வானதியின் மனதில் நினைவலைகள் ஒவ்வொரு நிகழ்வாக தொட்டு தொட்டு அவளை அலைக்கழித்து கொண்டிருந்தது. அர்ச்சனாவின் குரல் எங்கோ கிணற்றில் இருந்து பேசுவது போல அவளுக்கு கேட்க, அமைதியாய் நடந்தாள் அவள்.
“அம்மா, அத்த” என்று பிள்ளைகளின் குரல் கேட்ட கணத்தில் அலைகடலில் தத்தளித்துக் கொண்டிருந்த அவள் மனம் நங்கூரமிட்டு நிலையாய் நின்றது.
“அத்த என் பக்கத்தில உட்காருங்க, பிளீஸ்” ஹரிணி கொஞ்சி அழைக்கவும், அவளிடம் சென்று அமர்ந்தாள் வானதி. மாதவனிடம் அமர்ந்திருந்த நட்சத்திரா அம்மாவைப் பார்த்தும் இறங்கி அவளிடம் ஓடி வந்தாள்.
“ஒரு மணி நேரமா நான் வச்சு பார்த்திருக்கேன். அம்மாவை பார்த்ததும் ஆட்டுக் குட்டி மாதிரி அவகிட்ட ஓடுறதை பாரு இந்தக் குட்டி” பேத்தியை பார்த்து பாக்கியம் சொல்ல, “இப்பவும் உங்களைப் பார்த்தா வானதி ஓடி வர்றது இல்லையா? அது போலதான் அத்த” என்றாள் அர்ச்சனா.
பாக்கியம் மருமகளை முறைக்க, மாதவனும், வானதியும் அம்மாவை பார்த்து சிரித்தார்கள். அவர்கள் இருவரையும் பார்வையால் மிரட்டினார் பாக்கியம்.
“நான் நாலு டாப்ஸ் வாங்கினேன் மா. அப்புறம் ரெண்டு ஜெகிங்ஸ், ரெண்டு துப்பட்டா. ம்ம், இன்னும் ஏதேதோ வாங்கினேன். எல்லாத்துக்கும் அண்ணி தான் பணம் கொடுத்தாங்க” அம்மாவை வம்பிழுக்கவென்றே வானதி சொல்ல, “என் மருமகன்தான் ஏமாளின்னு பார்த்தா, மருமகளும் அப்படியே வந்து வாய்ச்சுருக்கா. ரெண்டு பேரையும் நல்லா ஏய்க்க கத்து வைச்சிருக்க நீ” பாக்கியம் சொல்லவும், வானதி சிரிப்பை அடக்க, அர்ச்சனா அவளை முந்திக் கொண்டு சிரித்து விட்டாள்.
“சிரிச்சது போதும், சாப்பிடுங்க” மனைவியை கடுப்புடன் பார்த்துச் சொன்னான் மாதவன்.
“இப்ப எதுக்குடா கோபப்படுற? வெளில வந்து இப்படி மூஞ்சியை காட்டிட்டு இருக்க எதுக்கு எங்களை வெளில கூட்டிட்டு வந்த நீ?” என்று பாக்கியம் மகனை அதட்ட, பெண்கள் இருவரும் நமுட்டு சிரிப்புடன், மாதவனை பார்க்காமல் குழந்தைகளுக்கு உணவை கொடுப்பதில் கவனத்தைத் திருப்பினார்கள்.
“சாரி வானதி. மாமா பத்தின பேச்சை நான் எடுத்திருக்கக் கூடாது. ஃபீல் பண்ணாத பிளீஸ்” அர்ச்சனா சொல்ல, வானதிக்கு உணவு தொண்டையில் சிக்கிய அவஸ்தையான உணர்வு.
குழந்தைகள் மூவரும் பாக்கியம் மற்றும் மாதவனுடன் பேசியபடி உணவுண்ண, பெண்கள் இருவரும் அந்த மேஜையின் கடைசியில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தார்கள்.
“அதுவும் உங்க அத்தை உனக்கு பிரச்சினை கொடுத்து டென்ஷன் பண்ற நேரம் நான் இதை ஆரம்பிச்சுருக்கக் கூடாது”
“அட நீங்க வேற அண்ணி. அப்படியெல்லாம் ஒன்னுமில்ல”
“அப்போ பிரச்சினையில்லைன்னு சொல்றியா?”
“ம்ம், அதை எப்படி பிரச்சினைன்னு சொல்ல? மாமாக்கு உடம்பு முடியாம போகவும், அத்தை சொத்து பிரிச்சு கொடுக்கணும்னு நினைக்கிறாங்க. அவ்ளோதான்”
“அவ்ளோதானா?” அர்ச்சனா ராகம் இழுத்து கேட்ட விதத்தில் சிரித்தாள் வானதி.
“அவ்வளவே தான் அண்ணி. அவங்க பொண்ணுக்கு நிறைய செய்யணும்னு ஆசைப்படுறாங்க. இன்னைக்கும் உப்பு, புளி, மிளகான்னு ஒன்னு விடாம அம்மா வீட்ல இருந்து வாங்கிட்டு போற நான் அதை எப்படி தப்பு சொல்ல முடியும்?” வானதி அதைச் சொன்னதும் அர்ச்சனா பக்கென்று சிரித்து விட, “எங்கம்மா எனக்கு செய்யுறது சரின்னா, எங்கத்தை அவங்க மகளுக்கு செய்யுறதும் சரிதானே அண்ணி?” என்று கேட்டாள் வானதி.
“அவ்ளோ நல்லவளா நீ?”
“ஹா ஹா ஹா. இல்லண்ணி. சொத்துக்காக, ரெண்டு கிரவுண்ட் இடத்துக்கும், நகைக்கும் இவரோட சொந்த தங்கச்சி கூட சண்டை போடணுமான்னு எனக்கு இருக்கு. அதுவும் இல்லாம, அவருக்கு அவங்கம்மாவை பிடிக்கும். யாருக்கா இருந்தாலும் அம்மா பாசம் இல்லாம இருக்குமா நீங்களே சொல்லுங்க? இந்த விஷயத்துல நான் விட்டுக் கொடுத்து அனுசரிச்சு போனா, அவரும், நானும் நிம்மதியா இருப்போம் இல்லையா? அவருக்கு, அம்மா, தங்கச்சி உறவும் கெட்டு போகாது. அதுதானே முக்கியம் அண்ணி? பத்து வருஷம் கழிச்சு யோசிச்சு பார்த்தா இதுப் பத்தின எந்த வருத்தங்களும் இல்லாம நிம்மதியா இருப்போம் இல்ல?. என்ன இன்னைக்கு அவங்க நம்மளை ஏமாளியா பார்க்கலாம். இருந்துட்டு போகட்டுமே. என்ன நஷ்டமாகிடப் போகுது? நான் விட்டுக் கொடுத்து போனா இளங்கோ மொத்தமா என் பக்கம் வருவார். அவர் சப்போர்ட் என்னைக்கும் எனக்கு இருக்கும். எனக்கு அது போதும்.” என்று புன்னகையுடன் தோள் குலுக்கினாள் வானதி.
“நீ சொல்றது சரிதான். ஆனா, உன் அளவுக்கு எனக்கு பெரிய மனசு இல்லப்பா” என்று அர்ச்சனா கிண்டலாக சொல்ல, “பெரிய மனசுலாம் இல்லண்ணி. நான் பிரச்சினையை தவிர்க்க பார்க்கறேன். எங்க எதிர்காலத்தை பத்தி யோசிக்கிறேன். லுக்கிங் இன் டு த பிக்கர் பிக்சர்னு சொல்லுவாங்க இல்ல? அப்படி” என்றாள் வானதி.
“என்னமோ சொல்ற போ. என்னால எல்லாம் இப்படி ஈசியா எல்லாத்தையும் தூக்கி கொடுக்க முடியாது வானதி. அதுவும் 30, 35 வயசானதுமே தானாவே மனசுல ஒரு பயம் வந்துடுது. நம்மை சுத்தி இருக்க எல்லோரும் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு முன்னேறி செட்டிலாகுறதை பார்க்கும் போதெல்லாம், நாம மட்டும் இப்படியே இருக்கோமேன்னு பதட்டமாகுது. யாராவது வீடு வாங்கிட்டோம், கார் வாங்கிட்டோம். இடம் வாங்கிட்டோம். அமெரிக்கா போறோம். கனடா செட்டில் ஆகுறோம்னு சொன்னா, அவங்களுக்காக சந்தோசப்படுற அதே நேரம், எங்க லைஃப் நினைச்சு பயமும் வருது வானதி.”
“வீடு, கார் எல்லாம் இருந்தாலும் ஹரிணி வளர்ந்து வரும் போது இதெல்லாம் அவளுக்கு போதுமான்னு இப்பவே யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். அந்த நேரம் நான் ஏதாவது புலம்பினா, அப்போ பார்த்து உங்கண்ணன் நக்கல் பண்ணுவார். என் பயம் அவருக்குப் புரியறதே இல்ல வானதி”
அர்ச்சனாவின் பயமும், கவலையும் வானதிக்கு நன்றாக விளங்கியது.
“உங்க பயம் நியாயமானது அண்ணி. ஆனா, அண்ணாவும், நீங்களும் வேலைக்கு போறீங்க. சொந்த வீடு இருக்கு. நகை சேர்த்து வச்சிருக்கீங்க. இனி மேலும் சம்பாரிப்பீங்க, சேர்த்து வைப்பீங்க. அதுனால இப்பவே பதற வேணாம்னு அண்ணா நினைச்சிருக்கலாம் அண்ணி” அர்ச்சனாவின் கைப் பிடித்து அழுத்திக் கொடுத்துச் சொன்னாள் வானதி.
“நீயும் உங்கண்ணனை போலவே பேசுற வானதி. எங்களுக்கு வயசாகுது மா. உங்க அண்ணாவுக்கு இப்போ 40 வயசு. உனக்காவது ஞாபகம் இருக்கா, இல்லையா? ஹெல்த் பத்தி ரொம்ப யோசிச்சு பயப்பட வேண்டியதா இருக்கு. இப்ப தான் நாப்பது வயசுலயே எல்லா நோயும் வருதே. ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக், கேன்சர், சுகர், பிளட் பிரஸர்னு பெரிய லிஸ்ட் போட்டுட்டே போகலாம். ஆறு மாசம் முன்னாடி எங்கம்மாக்கு கர்ப்பப்பை எடுத்தோம். ஞாபகம் இருக்கு இல்ல?”
வானதி தலையசைக்க,
“அப்பவே என்னையும் கர்ப்பவாய் புற்றுநோய்க்கு டெஸ்ட் பண்ண சொன்னாங்க. எனக்கிருந்த பயத்திலேயே நான் டெஸ்ட் பண்ணல. நாப்பதை நெருங்கும் போது ஹார்மோன் எல்லாம் கண்டபடி எகிறி, மூட் ஸ்விங் கொடுக்கும்னு தெரியும் வானதி. ஆனாலும், எல்லாத்தையும் யோசிச்சு, பயப்படாம இருக்க முடியல. நாளைக்கு நாங்க இல்லனா ஹரிணி என்னாவான்னு எல்லாம் யோசிக்கிறேன். தெரியுமா?”
“அண்ணி..”
“நீங்க அவளை பார்த்துப்பீங்கன்னு தெரியும். அவளுக்கு நீங்க இருக்கீங்கன்னு தெரியும். ஆனாலும், இந்த பயம் போக மாட்டேங்குது வானதி. இதைப்பத்தி உங்கண்ணா கிட்ட சொன்னா, நக்கல் பண்ணி சிரிக்கிறார். அதான் கோபம் வந்து கத்தி விட்டுடுறேன். அப்போ என்னையும் அறியாம உன்னை சொல்லி, உங்களை கம்பேர் பண்ணி தான் அவரைத் திட்டுறேன். ரியலி சாரி வானதி. நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திங்கன்னு தெரியும். நான் அப்படி பேசக் கூடாது தான்”
அர்ச்சனாவின் பயங்கள் அனைத்தும் வானதிக்கும் இருக்க, அமைதியாக கேட்டுக் கொண்டாள் அவள்.
இதைப் பற்றி முன்னரே அம்மாவும் அவளிடம் சொல்லியிருக்க, அவளுக்கு அது அதிர்ச்சியையும் அளிக்கவில்லை.
“அண்ணா வெயிட் பண்ணிட்டு இருக்க புரொமோஷன் அவனுக்கு சீக்கிரம் கிடைச்சுடும் அண்ணி. அப்புறம் பாருங்க. நீங்களும் பைனான்சியலா ஸ்ட்ராங் ஆகிடுவீங்க. ஒருவேளை அண்ணாக்கு முன்னாடி உங்களுக்கு புரொமோஷன் கிடைச்சா..”
“என் சம்பளம் மொத்தத்தையும் சேவிங்ஸ்ல போட்டுடுவேன்” என்று சொல்லி சிரித்தாள் அர்ச்சனா.
“சில நேரம் நான் ரொம்ப யோசிச்சு குழப்பிக்கறேன்னு தோனும் வானதி. ஆனா, திருந்த முடியலையே” என்று அர்ச்சனா புலம்ப, “ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சினை அண்ணி. இந்த வயசில் லைஃப் பத்தின பயம், கோபம், எரிச்சல் எல்லாம் சாதாரணம்னு என் டாக்டர் சொன்னாங்க. கொஞ்ச நாள்ல நமக்கே பழகிடும், விடுங்க” என்று வானதி சொல்லவும், சத்தமாக சிரித்தாள் அர்ச்சனா.
“திடீர்னு நம்ம லைஃப்ல எதுவுமே நம்ம கன்ட்ரோல்ல இல்லாத மாதிரி ஃபீல் ஆகுது வானதி. என்னமோ கண்ணை கட்டி விட்ட குதிரை மாதிரி ஒரே இடத்தை சுத்தி ஓடுறோமோனு இருக்கு. எதையாவது செஞ்சு நம்ம கை நழுவி போற வாழ்க்கையை இறுக்கிப் பிடிச்சுடணும்னு போராடுறேன்” அர்ச்சனாவின் பார்வை மாதவனின் மேல் அழுத்தமாக படிந்திருந்தது.
“இதையெல்லாம் அண்ணாகிட்ட சொல்லுங்க அண்ணி. அவன் உங்களைப் புரிஞ்சுப்பான்” என்றாள் வானதி மென்மையாக.
“அப்படியா சொல்ற? உன் பயம், ஸ்ட்ரெஸ், எல்லாத்தையும் நீ இளங்கோகிட்ட டிஸ்கஸ் பண்ணியா? அவ்வளவு ஏன், நீ இப்போ வேலையை விட்டு படிக்கப் போறது எதுக்குன்னு நேர்மையான பதிலைச் சொல்லு, பார்ப்போம்” என்று அர்ச்சனா கேட்க, அவளை ஆச்சரியமாகப் பார்த்தாள் வானதி.
“நீங்க சொன்னது தான் அண்ணி. நானும் எதுக்கு ஓடுறேன்னே தெரியாம ஓடுற ஃபீல். பசங்க, வீடு, வேலைன்னு ஓடினாலும் எதையோ பாதியில் விட்ட ஃபீல். அப்பா ஆசையை, என் ஆசையை, இளங்கோ என்னை ஆடிட்டரா பார்க்க விரும்பினதை செய்யுறது மூலமா என்னாலயும் முடியும்னு எனக்கு நானே நிரூபிக்க விரும்பறேன் அண்ணி.”
“உன்னால கண்டிப்பா முடியும் வானதி. ஆமா, இளங்கோக்கு இந்த காரணத்தை சொன்னியா?”
“அதுக்கு அவசியமே இல்லண்ணி.” என்று வானதி பூடகமாக பதில் சொல்ல, அவள் சொல்லாமல் விட்டதையும் புரிந்துக் கொண்டு சிரித்தாள் அர்ச்சனா.
“ஷப்பா, எனக்கு பேசி பேசி பசிக்கவே ஆரம்பிச்சுடுச்சு வானதி. சாப்பிடு” என்று அர்ச்சனா சொல்லவும், இருவரும் பசியுணர்ந்து வேகமாக உணவை உண்டார்கள்.
“அப்படி என்ன ரகசியம் பேசுறீங்க ரெண்டு பேரும்?” மாதவன் கேட்க, “அதான் ரகசியம்னு தெரியுது இல்லண்ணா? அப்புறம் ஏன் கேட்கிற?” என்ற தங்கையை பார்த்து பல்லைக் கடித்தான் அவன்.
“உன்னைப் பத்தி தான் அண்ணி கம்ப்ளைண்ட் பண்ணாங்க. இரு, அம்மாகிட்ட சொல்றேன்” என்று வானதி சொல்லவும் அவன் அர்ச்சனாவை கோபமாக பார்க்க, “என்ன அம்மாகிட்ட சொல்லணும்?” என்று பாக்கியமும் மகளிடம் கேட்டார்.
“அதுவாம்மா, அது வந்து ஹரிணிக்கு அவங்க மாமாவை பார்க்கணுமாம். ஆனா, அவர் ஃபேக்டரி விசிட் போய் இருக்கார். சோ, அவ என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுக்க சொல்லி எனக்கு ஆர்டர் போட்டு இருக்கார். உன் பேத்திக்கு என்ன வேணும்னு கேட்டு சொல்லும்மா” என்றாள் வானதி.
“ஓ, சரி, சரி” என்ற பாக்கியம், “ஹரிணி, உனக்கு என்ன வேணும்னு உங்கத்தைக்கிட்ட சொல்லு செல்லம். உனக்கு இப்பவே வாங்கித் தருவாங்க” என்று பேத்தியை அருகில் அழைத்துச் சொன்னார் அவர்.
ஹரிணி சுற்றும் முற்றும் பார்த்து யோசிக்க, “பாப்பா அத்தைக்கிட்ட எதுவும் கேட்கக் கூடாது” என்று மகளை மிரட்டினான் மாதவன்.
“நீ வேற பேசாம இருண்ணா” என்ற வானதி, மருமகளை இழுத்து பக்கத்தில் இருத்திக் கொண்டாள்.
கணவனை அலைபேசியில் அழைத்தபடி, ஹரிணியிடம், “ஹரிணி, நீ என்ன கேட்டாலும் வாங்கித் தர சொல்லியிருக்காங்க மாமா. தங்கத்துக்கு என்ன வேணும் சொல்லுங்க. ட்ரெஸ்? டாய்ஸ்? வளையல், தோடு?” என்று வானதி அடுக்கிக் கொண்டே போக, “எனக்கு அதெல்லாம் வேணாம் த்த. மாமா வந்தா போதும். மாமா பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு” என்றாள் ஹரிணி.
“நேத்ரனும், நட்சத்திராவும் மட்டும் எங்கப்பாவை மாமா, மாமா சொல்லி கூப்பிடுறாங்க. அப்பாவும் அவங்களை கொஞ்சுறார். எனக்கும் மாமா வேணும். இளங்கோ மாமா தான் வேணும். நீங்க ட்ரெஸ் வாங்கித் தந்து என்னை பேசிஃபை (Pacify) பண்ண வேணாம்” கோபமும், ஏக்கமும் கலந்த குரலில் ஹரிணி சொல்ல, வானதிக்கு மனது உருகிப் போனது.
“என் தங்கமே. மாமா வருவாங்க குட்டி. நீ இன்னைக்கு என் கூட வீட்டுக்கு வாயேன்” என்று அவளை சமாதானப்படுத்த வானதி முயல, அவளின் பிடியில் அடங்காமல் திமிறினாள் ஹரிணி.
“வானதி..” என்ற இளங்கோவின் குரலை கேட்டதும் தான், கணவன் அழைப்பை ஏற்று அவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டிருக்கிறான் என்பதையே உணர்ந்தாள் அவள்.
“கேட்டுச்சாங்க?” என்று அவள் கேட்கவும், “ம்ம்” என்றவனுக்கு குற்ற உணர்ச்சியில் குரலே வரவில்லை.