அன்றைக்கு அந்த செய்தியை கிருஷ்ணமூர்த்தியிடம் அவர்கள் பகிர்ந்த போது, அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
பல சமயங்களில் மருமகனை வாழ்த்தி இருக்கிறார். பேரன் பிறந்த போது, அவர்கள் சொந்த வீடு வாங்கிய போது என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், அன்று மருமகனை தோளோடு சேர்த்தணைத்து, “கங்கிராட்ஸ் மாப்ள” என்று மிகுந்த பெருமிதத்துடன் மீண்டும் மீண்டும் சொன்னார் அவர்.
இளங்கோவை மகளுக்கு மணமுடிக்க மறுத்த அதே அப்பா, அவனை பாராட்டி கொண்டாடும் போது வானதிக்கு மகிழ்ச்சியும், பெருமையும் பிடிபடவில்லை.
“அப்பாவை விட்டா உங்களை இறுக்கி அணைச்சு உம்மா கொடுத்திருப்பார் போல” என்று வீடு வந்த பின் வானதி கேலி செய்ய, “இறுக்கி அணைச்சு, உம்மா நீ கொடு போதும்” என்று கண் சிமிட்டினான் இளங்கோ.
“முத்தம் என்ன மொத்தமா தர்றேன்” என்ற மனைவியை ரசனையும், காதலும் மிக கட்டிக் கொண்டான் இளங்கோ.
அந்த வார விடுமுறையில் வானதியின் வீட்டிற்கு அவர்கள் செல்ல, மருமகனுக்காக பரிசு பொருளுடன் காத்திருந்தார் கிருஷ்ணமூர்த்தி.
தங்க முலாம் பூசிய, “இளங்கோ” என்று பெயர் பொறித்த பேனாவை அவர் பரிசளிக்க, அதிர்ச்சியும், ஆனந்தமுமாக அதைப் பெற்றுக் கொண்டான் இளங்கோ.
“தேங்க்ஸ் மாமா” என்றான் முகம் கொள்ளா புன்னகையுடன். கிருஷ்ணமூர்த்தி அப்போதும் மருமகனை தோளோடு சேர்த்தணைத்து, தட்டிக் கொடுக்க, வானதியின் கண்கள் கணவனின் கையில் இருந்த பேனாவின் மேல் நிலைத்திருந்தது.
அவளுக்கு பொறாமையோ, வருத்தமோ கிடையாது. அதே நேரம் அப்பாவிற்கு இதே மகிழ்ச்சியை தான் கொடுக்க முடியவில்லையே என்ற வருத்தம் அவள் மனதில் ஆழ வேரூன்றியது அப்போது தான். அது மெல்ல மெல்ல குற்ற உணர்ச்சியாக வளர்ந்து நின்றது. அப்பா அவள் மேல் வைத்திருந்த ஒற்றை எதிர்பார்ப்பை நிறைவேற்றாததற்கு தன்னைத்தானே அத்தனை வருத்திக் கொண்டாள் அவள்.
“என்ன வானதி?” அவளின் நிலைத்தப் பார்வையை பார்த்து கரிசனத்துடன் கேட்டார் பாக்கியம்.
“அப்பா இதே மாதிரி ஒரு பென் எனக்கும் வாங்கி வச்சிருக்கார் தானே மா?” அவள் கேட்கவும், ஆமென்று தலையசைத்தார் அவர்.
“என் பேர் போட்ட பென். அது இன்னமும் அப்பாகிட்ட இருக்கா?” என்று அவள் கேட்க, “அதென்ன இன்னமும் இருக்கான்னு சந்தேகமா கேட்கிற? அப்பா அதை தூக்கியா போடுவார்ன்னு நினைச்ச? பீரோல பத்திரமா வச்சிருக்கார். நீ இந்த டைம் எக்ஸாம் எழுதப் போறேன்னு சொன்னதும், வெளில எடுத்து பார்த்திட்டு இருந்தார். என்கிட்ட கூட இதுவே நல்லாருக்கா? இல்ல, புதுசு வாங்குவோமான்னு எல்லாம் கேட்டார்” என்று அம்மா சொல்லவும், அவளுக்கு கண்கள் கலங்கி விட்டது.
“புள்ளத்தாச்சி அழக் கூடாது வானு. இப்ப எதுக்கு அழற நீ?” என்று பாக்கியம் மகளின் கண்ணீர் துடைத்து கண்டிப்புடன் கேட்க, “அப்பா ஆசையை நான் நிறைவேத்தல இல்லம்மா” என்று விசும்பினாள் வானதி.
“அப்பா ஆசை எல்லாம் நீங்க நல்லா சந்தோசமா இருக்கணும்ங்கறது மட்டும்தான். புரியுதா?”
“போம்மா” என்று மேலும் கண்ணீர் விட்டாள் அவள்.
“என்ன வானு நீ, மாப்ள பார்த்தா ஏதாவது நினைக்கப் போறார்”
“அவருக்கு தெரியும். இதுக்கெல்லாம் என் ப்ரெக்னன்சி ஹார்மோன்ஸ் தான் காரணம்னு. அதுனால என்னை ஒன்னும் சொல்ல மாட்டார்” என்று புன்னகைத்தாள் வானதி.
“போ கழுத, சும்மா அழுது என்னை பயமுறுத்திட்டு..” என்று மகளின் தோளில் தட்டினார் பாக்கியம்.
இளங்கோ வீடு வந்ததும் தனது அலுவலக அறையில் மாமனாரின் பரிசை பத்திரப்படுத்தினான். பிறகு முக்கிய அலுவல்களுக்கு மட்டுமே அதை பயன்படுத்தினான். அந்த பேனாவின் மேல் ஒருவித பிரியமும், மதிப்பும் அவனுக்கிருந்ததை வானதி உணரவே செய்தாள். இன்றைக்கும் அவனது மேஜையில் மாமனாருடன் நிற்கும் ஒரு புகைப்படமும் உண்டு.
அந்த பதவி உயர்வு அவனின் பெருமளவு நேரத்தை பறித்துக் கொண்டது. கர்ப்பமாக இருக்கும் மனைவியை மனதேயில்லாமல் தனியாக விட்டுவிட்டு வேலை நிமித்தமாக வெளியூர் சென்று வந்தான் அவன்.
“ரெண்டு பேரும் இப்படி வேலை, வேலைன்னு ஓடணுமா? நீ ஒன்னு லீவ் போடு. இல்லனா கொஞ்ச நாளைக்கு வேலையை விட்டுட்டு, பிள்ளை வளர்ந்ததும் வேலைக்கு போ” என்று மகளை மிரட்டினார் பாக்கியம்.
“நான் மட்டும் வீட்ல தனியா இருக்கறதுக்கு வேலைக்கு போறது பெட்டர் மா” என்று வானதி சொல்ல, “வீட்ல தனியா ஏன் இருக்க? நேத்ரனை கூட்டிட்டு இங்க வந்திடு நீ” என்றார் பாக்கியம்.
“பாக்கியம்” என்று மனைவியை அதட்டினார் கிருஷ்ணமூர்த்தி.
“உனக்கு பிடிச்சத நீ செய் வானதி. உடம்புக்கு முடியலைன்னா மட்டும் வேலையை விடுறதை பத்தி யோசி. மாப்பிள்ளை சொன்னா அதைப் பத்தி யோசி. மத்தபடி சும்மா எல்லாம் வேலையை விடாத” என்று அவர் சொல்ல, அப்பாவின் வார்த்தைகளை அப்படியே பிடித்துக் கொண்டாள் வானதி.
“நான் என்ன சொல்றேன்னு புரிஞ்சுக்காம என்ன பேசுறீங்க நீங்க? உங்க பொண்ணுக்கு உடம்பு முடியலை. அதான் வீட்ல இருக்க சொல்றேன். நான் என்ன அவளை இனி காலத்துக்கும் வேலைக்கு போக வேண்டாம்னா சொன்னேன்?” என்று கோபமாக சொல்லி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டார் பாக்கியம்.
பெற்றோர் இருவரையும் சமாதானப்படுத்துவதற்குள் சோர்ந்தே போனாள் அவள்.
குழந்தைப் பிறப்பிற்கு ஒரு மாதகாலம் இருக்கும் போது பேறுகால விடுமுறை எடுத்து வீட்டில் இருந்தாள் வானதி.
இளங்கோ அலுவலகத்திற்கும், நேத்ரன் பள்ளிக்கும் கிளம்பியதும், தானும் தயாராகி அம்மா வீடு சென்று விடுவாள்.
“நான் ட்ராப் பண்றேன். அதுனால நீ பொறுமையா கிளம்பு” என்று காலையே பரபரத்த மனைவியிடம் சொன்ன இளங்கோ, அவனுக்கு அலுவலகத்தில் இருந்து அவசர அழைப்பு வரவும், “சாரி வானதி” என்று மன்னிப்பை மட்டும் கேட்டு விட்டு விரைவாகவே வீட்டில் இருந்து வெளியேறி விட்டான்.
காலை உணவை உண்ண அமர்ந்த வானதிக்கு வலியும், வேதனையுமாக அவஸ்தையான ஓர் உணர்வு மேலெழ அடி வயிற்றை பிடித்தபடி அமர்ந்து விட்டாள்.
முதல் குழந்தையின் பிரசவ வலியெல்லாம் அந்த நொடி அவளுக்கே மறந்தே போனது. பிரசவ வலி தானா, இல்லையா என்று கண்டறிய முடியாத அளவிற்கு பயமும் பதட்டமும் மேலிட அம்மாவை அழைத்து விட்டாள்.
ஒரு மணி நேரத்தில் மருத்துவமனையில் இருந்தாள் அவள்.
இளங்கோ அலுவகத்தில் சிக்கிக் கொண்டாலும், “நான் வந்துடுவேன் வானதி. பிளீஸ், பயப்படாத. சரியா?” என்று அவனால் முடிந்ததை செய்தான். அவன் குரல் வழியே அவளுக்குத் தேவையான தெம்பை கடத்தினான். அப்பா தான் அவளோடு இருந்தார்.
அதுவும் பிரசவ அறை வரை தான். அதன் பிறகு அம்மா மட்டுமே அவ்வப்போது அவளோடு இருந்தார்.
நேத்ரன் அவளுக்கு சுகப் பிரசவத்தில் தான் பிறந்திருந்தான். நள்ளிரவு வலியெடுத்து மருத்துவமனை சென்று சில மணி நேரங்களில் பிறந்து விட்டான் அவன். ஆனால், இம்முறை வானதி மரண வலியில் கதறி துடித்து தவிக்க, மகளோ வெளிவரவேயில்லை.
ஒவ்வொரு முறையும் மருத்துவர் வந்து சோதித்து வெவ்வேறு காரணங்கள் சொல்லிச் சென்றார். உண்மையில் வானதி மிரண்டு போனாள்.
வானதி போராடி சோர்ந்து ஓய்ந்து, “அவரை கூப்பிடுங்க, என் ஹஸ்பண்ட்டை கூப்பிடுங்க” என்று கதறும் போது உள்ளே அனுமதிக்கப்பட்டான் இளங்கோ.
“உங்க வைஃப்க்கு லேபர் ரொம்ப ஸ்லோவா ப்ராக்ரஸாகுது. அவங்களால புஷ் பண்ண முடியல. அவங்க ரொம்ப சோர்ந்து போய்ட்டாங்க. சோ, ஃபோர்செப்ஸ் (Forceps) போட்டு குழந்தையை ஈஸியா எடுத்திடலாம். நீங்க என்ன சொல்றீங்க?” என்று மருத்துவர் கேட்டு, அதற்கான விளக்கமும் அளிக்க, வானதிக்கு பயத்தில் மயக்கமே வந்து விட்டது.
இளங்கோ பதட்டத்துடன் மருத்துவரிடம் எண்ணற்ற கேள்விகள் கேட்டான்.
“நீங்க இவ்வளவு பயப்பட வேண்டாம் சார். அது சிசேசரியனை விட சேஃப் ஆப்ஷன் தான்” என்றார் மருத்துவர்.
ஆனால், வானதியின் பெற்றோரிடம் மருத்துவர் சொன்னதை தெரியப்படுத்தி, இளங்கோ ஆலோசனை கேட்க அவர்களும் பயத்தின் விளைவாக அறுவை சிகிச்சை செய்யச் சொல்லுவோம் என்றார்கள்.
“எனக்கு ஃபர்ஸ்ட் டெலிவரி நார்மல் தான் டாக்டர். அப்போ இதுவும் நார்மலா தானே பிறக்கணும்?” என்று மருத்துவரை கேள்விக் கேட்டாள் வானதி.
“அப்படி சொல்ல முடியாது. டெலிவரி டைம்ல காம்ப்ளிக்கேஷன்ஸ் வர்றது நார்மல். நிறைய நேரம் அதை எங்களால கணிக்க முடியாது” என்று நிதானமாக அவளுக்கு பதில் சொன்னார் மருத்துவர்.
“ஓ, என் பையன் பொறக்கும் போது இவ்வளவு வலிக்கல தெரியுமா டாக்டர்?” என்று புலம்பினாள்.
“அப்பவும் உங்களுக்கு இதே போல தான் வலிச்சிருக்கும். நீங்க மறந்துருப்பீங்க” புன்னகையுடன் பதில் சொன்னார் மருத்துவர்.
அந்நேரம் உயிரை சுருட்டிக் கொள்ளும் ஓர் வலி அவளைத் தாக்க, அரை மணி நேரத்தில் நட்சத்திரா பிறந்து விட்டாள்.
“இப்பதான் இவங்க ஃபேமிலி ஃபோர்செப்ஸ் எல்லாம் வேண்டாம். எங்களுக்கு பயமா இருக்கு. அதுக்கு நீங்க சிசேரியனே பண்ணிடுங்கன்னு சொன்னாங்க டாக்டர். நான் அதைச் சொல்ல தான் வந்தேன். நல்லவேளை அதுக்குள்ள இவங்களுக்கு நார்மல் டெலிவரி ஆகிடுச்சு” என்ற செவிலியின் மகிழ்ச்சி குரலும், மகளின் அழுகையும் ஒரு சேர வானதியின் காதில் விழுந்தது.
ஒரு மணி நேரம் கழித்து அவள் மருத்துவமனை அறையில் தூக்கம் கலைந்து கண் விழிக்கும் போது, அவளுக்கு எதிரே மகளை மடியில் வைத்தபடி அமர்ந்திருந்தான் இளங்கோ.
வானதி விழிகளை விரிய திறந்துப் பார்க்க, அப்பா, அண்ணன், கணவன், மகன் என வரிசையாக அமர்ந்திருந்த ஆண்களை மலர்ந்த முகத்துடன் பார்த்தாள்.
“ஏதாவது குடிக்கிறியா வானதி?” அவளிடம் அப்பா தான் முதலில் விசாரித்தார்.
மூன்று நாட்கள் கழித்து, அவளுடன் பெற்றோரும் வீடு வந்தார்கள். மகளையும், பேத்தியையும் அவர்கள் தான் பார்த்துக் கொண்டார்கள். இளங்கோவின் பெற்றோர் வந்து பேத்தியை பார்த்து விட்டுப் போனதோடு சரி. அதன் பின் மகளின் முழு பொறுப்பையும் பாக்கியமே ஏற்றுக் கொண்டார்.
இளங்கோ மனைவி, பிள்ளைகளுடன் நேரம் செலவிட விரும்பினாலும், அவனால் முடியவில்லை.
அந்நேரம் பணம், பதவி அனைத்தையும் விட நேரம் தான் பெரும் ஆடம்பரமாக அவனுக்கிருந்தது.
குழந்தை பிறந்து முதல் மூன்று மாதங்களில் ஒரு வழியாகி விட்டாள் வானதி. அவளுக்கு போதிய உறக்கமில்லை. அதற்கு மேல் மகளுக்கு ஊட்ட ஒரு நேரம் தாய்பால் போதிய அளவு சுரக்கவில்லை. சில சமயம் பால் பெருகி அவள் மேலாடையை நனைத்து ஈரமாக்கியது, மகளோ பசியாறாமல் உறங்கினாள்.
பகலெல்லாம் உறங்கி, இரவெல்லாம் பாட்டு பாடி அவளை ஒரு வழியாக்கினாள் நட்சத்திரா.
நட்சத்திரா அழும் போதெல்லாம் இளங்கோவும் விழிக்க, கணவனுக்கு ஓய்வு தர அம்மாவுடன் அடுத்த அறைக்கு மாறினாள் வானதி.
வானதியை சுற்றி அத்தனைப் பேர் இருந்தாலும், அவளுக்கு இளங்கோவைத் தான் அதிகமாக தேடியது. அவள் உடலிலும், மனதிலும் அதீத மாற்றமும், மன அழுத்தமும் வந்தது அப்போது தான். “என் கூடவே இரேன்” என்று இளங்கோவை இறுக்கிப் பிடித்தாள். அவனுக்கு நழுவி போக வேண்டிய சூழல். அலுவலகம் தவிர்த்து மற்ற நேரங்களில் எல்லாம் வீட்டிலேயே தான் இருந்தான் இளங்கோ.
ஆனாலும், ஓர் வெற்றிடம் வானதியின் மனதில் வந்து விட்டது.
அவள் பெரிதான காரணங்கள் இன்றி சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் கோபமும், எரிச்சலும் கொண்டு எளிதாக உடையும் மன நிலையில் இருக்க, அவளை சமாளிப்பதற்குள் பாக்கியம் திண்டாடிப் போனார்.
அப்போதும் கிருஷ்ணமூர்த்தி தான் மகளுக்கு ஆறுதலாக துணை நின்றார்.
“உன்னை நம்பி ஒரு குழந்தை இந்த உலகத்துக்கு வந்திருக்கு. உன் பயம், பதட்டம், உலகத்துல இருக்க எல்லா அம்மாவுக்கும் வர்றது தான் வானதி. நல்லா யோசிச்சு பார்த்தா நீ பிறந்தப்போ உங்கம்மா கூட இப்படித்தான் இருந்தா. காரணமே இல்லாம கத்திட்டு இருக்கா பாருன்னு அப்போ நினைச்சிருக்கேன். ஆனா, இப்போ உன்னைச் சுத்தி நாங்க இருக்கும் போது நீ ஏன் கவலைப்படுற? ரிலாக்ஸா இரு வானதி” என்ற அப்பாவை பார்த்து சோபையாக புன்னகைத்தாள் வானதி.
அப்பாவின் வற்புறுத்தலால் மருத்துவரை சந்தித்தாள்.
“போஸ்ட்பார்ட்டம் டிப்ரசன்” (Postpartum Depression – மகப்பேறுக்கு பின்னரான மனசோர்வு) என்றார் மருத்துவர். அதனால், மனதை அமைதியாக, மகிழ்ச்சியாக வைத்திருக்க அவளை அறிவுறுத்தினார்.
அதற்கு தன்னுடனே வானதி அதிகமாக போராட வேண்டியிருந்தது. அதிலிருந்து அவள் மீள பெற்றோர் அதிகமாக உதவினார்கள் என்றே சொல்லலாம். வானதி ஓரளவு தெளிந்து அவளது இயல்பிற்கு திரும்புகையில் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பில் காலமானார்.
நட்சத்திராவிற்கு நான்கு மாதமாக இருக்கும் போதே பெற்றோரை அவர்கள் வீட்டுக்கு அனுப்பி விட்டாள் வானதி.
நட்சத்திராவிற்கு அப்போது தான் ஆறு மாதமாகி இருந்தது. அதிசயமாக அந்த வார விடுமுறை முழுவதும் இளங்கோ வீட்டில் தான் இருந்தான்.
திங்கள் அன்று இருவருமே வேலைக்கு கிளம்பினார்கள். நட்சத்திராவை அம்மா வீட்டில் விட சென்ற போது வானதியிடம் இருந்து கிருஷ்ணமூர்த்தி தான் குழந்தையை கையில் வாங்கினார்.
“தாத்தா பார்க்க யார் வந்திருக்காங்க, என் செல்ல குட்டி வந்திருக்காங்க” என்று பேத்தியை புன்னகையுடன் கையில் வாங்கிக் கொண்டார் கிருஷ்ணமூர்த்தி.
வானதி, அர்ச்சனா, மாதவன் மூவரும் பேசிக் கொண்டே அலுவலகம் செல்ல வீட்டில் இருந்து வெளியேற, அப்பா பேத்திக்கு, “ரேரேரே” என்று தாலாட்டு பாடிக் கொண்டிருந்தார்.
வானதி புன்னகையுடன் அப்பாவை பார்த்து விட்டு வெளியேறினாள்.
ஆனால், அன்று மாலையே அம்மா அழுகையுடன் அழைக்க, அரக்கப் பரக்க அம்மாவிடம் ஓடினாள் வானதி.
ஆனால், மகளிடம் இறுதியாக ஒரு வார்த்தைக் கூட பேசாமல் மாரடைப்பின் காரணமாக மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே மரணித்து விடை பெற்றுக் கொண்டார் கிருஷ்ணமூர்த்தி. வானதி உடைந்துப் போனாள்.
அப்பாவின் பூத உடலை பார்க்க பார்க்க அவளுக்கு கண்ணீர் பெருகியது. காலையில் உயிரோடு, சிரிப்போடு, புன்னகையுடன் பேத்தியை தூக்கி வைத்திருந்த அப்பா, இப்போது அசையாமல் படுத்திருப்பதை அவளால் பார்க்கவே முடியவில்லை.
“எழுந்திருங்க ப்பா” என்று அவரை பிடித்து உலுக்க வேண்டும் போலிருந்தது.
அம்மாவின் கைப் பிடித்து நெருங்கி அமர்ந்தவளுக்கு அப்பாவின் இழப்பு தாங்க இயலாததாக இருந்தது.
“அப்பா ஏதாவது பேசினாராம்மா? அம்மா, சொல்லும்மா.” அதிர்ச்சியில் உறைந்திருந்த அம்மாவிடம் அடிக்கடி அதைத்தான் கேட்டுக் கொண்டிருந்தாள் வானதி.