நேரம் மாலை ஆறு மணி என்பதை கடிகாரத்தை பார்க்காமலேயே அவளால் துல்லியமாக உணர முடிந்தது. தரையில் குண்டூசி விழுந்தாலும் கேட்குமளவு அறையை அமைதி நிறைத்திருந்தது. விழிகளை மட்டும் உயர்த்தி அறையை சுழற்றினாள். அவளோடு பணிபுரியும் அனைவரும் கணினியை அணைக்க, கோப்புகளை மூடி வைக்க, மேசையை சீர்படுத்த என அந்நாளின் வேலையை முடித்து விட்டு வீடு செல்ல ஆயத்தமாவதை வைத்தே மணி ஆறென்று அவளால் உணர முடிந்தது.
அவள் பார்த்து முடிக்க வேண்டிய கோப்புகள் இன்னும் இரண்டிருக்க, அவளால் இருக்கையை விட்டு நகர கூட முடியவில்லை.
சட்டென அறையை மனதில் இருந்து உதறி வேலையில் மூழ்கினாள் அவள். பத்தே நிமிடங்களில் அமைதி காணாமல் போய், சலசலப்புடன் அறையே காலியாக தொடங்கியிருந்தது.
“வானதி, நேரமாச்சே. வீட்டுக்கு கிளம்பல?” அவளின் மேஜையின் மேல் சாய்ந்து நின்று லாவண்யா கேட்க, கண்களை கணினியில் பதித்தப்படி பதில் சொன்னாள் வானதி.
“கிளம்பணும் லாவண்யா.”
“நான் வெயிட் பண்ணவா?”
“இல்ல, நேரமாகும் போல. நீ கிளம்பு. நான் இந்த ஃபைலை மட்டும் முடிச்சுடுறேன். இது சேலரி ஃபைல். ரெண்டு நாள்ல சம்பளம் போடணும் இல்ல? காலைல இருந்து பார்க்கணும் நினைச்சுட்டே இருந்தேன். எப்படியோ மிஸ் பண்ணிட்டேன். இப்போ முடிச்சு மெயில் பண்ணாதான் சரி வரும். இல்லனா, நாளைக்கு மேலிடத்துக்கு பதில் சொல்ல முடியாது”
“ம்ம், ஏழு மணி. இப்பவே ரொம்ப லேட்.” என்றவள், “சரி, நீ முடி. நான் வெயிட் பண்றேன்” என்று லாவண்யா தோழிக்காக பேச,
“எனக்காக வெயிட் பண்ணி, உனக்கும் லேட்டாக போகுது. பசங்க வீட்டுக்கு வந்திருப்பாங்க இல்ல? நீ கிளம்பு, பிளீஸ்” வானதி அழுத்தமும், சிறிதே எரிச்சலும் கலந்த குரலில் சொல்ல, அவளை ஒரு நொடி முறைத்து பின், “சரி, நீயும் வேலையை முடிச்சுட்டு சீக்கிரம் கிளம்பு. நான் நின்னு பேசி உன்னை டிஸ்டர்ப் பண்ண விரும்பல” என்று விட்டு தயக்கத்துடன் வாயிலை நோக்கி நடந்தாள் லாவண்யா.
ஏழு மணியா? என்று ஒரு நொடி மலைத்துப் போனாள் வானதி. மனத்திலும், உடலிலும் மெலிதாய் பதட்டமும், படபடப்பும் தொற்றிக் கொண்டது. அதுவரை ஓரமாய் ஒதுங்கி இருந்த அனைத்தும் ஒற்றை நொடியில் முன்னே வந்து அவளை பதறச் செய்தது.
வீடு, குழந்தைகள், குடும்பம், அம்மா, கணவன், இரவு சமையல் என வரிசையாய் அவள் மனதில் வலம் வர, அவை அனைத்தையும் முந்திக் கொண்டு, போக்குவரத்து நெரிசலில் சிக்கி எத்தனை மணிக்கு வீடு போய் சேரப் போகிறேன் என்ற கவலை தற்போது முதன்மை இடத்தைப் பிடித்து நின்றது.
அதற்கு மேல் எதிலும் கவனம் செல்லாது என்பது புரிய பார்த்துக் கொண்டிருந்த வேலையை எக்ஸ்பிரஸ் வேகத்தில் முடித்து, மீதியை அப்படியே மூடி வைத்து விட்டு மேஜையை ஒதுக்கி வீடு கிளம்பினாள். அலுவலகத்தில் இன்னமும் ஆட்கள் அமர்ந்து வேலையில் ஈடுபட்டிருந்தனர். தங்களுக்கு வேலைக்காக வாழ்க்கையா? வாழ்க்கைக்காக வேலையா? எதற்காக, எதன் பின் ஓடுகிறோம்? அவளால் அந்தப் புதிருக்கு மட்டும் சரியான விடையை கண்டறியவே முடியவில்லை.
பள்ளி மாணவியை போல கைப்பையுடன், தண்ணீர் பாட்டில் அடங்கிய மதிய உணவுப் பையையும் தூக்கி கொண்டு வெளியில் வந்தாள். மதிய உணவாக அவள் உட்கொண்டிருந்த சிறிய டப்பா தயிர் சாதம் எப்போதோ ஜீரணித்து இருக்க, மாலை காஃபி கூட ஆவியாகி இருந்தது. உடலில் அன்றைய நாளுக்கான சோர்வோடு பசியும் இப்போது சேர்ந்துக் கொண்டது.
“இப்பத்தான் மா ஆபீஸில் இருந்து கிளம்பறேன். எப்படியும் எட்டு மணிக்குள்ள வந்துடுவேன்” இது போன்ற நேரங்களில் அம்மாவின் முன் அவள் சிறுமியாகி விடும் பாங்கு அவளுக்கு இயல்பாகவே வந்து விடும். இத்தனைக்கும் அம்மா அப்படியொன்றும் கண்டிப்பானவர் கிடையாது. அவளின் சிறு வயது முதலே தவறு செய்தால் ஒழிய எதற்கும் கோபப்பட மாட்டார். ஆனால், இப்போதெல்லாம் அடிக்கடி கோபப்படுகிறார்.
“எட்டு மணிக்கு வந்து?” என்று அம்மா இழுக்கும் போது, அவளின் சிந்தனைகள் கலைய, தன் நெற்றியில் நரம்பொன்று பட்டென்று துடிப்பதை உணர்ந்தாள் வானதி.
“சரி, சரி. நான் பார்த்துக்கறேன். நீ கவனமா வா” அம்மா அழைப்பை துண்டித்ததும் அலைபேசியை மூடி கைப்பையில் எறிந்து விட்டு தன் இரு சக்கர வாகனத்தை இயக்கினாள்.
அலுவகத்தில் இருந்து அவள் வீடு பதினைந்து நிமிட பயண தூரம்தான். ஆனால், சென்னையின் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அன்றாடம் வீடு போய் சேர இரண்டு மடங்கு நேரமாகி விடும்.
ஏனோ ஒரு வார காலமாக மனத்தில் ஒருவித வெறுமை. அதன் தாக்கம் கண் விழித்திருக்கும் ஒவ்வொரு கணமும் எதிரொலித்தது. அது மட்டுமின்றி அவளை கண் மூட விடாமலும் செய்தது. போதிய உறக்கமின்மை பெரும் வியாதியாய் அவள் தொட்ட அத்தனையும் சொதப்பியது.
அவள் புலன்கள் பழக்கப்பட்ட சாலையில் வண்டியை செலுத்த, பக்கத்தில் இருந்து கேட்ட ஹாரன் சத்தத்தில் சுதாரித்து சாலையில் கவனத்தை திருப்பினாள்.
வானம் இருளை பெரும் போர்வையாய் போர்த்தியிருக்க, பாதையெங்கும் பளிச்சிட்ட விளக்குகளை பார்க்கவே அத்தனை ரம்மியமாய் இருந்தது. தினம் காணும் காட்சிதான். ஆனால், இன்றைக்கு சூழலில், காற்றில் கூடியிருந்த குளுமை சட்டென அவள் மனத்தை குளிர்வித்திருந்தது.
மழை வருவதற்கான அத்தனை அறிகுறிகளும் காற்றில் இருந்தது. மிதமான மண் வாசனை மெல்ல மேல் எழ மெலிதான தூறலை அவள் மேனி உணர்ந்து சிலிர்த்தது.
அன்று காலையிலும் இதே காலநிலை தான் நிலவியது.
“நான் ட்ராப் பண்ணவா வானதி?” அவளிடம் அதிசயமாக இளங்கோ கேட்டதற்கு அது கூட காரணமாக இருக்கலாம். காலநிலை அவர்கள் காதலில் பெரும் பங்கு வகித்திருந்தது. ஆம், இருந்தது தான். தற்போதில்லை என்பது தான் எல்லா தடுமாற்றத்துக்கும் முதல் அடி.
குடைக்கு அவசியமற்ற தூறல்தான். ஆகையால், அவன் கண்களை கூட சந்திக்காமல், “வேணாம். அப்புறம் ஈவ்னிங் வரும் போது கஷ்டமாகிடும். நான் தேடும் போதுதான் அவசரத்துக்கு ஒரு ஆட்டோவும் கிடைக்காது. பஸ் நினைச்சாலே பயந்து வருது” என்று அவள் படபடக்க, ஒற்றைத் தோள் குலுக்கல் தான் காரில் ஏறி விட்டான் இளங்கோ.
“ப்பா பை” மகள் கத்தவும், மின்னல் வேகத்தில் காரில் இருந்து இறங்கி, அவளுக்கு முன்னே மழையில் நனைந்து விடாமல் இருக்க, விண்வெளி வீரன் போல உடையணிந்து அமர்ந்திருந்த மகளின் கன்னத்தை ஈரப்படுத்தி, “பை செல்லக் குட்டி” என்று கையசைத்தான் இளங்கோ.
அவ்வளவு நேரமும் “நேரமாகிறது” என்று பதறியவன், இப்போது மகளையே பார்த்தபடி நிற்க, அவள் தான் முதலில் வாகனத்தை நகர்த்தினாள். அவளுக்கு, “பை” என்ன? ஒரு பார்வை கூட கிடைக்கவில்லை. ஹம்ம், யாருக்குத் தெரியும்? பார்த்திருப்பான், ஆள் முழுங்கி. பார்த்தது போல காட்டிக் கொள்ள மாட்டான். அதுவும் அவளிடம், ம்ஹும் வாய்ப்பேயில்லை.
ஒரு பார்வை பார்த்தால் வாரி சுருட்டிக் கொள்வாள் என்று பயம். “போயேன்” என்று மனதில் உதாசீனம் செய்துக் கொண்டு வாகனத்தை விரட்டினாள்.
இப்போதும் அவன் நினைவே அவளை விரட்டியது. அதில் அதிசயம் ஒன்றுமில்லை. அவர்கள் முதல் முறையாக சந்தித்ததும் இது போன்றதொரு மாலை வேளையில்தான்.
இளங்கோவின் பார்வை சுற்றுப்புறம் மொத்தத்தையும் அலசியது. அவளைத் தவிர!
முதல் மழைத்துளி மண்ணில் விழுந்ததும் தான் நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அந்தப் பார்வைக்கு அர்த்தம் ஒன்றுமில்லை. வெகு சாதாரணமான பார்வைதான். பாவையும் அதில் விழுந்து விடவில்லை. ஆனாலும், அவள் மனதில் இருந்து அந்த நிகழ்வு அத்தனை எளிதில் அழியாது.
அம்மா வீடு நெருங்கியதும் வாகனத்தின் வேகத்தை குறைத்து நிறுத்தினாள். மிகவும் தாமதமாகி விட்டது. தினமும் நடப்பதுதான். இனி எப்போது வீடு சென்று சமைப்பது? மனதில் நொடியில் உதித்த எண்ணத்தை பின்னுக்கு தள்ளி விட்டு உள்ளே ஓடினாள்.
அழைப்பு மணிக்கு அவசியம் இன்றி அவளின் வண்டிச் சத்தத்தை கேட்டு கதவை திறந்தார் அவளின் அம்மா பாக்கியம்.
அவர் தோளில் சாய்ந்து உறங்கி கொண்டிருந்த மகள் நட்சத்திராவை கண்டதும், “சாரிம்மா. பாப்பா தூங்கிட்டாளா?” குற்ற உணர்ச்சியுடன் கேட்டுக் கொண்டே மகளுக்காக கை நீட்டினாள்.
“பின்ன தூங்காம, மணி என்னாச்சு தெரியுமா?” எரிச்சலும் இல்லாத, கோபமும் இல்லாத ஒரு கடின குரலில் அம்மா கேட்க, “நல்ல டிராபிக் மா. இல்லனா நான் ஏன் லேட் பண்ண போறேன்?” என்று சமாளிக்க பார்த்தாள் வானதி.
“அதானே? நீ ஏன் லேட்டாக்க போற?” என்று நக்கலாக கேட்டுக் கொண்டே நடந்த அம்மாவின் வால் பிடித்தாள்.
“ஏதாவது சாப்பிட்டாளா மா? வீட்டுக்கு போய் தூங்குறவளை எழுப்பி சாப்பிட வைக்க நான் போராடணும். அதுக்குத்தான் கேட்டேன்” சடாரென்று அவளைத் திரும்பிப் பார்த்தார் அம்மா.
“அம்மா, இப்பத்தான் வர்றீங்களா?” அறைக்குள் இருந்து வெளியில் வந்த நேத்ரன் கேட்க, அவளுக்கு ‘நீயுமா டா?’ என்றிருந்தது.
“ம்ம், நீ போய் உன் பேக் எடுத்துட்டு வா, போகலாம். பாப்பா வேற தூங்கிட்டா பாரு” என்று அவள் சொல்லவும் உள்ளே ஓடினான் நேத்ரன்.
பாக்கியம் மகளிடம் பெரிய பையை நீட்டினார். ஒரு கையில் மகளும் மறுகையில் கைப்பையும் வைத்திருந்தவள், ஒரு நொடி தயங்கி பின் கை நீட்ட, “நீ நட. நான் எடுத்துட்டு வர்றேன்” என்று முன்னே சென்றார்.
“குட்டி பொண்ணுக்கு இட்லி ஊட்டிட்டேன். நீ அவகிட்ட போராடாம, போய் படுக்கையில் விடு போதும்” அம்மா சொன்னதும் மனதில் பரவிய நிம்மதியுடன், “சரிம்மா” என்றாள்.
“உன் பொண்ணு வயசுல நீயெல்லாம் என் மார்ல முட்டி முட்டி பால் குடிச்சிட்டு திரிஞ்ச. இப்போ பாரு, உன் மக சாப்பிட்டாளா இல்லையான்னு…”
“ரெண்டரை வயசு வரைக்குமா மா? கதை விடாதீங்க.” அவள் கத்தவும், “கதை விடுறேனா? உனக்கு சந்தேகமா இருந்தா ஊருக்கு போகும் போது உங்கத்தை கிட்ட கேளு நல்லா பொழுதுக்கும் உன்னை கிண்டல் பண்ணி கதைச் சொல்லி சிரிப்பா. வேப்பிலை அரைச்சு பூசியிருக்கேன் தெரியுமா? உங்க அம்மாச்சி கரிய பவளம் வாங்கிட்டு வந்து குழப்பி கொடுத்து போடச் சொன்னாங்க. ஆனா, அப்பவும் நீ நிறுத்தலையே” என்று அம்மா சொல்லவும், சிரிப்பும் கோபமும் சேர்ந்து வர, “இப்போ அந்தக் கதையெல்லாம் ரொம்ப முக்கியமா மா?” என்று கத்தினாள் வானதி.
பாக்கியம் ஏதோ சொல்ல வருவதற்குள் நேத்ரன் வந்து விட, “பார்த்து போங்க” என்று முடித்து விட்டார்.
“தப்பித்தேன்” என்ற பெருமூச்சுடன் பிள்ளைகளை சரியாக அமர வைத்து வாகனத்தை நகர்த்தினாள். அதிலும் மெல்ல உறக்கம் கலைந்து சிணுங்கிக் கொண்டே வந்த மகளை சமாளித்து வண்டி ஓட்டுவதற்குள் அவள் உடலில் மிச்ச சொச்சம் இருந்த சக்தியும் மொத்தமாக வடிந்திருந்தது.
அவர்களின் அபார்ட்மென்ட் வளாகத்திற்குள் நுழைந்து வண்டியை நிறுத்தி, மகளை கையில் அள்ளும் போது தன் உடலே அவளுக்கு சுமையாக தெரிந்தது. அதனால் எல்லாம் ஓய்ந்து அமர்ந்து விட முடியாது.
மகளை சோஃபாவில் ஒருக்களித்து படுக்க வைத்து விட்டு, ஓடிச் சென்று அவளுக்கு படுக்கையை சீர்படுத்தி, மீண்டும் வந்து மகளை தூக்கிச் சென்று படுக்கையில் விட மெல்லிய சிணுங்கலுடன் உறங்கிப் போனாள் குழந்தை.
ஜன்னல்களை நன்றாக மூடி திரைச்சீலைகளை இழுத்து விட்டு, காற்றாடியை மிதவேகத்தில் சுழல விட்டு கூடத்திற்கு செல்ல, புத்தகப் பையை விரித்து அதற்கு நடுவில் அமர்ந்திருந்தான் மகன்.
“இன்னும் ஹோம்வொர்க் முடிக்கலையா நீ?” அதைக் கேட்கும் போதே அவளுக்கு ஆயாசமாக வந்தது.
“மேத்ஸ் சொல்லித் தர்றீங்களா மா? மத்த ஹோம் வொர்க் எல்லாம் பண்ணிட்டேன்” முகத்தை நிமிர்த்தி கெஞ்சலாக மகன் கேட்க, அவளுக்கு உருகிப் போனது. சோர்வை வலுக்கட்டாயமாக உதறி, மகனுக்கு அருகில் சென்றாள்.
“அம்மா டின்னர் பண்ணிட்டு வந்திடவா தம்பி? நீ அதுவரைக்கும் டீவி பாரேன்” சொல்லிக் கொண்டே ரிமோட்டை தேடி எடுத்து அவள் நீட்ட, “ஓகே மா” என்று பிரகாசமாக சொன்னவன், “அம்மாச்சி சாப்பிட சொன்னாங்க மா. அப்போ பசிக்கல. அதான் வேணாம்னு சொல்லிட்டேன்” என்றான்.
அம்மாவை வேலை செய்ய வைக்கிறோம் என்ற வருத்தத்தில் சொன்னானா? இல்லை செய்தியாக சொன்னானா? என்று யோசிக்க நேரம் இன்மையால், “இட்ஸ் ஓகே. அம்மா தோசை ஊத்தி எடுத்துட்டு வர்றேன்” என்று சொல்லி, மகனின் தலைக் கோதி விட்டு உள்ளே சென்றாள் வானதி.