அதிகாலையில் கண் விழித்த வானதியை அசதி அடித்துப் படுக்க வைத்தது. மெல்ல எழுந்து மீண்டும் சரிந்து படுக்கையில் விழுந்தவளை உறக்கத்திலேயே இழுத்து அணைத்துக் கொண்டான் இளங்கோ.
“ம்ம், டைமாச்சு. எழுந்துக்கணும். லேட்டாகிடும். டையர்டா இருக்கு.” ஒவ்வொரு வார்த்தைகளாக வானதி அடுத்தடுத்து சொல்ல, “தூங்கு. நான் ட்ராப் பண்றேன்” என்றான் இளங்கோ.
“ம்ம். ஓகே” என்று கண் மூடியவள், மூச்சை ஆழ உள்ளிழுத்து கணவனை வாசம் பிடித்து, “உங்க மேல என் பெர்ஃப்யூம் வாசம்” என்றாள்.
“ம்ம்” என்ற இளங்கோ, ஏதோ ஏடாகூடமாக சொல்ல வர பட்டென அவன் வாயை மூடி கண்ணால் மிரட்டினாள் வானதி.
முழுதாக கண்களை பிரிக்காமல், “நீ தான் ஆரம்பிச்ச.” தன் உதட்டில் இருந்த மனைவியின் கையை விலக்கிக் குறுஞ்சிரிப்புடன் சொன்னான் இளங்கோ.
“ஆமா. என்ன இப்போ? போங்க” என்று அவன் அணைப்பில் இருந்து விலகி எழுந்து, குளிக்கப் போனாள் வானதி. இளங்கோ மீண்டும் உறக்கத்தில் அமிழ்ந்தான்.
இதுவே திருமணமான ஆரம்ப வருடங்களில் என்றால், ஏன் சில மாதங்களுக்கு முன்பு கூட, இரவு எத்தனை மணியானாலும் கண் மூடாமல் காத்திருந்து கத்தி சண்டையிட்டு, கோபத்தில் பேசாமல், உண்ணாவிரதம் இருந்து, ஒருவரையொருவர் தவிர்த்து வீம்பாக சுற்றியிருப்பார்கள். அதனோடு தாம்பத்தியத்தையும் மறந்திருப்பார்கள்.
“இவ்வளவு நேரம் என்னை திட்டிட்டு இப்ப என்ன என் மேல கைய வைக்கிறீங்க?” என்ற வார்த்தைகளை வானதி சொல்ல மாட்டாள். ஆனால், அவளின் கண்களில் தெரியும் கனலை வைத்தே கண்டுபிடித்து விடுவான் இளங்கோ.
“மூனு நாள் மூஞ்சை தூக்கி வச்சுட்டு திரிஞ்ச. இப்பத்தான் உன் கண்ணுக்கு நான் தெரியறேனா?” தானாக வந்து அணைக்கும் மனைவியை மேலும் தன்னோடு சேர்த்து அணைத்தபடி முறுக்கிக் கொள்வான் இளங்கோ. முடிவாக காதலும், கூடலும்தான் அவர்களின் சண்டையை முடித்து வைக்கும். ஆனால், இன்று முடிவை முதலிலேயே அடைந்து விட்டார்கள்.
வயதும், அனுபவமும், வாழ்வும் அதை அவர்களுக்கு கற்றுத் தந்திருந்தது.
இளங்கோ எழும் போது வானதி சமையல் அறையில் இருப்பதற்கான அறிகுறியாக காஃபியின் மணமும், காலை உணவின் மணமும் அவன் நாசியை வந்தடைந்தது.
வீட்டில் இருந்த அவனது சிறிய அலுவல் அறைக்கு உடற்பயிற்சி செய்யச் சென்றான் இளங்கோ. கூடத்தை கடக்கும் போது அவனைப் பார்த்ததும் புன்னகைத்தாள் வானதி. வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சினைகள் வந்தாலும், வானதியின் இந்தப் புன்னகை முகம், அவனது காலையை அழகாக்கிட போதும் என்று நினைத்தான் இளங்கோ.
நேத்ரனை எழுப்பி விட்டு மீண்டும் சமையல் வேலையில் மூழ்கினாள் வானதி. அவள் வேலைக்குச் செல்ல வேண்டியிருந்ததால், அப்போதே வீட்டு உதவிக்கு ஆளும் வந்து விட, மேல் வேலைகளை அவரிடம் சொல்லி விட்டு சமையலை கவனித்தாள்.
பெரியவர்களுக்கு ஒரு சமையலும், மகனுக்கு ஒரு சமையலும் செய்வது பெரிய வேலையாக தெரிந்தது.
“நேத்ரனுக்கு டிஃபன் இனிதான் கட்டணுமா? என்ன செஞ்சுருக்க சொல்லு, நான் எடுத்து வைக்கிறேன்” சமையல் அறைக்குள் வந்து காஃபி கோப்பைகளை கழுவ போட்டு விட்டு திரும்பித் தாமரை கேட்க, இளங்கோவிற்கு காஃபி கலந்துக் கொண்டிருந்தவள், ஒரு நொடி உறைந்து பின் மாமியாரை திரும்பிப் பார்த்தாள்.
“பேரனுக்கு ஸ்கூலுக்கு கொடுக்க என்ன செய்திருக்கன்னு தானே கேட்டேன்?”
“அவனுக்கு சப்பாத்தி மாவு பிசைஞ்சு வச்சுருக்கேன். உருளைக் கிழங்கு மசாலா உள்ள வச்சு பரோட்டா மாதிரி செய்யப் போறேன்” என்று வானதி சொன்னதும்,
“எதுக்கு இத்தனையை செஞ்சிட்டு இருக்க? அவனுக்கும் சோறே கொடுத்து விட வேண்டியது தானே?” மேடையில் இருந்த பாத்திரங்களை திறந்து பார்த்து மூடியபடி கேட்டார் தாமரை.
“இல்லத்த. பூண்டு குழம்பு, கீரை, காய் எல்லாம் வீட்ல இருக்கும் போது சாப்பிடுவான். ஸ்கூலுக்கு கொடுத்து விட்டா, பாதிக்கு மேல சாப்பிடாம கொண்டு வருவான். அதான், அவனுக்குப் பிடிச்சதா கொடுத்து விடுறேன்.” என்றவள், “இருங்கத்த. அவருக்கு காஃபி கொடுத்துட்டு வர்றேன்” என்று கணவன் இருந்த அறையை நோக்கி நடந்தாள்.
“காஃபி..” வானதி குரல் கொடுக்கவும், பனியனை அகற்றி ஓரமாக வைத்து விட்டு முகம் கழுவி வந்தான்.
அவன் காஃபியை அருந்தும் நேரத்தில் அங்கிருந்த உடற்பயிற்சி உபகரணத்தின் மீது சாய்ந்து நின்று கணவனையே பார்த்திருந்தாள் வானதி.
தாமரையின் இந்த சிறிய மாற்றம், அவளுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “உங்களுக்கு என்னதான் பிரச்சினை அத்த? என் மேல என்ன கோபம்? ஏன் இப்படி பண்றீங்க?” என்று நேரடியாக மாமியாரிடம் கேட்பதற்கு அவளுக்கு ஒரு நிமிடம் கூட பிடிக்காது. ஆனால், அதற்கு பின் ஒரே வீட்டில் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் எப்படி பார்த்துக் கொள்வது?
அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றிப் பிரச்சினை பெரிதானால், ஒட்டு மொத்த குடும்பத்துக்கும் மனஸ்தாபம் ஏற்படும். அதில் நிச்சயமாய் இளங்கோ பாதிக்கப்படுவான். அம்மா, மனைவி இருவரில் யாருக்கு பரிந்து பேசுவது என தடுமாறுவான். யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்று பார்த்து மனைவியின் பக்கம் அவன் சாய்ந்தால், அது அவனது அம்மாவிற்கு அநியாயமாய் படும்.
ம்ம், பெண்கள் ஆடும் ஆட்டத்தில் ஆண்கள் பாடு கொஞ்சம் கஷ்டம்தான் போல. கணவனை அப்படி திண்டாட வைக்க விரும்பவில்லை வானதி. ஆகையால்தான் அவள் அமைதியாக போவது. அவளின் பொறுமை நீர்த்துப் போகும் நாள் பிரச்சினையை பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் போதே, கணவன் அதுவரை செல்ல விட மாட்டான் என்ற நம்பிக்கையும் அவளுக்குப் பிறந்தது.
“என்ன வானதி, பார்வை என் மேல இருக்குது? ஆனா, பாயாம இருக்க?” என்று நமுட்டுச் சிரிப்புடன் இளங்கோ கேட்க, “ஐயோ, ஆசையை பாரு. பாயுறாங்க” என்று எட்டி அவன் தோளில் அடித்தாள் வானதி.
“சரி. நீ செய்யலைன்னா என்ன? நான் செய்யுறேன்” அவளின் இடையில் கரம் கோர்த்து தனக்கு நெருக்கமாக இழுத்தான்.
“ப்ச், உங்க மேல ஒரே வேர்வை ஸ்மெல்..” என்று அவள் விலகப் பார்க்க, கிண்டலாக புருவம் உயர்த்தினான்.
“என்ன?”
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் என்னை வாசம் பிடிச்ச நீ. அப்புறம் இப்படி வியர்த்து வழிஞ்சா உனக்குப் பிடிக்கும்னு நினைச்சேன். இல்லையா?” என்ற இளங்கோவின் கேள்வியில் அவள் முகம் சிவக்க, “நீங்க பேசாம இருக்கும் போதுதான் நல்லாருக்கு” என்றாள் வானதி.
“இருக்கும். இருக்கும்” என்று கிண்டலாக சொல்லி, மனைவியை வாசம் பிடித்தான். லாவண்டர் சோப்பின் மணமும், அவளின் வாசனை திரவியத்தின் மணமும் இணைந்து, வானதியின் பிரத்தியேக வாசனை அவன் நாசியை நிறைக்க, ஆழ மூச்சிழுத்தான் இளங்கோ.
“ஐயோ, இங்கப் பாருங்க. உங்களுக்கு ரெண்டு வெள்ளை முடி வந்திருக்கு. அச்சோ, நிஜமா உங்களுக்கு வயசாகுது” என்று அவள் பதறி புலம்ப, “அது இளநரை மக்கு” என்றான் சிரிப்புடன். அதற்கு வானதி வாய் விட்டு சிரிக்க, “நேத்து என்னாச்சு?” என்று கேட்டான் இளங்கோ.
“ம்ம், இப்படியே நான் செய்யாறு போறேன். என் வீட்டுக்குப் போறேன் நான். என்னைக் கொண்டு போய் எங்க வீட்ல விட்டுட்டு நீ சென்னை போன்னு ஒத்தக் கால்ல நின்னாங்க அத்தை.”
“ஓ? அதான் எனக்கு போன் பண்ணிட்டே இருந்தியா?”
“ம்ம், நான் பாப்பாவை தூக்கிட்டு காருக்கு வந்துட்டேன். அப்புறம் மாமாதான் ஏதோ பேசி, அத்தையை சரி பண்ணி கூட்டிட்டு வந்தார்.”
“நான் அப்பாகிட்ட பேசுறேன் வானதி”
“இல்ல இப்ப வேணாம். நாம இங்க இருக்கும் போது அத்தை, மாமா ஊர்ல ஏன் தனியா இருக்கணும்? அதுவும் மாமாவுக்கு உடம்பு சரியில்லாத நேரம். ம்ஹூம், வேணாம். ஒரு நாலஞ்சு மாசம் அவங்க இங்கேயே இருக்கட்டும். அத்தைக்கும் ஃபுல் பாடி செக் அப் பண்ணிட்டு அப்புறம் அவங்க ஊருக்கு போறதைப் பத்தி யோசிக்கலாம்”
“அதுவரைக்கும் நீ மேனேஜ் பண்ணிடுவியா வானதி?”
“இதுல மேனேஜ் பண்ண என்ன இருக்குங்க? அத்தை, மாமா முதல்ல இருந்தே நம்ம கூட இருந்திருந்தா அவங்களை பார்த்திருந்திருக்க மாட்டோமா? நாம இத்தனை வருஷமும் தனியா இருந்துட்டோம். இனியாவது பெரியவங்க நம்ம கூட இருக்கட்டும். எனக்கு பிரச்சினை ஒன்னுமில்ல. அத்தை என்னை தேவையில்லாம டென்ஷன் பண்ணாம இருந்தா போதும். மத்தபடி எனக்கு ஓகே” என்றாள், அவன் முகம் பார்த்து.
“அப்புறம் நீங்களும் வேலையில் பிஸி. இப்படி சொல்லிட்டே போங்களேன். வேணாம்னு சொல்ல காரணம் தேடினா கிடைச்சுட்டேதான் இருக்கும்ங்க. ஃப்ரீயா விடுங்க, பார்த்துக்கலாம். அட்லீஸ்ட் அத்தைக்கு மெடிக்கல் செக் அப் போற வரைக்குமாவது அவங்க இங்கேயே இருக்கட்டும். என்ன சொல்றீங்க?”
“நான் என்ன சொல்ல வானதி? நீதான் முடிவு பண்ணணும். எனக்கே ஆஃபீஸ்ல மண்டை காயும் போது வீட்டுக்கு வந்துட்டா போதும்னு இருக்கு. ஏன்னா, வீட்டையும், பிள்ளைகளையும் பார்த்துக்க நீ இருக்க. என்னையும் சேர்த்து நீ தான் பார்த்துக்கற. அதுனால, உன் முடிவுதான்” காலை நேர பரபரப்பில் பதறிக் கொண்டு பம்பரமாய் சுற்றுபவள் கணவனின் இந்தப் பேச்சில் தளர்ந்து அவன் தோள் சாய்ந்தாள். அனுதின அவசரத்தில் இந்த வார்த்தைகளை எல்லாம் உதிர்க்கவே மறந்துப் போய் விட்டிருந்தார்கள் இருவரும். அதிலும் வானதி வேலை, வீடு, பிள்ளைகள் என அனைத்தையும் பார்த்துக் கொள்ளும் போது, அவளை அசட்டையாக கடந்து விடும் கணவனின் மேல் பல நாட்களின் வருத்தம் அவளுக்கிருந்தது. இப்போது அவன் வார்த்தைகளில் மனது உருகி கவலைகள் எல்லாம் கரைந்து காணாமல் போனது.
“உனக்கு கண்டிப்பா ஒரு ப்ரேக் வேணும் வானதி. வேலையை விட்டதை பத்தி அதிகம் யோசிக்காத. சரியா?” மெல்ல அவள் முகம் நிமிர்த்தி முத்தமிட்டு கேட்டான்.
“ம்ம்”
“அம்மாவை உன்னால சமாளிக்க முடியுமான்னு மட்டும் நல்லா யோசிச்சுக்கோ.”
“அத்தை என்னை என்ன பண்ணிட போறாங்க? நீங்க வேற. சும்மா பயம் காட்டிட்டு இருக்கீங்க. அவங்களுக்கு சொத்து பிரிச்சுக் கொடுக்கணும் இப்போ. அவ்ளோதான். வீட்டுக்கு போய் பத்திரத்தை எடுத்துட்டு வர்றேன்னு நேத்து சொன்னாங்க. மாமா கோபமா நான் இப்போதைக்கு சாக மாட்டேன்னு பேசவும்தான்…” சட்டென இளங்கோவின் முகம் கசங்கி விட, “சாரி” என்றாள் வானதி.
“விடு. நான் கொஞ்சம் ஃபிரீயாகிட்டு இதைப்பத்தி அப்பாகிட்ட உட்கார்ந்து பேசுறேன். இப்போ அவங்க என்ன பேசினாலும் நீ காதுல வாங்கிக்காத. ஓகே?”
“ம்ம். ஓகே. நான் போய் கிட்சன் வேலையை பார்க்கறேன். நேரமாகுது” வானதி சொல்லும் போதே, “அப்பா..” என்று கத்திக் கொண்டே உள்ளே ஓடி வந்தாள் நட்சத்திரா.
தூக்கம் கலைந்த கண்களை அடிக்கடி சிமிட்டியபடி, தலை முடி மொத்தமும் காற்றில் பறக்க, முகம் முழுக்க சிரிப்புடன் ஓடி வந்த மகளை நோக்கி கை நீட்டினான் இளங்கோ. வானதி இடையில் இருந்த கணவனின் கையைப் பிரித்து விலகப் பார்த்தாள்.
“ம்ம், அப்படியே இரு” என்று மனைவியிடம் சொல்லி மகளைக் குனிந்து கையில் அள்ளிக் கொண்டான் இளங்கோ. நட்சத்திரா அப்பாவின் கன்னத்தில் முத்தமிட்டு, அப்படியே தாவி அம்மாவின் கன்னத்தையும் ஈரமாக்கினாள்.
பிள்ளைகள் முன் மனைவியின் மேலான அன்பை வெளிப்படுத்துவதில் இளங்கோ தயங்கியதே கிடையாது.
“நான் உன் கை தொட்டு பேசுறது, பக்கத்துல உட்காருறதுலாம் நார்மல்னு பசங்களுக்கு தெரியட்டும் வானதி. நாளைக்கு வளர்ந்த பிறகு எங்க அம்மாப்பா பயங்கர க்ளோஸ்னு பெருமையா தான் பேசுவாங்க. நம்மளை அப்படித்தான் ஞாபகம் வச்சுக்கணும் அவங்க. அவங்களுக்கு தப்பு, சரி எல்லாத்தையும் சொல்லி தானே வளர்க்கறோம். குட் டச், பேட் டச் சொல்லிக் கொடுத்திருக்கோம். அப்புறம் ஏன் பதறுற? அன்பை பார்த்து வளருற குழந்தைகளுக்கு கண்டிப்பா ஆபாசமும், ஆபத்தும் வித்தியாசம் தெரிஞ்சுடும்” என்பான் இளங்கோ. ஆனாலும், அவளுக்குத் தயக்கங்கள் இருந்து கொண்டே தானிருக்கும்.
அப்பாவை தொட்டுப் பார்த்து நட்சத்திரா முகம் சுளிக்க, “அப்பா குளிக்கப் போறேன் குட்டி” என்றான் சிரிப்புடன். வானதி அவர்களிடம் இருந்து விலகி சமையல் அறை சென்றாள்.
தாமரை உதவி செய்யும் பெண்ணுடன் பேசிக் கொண்டே காய் நறுக்கிக் கொண்டிருந்தார். அவரிடம் இயல்பாக பேசிக் கொண்டே மீத சமையலை முடித்தாள் வானதி. நேத்ரனை இளங்கோ பார்த்துக் கொண்டான். அன்றைக்கு அரக்க பறக்க இல்லாமல் நிதானமாக கிளம்பி, காலை உணவை கணவனுடன் அமர்ந்து உண்டாள் வானதி. இளங்கோ சொன்னது போல மகளை மாமியார் வீட்டிலும், மனைவியை அவளின் அலுவலகத்திலும் விட்டுவிட்டு தான் அலுவலகம் சென்றான்.
அன்றிரவு, “நீங்க கொஞ்ச நாளைக்கு இங்கேயே இருங்கப்பா.” என்று இளங்கோ சொல்லவும், சந்திரசேகர் மறுப்பு தெரிவிக்காமல், எந்தக் கேள்வியும் கேட்காமல், “சரிப்பா” என்று உடனேயே சம்மதித்து விட்டார்.
அடுத்து வந்த நாள்கள் அமைதியாக நகர்ந்தது. தாமரை அவ்வப்போது ஏதாவது பேசினாலும், அதைக் கண்டுக் கொள்ளாமல் கடந்து விடுவாள் வானதி. அவரும் மருமகளிடம் முகம் காட்டினாலும், பேரன், பேத்தி இருவரிடமும் பாசமாகத்தான் இருந்தார்.
வானதி இரவுகளில் மகளுடன் தங்களின் அறையிலேயே உறங்குவதை வழக்கமாக்கினாள். நட்சத்திராவின் சிறிய கட்டில் போன்ற தொட்டிலை தேடி எடுத்து மீண்டும் தங்கள் அறையில் பொருத்தி விட்டான் இளங்கோ. அம்மாவுடன் படுக்கையில் உறங்கி, தன் கட்டிலில் கண் விழிப்பாள் குழந்தை.