“அது வந்து எனக்கு பீபி லோவா இருந்தது. காலையில என்ன சாப்பிட்டீங்கன்னு கேட்டாங்க. ரெண்டு இட்லினு சொல்லவும்.. அவங்களே ப்ரெக்னன்ட்டா இருக்கீங்களா, அதான் சாப்பிட முடியலையான்னு…” கணவனின் முறைப்பில் சொல்லி முடிக்காமல் சிரித்தாள் வானதி.
“கைனகாலஜிஸ்ட் பார்க்க வந்தா இந்த கேள்வி சாதாரணம்” என்றவளின் கையை மெல்ல விலக்கி, “உன்னோட..” என்று சலித்து பல்லைக் கடித்தவனின் கண்களில் கோபத்தின் வர்ணமின்றி சிரிப்பிருந்தது.
“உங்களுக்கு டாக்டர் பார்த்து முடிச்சாச்சா? என்ன சொன்னாங்க? அப்புறம் மாமா பார்த்திட்டு டாக்டர் என்ன சொன்னாங்க?”
“எனக்கும், மாதவனுக்கும் எவ்ரிதிங் இஸ் நார்மல். மாதவனுக்கு கொலஸ்ட்ரால் மட்டும் கன்ட்ரோல்ல வச்சுக்க சொல்லி இருக்காங்க. எக்சர்சைஸ், வாக்கிங், ஹெல்த்தி புட் ஸ்டைல்னு அதே அட்வைஸ் தான். அப்பாவுக்கு வயசானா வர்ற பாதி பிரச்சினை இருக்கு. கொஞ்சம் கவனமா பார்த்துக்க சொல்லியிருக்காங்க.”
“ஓகேங்க. மாமாவோட டாக்டரை நானும் ஒரு தரம் பார்த்து பேசவா?.”
“ஓகே டன்” என்றான் இளங்கோ. பாக்கியத்திடம் இருந்த நட்சத்திரா ஓடி வந்து, அப்பாவின் காலை கட்டிக் கொண்டு, “ம்மா” என்று அழைக்க, மகளை தூக்கி முத்தமிட்டு, அவளை குறுகுறுவென பார்த்த கணவனிடம் மகளைக் கொடுத்தாள் வானதி.
“அம்மா உன்கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னாங்க. அவங்களை என்னன்னு விசாரி. நான் இங்கேயே வெயிட் பண்றேன். உன் கூட டாக்டர் பார்க்க நானும் வரேன்”
“நீங்களுமா? நமக்கு இனி பாப்பா வர எல்லாம் வாய்ப்பேயில்லங்க.” என்று அவள் கண் சிமிட்ட, “வாய், வாய்” என்று மனைவியை முறைத்தான் இளங்கோ.
“உங்களுக்கு ஆசை ஆசை..” என்று அவளும் பதிலுக்கு சொல்ல, “நான் ஹார்ட் வொர்க் பண்ணினதுக்கு…” என்ற கணவனின் வயிற்றில் குத்தினாள் வானதி.
“நீ தான் ஆரம்பிச்ச..” என்று ஆரம்பித்தவன் வானதி கண்ணை உருட்டி முறைக்கவும் அமைதியானான்.
இருவரும் ஓரமாக நின்று பேசிக் கொண்டிருந்து விட்டுத் திரும்ப, தாமரையின் பார்வை அவர்கள் மேல் அழுத்தமாக பதிந்திருந்தது.
“நீங்க உட்காருங்க. நான் போய் அத்தைகிட்ட பேசுறேன்” என்று அவசரமாக அத்தையிடம் சென்றாள் வானதி.
அர்ச்சனாவிடம் இருந்து பழச்சாறு வாங்கி அம்மா, அத்தைக்கு குடிக்கக் கொடுத்தாள்.
“எனக்கு வேணாம்” என்ற தாமரை, அவளையே அசையாமல் பார்க்க, “பாத்ரூம் போகணுமா அத்த?” என்று கேட்டாள்.
“ஆ.. ஆமா” என்றவரை அழைத்துச் சென்றாள் வானதி.
“பாரேன். மாமியாரை பார்த்ததும் அம்மாவை மறந்துட்டா என் பொண்ணு” என்று அதிசயித்தார் பாக்கியம்.
ஓய்வறை சென்றதும், “சொல்லுங்க அத்த” என்று அவள் கேட்க, மிகுந்த தயக்கத்துடன் மருமகளின் முகம் பார்த்தார் தாமரை.
“என்கிட்ட சொல்ல சங்கடமா இருந்தா டாக்டர்கிட்டயே சொல்லுங்க அத்த”
“இல்ல, இல்ல. உன்கிட்டேயே சொல்றேன்” என்ற தாமரை தயக்கத்துடன் தான் படும் அவஸ்தையை சொன்னார்.
அந்த வயது பெண்களுக்கே வரும் பிரச்சினை தான். சிறுநீர் கழிக்கும் போது கர்ப்பப்பை இறங்குவது. குனிந்து நிமிரும் போது, சிரிக்கும் போது, தும்மும் போதும், அவ்வப்போது எடை அதிகமான பொருட்களை தூக்கும் போதும் தானாகவே சிறுநீர் சிறிதாக வெளியேறும் தொந்திரவு அவருக்கிருந்தது.
அதைக் கேட்டதும், “நான் டாக்டர்கிட்ட சொல்றேன் அத்த. வாங்க” என்று அவரை அழைத்துக் கொண்டு போனாள் வானதி.
“அஞ்சாறு வருஷமா இந்த பிரச்சினை இருக்கு டாக்டர்” என்று மருத்துவரிடம் அவர் சொல்ல அதிர்ச்சியுடன் அத்தையை பார்த்தாள் வானதி.
மகளிடம் கூட இத்தனை வருடங்கள் இதை இவர் சொல்லவில்லையா? என்ற கேள்வியுடன் மாமியாரை பார்த்தாள்.
“பயப்பட வேணாம் மா” என்ற மருத்துவர் மிகவும் தன்மையாக, பொறுமையாக தாமரையை பரிசோதித்து, அவருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார். தசைகளை வலுப்படுத்த சில உடல் பயிற்சிகளையும் செய்யச் சொல்லி வலியுறுத்தினார் அவர்.
மருத்துவர் அறையில் இருந்து வெளியில் வந்ததும், “இதை எப்படி டாக்டர்கிட்ட சொல்றதுன்னு கூச்சமா இருந்தது. என் பொண்ணு கிட்ட சொல்லலாம்னா அவ மருமகன் இல்லாம அவளே தனியா ஹாஸ்பிடல் போக மாட்டா. அதான்..” என்று தடுமாறியவரை பார்த்து, “நிகிதா கிட்டயாவது சொல்லி இருக்கலாம் இல்லத்த. எங்ககிட்ட சொல்ல கூச்சப்பட்டு இத்தனை வருஷம் கஷ்டப்பட்டு இருக்கீங்க?” என்று மாமியாரை கடிந்துக் கொண்டாள் வானதி.
தாமரை எதுவுமே சொல்லவில்லை. மௌனமாய் மருமகள் பேச்சை கேட்டுக் கொண்டார்.
அன்று காஞ்சிபுரம் மருத்துவமனையில் வைத்து கணவர் பேசியது தான் அவருக்கு நினைவிற்கு வந்தது.
“என்ன தான் உன் பிரச்சினை தாமர? உனக்கு மூத்த மருமகளை பிடிக்காதுன்னு எனக்குத் தெரியும். ஆனா, இப்போ நமக்காக ஓடி வந்து, ஹாஸ்பிட்டல், வீடுன்னு அலையற பொண்ணை நீ ரொம்பப்படுத்துற. உனக்கே அது நியாயமா படுதா?” என்று சந்திரசேகர் கோபமாக கேட்க,
“நான் என்னங்க பண்ணேன்? நம்ம வீட்டுக்கு போகலாம்னு தானே சொன்னேன்?” என்றார் அவர்.
“சொன்ன, சொன்ன. நல்லா சொன்னியே. ஆனா, கொஞ்சமாவது யோசிச்சு பார்த்து சொன்னியா? இல்லையே.” என்று கத்தியவர்,
“அங்க நம்ம வீட்டுக்கு போய் நீயும் முடியாம படுத்துட்டா, நம்ம ரெண்டு பேரையும் யார் பார்ப்பா? அமெரிக்கால இருந்து உன் சின்ன பையன் வர்றானா என்ன? இல்ல, உன் பொண்ணு வருவான்னு கனவு கண்டுட்டு இருக்கியா?” அதற்கு தாமரை மறுப்பாக தலையசைக்க,
“எனக்கு ஏதாவது ஆச்சுன்னா உன் பிள்ளைங்களுக்கு யார் பதில் சொல்லுவா? அப்பவும் உன்னை கேள்வி கேட்க மாட்டாங்க, இந்தா நமக்காக ஓடுற இளங்கோ பொண்டாட்டியை தான் கேட்பாங்க. ஆமாவா, இல்லையா?” என்று அழுத்தமாக கேட்டார் சந்திரசேகர்.
“அந்த பொண்ணை அப்படி பேசுற. நீ பேசுற பேச்சுக்கு வேற யாரா இருந்தாலும் போம்மான்னுட்டு அவங்க வேலையைப் பார்த்திட்டு போயிட்டே இருப்பாங்க. நம்ம மருமகளா இருக்கப் போய் இவ்வளவு பொறுமையா இருக்கு. அதுவும் கூட இளங்கோவுக்காக தான் இருக்கும். ஆனா, அவனே ஊர்ல இல்லாதப்போ, ரெண்டு பிள்ளைங்களையும் கூட்டிட்டு தனியா சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வந்து உன் கூட நின்னா.. உனக்கு இளக்காரமா இருக்கு என்ன?”
“இல்லங்க. அது..”
“பேசாத தாமர. எப்ப பாரு, அந்தப் பொண்ணை கரிச்சு கொட்டுற. நமக்கும் ஒரு பொண்ணு இருக்கு. மறந்துடாத.” என்று எச்சரித்தவர்,
“நாளைக்கே நமக்கு ஏதாவது ஆச்சுன்னா இளங்கோ பொண்டாட்டி தான் நம்மளை பார்க்கும். அதை மனசுல வச்சுக்கோ.” என்றார் தீர்க்கமாக.
“நான்..”
“உன்னை பேசாதன்னு சொன்னேன்” என்று கோபத்தில் குரல் உயர்த்தியவர் சட்டென தணிந்து,
“மருமக மதியம் சரியாவே சாப்பிடல. இப்பவும் நமக்கு டீ, டிஃபன் வாங்கிக் கொடுத்துட்டு, அது குடிக்க மறந்துடுச்சு. நீ டீ குடிக்கலையாமான்னு எனக்கும் கேட்க தோணல. நீயும் கேட்கல.” என்றார் வருத்தத்துடன்.
“நாளைக்கே நமக்கு ஏதாவது ஆச்சுன்னா, கண்டிப்பா இந்த மருமக தான் முதல் ஆளா வந்து நின்னு நம்மள பாக்கும். அதை நான் அடிச்சு சொல்லுவேன். இளங்கோ இல்லைனாலும் வானதி நமக்காக ஓடி வரும். இளங்கோ, வானதி இல்லனா, உன் மத்த ரெண்டு பசங்களும் வர்ற வரைக்கும் நம்மை தூக்கி போட கூட ஆள் இல்லாம நாம நாறிட்டு கிடக்க வேண்டியது தான்.” சந்திரசேகர் கோபமும், ஆத்திரமும், வெறுப்புமாக சொல்ல, அவரையே வெறித்து பார்த்தார் தாமரை.
கணவர் சொன்ன நிதர்சனம் அவரை பயங்கொள்ள செய்தது. அப்படியே அங்கிருந்த இருக்கையில் தொய்ந்து அமர்ந்தார் அவர். பத்து நிமிடங்களுக்கு பின் மருத்துவமனை வளாகத்தில் இருந்த உணவகம் சென்று, மருகளுக்கு காஃபி, வடை என்று வாங்கி போய் கொடுத்தார்.
“பாட்டி வாங்க, அம்மா உங்களுக்கு டீ வாங்கி கொடுக்கச் சொன்னாங்க” என்று இப்போதும் நேத்ரன் வந்து நிற்க, அவனோடு ஹரிணியும் நின்றிருந்தாள். தாமரை புன்னகையுடன் பேரன் கைப் பிடித்து நடந்தார்.
அர்ச்சனா, பாக்கியம் இருவரும் அடுத்தடுத்து மருத்துவரை சந்தித்தார்கள். அர்ச்சனாவிற்கு கருப்பையில் நீர்க் கட்டிகள் இருக்கிறது என்றார் மருத்துவர்.
மன அழுத்தம் கூடாது. உடல் எடையை குறைக்க வேண்டும். உடற் பயிற்சி செய்ய வேண்டும் என்று அவரின் அறிவுரை பட்டியல் நீண்டுக் கொண்டே போனது.
பாக்கியம், தாமரை இருவருக்கும் அவர்களின் வயதின் காரணமாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இரும்பு, கால்சியம் சத்து குறைபாடு, மூட்டு தேய்மானம் என அனைத்து குறைபாடுகளும் இருந்தது. தாமரைக்கு மட்டும் கூடுதலாக கொலஸ்ட்ராலும் அதிகமாக இருந்தது.
மருத்துவ ஆலோசனைக்கு பிறகு, மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகள் அனைத்தையும் வாங்கிக் கொண்டு, அங்கேயே மதிய உணவை முடித்துக் கொண்டார்கள்.
“அவங்களுக்கு ஸ்ட்ரெஸ் இல்லாம பார்த்துக்கோங்க சார், போதும். இந்த மறதி எல்லாம் நீங்க பயப்படுற அளவுக்கு பெரிய வியாதி இல்ல. கார் சாவி, மொபைல், என் பையன் பேரு இதெல்லாம் டெய்லி நானும் கூட தான் மறக்கறேன்” என்று மருத்துவர் சொல்லவும் பக்கென்று சிரித்து விட்டாள் வானதி.
“உங்களுக்கு ஹீமோகுளோபின், கால்சியம் ரெண்டும் ரொம்ப கம்மியா இருக்கும்மா. அயன், கால்சியம் டேப்லெட் தொடர்ந்து எடுங்க. அதைவிட அயன் ரிச் புட் நிறைய எடுத்துக்கோங்க” என்று மருத்துவர் சொல்ல, “ஓகே, டாக்டர்” என்றாள் வானதி.
அவர்கள் மருத்துவமனையை விட்டு வெளியே வரும் போது மாலையாகி இருந்தது.
“நைட்டுக்கு என்ன பண்ண போற வானு? அம்மா ஏதாவது செஞ்சு அண்ணாகிட்ட கொடுத்து விடவா?” என்று பாக்கியம் மகளை கேட்க, “ம்மா, எனக்கு சமைக்கணும்னு நினைச்சாலே டையர்டாகுது. நீ எப்படிம்மா எனக்கு இப்படி அலுக்காம செய்யற?” அயர்ச்சியுடன் வானதி கேட்க, “சோம்பேறி கழுத, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு” என்று மகளை மிரட்டினார் பாக்கியம்.
“டின்னர் தானே அத்த? வெண்பொங்கல், சாம்பார், தேங்காய் சட்னி ஓகேவா? இல்ல, சாம்பார் வேணாம்னா கொத்சு செஞ்சுடலாம். என்ன சொல்ற வானதி?” என்று அர்ச்சனா கேட்க, “ நீ செய்யப் போறன்னா எனக்கு ஓகே.” என்று மாதவன் நக்கலாக சொல்ல, “ஆஹா, அண்ணி சிக்கிட்டீங்க” என்றாள் வானதி.
“நம்ம எல்லோருக்கும் அமிர்தா பவன்ல டின்னர் ஆர்டர் பண்ணிட்டேன்” அவர்களின் வாக்குவாதத்தை ஒரு வரியில் முடித்து வைத்தான் இளங்கோ. சிரிப்புடன் வீடு திரும்பினார்கள்.
ஒரு வாரம் கழித்து இளங்கோவின் அலுவலக உடைகள் நிரம்பிய அலமாரியை சீராக அடுக்கிக் கொண்டிருந்த வானதியின் பின்னே சத்தமில்லாமல் வந்து நின்றான் இளங்கோ.
கணவனை உணர்ந்ததும், “என்னங்க?” என்று அவள் திரும்பிக் கேட்க, அவள் முன்னே ஒரு காகித உறையை நீட்டினான்.
“என்னது?”
“பிரிச்சு பார்த்தா இத்தனை கேள்வி வராது” என்று அவன் குறுஞ்சிரிப்புடன் சொல்ல, அவனிடம் இருந்து கண்களை விலக்காமல், உறையை பிரித்தவளின் கண்கள் மெல்ல மெல்ல விரிந்தது.
“என்னால முடியுமாங்க?” அவள் தயக்கத்துடன் தந்தியடிக்கும் குரலில் கேட்க, இரு கைகளிலும் மனைவியின் முகத்தை ஏந்தி நெருக்கமாக இழுத்து, கோபமாக பல்லைக் கடித்தான் இளங்கோ.
“இல்ல, சிஏ பாஸ் பெர்சென்டேஜ் என்னன்னு உங்களுக்குத் தெரியும் தானே? ஃபைனல் எக்ஸாம் வெறும் 8% பேர் தான் பாஸ் பண்ணுவாங்க. அதான், என்னால..”
“வானதி..” என்ற இளங்கோவின் அடர்த்தியான ஒற்றை அழைப்பில் கண் மூடி மௌனமானாள் வானதி.