வானதி காஞ்சிபுரத்தை அடையும் போது காலை ஒன்பதரை மணியாகி இருந்தது.
பத்து மணிக்கு மருத்துவரை சந்தித்து, அவர் குறிப்பிட்ட ஈசிஜி, எக்ஸ்ரே என பரிசோதனைகள் அனைத்தையும் அவர்கள் எடுத்து முடிக்கையில் மதியமாகி இருந்தது. மருத்துவமனை வளாகத்தில் மதிய உணவருந்தி விட்டு மீண்டும் மருத்துவரை சந்திக்க காத்திருந்தார்கள்.
காலையில் மருத்துவமனையை அடைந்ததும் புள்ளி மானாய் எல்லா பக்கமும் துள்ளி ஓடிக் கொண்டேயிருந்தாள் நட்சத்திரா.
ஆனால், அதிகாலையில் எழுந்து, நீண்ட பயணம் மேற்கொண்டதினால் பின் காலைப் பொழுதில் வானதியை தூக்கச் சொல்லி, கைகளை விரித்து கெஞ்சினாள் குழந்தை. கங்காரு போல மகளை தூக்கிக் கொண்டே சுற்றினாள் வானதி.
ஒருபக்கம் நட்சத்திரா உறக்கத்திற்கு சிணுங்கிக் கொண்டேயிருக்க, மறுபக்கம் தாமரை அவளை கேள்விகளால் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தார்.
அது போதாதென்று அருள் செல்வனும், மதியழகியும் அப்பாவின் நலன் குறித்து மருத்துவர் என்ன சொன்னார் என்று விசாரித்து, அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டேயிருந்தார்கள்.
“பிளட் டெஸ்ட், ஈசிஜி எல்லாம் எடுக்க சொன்னாங்க. இங்கேயே எடுத்துட்டோம். இப்போ டாக்டர் பார்க்க வெயிட்டிங். அவரைப் பார்த்திட்டு உங்களுக்கு அப்டேட் பண்றேன்” என்று இருவருக்கும் பதில் அனுப்பி வைத்தாள்.
“நான் மீட்டிங்ல இருப்பேன். கால்ஸ் எடுக்க முடியாது. நீ மறக்காம எனக்கு அப்டேட்ஸ் வாட்ஸ்அப் பண்ணிடு” என்று இளங்கோவும் அவளிடம் சொல்லியிருக்க, அவனுக்கும் தகவல் அனுப்பிக் கொண்டேயிருந்தாள் வானதி.
மருத்துவமனை காத்திருப்போர் அறையில் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து, மகளையும் மடியில் வைத்தபடி அவள் அசதியில் கண் மூட, அந்நேரம் அவர்களை மருத்துவர் அழைத்தார்.
சந்திரசேகரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் என்றார் அவர். அவர்கள் கவலைப்படும் படி எதுவும் இல்லையென்றாலும், கவனமாக இருக்க மீண்டும் மீண்டும் அறிவுறுத்தினார். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி பழக்க, வழக்கங்கள் கடைப்பிடிக்க வலியுறுத்தினார்.
தனக்கு இருந்த சந்தேகங்களையும் கேட்டு பதில் தெரிந்துக் கொண்ட வானதி, அவருக்கு நன்றி உரைத்து பெரியவர்களுடன் வெளியில் வந்தாள்.
அப்போதே மாலையாகி விட்டது. மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை வானதி வாங்கி வர, “அந்த மாத்திரையை இப்படி கொடு. எனக்கு டாக்டர் சொன்னதை இன்னொரு முறை சொல்லு. எந்த மாத்திரையை எப்போ போடணும்னு சொல்லிட்டீன்னா, நான் பார்த்துக் கொடுத்துக்கறேன்” என்று சொன்னார் தாமரை. வானதி அவரை கேள்வியுடன் ஏறிட்டாள்.
“என்ன பார்க்குற? அதான் உங்க மாமா நல்லாருக்கார்னு டாக்டர் சொல்லிட்டார் இல்ல? அப்புறம் உங்க வீட்டுக்கு வந்து நாங்க என்ன பண்றது? எங்களை இப்படியே செய்யாறு கூட்டிட்டு போய் எங்க வீட்ல விட்டுட்டு, நீ சென்னை போ” என்று தாமரை சொல்லவும், அவரை அதிர்ச்சியாக பார்த்தாள் வானதி.
‘உங்க வீடு, எங்க வீடு’ என்று அவர் பிரித்துப் பேசியது முன்னெப்போதையும் விட அதிகமாக முரண்டியது. ஆனாலும், “இல்லத்த, இன்னும் கொஞ்ச நாளைக்கு நம்ம வீட்ல இருந்துட்டு அப்புறம் செய்யாறு போங்க” என்றாள்.
“அதெல்லாம் சரி வராது. எனக்கு அங்க வீட்டுக்குள்ளயே இருக்கறது போட்டு அடைச்சு வச்ச மாதிரி இருக்குது. செய்யாறுன்னா எங்க இஷ்டம் போல இருந்துப்போம். உங்களுக்கும் தொல்லை கிடையாது”
“நம்ம பில்டிங் கீழேயே பார்க் இருக்குத்த. நீங்க வாக்கிங் போகலாம். நான் நேத்ரனை டெய்லி ஈவ்னிங் கூட்டிட்டு போக சொல்றேன். காலைல மாமா கூட நடங்க. மாடியில தோட்டம் இருக்கு. அங்க கொஞ்ச நேரம் இருந்தா..”
“எங்க இருந்தாலும், என் வீடு போல வராது” தாமரை பட்டென சொல்ல, வானதி மௌனமானாள்.
“அது சரி. அப்புறம் அமெரிக்கா, மலேசியால மட்டும் எப்படி இருந்தியாம்? அதுவும் உன் வீடு இல்லதானே?” ஓய்வறை சென்றிருந்த சந்திரசேகர் வந்து அவர்களின் பேச்சில் இடைப்புக, பெண்கள் இருவரும் சட்டென திரும்பி அவரைப் பார்த்தார்கள்.
“நான் என்ன பேசிட்டு இருக்கேன்னு தெரியாம..” தாமரை குரலை உயர்த்தும் போதே சந்திரசேகர் கோபமாக ஓரடி முன்னே வைக்க, தாமரை பட்டென பின் வாங்கி சொல்ல வந்ததை முடிக்காமல் நிறுத்தினார்.
“அன்னைக்கு எனக்கு ஒன்னுன்னதும் உடனே மருமகளுக்கு தானே போன் பண்ண நீ? அவளும் ஓடி வந்து நமக்கு ஊழியம் பார்த்து நல்லாக்கி விட்டதும் எங்க வீட்டுக்கு போறேன்னு குதிக்கிற. உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க தாமர நீ?” அவர் மனைவியை கடிந்து கொள்ள,
“மாமா, வீட்டுக்குப் போய் பேசிக்கலாம். பிளீஸ்” வானதி இருவருக்கும் நடுவில் வந்து நின்று சொல்ல, “சரிம்மா. இவளை கொண்டு போய் அவ ஆசைப்படி செய்யாறுல விட்டுட்டு நாம சென்னை போவோம்” என்று தீர்க்கமாக சொன்னார் சந்திரசேகர். தாமரையின் தீப் பார்வையில் இருந்து தப்பிக்க, தன் தோளில் சிணுங்கிய மகளை தட்டிக் கொடுத்தாள் வானதி.
“உங்க செக்அப் முடிச்சுட்டு நேரா வீட்டுக்கு வரச் சொன்னார் மாமா அவர். பிளீஸ், வீட்டுக்கு போகலாம் வாங்க” இருவரையும் மாறி மாறிப் பார்த்து அவள் சொல்ல, தாமரை கணவரை முறைத்துக் கொண்டு இறுக்கமாக நின்றார்.
“எல்லாம் உங்க அத்தையால வந்தது. ஒரு இடம் போனோமா, வேலையை முடிச்சு வீடு வந்தோமான்னு கிடையாது இவளுக்கு. நம்ம நிம்மதியை கெடுக்குற மாதிரி ஏதாவது சொல்லிட்டே இருக்கணும்.”
“மாமா, பிளீஸ். ஹாஸ்பிட்டல் இது. வாங்க வீட்டுக்கு போகலாம்.” என்றவள், “அத்த பிளீஸ், வாங்க” என்றாள் தாமரையின் கைப் பிடித்து.
“நான் இப்போ என்ன சொல்லிட்டேன். நம்ம வீட்டுக்கு போவோம்னு சொன்னேன். அது குத்தமா? இவங்க ரெண்டு பேரும் வேலைக்கு போறவங்க, நாம ஏன் அவங்களுக்கு தொல்லையா இருக்கணும்னு தானே நம்ம வீட்டுக்குப் போகலாம்னு சொல்றேன். நீங்க அது புரியாம பேசிட்டு..”
“இந்தா தாமர, ஏய்..” அந்தக் குரலில் உறக்கம் கலைந்து சிணுங்கத் தொடங்கினாள் நட்சத்திரா.
“ஒன்னுமில்ல பாப்பா, தூங்கு” மகளின் முதுகில் தட்டி சமாதானம் செய்தாள் வானதி. மருத்துவமனையில் அவர்களை கடந்த ஓரிருவர் திரும்பிப் பார்க்க சங்கடமாக உணர்ந்தாள் வானதி.
அவளின் தோளில் இருந்த பேத்தி சிணுங்குவதைப் பார்த்து, “பாவம் குழந்தை தூங்கி தூங்கி விழறா. நீயும் இவ்வளவு நேரமா குழந்தையை தூக்கி வச்சுட்டு நிக்கிற. நானும் அறிவில்லாம ஹாஸ்பிட்டல்ல நின்னு கத்திட்டு இருக்கேன். சாரி மா. வீட்டுக்கு கிளம்பலாம், நட மா” என்றார் சந்திரசேகர்.
“நீ எங்க கூட வர்றதா இருந்தா வா. இல்லனா இப்படியே பஸ் பிடிச்சு ஊருக்கு போ” என்று மனைவியை பார்த்து அவர் சொல்ல, முறைத்தார் தாமரை.
“அத்தை பிளீஸ், வாங்க” என்ற வானதி, “ஒருவேளை ஊர்ல முக்கியமான பொருள் எதுவும் எடுக்க வேண்டி இருந்தா சொல்லுங்க. போய் எடுத்துட்டு வந்திடலாம்” என்றாள்.
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லம்மா” என்று சந்திரசேகர் சொல்ல, அதே நேரத்தில், “வீட்ல பத்திரம் எல்லாம் எங்க இருக்குனு பார்த்து எடுத்துட்டு வரலாம்னு நினைச்சேன்” என்றார் தாமரை.
“நான் இப்போதைக்கு சாக மாட்டேன்னு சொல்லிட்டார் டாக்டர். அதுனால, உன் ரெண்டு பிள்ளைங்களுக்கும் நீ பொறுமையா சொத்து பிரிச்சு கொடுக்கலாம். அதை பிரிச்சு கொடுக்காம நான் சாக..”
“மாமா பிளீஸ். என்ன பேசுறீங்க?” வானதிக்கு சட்டென கண்கள் கலங்கி விட்டது. மேலே பேச முடியாமல் தொண்டையடைத்தது.
“நான் வேலையை விட்டுட்டேன் அத்த. ரெண்டு மாசம் ஆஃபீஸ் போற மாதிரி இருக்கும். அப்புறம் வீட்ல தான் இருப்பேன். அவரோ, நானோ நீங்க நினைக்கிற மாதிரி உங்களை தொல்லையா எல்லாம் நினைக்கவே மாட்டோம்” வானதி சொல்லவும் தாமரையின் முகத்தில் நிழலாய் அதிர்ச்சி வந்துப் போனது.
“வேலையை விட்டுட்டியா?” அவர் முணுமுணுப்பாக கேட்டது அவள் காதில் விழவில்லை.
“நான் போய் காரை எடுக்கறேன். நீங்க ஒரு முடிவுக்கு வந்துட்டு என்ன பண்ணலாம்னு சொல்லுங்க” என்று மகளுடன் முன்னே நடந்து விட்டாள் வானதி. அவளின் வேகத்தில் நட்சத்திரா விழித்து அழத் தொடங்கி விட்டாள். மகளை ஒரு கையிலும், மருத்துவனை கோப்புகள், மாத்திரைகள், தண்ணீர், பழங்கள் இருந்த பையை ஒரு கையிலும் பிடித்தபடி நடந்த வானதி உணர்வு கலவையாக இருந்தாள். கோபம், எரிச்சல், பயம், அதனுடன் சோர்வும் சேர்ந்து அவளை அழுத்தியது.
காரின் கதவை திறந்து பையை உள்ளே வைத்து விட்டு, இளங்கோவை அழைத்தாள். இரண்டு முறை அழைப்பை எடுக்கவில்லை அவன். மூன்றாம் முறை அழைப்பு பாதியில் துண்டிக்கப்பட்டு, “இன் மிடில் ஆப் அ மீட்டிங்” என்று குறுஞ்செய்தி வந்து விழுந்தது.
“இவர் வேற…” என்று முணுமுணுத்து ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து வெளியிட்டாள். அக்கணம் யாரிடமாவது மனதில் உள்ளதை கொட்டினால் மன அழுத்தம் குறையும் என நினைத்தாள். ஆனால், அம்மாவை அழைக்கவும் யோசனையாக இருந்தது. அவளின் முடிவைதான் அவரும் பிரதிபலிப்பார் என்றாலும், ஏனோ அழைக்கத் தோன்றவில்லை.
எல்லாவற்றுக்கும் அம்மாவை சார்ந்தே இருக்கிறோம். எல்லாவற்றையும் அம்மா மேலேயே இறக்கி வைக்கிறோம் என்ற குற்ற உணர்வில் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்.
“ஏன் பாப்பா? இதுவே நம்ம தாத்தாவா இருந்தா என்ன பண்ணியிருப்போம்? அவரை தனியா விட மாட்டோம் தானே? அப்போ அப்பா தாத்தாவையும் நாம தானே பார்க்கணும்? அவரும் நம்ம தாத்தா தானே?” என்று மகளிடம் கேட்டாள் அவள்.
உதடு பிதுக்கி அழுதபடி, “தாத்தா..” என்றாள் நட்சத்திரா. அவளின் கோலி குண்டு கண்கள் சுழன்று தாத்தாவை தேடியது. அவரை காணவில்லை என்றதும், “அப்பா…” என்று அழத் தொடங்கினாள் அவள்.
“நீ வேற ஆரம்பிக்காத செல்லக் குட்டி” என்று மகளின் நெற்றியில் முட்டி முத்தமிட்டாள். அவளோ அழுகையை தொடர, காரில் இருந்த பையை எடுத்தாள். சிறிய சில்வர் பாத்திரத்தில் அம்மா செய்து கொடுத்திருந்த கடலை உருண்டை இருக்க, அதில் ஒன்றை எடுத்து மகளிடம் கொடுத்தாள். அதை கையில் வாங்கி வைத்துக் கொண்டு மீண்டும் ராகம் பாடினாள் நட்சத்திரா.
காரினுள் அமர்ந்து, இருக்கையை பின்னுக்குத் தள்ளிவிட்டு மகளையும் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு சாய்ந்தாள், “இப்போ வீட்டுக்கு போயிடலாம். செல்லக் குட்டி அழக் கூடாது” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே காரின் பின் கதவை திறந்து உள்ளே ஏறினார்கள் மாமனாரும், மாமியாரும்.
“ரொம்ப நேரமாகிடுச்சு இல்லம்மா? எனக்கு வேற சரியா கார் ஓட்டத் தெரியாது. இல்லனா நான் ஓட்டிட்டு வருவேன்” என்று சந்திரசேகர் சொல்ல, “மூனு மணி நேரம் தானே மாமா? நானே ஓட்டுறேன். ஏழு மணிக்கு சென்னை போயிடலாம்.” என்ற வானதி மகளை பக்கத்து இருக்கைக்கு மாற்றினாள்.
“நட்சத்திரா குட்டி தாத்தாகிட்ட வாங்க. காலைல வந்த மாதிரி நீங்க பாட்டி மடியில படுத்துட்டு வெளில வேடிக்கை பார்க்கலாம். என்ன?” சந்திரசேகர் பேத்தியை பின்னே அழைத்துக் கொண்டார்.
வானதி காரை இயக்கப் போக, “ப்ச் இரு. காஃபி சிந்திடப் போகுது” என்று கத்தினார் தாமரை. சட்டென வானதி திரும்ப அவள் முன் ஒரு காகித கோப்பை நீட்டப்பட்டது.
“முதல்ல இந்த காஃபியை குடிச்சுட்டு வடையை சாப்பிடு. அப்புறமா கார் ஓட்டுவ” என்றார் தாமரை. அப்போதும் அவர் முகம் உணர்வுகளற்று கடினமாகவே இருக்க, வானதி எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொண்டாள்.
“உங்களுக்கு அத்த?”
“நாங்க இப்பத்தானே குடிச்சோம். எங்களுக்கு வாங்கிக் கொடுத்துட்டு நீ ஒன்னும் சாப்பிட்ட மாதிரி தெரியல. அதான் உனக்கு வாங்கிட்டு வந்தேன்” அவரின் பார்வை வெளியில் இருக்க பதில் மட்டும் வந்தது. வானதி மேற்கொண்டு எதுவும் பேசாமல், காஃபியை மட்டும் குடித்து வடையை மகளிடம் கொடுத்து விட்டு, காரை நகர்த்தினாள்.
“நான் ஒன்னு சொன்னா நீ கோபப்பட கூடாது வானதி. நமக்கு மரியாதை கொடுக்காத எந்த உறவுக்கும் மதிப்பு கொடுத்து நம்ம நிம்மதியை கெடுத்துக்கக் கூடாது நாம..” என்று சந்திரசேகர் திடீரென்று சொல்ல,
காரின் வேகத்தை குறைத்து, “மாமா..” என்றாள் கேள்வியாக.
“நாங்க, உன் மாமனார், மாமியாரா இருந்தாலும் எங்களை பார்த்துக்க வேண்டிய கட்டாயம் உனக்கு இல்லம்மா. கடமைன்னு சொன்னா, எங்க பிள்ளைங்க மூனு பேருக்கும் தானே அது இருக்கு? நீங்க மட்டும் ஏன் செய்யணும்? எங்க பொண்ணோட ரெண்டு பிரசவத்துக்கும் உங்க அத்தை போய்தான் பார்த்தா. ரெண்டு தடவையும் குழந்தைக்கு முழுசா ஒரு வயசு ஆகுற வரைக்கும் அங்கதான் இருந்தோம். சின்ன பையன் முதல் குழந்தைக்கும் நாங்க போனோம்…”
“மாமா, அது உங்க மூத்த மகன் வீடு. கடமை, கட்டாயம் அப்படியெல்லாம் நாங்க யோசிக்கல.”
“யோசிக்கணும் மா நீங்க. அதெல்லாம் கண்டிப்பா யோசிக்கணும். இதே உங்க அத்தை உனக்கு தேவைப்பட்ட நேரம் உன்னைப் பார்த்தாளா சொல்லு?”
“எனக்கு பக்கத்துலயே எங்கம்மா இருக்காங்களே மாமா. அவங்க பார்த்துப்பாங்கன்னு தான்..” சொல்ல வந்ததை சொல்லி முடிக்காமல் வாய் மூடிக் கொண்டாள் வானதி. தாமரை எதற்கும் வாய் திறக்கவில்லை. பேத்தியை மடியில் உறங்க வைத்து வெளியில் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
“உங்கம்மா பக்கத்துல இருந்தாங்க சரி. ஆனா, உங்கத்தை இத்தனை வருஷமா தூரமா இருந்தது தான் பிரச்சினை இல்லாம இருந்தது. அது அவளுக்கும் தெரியும்” என்று மனைவியை பார்த்து அவர் சொல்ல, திரும்பி முறைத்தார் தாமரை.
அவர் சொல்வதில் உண்மை இருக்க, மாமியாரும் அமைதியாக அதை ஆமோதிக்க வானதி மேலே பேச்சை வளர்க்காமல் கவனத்தை சாலையில் மட்டும் பதித்தாள்.
காஞ்சிபுரத்தை பின்னுக்குத் தள்ளி சென்னை நெடுஞ்சாலையில் அவர்கள் பயணிக்கையில் மகளை அழைத்து விட்டார் பாக்கியம். காரை ஓரமாக நிறுத்தி இறங்கிப் பேசினாள் வானதி.