மனைவியின் கண்களில் தெரிந்த கேள்வி கணைகளை சரியாகப் படித்தான் இளங்கோ.
அவனுக்குத் தெரியும். அவ்வப்போது நிகழ்வதை போல அவன் சொன்னதை மறந்து விட்டாள் என்று.
ஒரு சண்டைக்குப் பின் அவர்களுக்குள் நடக்கும் அத்தனை பேச்சுக்களும் சச்சரவில்தான் முடிகின்றன. அதைத் தவிர்க்க இப்போதெல்லாம் பேச்சு வார்த்தைக்கே இடமின்றி போய் விட்டது.
கோபத்தில் வார்த்தைகளை விட்டு விடக் கூடாதென்று அமைதியாக இருந்த காலம் போய் இப்போது ஒருவித பயமும், ஆபத்துமான அமைதி அவர்களிடம் வந்து விட்டிருந்தது.
யார் முதலில் இறங்கி வந்தாலும் உடனே மற்றவர் முறுக்கிக் கொள்வது என்ற விதியை கட்டாயமாக கடைப்பிடித்தனர்.
ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த வாக்குவாதத்தின் விளைவே இது. தவறு தன் பக்கம் என உணர்ந்து இளங்கோதான் முதலில் பேசினான்.
அவ்வளவு ஏன் முன்தினம் மனைவியை அலுவலகத்தில் விடவா என்று கூட கேட்டான். அவள் தானே மறுத்தது?
அவர்களுக்குள் முன்பெல்லாம் சண்டை வலுத்து, ஊடலாய் உரசி கொண்டு உலாவியதும், அதன் பின்னர் கொஞ்சிக் கூடியே சமாதானமாகியதும் பல வருடங்களுக்கு முந்தைய கனவு போலிருந்தது அவனுக்கு.
இப்போது மனைவி முகத்தில் தெரிந்த கலக்கம் எதற்கென்று அவனுக்குப் புரியவில்லை. இல்லை, எல்லாவற்றிற்குமா என்பதும் அவனுக்கு விளங்கவில்லை.
‘இல்லை, இது செய்தியல்ல. இதை முன்னரே தன்னிடம் சொல்லியிருக்கிறான். மீண்டும் மறந்து விட்டேனா, என்ன?’ அந்தக் கேள்வியுடன் அவள் கணவனைப் பார்க்க, அவனோ மகளை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான்.
நேற்றும் மகளுக்காக தானே, “ட்ராப் பண்ணவா வானதி?” என்று கேட்டான். ஒருவேளை, இல்லையோ?
“அப்பாக்கு பேக் பண்ற வேலையிருக்கு நேத்ரா, பிளீஸ் தம்பி கோபப்படாம டீவி பாருங்க. அப்பா டிரிப் முடிச்சு வந்ததும் நெக்ஸ்ட் வீக் ரிலீஸாகுற ஸ்பைடர் மேன் படத்துக்கு உங்களை கூட்டிட்டு போறேன். ஓகே?” இளங்கோ மகனிடம் கேட்க, “ஓகே ப்பா” பற்கள் மொத்தமும் தெரிய சிரித்தபடி சொன்னான் நேத்ரன்.
இளங்கோ தொலைக்காட்சியை இயக்கி, அதில் அமேசான் பிரைம் இணைத்து, ஸ்பைடர் மேனை போட்டு விட்டான்.
“அப்பா” என்று உதட்டை பிதுக்கிய நட்சத்திராவும், தொலைக்காட்சியை பார்த்ததும் உதடு பிரித்து சிரிக்க, மகளின் கன்னத்தில் புன்னகையுடன் முத்தமிட்டான் இளங்கோ.
அவ்வளவு நேரமும் சோஃபாவில் அமர்ந்து துணிகளை மடித்துக் கொண்டிருந்த வானதி சட்டென எழுந்து அறைக்குள் சென்றாள்.
இளங்கோவிற்கு அவர்கள் குழந்தைகள் முன் சண்டையிடுவது பிடிக்காது. அதை ஒரு நாளும் அனுமதிக்க மாட்டான். அப்படியே அவள் மறந்து குரல் உயர்த்தி பேசினாலும், அவளுக்கு பதிலே சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்து படுக்கை அறைக்குள் சென்று கதவை திறந்து வைத்து அவளைப் பார்ப்பான்.
கோபத்தை எல்லாம் அப்படி இழுத்து பிடிக்க முடியுமா என்ன? அவளுக்கு அந்நேரமே கத்தி தீர்த்திட வேண்டும்.
நேத்ரனுக்கு நான்கு வயதிருக்கும் போது அவர்களுக்கிடையில் வார்த்தைகள் முற்றி, குரல் உயர்ந்து, இளங்கோ ஏதோ சொல்லவும், வானதி அழுது விட்டாள்.
இளங்கோ அவளை அணைத்து சமாதானப்படுத்த முற்பட, அவர்களுக்கு அருகில் வந்து நின்று, அப்பாவை முறைத்து, அம்மாவுடன் சேர்ந்து அழுத நேத்ரனை அவர்கள் இருவருமே பதறிதான் பார்த்தனர்.
வானதி அக்கம் பக்கம் மட்டுமல்ல, பெற்றோரின் சண்டையையும் பார்த்து வளர்ந்தவள். அதனால், இளங்கோ சொல்லும் போது அதை பெரிதாக மனதில் ஏற்றிக் கொள்ளவில்லை அவள்.
மகன், அப்பாவை வில்லனை போல பார்த்து அழவும் தன் தவறு உணர்ந்தாள்.
“சாரி” என்று அவள் சொல்லவும், இளங்கோ, “விடு. முதல்ல நீ அழுகையை நிறுத்து” என்று அவள் கண்களை துடைத்து விட்டான்.
நேத்ரன் பெற்றோரை மாறி மாறி பார்க்க, “சாரிடா செல்லம்” என்று மகனைத் தூக்கிக் கொண்டான் இளங்கோ. அதன் பின்னர் முடிந்தவரை குழந்தைகள் முன் சண்டையிடுவதை தவிர்த்து விடுவார்கள் இருவரும். முடிந்த வரைதான். ஆனால், எங்கே முடிகிறது.
அவள் அறைக்குள் செல்வதைப் பார்த்து, அவளைப் பின் தொடர்ந்து வந்த இளங்கோ ஒரு கையை பேண்ட் பாக்கெட்டில் விட்டு, மறுகையை அவள் முன் அசைத்து, “அப்போ மறந்துட்ட இல்ல?” என்று குரலில் உணர்ச்சிகள் இன்றி கேட்டான்.
வானதி எச்சில் கூட்டி பதட்டத்தையும் சேர்த்து விழுங்கினாள்.
“இல்ல. நீங்க சொன்ன ஞாபகமே எனக்கு இல்ல…” என்றவள் கணவனை தாண்டி பார்க்க, கட்டிலில் பயணத்திற்கு ஆயத்தமாக அவனது டிராலி பேக் எடுத்து வைக்கப்பட்டிருந்தது.
அவள் விழிகள் மெல்ல விரிய,
“எப்படி ஞாபகம் இருக்கும்?” என்று அழுத்தமாக கேட்டான் இளங்கோ.
“எப்பவும் என் கூட சண்டை போடுறதுலயே குறியா இருந்தா, மத்தது எல்லாம் எப்படி ஞாபகம் இருக்கும்?” என்று அவன் கேளாமல் விட்டதும், அவன் கண் பார்த்தே அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது.
“எப்போ சொன்னீங்க?” உள்ளே போன குரலில் கேட்டாள்.
“ஒரு மாசத்துக்கு முன்னாடியே..” என்று இழுத்தான்.
“ஓ..”
“போன வாரம் கூட திரும்பவும் ஞாபகப்படுத்தினேன்” இளங்கோ சொல்லவும், அவளுக்கு சட்டென நினைவு வந்து விட்டது.
“காலையில கிளம்பற அவசரத்துல பாப்பா அழுதுட்டு இருக்கும் போது, நான் சொல்றது கேட்குதான்னு கத்தி சொன்னீங்களே? அப்போ இதையா சொன்னீங்க?” அவள் கேட்கவும், சிரிப்பை அடக்கியதில் மீசை துடிக்க முறைத்தான்.
“நான் கத்தினேன்? சரி விடு. நான் கத்தினது மட்டும் உனக்கு சரியா ஞாபகம் இருக்கு. இல்ல வானதி?” அவளை நோக்கி ஓரடியெடுத்து வைத்துக் கேட்டான் இளங்கோ.
அதற்கு பதில் அவனுக்கே தெரியும் எனும் போது அவள் வேறு ஏன் சொல்ல வேண்டும் என்று வாயைத் திறக்கவில்லை வானதி.
நல்லவை விட, அல்லவைதான் இப்போது அவள் மனதில் அழுந்த பதிகிறது. திருமணமான இத்தனை ஆண்டுகளில் இப்பொழுதுதான் எதிர்பார்ப்புகள் ஏகத்துக்கும் எகிறி போய் இருக்கிறது.
எதற்கென்று தெரியா எதிர்பார்ப்பு, ஏமாற்றத்தை அளித்தது. அதனால் விளையும் எரிச்சல் என்று முழு நேரமும் கண்ணி வெடியின் மேல்தான் அவர்கள் குடும்பம் நடத்துவது போன்ற பிரம்மை.
“வானதி”
“சாரி” என்றாள். “நேத்து நீங்க கால் பண்ணி ஒரு முறை ரிமைண்ட் பண்ணியிருக்கலாம் இல்ல?” அவள் கேட்கவும்,
“நீ ஏன் கால் பண்ணல?” என்று தொடங்கியவன், தலையை உலுக்கி கொண்டு, “எதுக்கு இவ்வளவு டென்ஷன் எடுக்கிற? என்ன கேட்டாலும் மறந்துட்டேன்தான் காரணம் சொல்ற. வீட்ல மொபைலை மறந்துட்டு ஆபீஸ் போய்ட்டு தேட வேண்டியது. பர்ஸை ஆபீஸில மறந்துட்டு வீட்டுக்கு வந்து காணோம்னு வீட்டையே புரட்டி போட வேண்டியது. இதுல…” கடைசி வாக்கியத்தை அவன் முணுமுணுக்க,
“மறக்காம என்ன செய்யும்? ஒரு நாளைக்கு எத்தனை வேலை பார்க்கிறேன் தெரியுமா? நீங்களும் என்னை பார்க்கறீங்க தானே? ஏதோ லேப்ல பண்ண ரெடிமேட் ரோபோ மாதிரி டெய்லி எழுந்து ஓட வேண்டியதா இருக்கு. உங்களுக்கு என்ன? ஆபீஸ் கரெக்ட் டைமுக்கு போனா போதும். ஆனா, நான் அப்படி வேலையை மட்டும் பார்த்திட்டு போக முடியாதே. ஒரு நாள், ஒரே ஒரு நாள் வானதியா இருந்து பாருங்க. அப்போ தெரியும் என் வலி” சட்டென வெடித்து விட்டாள் வானதி.
“சரி. அப்புறமும் நீ எதுக்கு.” என்று இளங்கோ தொடங்கவும், கை நீட்டி அவனை பேச வேண்டாம் என்று செய்கை செய்தாள் அவள். மீண்டும் ஒரு வார்த்தைப் போருக்கு அவள் தயாராக இல்லை.
ஒரு வாரத்திற்கு முந்தைய சண்டையே இப்போதுதான் முடிவுக்கு வந்தது போல தெரிகையில், மீண்டும் ஒன்றை தொடங்க அவள் விரும்பவில்லை. அதிலும் அவன் வெளிநாடு செல்லும் நேரத்தில், ம்ஹும் என்று தலையசைத்து மௌனமானாள்.
“நான் வர ரெண்டு வாரமாகும் வானதி. மேனேஜ் பண்ணிடுவ இல்ல?” இளங்கோ அக்கறையுடன் கேட்க, “வேற வழி?” என்றாள் மனம் சுணங்க.
“ம்ம். ரெண்டு வாரமா? பதினாலு நாளா?” அவளுக்கு இப்போதே கண்ணைக் கட்டியது. அன்றாட வேலைகளில் கணவனின் உதவி எல்லாம் இரண்டாம் பட்சம்தான். வீட்டில் அவன் இருப்பதே ஒருவித ஆறுதலும், நிம்மதியும் தானாகவே அவளுக்கு வந்து விடும்.
அவனின்றி இரண்டு பிள்ளைகளையும் சமாளித்து, தினசரி நடவடிக்கைகளை சீராக செய்து, அலுவலகமும் சென்று வருவதற்குள் நிச்சயம் வாடி வதங்கி விடுவாள்.
“ரெண்டே வாரம்தான் வானதி.”
“உங்களுக்கு என்ன சொல்வீங்க. நான் இல்ல தனியா சமாளிக்கணும்?” என்று குரலை உயர்த்தியவள், இளங்கோ மார்பின் குறுக்கே கைகளை கட்டவும் தணிந்தாள்.
“நீங்க எப்படி ரெண்டு வாரம் சமாளிக்க போறீங்க?” இப்போது அவனுக்காக கவலைப்படத் தொடங்கினாள்.
இளங்கோ அவளை அசையாமல் பார்த்தான்.
“ஓகே, தேவி கார்னர் ரெஸ்டாரண்ட் தேடி போய் நம்ம ஊரு சாப்பாடு சாப்பிடுங்க”
“எனக்கு கம்பெனி பார்த்துக்கும் வானதி. முக்கியமான வேலையா போறேன். இதுல சாப்பாட்டை பத்தி எல்லாம் கவலைப்பட எனக்கு நேரமில்ல”
“சாப்பாட்டை பத்தி கண்டிப்பா கவலைப்படுவீங்க. அங்க போனாதான் என் அருமை தெரியும் உங்களுக்கு” முனகிக் கொண்டே வாயிலை நோக்கி நடந்தாள். இளங்கோ கோபத்தில் துளிர்த்த புன்னகையுடன் அவளையே பார்த்திருந்தான்.
பிள்ளைகள் தொலைக்காட்சியில் மூழ்கி இருப்பதை கவனித்து விட்டு, இரவு சமையலை கவனிக்க சமையல் அறைக்குள் நுழைந்தாள்.
மீன் குழம்பை சூடு செய்து, இன்னொரு அடுப்பில் இட்லி ஊற்றி வைத்து விட்டு, அலைபேசியில் அம்மாவை அழைத்தாள்.
“மாப்பிள்ளை நாளைக்கு காலைல தானே ஜப்பான் கிளம்புறார்? அவருக்கு எல்லாம் பார்த்து எடுத்து கொடுத்தியா?” பாக்கியம் எடுத்ததும் அதைத்தான் கேட்டார்.
“நீயெங்க சொன்ன? உன் முன்னாடிதானே மாப்பிள்ளை என்கிட்ட சொன்னார்” அம்மா சொல்லவும், “ஓ, சொன்னாரா?” என்று கேட்டு அப்போதைக்கு சமாளித்து விட்டாள்.
“நீ போற போக்கை பார்த்தா, நாளைக்கு நான் யாருன்னு கேட்ப போல. எல்லாத்தையும் மறந்து தொலைக்கிற” அம்மா அலுத்துக் கொள்ளவும்,
“எங்கம்மா மறக்கறேன்? நீங்க எல்லாரும் முக்கியமானதுன்னு நினைக்கிறதுதான் மறந்து போகுது. மத்தபடி பத்து வருஷத்துக்கு முன்னாடி இவரோட போட்ட சண்டை எல்லாம் வார்த்தை மாறாம ஞாபகம் இருக்கு. பதிமூனு வருஷத்துக்கு முன்னாடி இளங்கோவை முதல் முறையா பார்த்தது, பேசினது எல்லாம் மண்டையில அச்சடிச்ச மாதிரி எப்பவும் மறக்கவே மாட்டேங்குது”
அவள் தனக்குள் பேசிக் கொள்ள,
“சத்தமா பேசி பழகு வானதி. அதென்ன முணுமுணுன்னு வாய்க்குள்ள முணங்கிட்டு இருக்க?” என்று திட்டினார் பாக்கியம்.
“ஒன்னும் இல்லம்மா. நேத்து நீங்க அரைச்சு குடுத்த இட்லி மாவு அப்படியே ஃப்ரிட்ஜ்ல எடுத்து வச்சுட்டேன். மதியம் மீன் குழம்பு வச்சேன், அதுக்கு இப்போ நீங்க குடுத்த மாவுலதான் இட்லி ஊத்தியிருக்கேன். அதைத்தான் சொல்ல வந்தேன்”
“ம்ம். சரி சரி. பசங்க என்ன பண்றாங்க?”
“டிவி பார்த்திட்டு இருக்காங்க”
“சரி, நீ வேலையை பாரு. நாளைக்கு வீட்டுக்கு வா. நான் வைக்கிறேன்”
அம்மாவிடம் சரியென்று சொல்லி அலைபேசியை அணைத்தாள்.
மகளுக்கு இட்லி ஊட்டி விட்டு, மகனுக்கும், கணவனுக்கும் உணவை பரிமாறினாள் வானதி. மனைவியையும், அலைபேசியையும் மாறி மாறிப் பார்த்த இளங்கோ, அலைபேசியை ஓரமாக வைத்து விட்டு தட்டில் கை வைத்தான்.
“நீ சாப்பிடல?” என்று கேட்டவன், அவளுக்கு தட்டை எடுத்து நீட்டினான். மகனுக்கு மீனில் முள் எடுத்து கொடுத்துக் கொண்டிருந்தவள், தானும் சாப்பிட அமர்ந்தாள்.
உணவு முடித்து பிள்ளைகள் இருவரும் அப்பாவோடு ஐக்கியமாகி விட, கணவனுக்கு பெட்டி அடுக்க தங்களின் படுக்கை அறைக்குள் போனாள் வானதி.