“நேத்ரன் வீட்டுக்கு வந்துட்டான். அதைச் சொல்லதான் கூப்பிட்டேன்” என்று அவர் சொல்ல, “நாங்களும் வந்துட்டே இருக்கோம் மா” என்றாள் வானதி. அப்போதே இளங்கோவிற்கும் தகவல் தெரிவித்து விட்டாள்.
“கால் பண்ணிட்டே இருந்த வானதி? என்னாச்சு? சொல்லு. நான் இப்போ ஃப்ரீ தான்.” இளங்கோ கேட்க, “ஒன்னுமில்ல.” என்றாள்.
“டாக்டர் பயப்பட ஒன்னுமில்லைன்னு சொன்னார் தானே? அப்புறம்..” என்று அவன் படபடக்க,
“அச்சோ. மாமாவுக்கு ஒன்னும் இல்லங்க. இது வேற. நான் வீட்டுக்கு வந்து சொல்றேன். நீங்க டென்ஷன் ஆகுற அளவுக்கு ஒன்னும் இல்ல” என்றாள் அழுத்தமாக. ஆனாலும், அவன் நம்பவில்லை.
“டென்ஷனாக ஒன்னும் இல்லனா இப்பவே சொல்லேன்.”
“கடவுளே. அத்தை செய்யாறு போகணும்னு சொன்னாங்க. அவங்களுக்கு அங்க வீட்ல இருந்து ஏதோ திங்ஸ் எடுக்கணுமாம். இன்னொரு நாள் போகலாம்னு சொல்லிட்டேன். போதுமா?” வானதி எரிச்சலை மறைத்துக் கேட்க, அதைக் கண்டு கொண்டான் இளங்கோ.
“ம்ம், ஓகே. ஓகே. சரிதான். இன்னொரு நாள் போய்க்கலாம். இப்போ போய்ட்டு வந்தா ரொம்ப அலைச்சலா ஆகிடும்.” என்றான்.
“அதான் நானும் சொன்னேன்” பெருமூச்சை மறைத்து வானதி சொல்ல, “ஓகே. பார்த்து டிரைவ் பண்ணு. வீட்டுக்கு வந்துட்டு கால் பண்ணு” என்று சொல்லி வைத்தான் இளங்கோ.
கார் கண்ணாடிகள் சற்றே இறக்கி விடப்படிருக்க, காற்று முகத்தில் மோதவும் பின்னிருக்கையில் இருந்த மூவரும் உறங்கி விட்டார்கள்.
காரில் இருந்த அமைதி அவள் வாழ்வில் இனி இருக்குமா என்ற சந்தேகம் வானதியின் மனதில் மெல்ல துளிர் விட்டது.
நட்சத்திரா பிறந்த பிறகு அவளும், இளங்கோவும் இப்போதுதான் நெருங்கி வந்திருக்கிறார்கள். பல வருட தயக்கத்தை உதறி, நிறைய மனப் போராட்டங்களுக்கு பிறகு, வேலையை விட்டுவிட்டு இந்த வயதில் படிப்பை முடிக்கும் முடிவெடுத்திருக்கிறாள் அவள். ஆனால், தற்போதைய சூழலில் அது சாத்தியப்படுமா என்ற சந்தேகம் அவளுக்கு வர, காலையில் இளங்கோ சொன்னது மனதில் எதிரொலித்தது.
“நீ என்னைக்கும் வானதி இளங்கோதான். கண்டிப்பா ஆடிட்டர் வானதியா அடுத்த வருஷம் இருப்ப.” உறக்கத்தின் மிச்சமிருந்த கரகரத்த குரலில் கணவன் சொன்னதை நினைத்துப் புன்னகைத்தாள்.
காரின் அமைதியை கலைக்க இசையை துணைக்கு அழைத்தாள். அவர்களுக்குப் பிடித்த தொன்னூறுகளின் பாடல் ஒலிக்க மனம் மெல்ல இயல்புக்கு திரும்ப நிதானமானாள் வானதி.
அவள் கணித்தது போலவே சென்னையை அடையும் பொழுது மணி ஏழாகி இருந்தது. முதலில் அம்மா வீடு சென்றாள்.
அவர்களை வரவேற்ற பாக்கியம், மகளிடம் இருந்து பேத்தியை வாங்கிக் கொண்டு சம்பந்திகளை கவனித்தார். வானதி நேராக அம்மாவின் அறைக்குச் சென்று படுத்து விட்டாள்.
“அம்மா..” என்று அவளுக்காக தண்ணீர் எடுத்து வந்து படுக்கைக்கு பக்கத்தில் நின்ற மகனை வாஞ்சையுடன் பார்த்தாள் வானதி.
“தூக்கம் வருதாம்மா? நான் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” நேத்ரன் கேட்கவும், அவன் கன்னம் கிள்ளி முத்தம் வைத்தாள்.
“அப்படியே உங்கப்பா மாதிரியே வராத டா. கொஞ்சம் என்னைப் போலவும் இரு” என்றவளை மகன் புதிராக பார்க்க, “அம்மாவுக்கு தூக்கம் வரல. கொஞ்சம் டையர்டா இருக்கு. அவ்ளோதான்” என்று அவள் சொல்லவும், “அம்மாச்சி டீ போடுறாங்க. உங்களுக்கு வாங்கிட்டு வரவா மா?” என்று கேட்டான் நேத்ரன். அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே கையில் காஃபி கோப்பையுடன் உள்ளே வந்தாள் ஹரிணி.
“அத்த காஃபி..” என்று அவள் ராகம் இழுக்க, “தேங்க்யூ தங்கம்” படுக்கையில் இருந்து எழுந்து வாங்கிக் கொண்டாள்.
“தேங்க்யூ வேணாம் த்த. எனக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க? அதைக் குடுங்க” என்று ஹரிணி அவளை உரசியபடி கேட்க, “அத்த ஹாஸ்பிடல் போய்ட்டு வர்றேன் ஹரிணி. தாத்தாவை செக் அப் கூட்டிட்டு போனேன். உனக்கு என்ன வேணும்னு சொல்லு நாளைக்கு வாங்கித் தர்றேன்” என்று ஹரிணியை பக்கத்தில் அமர்த்திச் சொன்னாள்.
“இந்த வீக் எண்ட் என்னை மால் கூட்டிட்டு போங்க. மாமாவும் வரணும்” என்று அத்தையிடம் நிபந்தனை இட்டாள் ஹரிணி.
“உங்க மாமாதானே? கண்டிப்பா வருவார். நீ உங்கப்பா போன்ல இருந்து மாமாவுக்கு கால் பண்ணி உன் கண்டிஷனை சொல்லு. ஓகே?” என்று அவள் சொல்ல, புன்னகையுடன், “ஓகே அத்த” என்றாள் ஹரிணி.
காஃபியை குடித்து முடித்து பிள்ளைகளுடன் வெளியில் வந்தாள். அவர்கள் இருவருக்கும் படிக்க உதவினாள்.
நட்சத்திரா கூடத்தில் அமர்ந்து தாத்தாவிடம் கதை பேசிக் கொண்டிருக்க, தாமரையை தேடினாள் வானதி. அவர் குரல் சமையல் அறையில் இருந்து வர, வேகமாக எழுந்து அங்கேச் சென்றாள்.
பாக்கியம் இரவு சமையலில் ஈடுபட்டிருக்க, அவருடன் இயல்பாக நின்று பேசிக் கொண்டிருந்தார் தாமரை. அவர்களை ஆச்சரியத்துடன் பார்த்தாள் வானதி.
“வானதி, வா. டிஃபன் எடுத்து வை.” என்று மகளை அழைத்தார் பாக்கியம்.
பிள்ளைகளுக்கு உணவை முதலில் கொடுத்து, அத்தை, மாமாவிற்கும் பரிமாறினாள். அவர்கள் சாப்பிட்டு கொண்டிருக்கும் போதே அடுத்தடுத்து அர்ச்சனா மற்றும் மாதவன் வேலை முடித்து வீடு வந்தார்கள்.
அவளை தனியாக பிடித்து, “எனக்கு உன்கிட்ட பேசணும். இப்ப இல்ல. இந்த வீக் எண்ட் வெளில போகலாம். ஓகே?” என்று அர்ச்சனா கேட்க, “என்ன விஷயம் அண்ணி? என்னால அவ்ளோ நாள் எல்லாம் வெயிட் பண்ண முடியாது. இப்போ சொல்லுங்க” என்று அவளிடம் போட்டு வாங்க முயற்சித்தாள் வானதி.
“எனக்கு ரெண்டு டாப்ஸ் வாங்கித் தரேன்னு சொல்லி இருக்க, ஞாபகம் இருக்கா? ஷாப்பிங் போய் அது வாங்கிட்டு அப்புறம் பேசுவோம். சரியா?” என்ற அர்ச்சனாவிடம் மேலே எப்படி அழுத்திக் கேட்பதென்று அவளுக்குத் தெரியவில்லை. ஆக, “ஓகே” என்று சம்மதித்தாள்.
அண்ணா, அண்ணியுடன் அமர்ந்து இரவு உணவை அவள் முடிக்க, இளங்கோவுக்கான உணவை அவளிடம் கொடுத்தார் பாக்கியம்.
“வீட்ல மாவு இருக்கும்மா. நான் தோசை ஊத்தி கொடுத்துப்பேன்.”
“ம்ம், செய் செய். அது கூட செய்யலன்னா எப்படி? அம்மா சாம்பார், சட்னி மட்டும்தான் இதுல வச்சுருக்கேன். நீதான் தோசை ஊத்தி கொடுக்கணும்” என்று அவளிடம் கண்டிப்பாக சொல்லி, குனிந்து பேத்தியை தூக்கிக் கொண்டார் பாக்கியம்.
“ம்மா, எனக்காக நாலு இட்லி வைக்க முடியாதா உன்னால? நான் போய் இனி தோசை ஊத்தணுமா? கார் ஓட்டினது கால் எல்லாம் வலிக்குது மா” என்று அம்மாவிடம் சலுகையாக குறை படித்தாள்.
“திமிர் பேசுற இந்த வாய் வலிக்குதா பாரு உனக்கு” என்று பாக்கியம் கிண்டல் சிரிப்புடன் சொல்ல, பையை பொத்தென்று கீழே வைத்து மகளை அம்மாவிடம் இருந்து தூக்கிக் கொண்டாள் வானதி.
“அண்ணா இந்த பையை கார் வரை எடுத்துட்டு வாயேன்” என்று உள்ளே பார்த்து அவள் குரல் கொடுக்க, “என்னை வேலை வாங்குறது பத்தாம, என் பிள்ளையையும் வேலை வாங்கு நீ” என்று மகளை போலியாக கடிந்தார் பாக்கியம்.
“போம்மா. உன்கிட்ட பேச எனக்கு தெம்பில்ல” என்று வானதி நடக்க, “வானு இட்லி வச்சுருக்கேன். மிச்சமானா காலைல உப்புமா பண்ணிக்கோ.” என்றார் பாக்கியம். சட்டென முகம் மலர, புன்னகையுடன் அம்மாவை முறைத்தாள் வானதி.
“நேரமாச்சு கிளம்பு” என்று அவளை அனுப்பி வைத்தார் பாக்கியம். அவர்கள் வீடு வரும் போது இரவு ஒன்பதரை மணியாகியிருந்தது.
அத்தை, மாமா இருவரும் அசதியில் படுத்து விட, பிள்ளைகளை உறங்க வைத்து, இளங்கோவை அழைப்பதா, வேண்டாமா என அவள் யோசித்துக் கொண்டிருக்க, “ஒரு மணி நேரத்துல வீட்ல இருப்பேன். எனக்காக வெயிட் பண்ணாம தூங்கு” என்று குறுஞ்செய்தி அனுப்பினான் இளங்கோ. அவனுக்கு பதில் அனுப்பி விட்டு, தானும் படுத்து விட்டாள் வானதி.
இளங்கோ சத்தமில்லாமல் கதவை திறந்து வீட்டுக்குள் நுழைந்தான். எப்போதும் போல தங்களின் படுக்கை அறை கதவை அவன் வேகமாகத் திறக்க, அந்த சத்தத்தில் கண் விழித்து விட்டாள் வானதி.
“சாப்பிடுறீங்களா? மணி என்ன?” கண்ணை கசக்கியபடி அவள் கேட்க, “நீ தூங்கு” அவளை நெருங்கி வந்து சன்ன குரலில் சொன்னான்.
மனைவியை அவர்களின் அறையில் பார்த்ததுமே அவன் அகம் மலர்ந்து விட அது அவன் முகத்திலும் பிரதிபலித்தது.
மனைவியின் பக்கத்தில் மகள் படுத்திருக்க, மனைவியின் மேல் படர்ந்து, கை நீட்டி மகளின் கன்னம் வருடி முத்தம் கொடுத்தான்.
“ஹலோ, உங்க பொண்ணை கொஞ்ச என்னை ஏன் இடிக்கறீங்க?” வானதி கண்ணை சுருக்கி கடுப்புடன் கேட்க, சட்டையின் பொத்தான்களை கழட்டி விட்டபடி, “இதுக்கு பேர் உங்க ஊர்ல இடிக்கிறதா?” என்று மேலும் மனைவியை உரசி இழைந்தான் இளங்கோ.
அந்த விடிவிளக்கின் வெளிச்சத்திலும் மனைவியின் முகம் அவனுக்கு தெளிவாக தெரிந்தது. கீழுதடு கடித்து அவள் புன்னகையை மறைக்க, அவள் எதிர்பாரா நேரம் குனிந்து இதழை முத்தமிட்டு விடுவித்தான்.
“நான் குளிச்சுட்டு வர்றேன்.” என்று அவன் விலக, “பாப்பாவை அவ பெட்ல போய் விட்டுட்டு வாங்க” என்று ரகசியம் பேசினாள் வானதி.
இளங்கோ அவளை ஆச்சரியமாக பார்க்க, “என்ன?” என்று கேட்டாள்.
ஒன்றுமில்லை என்று தலையசைத்து மகளை அலுங்காமல் தூக்கிக் கொண்டு போய் அவளின் படுக்கையில் விட்டு வந்தான். அவன் குளித்து வருவதற்குள் சூடாக தோசை வார்த்திருந்தாள் வானதி. இட்லி மறுநாள் காலை உப்புமாவாக மாற குளிர்சாதனப் பெட்டியில் காத்திருந்தது.
“ஆஃபீஸ்ல சாப்பிடணும் நினைச்சேன். மறந்துட்டேன்.” என்றபடி உண்டான் இளங்கோ. பல மாதங்களுக்கு பிறகு உணவு அவனுக்காக காத்திருக்காமல், மனைவியோடு அமர்ந்து உண்பதை, மிகவும் ரசித்தான் அவன்.
“அங்க ஹாஸ்பிடல்ல வச்சு என்ன நடந்துச்சு? அம்மா எதுவும் பிரச்சினை பண்ணாங்களா?” இளங்கோ சரியாக கணித்து கேட்க, அவனை நெருங்கிப் படுத்திருந்த வானதி பதிலே சொல்லவில்லை.
“வானதி”
“ம்ம்” என்று அவன் மார்பில் இருந்த கரத்தை நகர்த்தி, அவன் கழுத்தை சுற்றிப் போட்டு இன்னும் நெருங்கிப் படுத்தாள்.
“நான் என்ன கேட்கிறேன்? நீ என்ன பண்ற?” கோபம் போல கேட்டாலும் அவன் குரலில் சிரிப்பிருக்க, “என்ன பண்ணாங்க? ஒன்னும் பண்ணல. எனக்குத் தூக்கம் வருது” என்று முணுமுணுத்தாள் வானதி.
“சரி, தூங்கு” என்றவனுக்கு மனைவி சொன்னதின் அர்த்தமே சில நொடிகள் கழித்துதான் விளங்கியது. ஒரே இழுப்பில் அவளை மொத்தமாக தன் அணைப்பிற்குள் கொண்டு வந்திருந்தான்.
“எனக்கு தூக்கம் வருதுன்னு சொன்னேன்.”
“ம்ம், தூங்கதான் வைக்கிறேன்” என்று குறும்பாக கண் சிமிட்டி சொன்னவனை, அவள் விழிகளை விரித்து மிரட்ட முயற்சிக்க அதற்கு வாய்ப்பளிக்காமல் விழி மூடச் செய்தான் அவன்.
வானதிக்கு கணவனிடம் சொல்லவும், கலந்தாலோசிக்கவும் கொள்ளை விஷயங்கள் இருந்தது. ஆனாலும், என்ன அவசரம் இப்போது? காத்திருக்கட்டுமே என்று அவன் காதலில் கரைந்தாள் வானதி. அது இளங்கோவிற்கும் தெரியும். பிரச்சினைகள் அவர்களின் வாழ்நாள் முழுக்க வரத்தான் போகிறது. அதை அந்த இரவே பேசி சரி செய்திட முடியாது என்பது உணர்ந்து, அவனால் அப்பொழுது செய்ய முடிந்ததை செய்தான் இளங்கோ. அதாவது, காதலித்தான். மனைவியை!