கிருஷ்ணமூர்த்தியின் மறைவு அவர் குடும்பத்திற்கு மிகப் பெரிய இழப்பு. அதிலும், நல்ல உடல் நலத்துடன், ஆரோக்கியமாக அன்று காலை வரை இருந்தவரின் மரணத்தை அவர்கள் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை.
தாங்கிக் கொள்ள முடியாத அந்த துயரத்தை உள்வாங்கிக் கொண்டு, இன்னமும் அதிர்ச்சியில் இருந்து வெளிவராதவராக தான் அமர்ந்திருந்தார் பாக்கியம்.
கணவரின் முகத்தையே இமைக்காமல் வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தவரை சுற்றி பெண்கள் பலரும் அமர்ந்து அழுதாலும், அவர் அசையாமல் அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தார்.
“அப்பா என்ன சொன்னார் ம்மா.” வானதி தொடர்ந்து கேட்க, மகளின் அந்த குரல் மெல்ல மெல்ல பாக்கியத்தின் செவியை சென்றடைந்தது.
மகளுக்கு எப்போதும் அப்பா தான் முதல் என்ற மனத்தாங்கல் அவருக்கு எப்போதும் உண்டு. இப்போது அந்த மகளே அப்பாவை குறித்து தன்னிடம் விசாரிக்கிறாள் என்றால்? அவர் இல்லையா? தன் கண் முன்னே ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை போல கண் மூடி படுத்திருப்பவர் இனி ஒருபோதும் தன்னை கண் திறந்து பார்க்கப் போவதில்லையா? நிலைக் குத்திய பார்வையுடன் சிந்தித்துக் கொண்டிருந்தார் பாக்கியம்.
“தாத்தா..” ஏழு வயது நேத்ரன் அழுகையுடன் அழைக்க, இளங்கோ மகனை இழுத்துப் பிடித்து, “தாத்தா இனி கண் முழிக்க மாட்டாங்க நேத்ரா” என்று சொல்வதை கேட்கையில் வானதிக்கு ஓவென்று கத்தி அழ வேண்டும் போலிருந்தது.
“அப்பா இனி கண் முழிக்க மாட்டார் இல்ல வானு. என்னை இப்படி தனியா விட்டுட்டு போய்ட்டாரே. நான் என்ன பண்ணுவேன். அவர் இல்லாம எப்படி தனியா இருப்பேன்?” கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிய, அழுது கொண்டே மகளிடம் கேட்டார் பாக்கியம்.
“ம்மா, அழாதம்மா.” வானதி ஆறுதல் சொல்லி மென்மையாய் அம்மாவின் தோள் தொட்டாள். மகளின் மேலேயே சாய்ந்து கதறினார் பாக்கியம். அவரைச் சுற்றியிருந்த பெண்கள் யாரையும் அவரைத் தொடக் கூட விடவில்லை அவர்.
மகளின் அண்மை மட்டுமே அவருக்கு அழுகையையும், ஆறுதலையும் தந்தது.
அந்நேரம் மகள் அந்த தாய்க்கு தாயானாள். அர்ச்சனா, ஹரிணி என அனைவரும் அருகில் இருந்தாலும், வானதியின் மடியிலேயே தஞ்சமடைந்தார் பாக்கியம்.
வானதி அத்தனை முயன்றும் தேற்ற முடியாமல் அம்மாவை அழ விட்டாள். மனதின் தூக்கம் எல்லாம் கண்ணீரில் கரைந்துப் போகட்டும் என நினைத்தாள். அப்படி எளிதில் பாக்கியத்தின் துக்கம் நீர்த்து விடவில்லை.
இருபது வயதில் கணவரின் கைப் பிடித்து, கிட்டத்தட்ட 39 வருட மனமொத்த வாழ்வு. அத்தனை லகுவில் விடை கொடுத்திட முடியுமா என்ன? அவரை அமர வைத்து சடங்கு, சம்பிரதாயம் என்று ஏதேதோ செய்தார்கள். சிலை போல அமர்ந்திருந்தார் பாக்கியம். மகள், மருமகள் இவர்களை பார்த்தால் மட்டுமே உடைந்து அழுதார். மற்ற நேரங்களில் சூனியத்தை வெறித்தபடி அசையாமல் அமர்ந்திருப்பார்.
அந்நேரம் மாதவனும் தந்தையை இழந்த துக்கத்தில் துவண்டு போக, இளங்கோ தான் எல்லா ஏற்பாடுகளையும் செய்தான். எல்லோரையும் அவன் தான் கவனித்தான்.
குழந்தைகள் மூவரும் அர்ச்சனாவின் வசம் இருந்தனர்.
“வானதி, அத்தையை இதை குடிக்க வை. பிளீஸ்”
“வானதி, பாப்பாக்கு பால் கொடு. அழுறா பார்”
“வானதி, அம்மா அழுறாங்க பார்.”
“வானதி, குழந்தையை தூக்கு. அவ அழுறா, பார்” என்ற கட்டளைகள் அவள் செவியில் விழும் போதெல்லாம் அம்மாவையும், மகளையும் மாறி மாறி கவனித்தாள் வானதி. மனைவி வாய் விட்டு அழாததை இளங்கோ மட்டுமே கவனித்தான்.
“வானதி, கொஞ்சம் பணம் எடுத்து கொடு” என்று மனைவியை உள்ளே அழைத்தவன், பணத்தை வாங்காமல், ஆறுதலாய் அவளின் தலைக் கோதி கொடுத்தான். அன்பாய் தலைக் கோதும் விரல்களுக்கு அப்பாவின் சாயல் இருக்க, அவளுக்கு அப்படியே கதறி விடத் தோன்றியது. ஆனால், அழுகையில் விம்மிய நெஞ்சை அடக்கிக் கொண்டு, “இந்தாங்க, பணம்” என்று எடுத்து நீட்டினாள்.
“வானதி, மாமாக்கு இப்படி…” கணவனின் ஆறுதல் மொழியை கூட கேட்கவில்லை அவள். அமைதியாக அம்மாவிடம் சென்று அமர்ந்து விட்டாள்.
காலத்தின் போக்கில் இழப்பின் வேதனை குறைய தானே வேண்டும். ஆனால், அப்படியொன்றும் எளிதாக எதுவும் நடந்து விடவில்லை.
பாக்கியம் கண்ணாடி பாத்திரம் போலானார். வீட்டின் எந்த பக்கம் திரும்பினாலும் கணவரின் நினைவு வர உடைந்து அழுதார். உணவு, உறக்கம் குறைந்து ஆளும் பாதியாக குறைந்துப் போனார்.
“நம்ம வீட்டுக்கு போகலாம் வாம்மா” வானதி கெஞ்சிக் கேட்க, “நான் அங்க வர மாட்டேன். நான் எங்கேயும் வர மாட்டேன். அப்பாவை விட்டு நான் எங்கேயும் வர மாட்டேன்” என கத்திக் கதறியவரிடம் மேலே பேச அவளுக்கு தைரியம் வரவில்லை.
அம்மாவுக்காக அங்கேயே தங்கி விட்டாள் வானதி.
முழுதாக மூன்று மாதங்கள் கழித்து தான் சற்றே இயல்பு நிலைக்கு திரும்பினார் பாக்கியம்.
“உன் பொண்ணுக்கு தாலாட்டு பாடினார் வானு. குழந்தையை தூங்க வச்சவர், அப்படியே என் கிட்ட பேசிட்டு இருந்தார். அப்புறம்.. அப்புறம்..” என்று அலைபாயும் கண்களுடன் தவிக்கும் அம்மாவை பார்க்கையில் மகளின் நெஞ்சமும் தவித்து, இதயம் கண்ணீராக இளகி நிற்கும். வானதி எப்போதேனும் தெரியாமல் அம்மா முன் அழுது விட்டால், அவ்வளவுதான்.
“என் தங்கப் பொண்ணு வானதி. அவளைத் திட்டாத. அவளை ஏன் பேசுற நீன்னு, உன்னை சத்தம் போட கூட விட மாட்டரே என்னை. இன்னைக்கு உன்னை இப்படி அழ வச்சுட்டாரே வானு” என்று அன்றைய நாள் முழுவதும் அதையே சொல்லி சொல்லி அழுவார் பாக்கியம். ஆக, தன் துக்கத்தை மனதிற்குள் வைத்து மருகினாள் வானதி.
பாக்கியம் மெல்ல மெல்ல தேறி கணவரை பற்றிய சந்தோஷ நினைவுகளை பகிரத் தொடங்குகையில் தான், தன் வீடு திரும்பினாள் வானதி.
“அப்பா என்னம்மா பேசினார்? ஏதாவது சொன்னாரா?” என்று தொடர்ந்து கேட்டவளுக்கு தான் கடைசியாக அப்பாவிடம் என்ன பேசினோம் என்று யோசிக்க யோசிக்க துக்கம் தொண்டையை அடைத்து, கண்ணீரை அடக்கியதில் தொண்டையை யாரோ நெரிப்பது போல வலி பரவியது.
அன்று காலை வீட்டில் இருந்து கிளம்பும் போது மனைவி கையில் இருந்த மகளின் கன்னத்தில் முத்தமிட்டு அப்படியே மனைவிக்கும் முத்தம் கொடுக்கப் போனான் இளங்கோ.
ஏற்கனவே அவன் மேல் கோபத்தில் இருந்தவள், அவன் மார்பில் கை வைத்து மூர்க்கமாக பின்னால் தள்ளி விட்டாள். இளங்கோவின் முகத்தில் ஓர் நொடியில் அவமதித்த உணர்வில் கோபம் கொப்பளிக்க, அவனை உதாசீனப்படுத்தி விட்டு வாயிலை நோக்கி நடந்தாள் வானதி.
“நேரமாச்சு, வாங்க. இப்போ சண்டை போட எனக்கு நேரம் இல்ல. உங்களுக்கும் நேரமில்ல” அவனை திரும்பியும் பாராமல் சொல்லி விட்டு முன்னே நடப்பவளை புரிந்துக் கொள்ள இயலாமல் தவித்தான் இளங்கோ. அவர்கள் வானதியின் பெற்றோர் வீடு செல்ல, அவன் காரில் இருந்து இறங்கவேயில்லை.
அங்கிருந்தே மாமனாருக்கு கையசைத்து விடை பெற்றுக் கொண்டான் இளங்கோ.
வானதி வீட்டினுள் சென்றும் அப்பாவுடன் ஒன்றுமே பேசவில்லை என்பதை இப்போது நினைக்கையிலும் அவளுக்கு மரண வலியை தந்தது.
“போய்ட்டு வாம்மா” என்று அப்பா சொன்னது மட்டுமே அவருடனான இறுதி வார்த்தையாக அவளுக்கு அமைந்துப் போனது தான் கொடுமை.
பழசை நினைவு கூர்ந்தபடி, மகளை கவனித்து உறங்க வைத்து அவளுடனேயே படுத்து விட்டாள் வானதி. அன்று தொடங்கிய பழக்கம் அப்படியே தொடர்ந்து விட்டிருந்தது. இளங்கோ அவள் விருப்பத்திற்கு வளைந்து கொடுத்தான். ஆனால், அவனை உடைத்துப் போடும் அளவு அவன் பொறுமையை சோதித்தாள் வானதி.
என்ன பேச்செடுத்தாலும் யாராவது ஒருவர் மற்றவர் கழுத்தை பிடிப்பதில் வந்து முடிய, இளங்கோ மௌனமாக ஒதுங்கிப் போனான்.
அம்மாவின் மடி சாய்ந்து கண் மூடி படுத்திருப்பவளை பார்த்து, “உங்கம்மாவுக்கு நீ தான் ஆறுதல் சொல்லணும். நீயே இப்படி இருந்தா உங்கம்மா எப்படி தேறி வருவா வானதி” என யாரேனும் சொல்லி விட்டால், படக்கென நிமிர்ந்து அமர்ந்து விடுவாள். ஆனால், மனம் கிடந்து அடித்துக் கொள்ளும்.
எத்தனை வயதானால் என்ன? அவள் மகள் தானே?
இளங்கோவின் மனைவி வானதி. நேத்ரன், நட்சத்திராவின் அம்மா வானதி, என்றைக்குமே கிருஷ்ணமூர்த்தியின் மகள் வானதி தானே?
எந்த வயதிலும் அப்பாவின் இழப்பு பெரிது தானே?
பாசமாய் மகளின் கைப் பிடித்து நடந்த அப்பா, இளங்கோவின் கையில் கண்கலங்க அவளை ஒப்படைத்த அப்பா, மகளின் மகனுக்கு நடைப் பழக்குகையில் குழந்தையோடு குழந்தையாய் மாறிய அப்பா. இந்த உலகில் இருந்து அவர் மறைந்தாலும் அவர்களின் வாழ்க்கையில் இருந்து எப்படி மறைவார் அப்பா?
கிருஷ்ணமூர்த்திக்கு கண்டிப்பை கூட அன்பாக மட்டுமே செய்யத் தெரியும். ஆனால், பாக்கியம் அப்படியல்ல. அன்பையும் அதட்டலாகவே வெளிப்படுத்துவார். அவர் திட்டுவதிலும், கத்துவதிலும் கூட பிள்ளைகளின் மீதான அன்பே பிரதானமாக இருக்கும். அவரை புரிந்துக் கொள்வது கடினம். ஆனால், புரிந்தால் தானாய் பிரியம் பிறந்து விடும்.
அம்மாவிற்கு கோவில், உறவினர் வீடுகள், கடைத் தெருக்கள் என வெளியில் செல்வதென்றால் அத்தனைப் பிடிக்கும். ஆளுக்கு முதல் தயாராகி நிற்பார். கணவருடன் செல்வது என்றால் சொல்லவே வேண்டாம். முகத்தில் தானாகவே ஒரு ஒளி வட்டம் வந்து விடும்.
கணவருடன் சேர்ந்து மகள், மருமகளை அழைத்துக் கொண்டு சிறுவாபுரி முருகன் கோவிலுக்கும், திநகர் கடைத் தெருவுக்கும் அடிக்கடி செல்வார் பாக்கியம். ஆனால், அப்பா தவறிய பின் வீட்டிலேயே அடைந்துக் கிடந்த அம்மாவை வற்புறுத்தி வலுக்கட்டாயமாக வெளியில் அழைத்துச் செல்வாள் வானதி.
கோவில் வாசலில் வைத்து பூ வாங்கினால் கூட மிக இயல்பாக, பழக்கத்தின் காரணமாக அரை முழம் பூவை அம்மாவின் முன் நீட்டி விடுவாள் வானதி.
ஒரு வயதிற்கு பின் அம்மாக்கள் மகள்களுக்கு தோழிகளாகி விடுகிறார்கள். வானதிக்கு நேத்ரன் பிறந்த பின் தான் அது நிகழ்ந்தது. ஒரு தோழியை போல அம்மாவிடம் அனைத்தையும் பகிர்ந்துக் கொள்வாள் அவள்.
அதற்காக அம்மாவின் மேலிருந்த மரியாதை துளியளவும் அவளுக்கு குறைந்ததில்லை. அது ஒருவித பெயரிட முடியாத உணர்வு. உறவும், உரிமையும், கூடுதலாய் பெற்ற ஓர் நட்பு அம்மாவுக்கும், அவளுக்கும் நடுவில் இருந்தது. அவளால் அம்மாவிடம் எதையும் மனம் விட்டு பேசிட முடியும்.
கோவிலுக்கு சென்றால், “இந்தாம்மா” என்று பூ வாங்கி நீட்டிடுவாள். இப்போதும் பழக்கத்தின் காரணமாக பூவை நீட்டி பின் கண்கள் கலங்க கையை பின்னுக்கு இழுத்துக் கொள்வாள் வானதி.
அவளுக்கு நினைவு தெரிந்து மங்கலகரமாக மட்டுமே பார்த்திருந்த அம்மாவின் முகம் இப்போதும் அழகாகத் தான் தெரிந்தது. ஆனாலும், வலித்தது.
மகளின் மனம் புரிந்து வீட்டில் பூக்கும் மலர்களை தொடுத்து அவள் தலையில் சூடி விடுவார் பாக்கியம்.
இரண்டு பீரோ முழுக்க ரகம் வாரியாக நூற்றுக் கணக்கான புடவைகள் பாக்கியத்திடம் உண்டு. அது எதையும் இப்போது உடுத்தாமல் ஒதுக்கி வைத்தார் அவர்.
பாக்கியம் புது புடவை எடுத்தால் மகளிடமோ, இல்லை மருமகளிடமோ தான் முதலில் கட்டக் கொடுப்பார்.
“இந்தா அர்ச்சனா, நீ முதல்ல கட்டிட்டு குடு. வானு நீ கட்டிட்டு குடு. அப்புறம் அம்மா கட்டுறேன்” என்பது தான் அவரின் வாடிக்கை.
“ம்மா, நாளைக்கு பெரியப்பா வீட்டு கல்யாணத்துக்கு நான் ப்ளூல சில்வர் ஜரிகை போட்ட டஸ்ஸர் சில்க் கட்டப் போறேன். நீயும் அதே கலர் புடவை எடுத்து வைம்மா” என்று முன்னரே திட்டமிட்டு அம்மாவும், மகளும் ஒரே நிறத்தில் சேலை கட்டி விஷேச வீடுகளுக்கு செல்வார்கள். வானதிக்கு அதில் ஒரு மகிழ்ச்சி.
ஆனால், பாக்கியத்தின் அத்தனை சேலைகளும் இப்போது தொடப்படாமல் ஓரமாக கிடந்தது.
“அர்ச்சனா, இங்க வா” என்று மருமகளை அழைத்து, “ஹரிணிக்கு பட்டு கவுன் தைக்கணும்னு சொல்லிட்டு இருந்த இல்ல? இந்தா, இந்தப் புடவையில் தச்சுக்கோ. அவளுக்கு கொஞ்சம் துணிப் போதும்னு நினைக்கிறேன். மிச்சத்துல உனக்கும் ஒன்னு தைச்சுக்கோ. அம்மாவும், பொண்ணும் ஒரே போல போட்டுப்பீங்க” என்று அவரிடம் இருப்பதிலேயே சிறந்த பட்டுப் புடவைகள் நாலைந்தை எடுத்துக் கொடுப்பார். அப்படியே வானதிக்கும் இரண்டு புடவைகள் கொடுப்பார்.
“ம்மா..” என்று வானதி அழைத்தால், “இதையெல்லாம் வச்சு நான் என்ன பண்ண போறேன் வானு.” என்று அசட்டையாக பதில் சொல்வார்.
“இந்த புடவை இருக்குல்ல, இது எங்க கல்யாண புடவை. இது உங்கப்பா இருபது வருஷத்துக்கு முன்னாடி வாங்கிக் கொடுத்த புடவை” என்று துணியின் ஒவ்வொரு இழைகளிலும் கணவரின் நினைவைத் தேடும் அம்மாவை தேற்றத் தெரியாமல் தேங்கி நிற்பாள் வானதி.
மகளால் நிகழ்த்த முடியாத அதிசயத்தை, மாற்றத்தை பேத்தி நடத்திக் காட்டினாள். நட்சத்திராவின் அழுகையும், புன்னகையும், மழலை பேச்சும், சிரிப்பும், தளிர் நடையும் கொஞ்சம் கொஞ்சமாக பாக்கியத்தை மாற்றியது.
ஆனால், வானதி முழுவதுமாக மன அழுத்தத்தில் அமிழ்ந்தது அப்போது தான். சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் கோபப்பட்டு கத்துவாள். பெரிய விஷயங்களை கண்டுக் கொள்ளாமல் சாதாரணமாக கடப்பாள்.
இளங்கோ வேலையாக இருக்கும் போது தான் அவனிடம் பேசுவதற்கு அவளுக்கு முக்கிய விஷயங்கள் கிடைக்கும். அவனாக பேச வரும் போது அவள் வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருப்பாள். நாளடைவில் அவர்களின் பேச்சுக்கு பிள்ளைகள் தூதுவர்கள் ஆனார்கள்.
இத்தனைக்கும் நடுவில் அப்பாவை அதிகம் தேடினாள் அவள்.
அம்மாவின் அருகாமையில் அமைதியும், ஆறுதலும் கிடைத்தாலும் கூட ஒருவித வெறுமையை மனதளவில் உணர்ந்தாள். அதைப் புரிந்து இளங்கோ நெருங்கி வர அவ்வளவு எளிதில் நெருக்கமெல்லாம் அமையவில்லை.
அவர்களுக்குள் இயல்பான பேச்சுக்கே பஞ்சமாகிப் போனது. மெதுவாக அந்த மாற்றம் அவளுள் வந்தது. காரணமின்றி கோபமும், அதீத எரிச்சலும், மறதியும் அதிகமானது.
அப்பா, அவளுடன் இன்னும் கொஞ்ச காலம் இருந்திருக்கலாம். மகள் ஆடிட்டராவதையாவது மகிழ்வுடன், பெருமையுடன் பார்த்திருந்திருக்கலாம் அவர். அவளை மனம் நிறைய வாழ்த்த அவர் இருந்திருக்கலாம். அவளின் தயக்கங்களை கட்டாயமாக அப்பா புரிந்துக் கொண்டிருப்பார்.
அவளின் பயத்தை, அவள் சொல்லாமலேயே உணர்ந்தவர், அவளுக்கு தைரியத்தையும், தேர்வுகளை எதிர்கொள்ளும் நம்பிக்கை வார்த்தைகளையும் நிச்சயம் சொல்லியிருப்பார்.
மகளின் தலைக் கோதி ஆசிர்வதித்து, அவளுக்கான பரிசை, அவள் பெயர் பொறித்த பேனாவை வழங்கியிருப்பார்.
“அப்பா..” அவளையும் அறியாமல் சத்தமாக அழைத்து விட்டாள். அழுகையும், கண்ணீரும் தானாக வர, அந்த சத்தத்தில் பதறி எழுந்தான் இளங்கோ.
“வானதி, என்னாச்சு?” தூக்கமும், மிரட்சியும் கலந்திருந்த கண்களுடன் அவன் கேட்க, வானதியால் பதில் சொல்ல முடியவில்லை. அழுகை, அழுகை மட்டுமே வந்தது.
“என்ன வானதி? மாமாவை நினைச்சியா?” அவனாக ஊகித்து கேட்க, “ம்ம்” பதில் சொல்லி, கணவனின் கையில் அடைக்கலமானாள்.
இளங்கோ எதுவும் சொல்லவில்லை. அவளின் தலைக் கோதி விட்டான். அதில் அப்பாவின் சாயல் இருக்க, அழுகையோடு, பார்வையை மறைத்த கண்ணீரோடு புன்னகைத்தாள் வானதி.