அவனுக்குத் தேவையான உடைகளை அவனே வெளியில் எடுத்து வைத்திருக்க, அதை கலைக்காமல் பெட்டியில் சீராக அடுக்கி வைத்தாள் வானதி.
அவனுக்குத் தேவையானது ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து தேடி எடுத்து அடுக்கி முடிக்கையில் உள்ளே வந்தான் இளங்கோ.
“பாப்பா உன்னை கேட்கிறா, அவளுக்கு தூக்கம் வந்துடுச்சு” மற்ற நாளாக இருந்தால், “நீங்க தூங்க வைக்க வேண்டியது தானே? அதுக்கும் நான்தான் வரணுமா?” என்று கத்தியிருப்பாள். ஆனால், இன்றோ, “இதோ வந்துட்டேன். நீங்க எதையும் தொடாதீங்க. நான் வந்து எது எங்க வச்சிருக்கேன்னு சொல்றேன்” என்று சொல்லி வெளியில் சென்றாள்.
குழந்தைகளுக்கான பங்க் பெட்டில் மேல் படுக்கையில் நேத்ரன் சிறுவர்களுக்கான புத்தகத்துடன் படுத்திருக்க, தன் படுக்கையில் உருண்டு கொண்டிருந்த மகளுக்கு பக்கத்தில் சென்று உடலை குறுக்கி படுத்தாள் வானதி.
“அம்மா..” என்று மகள் முட்டிக் கொண்டு வரவும், மென்மையாய் அணைத்து கொண்டாள்.
அப்பா ஜப்பானில் இருந்து என்ன வாங்கி வரப் போகிறார் என்று மகிழ்ச்சி பொங்க மேலிருந்து நேத்ரன் சொல்லிக் கொண்டிருக்க, அவனுக்கு “ம்ம்” கொட்டியபடி மகளைத் தட்டிக் கொடுத்தாள்.
இளங்கோ படுக்கையறையை பார்த்தபடி மடியில் லேப்டாப் வைத்துக் கொண்டு ஹால் சோஃபாவில் அமர்ந்து வேலையாக இருந்தான். வானதி அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இளங்கோவை பல வருடங்களுக்கு முன் பார்த்த போது, ஏன் அவர்களின் திருமணத்தின் போது கூட இப்படித்தான் இருந்தான். இப்படியேதான் இருந்தான்.
இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பன் ஆனதை தவிர அவனிடம் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை.
அதே வசீகரிக்கும் புன்னகை, வயது ஏறினாலும் அது முகத்தில், உடலில் தெரியாத வண்ணம் முறையாக பராமரித்ததால் அப்படியே கம்பீரமாகதான் இருந்தான். என்னவொன்று இந்த முப்பத்தியொன்பது வயதிலும் கொஞ்சம் என்ன அதிகமாக கவர்ச்சி கூடித் தெரிகிறான். அவ்வளவுதான்.
அவளின் பார்வையை உணர்ந்து விழிகளை உயர்த்தி நேராக அவளைப் பார்த்து விட்டு மீண்டும் பார்வையை மடிக் கணினிக்கு திருப்பினான் இளங்கோ.
மகளுக்கு போர்வையை போர்த்தி விட்டு, எழுந்து தங்களின் அறைக்கு அவள் செல்ல, “நான் பார்த்துக்கறேன் வானதி. நீ படு” என்று பின்னால் இருந்து இளங்கோ சொல்ல, மீண்டும் பிள்ளைகளின் அறைக்குள் சென்றவளை கடுப்புடன் கண்களை சுருக்கி பார்த்தான்.
மறுநாள் காலையில் இளங்கோ சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் ஏறியிருந்தான். சென்னையில் இருந்து நேரடி விமானம் இல்லாததால் அங்கிருந்து ஜப்பான் செல்வது அவனது பயணத் திட்டம்.
பிள்ளைகள் இருவரும் அப்பாவை அணைத்து, முத்தமிட்டு விடை கொடுக்க, வானதி கணவனை பார்த்தது பார்த்தபடி நின்றிருந்தாள்.
“பத்திரமா இரு. கால் பண்றேன் வானதி.” என்று அவளின் கைப் பிடித்து சொன்னான்.
“நீங்க ரீச்சாகிட்டு கால் பண்ணுங்க” என்றாள்.
“ஓகே” என்றவன், விமான நிலையத்திற்குள் செல்ல, “அப்பா..” என்று கத்தி அழுதாள் நட்சத்திரா.
“செல்லக் குட்டி, அழ கூடாது” மெல்ல நடந்தபடி அவர்களைப் பார்த்துச் சொன்னான் இளங்கோ.
இப்படி பொதுவெளியில் சத்தமாக பேசுவது எல்லாம் அவனது இயல்பே அல்ல. மகளென்று வந்தால் மாறி விடுவான் என்றுதான் கணவனைப் பார்த்தாள் வானதி.
இளங்கோ உள்ளே சென்றதும் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு நேராக அம்மா வீடு சென்றாள்.
முதல் முறையாக கணவன் வெளிநாடு சென்ற போது, விமான நிலையத்தில் வைத்து மாலை மாலையாக கண்ணீர் வடித்தது அவளுக்கு நினைவில் வந்தது. அவளின் தோளில் கைப் போட்டு அணைத்து, கன்னம் துடைத்து, “ஒன் வீக் தானே வானதி. பிளீஸ்” என்று கெஞ்சிய இளங்கோவின் கண்களையும், குரலையும் எப்படி மறப்பாள்?
இப்போதும் மனதிற்குள் மறுகிக் கொண்டுதான் இருக்கிறாள். ஆனால், ஏன் வெளிக் காட்டவில்லை. அவளுக்கேத் தெரியவில்லை. காரணத்தை யோசிக்க அவளும் விரும்பவில்லை.
மகள் பிறந்த பிறகு இளங்கோ வேலை, கடமை, பொறுப்புகள் என்று கழுத்தை நெரிக்கும் காரியங்களில் மூழ்கி ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க, வீடு, பிள்ளைகள், மகனின் படிப்பு, அலுவலகம் என மறுபக்கம் வானதியும் ஓடியதில், ஆளுக்கொரு பக்கமாக நின்றனர்.
அம்மா வீடு சென்றதும், கதவைத் திறந்த அவளின் அண்ணன் மாதவன், “நட்சத்திரா குட்டி மாமாகிட்ட வாங்க” என்று மகளை தூக்கிப் போட்டு பிடிப்பதை புன்னகையுடன் பார்த்தாள்.
“மாமா” என்று நேத்ரனும் கத்த, அவன் தோளில் கைப் போட்டு இழுத்துக் கொண்டு நடந்தபடி, “மாப்பிள்ளை பிளைட் ஏறியாச்சா வானதி?” என்று தங்கையிடம் விசாரித்தான் மாதவன்.
“அங்கருந்து உனக்கு போன் பண்ணார்தானே?”
“கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மாட்டியா? உன்னை எல்லாம் வச்சுட்டு இந்த இளங்கோ எப்படி சமாளிக்கிறார்னு தெரியல.” என்று மாதவன் சலித்துக் கொள்ள, அண்ணனை பார்த்து உதடு சுளித்தாள் வானதி.
“உங்களையே வச்சு நான் சமாளிக்கும் போது வானதியை யாராவது குறை சொல்ல முடியுமா?” என்று மாதவனின் மனைவி அர்ச்சனா வர, அண்ணியை அவஸ்தையுடன் பார்த்தாள் வானதி.
“ஊர்ல எல்லோரும் நல்லா இருக்காங்களா அண்ணி? எப்போ வந்தீங்க?” என்று அவள் கேட்க, “ம்ம், அவங்களுக்கு என்ன நல்லாருக்காங்க. நான்தான் உங்க அண்ணனை கட்டிட்டு கஷ்டப்படுறேன்” என்று அவள் புலம்பலாக சொல்ல, வானதி திரும்பி அண்ணனை முறைத்து விட்டு உள்ளே சென்றாள்.
“மாதவன் கூட்டிட்டு வரத்தானே ஊருக்குப் போனான். அப்புறம் என்ன தெரியாத மாதிரி கேட்கிற?” எரிச்சலுடன் பதில் சொன்னார் பாக்கியம்.
“ஹாய் அத்த, நெக்ஸ்ட் டைம் மாமாகிட்ட நம்மளையும் ஜப்பான் கூட்டிட்டு போகச் சொல்லுங்க. ஓகே?” என்று ஹரிணி கேட்க,
“ஓகே டன்” என்று அவளின் கன்னம் கிள்ளி சொன்னாள் வானதி.
“மாமா அபிசியல் டிரிப் போய் இருக்காங்க. அதுனால இந்த டைம் அவரை விட்டுடுவோம். நீ சொன்ன மாதிரி நெக்ஸ்ட் டைம் நாம எல்லாம் சேர்ந்து ஜப்பான் என்ன, வேர்ல்ட் டூர் போறோம். ஓகே?” வானதி குனிந்து ஹரிணியிடம் கேட்க,
“ஓகே” என்று சிரித்து ராகம் இழுத்தாள் ஹரிணி.
நேத்ரனை விட ஒரு வயது பெரியவள் ஹரிணி. நேத்ரனுக்கு ஒன்பது வயது, ஹரிணிக்கு பத்து. உறவு என்பதை தாண்டி, ஒரே வயது என்பதால் இருவருக்கும் நல்ல ஒட்டுதல் உண்டு. ஹரிணி, நேத்ரனைப் பார்த்ததும் அவனிடம் சென்று கதைப் பேசத் தொடங்க, வானதி திரும்பி அம்மாவை பார்த்தாள்.
“உனக்கு இப்போ என்ன தெரியணும்?” என்று கண்ணை உருட்டிய பாக்கியம், “அர்ச்சனா சண்டை போட்டுட்டுதான் அவங்கம்மா வீட்டுக்கு போனா. உங்கண்ணன் போய் அவளை கெஞ்சி, கூத்தாடி கூட்டிட்டு வந்திருக்கான். அவங்களே அடிச்சுக்கிட்டாங்க, அவங்களே சேர்ந்துக்கட்டும்னு நான் எதுவும் கேட்டுக்கல. ஏன், நீயும் மாப்பிள்ளையும் கூடத்தான் சண்டை போட்டு பேசாம இருந்தீங்க. நான் ஏதாவது கேட்டேன்?” என்று அவர் அழுத்தமாக கேட்க,
“போம்மா. சும்மா எங்களை இழுக்காத” என்று சிலுப்பிக் கொண்டாள் வானதி.
“உன்கிட்ட ஏதாவது சொன்னானா உங்கண்ணன்?”
“என்கிட்டயா? இல்லையே மா. ஏன் கேட்கறீங்க?”
“அர்ச்சனா டைவோர்ஸ்னு பேசின மாதிரி இருந்துச்சு. அதான், உனக்கு ஏதாவது தெரியுமான்னு..” அதிர்ச்சியில் உறைந்து கண்களை விரித்தாள் வானதி.
“என்னம்மா சொல்ற? அண்ணா லவ் மேரேஜ் தானே..”
“ஏன் நீயும் கூடத்தான் லவ் பண்ணி போராடி, எங்களை மிரட்டி கல்யாணம் பண்ணிக்கிட்ட. அதுக்காக இப்போ மாப்பிள்ளை கூட சண்டை போடாமயா இருக்க?”
“உங்க மாமா ஒரு பெரிய கார் கம்பெனில சீப் ஃபைனான்ஸியல் ஆபிஸர். அவர் நினைச்சா எந்த நாட்டுக்கு வேணாலும் போவார். உங்கப்பா அப்படியா? பேருதான் பெரிய கம்ப்யூட்டர் இன்ஜினியர். ஆனா..”
அர்ச்சனா கோபத்துடன் ஹரிணியிடம் சொல்லிக் கொண்டிருக்க, அம்மாவையும், அப்பாவையும் அழுகையை அடக்கிக் கொண்டு பார்த்த குழந்தையை பார்க்கையில், வானதிக்கு வருத்தமாக இருந்தது.
“அப்பா உன்னை ஜப்பான் என்னடா அமெரிக்காவே கூட்டிட்டு போறேன் தங்கம். நீ வா” மகளின் கைப் பிடித்து அழைத்துக் கொண்டு, மனைவியை கண்களால் எரித்து விட்டு அறைக்குள் சென்றான் மாதவன்.
“நான் வீட்டுக்கு கிளம்பவாம்மா?” வானதி தயக்கத்துடன் கேட்க, மகளை அன்றிரவு தன்னுடன் தங்க வைக்க நினைத்த பாக்கியம், சற்றே தயக்கத்துடன், “தனியா இருந்துப்பியா?” என்று கேட்டார்.
“என்னம்மா நீங்க, இதென்ன எங்களுக்கு ஃபர்ஸ்ட் டைம்மா?” என்று கேட்டுக் கொண்டே அவள் தன் பிள்ளைகளை பார்க்க, “என்ன நீ உடனே கிளம்ப போறியா? மதியம் சாப்பிட்டுட்டு, ஈவ்னிங் போ” என்று தடுத்தார் பாக்கியம்.
“இல்லம்மா. எனக்கு வீட்ல வேலை இருக்கு. அவர் சிங்கப்பூர் போய்ட்டு கால் பண்ணுவார். நான் வர்றேன்” என்று பிள்ளைகளை அழைத்துக் கொண்டு, அண்ணா, அண்ணி வற்புறுத்தியும் கேட்காமல் வீடு வந்து விட்டாள்.
மாலை நெருங்கும் நேரம் இளங்கோ சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து காணொளி அழைப்பில் வந்தான். பிள்ளைகள் இருவரும் அவனோடு மாறி மாறி கதைப் பேசிக் கொண்டிருந்தார்கள். என்னவோ அப்பாவை பார்த்து பல நாட்கள் ஆனது போல அவர்கள் பேசிக் கொண்டிருக்க, மறுநாளுக்கான ஆயத்தங்களை செய்துக் கொண்டே அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள் வானதி.
இங்கிருக்கும் போதெல்லாம் அவளை கண்டுக்கொள்ளாமல் சுற்றுபவன், வேலை இல்லாமல் விமான நிலையத்தில் அமர்ந்திருப்பதாலோ என்னவோ அவளையே கூர்ந்து நோக்க, “ஆள் முழுங்கி” என்று முணுமுணுத்து, “எதுக்கு அப்படி பார்க்கறீங்க?” என்று கேட்டாள் வானதி.
“பார்க்கக் கூடாதா?” என்றவனின் பார்வை அவளைத் துளைத்தது.
“இதுக்கு முன்னாடி பார்க்கலையே” பதிலுக்கு அவளும் சொல்ல, “அப்படியா?” என்று ஆச்சரியமாக கேட்டான்.
இந்த இளங்கோவைதான் அவள் காதலித்து திருமணம் செய்து கொண்டாள்.
“அப்பா, ஜப்பான் காசு பேர் யென் ப்பா. கரெக்ட்டா?” என்று நேத்ரன் ஆவலுடன் கேட்க, அலைபேசி மீண்டும் பிள்ளைகளின் கை மாறி, அவள் கைக்கு வரும் போது, “டேக் கேர்” என்று சொன்னான் இளங்கோ.
முந்தின இரவு இளங்கோ வீட்டில்தான் இருந்தான். ஆனாலும் பிள்ளைகளுடன்தான் உறங்கினாள் வானதி. இப்பொழுது பிள்ளைகள் உறங்கி விட அவளுக்கு கணவனைத் தேடியது.
தனிமையும், ஒருவித வெறுமையும் அவளைச் சுற்றி இறுக்கி மூச்சடைக்க செய்தது. அம்மா வீட்டில் இருந்திருக்கலாமோ என்று காலம் தாழ்த்தி வருந்தினாள் அவள்.
உறக்கம் அவளை அண்டாமல் அலைக்கழிக்க, நள்ளிரவில்தான் உறங்கினாள்.
அலைபேசியில் குறுஞ்செய்தி வந்த சத்தம் கேட்க, வேகமாக எட்டி அதைக் கையில் எடுத்தாள்.
“ஜப்பான் வந்துட்டேன்” என்று செய்தி அனுப்பியிருந்தான் இளங்கோ.
“ஓகே” என்ற அவளின் பதிலை பார்த்ததும் உடனடியாக காணொளி அழைப்பில் வந்து விட்டான்.
“தூங்கலையா நீ?” என்று கேட்டவனின் கண்கள் மனைவியின் பின்னே பார்த்ததும் விரிந்தது.
அவன் பார்வையைத் தொடர்ந்து வானதி பார்க்க, படுக்கையை ஒட்டிய சிறிய மேஜையில் இருந்த அவர்களின் புகைப்படத்தின் மேல் கணவனின் பார்வை நிலைத்ததை பார்த்து விட்டு அவனைப் பார்க்க, இளங்கோவின் கண்களில் கடினத்தன்மை.
அது அவர்களின் படுக்கை அறை. பெரும்பாலான இரவுகள் பிள்ளைகள் அறையில் உறங்கி விடும் மனைவி, அவன் இல்லாத போது தங்களின் படுக்கை அறையில் உறங்குவதை இளங்கோ ஆச்சரியமாக பார்க்காமல் என்ன செய்வான்?
அவனது பெட்டியில் அவளின் வாசனை திரவியம் இருப்பதை பார்த்து அவள் என்னமோ முதல் முறையாக நடப்பது போல கேள்வியாக பார்த்த போது, இளங்கோவும் எந்த பதிலும் சொல்லியிருக்கவில்லை.
“தூங்கலையான்னு கேட்டேன்?” இம்முறை அழுத்தமாக கேட்டான் இளங்கோ.