அர்ச்சனா அமைதியாய் அமர்ந்து வானதியின் வார்த்தைகளை அசைப் போட்டுக் கொண்டிருந்தாள்.
தன் மனதில் இருக்கும் குழப்பங்களுக்கு காரணம் தன் வயதா? வாழ்க்கைச் சூழலா? இல்லை, அதிகம் யோசிக்கும் தன் இயல்பு தானா?” என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள் அவள்.
“அம்மா, அத்தையை டையபட்டாலஜிஸ்ட் பார்த்திட்டு இங்க வரச் சொன்னேன். அவங்களே வந்துடுவாங்க தானே அண்ணி? இல்ல, நான் போய் கூட்டிட்டுட்டு வரவா?” என்று வானதி கேட்க, பதிலுக்கு வேறொரு கேள்வியை கேட்டாள் அர்ச்சனா.
“உனக்கு தெரியுமா வானதி? நான் உங்கண்ணாகிட்ட டைவோர்ஸ் கேட்டு மிரட்டினேன்”
இந்த விஷயம் அம்மா சொல்லி வானதிக்கு தெரியும் என்றாலும் கூட, அதை நேரடியாக அர்ச்சனா சொல்லக் கேட்கையில் அவளுக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது.
“என்ன சொன்னீங்க அண்ணி?”
“ம்ம், இந்த மிடில் ஏஜ் வந்ததும் தானாவே மனசுக்குள்ள ஒரு பயம் வந்துடுது இல்ல? நாம இன்னும் லைஃப்ல செட்டில் ஆகலையேன்னு பதற வைக்குது. சரி, வேற வேலைக்கு மாறினா சேலரி அதிகமாகும்னு பிளான் பண்ணா, நம்ம வயசுக்கு இனி வேலை கிடைக்குமான்னு பயமாகுது. புதுசா போற கம்பெனி எப்படி இருக்கும்? அந்த ஜாப் நமக்கு செட்டாகுமா? அப்படி புரோமோஷன் கிடைச்சா குடும்பத்தை பார்க்க முடியுமான்னு யோசிக்கிற நேரம், இதோ இந்த உடம்பு வச்சு செய்யுது. ஹெல்த் ஒரு பக்கம், “டேக் ரெஸ்ட்” அப்படினு நமக்கு இண்டிகேஷன் கொடுக்கும் போது தான் மைண்ட் ஓவர் டைம் வேலை பார்த்து, போச்சு அவ்வளவு தான் உனக்கு வயசாச்சு. இனி என்ன சாதிச்சு கிழிக்கப் போறன்னு டவுனா ஃபீல் பண்ண வைக்குது” அர்ச்சனா படபடத்து பேசிக் கொண்டே போனாள்.
“ரிலாக்ஸ் அண்ணி” என்று சொல்லி புன்னகைத்தாள் வானதி.
“இது உங்களுக்கு மட்டுமில்ல. இந்த வயசுல எல்லோருக்கும் வர்றது தான்.”
“ம்ம். எனக்கு தெரியுது. ஆனாலும், டென்ஷனாகாம இருக்க முடியல. அந்த நேரம் நான் பேசுறதுக்கு எல்லாம் உங்கண்ணா கூட கூட ஏதாவது பேசி என்னை இன்னும் கடுப்பாக்கி விட்டுடுறார். இல்ல அர்ச்சனா, நீ எதுக்கு தேவையில்லாம பயப்படுற, நாம பார்த்துக்கலாம்னு எனக்கு தைரியம் சொல்றதை விட்டுட்டு, எப்போ பாரு, பணம் பணம்னு மனுஷனை பிடுங்காதன்னு கத்துறார். வீட்டுக்கு வந்தாலே மனுஷன் நிம்மதியே போச்சுன்னு சொல்றார். அப்போ எனக்கு வருது பாரு ஒரு ஆத்திரம்.. அவ்ளோதான். நானும் பதிலுக்கு அவரை கத்தி தீர்த்துடுறேன். ஒரு வாரம் கழிச்சு பொறுமையா பேசி சரி பண்ணலாம்னா, அதுக்குள்ள அடுத்த பிரச்சினை வந்துடுது. இப்படி நிறுத்தாம அடிக்கிறியே, உனக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதான்னு என்னை கேட்கறார் உங்கண்ணா. நான் என்ன பண்ண? நீயே சொல்லு” அர்ச்சனா பாவம் போல முகம் வைத்து கேட்க, சிரிப்பை அடக்கினாள் வானதி.
“வீட்டுக்கு வீடு வாசப்படி தான் போல” என்று தனக்குள் முணுமுணுத்தவள், “நமக்கு இருக்குற மாதிரி அவங்களுக்கும் ஆயிரம் பிரச்சினைகள், தயக்கங்கள், வேலை, வீட்டு டென்ஷன், கமிட்மென்ட்ஸ் எல்லாம் இருக்கும். இல்லண்ணி? அவங்க நம்மளை மாதிரி கத்தி, புலம்பி அதை வெளிக்காட்டிக்க மாட்டேங்கறாங்கன்னு தோனுது” என்றாள்.
“ம்ம். முன்ன சின்ன சின்ன பிரச்சினையை கூட என்கிட்ட வந்து சொல்லுவார். இப்ப எதையும் சொல்றது கிடையாது. நான் புரிஞ்சுக்க மாட்டேன்னு அவரே முடிவு பண்ணிட்டார் போல. நான் அவர்கிட்ட நான் மாறலன்னு சொல்லணும்” அர்ச்சனா அதைச் சொல்லவும் மலர்ந்தது வானதியின் முகம்.
“நீங்க பேசாம எனக்கு டிவோர்ஸ் கொடுத்து தொலைங்க. இனிமே நான் உங்க உயிரை எடுக்க மாட்டேன். நாம ரெண்டு பேரும் நிம்மதியா இருப்போம்னு நான் சொன்னப்போ உங்கண்ணா ஷாக்ல ஒன்னுமே பேசல. நாலைஞ்சு நாள் கழிச்சு தான் என்னை சமாதானம் பண்ணார். அப்புறமும் நாங்க திருந்தாம சண்டை தான் போட்டோம். இப்போ கூட ஒழுங்கா முகம் கொடுத்து பேசாம இருக்கோம். இந்த நிமிஷம் யோசிச்சு பார்த்தா, எல்லாமே அபத்தமா இருக்கு. அவர் இல்லாம அமெரிக்கா என்ன அமைந்தக்கரையில் இருக்கற என் அம்மா வீட்டுக்கு கூட என்னால தனியா போக முடியாது.”
“ம்ம், இதைக் கேட்க என் அண்ணா இங்க இல்லாம போய்ட்டானே. நானாவது நீங்க பேசினதை ரெக்கார்ட் பண்ணி அவனுக்கு அனுப்பி இருக்கலாம்.” வானதி சிரிப்புடன் கிண்டலாக சொல்ல, “அதுக்கெல்லாம் ஒன்னும் அவசியமில்ல.” என்று கடுமையாக சொன்ன அர்ச்சனாவின் குரலில் சிரிப்பும், வெட்கமும் கலந்திருந்தது.
“ம்ம், நாங்க சரி பண்ணிடுவோம்” என்று அர்ச்சனா தீர்க்கமாக சொல்ல, “ஆல் த பெஸ்ட்” என்றாள் வானதி.
“எவ்வளவு நேரம் இந்த டாக்டருக்கு வெயிட் பண்றது வானதி? இன்னும் நம்மள கூப்பிடாம இருக்காங்க.”
“ஒன் ஹவர் ஆகும்னு அப்போவே சொன்னாங்க தானே அண்ணி. பொறுமை, பொறுமை”
“பொறுமை தீர்ந்து போய் நாலைஞ்சு வருஷம் ஆச்சு. இனிமே தான் ரீஃபில் பண்ணணும்.” அர்ச்சனா அலுத்துக் கொள்ள, சத்தமாக சிரித்து விட்டாள் வானதி.
அப்போது, “ஆன்டி, டாக்டர் உஷா, கைனகாலஜிஸ்ட் பார்க்க இங்க தானே வெயிட் பண்ணணும்?” என்று ஒரு இளம்பெண் வந்து அர்ச்சனாவிடம் கேட்க, “ஆமா. இங்க தான்” என்ற அர்ச்சனா அதிர்ச்சியுடன் திரும்பி வானதியை பார்த்தாள்.
“இந்த பொண்ணு என்னை ஆன்டின்னு சொல்லி கூப்பிட்டுட்டா வானதி. ஆளைப் பாரு, என்னைப் பார்த்தா ஆன்டி போலவா தெரியுது?”
பல்லைக் கடித்துக் கொண்டு அர்ச்சனா கேட்க, “ம்ம், அப்போ நாம ஆன்டி இல்லையா?” என்று நமுட்டு சிரிப்புடன் கேட்டாள் வானதி.
“ப்ச், ஆன்டின்னு சின்ன பிள்ளைங்க கூப்பிட்டா ஓகே. இந்த பொண்ணுக்கு எப்படியும் 25 வயதுக்கு மேல இருக்கும். கழுத்தை பாரு, தாலி இருக்கு. நம்மளை விட பத்து வயசு சின்னப் பொண்ணுலாம் ஆன்டி சொன்னா, மனசு வலிக்குது” கோபமும், எரிச்சலுமாக அர்ச்சனா சொல்ல, தனக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணை ஓரக் கண்ணால் பார்த்து அளவிட்டாள் வானதி.
“பத்து வயசு வித்தியாசம்னா சொல்றீங்க அண்ணி?” நக்கலாக அவள் கேட்க, “அப்படியே சரியான வயசை சொல்லியே ஆகணுமா உனக்கு?” என்று அதற்கும் கோபித்தாள் அர்ச்சனா.
“ட்ரெஸ், டாட்டூ எல்லாம் பாரு, மாடர்னா இருக்கு. ஆனா, ஆன்டி சொல்லுறா” என்று அர்ச்சனா கடுப்புடன் சொல்ல,
“ட்ரெஸ் பத்தி பேசாதீங்க அண்ணி. அப்புறம் பூமர் ஆன்டின்னு சொல்ல போறாங்க” என்று கேலி செய்தாள் வானதி.
“நீயே எடுத்து கொடுப்ப போல”
“என்னமோ முதல் தடவை ஆன்டி சொல்ற மாதிரி ஃபீல் பண்றீங்க அண்ணி. கூல் டவுன்” என்று வானதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “அக்கா” என்று அவளை அழைத்தாள் அந்தப் பெண்.
அர்ச்சனாவின் முகம் அஷ்டகோணலாகியதை பார்த்து சிரிப்புடன் திரும்பி, “சொல்லுங்க” என்றாள் வானதி.
“என் போன்ல டேட்டா முடிஞ்சுடுச்சு. ஒரு அஞ்சு நிமிஷம் ஹாட்ஸ்ஸ்பாட் போட முடியுமா கா? என் மெயில்ல இருந்து பிளட் டெஸ்ட் ரிப்போர்ட் எடுக்கணும் டாக்டர்கிட்ட காமிக்க, அதுக்குத்தான்” என்று அந்தப் பெண் கேட்க, அவளுக்கு உதவினாள் வானதி.
“உன்ன மட்டும் அழகா அக்கா சொல்றா. என்னை மட்டும் ஆன்டின்னு சொன்னா. நான் என்ன அவ்வளோ வயசானவளாவா தெரியறேன்?” என்று அர்ச்சனா அடிக் குரலில் புலம்பிக் கொண்டேயிருக்க, “அண்ணி..” என்று அவளைத் திரும்பி முறைத்தாள் வானதி.
“நான் உன்னை விட ரெண்டு வயசு தான் பெரியவ. என்னைப் போய்..” இனி இரண்டு நாட்களுக்கு இந்தப் புலம்பல் தொடரும் என்று தெரிந்த காரணத்தினால் அண்ணிக்கு பதில் எதுவும் சொல்லாமல் அமைதியானாள் வானதி. அர்ச்சனா இடத்தில் அவள் இருந்திருந்தால் அவளுமே இப்படித்தான் எதிர்வினையாற்றி இருப்பாள் என்பது அவளுக்கும் நன்றாக தெரியும்.
ஒரு குறிப்பிட்ட வயது வரை சிறியவர்களாக இருப்பதையே நாம் வெறுக்கிறோம். இளமையில் வேகமாக வளர்ந்து பெரியவர்களாகிட வேண்டும் என்று விரும்புகிறோம்.
அதே நாம் தான் பெரியவர்களாகி நம் பொறுப்புகள் கூடியதும், மீண்டும் சிறுவர்களாக ஆவல் கொள்கிறோம். சிறு வயதில் ரசித்ததை எல்லாம் மீண்டும் மீண்டும் அசைப் போட்டு புளகாங்கிதம் அடைகிறோம். மனித மனம் தான் எத்தனை விசித்திரமானது.
அர்ச்சனாவின் கவலை வாழ்க்கையின் மீதிருந்து இப்போது வயதிற்கு மாறிட, அவளின் புலம்பல்களை கேட்டபடி தளர்ந்து அமர்ந்தாள் வானதி.
“தேங்க்ஸ் க்கா” என்று அந்த பெண் அங்கிருந்து எழுந்துப் போக, அவள் கதவை திறந்து வெளியேறும் வரை அவளை எரித்து விடுவதைப் போல் முறைத்தாள் அர்ச்சனா.
அவள் வெளியேற, உள்ளே வந்தார்கள் ஹரிணியும், நேத்ரனும்.
“ஹாய் அத்த” என்று வானதியை இடித்துக் கொண்டு அவள் பக்கத்தில் அமர்ந்தாள் ஹரிணி.
“என்ன நீங்க ரெண்டு பேரும் இங்க வந்திருக்கீங்க?” அர்ச்சனா கேட்க, “மாமா அனுப்பினாங்க” இருவரின் பதிலும் ஒன்றாக இருந்தது.
அர்ச்சனா மகளைப் பார்த்து, “ஓ, அத்தையை பார்த்திட்டு வரச் சொல்லி உங்க மாமா சொன்னாங்களா?” என்று அவள் கேட்க, “எஸ் மா” என்றாள் ஹரிணி.
“அதானே பார்த்தேன். என் புருஷனுக்கு என்னைக்கு என் மேல அக்கறை வந்திருக்கு? இன்னைக்கு புதுசா வர?” என்று அவள் புலம்ப, “அண்ணி, நேத்ரன் என்ன சொன்னான்னு கவனிச்சீங்களா?” குரலை தழைத்து அர்ச்சனாவிற்கு மட்டும் கேட்கும் விதமாக கேட்டாள் வானதி.
“அது..” என்று அவள் யோசிக்க, “இந்தாங்க அத்தை. மாமா உங்ககிட்ட கொடுக்கச் சொன்னாங்க” என்று தன் கையில் இருந்த பையை அர்ச்சனாவிடம் நீட்டினான் நேத்ரன். அதனுள்ளே மாதவன் அவளுக்காக பழச்சாறும், தண்ணீரும் வாங்கி கொடுத்து விட்டிருக்க, வானதியை சங்கடமாக பார்த்து சிரித்து வைத்தாள் அர்ச்சனா.
“எஸ், எஸ். இதுக்குத்தான் உங்களை தேடி வந்தேன் அத்த. இந்தா இருக்கு பிரவ்னி. தேங்க்ஸ் அத்த” என்று வானதியின் கைப் பையை துழாவி அதிலிருந்த சாக்லேட் பிரவுனியை எடுத்து உண்ணத் தொடங்கினாள் ஹரிணி.
“ஹரிணி..” என்று அர்ச்சனா மகளை கண்டிப்புடன் அழைக்க, “ம்மா பிளீஸ். திட்டாதீங்க. இது உடம்புக்கு நல்லது கிடையாது. நிறைய சாப்பிடக் கூடாது. பல்லு சொத்தையா போகும். நீங்க நிறைய தரம் இதை சொல்லிட்டீங்க. சோ, பிளீஸ்” என்று அவள் அலுப்பும், சலிப்புமாக சொல்ல, மகளை கடுமையாக முறைத்தாள் அர்ச்சனா.
ஹரிணி அம்மாவின் முறைப்பை பொருட்படுத்தாமல் நேத்ரனுக்கும் பகிர்ந்து கொடுத்து உண்டு கொண்டிருந்தாள்.
“பாரு. நீ சொன்னா மட்டும் எப்படி அமைதியா கேட்டுக்கறா. சாரி வேற சொல்றாங்க பெரிய மனுஷி. ஆனா, என் பேச்சை இவ கேட்கிறதே இல்ல. இவ இப்பவே இப்படி இருக்கா, இன்னும் வளர்ந்தா அவ்ளோதான். எல்லாம் எனக்குத் தெரியும், நீ வேலையை பாரும்மான்னு சொல்லிடுவாளோனு பயமா இருக்கு வானதி”
மகளையே பார்த்தபடி சிறு குரலில் அர்ச்சனா சொல்ல,
“ஹரிணி சின்ன பொண்ணு தானே அண்ணி. ரொம்ப கன்ட்ரோல் பண்ண வேணாமே. நம்மளை மாதிரி உலகம் தெரியாம அவங்க வளரல, அவங்களுக்கு எல்லாமே தெரியுது..”
“அதான் பிரச்சினை வானதி. எல்லாத்துக்கும் ஐ நோ ம்மான்னு ஹரிணி ஒவ்வொரு முறை சொல்லும் போதும், என் பொண்ணு, என்னை விட்டு தூரமா போற ஃபீல் எனக்கு. அவ வளர்ந்துட்டா, விலகி போறான்னு இருக்கு. அதுக்கேத்த மாதிரி தான் உன் அண்ணாவும் பேசுறார். இன்னும் ரெண்டே வருஷத்துல அவ டீன் ஏஜ் பொண்ணாகிடுவா, அப்போ இருக்கு நமக்குன்னு பயமுறுத்துறார்.”
“என்ன அண்ணி நீங்க, எனக்கு மேல யோசிக்கறீங்க?”
“வேற என்ன பண்ண? ஒரு பெண் குழந்தையோட அம்மாவா இந்த உலகத்தை பார்க்கும் போது, மகளை தூக்கி திரும்பவும் வயத்துல கட்டிக்கணும் போல இருக்கு. அம்மா சொல்றது, நம்ம நல்லதுக்குத் தான்னு புரிஞ்சிக்கிற வயசுக்கு ஹரிணி சீக்கிரம் வளர்ந்துட்டா நல்லாருக்கும்னு இருக்கு”
“அச்சோ, அண்ணி. கூல் டவுன். எத்தனை வயசானாலும் அம்மாகிட்ட அடிச்சுகிட்டு தான் அன்பு காட்டுவோம். நம்ம டிசைன் அப்படி. நீங்க ரொம்ப யோசிச்சு மண்டையை உடைக்காம ஃப்ரீயா விடுங்க. நம்ம பிள்ளைங்க நம்மளை போல தான் வருவாங்க” என்று வானதி, அர்ச்சனாவை அமைதியாக்கும் பொருட்டு சொல்ல,
“என் பொண்ணு என்னை போலவா? ஆத்தி, சமாளிக்கவே முடியாதே. இந்த உலகம் தாங்காதே” என்று நெஞ்சில் அதிர்ச்சியுடன் கை வைத்தாள் அர்ச்சனா.
வானதி சத்தமாக சிரிக்க, அதுவரை சுவரில் சாய்ந்து நின்று கதை பேசிக் கொண்டிருந்த குழந்தைகள் இருவரும் நகர்ந்து அவர்களிடம் வந்தார்கள்.
வானதியின் பக்கத்து இருக்கையில் அமர்ந்தான் நேத்ரன். மறுநொடியே மெல்ல பின்னே சாய்ந்து, கால்கள் இரண்டையும் முழுதாக முன்னே நீட்டி, இடதுக் காலை தூக்கி வலது காலின் மேல் போட்டு தோரணையாக அமர்ந்தான் அவன். அதில் இளங்கோவின் அப்பட்டமான சாயல் இருக்க, ரசித்து சிரித்தாள் வானதி.
“அப்படியே அவங்கப்பா போல உட்காருறான் பாரு..” என்று அர்ச்சனாவும் முணுமுணுக்க சிரித்துக் கொண்டார்கள்.
“ம்ம்” என்று பெருமூச்சு விட்டுக் கொண்டாள் அர்ச்சனா.
அவளுக்கு கணவன், மகள் என இருவரும் அவளை விட்டு விலகி போவது போன்ற பிரம்மையை முதலில் தான் விட்டொழிக்க வேண்டும் என மனதில் உறுதி எடுத்தாள்.
அர்ச்சனாவின் மனநிலையை அப்போது தான் கடந்து வந்திருந்த வானதி, அவளுக்கு பெரிதாக அறிவுரை ஏதும் சொல்லவில்லை.
நம் மனம் பலவீனமாக உணரும் போதெல்லாம் பிரியமானவர்களின் நெருக்கத்தை நாடுகிறது.
நேசத்தை வேண்டி அவர்களை நெருக்குகிறோம். நம் அதீத எதிர்ப்பார்ப்பை அவர்கள் பூர்த்தி செய்யாத போது, நம்மை விட்டு விலகிச் செல்கிறார்கள் என பதறுகிறோம். உண்மையில் நம் அவசர எதிர்ப்பார்ப்பிற்கு எத்தனை அன்பைக் கொட்டிக் கொடுத்தாலும் போதாது. அதை உணர்வதற்குள் பிரியமானவர்களை சமயங்களில் காயப்படுத்தி விடுவது மட்டுமல்லாது மனதால் பிரிந்தும் விடுகிறோம்.
மனம் விட்டு பேசினால் புரியாமல் போவதற்கு வாய்ப்பில்லை. ஆனால், மனம் விட்டு பேசவும், பகிரவும் ஒரு மனம் வேண்டும் அல்லவா?
“வானதி..” மருத்துவர் அறையில் இருந்து அழைப்பு வர, “நீ அப்பாகிட்ட போ நேத்ரா. அப்பா போன்ல இருந்து அம்மாவுக்கு போன் பண்ணு. ஓகே? ஹரிணி நீயும் போ குட்டி. எங்களுக்கு செக்அப் முடிய நேரமாகும்” என்று பிள்ளைகள் இருவரையும் அனுப்பி வைத்து விட்டு மருத்துவரை சந்திக்கச் சென்றார்கள்.
சமீபமாக மாதவிடாய் நாள்களில் அதீத இரத்தப் போக்கில் அவதிப்படுவதை பற்றிச் சொன்னாள் வானதி. அர்ச்சனாவிற்கும் அதே தொந்திரவு தான் இருந்தது. அவளுக்கு கூடுதலாக நாள்கள் தள்ளிப் போய் ஒழுங்கற்ற முறையில் மாதவிடாய் வருவதை குறிப்பிட்டு, “ஏன் டாக்டர் எனக்கு சீக்கிரமே மெனோபாஸ் வரப் போகுதா?” என்று கவலையுடன் அவள் கேட்க, மென்மையாய் புன்னகைத்தார் மருத்துவர்.
இருவருக்கும் இரத்த பரிசோதனைகள், தைராய்டு, ஸ்கேன் என்று நீண்ட பட்டியலை எழுதி நீட்டினார் அவர். அவர்கள் ஸ்கேன் எடுத்து அதன் நகலையும், அறிக்கையையும் பெற்றுக் கொண்டு மீண்டும் மருத்துவரை சந்திக்க வந்தனர்.
அப்போது இளங்கோ வானதியை அலைபேசியில் அழைத்து விட்டு, அவளைச் சந்திக்க அங்கு வந்தான்.
அவனுடன் பாக்கியம், தாமரை இருவரும் இருந்தனர்.
“நான் கூட என்னை பார்க்க தான் வந்தீங்களோன்னு நினைச்சேன்” வானதி கணவனை பார்த்து உதடு சுளித்து சொல்ல, “அம்மா உன்னைப் பார்க்கணும்னு சொன்னாங்க. அதான் கூட்டிட்டு வந்தேன்” என்றவன், மனைவியின் புகாரை கேட்டு புன்னகைத்தான்.
“உன்னை பார்க்க வரலைன்னா வேற யாரை பார்க்க வந்தேனாம்?”
“யாருக்குத் தெரியும். இங்க யாரையாவது சைட்டடிக்க கூட வந்திருப்பீங்க” என்று வானதி சொல்ல, இளங்கோ இரண்டு கைகளையும் காற்சட்டை பையில் திணித்து நிதானமாக கண்களை சுழற்றினான்.
“கண்ணை நோண்டிடுவேன்” என்று வானதி மிரட்ட, சிரித்தான் அவன்.
“அப்புறம் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்”
“ம்ம், சொல்லு” என்றான் அசட்டையாக.
“எனக்கு பீபி செக் பண்ணும் போது நர்ஸ் ப்ரெக்னன்ட்டா இருக்கீங்களான்னு கேட்டாங்க. என்ன சொல்லட்டும்?” என்று அவள் கிசுகிசுக்க, “என்னது?” என்று உடலில் இருந்த அசட்டையை உதறி, அதிர்ந்தபடி கேட்டான் இளங்கோ.
“எப்படி? அதெப்படி அப்படி கேட்பாங்க? ஏன் கேட்டாங்க?” அவன் படப்படக்க, “டென்ஷன் ஆகாதீங்க சார்.” என்று சிரித்தாள் வானதி.
“சிரிக்காத. ஃபேமிலி பிளானிங் பண்ணதுக்கு அப்புறம் எப்படி ப்ரெக்னன்ட்டாவ நீ?”
“சரியான கேள்வி சார். ஆனா, லட்சத்தில் ஒருத்தருக்கு அதுக்கும் வாய்ப்பிருக்கு தெரியுமா?”
“என்ன சொல்ற நீ? விளையாடாத வானதி” என்று படபடத்தான் இளங்கோ. பொது இடம் என்றும் பாராமல் மனைவியின் கைப் பிடித்து, உணர்வு கலவையாக அவள் முகத்தை கேள்வியுடன் கூர்ந்தான்.