம்னு சொல்லிருங்க…” என்று சொல்ல,
“இதேதடா வம்பாக இருக்கிறது? இதற்கு மேலும் இவர்களை பேச விடக்கூடாது” என நினைத்தவன்,
“எனக்கு சம்மதம் இல்லைன்னு நான் எப்ப சொன்னேன்? நான் சும்மா தமாசுக்கு பேசினேன். ஆமா. எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தான். அம்மாவும் அப்பாவும் கூட கிளம்பிவறாங்க. நாம போன் பண்ணினதும் வந்திருவாங்க…” என அப்படியே அவன் மாற்றி பேச,
“நல்லதுங்க மாப்பிள்ளை. நான் உங்களை தான் நினைச்சுட்டே இருந்தேன். உங்கக்கிட்ட கலக்காம எப்படி செய்யன்னு…” என தங்கதுரை சொல்ல,
“எப்பவும் இந்த நினைப்பு இருந்தா போதும். நான் அக்னி ஸார்க்கு போன் பண்ணிட்டு வரேன்…” என எழுந்தவன்,
“எங்க கீர்த்தி?…” என கேட்க,
“பின்னால வினயோட இருக்கா. நீங்க சார்க்கு போய் பேசுங்க…” என ராகா சொல்லவும் போனுடன் கீழே இறங்கினான்.
“இங்க பாருங்கம்மா நான் சொல்றது தான். அட்லீஸ்ட் அவளுக்காச்சும் ஒரு நல்ல மனுஷன் கிடைக்கட்டும். பார்க்கத்தான் கொஞ்சம் அமைதி. மத்தபடி நல்ல குணம் தான்…” என படபடவென சொல்ல,
“இதனால எது மனஸ்தாபம் வருமோன்னு ஒரு பயம் தான் ராகா…”
“இனி இதை எல்லாம் யோசிச்சு நான் வாயை மூடிட்டு இருக்க போறதில்லை. உங்களை நினைச்சு அந்த கவலைல தான நான் பொறுமையா இருந்தேன். இப்படியே மண்ணு மாதிரி இருந்தா கால்ல போட்டு மிதிக்கத்தான் செய்வாங்க…”
“ஆனாலும் ராகாம்மா…” தங்கதுரை பரிதவித்து மகளை பார்க்க,
“போதுமப்பா, என்னை நினைச்சு நீங்க கவலை பட்டு கீர்த்தியை விட்டுடாதீங்க. அவளுக்கு இது ஒரு நல்ல எதிர்காலம். இவரை பார்த்து அதை தட்டிவிடாதீங்க. சொன்னீங்கள்ள அவங்க எத்தனை தன்மையா பேசினாங்கன்னு. அது யாருக்கு வரும்?…”
“அம்மா நீ சொல்லு அப்பாவுக்கு. நீங்க ரெண்டு பேரும் முழுமனசோட இருந்தா கீர்த்தியும் சந்தோஷமா இருப்பா. நீங்க குழம்பி அவளும் குழம்பாம இருக்கனும். அவ்வளவு தான்…” முடிவாய் பெரியமகளாய் வீட்டின் பொறுப்பை ஏற்றவளாய் அவள் சொல்ல அப்படியே கட்டிகொண்டார் கனகா.
“போதும்டா தங்க பிள்ளையே. எங்களுக்கு இது போதும். நீ உடைஞ்சிட கூடாதுன்னு தான் எங்களோட பொறுமை எல்லாம்…”
“நம்ம பலவீனமே இதுதான்ம்மா. உங்களுக்காக நான் பார்த்ததும், எனக்காக நீங்க பார்த்ததும். இனி என்ன நடக்குதுன்னு என் புருஷன் பார்ப்பாரு…” என்று சொல்லிய ராகா ஸ்ரீநிவாஸ் வருகைக்காக காத்திருந்தாள்.