கவிதை – 8
இன்றுவரை குழப்பம் தான் ஸ்ரீநிவாஸ்க்கு. எப்படி எப்படி என தலையை போட்டு உடைக்காத குறை தான்.
தான் ராகாவிடம் பேசிய மறுநாளே வந்து நின்றான் அக்னி செல்வன். வீட்டை மாடியில் மாற்றி அமைக்க வேண்டும் என்றும், அதற்கு மேல் ஒரு தளம் கட்ட வேண்டும் என்றும்.
முக்கியமாக அங்கே தானும் கீர்த்தனாவும் வந்து தங்க போவதாகவும் சொல்ல காதலியை இழந்த காதலனாய் உள்ளுக்குள் கதறினான்.
இதை அவன் எதிர்பார்க்கவே இல்லை. அத்தனை பெரிய குடும்பத்தை சேர்ந்தவன். இங்கெல்லாம் வந்து தாங்குவானா என்பதில் தான் மொத்த வீட்டையும் எடுத்துக்கொள்ள முடிவு செய்தது. அதற்கு இப்படி ஒரு தடை வரும் என நினைத்தும் பார்க்கவில்லை.
அதிலும் கொடுமை அந்த வீட்டை கட்டும் பொறுப்பின் மேற்பார்வையையும் ஸ்ரீநிவாஸ் தான் கவனிக்கவேண்டும் என்றது தான். இழைத்து இழைத்து கட்டப்பட்ட வீட்டின் அமைப்பு அவனின் வயிற்றில் தீய்ந்து அடிப்பிடிக்கும் வரை எரிந்தது.
இதோ ஜம்மென்று வீட்டை பளபளவென கட்டி மேலே மாப்பிள்ளையாய் அக்னி அமர்ந்திருக்க இவனின் நிலையோ அடுப்பின் மேல் அமர்வதை போல இருந்தது.
“ஸ்ரீநி…” என உள்ளிருந்து அடைக்கலம் அழைக்க,
“இதோ வரேன் ஸார்…” என வேகமாய் ஓடினான்.
அங்கே பாலும் பழமும் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் இருந்துவிட்டு தான் கிளம்பினார்கள். சம்பிரதாய சடங்குகள் எல்லாமே அங்கு வைத்து தான் எனும் போது கீர்த்தனாவிற்கு உதறல் தான்.
நேரம் செல்ல செல்ல கனகாவின் கையை பிடிக்க, தங்கதுரையின் முகம் பார்க்க என அவள் தவிப்புடன் இருக்க வந்திருப்பவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தாலும் அக்னியின் பார்வை மொத்தமும் அவளிடத்தில் தான்.
அவன் பார்ப்பதை உணர்ந்தே அவன் புறம் அவள் திரும்பவே இல்லை. பார்த்தால் எங்கே அருகில் அமர்ந்துகொள் என அழைத்துவிடுவானோ என எண்ணி திரும்பாமலே இருக்க,
“சரி கிளம்புவோம். நல்ல நேரம் போறதுக்குள்ள மாப்பிள்ளை வீட்டுக்கு போய் பொண்ணு விளக்கேத்தனும்…” என சுபா சொல்ல வேகமாய் சென்று கனகாவை கட்டிக்கொண்டாள் கீர்த்தனா.
“அம்மா, பயமா இருக்குமா. நீயும் கூட வாயேன். எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. ப்ளீஸ் ப்ளீஸ்…” என கெஞ்ச,
“கீர்த்தி என்ன இது? சின்ன பொண்ணா நீ? இதெல்லாம் ராகாவுக்கும் நடந்தது தானே?…” என சொல்ல,
“அம்மா, நீ வேற சும்மா இரு…” என்று கனகாவை சொல்லிய ராகா,
“நான் கூட வருவேன் கீர்த்தி. ஒன்னும் நினைக்க கூடாது நீ. வா கிளம்புவோம். நல்ல நேரம் போயிரும்னு சொல்றாங்க…” என ராகா சொல்லிக்கொண்டு இருக்க அழுகை பொங்கிக்கொண்டு வந்தது கீர்த்தனாவிற்கு.
“அம்மா…” என கண்ணீர் முட்டிக்கொண்டு நிற்க கனகாவுமே கலங்கி தான் போனார்.
பன்னீர் செல்வமும் சந்திரிகாவும் முதலிலேயே கிளம்பிவிட்டிருக்க இவர்களுக்காக அடைக்கலமும், சுபாவும் சாதனாவுடன் இருந்தார்கள். சுரேனும் கிளம்பி சென்றுவிட்டான்.
“இந்த சம்பிரதாயம் இதெல்லாம் இங்க வச்சா என்ன?…” என்றவளின் உடல் லேசாய் நடுங்க ஆரம்பித்தது.
முதன் முதலாக அவனின் வீட்டிற்கு செல்லவிருக்கிறாள். அதை கொண்டு தொடர்ந்து வர இருக்கும் சம்பிரதாயங்கள் சடங்குகள் என அவளின் பயத்தை அதிகரிக்க செய்தது.
“இப்பவே கிளம்பனுமா?…” என மீண்டும் கேட்க கனகாவும், ராகாவும் என்ன சொல்வதென தெரியாமல் அவளின் கண்ணீரை துடைக்க,
“கீர்த்தனா…” என அழைத்துவிட்டான் அக்னி.
அவனே அழைத்த பின் செல்லாமல் இருக்க முடியாதே என கண்ணை துடைத்துக்கொண்டு தாயை இறுக்கமாய் கட்டிக்கொண்டாள்.
“நீ எனக்கு ன்னும் கொஞ்சம் நாள் கழிச்சே கல்யாணம் பண்ணிருக்கலாம். தெரியும் கல்யாணம் ஆனா அங்க போகனும்னு. ஆனா இப்ப என்னமோ பண்ணுது. வயித்தை பிரட்டுதும்மா. நீ ஏன் இப்படி பண்ணின?…” என கனகாவின் கன்னத்தில் முத்தமிட்டவள்,
“அப்பாவை பார்த்துக்கோ. என்னை பார்க்க வருவ தானே?…” ஏனோ அப்பொழுது தான நிறைய நிறைய பேசவேண்டும் என தோன்றியது.
“கீர்த்தி அவர் கூப்பிட்டு எவ்வளவு நேரம் ஆச்சு…” என ராகா சொல்ல,
“ஹ்ம்ம். முடிஞ்சா வந்து பார்த்துக்க…” என தன் அக்காவிடமும் சொல்லியவள் வினயை தேட,
“அத்தை வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க. நான் சொன்னேன். கேட்கவே இல்லை. நாளைக்கு கோவிலுக்கு போறப்போ கூட்டிட்டு வரேன்…” என சொல்லிக்கொண்டே அவளை அழைத்துக்கொண்டு வெளியே வரவும் இவளை பார்த்ததுமே வா என தலையசைத்து அவன் அழைத்தான்.
“கூப்பிடறாங்க போ…” என ராகா அவளை அக்னியிடம் கொண்டு விட சென்றதுமே,
“என்ன அழுதியா?…” என கேட்டான் அவன்.
“ஹ்ம்ம், ஆமா…” என கனகாவை பார்த்துக்கொண்டே கண்ணீரை உள்ளிழுக்க முயன்றாள்.
“நாங்கலாம் இருக்கோமே கீர்த்தி…” என சாதனா அவளை ஆறுதலாக சொல்ல,
“சரி சரி மத்ததை அங்க போய் பேசிக்கலாம். கிளம்புங்க….” என பெரியவர் ஒருவர் அவசரப்படுத்த பெற்றோர்களை திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டே கீழே இறங்கினாள் கீர்த்தனா.
“பார்த்து வா கீர்த்தனா…” என அவளை சொல்ல தலையை மட்டும் அசைத்தவள் மீண்டும் தாயை பார்க்க,
“அம்மா சொன்னது ஞாபகம் இருக்குல கீர்த்தி. நல்ல பொண்ண நடந்துக்கனும். மாப்பிள்ளைக்கு பிடிச்ச மாதிரி அவரை அனுசரிச்சு நடந்துக்க…” என சொல்ல,
“அம்மா, சும்மா இரேன். அவ பார்த்துப்பா…” என ராகா தான் கனகாவை அமைதியாக்கினாள்.
“பின்னாடி வேன்ல எல்லாரும் வாங்க…” என சுபா சொல்ல,
“இல்லைங்க நாளைக்கு வரோம்….” கனகா மறுக்க,
“இதுவும் கூட சம்பிரதாயம் தான். நீங்களே உங்க பொண்ணை எங்க வீட்டுல கொண்டு வந்து விட்டுட்டு போங்க. அவளுக்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும் இல்லையா?…” என்றதும் மறுக்கமுடியாமல் சரி என சொல்ல அனைவருமே கிளம்பினார்கள்.
கீர்த்தனாவின் முகத்தில் காலையில் இருந்த மகிழ்ச்சி சுத்தமாய் இல்லை. தானும் இல்லை என்றால் அவர்கள் என்ன செய்வார்கள்? என்ற யோசனையோலேயே தான் இருந்தாள்.
“கீர்த்தனா வீடு வந்திருச்சும்மா…” என சுபா சொல்லவும் திரும்பி பார்க்க காரின் கதவை திறந்து நின்றிருந்தான் அக்னி.
கீழே இறங்கியவளின் பார்வை அந்த வீட்டை வெறுமையாய் பார்த்தது. இது வரை இதை கடந்து எத்தனையோ முறை சென்றிருக்கிறாள் தான். உள்ளே சென்றதில்லை.
“திரும்பி நில்லும்மா…” என சொல்லி அவர்களுக்கு ஆரத்தி எடுக்கப்பட்டு வீட்டினுள் அழைத்து செல்ல சொல்ல அக்னி அவளின் கையை பிடித்தபடி அழைத்து சென்றான்.
“நான் இருக்கேன்ல…” என மீண்டும் அவளிடம் சொல்ல,
“அம்மா…” என திரும்பி பார்த்தாள்.
“வருவாங்க நீ வந்து விளக்கேத்து…” என சாதனா அவளுக்கு பதில் சொல்லி உள்ளே அழைத்து செல்ல சந்திரிகா வருபவர்களை வரவேற்று அமர வைத்தார்.
பூஜை அறையில் சென்று விளக்கேற்றி சாமி கும்பிட்டவள் மனமெங்கும் தாய் தந்தை வந்துவிட்டனரா? எங்கே அமர்ந்திருக்கிறார்கள்? என்ற யோசனை தான்.
“அக்னி விழுந்து கும்பிடுங்க…” என சந்திரிகா சொல்லவும் இருவரும் விழுந்து வணங்கி அவன் எழ அடுத்து வீட்டு பெரியவர்களிடமும் ஆசிர்வாதம் வாங்கினார்கள் அங்கேயே.
பன்னீர்செல்வம், சந்திரிகா தம்பதிகளுக்கு அடுத்து சுபா, அடைக்கலம் இருவரின் காலில் விழுந்து எழுந்து கொள்ள,
“கீர்த்தி அப்பா அம்மா கால்லயும் கும்பிட்டுக்க…” என சுபா சொல்லவும் தான் தாயும் தந்தையும் அங்கு நிற்பதையே கவனித்தாள்.
“அம்மா…” என கனகாவின் கையை பிடித்துக்கொள்ள அனைவரின் முகத்திலும் புன்னகை.
“கொஞ்சல் அப்பறம், முதல்ல ஆசிர்வாதம் வாங்கு நீ…” என சாதனா சொல்லவும் கணவனுடன் சேர்ந்து விழுந்து வணங்கி எழுந்தவளின் மனமோ சொல்லொண்ணா மகிழ்ச்சியில் திளைத்தது.
“பார்ரா இவ்வளோ நேரமும் இந்த சிரிப்பு எங்க போச்சாம்?…” என சாதனா கேலி செய்ய,
“சரி வெளில போவோம் எல்லாரும் வெய்ட் பண்ணுவாங்க…” என்று பன்னீர்செல்வம் முன்னால் செல்ல மற்றவர்களும் சேர்ந்து வெளியேற கனகாவின் கையை பிடித்துக்கொண்டு செல்ல போனவளின் ஜடையை பிடித்தவன்,
“நில்லு…” என்றதும் அவர்களை விட்டுவிட்டு மற்றவர்கள் வெளியேற,
“இதுதான் உன்னை போட்டு அரிச்சுட்டே இருந்துச்சா?…” என கேட்க,
“ஹ்ம்ம், எனக்கு எப்படி சொல்லன்னு தெரியலை. ஒரு மாதிரி கஷ்டமா இருந்துச்சு…” என தயங்கி தயங்கி சொல்ல,
“இங்க உன் அப்பாவுக்கும் ப்ச் என் மாமனார் மாமியாருக்கான மரியாதை என்னைக்கும் குறையாது. புரியுதா?…” என கேட்டவன் சொல்லிய உரிமையில் உள்ளே ஆனந்த கூத்தாடினாள் கீர்த்தனா.
இன்று வரை தங்கதுரையை ஸ்ரீநிவாஸ் மாமா என அழைத்தாலும் அது உதட்டளவில் மட்டும் தான் என்பது அனைவருக்குமே தெரியும்.
யார் கேட்டாலும் ராகாவின் அப்பா என்று தான் அறிமுகப்படுத்துவானே தவிர மாமனார் என்றோ தாய்மாமன் என்றோ அவன் சொல்லிக்கொண்டதே இல்லை.
அக்னி மாமனார், மாமியார் என சொல்லியவிதமும் அந்த பேச்சில் தொனித்த உரிமையுமே கீர்த்தனாவிற்கு நிம்மதி தருவதாய் இருக்க,
“இப்ப புரியுது…” என்றாள் புன்னகை முகமாய்.
“இந்த சந்தோஷமும் புரிதலும் என்னைக்கும் இருக்கட்டும். முக்கியமா இன்னைக்கும்…” என்று பூடகமாய் சொல்லியவன் மேலும் பேசும் முன்,
“அக்னி…” என அடைக்கலம் அழைத்துவிட்டார் வெளியே இருந்து.
“வா போகலாம்…” என இருவருமாக வெளியே வந்தார்கள்.
அதன் பின் வந்தவர்கள் அனைவருக்கும் டிபன் வழங்கப்பட இரவு உணவு முடித்துவிட்டு தான் செல்ல வேண்டும் என கீர்த்தனாவின் பெற்றோரை அடைக்கலம் விடவே இல்லை.
ஏற்கனவே சொந்தங்கள் வேறு வந்திருக்க அவர்களையும் கவனிக்க வேண்டுமே என தங்கதுரை தன்மையாக சொல்லி மறுநாள் பார்ப்பதாக சொல்லவும் தான் இரவு உணவை வீட்டிற்கு அனுப்புவதாய் சொல்லி அனுப்பி வைத்தார்கள்.
ராகா மட்டுமே கீர்த்தனாவிற்கு துணையாய் அங்கே இருந்தாள். மகனை கொண்டுவந்து தாயிடம் விட சொல்லியவளுடன் அங்கிருக்க ஸ்ரீநிவாஸ் நினைக்க அவனுக்கான வேலைகள் அதற்கு அனுமதிக்கவில்லை.
‘உட்கார்ந்து யோசிப்பானுங்க போல எனக்கு அடுத்து என்ன சொல்லலாம்னு’ என பெருமூச்சுடன் கிளம்பினான்.
ராகாவும் கீர்த்தனாவை அலங்காரம் செய்யும் வரை இருந்தவள் ஸ்ரீநிவாஸ் மகனுக்கு காய்ச்சல் என்று சொல்லவும் சாதனாவிடம் ஒப்படைத்துவிட்டு கிளம்பிவிட்டாள் உடனே.
“நீயும் போனா எப்படி? கொன்னுடுவேன். கூட இரு…” என கீர்த்தனா திட்ட,
“மிஞ்சிமிஞ்சி போனா இன்னும் அரைமணி நேரம் தான் உன்னோட இருப்பேன். அதுக்கப்பறம் யார் இருப்பா? பேசாம இரு. சந்தோஷமா வாழ்க்கையை ஆரம்பி. முக்கியமா உள்ள போய் எதையாச்சும் அம்மா, அப்பான்னு உளறி சொதப்பாம இரு…” என தங்கையை தெரிந்தவளாக சொல்லி செல்ல சாதனாவிற்கு பயங்கர சிரிப்பு.