கவிதை – 9
அடைக்கலத்துடன் மண்டபத்திற்கு வந்ததில் இருந்து ஸ்ரீநிவாஸ் காதில் ரத்தம் வராத குறை தான்.
‘சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்’ என்பதை போல இன்னும் பேசுவதற்கு ஏதேனும் உள்ளதா என யோசிக்கும் வண்ணம் இருந்தது அடைக்கலத்தின் ஓயாத பேச்சு.
மயக்கம் வராதது ஒன்றுதான் மிச்சம். ஒரு மாதிரி சோர்ந்து போய் அமர்ந்து இருந்தான்.
விடியும் வரை ஓயாத பேச்சு தான் அடைக்கலத்திடம். அந்த மனிதர் இப்படி பேசுவார் என்பதே அவனுக்கு அன்று தான் தெரியும்.
“ஸார் இவ்வளவு பேசுவீங்களா நீங்க?…” என அவன் கேட்க,
“இதுக்கு மேலையும் பேசுவேன். இதுக்கு முன்னால வேற. இப்ப சொந்தக்காரனா போய்ட்டியே. பேசாம இருக்க முடியுமா?…” என அவர் சிரித்தார்.
“நல்லா பேசுங்க ஸார். மணி ஆறாச்சு. வீட்டுக்கு போய்ட்டு வருவோமா?…” என கேட்க அதற்குள் சுரேன் வந்துவிட்டான்.
“அப்பா நீங்க கிளம்புங்க, இனி பசங்க பார்த்துப்பாங்க…” என தனது நண்பர்களை காண்பித்து சொல்லவும்,
“சரிதான்…” என எழுந்துகொண்டார். சுரேன் தன் நண்பர்களுடன் உள்ளே சென்றுவிட,
“கிளம்புவோமா ஸ்ரீநி?…” என்றதும் வேகமாய் எழுந்து நின்றான்.
“கண்ணெல்லாம் சிவந்து போய் இருக்குதே…” என கேட்டதும்,
“ஆமா ஸார். நைட் தூங்கலைல…” என்று முகத்தை தண்ணீர் கொண்டு அலம்ப,
“தூக்கம் முழிச்சு பழக்கம் இல்லை அப்படித்தானே?…” என்றார் தானும் முகத்தை கழுவியபடி.
“ஆமா ஸார். பழக்கம் இல்லை. இன்னைக்கு தான் முதல் தடவை. படிக்கும் போது கூட நைட்ல முழிச்சதில்லை. ஆனாலும் பர்ஸ்ட் மார்க் வந்திருவேன்…” என பெருமையாய் சொல்ல,
“அதான் தெரியுமே. தங்கதுரை ஹாஸ்பிட்டல்ல இருந்தப்ப கூட துணைக்கு நீ அங்க இல்லைன்னு…” என்றார் அதே சிரிப்புடன்.
சட்டென அவரை திரும்பி பார்த்தவன் என்ன சொல்ல வருகிறார் என புரியாமல் திகைப்பாய் நிற்க,
“ஒரு வாரமா கீர்த்தியும், அவங்கம்மாவும் தான் அங்கயே தங்கி இருந்து பார்த்திருக்காங்க இல்லையா?…” என கேட்க பதில் இன்றி நின்றான்.
“சும்மா தான் கேட்டேன். நாங்க எல்லாம் அப்படி இல்லை. பெத்தவங்க, மாமனார், மாமியார்ன்னு எல்லாருக்கும் ராத்தூக்கம் காணாம முழிச்சு பார்த்திருந்திருக்கோம். எங்களுக்கு பழகிருச்சு…” என்றபடி பைக்கை நோக்கி நடந்தார்.
“இல்லை ஸார் அன்னைக்கு எனக்கு கொஞ்சம் முடியலை…” என அவரை சமாதானம் செய்வதற்காக அவன் பேச,
“எல்லாருக்குமே ஒரு நாள் முடியாம தான் போகும் ஸ்ரீநி. நமக்குன்னு வரப்போ மனுஷங்க இருக்க மாட்டாங்க. உன் வீட்டுலையும் உன்னை பெத்தவங்க இருக்காங்க. ஆண்டவன் புண்ணியத்துல திடகாத்திரமாவே இருக்காங்க. பார்த்துக்கோ…” என்று சொல்லி பைக்கை ஸ்டார்ட் செய்ய ஏறி அமர்ந்தவன் முகமே கறுத்து போனது.
கண்களுக்குள் ராகா கை குழந்தையுடன் கதறியது ஞாபகத்திற்கு வந்தது. கனகா அழுதது தன்னிடம் எதையும் கேட்க முடியாமல் தவித்தது என ஒவ்வொன்றாய் அவனை உள்ளே சுருக்கென்று தைத்தது.
“வயசானா எல்லாந்தான் வரும். அதுக்கு உக்காந்து அழுதா ஆச்சா? சும்மா இரு ராகா. எல்லாம் அவங்க பார்த்துப்பாங்க. பையனை தூக்கிட்டு போனா முடியாம போய்டும். ஆப்பரேஷன் முடியட்டும் போய் பார்ப்போம்…” என்று இரக்கமே இல்லாமல் பேசியது எல்லாமே ஒவ்வொன்றாய் ஞாபகம் வந்தது.
“என்ன ஸ்ரீநி கம்முன்னு வர?…” என கேட்க,
“ஒண்ணுமில்லை ஸார். சும்மா தான்…” என தயக்கத்துடன் சொன்னான்.
அவனுக்கு அவமானமாய் இருந்தது. இதெல்லாம் எப்படி இவருக்கு தெரியும் என்ற கேள்வியே எழவில்லை. தங்கதுரைக்கு உடல்நிலை சரியில்லை என்பது ஊருக்கே வெளிச்சமாகி இருந்தது.
ஆனால் அதை பற்றி இப்பொழுது அதுவும் உறவினரான பிறகு தெரிந்து அதை நேரடியாக கேட்டது எல்லாம் அவனை எரிச்சலடைய வைத்தது. குறுக வைக்கவில்லை. வீடு வந்ததும் வண்டியிலிருந்து இறங்கியவன் அமைதியாக நிற்க,
“சரி ஸ்ரீநி, போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு எல்லாரையும் அழைச்சிட்டு மண்டபத்துக்கு வந்திரு….” என சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார் தான்.
ஆனால் வீட்டிற்குள் நுழைந்தவனுக்கோ அந்த கோபத்தை யாரிடம் காட்டவேண்டும் என்றே தெரியவில்லை.
“ராகா…” என அவன் கத்த அவள் வீட்டில் இல்லை. மாடியில் இருப்பாள் போல் என நினைத்து அங்கு சென்றான்.
“ராகா…” என இரைந்த குரலில் அவன் அழைத்ததும் பதறி கையில் இருந்த பால் தம்ளரை கீழே போட்டுவிட்டாள்.
“என்னாச்சுங்க?…” என கேட்க இவனின் சத்தத்தில் குழந்தை வேறு உறக்கத்தில் இருந்து எழுந்து அழ ஆரம்பித்துவிட்டான்.
“கொஞ்சம் மெதுவாங்க. நைட்ல அவன் காய்ச்சல் அதிகமாகி அனத்த ஆரம்பிச்சு நாங்க யாருமே தூங்கலை. இப்பதான் அம்மா அவனை தோள்ல போட்டு தூங்க வச்சாங்க…” என மகனுக்கு முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் அவள் பேச,
“என்னடி பேச்செல்லாம் தினுசா இருக்கு? நீ என்னத்தை குடுத்து தொலைச்சியோ. புள்ளையை கவனிக்கிறதை விட்டுட்டு தங்கச்சி பின்னால சுத்தினா. இப்படித்தான் ஆகும்…” என்று கனகா முன்பே அவன் கத்த ராகாவிற்கு தான் கஷ்டமானது.
“ப்ச், இப்ப என்ன? பேசினதுக்கு ஸாரி. வாங்க கீழே போவோம்…” என்று அவள் அந்த பிரச்சனையை முடிக்க பார்க்க அதற்குள் பின்னிருந்து முகத்தை கழுவிவிட்டு உள்ளே வந்தார் தங்கதுரை.
“வாங்க மாப்பிள்ளை, மண்டபத்துக்கு போய்ட்டு வந்தீங்களா?…” என கேட்டு,
“கனகா டீ போடு மாப்பிள்ளைக்கு…” என சொல்ல,
“ராகா, புள்ளையை தூக்கிட்டு கீழே வா…” என்றதும் சரி என தாயிடமிருந்து குழந்தையை வாங்க அவனோ பாட்டியின் கழுத்தை கட்டிக்கொண்டு வரமாட்டேன் என அழ,
“அவன் இருக்கட்டும். நீங்க வாங்க…” என அவள் முன்னே செல்ல போக வேகமாய் இழுத்து நிறுத்தியவன்,
“என்னடி குடும்பத்தோட சேர்ந்து இப்ப இருந்தே என் மகனை உங்க பக்கம் சாய்க்க பார்க்கறீங்களா? உங்கம்மா என்ன சொல்லி வச்சாங்க? அவங்களை விட்டு வராம இருக்க. இதுக்குத்தான் காய்ச்சல் வந்துச்சா?…” என பேச,
“என்னை எதுவானாலும் பேசுங்க. எங்கம்மாவை ஏன் பேசறீங்க நீங்க?…” என ராகாவும் பொறுமையை இழுத்துப்பிடித்து பேச,
“அப்படித்தான் பேசுவேன். இருக்கறது பொள்ளாச்சி. ஆனா இங்க அம்புட்டும் தெரியுது இவங்களுக்கு என்ன ஆகுது ஆகலைன்னு. இன்னைக்கு யார் யாரோ என்னை கேள்வி கேட்கறாங்க. அவமானப்படுத்தறாங்க. அதுக்குன்னே தான் லேசா முடியாட்டிலும் ஊருக்கே தகவல் தெரியுது…” என குற்றம் சாட்ட பதறி போய் நின்றனர் பெற்றவர்கள்.
“மாப்பிள்ளை…” என கனகா குழந்தையுடன் முன்னே வர,
“நீங்க பேசாதீங்க, உங்கக்கிட்ட கேட்டேனா ஏதாவது? பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி குடுத்தா புருஷன் குடும்பம்னு வாழ சொல்லி குடுக்கனும். அத விட்டுட்டு சும்மா இங்க வந்துட்டு இப்ப பாருங்க என் புள்ளைக்கு முடியாம போச்சு. நேத்தே புள்ளையை பாருன்னு இவக்கிட்ட சொல்லிருந்தா இப்ப அவன் நல்ல இருந்திருப்பான்ல. எல்லாம் உங்களால…”
ஸ்ரீநிவாஸ் தனது கோபத்தை எல்லாம் அவர்களிடம் காண்பித்து தனது எரிச்சலை தணித்துக்கொண்டு இருந்தான். அவனின் பேச்சை கேட்டவர்கள் விக்கித்து நிற்க,
“இதுக்கு மேல என் அப்பாவையும் அம்மாவையும் ஒரு வார்த்தை பேசினீங்க அவ்வளோ தான்…”
“ராகா…” என அவளின் கோபத்திலும் சத்தத்திலும் அதிர்ந்தவனாய் அவளை அடக்க பார்த்தான்.
“வாயை மூடுங்க. வினய்க்கு முடியாம போனதுக்கு எங்கம்மா காரணமா? நல்ல இருக்கே நீங்க சொல்றது? என் பையனை வலுக்கட்டாயமா தூக்கிட்டு போனது உங்கம்மா தான். அங்க நம்ம வீட்டுக்கு வரனும்னு அழுதவனுக்கு ஐஸ்க்ரீமை வாங்கிக்குடுத்து சாப்பிட வச்சது உங்கப்பா…”
“அவனுக்கு சேராதுன்னு தெரிஞ்சும் சின்ன பையனுக்கு அத்தனை வாங்கி குடுத்து சத்தமில்லாம அனுப்பி வச்சது உங்கம்மா. ஒரு வார்த்தை நேத்து சொல்லி இருந்தா அப்பவே மருந்து குடுத்திருப்பேன். சொல்லாம மறைச்சுட்டு இன்னைக்கு இவ்வளவுக்கு அவன் அவஸ்தை பட காரணம் அவங்க…”
“நீங்க வாய் கூசாம எங்கம்மாவையும், அப்பாவையும் சொல்றீங்க? மனுஷன்னா மனசாட்சின்னு ஒன்னு வேணும். நானும் பார்த்துட்டே இருக்கேன் ரொம்ப பேசிட்டே இருக்கீங்க? இனி ஒரு வார்த்தை இவங்களை நீங்க பேசினீங்க அவ்வளோ தான் சொல்லிட்டேன்….” என்று அவள் ஆடி தீர்க்க,
“என்னடி உங்கம்மா உங்கம்மான்னு யாரையோ சொல்ற மாதிரி பேசற? அவங்க என் அம்மான்னா உனக்கு மாமியார். அத்தைன்னு கூப்பிடாம ஓவரா துள்ளுற…” என ராகாவை காய்ந்தவன்,
“பார்த்தீங்களா நீங்க வளர்த்து வச்சிருக்கற லட்சணத்தை. இவ வாய் பேசமாட்டான்னு ஒரே காரணத்தால தான் இவளை நான் கல்யாணமே பண்ணேன். இப்ப என்னன்னா இவ்வளவு வாய் பேசறா…” என அவனும் பதிலுக்கு பேச,
“எங்களை மன்னிச்சிருங்க மாப்பிள்ளை. ராகாவுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். என் பொண்ணு எப்பவும் இப்படி பேசறவ கிடையாது. மகனுக்கு முடியலைன்ற ஒரு ஆதங்கத்துல பேசறா. நாங்க சொல்லி வைக்கறோம்…” என தங்கதுரை அவனின் கையை பிடிக்க போக எரிச்சலுடன் விலகி நின்றான் அவன்.
“சொல்லி வைக்கிறத அவக்கிட்ட சொல்லுங்க. கீழே வரும் போது இந்த வாய் இருக்க கூடாது…” என மிரட்டலாக அவன் சொல்ல,
“அப்படித்தான் பேசுவேன். இவ்வளோ நாள் பொறுமையா போனது உங்களுக்காக இல்லை. என்னை பெத்தவங்களுக்காக. என்ன சொன்னீங்க உங்களுக்கு அம்மான்னா எனக்கு மாமியாரா? நான் பிறக்கிறதுக்கு முன்ன இருந்தே எங்கப்பா உங்களுக்கு தாய்மாமா தானே?அந்த நினைப்பு உங்க மனசுல இருக்கா?…”
“ராகா…” என தாய் தந்தையும், ஸ்ரீநிவாஸும் ஒரே சேர கத்த,
“நீங்க இன்னொருவாட்டி இவர்க்கிட்ட மன்னிப்புன்னு கேட்டீங்க அவ்வளவு தான். என்னை இதுதான் நீங்க பார்க்கிற கடைசி நாளா இருக்கும்…” என அவனுக்கு மேல் அவள் மிரட்ட ஸ்ரீநிவாஸ் உண்மையில் மிரண்டு தான் போனான்.
“ராகா…” என அவன் பதறி போக,
“என் பக்கத்துல வந்தீங்க பார்த்துக்கோங்க…” என பின்னால் நகர்ந்தவள் அழுதுகொண்டிருந்த பெற்றோரை பார்த்து,
“ஒரு நாள் கூட உங்களால நிம்மதியா இருக்க முடியலைப்பா. எல்லாம் என்னால தான். தினம் தினம் இப்படி இருக்க நான் உங்க கூடவே இருந்துடுவேன். கீர்த்தி வீட்ட்டுக்காரர்ட்ட சொன்னா கண்டிப்பா எனக்கு ஒரு வேலை கிடைக்கும். அதை பார்த்துட்டு நான் நிம்மதியா இருந்திருவேன். போதும்…” என சொல்ல,
“ராகா என்ன பேச்சு இதெல்லாம்?…” என கேட்டது ஸ்ரீநிவாஸ் தான்.
அவனுக்கு அப்பொழுது தான் கீர்த்தனா அக்னிசெல்வனின் மனைவி. இனி தன் முதலாளி ஸ்தானத்தில் அவள். நினைக்கவே வேப்பங்காயாய் கசந்தாலும் இப்பொழுது அதை எல்லாம் எண்ணி மனம் குமைய கூட நேரமில்லை அவனுக்கு.
ராகாவை சமாதானம் செய்ய வேண்டுமே. என்ன செய்ய என யோசிக்க யோசிக்க ஒன்றுமே ஞாபகத்திற்கு வரவில்லை.
இருக்கும் நிலையில் இவளிடம் பிரச்சனை என வெளியே தெரிந்தால் முக்கியமாக அக்னியின் குடும்பத்திற்கு தெரிந்தால்? கண்களுக்குள் அடைக்கலத்தின் விடிய விடிய பேச்சு தான் வந்து போனது.
‘வச்சு செஞ்ச மாதிரியும் இருந்துச்சு இல்லாத மாதிரியும் இருந்துச்சு’ என குழம்பியபடி இருந்தவன்,
“இங்க பாரு ராகா ஏதோ டென்ஷன்ல…” என அவளிடம் சமாதானம் பேச முயன்றான்.
அவனுக்கு அவளின் பெற்றோரின் முன்னால் அவளிடம் இறங்கி பேசவேண்டி இருக்கிறதே என நினைக்க வெறுப்பாய் இருந்தது.
‘வாயை வைத்துக்கொண்டு இல்லாமல் இப்படி கத்திவிட்டு கத்தி முனையில் நின்றுகொண்டு இருக்கிறேனே’ என பல்லை கடித்தபடி அமைதியாக நின்றான்.
“ராகா மாப்பிள்ளை தான் சொல்றாரே, கேளும்மா. இது தப்பு…” கனகா அவளுக்கு சொல்ல,
“அப்பா பேசாம போய் கிளம்புங்க. நேரமாகுது. கீர்த்தி வீட்டுக்கு போகனும். இவர்க்கிட்ட பேச சொன்னா நான் அங்க வரமாட்டேன். உங்களையும் போக விடமாட்டேன். அவங்க கேட்டா இங்க நடந்த சண்டையை அவங்கட்ட சொல்றேன். அவங்களே இதுக்கு ஒரு முடிவு செய்யட்டும்…” என்றாள் முடிவாக.
‘என்னது அங்க சொல்ல போறாளா?’ என இப்பொழுது அவனின் தலையில் ஆணி இறங்கியது போல ஆனது.
“இவரை போக சொல்லுங்க. இல்லைன்னா என்ன செய்வேன்னு தெரியாது. இப்பவே அக்னி சார்க்கு போன் பண்ணி…” என சொல்லி முடிக்கவில்லை அதற்குள்,
“ராகா இங்க பாரு, தெரியாம பேசிட்டேன். நிஜமாவே பேசிட்டேன். இனிமே இப்படி நிஜமா பேசமாட்டேன். என்னை மன்னிச்சிடு…” என காரியமாய் சொல்லியவன்,
“மாமா, அத்தை சொல்லுங்க நீங்க…” என்றான் அவர்களிடம் சரணடைந்தவனாக.
“நாங்க சொல்றோம் மாப்பிள்ளை, நீங்க எதுவும் நினைக்காதீங்க. நாங்க சொல்றோம்…” என கனகா சொல்ல தங்கதுரை கண்கலங்கி நின்றார்.
“நீங்க கீழே போங்க, நாங்க சொல்லி அனுப்பி வைக்கறோம்…” என சொல்லவும் ஒருவழியாய் நிம்மதியுடன் கீழே சென்றான்.
“படுபாவி, நேரம் பார்த்து இப்படி பேசறாளே. எங்க இருந்து இவ்வளவு தைரியம் வந்துச்சு. இருக்கட்டும், பார்த்துக்கறேன்…” என கீழே வந்தவன் புலம்பி தள்ளினான்.
“என்னம்மா ராகா இது? இதெல்லாம் தப்பில்லையா?…” என தங்கதுரை கண்ணீருடன் கேட்க அவரின் கண்களை துடைத்துவிட்டவள் அவரின் கையை பிடித்து,
“அழாதீங்க அப்பா, எந்த சூழ்நிலையிலும் வாழாம உங்கக்கிட்ட வந்திடமாட்டேன். எனக்காக அவர் என்னை அனுப்பினாலும் அனுப்புவாறே தவிர கீர்த்தனா வீட்டுக்கு பயந்து என்னை அனுப்பவே மாட்டாரு. அதோட அவர் சுயநலம் இருக்குப்பா. இது புரியாம நீங்களும் பேசறீங்க…”
“ராகா…”
“ஆமாம்ப்பா, இதுவரைக்கும் நானும் பொறுமையா இருந்தாச்சு. என்னால நீங்க இழந்தது போதும். இனி பார்த்துக்கறேன் நான். நீங்க கொஞ்சமாவது தைரியமா திடமா இருங்க. என்னையும் இதை செய்யாத அதை செய்யாதீங்கன்னு கட்டுப்படுத்தாதீங்க. இனி கொஞ்சமாவது நானும் சுயமா நிக்கறேன்…”
“அதுக்குன்னு சண்டையும் சச்சரவுமா இருக்கனுமாம்மா?…” கனகா கேட்க,
“இதுவரைக்கும் இருந்ததை விட இனி நான் சந்தோஷமா இருப்பேன்னா அப்ப நான் பேசித்தான் ஆகனும். என்னால உங்களுக்கு இனி நிம்மதியும் சந்தோஷமும் தான் இருக்கும். புரிஞ்சுக்கோங்கம்மா…” என அவர்களை தைரியமூட்டியவளாக கீழே வர அவளிடம் பேசவே யோசித்து நின்றான் ஸ்ரீநிவாஸ்.
“ராகா, என்ன இப்படி பேசிட்ட? இதுவரை இப்படி நீ பேசினதில்லையே…” என சாதாரணம் போல பேசி அதில் குற்றமாய் சொல்ல,
“என்னை பேச வச்சது நீங்க தான். இனி பேசனுமா வேண்டாமான்னும் நீங்க தான் முடிவு பண்ணனும்…” என சொல்லிவிட்டு கிட்சனுக்குள் சென்றுவிட பல்லை கடித்துக்கொண்டு நின்றான் ஸ்ரீநிவாஸ்.
————————————————–
காலை எழுந்ததும் குளித்து முடித்து வேறு புடவை மாற்றிவிட்டு அக்னிக்காக காத்திருந்தாள் கீர்த்தனா.
அவன் குளித்துவிட்டு வருவதற்காக காத்திருந்தவள் முகத்தில் வெட்கமும் புன்னகையும் நிறைந்து இருந்தது. அங்கிருந்த புக் ஷெல்பில் இருந்த புத்தகங்களை பார்வையிட்டபடி அவள் இருக்க,
“வெட்கப்படாத பூக்களை வண்டுகள் தொடாதடி. முத்தம் தராமல் வெட்கமும் சாயம் போகாதடி…” என ராகம் போட்டு பாடியபடி அவன் வர சுத்தமாய் திரும்பவில்லை அவன் பக்கம். புத்தக அலமாரியில் முகத்தை புதைத்துக்கொள்வதை பார்த்தவன்,
“கிளம்பியாச்சா கீர்த்தனா…” என கேட்டுக்கொண்டே தனக்கு ஒரு ஷர்ட்டை எடுத்து போட ஆரம்பித்தான்.
தன் எண்ணங்களை வண்ணங்களாய் குழைத்து அவள் பால் பூசியதேல்லாம் போதாதென பார்வையிலும் அந்திவான சிவப்பாய் உருவெடுக்க வைத்தான் அவளை.