அவளுக்கு அத்தியாவசியமாக ஒரு கோப்பை காஃபி தேவைப்பட்டது. அதில்லாமல் அவளால் இயங்க முடியாது. குளிர்சாதன பெட்டியைத் திறந்து பாலை எடுத்து காய்ச்சத் தொடங்கினாள்.
“அம்மா, இந்த பேகில் இருக்கிறதை எடுத்து வைக்கவா?” என்றபடி பையை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்தான் நேத்ரன்.
“என் செல்லமே. அம்மா பார்த்துக்கிறேன் டா. நீ போய் டீவி பாரு” என்றவள், பொங்கிய பாலை அணைத்து காப்பி கலந்துக் கொண்டாள்.
“ஓகே மா” என்று நேத்ரன் ஹாலிற்கு செல்ல, சட்னிக்கு தேவையான பொருட்களை எடுத்து சமையல் மேடை மேல் வைத்து விட்டு, அங்கிருந்த பையை பிரித்தாள்.
மகனின் பள்ளி சீருடை, மகளின் அழுக்கு உடைகள்தான் இருக்கும் என்று தெரிந்தே அதைப் பிரித்தாள். ஆனால், உடைகள் ஒரு ஓரமாக இருக்க, அதற்கு அடியில் ஒரு பையில் அடுக்கப்பட்ட பாத்திரங்களில் இரவு உணவு இருந்தது. அம்மா ஒன்றுமே சொல்லவில்லையே என்று ஒருநொடி பொங்கி பின் குளிர்ந்து புன்னகையுடன் அதைப் பிரித்தாள்.
பாசிப்பருப்பு சாம்பார், கெட்டியாய் தேங்காய் சட்னி கூடவே ஒரு சிறிய பாத்திரத்தில் இளங்கோவிற்கு பிடித்த மிளகாய் சட்னி இருந்தது.
இரவு சமையல் வேலை இல்லை என்றதும் ஒரு பெரிய சுமை இறங்கிய சந்தோஷத்தில் கத்த வேண்டும் போலிருக்க, மெலிதாக பாடல் வரிகளை முணுமுணுப்பதோடு நிறுத்திக் கொண்டாள்.
மகனுக்கு தோசையும், சாம்பாரும் கொடுத்து அவன் உண்டதும், பாலுடன் கணிதத்தை கற்றுக் கொடுத்து முடிக்கையில் நேரம் ஒன்பது முப்பதை நெருங்கிக் கொண்டிருந்தது.
“அப்பா வர்ற வரைக்கும் டீவி பார்க்கவா மா?” பூனைக் குட்டியாய் அவளை உரசியபடியே மகன் கேட்க, அப்போது தான் கணவனிடம் இருந்து இன்னும் ஒரு குறுஞ்செய்தி கூட வரவில்லை என்பதை உணர்ந்தாள் வானதி.
அவளாக அழைக்கவும் தயக்கமாக இருந்தது. இந்நேரம் வீடு வந்துக் கொண்டிருப்பான்.
“டிரைவிங்ல இருக்கேன்” அழுத்தமான குரலில் சொல்வான்.
“வீட்டுக்குத் தான் வர்றேன். டிரைவிங்கில் இருக்கும் போது டிஸ்டர்ப் பண்ணாத”
அவன் சொல்லாமல் விடுவதையும் அவளே புரிந்துக் கொள்வாள்.
“அம்மா” மகன் மீண்டும் அழைக்க, “அப்பா இன்னைக்கு லேட்டா வருவேன்னு சொன்னாங்கடா. நீ போய் தூங்கு. மார்னிங் அப்பா கூட டென்னிஸ் ஆடுவ. ஓகே?” சமாதானப்படுத்தும் குரலில் அவள் கேட்க, அவளையே ஆவலாய் பார்த்தவன், “ஓகே மா. குட் நைட்” என்று எழுந்துச் சென்றான்.
நேத்ரன் நேராக ஓய்வறை சென்றான். பல் துலக்கி விட்டு படுக்கைக்கு சென்ற மகனைப் பார்க்கையில் இளங்கோவின் அப்பட்ட சாயல். எல்லாவற்றிலும் நேர்த்தி, ஒழுங்கு கடைப்பிடிக்கும் இளங்கோ, அதை மகனுக்கும் கற்றுக் கொடுத்திருந்தான்.
மகன் படுக்கவும், அவனுக்கு போர்வையை போர்த்தி விட்டு அவனுக்கு பக்கத்தில் பேசியபடி படுத்திருந்தாள்.
“நீங்க சாப்பிடலம்மா?” மகனின் கேள்வியில் மனம் இளகியது.
“காஃபி குடிச்சேன் இல்ல? அம்மாக்கு பசிக்கல. நீ தூங்கு” அவள் சொல்லவும் புன்னகைத்து அவளை நெருங்கிப் படுத்தான்.
அன்று பள்ளியில் நடந்ததை சொல்லிக் கொண்டே வந்தவன் குரல் மெல்ல தேய, “ஈவ்னிங் அம்மாச்சி என்ன சாப்பிட கொடுத்தாங்க? பாப்பா என்ன சேட்டை பண்ணா?” என்று வானதி கேட்கவும், குழறலாய் பதில் சொல்லிக் கொண்டே வந்தவனை ஒரு கட்டத்தில் எதுவும் கேட்கவில்லை அவள். மகன் உறங்கியதும் எழுந்து, மகளை ஒரு பார்வை பார்த்து விட்டு, கதவை லேசாக சாற்றி விட்டு வெளியில் வந்தாள்.
அவள் உணவை முடித்து, சமையல் அறையை சுத்தப்படுத்தி விட்டு நிமிரும் போது இரவு பத்து மணி என்றது கடிகாரம்.
உணவு மேஜையில் மெத்தென்று நான்கு தோசைகளை சூடு குறையாமல் இருக்கும் விதமாக பாத்திரத்தில் எடுத்து வைத்து, அதனோடு சட்னி, சாம்பாரையும் தனி தனிப் பாத்திரங்களில் மூடி வைத்தாள்.
காலையில் ஐந்து மணிக்கு எழுந்த அவள் கண்கள் உறக்கத்திற்கு கெஞ்ச, வாஷிங் மெஷினில் மறுநாள் காலை துவைக்க வேண்டிய துணிகளை எடுத்துப் போட்டு விட்டு, உடல் கழுவி உறங்கச் சென்றாள்.
கணவன் வரும் வரை காத்திருக்கலாம் தான். காத்திருந்திருக்கிறாள் தான். ஆனால், கடந்த சில வருடங்களாக அது இயலாமல் போனது. மகள் வந்தப் பிறகு அவள் உடலில் பல மாற்றங்கள். முன்னைப் போல நள்ளிரவு வரை விழித்திருப்பது எல்லாம் இப்போது அவளால் நினைத்துப் பார்க்க கூட முடியவில்லை.
அவளுடல் உடனே உதறல் மோடுக்கு சென்று விடுகையில் அவள் என்ன செய்வாள்?
இளங்கோவின் முகத்தைப் பார்த்துக் கொண்டே உறங்கிய நாள்கள் முன் ஜென்மம் போலவே தோன்றியது.
“எனக்கு டையர்ட்டா இருக்கு. நான் தூங்கப் போறேன்” என்று அவனிடம் சொல்லி விட்டு உறங்கச் சென்ற நாள்கள் கடந்து சில வருடங்கள் ஆகி விட்டது.
அவனோடு இழைந்து, குழைந்து, ஒன்றியது எல்லாம், அவளுக்கு சுத்தமாக மறந்தே போய் விட்டது.
மெதுவாக புரண்டு மகளை அணைத்துக் கொண்டு படுத்தாள், அசதி அவளை அழுத்த அடுத்த சில நிமிடங்களில் உறங்கிப் போனாள்.
மனைவியை எதற்கும் எழுப்பி தொந்திரவு செய்யும் ரகமல்ல இளங்கோ என்பதால், அன்றிரவு அவன் எப்போது வீடு வந்தான் என்று அவளுக்குத் தெரியாது.
“அப்பா.. அப்பா..” என்ற பிள்ளைகளின் ஆனந்தக் கூச்சலில் தான் அதிகாலையில் எழுந்தாள் அவள்.
கண்களில் இன்னமும் உறக்கம் மிச்சமிருக்க, எதிரே இருந்த கடிகாரத்தை பார்த்தாள். ஆறு என்றது.
ஆறு தானா? பிள்ளைகள் அதற்குள் எழுந்து விட்டார்களா? விடுமுறை நாளில் மட்டும் எப்படி இவர்களால் விரைவாக எழுந்து கொள்ள முடிகிறது. விளங்கிக் கொள்ள முடியாத விசித்திரம் அது. பள்ளி நாட்களில் நூறு முறை அறைக்கும், அடுப்படிக்கும், பாத்ரூமுக்குமாக நடந்தபடி, “நேத்ரன் ஸ்கூலுக்கு டைமாச்சு எழுந்திரு. மணி ஏழு டா தம்பி. இன்னும் பாத்ரூம் போகலையா நீ?” என்று கத்தி, மகன் பேரை ஏலம் போட்டு விடுவாள். அந்த சத்தத்தில் மகள் எழுந்து கண்ணை கசக்கிக் கொண்டு அன்றைய நாளுக்கான அழுகையை தொடங்குவாள்.
இளங்கோவிற்கு முக்கியமான அலுவலக வேலை இல்லையென்றால் மகளை தூக்கிக் கொள்வான். இல்லையேல் மனைவியை பார்த்து ஒரு முறைப்பு வரும்.
“ம்ம், ஆபீஸ் கால்ல இருக்கேன்” அவன் சொல்லாமலே புரிந்துக் கொள்வாள்.
இன்றைக்கு இத்தனை விரைவாக பிள்ளைகள் எழுந்து அப்பாவுடன் விளையாடிக் கொண்டிருக்க, அவளும் எழுந்து ஓய்வறை சென்றாள்.
ஹாலில் அமர்ந்து நேத்ரனுடன் செஸ் ஆடிக் கொண்டிருந்தான் இளங்கோ. அப்பாவின் தோளில் தொங்கிக் கொண்டிருந்தாள் நட்சத்திரா. கணவனுக்கு காஃபி, பிள்ளைகளுக்கு பால் எடுத்துக் கொண்டு அவள் வர, காஃபியை வாங்கிக் கொண்டு புன்னகைத்தான்.
அப்பாடா, போதும் என்று அதற்கே நினைத்துக் கொண்டவள் எதுவும் கேட்கவில்லை.
அன்றைய தினம் இளங்கோ வீட்டில் இருந்ததே அவளுக்கு ஆச்சரியம் தான். அதிலும் வேலை எதுவும் செய்யாமல் பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருந்தது கல் வெட்டில் பொரிக்கப்பட வேண்டிய நிகழ்வு.
மகளுக்கு பருப்பு சோறு, இளங்கோ வீட்டில் இருப்பதால் அவர்களுக்கு மீன் குழம்பு என்று விடுமுறை தினத்திற்கே உரிய விதமாக ஸ்பெஷலாகத் தான் சமைத்தாள்.
மதியம் குழந்தைகளோடு அவன் உறங்க, முதலில் விழித்த மகள் பார்க் போக வேண்டும் என்று ஆரம்பிக்க, “அப்பா பீச் போலாம் ப்பா” என்று தொடர்ந்தான் நேத்ரன்.
“கீழ இருக்க பார்க் போய் விளையாடலாம். அப்புறம் அப்பா ஐஸ்கிரீம் வாங்கித் தர்றேன்” என்ற கணவனின் குரலில் வானதி சற்றே துணுக்குற, “நம்ம பார்க் போர் ப்பா. டெய்லி அங்க தானே போறோம்?” என்று மறுப்பை முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு பலமாக மகன் தெரிவிக்க, “அப்பா நாளைக்கு ஜப்பான் போறேன் நேத்ரன். இன்னைக்கு பீச் போய்ட்டு வந்தா..” கணவனின் சாக்கு போக்கை விட, அந்த ஜப்பானில் அதிர்ந்து அவனைப் பார்த்தாள்.
இளங்கோ அந்நேரம் அவளைத்தான் திரும்பிப் பார்த்தான். அது அவளுக்கான செய்தி.
அவள் மனதில் ஏதேதோ கேள்விகள். ஆனால், அனைத்தையும் துடைத்து விட்டு வெறுமை படர்ந்ததை அவளால் துல்லியமாக உணர முடிந்தது.