அதிகாலையில் வானதியின் அலைபேசியில் இருந்து அலாரம் ஒலியெழுப்ப இளங்கோவின் தூக்கம் கலைந்தது. அவன் அசையவும், அவனது அணைப்பில் இருந்த வானதியும் அசைய, அவளின் தூக்கம் கலைந்து விடாமல் இருக்க வேகமாக அலாரத்தை நிறுத்தினான்.
ஜப்பானில் இருந்து சிங்கப்பூர் வந்து, அங்கிருந்து சென்னை வந்திருந்தான். பல மணி நேர விமான பயணம் உறக்கத்திலேயே கழிந்திருந்தாலும், அவனுடலுக்கு அந்த ஓய்வு போதவில்லை. வீடு வந்த பின்னரும் சில மணி நேரங்களே உறங்கியிருந்தாலும் உடலில் இருந்த சோர்வு மனதை அடையவில்லை. மனைவியின் அருகாமையில் ஆழ்ந்த அமைதியையும், ஆர்ப்பரிக்கும் மகிழ்ச்சியையும் மனதார உணர்ந்தான் இளங்கோ.
வீடடைதல் என்பது பிரியமானவர்களை சேர்வதுதானே!
இரவு தொடங்கிய மழை, இப்பொழுதும் தொடர்ந்து கொண்டிருக்க அவர்களின் அறை இன்னமும் இருளில் மூழ்கியிருந்தது. விடிவிளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மனைவியின் முகம் பார்த்தான். தேர்ந்த ஓவியனின் தூரிகையால் கலைத்துப் போடப்பட்ட ஓவியம் போலிருந்தாள் வானதி. இளங்கோ மெல்ல குனிந்து மனைவியின் கன்னத்தில் முத்தமிட்டு விலகினான். அவன் போர்வையை விலக்கியதும், குளிர் தாக்க உடலை குறுக்கினாள் வானதி. ஆனாலும், உறக்கம் கலையவில்லை.
இளங்கோ சத்தமில்லாமல் குளித்து வெளியில் சென்றான். இரவு அம்மாவிடம் பேசி, பிள்ளைகளின் அறைக்குச் சென்று அவர்களைப் பார்த்து விட்டுதான் படுக்கைக்கு வந்தான். இப்போது முதல் வேலையாக அவர்களின் அறைக்குச் சென்றான். நேத்ரனின் தலை முடியை செல்லமாய் கலைத்து விட்டான்.
அதற்கே கண் விழித்து, “அப்பா..” என்று கத்தினான் அவன்.
“எப்போப்பா வந்தீங்க? குட் மார்னிங் ப்பா” என்று அவன் உற்சாக குரல் எழுப்ப, “மூனு மணிக்கு வந்தேன். உனக்கு தூக்கம் வந்தா தூங்கு. பாப்பா, தாத்தா எல்லாம் தூங்குறாங்க பார்” என்றான் இளங்கோ குரலை தழைத்து. அப்பாவை பார்த்த மகிழ்ச்சியில் நேத்ரனின் உறக்கம் எல்லாம் ஓடியே போய் விட்டது.
“எனக்கு தூக்கம் போச்சுப்பா” என்று நகர்ந்து அவன் படுக்கை ஓரத்திற்கு வர, மகனை தூக்கி கீழிறக்கி விட்டான் இளங்கோ. கொஞ்சம் தயங்கி பின் அப்பாவை இடையோடு சேர்த்து அணைத்து, “உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன் ப்பா” என்றான் நேத்ரன்.
“நான் ப்ரஷ் பண்ணிட்டு வர்றேன் ப்பா” என்று அவன் ஓய்வறை செல்லவும், மகளின் படுக்கையில் அமர்ந்தான் இளங்கோ. உதடு பிரிய உறக்கத்தில் இருந்த மகளை அள்ளி அணைக்க கைகள் பரபரக்க, கட்டுப்படுத்திக் கொண்டு எழுந்தான். அந்த அறையின் கதவை லேசாக மூடி விட்டு வெளியில் வந்தான்.
அந்த அதிகாலையில் வீட்டில் வானதியின் குரல் கேட்காதது, எதையோ தொலைத்தது போலிருந்தது. திருமணமான இத்தனை வருடங்களில் என்ன மாற்றம் நிகழ்ந்தாலும் மாறாத ஒன்று அதுதானே. அவன் கண் விழிக்கையில் மனைவியின் முகம் காண கிடைக்கா விட்டாலும் அவளின் குரல் கேட்டு விடும்.
“நேத்ரன், நட்சத்திரா, தம்பி, பாப்பா, என்னங்க…” என்ற அவளின் அழைப்பும், அன்பும், அதிகாரமுமான கட்டளைகளும்தான் அவர்களின் காலையை இத்தனை வருடங்களாக நிறைத்திருக்கிறது. வீட்டின் அமைதி அவன் மனதிலும் எதிரொலிக்க, சமையல் அறைக்குச் சென்றான்.
குளிர்சாதனப் பெட்டியை திறந்து அவன் பாலை எடுக்கையில் நேத்ரனும் வந்து விட்டான்.
“நானும் ஹெல்ப் பண்ணவாப்பா?”
“சுயர் தம்பி. வா, முதல்ல காஃபி போட்டு குடிப்போம்.”
“உங்களைப் பார்க்கதான்ப்பா. பாப்பா கூட உங்களை மிஸ் பண்ணா தெரியுமா? நீங்க வீடியோ கால் பேசிட்டு வைப்பீங்க இல்ல? அப்போ உங்களை கேட்டு அழுவா. அம்மாதான் சமாதானம் பண்ணுவாங்க” சட்டென மகன் பெரிதாக வளர்ந்து விட்ட பிரம்மை இளங்கோவிற்கு. அவன் வெளியூர், வெளிநாடு சென்று திரும்பும் போதெல்லாம் நிகழ்வதுதான் இது. ஆனாலும், இம்முறை ஏதோ ஒரு மாற்றம் அவனுள்.
வேலை, வேலை என்று ஓடியவனை இழுத்து நிறுத்தியிருந்தாள் வானதி. இப்போது அனைத்தையும் கூர்ந்து நிதானமாக பார்க்கத் தொடங்கியிருந்தான் அவன்.
“வாசல்ல இருக்க பையில பால் பாக்கெட் போட்டு இருக்காங்களா பார்த்து எடுத்துட்டு வா தம்பி” இளங்கோ சொல்லவும் அதைச் செய்ய ஓடினான்.
அடுப்பில் பால் பொங்குவதற்காக காத்திருந்த இளங்கோவின் மனதில் மனைவியின் எண்ணங்கள் பொங்கி வழிந்தது.
நேசமும், நெருக்கமும், காதலும், கூடலும் ஒரு காலை வேளையை எத்துணை அழகாய் மாற்றி விடுகிறது. மெலிதாக மழையின் ஓசை வேறு கேட்க அவனுக்கு அக்கணம் கவிதை போலிருந்தது.
இரவில் அவன் அணைப்பில் உருகிய மனைவியும் கவிதை போலதான் இருந்தாள்.
கடந்த சில வருடங்களாக காதலும், கூடலும் கடமைக்கென்று ஆகியிருந்தது.
“பாப்பா இப்போதான் தூங்கினா. முழிச்சுட போறா. தம்பி எழுந்துக்கப் போறான்.” என்று காதலுக்கு தடை விதிக்கவும் பலத் தடைகள். பிள்ளைகள் உறங்கும் வீட்டில் தம்பதிகளின் தாம்பத்தியம் திக் திக் நிமிடங்களாகவே கழிகிறது. அதிலும் இருவரும் வேலைக்கு செல்பவர்கள் என்றால், நிலைமை இன்னும் மோசம்தான்.
வானதி நேரடியாக அவனை மறுத்ததே கிடையாது. மறைமுக மறுப்பு அவர்களின் உறவை கவலைக் கிடமாக்கியிருந்தது. நடுத்தர வயதில் முதல் விரிசல் அங்கிருந்துதானே தொடங்குகிறது. பெண் தன் அன்றாட நடவடிக்கைகளில், சின்ன சின்ன செய்கையிலும், அக்கறையிலும் அன்பை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறாள். ஆணுக்கு அணைப்பின் வழியாகவே அன்பை வெளிப்படுத்தத் தெரிகிறது. ஆகையால் தான் மனைவி நெருக்கத்தை மறுத்தால், சந்தேகிக்கிறான், சண்டையிடுறான். சமயங்களில் தூர விலகிப் போகிறான்.
ஆனால், தூரம்தான் அவர்களை நெருங்க வைத்தது.
வானதி எப்படி இருந்தாலும் அவன் கண்களுக்கு அழகுதான். அதைப் பெரிதாக வாய் விட்டு அடிக்கடி இளங்கோ சொன்னதில்லைதான். அவ்விரவு அதை அன்பால் வெளிப்படுத்தினான்.
காதலும், மோகமும் மழையாய் மனதை நனைக்க இணக்கமும், இசைவுமான ஓர் கூடல். சிணுங்கி, சிலிர்த்து, சிரிப்புடன் அவன் கையில் சிறைப்பட்ட மனைவியின் முகம் பார்த்து, “ஐ மிஸ்டு யூ வானதி” என்றான் இளங்கோ. சடுதியில் சிரிப்பு மறைய கண்களை சிமிட்டி சிமிட்டி அவனைப் பார்த்தாள் வானதி. கண்களில் மெலிதாய் ஈரம் படர்ந்தது.
“ஏய் வானதி, என்னாச்சு?” பதட்டமாக கேட்டான். “நத்திங்” என்றாள். அந்த ஒன்றுமில்லை நிச்சயம் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்களை கொண்டிருந்தது.
“நிஜமா?”
“ம்ம், என்ன சொன்னீங்க? எனக்கு சரியா கேட்கல”
“வானதி, ஐ மிஸ்டு யூ…” அவனின் மிச்ச வார்த்தைகளை, அவன் உதட்டோடு சேர்த்து விழுங்கினாள் வானதி.
அந்த வார்த்தைகளை அவன் சொல்ல காத்திருந்து, ஏமாந்து, கவலைக் கொண்டிருந்தவளின் காதல் அந்த நொடி கரையை உடைத்து வெளிப்பட்டது. வானதி முத்தத்தின் வழி காதல் மொழிய, அவனோ மோகம் படித்தான், படிப்பித்தான்.
திருமணமான புதிதில் கூச்சமும், வெட்கமும், காதலும் முன்னிலை வகிக்க நிகழும் தாம்பத்தியத்தைக் காட்டிலும், இன்றைக்கு அவர்களுக்கு நடுவில் இருந்த புரிதலும், அன்பும் அவர்களுக்குள் அப்படியொரு மாயத்தை நிகழ்த்தியது. இருவருக்கும் அவர்கள் புதிதல்ல. உடலைக் கடந்து, உள்ளத்தைத் தொட்ட காதல் கணங்கள் அத்தனை நிறைவாய் இருந்தது. அவர்களின் காதல் வாழ்வின் இரண்டாம் அத்தியாயத்தை பெருங்காதலுடன் தொடங்கி வைத்தான் இளங்கோ.
வானதி அயர்ந்து விழி மூடும் போது அவளை இழுத்து அணைத்தவனின் மனதில் அத்தனை நிறைவு.
நிறைவென்பது நம்மை நேசிப்பவர்களின் அருகாமைதானே!
“அப்பா, இந்தாங்க பால்” நேத்ரன் பாலை நீட்டவும், அடுப்பில் இருந்த பால் பொங்கவும் சரியாக இருந்தது.
சட்டென தலையை உலுக்கி மகன் கையில் இருந்து பாலை வாங்கினான் இளங்கோ.
“குடுங்கப்பா நான் ஃப்ரிட்ஜ்ல வைக்கிறேன்” என்று நேத்ரன் பாலை வாங்கி குளிர்சாதனப் பெட்டியில் வைத்தான்.
“என்ன பண்ணனும் சொல்லுங்கப்பா” என்று அவன் கேட்கவும், “காஃபி போட டிகாஷன் ரெடி பண்ணணும் ஃபர்ஸ்ட். அதுக்கு இந்த ஃபில்டர்ல காஃபி பொடி போடணும். அதுக்கு மேல சுடு தண்ணி ஊத்தினா அஞ்சு நிமிஷத்துல டிகாஷன் கீழ இருக்க இந்த குட்டி பாத்திரத்தில் கலெக்ட்டாகிடும். அப்புறம்..” என்று இளங்கோ விளக்க, “இதெல்லாம் எனக்குத் தெரியும்ப்பா. அம்மா, நிறைய தடவை எங்கிட்ட சொல்லிட்டே காஃபி போடுவாங்க. அப்போ பார்த்திருக்கேன்” என்று இடையிட்டு சொன்னான் நேத்ரன்.
“பாரேன். உனக்கு தெரியும்னு அப்பாவுக்குத்தான் தெரியலை” இளங்கோ விளையாட்டாக சொன்னாலும், நிச்சயம் அதில் குற்ற உணர்ச்சி இருந்தது.
மகனிடம் பேசிக் கொண்டே சிறிய பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து கொதிக்க வைத்தான்.
“காலங்காத்தால அப்பாவும் பிள்ளையும் அடுப்படியில என்ன பண்றீங்க? உங்கம்மா எங்கடா?” சமையல் அறை வாயிலில் வந்து நின்று தாமரை கேட்க, “காஃபி போடுறோம் பாட்டி” என்றான் நேத்ரன்.
“ஏப்பா இளங்கோ, காஃபி வேணும்னா என்னை எழுப்ப வேண்டியதுதானே? ம்ம், விடிய காலையிலதான் வீட்டுக்கு வந்த, நல்லா படுத்து தூங்கறதை விட்டுட்டு காஃபி போடுறேன்னு நிக்கிற” என்று புலம்பிக் கொண்டே மகனிடம் வந்தார்.
“உனக்கு காஃபி போட்டு கொடுக்குறதை விட்டுட்டு என்ன பண்ணிட்டு இருக்கா அவ? உங்கம்மா எங்கடா?” மகனையும், பேரனையும் மாறிப் மாறி பார்த்து அவர் கேட்க, “வானதி தூங்குறா மா” என்று அம்மாவிற்கு அமைதியாக பதில் சொன்னான் இளங்கோ.
“விடிஞ்சு எவ்ளோ நேரமாச்சு. இன்னுமா தூங்குறா? புருஷன், புள்ளைக்கு காஃபி, டிஃபன் கொடுக்கணும்னு அக்கறை கூட இல்லாம..” என்று அவர் குரல் உயர்த்த, “ம்மா, நீங்க போய் உட்காருங்க. நான் காஃபி போடுறேன்” என்றான் இளங்கோ.
“அட இருடா தம்பி. நான் போடுறேன்” என்று சமையல் மேடையின் முன்னே வந்து நின்றார் அவர்.
“நேத்ரா, நீ போய் பாப்பா என்ன பண்றான்னு பாரு” என்று அவர்களை வேடிக்கை பார்த்து நின்றருந்த மகனை அங்கிருந்து அனுப்பி விட்டான் இளங்கோ.
தாமரை ஒவ்வொரு அலமாரியாக திறந்து எதையோ தேட, “என்னம்மா தேடுறீங்க?” என்று கேட்டான் இளங்கோ.
“இந்த காஃபி பொடியை எதுல வச்சுருக்கான்னு தெரியலையே. அதை கை நீட்டினதும் எடுக்கிற மாதிரி பக்கத்துல வச்சு தொலைச்சா என்ன இவ?” என்று அவர் கத்தவும், “இங்க இருக்கு பாரும்மா. சக்கரை பக்கத்துல காஃபி பொடி, டீ தூள் ரெண்டும் இருக்குப் பாருங்க” என்று கை நீட்டி எடுத்தான் இளங்கோ.
“இங்கதான் இருக்கா? இப்படி கொடு”
“பத்து நாளா இந்த வீட்லதானே மா இருக்கீங்க? ஒரு காஃபி பொடி எங்க இருக்குன்னு கூட தெரியலையா உங்களுக்கு?” இளங்கோ கேட்கவும் முழித்தார் தாமரை.
“எல்லாத்தையும் அவளே பார்த்துக்கிட்டா. அதான் எனக்குத் தெரியல. இதுல அவங்கம்மா வேற வந்து நாட்டாமை பண்ணிட்டு இருந்தா, நான் எப்படி சமையல் கட்டு பக்கம் வர? நீயே சொல்லு?”
“உன் மகன் வீடுதானே மா இது? என்னம்மா பேசுற நீ? அவங்கம்மா ஹெல்ப் பண்ண வந்தா, அவங்களையும் குறை சொல்லிட்டு இருக்க? வானதி கேட்டா என்ன நினைப்பா?”
“இப்போ அந்த மகாராணி என்ன நினைப்பான்னு நான் பயப்படனுமாக்கும்..” இளங்கோ அம்மாவை பார்த்த பார்வையில் பிடித்தமின்மை அப்பட்டமாக வெளிப்பட்டது.
“தாமரை..” கூடத்தில் இருந்து சந்திரசேகர் அழைக்க, “நீ போம்மா. நான் காஃபி போட்டு எடுத்துட்டு வர்றேன்” என்ற இளங்கோ, ஃபில்டரில் காஃபி பொடி போட்டு கொதித்த நீரை ஊற்றினான்.
“இல்ல இளங்கோ..”
“அப்பா கூப்பிடுறார். போங்கம்மா” கோபம் மெல்ல துளிர் விட அவரின் முகம் பார்க்காமல் பதில் சொன்னான்.
“இன்னும் எத்தனை வருஷமானாலும் உங்கம்மா மனசார என்னை மருமகளா ஏத்துக்கவே மாட்டாங்க” என்று வானதி பல முறை வருத்தத்துடன் சொன்னது அவனுக்கு நினைவிற்கு வந்தது.
“இந்த பொண்ணை எனக்கு பிடிச்சிருக்கும்மா. அவங்க வீட்ல பேசுங்க.” என்று வானதியின் புகைப்படத்தை அவன் முதன்முதலாய் காண்பித்த நிமிடம் என்ன முகபாவத்தை தாமரை காட்டினாரோ, அதையே இப்போது வரையிலும் கடைப்பிடிக்கிறார்.
மகனின் காதல் அவருக்கு பிடிக்கவில்லை. அதனால், அந்தக் காதலியையும் பிடிக்கவில்லை. அவளை முழுமையாக வெறுத்தார் அவர்.
வெறுப்பு வேடமில்லாதது! அரிதாரங்கள் தேவைப்படாதது.
தங்களின் மூத்த மகனின் திருமணம் குறித்து அவருக்கு பல கனவுகள் இருந்தது. அது நிறைவேறாமல் போன ஏமாற்றம் மொத்தமும் அதற்கு காரணமான வானதியின் மேல் கோபமாக திரும்பியிருந்தது. அவரின் கோபமும், வெறுப்பும் என்றுமே அழியாது என்பதை வீம்பாக பல முறை நிரூபித்து காண்பித்து விட்டார். அந்த வகையில் அம்மாவின் மேல் இளங்கோவிற்கு நிறைய வருத்தம் இருந்தது. ஆனால், வெளிக்காட்டிக் கொண்டதில்லை அவன். இன்றும் அவனை அறியாமல்தான் குரலை உயர்த்தியிருந்தான்.
அவன் வாழ்கையின் மூன்றாம் படியில் இருக்கிறான். வானதி, நேத்ரன், நட்சத்திராதான் இனி அவன் உலகம் என அவனை பெற்றவர் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டான்.
“இளங்கோ..” சந்திரசேகர் குரல் கொடுக்க, காஃபி கோப்பைகளுடன் கூடத்தை நோக்கி நடந்தான். அவனுக்கு பக்கவாட்டில் இருந்த படுக்கையறை கதவை திறந்து கொண்டு வெளியே வந்த வானதி, “ஐயோ சிஎஃப்ஓ, என்னதிது?” என்று சிரிப்புடன் அவனைப் பார்த்து கேட்டாள்.
“நான் வந்து காஃபி போட்டு இருப்பேன் இல்ல? அதுக்குள்ள நீங்க போடணுமா? அதிசயமா? அதான் வெளில மழை பெய்யுது போல” கடைசி வாக்கியத்தை கணவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்லி, அவன் கையில் இருந்த காஃபி கோப்பைகளை வாங்கிக் கொண்டாள்.
“நீ அதிசயமா.. அசந்து தூங்கின. அதான் நான் எழுப்பல” அதிசயமா என்பதில் அவனும் அழுத்தம் கொடுத்துச் சொல்ல, முறைத்தாள் வானதி.
இளங்கோவின் உதடுகள் இறுக்கமாக இருந்தாலும், கண்கள் சிரிக்க, தானும் புன்னகைத்தாள் வானதி.