“வானதி, என்னாச்சு?” இளங்கோ மீண்டும் கேட்க, முழுக் கை சட்டையை பாதி வரை மடித்து விட்டு, தீவிர முகபாவத்துடன் நின்றிருந்த கணவனை ஒரு கணம் இமைக்காமல் பார்த்து, “அதெப்படிங்க நான் சண்டை போடுவேன்னு தெரிஞ்சு, உஷாரா முதல்ல நீங்க பேசாம இருந்துடுறீங்க?” என்று வானதி கேட்க, தன் குட்டு வெளிப்பட்டதில் சிரமப்பட்டு சிரிப்பை அடக்கினான் இளங்கோ.
“ஹரிணிகிட்ட மால் கூட்டிட்டு போறேன்னு பிராமிஸ் பண்ணிட்டு, உங்களால வர முடியலைன்னதும் உஷாரா என் தலையில் கட்டிட்டீங்க. அப்படித்தானே? நீங்க ஏன் வரலைன்னு கேட்டு நான் சண்டைப் போடுறதுக்கு முன்னாடி, அப்படியே என் மேல கோபமா இருக்கிற மாதிரி நீங்க பாவ்லா பண்ணிட்டு, என்கிட்ட பேசாம ஆபீஸ் கிளம்பியாச்சு. இத்தனை வருஷமா உங்க கூட குடும்பம் நடத்துறேன். இது கூட என்னால கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சீங்களா?” முகம் முழுக்க புன்னகையுடன், அவன் புறமாக சாய்ந்து வானதி கேட்க, தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவர்கள் அன்பாக பேசிக் கொள்வதை போலவே தெரியும் என சரியாக கணித்த இளங்கோ, சத்தமில்லாமல் உடல் குலுங்க சிரித்தான்.
“சரி, பேச்சை மாத்தாத. நீ ஏன் டல்லாருக்கன்னு சொல்லு” அந்தக் குரலில் இருந்த அழுத்தம் வானதியை தானாக பதில் சொல்ல வைத்தது.
அப்போது, “அம்மா” என்று நேத்ரன் அழைக்க, இருவரும் ஒன்றாகத் திரும்பினார்கள்.
“அம்மாச்சியும், அத்தையும் வீட்டுக்கு கிளம்பறாங்க” மாதவனின் கைப் பிடித்து தொங்கியபடி நேத்ரன் சொல்ல, மனைவியின் கையை மெல்ல விடுவித்தான் இளங்கோ. மாதவன் தோளில் சாய்ந்திருந்த நட்சத்திராவை வாங்கிக் கொண்டான் இளங்கோ.
“எங்கத்தைக்கும், அம்மாக்கும் ஃபுல் பாடி செக்அப் பண்ணலாம்னு இருக்கேன் அண்ணி. அடுத்த வாரம் சனிக்கிழமை ஹாஸ்பிட்டல் அப்பாயின்மெண்ட் வாங்கலாம்னு இருக்கேன். அவங்க கூடவே நாமளும் ஒரு செக் அப் போட்டுடுவோமா? நீங்க என்ன சொல்றீங்க? உங்களுக்கு ஓகே தானே?” என்று அர்ச்சனாவிடம் சென்று கேட்டாள் வானதி.
அர்ச்சனா திரும்பி பாக்கியத்தை பார்த்து, “அத்தை என்ன சொன்னாங்க?” என்று கேட்டாள்.
“அம்மாவை கூட்டிட்டு வர வேண்டியது என் பொறுப்பு அண்ணி. உங்களுக்கு சனிக்கிழமை ஓகேவான்னு மட்டும் சொல்லுங்க”
“ம்ம், எனக்கு ஓகே தான் வானதி. நானும் நாலைஞ்சு மாசமா கைனகாலஜிஸ்ட்டாவது பார்க்கணும்னு யோசிச்சுட்டு தான் இருக்கேன். எனக்கு ஒரு மாசம் ஓவர் பிளீட்டாகுது. அடுத்த மாசம் பீரியட்ஸ் தள்ளிப் போய் வந்து டென்ஷன் பண்ணுது. டாக்டர் பார்க்கணும்னு நினைச்சாலே பயமா இருக்கு வானதி”
“இந்த ஓவர் ப்ளீடிங் பிரச்சினை எனக்கும் இருக்கு அண்ணி” என்று வானதி சொல்லவும், “அச்சோ. ரொம்ப கஷ்டமாச்சே. போட்டுப் படுத்தி எடுத்துடுமே” என்ற அர்ச்சனா, “இதுக்கெல்லாம் உடனே போய் டாக்டர் பார்க்க மாட்டியா நீ?” என்று சத்தம் போடவும், மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு, “அதை யார் சொல்றாங்க பாருங்க” என்று நக்கலாக சொன்னாள் வானதி.
“ஹெல்த் மேல அக்கறையே இல்ல உனக்கு.” என்று அர்ச்சித்த அர்ச்சனா, வானதி, “அப்புறம்?” என்று கேலியாக கேட்கவும், “சரி, விடு. எனக்குத்தான் அக்கறை இல்ல” என்று முடித்தாள்.
“இளங்கோ இப்பத்தானே ஜப்பான் போய்ட்டு வந்தாரு?” என்று அர்ச்சனா கேட்ட தொனி முதலில் வானதிக்கு புரியவில்லை.
“அச்சோ சாரி. எப்படி அறிவில்லாம பேசுறேன் நான். எனக்கு இன்னைக்கு என்னமோ ஆச்சு. பேசத் தெரியாம உளருறேன், பாரு” என்று வேக வேகமாக சொல்லி, அர்ச்சனா தர்மசங்கடமாக தன் தலையில் அடிக்கவும் தான் வானதிக்கு, அவளின் கேள்வியின் சாரமே விளங்கியது.
வானதி கூச்சத்துடன் சிரித்து சமாளித்து, “நான் ஹாஸ்பிட்டல்ல அப்பாய்ன்மெண்ட் வாங்கிட்டு உங்களுக்கு இன்பார்ம் பண்றேன் அண்ணி. ஓகே? இப்போ பை” என்று படபடவென பேசி விட்டு அங்கிருந்து நகர்ந்து அம்மாவிடம் சென்றாள் அவள்.
“என்ன வானு, அதிசயமா உங்கண்ணியும், நீயும் இன்னைக்கு ரொம்ப ஒட்டிக்கிட்டு சுத்தறீங்க? வந்ததுல இருந்து அப்படி என்ன பேசுறீங்க ரெண்டு பேரும்?” பாக்கியம் கேட்கவும், பதில் சொல்ல முடியாமல் முழித்தாள் வானதி.
சாதாரணமாக கேலி கிண்டல் எல்லாம் அவர்களுக்குள் சகஜம் என்றாலும், இப்படி அடுத்தவரின் அந்தரங்கத்திற்குள் ஒருநாளும் தப்பி தவறி கூட நுழைந்தது கிடையாது. அர்ச்சனாவை அண்ணனின் மனைவியாக என்றுமே தூர தான் நிறுத்துவாள் வானதி. அவள் கேட்டதை நினைக்கையில் இப்போதும் சிரிப்பு வர, உதடு கடித்து அடக்கினாள்.
“வானதி, உன்னை தான் கேட்கறேன்” என்று மகளைப் பிடித்து உலுக்கினார் பாக்கியம்.
வானதி, அம்மாவிடம் எதையும் மறைத்ததுக் கிடையாது. ஆக, அண்ணியின் திட்டத்தை மறைக்காமல் அம்மாவிடம் அப்படியே ஒப்பித்து விட்டாள்.
“அண்ணி, எங்களுக்கு நாலு நாளைக்கு கூர்க் டிரிப் புக் பண்ணித் தந்திருக்காங்க மா.” என்று அவள் சொன்னதும், கண்கள் ஆச்சரியத்தில் விரிய, “யாரு, அர்ச்சனாவா?” என்று கேட்டார் பாக்கியம்.
“அப்புறம் அர்ச்சனா அண்ணி இல்லாம, எனக்கு வேற எத்தனை அண்ணிம்மா இருக்காங்க?” வானதி இடக்காக கேட்க, “ஆமான்னு ஒத்த வார்த்தையில் பதில் சொல்றதை விட்டுட்டு வாய் பேசாத” என்று மகளை கடிந்தார் பாக்கியம்.
“ஆமாம்மா, ஆமா” என்று அம்மாவின் முகத்துக்கு நேராக குனிந்து அழுத்தமாக சொன்ன வானதி, “நம்பு மா, பிளீஸ்” என்றாள்.
“இது உங்கண்ணனுக்கு தெரியுமா?” என்று சந்தேகமாக கேட்ட பாக்கியம், “ஹோட்டலுக்கு பணம் கட்டியாச்சா?” என்றும் சேர்த்து கேட்க, முகத்தை லேசாக நிமிர்த்தி அம்மாவை கிண்டலாக பார்த்தாள் வானதி.
“அர்ச்சனா பணமும் கட்டிட்டாளா? என்ன ஒரே ஆச்சரியமா இருக்கு. என் மருமகளுக்கு, என் பொண்ணு மேல திடீர்னு பாசம் பொங்குதே. இது எதுக்குன்னு தெரியலையே” என்று மெல்ல புலம்பியவர், மகளை கூர்ந்து கேள்வியாக பார்க்க, வானதி அவர்களின் திட்டத்தைச் சொல்லி விட்டாள்.
“அதானே பார்த்தேன்” என்று பாக்கியம் சிரிக்க, வானதி அம்மாவை கடுமையாக முறைத்தாள்.
“நல்லா புரிஞ்சுது மா. அண்ணா என்னை ஒன்னும் சொல்ல மாட்டான்னு தான் அண்ணி என்கிட்ட கேட்டது. எனக்கும் டிரிப் போக ஆசையா இருந்தது. அதுனால ஓகே சொல்லிட்டேன். அண்ணனை நான் பார்த்துக்கறேன். நீ குறுக்க புகுந்து எதுவும் கலாட்டா பண்ணாம இரும்மா போதும். நாத்தனாருங்களுக்கு நடுவுல நாரதர் வேலை பார்க்காதம்மா” என்று வானதி சிரிப்பை அடக்கியபடி கண்டிப்பாக சொல்ல,
“ஆமா, நான்தான் குறுக்க வரப் போறேன். நாரதர் வேலை என்னைக்கு பார்த்திருக்கேன் நான்?” என்று கோபமாக கேட்டவர், “என் பிள்ளைங்க சந்தோஷமா இருந்தா போதும் எனக்கு” என்று முணுமுணுக்க, வானதியின் காதில் அது தெளிவாக விழுந்தது.
“நான் சொல்றதை எல்லாம் சீரியஸா எடுத்துக்காதம்மா.” என்று அம்மாவின் தோளில் கைப் போட்டு சமாதானம் செய்த வானதி, “நீ எங்க கூட வாம்மா. அண்ணா, அண்ணி தனியா போகட்டும்” என்று ரகசியம் போல சொல்ல, “நான் எங்கேயும் வரல, போ” என்று மகளின் கையை தட்டி விட்டார் பாக்கியம்.
“அதையும் பார்ப்போமே.” என்று அம்மாவிடம் சவால் விட்டு சிரித்தாள் வானதி.
“வாய் பேசாம வீட்டுக்கு கிளம்பு. நீ போய் தானே வீட்ல டிஃபன் செய்யணும்?”
“ஆமாம்மா. அதுக்குன்னு என்னை விரட்டாத” சலிப்புடன் சொல்லி எழுந்து கொண்டாள் வானதி.
அவர்கள் வீட்டை அடையும் போது மணி இரவு ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது.
“இதோ, இப்போ இட்லி ஊத்திடுறேன்த்த. ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க. சாப்பிடலாம்” வீட்டிற்குள் நுழைந்ததும் அதைத்தான் சொன்னாள் வானதி.
கூடத்தில் அமர்ந்து தொலைக்காட்சியில் படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள் பெரியவர்கள் இருவரும்.
வானதி திரும்பி தாமரையை பார்க்க, “நீ மதியம் வச்சுட்டு போன மீன் குழம்பு இருந்தது. நான் இட்லி மட்டும் ஊத்திக்கிட்டேன். ஆமா, நீங்க சாப்பிட்டீங்களா இல்லையா? உங்களுக்கு இட்லி ஊத்தவா?” என்று தாமரை கேட்க, வானதிக்கு மயக்கம் வராத குறை தான்.
“நாங்க இனிமேதான் சாப்பிடணும் மா.” என்று அம்மாவுக்கு பதில் சொல்லி, அப்பாவின் அருகில் அமர்ந்தான் இளங்கோ.
வானதி மகளை குளிக்க வைத்து, உடை மாற்றி விட்டாள். அதற்குள் நேத்ரனும் குளித்திருந்தான்.
“எனக்கு டின்னர் வேணாம்மா. தூக்கம் வருது” நேத்ரன் சொல்ல, நாள் முழுக்க ஆட்டம் போட்ட அசதியில் அவளின் கைகளிலேயே உறங்கி விழுந்தாள் நட்சத்திரா.
“பால் மட்டும் குடிச்சிட்டு படு நேத்ரா” என்று மகனிடம் வானதி சொல்ல, சரியென்று தலையசைத்து அப்பாவிடம் போய் அமர்ந்தான் அவன்.
இளங்கோ எழுந்து வந்து தூக்க கலக்கத்தில் சாமியாடிய மகளை மனைவியிடம் இருந்து தூக்கிக் கொண்டான்.
வானதி சமையல் அறை செல்ல, தாமரை அங்கிருந்தார்.
“இந்தா, இட்லி சூடா இருக்கு. எடுத்துட்டு போ. மீன் குழம்பும் சுட வச்சுட்டேன்” என்று பாத்திரங்களை எடுத்து அவளிடம் நீட்ட, அதை வாங்கிக் கொண்டு போய் உணவு மேஜையில் வைத்துத் திரும்பினாள் வானதி.
“வேற எதுவும் வேணுமா? பிள்ளைகளை சாப்பிட வைக்க வேண்டியது தானே?” என்று தாமரை கேட்க, “இல்லத்த, பிள்ளைங்களுக்கு பால் போதும்.” என்று சொல்லிக் கொண்டே குளிர்சாதன பெட்டியில் இருந்து பாலை எடுத்துக் காய்ச்சினாள் வானதி.
“வெறும் பால் மட்டுமா கொடுக்கற? இட்லி ஊட்ட வேண்டியது தானே? நைட் பசிக்கப் போகுது” என்று அடுக்கடுக்காக அவர் கேள்விகளை அடுக்க, அவருக்கு பதில் சொல்லியபடி பாலை காய்ச்சி ஆற்றினாள் வானதி.
“இங்க கொண்டா, நான் கொடுக்கிறேன். நீ போய் சாப்பிடு.” அவள் கையில் இருந்த இரண்டு கோப்பைகளையும் வாங்கிக் கொண்டார் தாமரை.
பிள்ளைகள் இருவரையும் அவரே கவனித்து, உறங்கவும் வைத்திருந்தார்.
இளங்கோ இரவு உணவை முடித்து சிறிது நேரம் அப்பாவுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு அறைக்குள் வர, அங்கே மனைவியை காணவில்லை. படுக்கை அறை முழுவதையும் அலசியது அவன் கண்கள். வானதியின் சுவடே அங்கில்லை.
அவசரமாக நடந்து சென்று திரைச்சீலைகளை விலக்கினான். அவன் எதிர்பார்த்தபடி, அறையை ஒட்டிய பால்கனியில் நின்றிருந்தாள் வானதி.
இரவையும், இருளையும் கிழித்துக் கொண்டு சீரான லயத்துடன் மழைத் தாரைகள் மண்ணில் விழுந்து கொண்டிருந்ததை ரசித்தபடி நின்றிருந்த மனைவியை நெருங்கி நின்றான் இளங்கோ. அவனை உணர்ந்ததும் அனிச்சையாய் நகர்ந்தது அவள் கால்கள். கணவனின் தோளில் தோள் உரச நின்றாள் வானதி. மென்மையாய் அவள் இடையில் கரம் கோர்த்து அணைத்துக் கொண்டான் இளங்கோ.
“என்ன யோசனை எல்லாம் பலமாருக்கு?” மழையோடு சேர்ந்து கிசுகிசுத்தது அவன் குரல். மெல்ல கண் மூடி அசையாமல் நின்றாள் வானதி.
“நாம ஆசைப்பட்டது நடந்துடுச்சு இல்லங்க? கல்யாணமாகி பத்து வருஷம் கழிச்சு இப்படித்தானே இருக்கணும்னு நினைச்சோம்.” வானதியின் குரல் காற்றில் அலைபாய்ந்து அவன் செவியை அடைய, “ம்ம்” என்றான் இளங்கோ. அவன் முகத்தை மந்தகாச புன்னகை நிறைக்க, மெல்லத் திரும்பி அவனைப் பார்த்தாள் வானதி.
“நாம இப்பத்தான் லவ் பண்ண மாதிரி இருக்குங்க. அதுக்குள்ள கல்யாணமாகி பத்து வருஷத்துக்கும் மேல ஆகிடுச்சு. நமக்கும் ரெண்டு செல்லக் குட்டிங்க வந்துட்டாங்க” அவன் கண்களைப் பார்த்து வானதி சொல்ல, இரு கைகளிலும் அவள் முகத்தை ஏந்தி, இமைக்காமல் அவளையே பார்த்தது பார்த்தபடி நின்றிருந்தான் இளங்கோ.
“என்ன?” தடுமாற்றத்துடன் வானதி கேட்க, “அதையே தான் நானும் கேட்கறேன் வானதி? என்ன பிரச்சினை உனக்கு? ஏன் சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் டென்ஷனாகி ஸ்ட்ரெஸ் ஏத்திக்கிற?” என்று கனிவும், கரிசனமுமாக கேட்க, “ஐ மிஸ்டு யூ” என்றாள் வானதி.
அத்தனை நெருக்கமாக அவன் கரங்களுக்குள், இறுகிய அணைப்பில் இருந்தபடி மனைவி அதைச் சொல்ல, குறுஞ்சிரிப்புடன் அவளைப் பார்த்தான் இளங்கோ.
அன்றைய தினம் அர்ச்சனா அதைப் பற்றி பேசியதாலோ, என்னவோ, அவர்களின் காதல் காலங்கள் எல்லாம் இப்போது வானதியின் மனக்கண் முன் வந்து நின்றது.
அம்மாவிடம் தான் தன் காதலை முதலில் தெரியப்படுத்தினாள் வானதி. பாக்கியம் அதிர்ச்சியாகி கோபத்தில் மகளை கண்டபடி அர்ச்சிக்க, அந்த சத்தத்தில் அப்பா, அண்ணா இருவரும் அங்கு வந்து விட, அவர்கள் இருவரையும் பார்த்து விட்டு அம்மாவை பார்த்தாள் வானதி.
“வானுவை ஏன் சத்தம் போடுற பாக்கியம்?” கிருஷ்ணமூர்த்தி மனைவியிடம் கேட்க, “உங்க பொண்ணு லவ் பண்றாளாம். நாம கல்யாணம் பண்ணி வைக்கணுமாம்” என்று பட்டென செய்தியை போட்டு உடைத்தார் பாக்கியம். அன்று அப்பா அவளைப் பார்த்த பார்வையை வானதி மறக்கவே மாட்டாள்.
மகளிடம் கோபித்துக் கொண்டு பேசாமல் இருந்தார் கிருஷ்ணமூர்த்தி. தகப்பனுக்கு தானும் சளைத்தவள் இல்லை என்று அவரை பேச வைக்கும் முயற்சிகள் அனைத்தையும் செய்தாள் வானதி. ம்ஹூம், அவர் இறங்கி வரவில்லை.
“எனக்கு மகனும், மகளும் ஒன்னு தான்னு அடிக்கடி சொல்வீங்களேப்பா. ஆனா, அண்ணாக்கு..” என்று அவள் ஆரம்பிக்கும் போதே, “பாக்கியம்” என்று கர்ஜித்தார் கிருஷ்ணமூர்த்தி. அவ்வளவுதான். வானதியின் வாய் தானாகவே மூடிக் கொள்ளும்.
“உனக்கும் பையன் தான் பெருசா மா? நீயும் கூட என்னை மதிக்க மாட்டீங்கற பாரேன்” என்று அம்மாவிடம் போய் நிற்பாள் வானதி.
“இங்க பாரு வானதி, ஒழுங்கா படிப்பை முடிச்சு, ஆடிட்டராகுற வழியை பாரு. இப்படி எங்களுக்கு ஆட்டம் காட்டி கோபப்படுத்தாத சொல்லிட்டேன்” என்று எச்சரிப்பார் பாக்கியம். அடமாக அம்மாவை விட்டு நகராமல் நிற்பாள் வானதி.
சில மாதங்களுக்கு அதுவே தொடர, மாதவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த அம்மாவின் முன்னே சென்று கைக் கட்டி கூர்மையாக பார்த்து நின்றாள் வானதி.
“நீயும் சாப்பிடுறியா? உட்கார்” என்று பாக்கியம் சொல்ல, “ஏம்மா, இன்னும் என் மேல கோபமா இருக்கியா? இருந்துக்கோ. ஆனா, நீயும், அப்பாவும் சம்மதிக்கலன்னா நான் உங்களுக்கு சொல்லாம திருட்டுக் கல்யாணம் பண்ணிப்பேன்.” என்று வானதி சொல்ல, அதைக் கேட்டதும் பாக்கியத்திற்கு அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை.
“நான் கல்யாணம் பண்ணிட்டு நம்ம வீட்டுக்கு வந்துடுவேன். அவர் அவங்க வீட்டுக்கு போய்டுவார். நீங்க சம்மதிக்கிற வரைக்கும் நாங்க தனியாதான் மா இருப்போம்” என்று அவள் வசனம் பேச, கோபமும், அதிர்ச்சியும் ஒருசேர மகளை மூச்சு வாங்க முறைத்தார் பாக்கியம்.
“வானதி, என்ன பேசிட்டு இருக்க நீ?” மாதவன் தங்கையை அதட்ட, அண்ணனை பொருட்படுத்தவில்லை வானதி.
“இல்ல. அந்த பிளான் சரி வராது. ஏன்னா பேரன், பேத்தி பொறந்தா தானே நீங்க மனசு மாறுவீங்க? இல்லம்மா?” என்று வானதி தீவிரமாக சந்தேகம் கேட்க, “அடி கழுத. பேச்சை பாரு. நல்லா வாயிலேயே போடுவேன். யார் உனக்கு இப்படியெல்லாம் ஐடியா கொடுக்கிறது? கெட்டு குட்டிச் சுவரா போய்ட்ட நீ” என்று கத்தினார் பாக்கியம்.
வானதி அசராமல் அமைதியாக, “இது மாதவன் கொடுத்த ஐடியா மா” என்று முணுமுணுக்க, கையில் இருந்த கரண்டியால் மகனை அடித்தார் பாக்கியம்.
“ஏன்டா, தங்கச்சியை கண்டிச்சு நல்லது சொல்லிக் கொடுக்காம, அவளுக்கு ஐடியாவா கொடுக்கிற நீ? பின்ன நீயும் லவ் மேரேஜ் பண்ணவன் தானே? நீ வேற என்ன பண்ணுவ? தங்கச்சி மேல பாசம் இருந்தா இப்படி பண்ணுவியா?” கோபத்துடன் அவர் கத்திய வேகத்தில் கரண்டியும் மாதவனின் தோளை தொட்டு தொட்டு வந்தது.
“ம்மா. நான் சொல்றது கேளு மா முதல்ல” என்று மாதவன் பதிலுக்கு கத்த, “அத்த..” என்ற அர்ச்சனாவின் குரலில் மகனை அடிப்பதை நிறுத்தி விட்டு மருமகளை திரும்பிப் பார்த்தார் பாக்கியம்.
அதுவரை அமைதியாக வேடிக்கைப் பார்த்த வானதி, மெதுவாக அம்மாவை நெருங்கினாள். “இந்த அர்ச்சனாவோட மாதவனை சொல்லலம்மா நான். எனக்கு ஐடியா கொடுத்தது அலைபாயுதே மாதவன்”
என்று அவள் சொல்லவும், வெடித்து சிரித்து விட்டாள் அர்ச்சனா.
“திமிர் பிடிச்ச கழுத” இப்போது கரண்டி வானதியின் பக்கம் திரும்பியது. ஒரே ஓட்டத்தில் அங்கிருந்து நழுவி விட்டாள் அவள்.
இப்போதும் அந்த நினைவுகள் பசுமையாய் அவள் மனதில் இருக்க, சிரித்துக் கொண்டாள்.
ஆழ்ந்த உறக்கத்திலும் அணைப்பை இறுக்கினான் இளங்கோ.
வானதிக்கு அப்பா என்றால் உயிர். அவருக்கும் மகளை அத்தனைப் பிடிக்கும். அவள் கேட்டு, அவர் எதையும் மறுத்தது கிடையாது. முதல் முறையாக அவளின் காதலை தான் எதிர்த்தார் கிருஷ்ணமூர்த்தி.
“என்ன தைரியம் இருக்கணும் உன் பொண்ணுக்கு” என்று அப்போதும் மனைவியை தான் கத்தினார் அவர்.
“அண்ணன் நீ பொறுப்பா இருந்திருந்தா..” என்று மகன் மேலும் அவர் பாய, எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை வானதி.
கிருஷ்ணமூர்த்தி அதன் பிறகு மகளிடம் முகம் கொடுத்து பேசவேயில்லை. வானதியின் பொறுமை தீர்ந்துப் போன ஒரு காலை வேளையில், அப்பாவின் அறைக்குள் நுழைந்தாள்.
அவரின் மேஜை மேலிருந்த பேனா கத்தியை எடுத்து, “இப்போ நீங்க ஓகே சொல்லலன்னா, நான் கையை கட் பண்ணிப்பேன்ப்பா” என்று தீவிரமான குரலில் மிரட்டினாள் வானதி. மகளின் கண்களில் இருந்த தீவிரம் கிருஷ்ணமூர்த்தியை அசைத்துப் பார்த்தது.
“சரி. ஒருநாள் அந்தப் பையனை வீட்டுக்கு வரச் சொல்லு. அப்பா நேர்ல பார்த்து, பேசிட்டு தான் என் முடிவை சொல்லுவேன்” என்றார் கறாராக.
“நிஜமாவாப்பா?” முகம் நிறைத்த புன்னகையுடன் கேட்டாள் வானதி.
அவள் இளங்கோவை அழைத்து, அப்பா பார்க்க விரும்புவதை தெரியப்படுத்த, நேரம் காலம் எல்லாம் பார்க்காமல், நண்பனின் திருமணத்திற்கு சென்றிருந்த இளங்கோ, அங்கிருந்து அப்படியே வானதியின் வீடு வந்தான்.
பட்டு வேட்டி சட்டையில் வந்து பணிவாக பேசியவனை கிருஷ்ணமூர்த்திக்கு பிடித்துப் போனது.
ஆனால், மாதவன் தான் அதிர்ந்துப் போனான். “என்ன இப்பவே தாலி கட்டப் போறது போல வந்து நிக்கிறார்?” என்று அவன் அர்ச்சனாவிடம் புலம்ப, அந்நேரம் வெளியில் வந்த இளங்கோவின் காதில் அது தெளிவாக விழுந்தது.
“இல்ல, ஒரு வேளை நீங்க முடியாதுன்னு சொன்னா வானதியை கையோட கூட்டிட்டு போகற மாதிரி ரெடியா வந்தேன்” மிகத் தீவிரமாக பதில் சொன்னான் இளங்கோ.
“என்னது?” அதிர்ச்சியுடன் கேட்டு சுவரில் மோதி நின்றான் மாதவன்.
ஆனால், அவர்களின் திருமணத்தின் போது அதே மாதவன் தான் ஓடி ஓடி இளங்கோவை கவனித்தான். தன் அன்பு மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தினார் கிருஷ்ணமூர்த்தி.
திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் கழித்து தான் சிஏ இறுதித் தேர்வு எழுதினாள் வானதி. அவளை விட முடிவுக்காக கிருஷ்ணமூர்த்தி தான் அதிக ஆவலுடன் காத்திருந்தார். தேர்வு முடிவுகள் வர, தேர்ச்சி பெறவில்லை வானதி. அப்பாவின் முகத்தில் அன்று தெரிந்த ஏமாற்றம், இப்போதும் அவள் கண் முன் வந்து மனதில் சுருக்கென்று தைத்தது.