இரண்டு வருடங்கள். முழுதாக இரண்டு வருடங்கள் கடந்தப் பின்னரும் கூட அப்பாவின் இழப்பிலிருந்து மீளவில்லை வானதி. கடைசியாய் அப்பாவிடம் ஏதாவது பேசியிருக்கலாம், சிரித்திருக்கலாம். குறைந்தபட்சம் அப்பாவின் முகம் பார்த்து புன்னகையாவது செய்திருக்கலாம். எதையுமே செய்யவில்லை அவள்.
அப்பாவின் இறுதி வார்த்தைகள் மட்டுமே அவளுக்கு இப்பொழுதும் நினைவில் நிற்க, அவருடனான மகிழ்வான, பொன்னான நாட்களை எல்லாம் நினைக்க மறந்தே போனாள் வானதி.
அவள் இரண்டாம் தரம் சிஏ இறுதித் தேர்வுக்கு தயாரான நேரம் இரண்டாவது முறையாக கர்ப்பமானது, அந்நேரம் அவளுக்கே மிகுந்த அதிர்ச்சியாகத் தான் இருந்தது.
படிப்பா? பிள்ளைப் பேறா? என்று வருகையில் துளிக் கூட சந்தேகமே இல்லாமல், ஒற்றை நொடியில் இரண்டாவதைத் தான் தேர்ந்தெடுத்தாள் அவள். அதில் இன்றளவும் அவளுக்கு எந்த வருத்தமும் இல்லை.
முதல் பிரசவம் போல அல்லாமல் வயதின் காரணமாகவோ, என்னவோ இரண்டாவது குழந்தையை சுமக்கும் போது அதிக சிரமப்பட்டாள் அவள்.
அவளது உடல்நிலையும் பின் தங்கிட, அதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டியிருந்தது. கணவன், அம்மா, அப்பா, என அவளைச் சுற்றி அத்தனை பேர் கவனித்துக் கொள்ள இருந்தாலும் கூட அவளுக்கு போதவில்லை.
முதல் பிரசவம் போல அதிகம் வலித்தாலும், சில மணி நேரங்களில் குழந்தை பிறந்து விடும் என்று அவள் எதிர்பார்த்திருக்க, அதுவும் நடக்கவில்லை.
கிட்டத்தட்ட பல மணி நேரங்கள் போராடி அவள் சோர்ந்து போக, போஃர்செப்ஸ், சிசேரியன் என்றெல்லாம் மருத்துவர்கள் சொல்லும் போது பயந்தே போனாள். அவள் மரண வலியில் கதறி, துடித்து என நீண்ட போராட்டத்திற்கு பிறகு தான் பிறந்தாள் நட்சத்திரா.
அப்பாடா, என்று பெருமூச்சு விட்டு ஓய்ந்து அமர்ந்து விட முடியாதபடி மீண்டும் உறக்கம் இல்லா இரவுகள் அவளின் பொழுதுகளை களவாடியது.
அவளுக்கு அதிகமாக பால் சுரக்கும் நாட்களில் குழந்தை அருந்தவில்லை. குழந்தை நாளெல்லாம் அவள் மார்பில் முட்டிக் கொண்டே இருந்த நாட்களில் அவளுக்கு போதிய பால் சுரக்கவில்லை. அந்த நாட்களை இப்போது நினைக்கையிலும் அவள் மனம் சுணங்கியது.
அவளுடன் அம்மா மட்டும் இல்லா விட்டால் என்னவாகி இருப்பாள் என்று அவளுக்கேத் தெரியாது.
நட்சத்திரா பிறந்து ஆரம்ப மாதங்களில் இரவெல்லாம் இளங்கோ விழித்து, அழும் குழந்தையை தூக்கி வைத்துக் கொள்ள அவளுக்குத் தான் மனம் கேட்கவில்லை. பகலில் அலுவலகம் செல்பவன், இரவெல்லாம் விழித்திருந்தால் சிரமப்படுவானே என்று குழந்தைகளின் அறைக்கு மாறினாள். ஆனால், இளங்கோ மாறவில்லை. அவனது அன்பும், அக்கறையும் அப்படியே தானிருந்தது. நேத்ரனை பெரும்பாலும் அவன் தான் கவனித்துக் கொண்டான்.
பின்னரும் கூட வானதிக்கு கைக் குழந்தையை அம்மாவிடம் விட்டுவிட்டு வேலைக்கு போவதில் அப்படியொரு வருத்தம். மகளை பிரிய மனதேயில்லாமல் தான் தினமும் வேலைக்கு செல்வாள்.
“பாப்பாவை நான் பார்த்துக்கிறேன் வானதி. நீ கவலைப்படாம ஆஃபீஸ் போ” மகளை வார்த்தைகளால் தேற்றி தெம்பூட்டும் அப்பா தவறியது, அவளுக்கு மனதளவில் மிகப் பெரிய அடி.
அதன் பின் அம்மா, மகள் இருவரையும் ஒரு சேர பிரிந்து அலுவலகம் செல்வது அவளால் முடியவேயில்லை. வருடாந்திர விடுமுறை, மருத்துவ விடுமுறை என ஏதேதோ எடுத்து அம்மாவுடன் இருந்தாள் வானதி. ஆனாலும், மனம் கேட்கவில்லை.
அம்மா, அவளுக்காக எப்போதும் துணை நின்றிருக்கிறார். அவர் துக்கத்தில் துவண்டு போய் நிற்கும் போது மகளாக தான் துணை நிற்கவில்லையே என்ற வருத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அவளுள் வளர்ந்து மன அழுத்தமாக மாறியிருந்தது.
அப்பொழுதும் அவளை அம்மா தான் கவனித்தார். அதுதான் அவரின் இயல்பே.
அம்மாவுக்கு முன்பே, இளங்கோதான் வானதியை பிடித்து நிறுத்தினான்.
வானதியின் விலகல், அவளின் நடவடிக்கைகளில் தெரிந்த சிறு சிறு மாற்றங்கள், கோபம், எரிச்சல், மறதி என அவளின் ஒவ்வொரு செயலும் இளங்கோவின் கவனித்திலும் விழுந்தது.
“வானதி, இங்க பார். நில்லு” அவள் போக்கில் ஓடியவளை அழுத்தமாக பிடித்து நிறுத்தினான். அவளோ, மூர்க்கமாக பின் வாங்கினாள்.
தாம்பத்தியம் என்பது தேவையை மட்டுமே மையமாக கொண்டதல்ல.
மனம் அலைப்புறும் நாட்களில் அணைப்பின் வழி அன்பைச் சொல்லும், அருகாமையை வழங்கும். இழப்பின் போது இழுத்து அணைக்கும் கரங்கள், சொல்ல விழைவது, “உனக்காக நான் இருக்கிறேன், உன்னோடு நான் இருக்கிறேன்” என்பதே. இளங்கோ அன்பாய் அணைத்து இடைவெளிகள் குறைத்து நெருக்கம் கூட்ட விரும்பினான். அதற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை வானதி.
மனம் திறந்து பேசினால் பிரச்சினையாகி விடும் என்று சொல்லாமல் விடுகின்ற விஷயங்களே மிகப் பெரிய பிரச்சினைகளை கொண்டு வந்து விடுகிறது.
அவர்களுக்குள் பார்வை, பேச்சு என அனைத்திற்கும் பஞ்சமாகி போக, கடமையாக மாறிய தாம்பத்தியத்தையும் மனைவியின் மேல் திணிக்க விரும்பாமல் அவள் விருப்பத்திற்கு வளைந்து கொடுத்து விலகி நின்றான் இளங்கோ. அதுவும் வானதியின் பார்வையில் தவறாகி போனது.
“நாம லவ் பண்ணும் போது எப்படி பேசினீங்க? இப்போ என்னை கண்டுக்க கூட மாட்டேங்கறீங்க? உங்களுக்கு என் மேல இருந்த லவ் எல்லாம் கல்யாணமானதும் காணாம போய்டுச்சு” என்று மூச்சைப் பிடித்துக் கொண்டு கத்துவாள் வானதி.
“நீங்க ஆளே மாறிட்டீங்க”
“அப்படியா? நான் மாற்றிட்டேனா? இருக்கும், இருக்கும். என்னை நீ பார்த்தும், உன்னை நான் பார்த்தும் பல மாசம் ஆச்சுல்ல. அதுனால, மாற்றம் எதுவும் இல்லையேன்னு கன்பார்மா என்னாலும் சொல்ல முடியல.” அவளை நெருங்கி, முகத்திற்கு நேராக அடர்த்தியான குரலில் சொல்லி விட்டு போவான் இளங்கோ. சட்டென கோபமும், குற்ற உணர்ச்சியும் சேர்ந்தே வானதிக்குள் எழும். கணவனின் முதுகை வெறித்தபடி வெறுமையாய் பார்த்து நிற்பாள்.
தவறு தன் பக்கமும் இருக்கிறது என உணர்ந்து, “இந்த வீக்எண்ட் வெளில போகலாம்” என்று முதல் அடியை வானதி எடுத்து வைக்கும் போது, அலுவலக வேலையில் மூழ்கி, அவளின் முயற்சியை மொத்தமாய் இழுத்து மூடி விடுவான் இளங்கோ.
கணவன், பிள்ளைகள், அம்மா, அண்ணா, அண்ணி என தன்னை சுற்றியிருக்கும் அனைவரும் தன் மேல் அன்பாக இருக்க, எதற்காக இப்படி ஓடிக் கொண்டிருக்கிறோம் என்று தீவிரமாக சிந்தித்த ஓர் இரவில் முடிவாக ஒரு தீர்மானத்திற்கு வந்திருந்தாள் வானதி.
அப்பாவின் கனவை, தன் விருப்பத்தை, கணவனின் ஆசையை நிறைவேற்றாத வருத்தம் அவளின் அடிமனதில் ஆழமாக வேரூன்றி இருந்தது. முதலில் அதை களைய வேண்டும் என நினைத்து, “நான் இந்த வருஷம் ஃபைனல்ஸ் எழுதலாம்னு இருக்கேன்” என்று கணவனிடம் சொன்னாள் அவள்.
வீட்டின் அலுவலக அறையில் அமர்ந்து மாதவனுக்காக ஏதோ வேலை செய்துக் கொண்டிருந்த இளங்கோ, சடாரென்று கண்களை உயர்த்தி மனைவியை அதிர்ச்சியுடன் பார்த்தான்.
“இப்போவா?” ஒற்றை வார்த்தைக் கேள்வி தான் கேட்டான் இளங்கோ. அவ்வளவுதான். ஆடி தீர்த்து விட்டாள் வானதி.
“ஏன், நான் இப்போ ஃபைனல்ஸ் எழுத கூடாதா? நீங்க எழுத விட மாட்டீங்களா என்னை?” அவள் கோபமாக கேட்க,
“நான் இப்போ என்ன கேட்டேன்னு..”
என்றவனை முடிக்க விடாமல், “இப்போவான்னு எப்படி கேட்பீங்க? இதுவே லேட் தானே?” என்று மேலும் எகிறினாள். அத்தோடு நிற்காமல், “உங்களுக்கு என் மேல அன்பில்ல, அக்கறையில்ல, லவ் இல்ல.” என பல இல்லைகள், எல்லையில்லாமல் நீண்டுக் கொண்டே போனது.
முடிவாக, “என் ரெஜிஸ்ட்ரேஷன் எக்ஸ்பயராகிடுச்சா என்ன? நீங்க ரெனியூ பண்ணியிருப்பீங்கன்னு எனக்குத் தெரியும்.” என்று வானதி சொல்லத் தொடங்கவும், “அப்படியா? அது மட்டும் உனக்குத் தெரியுமா? உனக்காக அதை நான் ஏன் செய்யப் போறேன்? எனக்குத் தான் உன் மேல அன்பு, அக்கறை, லவ் எதுவும் இல்லையே.. அப்புறம் எப்படி செய்வேன் நான்?” என்று நிதானமாக, ஒவ்வொரு வார்த்தையாக உச்சரித்து கேட்டான் இளங்கோ. அவன் நிச்சயம் செய்திருப்பான் என்று அவளுக்குத் தெரியும். அவனும் செய்திருந்தான் தான். ஆனாலும், முட்டிக் கொண்டது.
அதன் பிறகு ஒரு வாரம் ஆளுக்கொரு பக்கமாக முகம் திருப்பிக் கொண்டு திரிந்தார்கள். கணவன் அலுவலக பணி நிமித்தம் ஜப்பான் செல்வதாக இருந்ததை கூட அந்நேரம் இருந்த பதட்டத்தில், சண்டையின் காரணமான கோபத்தில் மறந்தே போனாள் வானதி. ஆனால், இளங்கோவின் அந்த ஜப்பான் பயணம் தான் அவர்கள் உறவில் பெரும் முன்னேற்றத்தை வரவைத்தது.
“நான் ஜப்பான்ல இருந்து திரும்பி வர ரெண்டு வாரம் ஆகும் வானதி. அதுக்குள்ள நல்லா யோசிச்சு ஒரு முடிவெடு. நீ என்ன முடிவெடுத்தாலும் நான் சப்போர்ட் பண்ணுவேன்” என்று இளங்கோ உறுதியளிக்க, வானதி வேலையை விடும் முடிவெடுத்தாள்.
அதற்கு அவளின் மனஅழுத்தம் மட்டும் காரணமல்ல. அப்பா, அம்மா, மகள், வீடு, குடும்பம் என பலவற்றையும் யோசித்தாள் வானதி. அனைத்தையும் விட அவளைப் பற்றியும் யோசித்தாள். அவளுக்கு இந்த ஓய்வு தேவை. மாற்றம் தேவை. ஆக, விரும்பியே வேலையை விட்டாள் அவள்.
அவளின் முடிவை இளங்கோவும் ஆதரித்தான்.
அதுநாள் வரை இணக்கமாக பேசாமல் முறைத்துக் கொண்டு இருந்தவர்கள், அவர்களுக்கு இடையில் பல ஆயிரம் மைல்கள் குறுக்கே நிற்கையில், சுட்டு விரலைக் கூட தொட்டு விட முடியாத தூரத்தில் இருக்கும் போது நெருங்கி வந்தார்கள். தினமும் காணொளி அழைப்பில் கதை மட்டும் பேசாமல் காதலும் பேசினார்கள். அன்பும், அக்கறையும் பகிர்ந்தார்கள்.
வானதியின் அப்பாவின் மறைவு அவர்களை பிரித்து வைத்தது என்றால், இளங்கோவின் அப்பாவின் உடல்நலக் குறைவு அவர்களை சேர்த்து வைத்தது.
“வானதி, அழுதது போதும்” கண்ணீருடன் கடந்த காலத்தை அசைப் போட்டுக் கொண்டிருந்த மனைவியை அதட்டினான் இளங்கோ.
“ம்ம்” என்று புரண்டு படுத்தாள் வானதி.
“என்ன பண்ற நீ? முதல்ல அழுகையை நிறுத்து. நீ மாமாக்காக ஃபீல் பண்றியா? இல்ல, உனக்காகவா? எதுவா இருந்தாலும் மாமாக்கு உன்னை இப்படி பார்க்க கண்டிப்பா பிடிக்காது. அதை முதல்ல ரியலைஸ் பண்ணு நீ.” அவள் சத்தம் போட்டு அழவில்லை. ஆனாலும், கண்கள் கலங்க இலக்கில்லாமல் வெறித்தபடி படுத்திருந்த மனைவியின் முகம் பார்த்துச் சொன்னான் இளங்கோ.
“நான் உங்க கூட எதுக்கெடுத்தாலும் சண்டை போட்டு, பேசாம இருந்தேன்னு தெரிஞ்சா கூட அப்பா என்னை திட்டுவாங்க இல்லங்க? அதுவுமே அப்பாக்கு பிடிக்காது தானே?”
“ம்ம், அதான் இப்போ சரியாகிட்டோமே. ஏன் இப்போ போய் பழசை பேசிட்டு இருக்க?”
“நான் அப்படி விட்டேத்தியா இருந்திருக்க கூடாது. இல்லங்க? எப்ப பாரு உங்களை சீண்டி, சண்டை இழுத்து, கத்தி, ஆர்ப்பாட்டம் பண்ணி.. ப்ச், உங்களை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேனா?” மெய்யான வருத்தத்துடன் கணவனின் கண் பார்த்து வானதி கேட்க, “தப்பு என் பேர்லயும் இருக்கே வானதி. நானும் பதிலுக்கு உன்னை பேசினேனே. நிறைய நேரம் பதிலே பேசாம ஒதுங்கிப் போய் உன்னை ஹர்ட் பண்ணேன் தானே? சாரி” என்றவன்,
“நான் வேலைக்கு கொடுத்த முக்கியத்துவத்தை, அட்லீஸ்ட் நீ எனக்கு கொடுத்த முக்கியத்துவத்தை, நான் உனக்கும் கொடுத்திருக்கணும் இல்ல?” அவளின் தாடைப் பற்றி முகம் நிமிர்த்தி இளங்கோ கேட்க, எச்சில் கூட்டி விழுங்கினாள் வானதி.
“நீங்க எனக்கு நிறைய இம்பார்ட்டென்ட்ஸ் கொடுத்தீங்க தான்.”
“ஆனா, இட் வாஸ் நாட் இனாப். இல்லையா?” அவன் கேட்கவும், கண்களை மூடித் திறந்து ஆமென்றாள் வானதி. மெல்ல எம்பி கணவனின் கழுத்தில் கரம் கோர்த்து அணைத்துக் கொண்டாள்.
தானும் மனைவியை அணைத்துக் கொண்டவன், “ஐ ஆம் சாரி” என்றான் மனதார.
“மன்னிச்சுட்டேன்.” என்ற அவள் குரலில் சிரிப்பின் தடமிருந்தது.
வானதி மெல்ல விலகி அவன் முகம் பார்க்க, “நீ எதுவும் சொல்ல வேணாம் வானதி. நான், பசங்க, வீடு, வேலை, உன் குடும்பம், என் குடும்பம்னு, நீ கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருந்தது. உன்னையும் சேர்த்து நீ தான் பார்த்துக்கிட்ட..” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “இல்ல. என்னை நீங்க பார்த்துக்கிட்டீங்க. நிறைய டிரை பண்ணீங்க. நான் தான் விடல.” குற்ற உணர்வுடன் சொன்னாள்.
“உன்னை நான் இன்னும் அதிகமா கவனிச்சுருக்கணும் வானதி. நீ சண்டை போட்டாலும் நான் பேசாம போய் இருக்கக் கூடாது. ஐ புராமிஸ் யூ, இனிமே இப்படி நடந்துக்க மாட்டேன்” என்று அவன் உறுதியாக சொல்ல, “நானும் எல்லாத்தையும் மனசுல போட்டு குழப்பிக்காம இனிமே உங்ககிட்ட டிஸ்கஸ் பண்ணுவேன். நம்புங்க, பிளீஸ்” என்றாள்.
“நம்பிட்டேன்” என்று சிரித்த இளங்கோ, “இப்போ உன் பயம் என்ன? ஏன் இவ்வளவு டென்ஷன் அண்ட் ஸ்ட்ரெஸ் தேவையில்லாம எடுத்துக்கற?” என்று அக்கறையுடன் கேட்டான்.
“ஒருவேளை திரும்பவும் நான் சிஏ எழுதி பாஸ் பண்ண முடியாம போனா?” அவள் குரலில் நடுக்கமும், பயமும் கொட்டிக் கிடந்தது.
“பாஸ் பண்ண முடியாம போனா என்ன வானதி? என்னவாகும்னு நினைக்கிற? எதுக்கு இப்படி பயப்படுற? இல்ல, யாருக்கு பயப்படுற?” இளங்கோ கேட்க, அவளிடம் பதிலில்லை.
“ஃபர்ஸ்ட் டைம் நீ பாஸ் பண்ணல, ஓகே. செகண்ட் டைம் எழுத மாட்டேன்னு சொல்லிட்ட. தேர்ட் டைம் எக்ஸாமுக்கு அப்ளை பண்ணி, கோச்சிங் போய் படிச்சு, கடைசியா எக்ஸாம் எழுதல நீ. அதுக்கு உன்னை ஏதாவது சொன்னேனா நான்?” இளங்கோ தீர்க்கமாக கேட்க, வானதி மறுப்பாக தலையசைத்தாள்.
ஒவ்வொரு முறையும் அவன் தான் அவளைக் கட்டாயப்படுத்தினான். அவன் தான் ஊக்கமளித்தான். அவளுடன் அமர்ந்து படிக்கக் கூட செய்திருக்கிறான். ஆனாலும், அவளின் பயம் தானே முன்னிலையில் இருக்கிறது. தன் மனதை திசைத் திருப்ப, வேலை, இரண்டாவது குழந்தை என எத்தனையோ திசைத் திருப்பல்களை செய்து விட்டாள். அத்தனையையும் செய்தவளுக்கு தேர்வுகளை எதிர்கொள்ளும் தைரியம் மட்டும் வரவில்லை.
“என்னை விடு. மாமா ஏதாவது உன்னை ஹர்ட் பண்ற மாதிரி சொன்னாரா? இப்ப இருந்தாலும் சொல்லியிருப்பாரா? நீயே யோசிச்சு சொல்லு” இளங்கோ கேட்கவும், மறுப்பாக தலையசைத்தாள்.
அப்பாவுக்கு அன்றைக்கு நிறைய வருத்தம் இருந்ததை அவள் அறிவாள். அதை தன்னிடம் அப்பா காட்டிக் கொள்ளவில்லை என்பதும் அவளுக்கு தெரிந்து தான் இருந்தது. இன்றைக்கும் தேர்வெழுதி அவள் தோற்று போனாலும் நிச்சயம் வருந்துவார். ஆனால், அதற்காக வானதி தன் மகளில்லை என்றோ, நல்ல மகளில்லை என்றோ சொல்ல மாட்டார் என்பது அவளுக்கு உறுதியாக தெரியும்.
“ஒருவேளை நான் சிஏ பாஸ் பண்ணாம போய் இருந்தா என்ன பண்ணியிருப்ப வானதி? என்னை கல்யாணம் பண்ணியிருக்க மாட்டியா? என்னை அப்போ லவ் பண்ணியிருக்க மாட்டியா? என்னை பார்த்து அப்போ பெருமை பட்டிருக்க மாட்டியா?” இளங்கோ கேள்விகளாக அடுக்கிக் கொண்டே போனான். அந்த ஒட்டு மொத்த கேள்விகளுக்கு பின்னும் அவளுக்கான பதில் இருந்தது.
“நீ எப்படி இருந்தாலும் நான் உன்னை நேசிப்பேன், நேசிக்கிறேன். உன்னை நினைச்சு எப்போதும் பெருமைப்படுகிறேன். என்றைக்கும் பெருமைப்படுவேன். அதில் மாற்றமே இருக்காது” என்பதை மறைமுகமாக அவன் சொல்ல புன்னகைத்தாள் வானதி.
அப்பா என்றைக்கும் அவள் மேல் அன்பாக தான் இருந்திருப்பார். என் மகள் என்ற பெருமை அவருக்கு எப்போதும் இருந்திருக்கும். என்ன நடந்தாலும் அது மாறப் போவதில்லை. மெல்ல மெல்ல அந்தப் புரிதல் அவளுள் வர, “தேங்க்ஸ்” என்று கணவனை இறுக அணைத்துச் சொன்னாள் வானதி.
“ம்ம், தூங்கு” என்றான் இளங்கோ. வானதி எழுந்து சென்று முகம் கழுவி வந்து படுத்தாள். அழுகையும், அசதியும் சேர்ந்து அவளை ஆழ்ந்த உறக்கத்திற்குள் அமிழ்த்தியது.