கடந்த சில வருடங்களாக வானதியும் இதே புகாரைத் தானே வாசிக்கிறாள்.
“இன்னைக்காவது வீட்ல இருங்களேன் பிளீஸ். இன்னைக்கு சீக்கிரம் வீட்டுக்கு வாங்களேன் பிளீஸ். ஸ்கூல்ல இருந்து உங்களுக்கு மெஸேஜ் வந்தது தானே? நாளைக்கு பேரன்ட்ஸ் மீட்டிங் இருக்கு. நீங்க வருவீங்க தானே?” என்று ஆரம்பித்து, “உங்களால முடியுமா? உங்களுக்கு டைம் இருக்குமா?” என்று தயங்கி கேட்டு, இறுதியில், “நான் பார்த்துக்கறேன்” என்று அனைத்தையும் வானதியே பார்த்துக் கொள்வது அவனுக்குத் தெரியாமல் இல்லை. ஆனாலும், வானதியை போல வேலை, வீடு, குடும்பம் இவற்றுக்கு நடுவில் சமநிலையை அவனால் பேண முடியவில்லை.
“நீங்களே ஹரிணி கிட்ட பேசுங்க” என்று வானதி சொல்லவும் கலைந்து, “இரு, நான் வீடியோ கால்ல வர்றேன்” என்று அழைப்பை துண்டித்து காணொளி அழைப்பில் வந்தான் இளங்கோ.
“ஹாய் மாமா” என்று ஹரிணி துள்ளி குதித்து கையசைக்க, அலைபேசியை எட்டிப் பார்த்து, “அப்பா” என்று பாய்ந்தாள் நட்சத்திரா.
“ஹரிணி தங்கம். மாமா ரியலி சாரி. இன்னைக்கு வந்து உங்களை மால் கூட்டிட்டு போற பிளான்ல தான் மாமா இருந்தேன். ஆனா, அவசரமா ஃபேக்டரி வர வேண்டியதா ஆகிடுச்சு செல்லம். அதான் மாமாவுக்கு பதிலா அத்தை உன்னை மாலுக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க இல்ல. அப்புறமும் மாமா மேல கோபப்பட கூடாது” என்று இளங்கோ சமாளிக்க,
“அத்தை தான் எப்பவும் கூட்டிட்டு போறாங்க” என்று ஹரிணி பிடியை விடாமல் புகார் படிக்கவும், சிரிப்பை அடக்கினாள் வானதி. அலைபேசி திரையின் ஓரமாக தெரிந்த மனைவியை ஒரு நொடி முறைத்து விட்டு, “அடுத்த வாரம் உன்னை கண்டிப்பா அவுட்டிங் கூட்டிட்டு போறேன் மாமா. ஓகே?” என்று இளங்கோ கேட்க, ஹரிணி மௌனமாக திரையை பார்த்து நின்றாள்.
“அப்பா, நாம ஸ்பைடர் மேன் மூவி போலாம். ஹரிணிக்கு பிடிக்கும்” என்று நேத்ரன் கத்த, “நோ நோ. ஹரிணி சொல்றது தான் கேட்பேன் நான்” என்றான் இளங்கோ.
“இப்படித்தான் சொல்வீங்க மாமா. ஆனா, வர மாட்டீங்க” என்று தன் நிலையிலேயே நின்றாள் ஹரிணி. வானதிக்கு பாவமாக போனது. கணவனின் நிலையும் திண்டாட்டமாக இருக்க, அதைப் பொறுத்துக் கொள்ள முடியாது, “ஹரிணி தங்கம், இந்த டைம் கண்டிப்பா மாமா பிராமிஸை ப்ரேக் பண்ண மாட்டாங்க டா. அத்தை சொல்றேன் நம்பு” என்று சொல்ல, “ஓகே” என்று இறங்கி வந்தாள் ஹரிணி.
இவர்களின் பஞ்சாயத்து புரியாமல், இதற்கு நடுவிலும், “அப்பா, அப்பா..” என்று கத்தி அலைபேசியை அம்மாவின் கையில் இருந்து பிடுங்க முயற்சித்தாள் நட்சத்திரா.
“அடியே வாண்டு குட்டி. பேசாம இரு.” என்று மகளை அதட்டினாள் வானதி.
“ஹரிணி, நேத்ரன், இங்க பாருங்க” இளங்கோ ரகசியமாக அழைக்க, பிள்ளைகள் அவனை ஆர்வமாக பார்த்தனர். அலைபேசியை சற்றே உயர்த்தி பிடித்து தனக்குப் பின்னால் காண்பித்தான் இளங்கோ. பலமுறை கண்ட காட்சி தான். ஆனாலும், பிள்ளைகள் மகிழ்ந்து போனார்கள். அவனுக்கு பின்னால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வரிசை வரிசையாக கார்கள் அணிவகுத்து நின்றிருக்க, பிள்ளைகள் அதை காணொளியில் கண்டு உற்சாக குரல் எழுப்பினார்கள்.
“உங்களை ஒரு நாள் ஃபேக்டரி..” என்று அவன் ஆரம்பிக்கும் போதே, “வேணாம். பிள்ளைங்க கிட்ட பிராமிஸ் பண்ணி மாட்டிக்காதீங்க” என்று கணவனை அவசரமாக எச்சரித்தாள் வானதி.
“ஓகே. பண்ணல” என்று கோபமாக சொன்னான் இளங்கோ.
மாதவன், அர்ச்சனா, பாக்கியம் மூவரும் அதைக் கேட்டு புன்னகைத்தனர். மேலும் சில நிமிடங்கள் பிள்ளைகளுடன் பேசி விட்டு அழைப்பை துண்டித்தான் இளங்கோ.
அனைவரும் உணவை முடித்து அங்கேயே ஓய்வாக அமர்ந்திருந்தார்கள்.
அந்த தளத்தின் சுவர் முழுவதும் கண்ணாடியில் இருக்க, எதிரே தெரிந்த சென்னையின் போக்குவரத்து நெரிசலையும், அதில் ஊர்ந்த வாகனங்களையும் அங்கிருந்தே அவர்களால் பார்க்க முடிந்தது.
“அந்த பக்கம் போகலாம் மா” என்று வானதி சொல்லவும், சுவரை ஒட்டியிருந்த மேஜைக்கு மாறினார்கள்.
“என்ன திரும்பவும் உட்கார்ந்துட்டீங்க? வாங்க, ஒரு ரவுண்ட் போய்ட்டு வரலாம்” என்று மாதவன் அழைக்க, “போண்ணா, டையர்டா இருக்கு. நிறைய சாப்பிட்டுட்டேன் வேற. என்னால இப்போ நடக்க முடியாது” என்றாள் வானதி.
“சரி. அப்போ நான் பசங்களை கூட்டிட்டு போய் விளையாட வச்சு கூட்டிட்டு வர்றேன்” என்று மாதவன் பிள்ளைகளுடன் நடக்க, பாக்கியமும் அவர்களைப் பின் தொடர்ந்தார்.
“உங்கண்ணன் ரொம்ப பண்றார்” என்று கணவனின் முதுகை வெறித்து கோபமாக சொன்ன அர்ச்சனா, “அவரை சமாதானம் பண்ண என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு. ஆனா, அதுக்கு உன் ஹெல்ப் வேணும்” என்று சொல்ல, “என் ஹெல்ப்பா?” என்று சந்தேகமாக கேட்டாள் வானதி.
“ம்ம். நீ தான் செய்யணும்” என்ற அர்ச்சனா, தன் கைப்பையில் இருந்து ஒரு தாளை எடுத்து வானதியின் முன் வைத்தாள்.
“என்னது அண்ணி இது?”
“திருப்பிப் பாரு” என்று சிரிப்புடன் சொன்னாள் அர்ச்சனா.
மெல்லிய ஆர்வம் முகமெங்கும் பரவ நான்காக மடித்திருந்த தாளைப் பிரித்தாள் வானதி.
“வாவ். எங்களுக்கா அண்ணி? என்ன திடீர் சர்ப்ரைஸ் எல்லாம் கொடுக்கறீங்க?” அதிர்ச்சியும், ஆச்சரியமுமாக வானதி கேட்க, அர்ச்சனா அவளை ஆராய்ச்சியாகப் பார்த்தாள்.
கர்நாடகாவில் உள்ள மலை வாசஸ்தலமான கூர்க்கில் அவர்கள் குடும்பமாக நான்கு நாட்கள் தங்குவதற்கு ஹோட்டல் அறையை முன் பதவி செய்திருந்தாள் அர்ச்சனா.
இளங்கோவின் பெயரில் இருந்த ஹோட்டலின் முன்பதிவை நம்பவியலா ஆச்சரியத்துடன் பார்த்தாள் வானதி. அது அவர்கள் தேனிலவு சென்ற இடம் மற்றும் தங்கும் விடுதி என்பதால் அவளுக்கு இன்னமுமே ஆச்சரியமாக தான் இருந்தது.
“என் ஹெல்ப் வேணும்னு சொன்னீங்க அண்ணி. ஆனா, எங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கறீங்க. எனக்கு ஒன்னும் புரியல. என்ன நடக்குது இங்க?” வானதி மீண்டும் கேட்க, “அடுத்த மாசத்துக்கு தான் டிக்கெட் அண்ட் ஹோட்டல் புக்கிங் ரெண்டும் பண்ணியிருக்கேன் வானதி. சோ, உங்களுக்கு டிரிப் பிளான் பண்ண நிறைய நாள் இருக்கு. எல்லாமே நான் பே பண்ணிட்டேன். ஜஸ்ட் கோ அண்ட் என்ஜாய்” என்று அர்ச்சனா சொல்ல, “அண்ணி…” என்று அவளை கேள்வியாக பார்த்தாள் வானதி.
“ஓகே, ஓகே. சொல்றேன். மிஸ்டர் மாதவனுக்கு ஒரு டிரிப் புக் பண்ணித் தர முடியுமா உன்னால? நீ புக் பண்ணா உங்கண்ணா வேணாம், நான் வரலைன்னு சாக்கு போக்கு சொல்ல மாட்டார். சோ, பிளீஸ்” என்று கண்ணை சுருக்கி அர்ச்சனா கேட்க, ஒரு முழு நிமிடம் நிதானித்து, அர்ச்சனாவின் திட்டம் முழுமையாக புரியவும் சிரித்தாள் வானதி.
“இளங்கோ ஒன்னும் சொல்ல மாட்டார். ஆனா, அண்ணாவுக்கு தெரிஞ்சா என்ன சொல்லுவான்னு தெரியலையே” என்று வானதி சத்தமாக புலம்பி யோசிக்க, “நீ எங்களுக்கு டிரிப் புக் பண்ணி தந்திருக்க. பதிலுக்கு நானும் புக் பண்ணித் தர்றேன். உங்க அண்ணனுக்கு இவ்வளோ தெரிஞ்சா போதும்” என்று அழுத்தமாக சொன்னாள் அர்ச்சனா.
“இல்ல அண்ணி…”
“எம்மா வானதி. வன தேவதையே. உன் விஷயத்துல எதுக்கும் உங்கண்ணா கோபப்பட மாட்டார். அதுனால ரொம்ப யோசிக்காத.” என்று கடுப்புடன் சொல்ல, “ம்ம், நான் எதுக்கும் இளங்கோகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு..” என்று தயக்கத்துடன் ஆரம்பித்த வானதி, அர்ச்சனாவின் முறைப்பில் பேச்சை பாதியில் நிறுத்தினாள்.
“இதுக்கு முன்னாடி இது மாதிரி நடந்ததே இல்லாத மாதிரி ரொம்ப பண்ற வானதி நீ” அர்ச்சனா சலித்துக் கொள்ள, “அது ரெண்டு தடவை நாங்க போக பிளான் பண்ணி போக முடியாம உங்களுக்கு கொடுத்தோம்” தயக்கத்துடன் சொல்லி, நாக்கை கடித்தாள் வானதி.
“விடு. எல்லாம் தெரியும் எனக்கு. இந்த டைம் கோவா இல்லனா குளு மணாலி டிக்கெட் போட்டு கொடு” என்று அர்ச்சனா அழுத்தி சொல்லியும், வானதியின் முகத்தில் சிந்தனைக் கோடுகள் கலையாமல் இருந்தது.
“சரிங்க அண்ணி. டிக்கெட் போட்டுட்டு சொல்றேன்” என்றவள், முதலில் கணவனிடம் இது குறித்து பேச வேண்டும் என மனதில் குறித்துக் கொண்டாள்.
“இதை எடுத்து பத்திரமா வை” என்று அர்ச்சனா சொல்ல, அவள் கொடுத்த தாளை கைப்பையில் பத்திரப்படுத்தினாள் வானதி.
“மணி அஞ்சாகப் போகுது வானதி. உங்கண்ணாவும், குட்டீஸும் என்ன பண்றாங்கன்னு பார்ப்போம். வா” என்று அர்ச்சனா சொல்லவும், எழுந்து வெளியில் வந்தார்கள் இருவரும்.
“அத்தைகிட்ட ஆறு மணிக்குள்ள வீட்டுக்கு வந்துடுவோம்னு சொல்லிட்டு வந்தேன் அண்ணி. அச்சோ, டைமாச்சு. இவரும் வந்திடுவார்” என்று வானதி படபடத்து நிமிர, எதிரே அவளை நோக்கி வேக எட்டுகள் வைத்து நடந்து வந்து கொண்டிருந்தான் இளங்கோ.
“நீங்க இங்க வர்றேன்னு சொல்லவே இல்லயே?” அர்ச்சனா அருகில் இருப்பதை மறந்தவளாக கணவனை மலர்ந்த முகத்துடன் எதிர்க்கொண்டாள் வானதி. மனைவியின் கைப் பிடித்து, “ஹரிணி எங்க?” என்று கேட்டான் இளங்கோ.
ஐந்தே நிமிடங்களில் குழந்தைகள் இருந்த விளையாட்டு பகுதிக்கு அவர்கள் செல்ல, மாமாவை கண்டதும் ஓடி வந்தாள் ஹரிணி.
ஹரிணி ஆவலுடன் மாமாவின் கைப் பிடித்து அந்த மாலை மீண்டும் சுற்றி வந்தாள். பிள்ளைகளுக்கு புதிய உடைகளும், விளையாட்டு பொருட்களும் இளங்கோ வாங்கித் தர, குழந்தைகளுக்கு அதுவே போதுமானதாக இருந்தது.
“நீ ஏன் டல்லா இருக்க?” மனைவியின் சோர்ந்த முகம் பார்த்து இளங்கோ கேட்க, “டல்லாவா? இல்லையே. நான் நல்லா தான் இருக்கேன்” என்று அவள் சொல்ல, புருவங்கள் சுருங்க மனைவியின் கண்களை கூர்ந்தான் இளங்கோ.