“ஹாங், கிளம்பிட்டேன். அப்பவே…” என சொல்ல,
“அதை என்னை திரும்பி பார்த்து சொல்லறது தானே?…” என சன்னமான சிரிப்புடன் சொல்ல,
“ஹ்ம்ம்…” என சப்தம் மட்டுமே கொடுத்து நிற்க,
“ஹா ஹா ஹா இந்த கீர்த்தி ரொம்ப புதுசு. எங்க என்னை முறைச்சு பேச முடியாம நிப்பாளே அந்த கீர்த்தி எங்க?…” என அவளின் முன்னால் வந்து கிண்டலுடன் அவன் கேட்க,
“அதெல்லாம் தெரியாது. கீழே போகலாம். அப்பாவும், அம்மாவும் வந்திருவாங்க. கோவிலுக்கு போகனும்…” என பேச,
“முதல்ல என்னை கவனி, போகலாம்…” என்று அவன் சிரிக்க,
“நீங்க இவ்வளோ சிரிப்பீங்களா? இப்பதான் பார்க்கறேன்…”
“மனுஷன்னா சிரிக்காம என்ன?…”
“ஆனா நீங்க சிரிச்சதில்லையே. இப்படிலாம் பேசினது கூட இல்லை…”
“அதுசரி, நீ என் பொண்டாட்டி உன்கிட்ட பேசலாம், என் பிரச்சனையை சொல்லலாம், ஊருக்கே சொல்லவா முடியும்?…” என சிரிக்க,
“இதை விடவே மாட்டீங்களா?…”
“பின்ன கல்யாணத்துக்கு முன்னாடி நான் சொன்ன ஒரு வார்த்தைல பார்க்கும் போதெல்லாம் மேல விழுந்து பிராண்டிடுவேன்ற மாதிரி முறைச்சுட்டே இருப்ப. இப்ப என்ன பண்ணுவ?…”
“நீங்களும் தான் மிரட்டினீங்க…” என்று சிணுங்கி,
“ப்ளீஸ், அம்மா வந்திருவாங்க. கூட்டிட்டு போங்க…” என அவனின் நாடியை பிடித்து கேட்க,
“முன்னேற்றம் தான் திருமதி தீப்பொறி…” என்றவன் அவளின் கன்னத்தில் முத்தமிட்டு,
“டூ மினிட்ஸ்…” என சொல்லி சொல்லியதை போலவே கிளம்பி வந்து அவளுடன் கீழே இறங்கி வந்தான்.
“அக்னி, அப்படியே சாமி கும்பிட்டு வந்துருப்பா…” என சந்திரிகா சொல்ல,
“அம்மாடி கூட்டிட்டு கூட போ…” என சாதனாவிடம் சுபா சொல்ல சாமி கும்பிட்டு விட்டு வந்து அமர்ந்தனர்.
“பழம் தானே?…” என சாதனா கீர்த்தியிடம் கேட்க,
“அக்கா, சும்மா இருங்க…” என்றவள்,
“இன்னும் ராகாக்கா வரலையா?…” என கேட்க,
“அவங்க வருவாங்க, நான் பேசிட்டேன். நீ இங்க இருக்கற உன் வீட்டுக்காரரை கவனி…” என சொல்ல,
“சாதனா நீ கீர்த்தியை கூட்டிட்டு போய் வீட்டை சுத்தி காண்பி….” என்றதும் கீர்த்தனா அக்னியை பார்க்க,
“போய்ட்டு வா, நான் வெய்ட் பன்றேன்…” என அவன் சொல்லவும் எழுந்துகொள்ள,
“நேத்து அழுத அழுகை என்ன? இப்ப அவர் சொன்னா தான் வருவீங்களோ?…” என்று சாதனா சிரித்தபடி கேலி பேச அக்னியின் பார்வை ரசனையுடன் அவளை தழுவியது.
வீட்டை சுற்றி முடித்து வெகு நேரம் சென்றே சாப்பிடவென வந்து அமர்ந்தார்கள் அந்த வீட்டு மருமகள்கள் இருவரும். சுரேனும் சரியாக அந்த நேரம் வந்துவிட்டான்.
பன்னீர்செல்வம், அடைக்கலம் என வீட்டினர் அனைவருமே இவர்களுக்காக காத்திருந்தனர்.
“இங்க வா…” என கீர்த்தனாவை தன்னருகே அழைத்து அமர வைத்துக்கொண்டான் அவன்.
“வீடு பிடிச்சிருக்கா?…” என கிசுகிசுக்க,
“ஹ்ம்ம் பிடிச்சிருக்கு…” என அவளும் மெல்லிய குரலில் அவனிடம் சொல்ல,
“என்னை…” என கேட்டதும் பதில் சொல்லாமல் திகைக்க அதை கண்டு அவன் சிரிக்க,
“எல்லாரும் பார்க்கறாங்க…”
“இதையே சொல்லு…” என நிமிர்ந்து அமர்ந்தான் அக்னி.
அங்கு வைத்திருந்த அத்தனை வகை பதார்த்தங்களையும் பார்த்தவள் மலைத்து போனாள்.
“என்னாச்சு?…” என்றவனிடம் ‘ஒன்றுமில்லை’ என தலையை மட்டும் அசைத்தாள் அவள்.
பரிமாறும் பெண் வந்து முதலில் இனிப்பை வைக்க அதனுடன் பொங்கலையும் வைக்க போதும் என மறுத்துவிட்டாள்.
“முதல்ல இனிப்பு சாப்பிடும்மா…” என சுபா சொல்ல சரி என சாப்பிட்டவள் பொங்கலை மட்டும் அடுத்து சாப்பிட பாதியில்,
“என்ன கொரிக்கிற கீர்த்தி, நல்லா சாப்பிடு…” என்ற சந்திரிகா பரிமாறும் பெண்ணிடம் கீர்த்தனாவிற்கு மேலும் பரிமாற சொல்ல,
“இல்லை எனக்கு போதும், வேண்டாம்…” என அவள் மறுக்க,
“பெரியம்மா, அவங்களுக்கு இதெல்லாம் பழக்கமா இருந்திருக்காது. ஒரே நல்ல இத்தனை ஐட்டம்ஸ் பார்த்தே மிரண்டிருப்பாங்க. விடுங்க போக போக பழகிருவாங்க…” என சுரேன் சொல்லவும் கீர்த்தனாவின் மனதில் சுருக்கென்ற முள் தைத்தது.
“சுரேன்…” என அக்னி சத்தமாய் சொல்லவும் தான் தன்னுடைய பேச்சு வேறு கோணத்தில் புரிந்துகொள்ளப்பட்டதை அவனால் உணர்ந்துகொள்ள முடிந்தது.
ஆனாலும் தவறாக எதுவும் சொல்லவில்லையே என அவன் அப்படியே நிற்க கீர்த்தனாவின் கண்களில் கண்ணீர் தளும்பி நின்றது.
“தப்பா எடுத்துக்காதீங்க, எனக்கு எனக்கு போதும்…” என்று தொண்டையடைக்க சொல்லிவிட்டு எழுந்தவள் கையை கழுவிவிட்டு யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் அங்கிருந்து மாடிக்கு செல்ல,
“திஸ் இஸ் டூ மச் சுரேன்…” என அக்னியும் கோபத்துடன் எழுந்து கை கழுவ சென்று விட சந்திரிகாவின் பார்வை பன்னீர்செல்வத்திடம் நிலைத்திட,
“இதை உங்கக்கிட்ட நான் எதிர்பார்க்கலைங்க. கல்யாண வேலை எல்லாம் எடுத்து செஞ்சீங்களே உங்கள மனசு மாறி நல்லபடியா இருக்கறதா நினைச்சுட்டேன். இதை எல்லாம் மனசுல வச்சு இன்னைக்கு அந்த பொண்ணு மனசை நோகடிக்க இந்த சாப்பாடு தானா கிடைச்சது உங்களுக்கு?…” என சாதனா வேகமாய் பொரிந்து தள்ள,
“ப்ச், சனா நான் வேணும்னு பேசலை. அது சும்மா, ப்ச், நான் எப்படி சொல்லி புரிய வைப்பேன்?…”
“அப்ப நீங்களே போய் கீர்த்தனாட்ட பேசுங்க…” என சாதனா சொல்ல,
“வாட்? நான் எக்ஸ்ப்ளைன் பண்ணனுமா? நோ வே…”
“நீங்க அந்த எண்ணத்துல சொல்லலைன்னு சொன்னீங்க தானே? அப்ப போய் பேச என்ன தயக்கம்?…”
“அதுக்காக நான் இறங்கி போய்…”
பெரியவர்கள் யாரும் இவர்களின் வாக்குவாதத்தில் தலையிடாமல் அமர்ந்திருக்க சாதனா இதை இப்படியே விடக்கூடாதென பேசியபடி இருந்தாள்.
“இப்ப கீர்த்தனா கீர்த்தனா தங்கதுரை இல்லை. கீர்த்தனா அக்னிசெல்வம். கரெக்ட்டா சொல்லனும்னா இந்த வீட்டோட முதலாளி…” என சுருக்கென சொல்ல,
“என்ன சனா இதெல்லாம்?…” என சுரேன் வருத்தத்துடன் பார்க்க,
“சாதனா என்னம்மா நீ?…” என்று பன்னீர் செல்வம் கண்டிப்புடன் பார்க்க,
“நீங்க இல்லைன்னு சொல்லமுடியாதே மாமா, அதானே உண்மை. அந்த பொண்ண பேச இவர் யாரு? சில வார்த்தை எப்ப எங்க பேசனும்னு ஒரு முறை இருக்குது. எப்ப எந்த பேச்சு வேற அர்த்தத்தை கொடுக்கும்னு தெரியாத அளவுக்கு இவர் சின்ன பிள்ளை இல்லை…” என சொல்ல,
“இதையே நீங்க வேற யாரும் இவரை பேசிருந்தா எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும். அதான் நானே பேசிட்டேன். இவர் எனக்காகவாச்சும் கீர்த்தனாட்ட பேசினா சந்தோஷப்படுவேன்…”
“மன்னிப்பு கேட்கனும்னு சொல்றியா நீ?…”
“பேசினதுக்கான விளக்கம் குடுக்கனும்னு சொல்றேன். இன்னொருத்தவங்கட்ட பேசும் போது அந்த வார்த்தைக்கு பொறுப்பாகிடறீங்க நீங்க. அப்ப நீங்க தான் பேசனும்…” என பிடிவாதமாய் சொல்ல வேறு வழியின்றி சரி என்றான் சுரேன்.
மாடிக்கு சென்ற அக்னி கீர்த்தனாவை தேட ட்ரெஸிங் டேபிளில் தலை சாய்ந்து அமர்ந்திருந்தாள் அவள். அவளருகே சென்றவன் அவளின் தோளில் கை வைத்து,
“கீர்த்தனா…” என்ற அழைப்பில் நிமிர்ந்து பார்த்தவளின் விழிகள் சிவந்திருக்க எதுவும் பேசாமல் அவனின் இடுப்பை கட்டிக்கொண்டவள்,
“அம்மாவை பார்க்கனும். கூட்டிட்டு போறேங்களா ப்ளீஸ்…” என இறைஞ்சுதலாய் பார்க்க,
“என்னடா இது?…” என அவளின் கன்னத்தை தனது வயிற்றோடு அழுத்திக்கொண்டான்.
“எதுவும் பேசவேண்டாம். எந்த சமாதானமும் சொல்லாதீங்க. எதையும் கேட்க என்னால முடியாது. இதை விடுங்க…” என அவன் பேசும் முன்பே தடுக்க,
“இல்லை நான் பேசலை. போகலாம். கிளம்பு…” என்று அவளை எழுப்பி நிற்க வைக்க,
“இனி இது மாதிரி…” என்றவனின் இதழ்களில் விரல்கொண்டு தடுத்தவள்,
“எனக்கு கேட்க வேண்டாம்…” என்றவளை அணைத்துக்கொண்டவன் மனது அவளுக்காய் தவித்தது.
தன் வீட்டில் தன் மனைவியாய் அவள் இந்த நிமிடம் எத்தனை வருந்தியிருப்பாள் என நினைக்கவே அவனுக்கு சகிக்கவில்லை.
அவளின் முதுகை வருடியபடி அவன் நிற்க அவனின் அணைப்பிற்குள் அப்படியே அடங்கி நின்றாள்.
வெளியே கதவு தட்டப்படும் சத்தம் கேட்கவும் அவனிடமிருந்து விலகியவள் தானே சென்று கதவை திறக்க அங்கே சுரேன் நின்றிருந்தான்.
அவனை பார்த்ததும் சட்டென அறையை விட்டு வெளியே வந்து நின்றாள் அவள். தயக்கத்துடன் அவளை பார்த்தவன்,
“நான் எந்த மாதிரியும் நினைச்சு சொல்லலை. நீங்க தப்பா எடுத்துக்காதீங்க ப்ளீஸ். நான் விளையாட்டுக்கு தான் பேசினேன்…” என சொல்ல,
“நான் எதுவும் நினைக்கலை, நீங்க இந்த விஷயத்தை அப்படியே விட்டுடுங்க…” என்றவள்,
“ஒரு விஷயம் உங்கக்கிட்ட சொல்லிக்கறேன். எங்க வீட்டுல என்னைக்கும் நான் பட்டினியா இருந்ததே இல்லை. இருந்ததை வச்சு நிறைவா தான் வாழ்ந்தோம். இங்க மாதிரி வகையா சாப்பிட்டதில்லை தான். ஆனா இந்த எல்லா வகையுமே சாப்பிட்டிருக்கேன். என்னை அப்படித்தான் வளர்த்திருக்காங்க…”
“இத்தனை வகையும் புதுசில்லை. இந்த வகைகள் எதுவும் எனக்கு ஆச்சரியமும் இல்லை. இப்படி ஒரே நேரத்துல மொத்தத்தையும் சாப்பிட்டு பழக்கமில்லை தான். ஆனா சாப்பிட்டதே இல்லைன்ற மாதிரி நீங்க பேசியிருக்க வேண்டாம்…”
“அய்யோ நான் உங்களை ஹர்ட் பண்ணனும்னு சொல்லலை….” என சுரேன் பதற,
“ஆனா நான் இதுக்கு விளக்கம் சொல்லனும்னு நினைக்கறேன். இந்த மாதிரி இனி பேசாதீங்க. அவ்வளோ தான்…” என சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள் அவள்.
சுரேன் நின்ற இடத்தை விட்டு அசையாமல் அப்படியே நின்றான். அவனுக்குமே இந்த சின்ன விஷயம் இந்தளவிற்கு கீர்த்தனாவை பாதிக்கும் என நினைக்கவே இல்லை.
“சுரேன், இன்னும் இங்க என்ன பன்ற?…” என அக்னி வர,
“அக்னி புரிஞ்சுக்கோடா, நிஜமா வேணும்னு பேசலை அவங்கட்ட…”
“யார்க்கிட்ட?…”
“அதான் கீர்த்தனா அவங்கட்ட தான்…”
“சுரேன் நீ இதை எப்படி வேணும்னாலும் எடுத்துக்க. நான் உனக்கு அண்ணனா இருந்தாலும் நாம ஒரே வீட்டுல வளர்ந்ததால நமக்குள்ள உள்ள அண்டர்ஸ்டேண்டிங் வேற. நீ என்னை என்ன வேணும்னாலும் கூப்பிடு. பட் கீர்த்தனாவை அவளுக்கான மரியாதையோட கூப்பிடு…” என முடிவாய் சொல்ல,
“நான் அப்படி பேசினதால சொல்றியா அக்னி?…” என்றான் வருத்தமாய்.
“நிச்சயம் இல்லை. நீ பேசினதால உன் மேல நிறைய வருத்தம் இருக்குது தான். அதுக்கான பதிலை என் மனைவியா இந்த வீட்டு மருமகளா அவ பதில் உனக்கு குடுத்திட்டா. ஆனா இது அவளுக்காக நான் செய்யறது. ஏற்கனவே சொல்லனும்னு தான் இருந்தேன்…”
“ஹ்ம்ம், ஓகே. இதுவரை அவங்கட்ட மரியாதையோட தான் இருக்கேன்…” என உள்ளடங்கிய குரலில் சுரேன் சொல்ல,
“எவங்கட்ட?…” என்றான் அக்னி கூர்மையாய்.
“ப்ச், அண்ணிக்கிட்ட. என் அண்ணிக்கிட்ட. போதுமா. இதானே உனக்கு வேணும்?…” என்று கேட்க,
“வார்த்தைல இருந்தா மனசுலயும் பதியும். என் இடத்துல நீ இருந்தாலும் நீயும் இதைத்தான் செஞ்சிருப்ப. புரியும் தானே?…” என சொல்லிவிட்டு செல்ல சாதனாவும் அங்கே தான் சற்று தள்ளி நின்றாள்.
“சனா…”
“உங்க அண்ணிக்கிட்ட பேசியாச்சா?…” என அவளும் கேட்க முறைப்புடன் சுரேன் பார்க்க அதற்குள் கீர்த்தனாவின் குடும்பத்தினர் வந்து சேர்ந்தார்கள்.