மறுநாள் காலையில் நட்சத்திரா, “அம்மா” என்று அவளை உலுக்கி எழுப்பவும் தான் கண் விழித்தாள் வானதி.
“செல்லக் குட்டி” என்று மகளை அணைத்துக் கொண்டு நிமிர்ந்தவளின் பார்வையில் விழுந்தது சுவரில் இருந்த கடிகாரம். காலை ஏழு மணி என்று அது சொல்ல, அதிர்ச்சியுடன் உடலில் இருந்த மிச்ச சொச்ச உறக்கத்தையும் விரட்டி அடித்து எழுந்து அமர்ந்தாள் அவள்.
அந்நேரம் இளங்கோ அறைக்குள் வரவும், “என்ன இவ்வளவு நேரம் தூங்கிட்டேன்? என்னை எழுப்பி இருக்கலாம் இல்ல நீங்க?” என்று அவள் பதற, “ரிலாக்ஸ்” என்றான் இளங்கோ.
“நேத்ரன் ஸ்கூல் பஸ் வந்திடும். நாம ரெண்டு பேரும் ஆஃபீஸ் போகணும். அக்கா, வேலைக்கு வந்துட்டு இருப்பாங்க. அத்தை, மாமாக்கு காஃபி, டிஃபன் கொடுக்கணும். இதுல எங்க ரிலாக்ஸ் பண்ண?” படுக்கையில் இருந்து வேகமாக இறங்கி, அதை விட வேகமாக பேசினாள் வானதி. அம்மாவின் பேச்சை ஆவென்று வாய் திறந்து கவனித்து சிரித்தாள் நட்சத்திரா.
மகளை மனைவியிடம் இருந்து தூக்கிக் கொண்ட இளங்கோ, “நீ குளிச்சுட்டு வா. நேத்ரனை நான் பார்த்துக்கறேன்” என்று அவளின் தோளை தொட்டு திருப்பி ஓய்வறை நோக்கி நகர்த்தினான்.
“என்னை விடுங்க முதல்ல. என்ன நீங்க? டைம் பாருங்க, எவ்வளவு லேட்டாகிடுச்சுன்னு தெரியலையா உங்களுக்கு?”
“குளிச்சுட்டு வா, வானதி” அவளை வலுக்கட்டாயமாக உள்ளே தள்ளி கதவடைத்தான். அவளுக்கு தேவையானதை படுக்கையின் ஓரம் எடுத்து வைத்து, அறையை மூடி விட்டு வெளியேறினான் இளங்கோ.
பதினைந்து நிமிடங்கள் கழித்து அவசரமாக வானதி வெளியே வர, வீடு இயல்பாக சுழன்று கொண்டிருந்தது.
நேத்ரன் பள்ளிச் சீருடை அணிந்து, காலை உணவை உண்டு கொண்டிருந்தான். மாமனார் தொலைகாட்சியில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்தார்.
வீட்டு உதவி செய்யும் பெண், அவளைப் பார்த்ததும் புன்னகைத்து தன் பணியில் மூழ்கினார். வானதி சமையல் அறைக்கு செல்ல, தாமரை சமைத்துக் கொண்டிருந்தார்.
“காஃபி தரவா வானதி?” அவளைப் பார்த்ததும் கேட்டார்.
“நானே கலந்துக்கறேன் த்த” தடுமாற்றத்துடன் சொன்னவளின் கண்கள் சமையல் மேடையை ஆராய்ந்தது. காலை, மதிய உணவு கிட்டத்தட்ட தயாராக இருக்க, ஆச்சரியத்துடன் மாமியாரை பார்த்தாள் அவள்.
“நேத்ரன் லஞ்ச் டப்பாக்கு தக்காளி சோறும், சேனைக் கிழங்கு வறுவலும் பண்ணியிருக்கேன். அவனுக்கு பிடிக்கும்னு தான் பண்ணேன். சாப்பிட்டு வந்திடுவான் தானே? நீயும் இதையே எடுத்துட்டு போறியா?” தாமரை கேட்க, காஃபியை ஒரு மிடறு விழுங்கி, “நான் வந்து செஞ்சுருப்பேன் இல்லத்த” என்றாள் வானதி.
“அட, இதுல என்ன இருக்கு? ஒரு நாள் நான் செஞ்சா குறைஞ்சா போகப் போறேன். நீ சொல்லு. உனக்கும் இதையே கட்டவா?”
“சரிங்கத்த” அதிசயமாக அக்கறை காண்பிப்பவரிடம் மறுக்கத் தோன்றவில்லை அவளுக்கு.
இளங்கோவே நேத்ரனை கவனித்து, பள்ளி வாகனத்தில் ஏற்றி விட்டும் வந்தான்.
அடுத்த அரை மணி நேரத்தில் அவர்கள் இருவரும் அலுவலகம் செல்ல தயாராகினார்கள். வானதி அரக்க பரக்க கிளம்புவதை பார்த்து, “நான் ட்ராப் பண்றேன். பொறுமையா கிளம்பு” என்றான் இளங்கோ.
“இப்போ நீங்க ட்ராப் பண்ணா, ஈவ்னிங் நான் ஆட்டோ புக் பண்ணணும். எதுவும் டைமுக்கு கிடைக்காது. எனக்கு டென்ஷன் ஆகும்” என்று அவள் புலம்ப,
“ஈவ்னிங் பத்தி அப்புறம் கவலைப்படலாம். இப்போ நான் ட்ராப் பண்றேன்னு சொன்னா பேசாம வா” அவள் மறுக்க முடியாதபடி அழுத்தமாக சொன்னான்.
இருவரும் காலை உணவை முடித்து, நட்சத்திராவுடன் நடக்க, “குழந்தையை வீட்ல விட்டுட்டு போ வானதி. நான் பார்த்துக்கறேன்” என்றார் தாமரை.
வானதி சட்டென திரும்பி கணவனைப் பார்த்தாள்.
“நீ வேலையை விட்டுட்டேன்னு சொன்னியே மா. அப்புறம் ஏன் ஆபீஸ் போற?” என்று கேட்டார் சந்திரசேகர்.
“நான் வேலையை ரிசைன் பண்ணி ரெண்டு வாரம் தான் ஆகுது மாமா. இது நோட்டீஸ் பீரியட். இன்னும் ஒரு மாசம் வேலை பார்க்கிற மாதிரி இருக்கும். புதுசா என் இடத்துக்கு வந்திருக்கறவங்களுக்கு நான் டிரெய்னிங் கொடுக்கணும் இல்ல? அதுக்குத்தான்” என்று அவள் சொல்ல, “ஓ, சரிம்மா. புரியுது. புரியுது.” என்றார்.
“ஆனாலும், நீ வேலையை விட்டிருக்க கூடாது மா. என்ன தான் எங்களுக்காக இளங்கோ சொன்னாலும், அவன் பேச்சை கேட்டு நீ வேலையை விட்டிருக்க கூடாது. இத்தனை வருஷம் வேலைப் பார்த்து கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்ததிருப்ப. இப்படி சட்டுனு வேலையை விட்டு நின்னிருக்க கூடாது. அதுவும் என்னாலன்னு யோசிக்கும் போது ரொம்ப வருத்தமா இருக்கு மா” என்று அவர் சொல்ல, “அச்சோ, அப்படியில்ல மாமா. இந்த முடிவு நான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எடுத்தது. இப்போ தான் அதுக்கு நேரம் வந்திருக்கு” என்று அவள் சொல்ல, அவருக்கு புரியாவிட்டாலும்,
“எங்களுக்காக இல்லனா சந்தோசம்மா” என்றார்.
“நான் சிஏ முடிக்கலாம்னு நினைச்சு தான்..” என்று வானதி ஆரம்பிக்கவும், “அடடே. ரொம்ப நல்லது மா. நல்ல ஐடியா. கண்டிப்பா இதை இவன் சொல்லி இருக்க மாட்டானே” என்று மகிழ்வுடன் சொல்லி, மகனையும் வம்பிழுத்தார் அவர்.
இளங்கோ அப்பாவையும், மனைவியையும் முறைக்க, “படிக்கப் போறியா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டார் தாமரை.
“ஆமா, அத்த. நான் இன்னும் சிஏ ஃபைனல் எழுதி முடிக்கல. அதான்…”
“ஓ, இத்தனை வருஷம் கழிச்சு எழுத முடியுமா?”
“முடியும் அத்த. உங்க பையனோட சீனியர் ஒருத்தங்க. 45 வயசுல முடிச்சாங்க. இப்போ தான் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி” என்று அவள் சொல்ல, “நிஜமாவா?” என்று ஆச்சரியமாய் கேட்டார் அவர்.
“ஆமாத்த”
“ம்ம், நட்சத்திராவை நான் பார்த்துக்கறேன். இங்கேயே விட்டுட்டு போ” என்று அவர் பேச்சை மாற்ற, “சரிங்கத்த. அப்போ நாங்க வர்றோம்” என்று தயக்கத்துடன் சொன்ன வானதி, கணவனை திரும்பிப் பார்த்தாள்.
அவனோ பார்வையால் என்னவென்று விசாரித்தான். இருவரும் வீட்டை விட்டு வெளியே வர, “என்ன வானதி?” என்று கேட்டான் இளங்கோ.
அவர்கள் காரில் ஏறும் வரை ஒன்றுமே சொல்லவில்லை அவள்.
“நட்சத்திரா இல்லனா அம்மா தனியா இருப்பாங்க. அவங்க சும்மா இல்லாம அப்பாவோட வீடியோ எல்லாம் எடுத்துப் போட்டு பார்த்து ஃபீல் பண்ணுவாங்க. பாப்பா இருந்தா அவளை பார்க்கறதுலேயே அவங்க டைம் போய்டும்” வானதி சொல்லவும்,
“சாரி. நான் அதை யோசிக்கவே இல்ல. திடீர்னு அம்மா பார்த்துக்கறேன் சொல்லவும். பாருடா, நல்ல முன்னேற்றமா இருக்கேன்னு மட்டும் தான் யோசிச்சேன்” என்றான் இளங்கோ.
“ம்ம். நானும் அதுனால தான் எதுவும் சொல்லல. நாளைக்கு அம்மா கிட்ட விட்டுடுவோம். பிளீஸ்”
“ஓகே” என்றவன்,
“என் மாமனார் கலா ரசிகன். சும்மாவா என் பொண்டாட்டிக்கு வானதின்னு பேர் வச்சார்” என்று அவன் ரசித்து சொல்ல, வெட்கத்தை புன்னகையில் மறைத்து, கணவனை முறைத்தாள் வானதி.
கிருஷ்ணமூர்த்தி சென்னை தலைமை செயலகத்தில் பணி புரிந்தார். அது போக ஒரு நாடக குழுவிலும் இருந்தார் அவர். பொன்னியின் செல்வன் நாடகத்தை அவர்கள் குழு பலமுறை மேடையில் காட்சிப் படுத்தியிருக்கிறது. அந்த வீடியோக்களை தான் தற்போது அடிக்கடி போட்டு பார்க்கிறார் பாக்கியம். அவருடன் சில நேரம் அவர்களும் அமர்ந்து பார்ப்பார்கள்.
“அப்பா டிராமா கம்பெனில சேருறதுக்கு முன்னாடியே பொன்னியின் செல்வன் நாவல் படிச்சுட்டார்” என்று அவள் சொல்ல, “ம்ம்.” என்றான் புன்னகைத்து.
“அப்புறம் சொல்ல மறந்துட்டேன். நேத்து அர்ச்சனா அண்ணி என்ன பேசினாங்கன்னு கேட்டீங்க இல்ல?”
“ம்ம், என்ன சொன்னாங்க. சொல்லு?”
“நமக்கு கூர்க் டிரிப் புக் பண்ணி தந்திருக்காங்க. அதுக்கு இன்னும் ரெண்டு மாசம் டைம் இருக்கு. அப்போ பார்த்து எனக்கு வேலை இருக்கு. வெளியூர் போறேன். வெளிநாடு போறேன்னு சொன்னீங்கன்னு வச்சுக்கோங்க…”
“ம்ம்ம்ம்ம்” என்று உல்லாசமாக நீண்ட விசிலடித்தான் இளங்கோ.
“போதும், போதும்” என்று அவனை அடக்கியவள், “பதிலுக்கு அவங்களுக்கு நாம குலு மணாலி இல்லனா கோவா புக் பண்ணித் தரணுமாம்” என்று அவள் தயக்கத்துடன் சொல்ல,
“ஓ, அப்படி..” சாலையில் இருந்து பார்வையை விலக்கி, மனைவியை பார்த்து கண் சிமிட்டினான்.
“நாம புக் பண்ணி கொடுத்தா மாதவன் உடனே ஓகே சொல்லிடுவார்னு. இல்லையா?” சரியாக ஊகித்து அவன் கேட்க, “ம்ம்” என்றாள் வானதி.
“இந்த பெண்கள் மட்டும் இல்லனா பூமி சுத்துறதை நிறுத்திடும்” என்றவனை வானதி முறைக்க, “ஹேய் சிரி (Siri)” என்று தனது அலைபேசியின் வாய்ஸ் அசிஸ்டன்ட்டை அழைத்து, தேதியும், இடமும் சொல்லி பதிவு செய்து வைத்தான்.
“ரொம்பத்தான்” என்று அவள் நொடிக்க, “மறந்துடுவேன் வானதி” என்று அவன் தீவிரமாக சொல்லவும் வெடித்து சிரித்தாள் வானதி.
அவளை அலுவலகத்தில் இறக்கி விட்டு கையசைத்து விடை பெற்றுக் கொண்டான்.
அடுத்து வந்து நான்கு நாட்களும் அப்படியே தான் சென்றது. அவளுக்கு காலை வேளையில், வீட்டு வேலைகளில் பெருமளவு உதவினார் தாமரை.
“நீ முன்னாடியே வீட்டு வேலைக்கு ஆள் வச்சுருந்திருக்கணும். காலைல எத்தனை வேலையை பார்ப்ப?” என்று ஒருநாள் காலையில் அவர் கடிந்து கொள்ள, “டைமிங் தான் அத்த பிரச்சினை. காலைல ஆறு, ஏழு மணிக்கு வேலைக்கு வர்றது அவங்களுக்கும் கஷ்டம் தானே? அதான் செட் ஆகல. மூனு, நாலு மாசம் வந்துட்டு நின்னுடுறாங்க. நானும் எத்தனை பேரை மாத்துறதுன்னு அப்படியே விட்டுட்டேன்” என்றாள் வானதி.
“ம்ம். கஷ்டம் தான். புரியுது” என்றவரை புதிராக பார்த்தாள் வானதி. அத்தையின் மாற்றத்துக்கு காரணம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர் மாறியதில் அவளுக்கு நிம்மதி தான்.
அந்த வார விடுமுறை வர, பழக்கத்தின் காரணமாக ஐந்தரை மணிக்கு எழுந்து விட்டாள் வானதி. அவர்களின் படுக்கையில் பிள்ளைகளோடு கணவனும் உறங்கிக் கொண்டிருக்க, “சார், உங்களுக்கு ஆபீஸ் இல்ல இன்னைக்கு” என்று இளங்கோவை அவள் உலுக்க, “ஆஃபீஸ் போகல. உன் கூட ஹாஸ்பிட்டல் வர்றேன்” என்ற கணவனை விழி விரித்து பார்த்தவள், அவனை கிள்ளி வைத்தாள். அவன் பல்லைக் கடித்துக்கொண்டு கையை தேய்த்து விட, “கனவில்லை, நிஜம் தான்” என்று நக்கலாக சொல்லி குளிக்கச் சென்றாள் அவள்.
பெரியவர்களுக்கு சில பரிசோதனைகள் வெறும் வயிற்றில் எடுக்க வேண்டியிருந்ததால் காலை ஆறரை மணி போல வீட்டில் இருந்து கிளம்பி விட்டார்கள் அவர்கள்.
மாதவன் அம்மா மற்றும் மனைவியுடன் நேராக மருத்துவமனை வந்து விட்டான்.
முதலில் பெரியவர்களும், அடுத்து இளையவர்களும் சென்று ரத்த, சிறுநீரக மாதிரிகள் பரிசோதனைகளுக்காக கொடுத்து விட்டு வந்தார்கள்.
அதன் பிறகு மருத்துவமனை வளாகத்தில் இருந்த உணவகத்தில் காலை உணவருந்த சென்றார்கள்.
கணவனுடன் சேர்ந்து அத்தை, மாமாக்கு உணவு வாங்கி கொடுத்து விட்டு அம்மா, அண்ணன் பக்கத்தில் வந்து அமர்ந்தாள் வானதி.
பெற்றோருடன் அமர்ந்திருந்தாலும் இளங்கோவின் பார்வை மனைவி, பிள்ளைகள் மீதே நிலைத்திருந்தது.
“ஆள் முழுங்கி” கணவனைப் பார்த்து உதடசைத்தாள் வானதி.
“ம்க்கும், போதும். போதும். நாங்களும் இங்க இருக்கோம்” என்று அர்ச்சனா சொல்ல, வானதி அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல், மகளுக்கு ஊட்டியபடியே தானும் உண்ண ஆரம்பித்தாள்.
“இப்போ என்ன சொல்றாங்க உங்கத்தை?” என்று அர்ச்சனா கேட்க, “எதுக்கு? என்ன சொல்லுவாங்க? ஒன்னும் சொல்லலையே” என்றாள் வானதி.
“நீ வேலையை விட்டதுக்கு தான், என்ன சொன்னாங்கன்னு கேட்கறேன். வீட்ல இருந்து அவங்களை பார்த்துக்கப் போறியே, அதுக்கு” என்று அர்ச்சனா அவள் புறமாக சாய்ந்து கேட்க, வானதி பதில் சொல்லும் முன் அவளின் மடியில் இருந்து நழுவி இறங்கி அப்பாவிடம் ஓடினாள் நட்சத்திரா.
“என்ன அண்ணி கேட்டீங்க?”
“ஒன்னுமில்ல. மாமியாருக்கு செய்யவும் பெரிய மனசு வேணும்னு சொன்னேன்” என்றாள் அர்ச்சனா.
“என்ன பெரிய மனசு? ஏன் நீங்க செய்யலையா?” என்று வானதி கேட்க, முழித்தாள் அர்ச்சனா.
“எங்க அப்பா இறந்தப்போ எல்லாத்தையும் மாப்ள தான் கவனிச்சார். அன்னைக்கு நான் இருந்த ஷாக்ல எதையுமே கவனிக்கல. இன்னைக்கு அவங்க அப்பாக்கு உடம்பு முடியலனா நாம பார்க்கறது கடமை. அது அடிப்படை மனிதாபிமானம்.” என்று மாதவன் சொல்லவும், கண்ணை உருட்டினாள் அர்ச்சனா.
உணவு முடித்து மீண்டும் பரிசோதனைகளுக்கு சென்றனர். வானதி, அர்ச்சனா இருவரும் மகப்பேறு மருத்துவரை சந்திக்க காத்திருந்தனர்.
“நான் என்னன்னா அமெரிக்கா போகணும். இல்லனா, இங்கேயே புரோமோஷன் வாங்கணும்னு அல்லாடிட்டு இருக்கேன். நீ என்னடான்னா டக்குனு குடும்பத்துக்காக வேலையை விட்டுட்டு வந்துட்ட வானதி. எனக்கு இன்னமும் ஷாக்கிங்கா தான் இருக்கு” என்று அர்ச்சனா சொல்லவும் புன்னகைத்தாள் வானதி.
பத்து வருடங்களுக்கு முன், “அக்கவுண்ட்ஸ் எக்ஸிகியூட்டிவ்” ஆக தான் பணியில் சேர்ந்தாள். அதற்கேற்ற ஊதியமும் கிடைத்தது. இன்றைக்கு, “சீனியர் அக்கவுண்ட்ஸ் மேனேஜர்” அவள். லட்சங்களில் சம்பளம்.
அவள் வேலையை விடப் போகிறேன் என்றதும் ஆண்டு வருமானத்தில் கூடுதலாக சில லட்சங்களை சேர்த்து தருவதாக வாக்குறுதி மட்டுமல்ல, உடனடியாக கடிதமும் அடித்து தந்தார்கள் அவள் பணிபுரியும் நிறுவனத்தினர். ஆனால், அவள் மனம் லட்சங்களில் இல்லையே. அது தன் லட்சியத்தை நோக்கி நகர்ந்திருந்ததே.
படிப்பு, குடும்பம், பிள்ளைகள் என பல காரணங்கள். ஆனால், அது அவளின் முடிவு. என்றைக்கும் அதற்காக அவள் வருந்தப் போவது கிடையாது.
“இதுல ஷாக்காக என்ன அண்ணி இருக்கு?” என்று கேட்டாள் வானதி.
“லைஃப் இஸ் ஃபுல் ஆப் சாய்ஸஸ் தானே? சில நேரம் வாழ்க்கை கொடுக்கிறதை தேர்ந்தெடுக்கிறோம். சில நேரம் நமக்கு கிடைக்கறதையும், பல நேரம் நமக்கு பிடிக்கிறதையும், எப்போவாவது வேற வழியில்லாம நம்ம கண்ணு முன்னாடி இருக்கிறதையும் தேர்ந்தெடுக்கிறோம். இல்லையா? ஆனா, முடிவு நம்மளோடது. அந்த தேர்வு நம்மளோடது. அந்த ஒரு திருப்தி நமக்கு போதும் தானே? நமக்கு தேவையான நிறைவை அது தரும் தானே? இல்ல, மோசமான பின் விளைவுகள் வந்தா கூட, ஐ மேட் திஸ் சாய்ஸ் அப்படினு நிம்மதியா, யாரையும் குறை சொல்லாம இருப்போம், இல்லையா?”
“ம்ம். உன்னை மாதிரி என்னால யோசிக்க முடியல வானதி. அவ்வளவு ஈசியா என்னால வீட்ல உட்கார முடியாது.”
“அது உங்க சாய்ஸ் அண்ணி. எனக்கும் இந்த முடிவை எடுக்க பத்து வருஷத்துக்கு மேலாகி இருக்கு” என்று பெருமூச்சுடன் சொன்னாள் அவள்.
“நான் குடும்பத்துக்காக மட்டும் வேலையை விடல அண்ணி. ஆனா, அதுக்கு அவசியம் வந்தா கண்டிப்பா அந்த முடிவெடுக்க ஒரு செகண்ட் கூட யோசிக்க மாட்டேன். எனக்கு குடும்பம் தான் முதல் ப்ரையாரிட்டி. மத்த எல்லாம் அடுத்து தான். நான் வேலையில் என்ன சாதிச்சாலும், எவ்வளவு பெரிய பதவிக்கு போனாலும், எனக்கு அதை
கொண்டாட என் குடும்பம் வேணும் அண்ணி. எவ்வளவு சின்ன விஷயமா இருந்தாலும், எனக்கு இளங்கோகிட்ட உடனே சொல்லியாகணும். அம்மாகிட்ட சொல்லி அவங்க சந்தோஷத்தை பார்க்கணும். என் பசங்க குஷியாகி எனக்கு கிஸ் கொடுக்கணும். இதெல்லாம் இல்லாம, நான் எந்த உயரத்துக்கு போய், சாதிச்சு, சம்பாதிச்சு என்ன செய்ய போறேன்? அதை யாருக்கு கொடுக்கப் போறேன்?” என்று தீர்க்கமாக கேட்டாள் வானதி.
“ம்ம். சரிதான். உங்கண்ணா இல்லாம அமெரிக்காவான்னு யோசிக்கும் போதே அந்த முடிவை தள்ளி வச்சுட்டேன் நான். அவரில்லாம, என்னால.. ம்ஹும், யோசிக்கவே முடியல” ஆழ்ந்த மூச்செடுத்து சொன்னாள் அர்ச்சனா.
“ம்ம். அதான்” என்று ஆமோதித்து புன்னகைத்தாள் வானதி.
வேலையில் படிப்படியாக பல உயரங்களை எட்ட வேண்டும் என்று லட்சியம் அவளுக்கும் உண்டு. ஆனால், அதற்கும் ஒரு எல்லையுண்டு.
உயர பறத்தல் அழகானது. பரவசம் தரக் கூடியது. ஆனால், ஒரு பறவை எத்தனை உயரப் பறந்தாலும் முடிவில் கூடடையும்.
வானதிக்கும் குடும்பம் எனும் அந்த கூடு வேண்டும். பறந்து கொண்டே இருந்தால் எங்கனம் இளைப்பாறுவாள் அவள்?
எப்போது, எப்படி, எவ்வளவு தூரம் பறக்க வேண்டும் என்பதை பறவைகள் தான் முடிவு செய்ய வேண்டும். சிறகுகள் இருப்பதற்காக பறவைகள் அதன் இயல்பை மீறி பறப்பதில்லை.
இயல்புக்கு உட்பட்டு இளைப்பாற கூடிய பறவையே உயர பறக்கும் போது கூட உற்சாகமாக உத்வேகத்துடன் பறக்கும். வானதி அப்படித்தான். அவள் ஆசை, கனவுகள், காதல், லட்சியங்கள் உள்ள சாதாரண பெண்.
அவள் இளைப்பாறும் கூடு, அவள் குடும்பம். அவளின் காதல் கணவன் இளங்கோ. அவர்களுக்குள் எத்தனை கோப தாபங்கள் இருந்தாலும், அவள் இளைப்பாற அவன் வேண்டும்.
அவளின் சிறகை எந்த சூழலும், நெருக்கடியும் வெட்டாது. இதுவரை வெட்டியதுமில்லை. குடும்பம் அவளைத் தங்க கூண்டில் ஒருநாளும் அடைத்துமில்லை. இனியும் செய்யாது. ஏனென்றால், அவளுக்கு பறக்கத் தெரியும்.