வீட்டிற்கு வந்ததும் மகனை தேட கனகா மாடியில் அவர்களுடன் உறங்க வைக்க முயன்றுகொண்டு இருந்தார்.
“அம்மா, நீ ரெஸ்ட் எடு, நான் இவனை பார்த்துக்கறேன்…” என தூக்கி வந்து அவனுக்கு கதை சொல்லி மருந்தை கொடுத்து படுக்க வைத்தவள் அவனுக்கு கொடுக்க பாலை காய்ச்ச வந்தாள்.
ஸ்ரீநிவாஸ் அவள் வந்ததில் இருந்தே கவனித்துக்கொண்டே தானே இருக்கிறான். சந்தோஷத்தில் முகம் மின்ன புன்னகை இதழ்களிலேயே குடிகொண்டு இருந்தது.
அதை பார்த்தவனுக்கு ‘சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்’ என பாட தோன்றியது ஸ்ரீநிக்கு.
“எங்க அந்த கட்டையை?…” என திடீரென ராகா கத்த,
“எதுக்கு ராகா?…” என வேகமாய் வந்து கேட்டான் அவன்.
“ரொம்ப நேரமா ஒரு கரப்பாம்பூச்சி குறுக்க நெடுக்கன்னு ஓடிட்டே இருக்குது. இன்னைக்கு நசுக்கு நசுக்குன்னு நசுக்கி தூக்கி எறிஞ்சிடறேன்…” என சொல்ல,
‘இவ நம்ம மைண்ட் வாய்ஸை தான் சொல்றாளோ?’ என பார்த்தான்.
“ப்ச், தள்ளுங்க அங்கிட்டு…” என அவனை தள்ளிக்கொண்டு ஓடினாள்.
மீண்டும் வந்தவள் கையில் உருட்டு கட்டை இருக்க பார்க்க அவனை அடிக்க வருவதை போலவே இருக்க,
“ராகா…” என இவன் சத்தமிடும் பொழுது வாசலில் அதே நேரத்தில்,
“ஸ்ரீநிவாஸ்…” என அடைக்கலம் அழைத்துவிட்டார் இவனை.
“நிம்மதியா தூங்க விடறாரா மனுஷன். இந்நேரம் எதுக்கு இங்க வந்திருக்காரு?…” என சொல்லிக்கொண்டே வெளியே வர அங்கே பைக்கில் வந்திருந்தார் அடைக்கலம்.
“சொல்லுங்க ஸார்…” என வந்து நிற்க,
“வண்டில ஏறுப்பா…”
“எங்க ஸார்? அதுவும் இந்நேரம். தூங்கற நேரத்துல…” என சொல்ல ராகாவும் வந்துவிட்டாள்.
“நாளைக்கு விருந்து இல்லையா? அதான் மண்டபத்துக்கு போறோம். வீட்டுல இருந்து என்ன செய்ய? மண்டபத்துக்கு போனா வேலை ஒழுங்கா நடக்கும் இல்லையா?…”
“அதுக்கு…”
“அதான் நாம போறோம். இன்னைக்கு நைட் நாம அங்க தான்…” என சொல்லியவர்,
“ராகாட்ட சொல்லிரு. கிளம்பு கிளம்பு…” என சொல்ல,
“தாராளமா போய்ட்டு வாங்க மாமா. இவர் கூட சொல்லிட்டு இருந்தாரு. இப்பத்தான் சொன்னாரு, மண்டபத்துல வேலை எல்லாம் இருக்கு. நான் போய் பார்த்துட்டு வரனும்னு. நீங்க வந்துட்டீங்க…” என ராகாவும் சொல்ல,
“அடடா உன் மனசே மனசுப்பா. உன்னை என்னவோன்னு நினைச்சேன். என்னை சிலுத்துக்க வைக்கிற நீ…” என பெருமையாய் மீசையை முறுக்கியவர்,
“பாவம் உன் மாமனார் ஒத்தையில இருப்பாரு. உடம்பு சரியில்லாதவர் வேற. உனக்கே மனசு தாங்காதே. அதான் கூட்டிட்டு போகலாம்னு வந்துட்டேன். ஹ்ம்ம், சீக்கிரம் சீக்கிரம்…” என சொல்ல பரிதாபமாய் ராகாவை திரும்பி பார்த்தவன் அவருடன் பின்னால் ஏறி அமர்ந்தான்.
“பார்த்தியா ஸ்ரீநி, உனக்கும் எனக்கும் எல்லாமே ஒத்து போகுது. நீ நினைச்ச நான் வந்துட்டேன்…”
“எல்லாம் நான் பொறந்த நேரம் ஸார்…” என்றான் அவன்.
“எப்ப பொறந்த?…”
“ஆனி மாசம்….”
“அடடே பாரேன், நானும் கூட ஆனி மாசம் தான். எங்கம்மா கூட என்னை அந்த பாட்டு தான் பாடி தூங்க வைப்பாங்க. என்னனு கேளேன்…” என சொல்ல,
“சொல்லுங்க ஸார்…” என்றன வேண்டாவெறுப்பாய்.
“தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே, ஆனியிலே கண்டெடுத்த அற்புத ஆனிமுத்தே. இப்டி தான் பாடுவாங்க. எப்டி இருக்கு?…” என,
“ரொம்ப பிரமாதம்…”
“தெரியும், உன் டேஸ்ட் என்னனு. ஆமா உங்கம்மாவும் உனக்கு இப்படித்தான் பாடினாங்களா?…” என்று கேட்க,
“பாடலை ஸார்…” என்றவன் ‘என்னை விடுங்களேன்’ என கத்த வேண்டும் போல இருந்தது.
‘இந்த மனுஷனும் நானும் ஒரே மாசம் தான். ஆனா அவர் இருக்கற இடமே வேற. என்னை எந்த நேரத்துல பெத்தாங்களோ இந்த பாடு படறேன். மனுஷன் பேசியே கழுத்தை அறுக்கறார்’ என நொந்தபடி அமர்ந்திருந்தான்.
“நல்ல வேளை உன்னை கூட்டிட்டு வந்தேன். இன்னைக்கு நைட் பேசிட்டே இருக்கலாம்…” என சிரித்தபடி சொல்லி மண்டபத்தின் வாசலில் பைக்கை நிறுத்த,
‘நைட்டெல்லாமா? இவர்க்கிட்ட என்னத்தை பேச நானு?’ என இறங்க மறந்து அமர்ந்திருந்தான் ஸ்ரீநிவாஸ்.
——————————————————————–
அக்னியின் வீட்டில் சாதனா கீர்த்தனாவிடம் பேசியபடி அமர்ந்திருந்தாள். நேரம் செல்ல செல்ல உள்ளங்கை வியர்க்க ஆரம்பித்தது கீர்த்தனாவிற்கு.
சற்று முன் தான் சாமி கும்பிட்டு இங்கே அறைக்கு கீர்த்தியை அழைத்து வந்திருந்தாள் சாதனா.
“சரி நீ இரு, இப்ப மாமா வந்திருவாங்க. நான் கிளம்பறேன். சொன்னது ஞாபகம் இருக்கா?…” என கேட்க கீர்த்தனாவிற்கு சுத்தமாய் ஞாபகம் இல்லை.
“என்ன சொன்னீங்க அக்கா?…” என்றவளை ‘ஐயோ’ என பார்த்து,
“திரும்பவும் சொல்ல எனக்கு ஆகாதும்மா. உன் புருஷன் வந்து சொல்லிக்குடுக்கட்டும். கத்துக்கறது உன் சமத்து…” என கிண்டலாய் சொல்லிவிட்டு சென்றுவிட்டாள் அவள்.
அந்த அறையின் பகட்டும் பிரமாண்டமும் கண்ணை உறுத்தாதவகையில் இருந்தாலும் தனியே அத்தனை பெரிய அறையில் தான் மட்டும் அமர்ந்திருப்பதை விரும்பவில்லை.
அதிலும் இன்னும் சிறிது நேரத்தில் அவன் வந்துவிடுவான். தனிமை இருவருக்குமான முதல் நெருக்கம் அதன் பின்னான தீண்டல் நினைக்கையில் படபடப்பும், அச்சமும் சேர்ந்துகொள்ள உடல் வியர்க்க ஆரம்பித்தது.
“நான் பேசிட்டேன் சுதாகர், அங்க எந்த ப்ராப்ளமும் இல்லை. நீங்க ப்ரசீட் பண்ணுங்க. எஸ். கன்பார்ம் தான்…” என போன் பேசிக்கொண்டே உள்ளே வந்தவன் அவளை பார்த்ததும் புன்னகைத்துவிட்டு பேசியபடி பால்கனி பக்கம் சென்றான்.
கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் மிக தீவிரமாய் அவன் பேச்சுவார்த்தையில் இருக்க கட்டிலில் அமர்ந்திருந்தவள் எழுந்து அவனை எட்டி பார்த்தாள்.
முதலில் அவன் திரும்பாமல் பேசிக்கொண்டே இருப்பதை பார்த்தவள் அவனின் முகத்தில் இருந்த டென்ஷனில் பிரச்சனை தான் போல் என நினைத்தாள்.
அதிலும் பெண் பார்த்துவிட்டு சென்ற மறுநாள் கோவிலில் வைத்து அவன் சொல்லியதை ஞாபகப்படுத்தி பார்த்தாள்.
இருக்கும் பிரச்சனையை அப்போது தன்னிடம் சொல்ல முடியாதென்றான். பெரிதோ? என யோசனையில் நின்றவள் அப்படியே அந்த கதவில் லேசாய் சாயவும் திரும்பி பார்த்தவன் வா என தலையசைக்க மெதுவே அவனருகே சென்று நின்றாள்.
பேசிக்கொண்டே அவளை இடையோடு சேர்த்து அவன் அணைத்துக்கொள்ள கீர்த்தனாவிற்கு தூக்கிவாரிபோட்டது.
திடீரென இப்படி சேர்த்து அணைப்பான் என எதிர்பாராதவள் அவனின் கையை எடுத்துவிட்டு வேகமாய் மீண்டும் அறைக்குள் வந்துவிட அவளின் செயலில் இதழ்களில் புன்னகை மின்ன திரும்பி நின்று அவளைபார்த்தபடி பேசி முடித்து உள்ளே வந்தான்.
“என்னை தேடி வந்துட்டு திரும்ப உள்ள வந்துட்ட?…” என கேட்டுக்கொண்டே கதவை பூட்டிவிட்டு அவளருகே வர அங்கிருந்த மேஜையின் அருகே நின்றவள் அவன் நெருங்குவதில் அப்படியே அசையாமல் நின்றாள்.
“கீர்த்தனா…” என அவளின் காதோரம் குனிந்து அழைத்தவன் புன்னகையுடன்,
“அன்னைக்கு உன்கிட்ட என்ன சொன்னேன் நான்?…”
“எப்போ? என்னைக்கு?…” லேசாய் குரல் பிசிற அவள் கேட்க,
“நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி…”
“அது ஏதோ சரியா ஞாபகமில்லை…”
“ஹ்ம்ம்ஹூம், இப்ப நீ சொல்லனும்…” என்று பிடிவாதமாய் கேட்க,
“நீங்க சொன்னீங்க. தீ மாதிரின்னு. பக்கத்துல வராத பத்திக்கும்னு…” என்று படபடவென சொல்லிவிட்டு அவனை பாராமல் திரும்பி நிற்க பின்னிருந்து அணைத்தவன்,
“இப்ப நீ என் பக்கத்துல தான் இருக்க. என் கைக்குள்ள. எதாச்சும் பத்திக்குச்சா?…” என்றான் விஷமமான குரலில்.
“என்ன?…” என அவள் நிமிர்ந்து பார்த்த நொடி அவனின் முகத்தில் இருந்த ஒரு உணர்வு மாற்றம் பெற,
“நத்திங்…” என சொல்லியவன் முகத்தில் அப்பட்டமான அடக்கப்பட்ட புன்னகை.
‘இன்னுமா புரியலை. கஷ்டம்டா அக்னி’ என உள்ளுக்குள் சொல்லிக்கொண்டாலும் புரிய வைக்கவும் தனக்கு அலுக்கபோவதில்லை என்பதில் திண்ணம் தான்.
மொத்தமாய் அவன் மீது தன்னை சாய்த்துக்கொண்டவனின் தீண்டலில் கூச்சம் வலுக்க அவனின் அணைப்பில் இருந்து விடுபட முயற்சித்தாள்.
“கீர்த்தனா…” என்றவனின் குரலில் பொங்கிய உணர்ச்சியில் தடுமாறியவள் சட்டென பேச்சை மாற்றவென,
“ஏதோ பிரச்சனைன்னு பேசிட்டு இருந்தீங்க. என்னன்னு சொல்லனும்னா சொல்லலாம்…” என அவனின் மீசை உராய்வு கொடுத்த குறுகுறுப்பில் இருந்து தப்பிக்க பார்க்க கேட்டவனுக்கோ இன்னும் சிரிப்பு.
“டைவர்ட் பன்ற நீ…” என தன் பக்கமாய் திருப்பி அவளை பார்த்து சொல்ல,
“இல்லை, அதில்லை. அன்னைக்கு கோவில்ல வச்சு நீங்க தான் சொன்னேங்க. பிரச்சனை இருக்கு, இப்ப உன்கிட்ட சொல்ல முடியாதுன்னு. அதான் கேட்டேன். இப்ப சொல்லமுடியுமா? அதான் கொஞ்சம் நேரம் பேசிட்டு இருக்கலாமேன்னு…” என கேட்க வாய்விட்டு சிரித்தவன்,
“பிரச்சனை தானே? நீயே கேட்கறப்போ சொல்லாம இருப்பேனா? வா சொல்றேன்…” என கட்டிலில் அமர வைத்தவன் முதலில் அவளின் விரல்களை எடுத்து முத்தமிட்டு,
“பர்ஸ்ட் டைம் இந்த கை எனக்கு கயிறு கட்டறப்பவே பிடிச்சு கடிச்சு வைக்கனும்னு தோணுச்சு. என்னால செய்ய முடியலை. அது தான் என்னோட முதல் பிரச்சனை…” என லேசாய் அவள் விரல்களை வலிக்காமல் கடிக்க அதிர்வுடன் பார்த்தாள் அவள்.
“இது இது பிரச்சனை…”
“ஹ்ம்ம் பிரச்சனை தான். உன்னால எனக்கு ஏகப்பட்ட பிரச்சனை தான். கேட்டேல்ல தெரிஞ்சுக்கோ…” என அவன் ஒவ்வொன்றாய் சொல்லி சொல்ல அவளை திணறடிக்க எங்கும் தப்பிக்க முடியாமல் கடைசியில் அவனின் மார்பில் அடைக்கலமானவள்,
“ப்ளீஸ், ஒரு பிரச்சனையையும் நான் தெரிஞ்சுக்க வேண்டாம்…” என்று சொல்ல,
“ம்ஹூம், பெரிய பிரச்சனை இருக்கே மிசஸ் தீப்பொறி திருமுகம்…” என்றவனின் உல்லாச குரலில் விழி திறந்து அவள் பார்க்க அவளின் இமைகளை தன் இதழ் கொண்டு மூடினான்.
“டோண்ட் டாக்…” என்றவனின் அடுத்த பூட்டு அவளின் இதழ்களுக்கு.
பேச்சுக்கள் அற்ற நிசப்தம் அவ்வறையின் சுவர்கள் அவர்களின் வாழ்க்கையின் அடுத்த பரிமாணத்திற்கான சப்தங்களை உள்வாங்கி தங்களுக்குள் ஒளித்துக்கொண்டது.
அவள் மீதான தனது தேடலை முத்தத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு பிரச்சனைகளையும் சொல்லி சொல்லி அவளின் வெட்கத்தை களைய செய்யது அவளுள் தன்னுயிரை உயிராய் முடிந்தான். தீப்பொறி என்பதற்கேற்ப தீயாய் தான் பற்றிக்கொண்டான் அவளை.
மிஞ்சாமல் கெஞ்சாமல் அவள் பதட்டத்தை மெதுவாய் தணித்து அச்சம் தவிர்க்க தன்னை கொடுத்து அவளை பெற்றான் மென்மையாய். மீளாமல் மீளவிடாமல் மீண்டவன்,
“இப்ப சொல்லு, என் பிரச்சனைக்கு என்ன சொல்யூஷன் சொல்ல போற?…” என கேலியாய் கேள்வி கேட்க அதில் கூச்சம் மிக நெளிந்தவள்,
“இனி பிரச்சனைக்கே பிரச்சனை வராது. ஆளை விடுங்க…” என சொல்லி வெட்கத்துடன் அவனுள் மறைந்துகொண்டாள் பெண்.
முத்தத்தில் ஆரம்பித்து முத்தத்தில் தொலைந்து முத்தத்தில் மீண்டெழுந்து என வாழ்க்கையின் முதல் தனிமை தருணத்தை, இதழ் முத்தங்களை யுத்தங்களாக மாற்றாமல் பஞ்சு பொதிகளென பத்திரங்களுடன் பரிமாறிக்கொண்டனர்.