இளங்கோ ஜப்பான் சென்று வந்ததில் இருந்து அவனுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்திருந்தது. சனி, ஞாயிறு கூட விடுமுறை என்று அவனால் வீட்டில் அமர முடியாத சூழல்.
பிள்ளைகள் இருவரும் அப்பாவை அதிகம் தேடாதபடி வானதி பார்த்துக் கொண்டாள். மறுநாள் விடுமுறை தினம் என்பதால் வெள்ளிக் கிழமை இரவு கூடத்தில் பிள்ளைகளுடன் படுத்து தொலைக்காட்சியில் அனிமேஷன் படம் பார்த்து அப்படியே அவர்களுடன் அங்கேயே உறங்கிப் போனாள் வானதி. பின்னிரவில் வீடு திரும்பிய இளங்கோவிற்கு மனைவி, மக்களை அப்படிப் பார்த்ததும் உதடுகள் தன்னிச்சையாக புன்னகையில் பிரிந்தது.
அம்மா மட்டும் அங்கு இல்லையென்றால், அவனுமே பிள்ளைகளோடு சென்று படுத்திருப்பான். சோபா, உணவு மேஜை கூடத்தில் பெரும் இடத்தை அடைத்திருக்க, அவனுக்கு அங்கே இடமிருக்கவில்லை.
மனைவியை கடுப்புடன் பார்த்து விட்டு படுக்கைக்கு வந்தான். அவனுக்கு மனத்தில் இருந்த சோர்விற்கு மனைவியை அதிகமாக தேடியது.
நட்சத்திரா பாதி இரவில் போர்வையை நனைத்து விடவும், மகளை தூக்கிக் கொண்டு அறைக்குள் வந்தாள் வானதி. மகளை கவனித்து உறங்க வைத்து விட்டு, படுக்கையின் ஓரமாக தான் படுத்தாள்.
அதற்காகவே காத்திருந்தது போல வளைத்துக் கொண்டான் இளங்கோ. அவளை அணைத்தபடி உறக்கத்தைத் தொடர்ந்தான். அவ்வளவே.
“ஆள் முழுங்கி” முணுமுணுத்து வானதியும் உறங்கி விட்டாள். அதிகாலையில், “அப்பா..” என்று நட்சத்திரா கத்தவும், அவளை அந்தக் குட்டி கட்டிலில் இருந்து தூக்கி தங்களுக்கு நடுவில் படுக்க வைத்தாள் வானதி.
பத்து நிமிடங்களில் அவள் எழுந்து ஓய்வறை சென்று வர, “அப்பா.” என்று கத்தியபடி அறைக்குள் வந்தான் நேத்ரன். மகனும், மகளும் போட்டி போட்டு அப்பாவை கட்டி உருள, அப்பாவை அணைத்துப் படுத்த அண்ணனை கோபத்துடன் அடித்தாள் நட்சத்திரா.
“அண்ணாவை அடிக்கக் கூடாது குட்டி, தப்பு” மகளை தூக்கி மறுபக்கம் படுக்க வைத்தாள் வானதி. அப்போது அவள் கையை பிடித்திழுத்து அவளையும் படுக்கையில் விழச் செய்தான் இளங்கோ. அதை எதிர்பார்த்திராத வானதி, “ஐயோ..” என்று கத்திக் கொண்டே விழ, அம்மாவை பார்த்து பிள்ளைகள் இருவரும் சத்தமாக கிளுக்கி சிரித்தார்கள்.
“என்ன சிரிப்பு? இன்னைக்கு உங்களுக்கு ப்ரேக் பாஸ்ட் இல்ல போங்க” என்று அவர்களிடம் கோபித்து திரும்பிப் படுத்தாள் வானதி.
“அம்மா.. அம்மா” பிள்ளைகள் இருவரின் கவனமும் இப்போது அவள் மேல் திரும்ப, கணவனைப் பார்த்து கண் சிமிட்டினாள். நட்சத்திரா அப்போதும் அப்பாவிடம் இருந்து இறங்கவில்லை. பிள்ளைகள் கத்திப் புரள, இளங்கோ அவர்களை அணைத்தபடி உறக்கத்தில் ஆழ்ந்தான். பிள்ளைகளின் சத்தம் அவன் தூக்கத்தைத் தொல்லை செய்யவில்லை. ஆனால், வானதி அவனுக்கு தேவையான ஓய்வை கொடுக்க விரும்பி, பிள்ளைகளை அழைத்துக் கொண்டு கூடத்திற்கு சென்றாள்.
அன்று தொழிற்சாலையை பார்வையிட வேண்டியிருந்ததால் காலை தாமதமாக தான் கிளம்பிச் சென்றான் இளங்கோ. வானதியிடம் சரியாக பேசாமல் அவன் செல்ல, “நேத்து நைட் ஹால்ல டீவி பார்த்துட்டே தூங்கிட்டோம். ரொம்ப பண்ணாதீங்க” என்று வானதி சொல்லியும், அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை இளங்கோ.
“பேசாதீங்க, போங்க” என்று உதடு சுளித்தாள்.
“ஹரிணி மால் கூட்டிட்டு போக சொன்னா. நான் வர ஈவ்னிங் ஆகிடும். நீ அவளை கூட்டிட்டு போய் அவ கேட்டதை வாங்கிக் கொடு” என்று குறுஞ்செய்தி அனுப்பினான் இளங்கோ.
“உங்ககிட்ட தானே கேட்டா? நீங்களே கூட்டிட்டு போங்க. நான் செய்ய மாட்டேன்” என்று கோபமாக பதில் அனுப்பினாள் வானதி. சற்று நேரத்தில் அத்தை, மாமா இருவருக்கும் மதிய உணவை சமைத்து வைத்து விட்டு, அவர்களிடம் சொல்லிக் கொண்டு பிள்ளைகளை வெளியில் அழைத்துச் சென்றாள். அங்கே அவர்களுக்காக ஏற்கனவே வந்து காத்திருந்தனர் அவளின் குடும்பத்தினர்.
பிள்ளைகள் மூவரையும் விளையாட்டு பகுதிக்கு மாதவன் அழைத்துச் சென்றான்.
“உங்கண்ணன் ஒருத்தனால பிள்ளைங்க மூனு பேரையும் சமாளிக்க முடியாது. நான் அவங்க கூட போறேன்.” என்று மகளிடம் சொன்ன பாக்கியம், “நீ என்னமோ வாங்கணும்னு சொன்ன இல்ல அர்ச்சனா? வானதியை கூட்டிட்டு போய் வாங்கு. அவ பணம் கொடுப்பா” என்று சொல்லிச் செல்ல, “ஆ, வானதி பணம் கொடுப்பா. இளங்கோ ஆஃபீஸ்ல பணம் அச்சடிக்கிறாங்க. இல்லம்மா?” என்ற மகளை பார்த்து, “என் மருமகன் பாவம். அவங்க ஆபீஸ்ல இல்ல. என் மக ஆபீஸ்லதான் பணம் அடிக்கிறதா கேள்விப்பட்டேன். அப்படித்தானே வானு?” என்று நக்கலடித்த அம்மாவை அவள் முறைக்க, மகளைப் பார்த்து சிரித்து விட்டுப் போனார் பாக்கியம்.
அர்ச்சனாவின் கண்கள் மாதவனின் மேல் நிலைத்திருந்தது. நேத்ரனிடம் பேசிக் கொண்டு, நட்சத்திராவின் கைப் பிடித்து அந்தச் சின்னப் பாதங்களுக்கு ஈடு கொடுத்து நடந்துக் கொண்டிருந்தான் அவன். அவர்களுக்கு முன்னே ஓடிக் கொண்டிருந்தாள் ஹரிணி.
“நேத்ரன் போல எங்களுக்கும் ஒரு பையன் பிறந்திருக்கலாம். உன் அண்ணாவை அவன் கூட பார்க்கும் போதெல்லாம் எனக்கு அவ்ளோ ஆசையா இருக்கு தெரியுமா?” அர்ச்சனா சொல்லவும், வாட்ஸ்அப்பில் கணவனுக்கு புகைப்படம் அனுப்பிக் கொண்டிருந்த வானதி, அலைபேசியை கைப் பையில் போட்டு விட்டு அண்ணியை கேள்வியுடன் நிமிர்ந்துப் பார்த்தாள்.
“நாங்க ரெண்டாவது குழந்தைக்கு எத்தனை தடவை டிரை பண்ணோம்னு உனக்கு தெரியும் இல்ல வானதி. ப்ச், ஒரு முறை கூட கரு தங்கல. இப்போ நினைச்சாலும் ஆசையும், வருத்தமும் அப்படியே இருக்கு” என்று வருத்தத்துடன் சொன்னாள் அர்ச்சனா. அவளுக்கு இரண்டு முறை தானாகவே கருக் கலைந்திருந்தது. மூன்றாம் முறை மருத்துவரே குழந்தைக்கு போதிய வளர்ச்சி இல்லை என்று முறையாக கருக்கலைப்பு செய்து விட்டார்.
அதன் பிறகு குழந்தைப் பற்றிய பேச்செடுக்கவே மாதவன் தயாராக இல்லை என்று அர்ச்சனா முன்பே பல முறை புலம்பியிருக்கிறாள்.
“அங்க தான் எங்களுக்குள்ள பிரச்சினை ஆரம்பமாச்சுன்னு நினைக்கிறேன்” என்று அர்ச்சனா சொல்லவும், வானதி அமைதியாக ஆமோதித்து நின்றாள்.
நேத்ரன் பிறந்து மூன்று வருடங்கள் கழித்துதான் இரண்டாவது குழந்தைக்கு அவர்களும் முயற்சி செய்தார்கள். பத்து நாட்கள், இருபது நாட்கள் என நாட்கள் தள்ளிப் போனதே தவிர வானதிக்கும் கரு தங்கவேயில்லை. இளங்கோ இயல்பாக இருந்தாலும், வானதி தான் பதறினாள். எதிர்பார்த்து, ஏமாந்து மன அழுத்தத்தை இழுத்துக் கொண்டாள்.
“என்னை விட்டா புலம்பிட்டே இருப்பேன். வா, கடைக்குள்ள போகலாம்” என்று வானதியின் கைப் பிடித்து உள்ளே இழுத்துப் போனாள் அர்ச்சனா.
பெண்களின் உடைகளுக்கான ப்ரத்யேக பகுதியில் நுழைந்து, தங்களுக்கு பிடித்த உடைகளை தேர்ந்தெடுத்தார்கள் இருவரும்.
“தெரியாத மாதிரி நடிக்காத. அத்தை நான் அமெரிக்கா போக ஓகே சொல்லிட்டாங்க. அப்போவே அதுக்கு காரணம் நீயா தான் இருக்கும்னு நினைச்சேன். உங்கண்ணனை அத்தை திட்டவும் கன்பார்ம் ஆகிடுச்சு என் சந்தேகம்” சிரித்துக் கொண்டே சொன்னாள் அர்ச்சனா.
“ச்சே, ச்சே. அம்மாகிட்ட நான் ஒன்னும் சொல்லல அண்ணி. அன்னைக்கு என்கிட்ட பேசிட்டு இருக்கும் போதே உங்கண்ணிக்கு ஓகே சொல்லிடுவேன் போலன்னு தான் அம்மா சொன்னாங்க. அண்ணா அமெரிக்கா போகணும்னு சொன்னாலும் அம்மா இப்படித்தான் முதல்ல வேணாம்னு சொல்லி, அப்புறம் சரின்னு சொல்லி இருப்பாங்க. அவங்களுக்கு நம்மளை வெளிநாடு அனுப்ப பயம் இருக்குமே தவிர, நம்மளை தடுக்க நினைக்க மாட்டாங்க”
“எப்போ கிளம்பறீங்க? ஹரிணியை நாங்க பார்த்துக்கறோம். நீங்க…” என்று வானதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடையிட்டு,
“நான் எங்கேயும் போகல வானதி” என்றாள் அர்ச்சனா.
கருப்பில் பொன்னிற வேலைப்பாடு செய்யப்பட்டிருந்த உடையை ஆவலாக எடுத்த வானதி, கை அந்தரத்தில் நிற்க படக்கென்று திரும்பி அர்ச்சனாவை பார்த்தாள்.
“நான் பணத்துக்கு நிறைய மதிப்பு கொடுப்பேன் தான். ஆனா, குடும்பத்தை விட்டு, அதிலும் இந்த வயசுல ஹரிணியை தனியா விட்டு வேலைக்குப் போற அளவுக்குலாம் எனக்கு தைரியம் இல்ல வானதி. கொஞ்சம் தைரியம் இருந்தாலும் போக விருப்பமில்லன்னு தான் சொல்லுவேன்”
வானதி அமைதியாக நிற்க, “எனக்கு ஆஃபீஸ்ல ஆஃபர் வரும் போதே வேணாம்னுதான் சொன்னேன். உங்க அண்ணாவும், நானும் சேர்ந்து தான் பிளான் பண்ணோம். ஆனா, அவருக்கு சான்ஸ் கிடைக்கல. அந்தக் கோபத்தில் எனக்கு கிடைச்சுருக்கு, நான் உடனே அமெரிக்கா போறேன்னு அவரை கடுப்பேத்தினேன். அது அத்தை காதிலயும் விழுந்து பெரிய பிரச்சினை ஆகிடுச்சு. இப்போ உங்க அண்ணா என் கூட டூ. பேசாம சுத்துறார். அதுவும் எத்தனை நாளைக்குன்னு பார்ப்போம்” என்று பாவனையாக அர்ச்சனா சொல்ல, சிரித்தாள் வானதி.
“மாதவனை மலையிறக்க என் மாமியார் இருக்க, எனக்கென்ன கவலை” சுழன்று வட்டமடித்து அவள் சொல்ல, சிரிப்புடன் பார்த்திருந்தாள் வானதி.
“என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு. அதை அப்புறமா சொல்றேன்” என்றவள்,
“சரி, என் போரிங் கதையை விடு. உன் கதையைச் சொல்லு, கேட்போம். என்ன சொல்றாங்க உன் மாமியார், மாமனார்? எப்படியிருக்காங்க” என்று கேட்டாள்.
“நல்லாருக்காங்க அண்ணி”
“அத்தையும், இவரும் தனியா போய் நின்னு ஏதோ புலம்பிட்டே இருந்தாங்க. அங்க நான் போனா உடனே அமைதியாகிடுறாங்க. என்னமோ இந்த குடும்ப அரசியல் எல்லாம் நமக்கு புரியாத மாதிரி தான் ரெண்டு பேரும் ஓவரா சீன் போடுவாங்க” என்று சலித்துக் கொண்டாள் அர்ச்சனா.
“ஆனாலும், இளங்கோக்கு நீ பயப்படுறன்னு இவங்க நினைக்கிறது நினைச்சா தான் எனக்கு சிரிப்பா வருது” அர்ச்சனா சிரித்துக் கொண்டே சொல்ல,
“யாரு, அம்மா அப்படி சொன்னாங்களா?” என்று கேட்டாள் வானதி.
“நீ உங்கப்பா கூட எவ்ளோ க்ளோஸ்னு எனக்குத் தெரியும் வானதி. நான் உன் அண்ணாவை லவ் பண்ண நாள்ல இருந்து, உங்க வீட்டுக்கு கல்யாணமாகி வந்த பிறகும், உங்க பாண்டிங்கை, அப்பா, பொண்ணு பாசத்தை பார்த்திருக்கேனே.”
உடைகள் நிரம்பிய பை கையில் கனத்தை கூட்ட, அப்படியே நின்று விட்டாள் வானதி.
“எனக்கு உன் மேல நிறைய பொறாமை உண்டுதான். அது ஒரு மாதிரி ஆரோக்கியமான பொறாமை. அவ்ளோதான். நீங்க லவ் பண்ண காலத்தில் இருந்து உங்களைப் பார்க்கறேன் நான். டக்குனு உங்களுக்கு லாட்டரி அடிச்சு இந்த நிலமைக்கு வரல நீங்கன்னு எனக்குத் தெரியும். ரெண்டு பேரும் நிறைய ஹார்ட் வொர்க் பண்றதை என் கண்ணாலேயே பார்த்திருக்கேன்.”
“இப்போ நீங்க ஓகே சொல்லலன்னா, நான் கையை கட் பண்ணிப்பேன்ப்பான்னு, உங்கப்பாவோட பேனா கத்தி வச்சு நீ அவரை மிரட்டினது, நேத்து நடந்தது போல இருக்கு வானதி.” அர்ச்சனா சொன்ன காட்சி, கண் முன்னே வர வானதிக்கு அப்பாவின் நினைவில் வருத்தமும், அவரை சிறு பிள்ளைத்தனமாக மிரட்டியதை நினைக்கையில் சிரிப்பும் வந்தது.
“ஃபர்ஸ்ட் டைம் பட்டு வேட்டி சட்டையில இளங்கோ நம்ம வீட்டுக்கு வந்தப்போ உங்கப்பா ஷாக்கோட பார்த்தது. உங்கண்ணா, என்ன இப்பவே தாலி கட்டப் போறது போல ரெடியா வந்து நிக்கிறார்னு பயந்து புலம்பினது. அதுக்கு, இல்ல, முடியாதுன்னு சொன்னீங்கன்னா வானதியை கையோட கூட்டிட்டு போக ரெடியா வந்தேன்னு இளங்கோ பயங்கர சீரியஸா பதில் சொன்னப்போ, உங்கண்ணா மூஞ்சி போன போக்கு.. அப்புறம் அத்தைக்கிட்ட நீ..” அர்ச்சனா ஒவ்வொரு நிகழ்வாக சொல்லிக் கொண்டே செல்ல, “அண்ணி பிளீஸ். போதும்” என்று அவளைத் தடுத்தாள் வானதி.
“ஐயையோ, உன்னை ஃபீல் பண்ண வச்சிட்டேன் போல. சாரி” என்ற அர்ச்சனா கை வீசி முன்னே நடக்க, அவளைப் பின் தொடர்ந்தாள் வானதி.
இருவரும் ஒப்பனை அறையில் உடைகளை அணிந்து சரிப் பார்த்து, வாங்கிக் கொண்டு கடையை விட்டு வெளியில் வந்தார்கள்.
அர்ச்சனா பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டு நடந்தாலும், வானதியின் மனம் முழுக்க இளங்கோவும், அப்பாவுமே நிறைந்திருந்தார்கள்.
“உங்கண்ணா சாப்பிட வரச் சொன்னார். வா, அங்கப் போவோம்” என்று உணவகத்தின் பெயரைச் சொல்லி நான்காம் தளத்திற்கு அவளை அழைத்துச் சென்றாள் அர்ச்சனா.
வானதியின் அமைதியை யோசனையுடன் பார்த்து, “மாமா தவறினப்போ நீ ரொம்ப உடைஞ்சு போயிட்ட இல்ல வானதி? உன் ஹஸ்பண்ட்டுக்கு அப்படியொரு நிலைமை வரக் கூடாதுன்னு நினைச்சு பயப்படுற. இல்லையா?” என்று அர்ச்சனா கேட்க, உணர்ச்சி வேகத்தில் கண்கள் கலங்க தலையசைத்தாள் வானதி.
“மாமாக்கு அப்படியாகும்னு நாம யாருமே எதிர்ப்பார்க்கல இல்ல? காலைல நட்சத்திராவ தூக்கி வச்சு கொஞ்சிட்டு, அவளுக்கு தாலாட்டு பாடிட்டு, நல்லா சிரிச்சு பேசிட்டு இருந்த மாமா அன்னைக்கு நாள் முடியும் போது இல்லைனு நினைக்கும் போது..” அர்ச்சனா பேச பேச அத்தனை நாட்கள் மனதின் ஓரமாக அடைத்து வைத்திருந்ததெல்லாம் மெல்ல மெல்ல மேலேழுந்து வந்து வானதியை அழுத்தியது.