கவிதை – 7
என்ன நடந்தது? எப்படி நடந்தது என உணருமுன்னே அனைத்தும் புயல் வேகத்தில் நடந்தேறி இருந்தது.
இதோ மாடியில் தனியே அமர்ந்திருந்தாள் கீர்த்தனா. அவளது வலதுகை விரல் கழுத்தில் புதிதாய் உறவாடிக்கொண்டிருந்த தங்க சங்கிலியினுள் சுழன்றுகொண்டு இருந்தது.
பூ பரிசம் போட்டப்பட்டு அச்சாரமாய் கீர்த்தனாவை தங்கள் வீட்டு மருமகளென வரித்து அவளின் கழுத்தில் சங்கிலியை போட்டு திருமணத்தை நிச்சயம் செய்துவிட்டு சென்றிருந்தனர் அக்னிசெல்வன் குடும்பத்தினர்.
ஊருக்கு வந்த இரண்டு நாளில் தனது வாழ்க்கை மாறிவிட்டதை இன்னமும் ஜீரணிக்க இயலாமல் தவிப்புடன், யோசனையுடன், குழப்பத்துடன், பயத்துடன் இப்படி பலவேறான மனநிலையில் தத்தளித்து கொண்டு இருந்தாள்.
இது பிடிக்கிறதா இல்லையா என்னும் சிந்திக்கும் அவகாசமின்றி துரிதகதியில் தான் நிகழ்ந்தது.
காலை வந்து தாயும் தந்தையும் தனியே பேசிவிட்டு, பின் ராகாவிடம் அழைத்து எதையோ காதோடு சொல்ல அவள் இவர்களிடம் பேச என பெற்றோர்கள் யோசனையுடன் அமர்ந்திருப்பதை பார்த்து கேட்டவளுக்கு விஷயத்தை தெரியப்படுத்த அதிர்ச்சியின் உச்சம் தான்.
“இது இது எப்படிப்பா?…” என கேட்டவளுக்கு பேச வார்த்தை வராமல் தடுமாற,
“எங்களுக்கு சரின்னு படுதுடா கீர்த்தி. இந்த திருவிழா நம்ம குடும்பத்துக்கு ஒரு வழியை காண்பிச்சு இருக்கு. அவங்களா விருப்பப்பட்டு கேட்டாங்க. எனக்கும் அம்மாவுக்கும் ராகாவுக்கும் கூட சம்மதம் தான். நீ என்ன சொல்ற?…” என கேட்டவரின் கண்களில் உள்ள எதிர்பார்ப்பில் உள்ளுக்குள் பயந்தாலும்,
“உங்க இஷ்டம்ப்பா…” என்றதோடு முடித்துக்கொண்டாள்.
குடும்ப சூழ்நிலை அறிந்து வளர்ந்த பெண். அக்னிசெல்வன் என்று இல்லை வேறு யாராக இருந்தாலும் இதே பதில் தான் தந்திருப்பாள்.
இப்பொழுது பிரச்சனையே அவன் தான். பார்க்கும் நேரமெல்லாம் முறைப்பும், சிடுசிடுப்பும் தான். அத்தோடு அவர்களின் குடும்பமும் செல்வாக்கும். இதுவே அவள் மிரள போதுமாக இருந்தது.
இது இருவருக்கும் ஒத்துவருமா என்று யோசிக்க ஆரம்பிப்பதற்குள் ஸ்ரீநிவாஸ் வந்து பேசி அவர்களை முறையாக பார்க்க வர சொல்லி அவனின் பெற்றோரும் வந்துவிட சாரதாவின் எள்ளல் பார்வை வேறு.
என்னவோ இவளே தேடிப்போய் பிடித்துவிட்டதை போல அர்த்தம் பொதிந்த பார்வையில் எரிச்சலான எரிச்சல்.
புது புடவை கட்டி மிக எளிமையாய் அவளை அலங்காரம் செய்ய ராகாவின் முகத்திலோ கோடி மின்னலின் புன்னகை. தானே எந்த நிர்பந்தமும் இன்றி அடிநெஞ்சில் இருந்து ஊற்றெடுத்த புன்னகை. அவளை பேரழகாய் காட்டியது.
“நான் சிரிக்க சொன்னா மட்டும் அளந்து வச்சது மாதிரி சிரிப்பா. இப்ப பாரு. ஐயோ இந்த சிரிப்பை கல்யாணத்துக்கு முன்ன பார்த்தது” என ஸ்ரீநிவாஸ் அவ்வப்போது ராகாவை பார்ப்பதும் திரும்புவதுமாக இருந்தான்.
சரியான நேரத்திற்கு அதிக படை திரட்டல் இன்றி அக்னிசெல்வத்தை தவிர வீட்டினர் அனைவரும் வந்துவிட அவர்களுடன் ஊர் தலைவரும், உறவினரான மார்த்தாண்டமும் குடும்பத்துடன் வந்துவிட்டார்.
மார்த்தாண்டத்திற்கு அத்தனை உவகை. இத்தனை பெரிய குடும்பத்தில் தங்கதுரையின் பெண் வாழ்க்கைப்பட போகிறாள்.
“நான் சொன்னேன்ல துரை. பார்த்தியா? என்னம்மா தங்கச்சி அந்த சாமியே மனசிறங்கி உங்க கஷ்டத்தை துடைக்கிற மாதிரி இல்ல? இனி கண்ட பீடை எல்லாம் ஒழிஞ்சது…” என்று எதார்த்தமாக சொல்ல ஸ்ரீநிவாஸ் குடும்பத்தினருக்கு பயங்கர கோபம்.
ஆனால் சபையில் காண்பிக்க முடியாதே. பல்லை கடித்துக்கொண்டு அமைதி காத்தனர்.
வந்து அமர்ந்ததும் பன்னீர்செல்வமும், அடைக்கலமும் வீட்டை சுற்றி பார்க்க ஸ்ரீநிவாஸ் முகத்தில் பயங்கர கலவரம். ராகாவை தான் பார்த்தான் அவன்.
முதலிலேயே சொன்னான் கீழே வைத்து இதை எல்லாம் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லியும் ராகா மறுத்துவிட்டாள்.
“அப்ப இங்க வச்சு எல்லாமே பண்ணனும்னா அவங்களை இங்கயே இருக்க சொல்லிடலாம். அப்படினா சரி…” என சொல்ல,
“என் நேரம்…” என தலையில் அடித்துக்கொண்டான்.
அவளுக்கு நன்றாக தெரியும் நடக்கும் எதிலும் அவன் காரியமில்லாமல் நடத்திக்கொள்ள மாட்டான் என்று. இவனின் எண்ணவோட்டங்களை ஓரளவிற்கு சரியாக நாடிபிடித்தாள் மனைவியாய்.
மாடிக்கு வந்தால் தானே தன் பெற்றோர்களை தெரியும். அதை கொண்டாவது ஸ்ரீநிவாஸ் வெட்கப்பட்டு கீழே காலி செய்யட்டும் என நினைத்தாள். செய்யமாட்டான் தான் இருந்தாலும் ஒரு எதிர்பார்ப்பு தான். அவளிடத்தில் தன்னாலான முயற்சிகள் தனது பெற்றோர், தங்கைக்காக.
எளிமையாக பூ வைத்து தட்டு மாற்றி அந்த வார இறுதியில் நிச்சயம் போல வைத்துக்கொள்வதென முடிவு செய்யப்பட்டது. அங்கேயே நாள் குறிக்கப்பட்டு திருமணத்தை இரண்டு மாதத்தில் நடத்துவதற்கும் முகூர்த்தம் பார்க்கப்பட்டது.
“பொண்ணுக்கு எங்களால் ஆனதை நாங்க செய்யறோம் சம்பந்தி…” என தங்கதுரை சொல்ல,
“நீங்க அதை கவலைப்பட வேண்டாம். ஸ்ரீநிவாஸ் செய்யறதா சொல்லிட்டார். அதை நாங்க அவர்க்கிட்ட பேசிக்கறோம்…” என்று சபையில் வைத்து அடைக்கலம் போட்டுடைக்க இதென்னதிது என சாரதா உஷ்ணப்பார்வை பார்க்க ராகாவிற்கு சிரிப்பு.
“இவனாவது போடுவதாக ஒப்புக்கொள்வதாவது? சொல்ல வைத்திருப்பார்கள்” என நினைத்தவள்,
“அப்படியா? எனக்கே ஆச்சர்யம் தான். இது எங்க கடமை. இவர் அப்பப்ப சொல்லிட்டே இருப்பார் கீர்த்தி கல்யாணம் நம்ம பொறுப்புதான் ராகா. நீயும் மாமாவும் எந்த கவலையும் போடவேண்டமனு. நல்லபடியா அந்த கடமையை முடிப்போம்னு. இப்ப அதை நீங்க சொல்லி கேட்கறப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு…” என ராகா சொல்ல,
“இவ ஏன் சம்மனே இல்லாம ஆஜர் ஆகறா?” என விழி பிதுங்கியவன் சாரதாவை பார்க்க அவர் இன்னமும் முறைப்புடன் இருந்தார்.
பன்னீர்செல்வம், அடைக்கலத்திற்கு புரிந்துபோனது ராகாவின் பேச்சு. மனதிற்குள் அவளுக்கு சபாஷ் போட்டனர் இருவரும்.
சாதனா வழக்கம் போல கலகலக்க சுரேன் அமைதியாய் நின்றான். ஆனால் பார்வை அவ்வப்போது ஸ்ரீநிவாசை முறைப்புடன் தொட்டு தொட்டு பஸ்பமாக்கியது.
“இவன் வேற சும்மா முறைச்சிட்டு. என்னவோ இங்க பாக்க வந்ததே என்னைன்ற மாதிரி லுக் விட்டுட்டு” என மனதிற்குள் அழுதாலும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. ஒருவழியாய் அனைத்தும் சுபமாக நடந்து முடிந்து இதோ கீர்த்தியின் மனது என்ன நடந்தது என அசைபோட்டுக்கொண்டு இருந்தது.
“கீர்த்தி…” என ராகா வரவும் திரும்பியவள் அக்காவை பார்த்ததும் சோபையாய் புன்னகைத்தாள்.
“என்ன இங்க வந்து உட்கார்ந்துட்ட?…” என அவளும் சேர்ந்து கீழே அமர்ந்து சாய்ந்துகொள்ள,
“சும்மா தான்…” என்றாள் தங்கை.
“அம்மாவும், அப்பாவும் கீழே தான் இருக்காங்க. ஆளாளுக்கு வந்து விசாரிக்கறாங்க கல்யாணம் முடிவானதை பத்தியும் பெரியவீட்டு சம்பந்தம் பத்தியும்…”
“ஹ்ம்ம்…”
“என்னடி வெறுமனே சொல்ற? உனக்கு இஷ்டம் இல்லையா?…” என கேட்க அமைதியாக இருந்தாள் கீர்த்தனா.
“ப்ச், இங்க பாரு, என்கிட்டே சொல்லு…” என்று அவளின் கன்னம் பற்றி தன் பக்கம் திரும்ப முகத்தில் சிரிப்பில்லை.
“கீர்த்தி…”
“எனக்கு தெரியலைக்கா. இது என்னன்னே புரியலை. திடீர்ன்னு மத்தியானம் பொண்ணு கேட்டாங்கன்னு சொன்னாங்க. சாயங்காலம் வந்து நிச்சயம் பண்ணி இதோ ரெண்டு மாசத்துல கல்யாணம். எனக்கு எல்லாமே ரொம்ப வேகமா போற மாதிரி இருக்கு…”
“இதுக்கா இவ்வளவு கவலை? நான் பயந்துட்டேன்…” என்றவள்,
“அவங்க உன்னை ரொம்ப இஷ்டப்பட்டு கேட்டிருக்காங்க கீர்த்தி. உன்னை நல்லபடியா பார்த்துப்பாங்க. நீ சந்தோஷமா இருப்ப…”
“உன்னை கூடத்தான் ரொம்ப இஷ்டப்பட்டதா விரும்பினதா சொல்லி மாமா பிடிவாதமா கல்யாணம் செஞ்சுக்கிட்டாரு. நீ என்னக்கா சந்தோஷமா வாழ்ந்துட்ட? சொல்லு…” என கேட்க ராகாவின் முகத்தில் ஒட்டிவைத்தது போல சிரிப்பு.
“கீர்த்தி என்னோட வாழ்க்கையும் இதுவும்…” என சொல்ல பார்க்க,
“ப்ச், சும்மா இருக்கா. என்னோட பயமே இதுதான். இத்தனைக்கும் சொந்த அத்தை பையனை கல்யாணம் பண்ணிருக்க. எங்களால உரிமையா உன்னை வந்து பார்க்க கூட முடியலை. அவரோட பேச முடியலை. அப்பாம்மா அத்தனை தயங்கறாங்க. சொந்த அக்கா பையன். ஆனாலும் இத்தனை இடைவெளி இருக்கு…”
“ஒரு அன்னியோனியம் இல்லை. உன்னால அப்பாம்மாவுக்கு ஏதாவது செய்யனும்னு நினைக்க கூட முடியலைன்றதை விட மாமா பன்ற அராஜகத்தை தடுக்க கூட முடியலை. எத்தனை போராட்டம் உனக்குள்ள? அதுக்குன்னு அவரோட நீ சண்டை போடனும் அப்படின்னு சொல்லலை…”
“வித்தியாசம் உனக்கு புரியனும் இல்லையா? சொந்தத்துக்குள்ளையே காசு பணம் உறவுகளோட எல்லையை நிர்ணயிக்கும் போது அவங்க வீட்டுல கொஞ்சமும் நம்ம பொருந்தமாட்டோம். உனக்கு புரியுதா நான் சொல்றது?…”
“நீ ஏன்டா இதை எல்லாம் நினைச்சு குழம்பற?…” என்ற ராகாவுக்கு கவலையாய் போனது.
“யோசிக்காம இருக்க முடியாதுக்கா. கீழே நீ நம்ம வீட்டுல குடியிருந்தாலும் எங்களால உரிமையா உன் வீட்டு சமையல்கட்டு வரைக்கும் வர முடியுதா? சொல்லு. உன் கல்யாணத்தால நடந்த எதுவுமே என் கல்யாணத்தால அப்பாம்மாவுக்கு நடக்க கூடாதுன்னு நான் நினைக்கேன். தப்பாக்கா?…” என கண்ணீருடன் அவள் கேட்க,
“கீர்த்தி…” என பரிதவிப்புடன் பார்த்தாள் ராகா.
“என்னோட ஆசை எல்லாம் ரொம்ப ரொம்ப சின்னது. என்னோட அம்மாப்பா, உரிமையா என்கூட என் புகுந்த வீட்டுக்கு வரனும். என் புருஷனா வரவர் அவங்களை தன்னோட பெத்தவங்களா பார்க்க கூட வேண்டாம். மனுஷங்களா பார்த்தா போதும். மதிச்சு சின்ன சிரிப்போட நல்ல இருக்கீங்களான்னு பார்க்கிற நேரம் கேட்டா போதும்…”
“என்னை பார்க்க அம்மாவும், அப்பாவும் வந்தா வாசலுக்கு வந்து வரவேற்க வேணாம். வீட்டுக்குள்ள வந்தவங்களை ஒரு வாய் சாப்பிட சொன்னா போதும். இப்படித்தான் என்கூட அளந்து பேசனும்னு சொல்லாம அவங்களோட ரெண்டு நிமிஷம் உட்கார்ந்து சகஜமா பேசினா போதும். என்னை பார்த்துட்டு கிளம்பறப்ப அம்மாவும் அப்பாவு ஒரு திருப்தியோட முகத்துல நிம்மதியோட கிளம்பினா போதும்…”
“என்னோட பிள்ளைகளை என்னை பெத்தவங்களும் ஆசை தீர நினைச்ச நேரம் பார்க்க தடை சொல்லாம இருந்தா போதும். முக்கியமா அவங்களுக்கு உடம்புக்கு முடியலைன்னா அன்பா விசாரிச்சு, நாங்க இருக்கோம்னு சொல்றவன் போதும். பெரிய வாழ்க்கை வேண்டாம்க்கா. பகட்டில்லைன்னாலும் பாசமான வாழ்க்கை போதும்…”
“இது பேராசை இல்லை தானே? உனக்கு தெரியாது, சொல்ல வேண்டாம்னு தான் இருந்தேன். நாங்க வந்தன்னைக்கு நைட்ல மாமா வினய்க்குட்டியோட வந்தப்போ ஜன்னல்ல இருந்து அம்மா எட்டி எட்டி பார்த்துட்டு நின்னாங்க. அவனை அள்ளி கொஞ்சனும்னு எம்புட்டு ஆசை இருந்திருக்கும் அவங்களுக்கு…”
“ஆனா அவங்களால முடியலையே. என்னால தாங்க முடியலைக்கா. அப்பாவை விட அத்தை வீடு அப்படி ஒன்னும் ரொம்ப வசதி இல்லை. அதுக்கே ஜன்னல்ல நின்னு பார்த்து பார்வையால பேரனை தொட்டுக்கற நிலைமை. இப்போ இந்த கல்யாணத்தால அதையும் விட மோசமான நிலைமைக்கு அப்பாம்மா போயிடுவாங்களோன்னு பயமா இருக்கு எனக்கு…” என்றவளின் அழுகையில் அவளை தாயாய் மடிதாங்கிக்கொண்டாள் ராகா.
தங்கையின் மனதில் தனது வாழ்க்கை முறையும் அதனால பெற்றோர் அனுபவிக்கும் கஷ்டங்களும் அவளிடம் எந்தளவிற்கு வேரூன்றி போயிருக்கிறது என நினைக்க நினைக்க ஆறவே இல்லை.
ஒருவகையில் இது தன்னுடைய அமைதியாலும் தானே? என நினைக்க பொறுக்கமாட்டாமல் சிதற இருந்தவள் வெடித்து வந்த அழுகையை அடக்கினாள்.
“ஏற்கனவே மனதளவில் கீர்த்தனா மிகவும் பலகீனமாகவும், குழப்பத்துடனும் இருக்கிறாள். இந்த நேரம் தன்னுடைய கண்ணீர் அவளின் எதிர்கால வாழ்க்கைக்கு இடைஞ்சல் ஆக கூடாது” என அழுகையை விழுங்கினாள்.
இனி தன்னுடைய எதிர்கொள்ளுதல் தான் அவளுக்கான பலம். நான்கு வருடங்களுக்கு முன் திருமணத்திற்கு முன்பு தானும் இப்படித்தானே எதையும் புரியாமல் யாரையும் எடைபோட தெரியாமல் இருந்திருக்கிறேன்.
ஆனால் திருமண வாழ்க்கை, ஸ்ரீநிவாஸ் இரண்டுமே அவளுக்கு நிறைய பாடங்களையும் நேரத்திற்கு மாறும் நிறங்களையும் கண்டுகொள்ள காட்டிவிட்டதே.
வஞ்சகத்துடன் வேட்டையாடும் பசுத்தோல் போர்த்திய கழுதைபுலிக்கும் மனுஷத்தன்மை மிக்க மனிதர்களுக்கும் வித்தியாசம் தெரியுமே.
அக்னியை பற்றி தெரியும். அவனின் குடும்பத்தையும். உள்ளொன்று வைத்து பேசும் ஆட்கள் கிடையாது.
அதை விட அதிமுக்கியம் ஸ்ரீநிவாஸ் அவர்களிடம் அடங்கி போவது. தனது கணவனின் தலையீடு தங்கை வாழ்க்கையில் இருக்காது என்பதில் தான் பெரும் நிம்மதி அவளுக்கு.
இதே வேறு ஏதாவது ஒரு மாப்பிள்ளையை பார்த்தால் நிச்சயம் அதை கொண்டு ஏதாவது குடைச்சல் கொடுத்துகொண்டே அவன் இருப்பது நிச்சயம்.
இனி பெற்றோரும் சரி, தங்கையும் சரி உண்மையான சுதந்திர காற்றை சுவாசிக்கபோகிறார்கள் என்பதே ஆறுதல்.
“கீர்த்தி இங்க பாரு. எழுந்துக்கோ…” என தங்கையை எழுப்பி அவளின் கண்ணீரை துடைத்தவள்,
“இந்த அழுகையும் கண்ணீரும் தேவையே இல்லை. முதல்ல மனசை குழப்பமில்லாம வச்சுக்கோ. உன் மாமா என்னை பெண் கேட்டு வந்து நின்னு பிடிவாதமா கல்யாணம் பண்ணிக்கிட்டப்போ இத்தனை காதலா என் மேலன்னு பூரிச்சு போனேன். அவ்வளவு சந்தோஷமா கல்யாணம் பண்ணேன்….”
“ஆனா பாரு அதுக்கு தலைகீழ் என் வாழ்க்கை. சந்தோஷம்ன்றது இருக்கற இடமும், மூணு வேளை சாப்பாடுன்னா ஆமா சந்தோஷம் தான். ஆனா அந்த இடம் இன்னொருத்தர்ட்ட இருந்து தட்டிப்பறிச்சது அதுவும் பெத்தவங்கட்ட இருந்தேன்னும் போது ஒரு வாய் சோறு இறங்காது. என் பூரிப்பு என்னைக்கோ பொய்யா போச்சு…”