கணவனின் கையணைப்பில் இருந்த வானதிக்கு கண்களை மூடினாலும் தூக்கம் வராமல் கடந்த காலமே அவள் கண்களில் உலா வந்து தூக்கத்தை தூர நிறுத்தியது. மெல்ல மெல்ல மூச்சிழுத்து மனதை அமைதியாக்க முயன்றாள். அவளின் சுவாசம் மொத்தத்தையும் இளங்கோவின் வாசமே நிறைத்தது. அதிலும், அவளின் வாசனை திரவியத்தின் மணம் குப்பென்று நாசியை நிறைக்க, புன்னகைத்துக் கொண்டாள்.
இளங்கோ காதலித்த காலங்களில் அவளிடம் பெரிதாக காதல் வசனங்கள் பேசியது கிடையாது. அவள் மேலான அன்பை மிக கண்ணியமாக வெளிப்படுத்தி இரு வீட்டாரின் சம்மதத்திற்காக காத்திருந்தான்.
தாமரைக்கு மகனின் காதலை மறுக்க பல காரணங்கள் இருந்தது. ஆனால், வானதியின் குடும்பம் அவர்களிடம் நேரடியாக வந்து பேசிய ஒரே வாரத்தில் அவரும் திருமணத்திற்கு சம்மதித்து விட்டார்.
“இப்போ நிச்சயம் பண்ணிட்டு ஒரு ஆறேழு மாசம் கழிச்சு கல்யாணத்தை வச்சுப்போம்” என்ற கிருஷ்ணமூர்த்தியின் கோரிக்கை அவர்களிடம் எடுபடவேயில்லை.
“அது முடியாதுங்க. எங்க பையனுக்கு அவன் ஜாதகப்படி உடனே கல்யாணம் முடிக்கணும். இப்ப இல்லனா இன்னும் ரெண்டு வருஷம் தள்ளி தான் அவனுக்கு கல்யாண ராசி இருக்குனு..” என்று தாமரை காரணங்களை அடுக்கிக் கொண்டே போக, “அம்மா, என்னம்மா இதெல்லாம்?” என்று அவரைத் தடுக்கப் பார்த்தான் இளங்கோ.
“உங்கம்மா உனக்கு வெளில வரன் பார்த்திட்டு இருக்கான்னு நான் சொன்னேன் இல்ல தம்பி. அவ இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சதே பெருசு. உனக்காக சண்டைப் போட்டு சம்மதிக்க வச்சிருக்கேன். அதுனால அவளை, அவ போக்குல விட்டுடு. இல்லனா, உன்னை அவ இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கப் பார்ப்பா. புரிஞ்சுதா?” என்று சந்திரசேகர் மகனை எச்சரிக்க, பெற்றோரை அமைதியாய் பார்த்தவன் மனதில் எரிச்சல் அதன் எல்லையை கடந்திருந்தது. ஆனாலும், வெளியில் நிதானமாக அமர்ந்திருந்தான்.
இளங்கோவின் இயல்பே அதுதான் என்றாலும், அவனது வேலையும் அவனுக்கு நிறைய பொறுமையை கற்றுத் தந்திருந்தது.
கிருஷ்ணமூர்த்தியை நேர்ப்பார்வை பார்த்து புன்னகைத்தான் அவன்.
அவருக்கு சிறியதாய் ஆதங்கம் இருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், மகளுக்காக உடனே திருமணத்தை வைக்க சம்மதித்தார் கிருஷ்ணமூர்த்தி.
“நீ கண்டிப்பா சிஏ முடிக்கணும் வானதி” திருமணத்துக்கு முன் ஒரே ஒருமுறை மட்டுமே அழுத்தம் திருத்தமாக அதை மகளிடம் சொன்னார் அவர்.
“அது என் கனவுப்பா. அதுனால கண்டிப்பா ஃபைனல் எழுதி பாஸ் பண்ணிட்டு உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்க வருவேன். பாருங்க” என்று அத்தனை உறுதியுடன் சொன்னாள் வானதி.
ஆனால், திருமணம் முடிந்து வாழ்க்கையை தொடங்கிய சில மாதங்களில் மற்ற அனைத்தையும் மறந்தே விட்டாள் அவள்.
புதிதாக ஓர் வாழ்க்கை, அதில் நினைவில் வைத்துக் கொள்ள முடியாத அளவு புதிய உறவுகள் என அவள் வாழ்க்கையில் பெரும் மாற்றம். மூன்று மாதங்கள் கழிந்த பின் தான் நிதானத்திற்கே வந்தாள்.
காதலித்த இளங்கோவையே கணவனாக அடைந்ததில் அப்படியொரு ஆனந்தக் கூத்தாடினாள். வாழ்க்கையில் எதையோ சாதித்து விட்ட உணர்வில் உள்ளம் பெரும் மகிழ்ச்சி கொண்டது.
அம்மா வீட்டிற்கு பக்கத்திலேயே வாடகை வீடெடுத்து தங்கள் வாழ்க்கையைத் தொடங்கினார்கள் அவர்கள். கணவன், வீடு, சமையல் என அவள் கவனம் முழுவதும் அதிலேயே மூழ்கியிருக்க, “எக்ஸாமுக்கு இன்னும் மூனு மாசம் தான் இருக்கு. படிக்க ஆரம்பிக்கணும் நீ” என்று மனைவியை மென்மையாய் அதட்டி நினைவுப்படுத்தினான் இளங்கோ.
அவன் மார்பில் சுக அயர்ச்சியுடன் கண் மூடிக் கிடந்த வானதி, “ம்ம்ம்” என்று ராகம் இழுத்தாள்.
“நான் சொல்றது கேட்டுச்சா இல்லையா, வானதி?”
“ம்ம்ம்” என்றவள், அப்படியே உறங்கிப் போனாள். ஆனாலும், அவளை அசட்டையாக இருக்க விடவில்லை இளங்கோ.
அவன் மாலை வேலை முடித்து வந்ததும் அவளுடன் அமர்ந்து படிக்க வைத்தான். இளங்கோவை படித்த அளவுக்கு பாடம் படிக்கவில்லை வானதி. இளங்கோவை படிப்பதில் இருந்த சுவாரஸ்யமும், ரசனையும், ஆர்வமும் ஆரம்பத்தில் அவளுக்கு படிப்பின் மேல் வரவில்லை.
“வானதி, வாட்ஸ் யுவர் பிளான்? உனக்கு வீட்லயே இருக்க ஐடியாவா என்ன?” என்று இளங்கோ கத்தவும் தான் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு படிப்பில் கவனத்தைச் செலுத்தினாள். அவளுக்கு தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டதும், கிருஷ்ணமூர்த்தி தானே பரிட்சை எழுதப் போவது போல பதறினார்.
மனைவியின் ஒவ்வொரு தேர்வின் போதும், அவளுடன் அமர்ந்து சந்தேகங்கள் தீர்த்து வைத்து படிக்க உதவினான் இளங்கோ. உண்மையில் வானதி அசட்டையாக இல்லாமல் தீவிரமாக கவனம் செலுத்தி படிக்கவே செய்தாள். ஆனாலும், தேர்ச்சி பெற முடியாததில் அவளுக்கு மிகவும் வருத்தம் தான்.
இளங்கோ அந்த முடிவை எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் அதிர்ச்சி அடைந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
மாறாக கிருஷ்ணமூர்த்தியின் ஒற்றைப் பார்வையிலேயே ஏமாற்றத்தை அப்பட்டமாக கண்டுக் கொண்டாள் வானதி.
“இங்க ஒவ்வொரு பொண்ணுக்கும் படிப்பும், வேலையும் ரொம்ப முக்கியம் வானதி. உன் பாட்டி, அதான் எங்கம்மா. அந்த காலத்திலேயே சத்துணவு டீச்சரா வேலைப் பார்த்து எங்களை படிக்க வச்சாங்க. இன்னைக்கு உனக்கு படிக்க வசதியும், வாய்ப்பும் இருக்கு. நல்லா படிச்சு, பெரிய பதவில உட்காரணும் நீ. வேலையும், சுய சம்பாத்தியமும் ஒரு பொண்ணுக்கு தர்ற தன்னம்பிக்கை வேற எதுவும் தராது, புரிஞ்சுதா வானதி?” என்று சிறு வயதில் இருந்தே சொல்லி சொல்லி வளர்த்த தந்தையின் முன் தலைக் குனிந்து நின்றாள் வானதி.
இறுதித் தேர்வின் மூன்று தாள்களில் கோட்டை விட்டிருந்தாள். அப்பாவை பார்த்த அவள் கண்களில் வருத்தம் மிகுந்திருக்க, “அடுத்த முறை எழுதி பாஸ் பண்ணிடலாம் வானதி, விடு வருத்தப்படாத. சிஏ ஃபைனல் பாஸ் பண்றதுன்னா சும்மாவா?” என்று மகளை தேற்றினார்.
இளங்கோவை போல முதல் முறையே தேர்ச்சி பெறவில்லை என்றாலும், அடுத்த முறை நிச்சயமாய் தேர்ச்சி பெற்றிட வேண்டும் என்று தனக்குத் தானே பல முறை சொல்லிக் கொண்டாள் வானதி. இளங்கோவும் அதையே தான் சொன்னான்.
“ரொம்ப ஃபீல் பண்ணாத வானதி. அடுத்த முறை பார்த்துக்கலாம்” என்று அணைத்து ஆறுதல் சொன்னான்.
ம்ம், அவளுக்கு அந்த அடுத்த முறை வர ஐந்து நீண்ட நெடிய ஆண்டுகளுக்கு மேலாகியது.
வானதி மறுவருடமே கருவுற்றிட, இளங்கோ வற்புறுத்தியும் படிப்பை ஒத்தி வைத்தாள் வானதி. சிஏ இன்டர்மீடியேட் முடித்து மூன்று ஆண்டுகள் தொழில்பயிற்சியும் கற்றிருந்ததால் வேலை கிடைப்பது அவளுக்கு எளிதாகவே இருந்தது. சென்னையை மையமாகக் கொண்ட, வாகனங்கள் தயாரிக்கும் புகழ்பெற்ற நிறுவனத்தில் அவள் எதிர்பார்த்ததை விட நல்ல பதவியும், ஊதியமும் கொண்ட வேலை அவளுக்கு கிடைக்க, மறுக்கத் தோன்றவில்லை அவளுக்கு. அப்போது தான் தேர்வில் தோற்றிருந்தாள். ஆக, அவளுக்கு ஒரு மாறுதலாக, உந்துதலாக இருக்கும் என்று இளங்கோவும் சம்மதித்தான்.
வானதி அந்த வேலையை இறுகப் பற்றிக் கொண்டாள். படிப்பு தூரப் போனது.
கிருஷ்ணமூர்த்தியின் கவனமும் பிள்ளைகளிடம் இருந்து பேரப் பிள்ளைகளிடம் மாறியிருந்தது. முதலில் மாதவனுக்கு ஹரிணி பிறக்க, அடுத்த ஆண்டே வானதிக்கு நேத்ரன் பிறந்து விட்டான்.
வானதியின் உலகம் விரிவடைந்தது. இளங்கோ, நேத்ரன், வீடு, வேலை என்று சுழன்றவளை மூன்று ஆண்டுகள் கழித்து பிடித்து நிறுத்தினான் இளங்கோ.
“நேத்ரன் நேத்து தான் பிறந்த மாதிரி இருக்கு. ஆனா, அதுக்குள்ள அவனுக்கு மூனு வயசாகிடுச்சு இல்லங்க? நாம இன்னும் நாளை தள்ளிப் போடாம அடுத்த குழந்தைக்கு பிளான் பண்ணுவோமா?” என்று வானதி கேட்க, “ம்ம், இன்னும் ஒரு வருஷம் போகட்டும்” என்றான் இளங்கோ.
“இந்த கேப்பே அதிகம்னு அம்மா திட்டுறாங்கங்க. ரொம்ப வயசு வித்தியாசம் இல்லாம இருந்தா பிள்ளைங்க ஒன்னா வளர்ந்து வந்திடும். நமக்கும் அவங்களை கவனிக்கிறது ஈஸின்னு அம்மா சொல்றாங்க. எனக்கும் அது தான் சரின்னு பட்டது. நீங்க என்ன சொல்றீங்க?”
“நான் சரின்னு சொல்ற வரைக்கும் என்னை பேசியே சரிக் கட்டப் போற நீ. அதுக்கு இப்பவே நான் சரின்னு சொல்லிடுறேன்” என்று இளநகையுடன் சொன்ன இளங்கோவின் மேல் சரிந்தாள் வானதி.
அடுத்த வாரமே, “ஃபைனல் எழுதி முடி வானதி” என்ற கணவனை ஆச்சரியமாக ஏறிட்டாள் அவள்.
“இப்பவா?”
“ம்ம், ஃபர்ஸ்ட் சிஏ முடி” என்று அழுத்தமாக சொன்னான் இளங்கோ. ஆனால், அவள் கவனம் எல்லாம் அடுத்த குழந்தை மீது தான் அதிகமாக இருந்தது.
ஒரு குழந்தையின் மூலமாக திருமணத்தை காப்பாற்றி விடலாம் என்ற அடிப்படை விதியை அங்கே பின்பற்றினாள் வானதி.
இளங்கோ அலுவல் ரீதியான பயணங்களை தொடங்கியது அப்போதுதான். அவர்களுக்கு நடுவில் மெல்லிய இடைவெளி விழ, அன்பைக் கொண்டு பாலம் எழுப்பி அதை கடக்காமல், அடுத்த குழந்தையின் வரவு அந்த இடைவெளியை நிரப்பும் என்று நிரம்ப நம்பினாள் வானதி.
ஆனால், அவளின் மறுப்பை எல்லாம் பொருட்படுத்தாமல் வற்புறுத்தி இறுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க வைத்தான் இளங்கோ.
வானதி அப்படியொன்றும் பின்வாங்கி விடவில்லை. அவளின் பிடிவாதத்தால் இதற்கு நடுவில் அவர்களின் இரண்டாம் குழந்தை ஆசையும், முயற்சியும் தொடர்ந்து கொண்டு தானிருந்தது. பத்து நாள்கள், இருபது நாள்கள் என்று நாள்கள் தள்ளிப் போய் கரு தங்காமல் அவளை ஏமாற்றியது.
அப்பொழுது மனைவி மீண்டும் படிப்பில் கவனம் செலுத்த பயிற்சி வகுப்பில் சேர்த்து விட்டான் இளங்கோ.
“என்னால ஒரே நேரத்துல எல்லாத்தையும் செய்ய முடியாதுங்க” என்று கத்தினாள் வானதி.
“எல்லாத்தையும் நீ தான் செய்யணும்னு உன்கிட்ட யார் சொன்னாங்க இப்போ?” நிதானமாக கேட்டான் இளங்கோ. சரியான பதில் இல்லாத போது சண்டையில் முடிந்தது அந்த இரவு.
அவளுக்கு ஒவ்வொரு முறை கரு தங்காமல் போகும் போதும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானாள் வானதி.
“நமக்கு இன்னொரு குழந்தையே வேணாம்” அதீத இரத்தப் போக்கினால் படுக்கையில் சுருண்டு கிடக்கும் மனைவியை பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு மனம் வலிக்க முடிவாக, அழுத்தமாக அந்த வார்த்தைகளை சொன்னான் இளங்கோ.
அதன் பிறகு அவன் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்ற, “ஹரிணியை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் இல்ல? நமக்கும் ஒரு குட்டி பொண்ணு வந்தா நல்லாருக்கும் இல்லைங்க?” என்று பேசி பேசியே கணவன் மனதை கரைக்கப் பார்த்தாள் வானதி.
“ஒன்னும் அவசரமில்ல. நம்ம பொண்ணு பொறுமையா வரட்டும்.” என்று அணைப்பவனிடம், வேறென்ன சொல்வதென்று தெரியாமல் திண்டாடுவாள் வானதி.
“இந்த வருஷம் ஃபைனல் எழுதப் போறியாமே வானதி. மாப்பிள்ளை சொன்னார். உண்மையாவா?” என்று கிருஷ்ணமூர்த்தி ஆவலுடன் கேட்க, அப்பாவின் அந்த மகிழ்ச்சியை காண்கையில் தனக்காக இல்லாவிட்டாலும், அப்பாவுக்காக படிக்க வேண்டும் என்று மனதை ஒருமுகப்படுத்தினாள் வானதி.
கணவன், மனைவி இருவருக்கும் தொட்டதிற்கெல்லாம் முட்டிக் கொண்ட காலக்கட்டம் அது.
காதல் என்பது தனிப்பட்ட ஒருவரின் மேல் வரும் உணர்வு. ஆனால், திருமணம் அப்படியல்ல. அதில் பொறுப்புகளும், உறவுகளும், கடமைகளும் கலந்திருக்க, வானதிக்கு அது புரிந்தாலும் உணராமல், தன் காதலன் இளங்கோவை கணவனிடம் தேடினாள். அவளின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறாத போது, அவனால் நிறைவேற்ற முடியாமல் போன போது, அடிக்கடி முட்டிக் கொண்டது. காதலெல்லாம் கானலான உணர்வில் கவலைக் கொண்டாள்.
அப்பொழுது இளங்கோ பதவி உயர்வு பெற சொந்த வீடு, கார் என அவர்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்திருந்தது. அதற்கு பதிலாக அவனது பெரும் பகுதி நேரத்தை வேலை விழுங்கிக் கொண்டது.
“லவ் பண்ணும் போது என்னெல்லாம் சொன்னீங்க? இப்போ என்கிட்ட பேச கூட உங்களுக்கு நேரமில்ல?” என்று கத்துவாள் வானதி.
இளங்கோ வாக்குவாதங்களை தவிர்க்க சாமர்த்தியமாக மௌனமாய் நழுவி விடுவான். அதுதான் வானதியை இன்னும் தூண்டி விடும்.
“ஓ, பேச மாட்டீங்களா?” என்று அதற்கும் எகிறுவாள். அதுவே நாளடைவில், “பேசாட்டி போயேன்” என்று அலட்சியத்தில் அவளைக் கொண்டு வந்து நிறுத்தியது.
“என்கிட்ட எதுக்கு சண்டை போடலாம்னு யோசிக்காம, படிக்கிற வழியை பாரு” என்று இளங்கோ கோபமாக இல்லாமல், காதலாக சொல்லவும், “படிச்சுட்டு தானே இருக்கேன். நீங்களும் பார்க்கறீங்க தானே? அப்புறம் ஏன் அதையே சொல்றீங்க?” என்று கோபமாகவே சமாதானமும் ஆவாள் வானதி.
“நான் படிக்கும் போது தான் இவனுக்கு பசிக்குது. தூக்கம் வருது. என் மேல விழுந்து புரண்டு விளையாடுறான். என்னை என்ன பண்ண சொல்றீங்க?” என்று மகனைக் காட்டி புகார் படிப்பவள், சிறிது படிக்கவும் செய்தாள் தான். இறுதி தேர்வு நெருங்க அதற்கு முழுதாக தயாரானாள்.
பல நேரங்களில் நாம் எதிர்பார்ப்பது, எப்போதுமே எதிர்பாராத நேரம் கிடைத்து நமக்கு ஆச்சரியத்தையும் கூடவே கொஞ்சம் அதிர்ச்சியையும் அளிக்கும். வானதிக்கும் அதுதான் நடந்தது.
அவர்கள் எதிர்பாராத நேரம், இரண்டாம் முறையாக கருவுற்றாள் அவள். வயது முப்பதை தாண்டி விட்டதில் இயல்பாய் ஒரு பயம் அவளை ஆட்கொண்டது. மருத்துவர் சொன்ன ஆலோசனைகளை ஆழ்மனதில் இருத்திக் கொண்டு அதீத கவனத்துடன் இருந்தாள்.
அவள் தன் சந்தேகத்தை பகிர்ந்த கணமே இளங்கோவின் முகம் அத்தனை பிரகாசமாகி விட்டது. மருத்துவமனை சென்று உறுதி செய்த பிறகு, அவன் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை கண்களால் படம் பிடித்து வைத்துக் கொண்டாள் வானதி.
“இந்த முறை நமக்கு பொண்ணு தானேங்க பிறக்கும்?”
“ம்ம்.” என்று அன்பும், அக்கறையுமாக அணைத்துக் கொண்டான் இளங்கோ.
வானதி எப்போதும் போல வேலைக்குச் சென்றாள். மகனை கவனித்தாள். ஆனால், தேர்வை கவனிக்க மறந்தாள்.
மனைவி இருக்கும் நிலையில் இளங்கோ மிகுந்த தயக்கத்துடன் தான் அவளை தேர்வு எழுதச் சொன்னான்.
முதல் முறை போல இல்லாமல் இம்முறை கர்ப்பகாலம் அவளுக்கு மிகவும் சிரமமாக இருக்க, நன்றாக படித்தும் அம்முறை தேர்வெழுதவில்லை வானதி.
மனதிற்குள் அவளின் நம்பிக்கை மொத்தமும் சுக்கலாக நொறுங்கியிருக்க, “அடுத்த அட்டெம்ப்டில் எழுதிடலாம். ஃபீல் பண்ணாத வானதி” என்று அவளுக்கு ஆறுதல் கூறி தேற்றினான் இளங்கோ.
ஆனாலும், மனதுக்குள் மருகி போனாள் வானதி. அவ்வளவுதான். இனி தன்னால் படிப்பை பற்றி எல்லாம் யோசிக்கவே முடியாது என்ற முடிவுக்கே அவள் வந்தது அப்போதுதான். அதில் ஒருவித முடிவும், ஆறுதலும் இருக்க, அமைதியானாள்.
அவள் காதலித்த இளங்கோவுடன் ஒரு நிறைவான வாழ்க்கை. நல்ல ஊதியத்துடன் பெரிய நிறுவனத்தில் பணி. மூத்த மகன் இருக்க இப்போது இரண்டாவது குழந்தையும் வரப் போகிறது. தனக்கு இதுவே போதும் என்று முடிவு செய்துக் கொண்டாள் வானதி.
கிருஷ்ணமூர்த்தி மகளை எதுவுமே சொல்லவில்லை. தன் எதிர்ப்பார்ப்பை பிள்ளைகள் மேல் திணிக்கும் தந்தையாக இருக்க விரும்பவில்லை அவர்.
மனைவியுடன் சேர்ந்து மகளை நன்றாக கவனித்துக் கொண்டார் அவர். அவ்வளவே. பாக்கியம் புலம்பினாலும் பிள்ளை தாங்கி நிற்கும் மகளின் உடல்நிலை மட்டுமே அவருக்கும் பெரிதாக தெரிந்தது.
வானதி ஆறு மாத கர்ப்பமாக இருக்கும் போது இளங்கோ பதவி உயர்வு பெற்றான்.
“சீஃப் பைனான்ஸியல் ஆபீஸர் இளங்கோ” என்று சொல்லும் போதே சந்தோஷத்தில் வானதியின் கண்களில் வானவில் தெரிந்தது.
கணவனின் வளர்ச்சியில் அத்துணை பெருமிதம் அவளுக்கு. அவர்கள் காதலித்த காலங்களில் எப்போதோ ஒருமுறை அது பற்றி இளங்கோ சொல்லியிருக்க, அவளுக்கு இன்னமும் அது துல்லியமாக நினைவில் இருந்தது.
“கங்கிராஜூலேஷன்ஸ் சிஎஃப்ஓ” என்று இறுக அணைத்து கணவனை வாழ்த்தினாள். மனைவியை முத்தத்தால் நிறைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான் இளங்கோ.