ஒருவரின் பார்வையின் கோணத்தை வைத்தே அவரின் புரிதலும் இருக்கும்.
ஒரு வட்டத்திற்குள் நிற்கையில் மிக பிரம்மாண்டமாக தெரியும் விஷயம், வட்டத்திற்கு வெளியில் நிற்பவருக்கு சிறு புள்ளியாய் புலப்படும்.
“இத்தனை பயமும், தயக்கமும் இதற்கா?” எனத் தோன்ற வைக்கும். வானதியின் மனநிலையை சரியான கோணத்தில் நின்று பார்த்ததால் அலட்சியமாக எண்ணவில்லை இளங்கோ.
அவளின் பயம் அவனுக்கும் புரிந்திருந்தது. அதை அவனும் கடந்து தானே வந்திருக்கிறான். ஆக, அதட்டல், மிரட்டலை எல்லாம் கை விட்டு தன் கையில் ஏந்தியிருந்த மனைவியின் முகத்தை இன்னும் நெருக்கமாக இழுத்தான். வானதி விழி விரித்து பார்க்க, அழுத்தமாய் இதழ்களில் முத்தமிட்டு, அணைத்துக் கொண்டான்.
“பாஸானா என்ன பண்ணலாம்னு இருக்க?” அவன் கேட்க,
“நிறைய பிளான் வச்சுருக்கேன். அதுல ஒன்னு உங்களை மாதிரி சிஎஃப்ஓ ஆகணுங்கறது. எனக்கு இன்னும் சான்ஸ் இருக்கு தானே?” சிரிப்புடன் பதில் சொன்னாள்.
“ஃபெயிலானா?”
“அதெல்லாம் ஆக மாட்டேன்” என்று கோபமாய் சொல்லி அவன் மார்பில் குத்தினாள்.
“ம்ம்” இன்னமும் அவள் குரலில் லேசான தயக்கமிருந்தது. அது இயல்பு என்று புரிந்தவன், அவள் போக்கில் விட்டான்.
வானதி தன் கையில் இருந்த காகிதங்களை மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல பதிவு செய்து வந்திருந்தான் இளங்கோ. அதனுடன் அடுத்த மாதம் இறுதி தேர்விற்கான தேதிகள் அறிவிக்கப் போகிறார்கள் என்ற செய்தித் துணுக்கும் இருந்தது.
அவள் ஆழ மூச்செடுத்து, “நான் பாதியில் விட்ட படிப்பை முடிக்கிறேன். அவ்ளோதான்.” என்றாள் திடமாக, நேர்மறை எண்ணங்களை மனதில் நிறைத்து.
“அவ்ளோதான்” என்று சிரிப்புடன் மனைவியின் வார்த்தையை பிரதிபலித்தான் இளங்கோ.
“அம்மா நாங்க நாளைக்கு எத்தனை மணிக்கு வீட்டுக்கு வர்றோம்னு கேட்டாங்க. பத்து மணிக்கு மேல வர்றேன்னு சொல்லியிருக்கேன்.” என்று வானதி சொல்ல, “ம்ம். நான் போற வழியில உங்களை ட்ராப் பண்ணிட்டு போகலாம்னு நினைச்சேன்” என்றான்.
அன்று சனிக்கிழமை என்பதால் வானதி நேரமே வேலை முடித்து வீட்டிற்கு வந்திருந்தாள். இளங்கோ அப்போது தான் வீடு வந்திருந்தான். கழுத்தில் இருந்து டையை அவன் தளர்த்த, அதை கழற்ற உதவினாள் வானதி.
அவன் குளிக்க மாற்றுடையை வெளியில் எடுத்து வைத்தாள்.
“நீங்க ஆறு மணிக்கு முன்னாடி கிளம்பணும்னு பிளான் பண்ணிட்டு இருந்தீங்க. அந்நேரம் பசங்க நல்லா தூங்குவாங்க. அப்போ அவங்களை எழுப்பி டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு நினைச்சேன்” என்று வானதி சொல்ல, “ம்ம்” என்று யோசனையானான்.
தாமரை, சந்திரசேகர் இருவரையும் இனி தங்களுடனே வைத்துக் கொள்ளும் முடிவிற்கு வந்திருந்தார்கள் இருவரும்.
அவர்களின் உடல்நிலை முதல் காரணம் என்றால், பிள்ளைகள் அவர்கள் இருக்கும் போது பெற்றோர் ஏன் தனியாக இருந்து தவிக்க வேண்டும் என்பது அந்த முடிவிற்கான காரணம்.
வானதிக்கு இனி வீட்டு வேலைகள் மட்டுமல்ல. பொறுப்புகளும் கூடும், பொறுமல்களும் கூடும். ஆனால், குடும்பம் என்று வந்து விட்டால் இதெல்லாம் வாடிக்கை எனத் தெரிந்த இளங்கோ, மனைவியை மட்டும் யோசிக்காமல், அம்மாவை பற்றியும் சிந்தித்து சில முன்னேற்பாடுகளை செய்தான்.
வீட்டு மேல் வேலைகளுக்கு நிரந்தரமாக ஒரு உதவியாளரை பணிக்கு அமர்த்த வானதியை வற்புறுத்தி செயல்படுத்தினான்.
வானதிக்கு கணவன், பிள்ளைகளுக்கு தான் செய்தால் தான் திருப்தி. வீடும் அவள் விருப்பப்படியே இருக்க வேண்டும். ஏதாவது ஒரு பொருள் எங்காவது இடம் மாறியிருந்தாலும் அவளுக்கு பிடிக்காது. அதே நேரம் பிள்ளைகளுடன் சேர்ந்து அவள் கலைத்து போட்டால் அதில் ஒரு பிரச்சினையுமில்லை அவளுக்கு.
கடந்த மூன்று நாட்களாக தான் உதவி செய்யும் பெண் வேலைக்கு வருகிறார். அவரது வேலையை பார்த்து தாமரை அவ்வப்போது முணுமுணுத்தாலும், வானதி எந்தக் குறையும் சொன்னதில்லை. ஆனால், அவளையும் அறியாமல் துறுதுறுக்கும் கைகளை அடக்கிக் கொண்டு தன் வேலையை மட்டும் பார்ப்பாள் அவள்.
சமையல் வேலையை மட்டும் தானே பார்த்துக் கொள்வதாக சொல்லி விட்டாள். இளங்கோவிற்கு பிடித்ததை சமைக்க அவளுக்கு பிடிக்கும். அவன் ரசித்து உண்பதை பார்க்கப் பிடிக்கும். அவனோடு பேசாமல் இருந்த நாட்களில் கூட அவனுக்கு பிடித்த உணவையே சமைத்து வைத்து உறங்கச் செல்வாள் அவள்.
“டோண்ட் ஸ்ட்ரெஸ் யுவர்செல்ஃப் வானதி. அவங்க சமையலும் சேர்த்து செய்யட்டுமே. அதுக்கும் சேர்த்து தானே பேசியிருக்கோம்” என்று இளங்கோவும் சொல்ல, “இல்ல. நானே பார்த்துக்கறேன். நீங்க காரமா சாப்பிடுவீங்க. நேத்ரனுக்கு பிடிச்சதை விட பிடிக்காத லிஸ்ட் பெருசா இருக்கு. பாப்பாவுக்கு காரமே இல்லாம வேணும். டெய்லி சாம்பார் கேட்பா அவ. நான் நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சுப்பேன். அதையே அவங்ககிட்ட எதிர்ப்பார்க்க முடியாது. இல்லங்க?” என்று கேட்டாள் வானதி.
அவன் குரலை தழைத்து, “ஏன் எதிர்பார்க்க முடியாது? அதுக்குத்தான் சம்பளம் பேசி வேலைக்கு வச்சிருக்கோம். அதெல்லாம் செய்வாங்க” என்றான்.
“இல்ல, எனக்கு நானே செஞ்சா தான் திருப்தி”
“என்னமோ பண்ணு போ” என்றான் கோபத்துடன்.
ஆனால், வானதிக்கு மூச்சு முட்டும் வீட்டு வேலைகள் இல்லாதது எளிதாக தான் இருந்தது. காலை நேரங்களில் பரபரக்காமல் அமைதியாய் பாட்டுக் கேட்டபடி நிதானமாக சமைத்தாள். பல வருடங்கள் கழித்து ருசியாய் அமைந்தது உணவு.
அடுத்ததாக பெற்றோர் பற்றி பேச்செடுத்தான் இளங்கோ. கணவனின் முடிவை காரணமின்றி என்றுமே எதிர்த்ததில்லை வானதி. ஆக, இப்போதும் அவள் தான் முதலில் சரியென்று சொன்னது.
“அப்போ நான் இந்த வீக்எண்ட் அவங்களை ஊருக்கு கூட்டிட்டு போய்ட்டு வர்றேன். அத்தை கொஞ்சம் திங்ஸ் ஊருல இருந்து எடுத்துட்டு வரணும்னு சொல்லிட்டு இருந்தாங்க” என்று வானதி சொல்ல,
“நீ வீட்ல இரு. நான் போய்ட்டு வர்றேன். வீட்டை ஒதுக்கி வாடகைக்கு விடலாம்னு அம்மா சொல்றாங்க.”
“அதெப்படி முடியும். வீடு முழுக்க பொருட்கள் இருக்கே. எல்லா ரூம்லயும் ஃபர்னிச்சர் இருக்கு. அதையெல்லாம் எப்படி ஒதுக்கி வைக்க முடியும்?” வானதி கேட்க, அதே யோசனை தான் இளங்கோவின் மனத்திலும் இருந்தது.
“அவ்ளோ பொருளோட வீட்டை சும்மா விட்டு பூட்டியும் போட முடியாது.”
“அத்த, மாமா அருள், மதி வீட்டுக்கு போனப்போ எல்லாம் பூட்டி தானேங்க கிடந்தது?”
“உனக்கு வேற.. எல்லாம் மறந்து தொலைக்கும். அப்போ பக்கத்தில பார்த்துக்க சொல்லி இருந்தாங்க. இப்பவும் சொல்லலாம் தான். ஆனா, ஒரு பெர்மணன்ட் சொலுயூசன் தேடுறது நல்லதுன்னு எனக்கு படுது”
மறுநாள் அதிகாலையில் பெற்றோரை செய்யாறு அழைத்து சென்று வீட்டை ஒதுங்க வைத்து விட்டு மாலையே சென்னை திரும்புவதாக திட்டமிருந்தான். அவன் ஊருக்கு செல்லும் போதே மனைவி, பிள்ளைகளை வானதியின் அம்மா வீட்டில் விடுவதாக அவன் சொல்ல, “நாங்க பொறுமையா தூங்கி எழுந்து அம்மா வீட்டுக்கு போறோம்” என்றாள் அவள்.
“ஓகே” என்றவன், குளிக்கச் சென்றான்.
“வானதி, இங்க வாம்மா. கொஞ்சம் மதிக்கு வீடியோ கால் பண்ணி கொடு” தாமரை கூடத்தில் இருந்து அழைக்க, அவரை கவனிக்கச் சென்றாள் வானதி.
“அங்க வீட்ல இருந்து என்னென்ன எடுத்துட்டு வரன்னு அவகிட்ட கேட்கலாம்னு நினைச்சேன். வேற ஒன்னுமில்ல” என்று அவர் சொல்ல, “ம்ம்” கொட்டியதோடு சரி, வேறெதுவும் சொல்லவுமில்லை, கேட்கவுமில்லை அவள்.
“என்னக்கா, வீடு எங்களுக்காம். மொட்டை மாடி உங்களுக்காம். நகை எல்லாம் அவங்க ஒரே மகளுக்காம், மருமகளுங்க நம்ம ரெண்டு பேருக்கும் நாமம் தானாம் இவர் சொல்றார். நிஜமாவா?” என்று இரண்டு நாட்களுக்கு முன் பேசும் போது நிகிதா அவளிடம் கேட்டிருக்க,
“நிஜமாவா?” என்று தானும் அதே கேள்வியை கேட்டாள் வானதி. “பாரேன். உனக்கு தெரியறது கூட எனக்குத் தெரியல” என்று அவள் சொல்ல, “என்னக்கா நீங்க ஒரே வீட்ல இருக்கீங்க. இன்னுமா அத்த உங்களோட ராசி ஆகல? என்கிட்ட பேசும் போது உளறிடுவாங்க தெரியுமா? அதான் இவரு என்னை தனியா பேச விட மாட்டேங்கறார்” என்று நிகிதா கடுப்புடன் சொல்ல,
“இந்த சொத்துப் பிரச்சினை, சொந்தக்காரன் பிரச்சினைக்கு நான் வரல நிகிதா. என்னை விட்டுடு பிளீஸ்” என்றாள் வானதி அலுப்புடன்.
“போங்க கா, சண்டைக்கு வாடான்னு கையை பிடிச்சு இழுத்தாலும் வர மாட்டேங்கறீங்க. அத்த பாவம். மதி அண்ணி அதை விட பாவம்” என்று சிரித்துக் கொண்டே அவள் சொல்ல, “வாயேன். நீயும், நானும் வேணும்னா சண்டை போடுவோம். ரெண்டு மருமகளும் அடிச்சுக்கிறது இவங்களுக்கும் எண்டர்டெயின்மெண்ட்டா இருக்கும் இல்ல? நம்ம சண்டையை பிரிச்சு விடுறோம்னு அண்ணா, தம்பி, தங்கச்சி களத்தில் ஒத்துமையா இறங்கினா நல்லாருக்கும் இல்ல?” என்று கிண்டலாக கேட்டாள் வானதி.
“சண்டையா? நீங்களா? அட போங்க கா. நடக்கிறதை பத்தி பேசுங்க. இளங்கோ மாமா, வானதி அப்படினு சொன்னா அமைதியாகிடுவீங்க. மாமாவும் உங்க முகத்தை பார்த்திட்டு நீங்க கண் காட்டினா தான் எதுவும் பேசுவார். அப்புறம்..” என்று அவள் நீட்டி முழக்கி கொண்டே போக, “நிகிதா..” என்று சத்தமாக அழைத்தாள் வானதி.
“ஆ, இதே டோன் தான் கா. ஆனா, இளங்கோ மாமா வாய்ஸ்ல கொஞ்சம் லவ்ஸ் ஜாஸ்தியா இருக்கும்”
“நீ ஓவரா பேசுற. நான் போனை வைக்கிறேன் போ”
“இப்போ ஒரு செல்ஃபி எடுத்து அனுப்புங்களேன் கா. எனக்கு இல்லைனாலும் இளங்கோ மாமாக்கு மறக்காம அனுப்புங்க”
“நிகிதா, கிண்டல் பண்ணது போதும்”
“ம்ம், நான் எங்க கா கிண்டல் பண்ணேன். உண்மையை சொன்னேன். நானும் உங்களைப் போல லவ் மேரேஜ் பண்ணியிருக்கலாம்” அதுவரை துள்ளலாக பேசிக் கொண்டிருந்த நிகிதா சற்றே சோர்ந்த குரலில் சொல்ல, “ம்ம். அத்தையை யோசிச்சிட்டு பேசு மா” என்று நக்கலாக சொன்னாள் வானதி.
“என்ன திடீர்னு டல்லா பேசுற? லவ் மேரேஜ் பண்ணா மட்டும் பிரச்சினை வராதா என்ன? கல்யாணங்கறது ஒரு பெரிய பொறுப்பு. அதோட சக்சஸுக்கு ரெண்டு பேரோட ஒத்துழைப்பும் தேவை நிகிதா. அருள் கூட ஏதாவது பிரச்சினையா? இவரை பேச சொல்லவா?” வானதி அக்கறையுடன் கேட்க,
“இங்க பாரு நிகிதா. சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி நம்மளை அடாப் பண்ணிக்கணும். இல்லனா சர்வைவ் பண்ண முடியாது. உன்னை கேட்காம கிரீன் கார்ட் அப்ளை பண்ணியிருக்க மாட்டார் அருள். அது கைக்கு வந்தப் பிறகு, கோவையும் வேணும், அமெரிக்காவும் வேணும்னு ரெண்டு பக்கமும் கால் வைக்காத”
“இல்லக்கா. நாங்க இங்க அல்மோஸ்ட் செட்டிலாகிட்டோம். இப்போ ஊர்ல இருக்க சொத்துக்கு இவர் தங்கச்சிகிட்ட அடிச்சுக்கிறதை பார்க்கும் போது தான் எனக்கு இப்படியெல்லாம் தோனுது. நாங்க இனிமே ஊருக்கு வந்தா அது வேகேஷன் போல தான். அதுக்கு எங்களுக்கு வீடு, இடம் எல்லாம் எதுக்கு?”
“நிகிதா..” என்று அழைத்து அவளின் பேச்சை நிறுத்தினாள் வானதி.
“பூர்வீக வீட்டை விக்கணுமான்னு இருக்குக்கா எனக்கு. அதுக்கும், இப்படி சென்டி மெண்டலா யோசிக்காத மெண்டல்னு திட்டுறார். இவங்க குடும்பத்துல நாம தெரியாம வந்து சிக்கிட்டோம்” என்று நிகிதா புலம்ப, சத்தமாக சிரித்தாள் வானதி.
“நீங்க தெரிஞ்சே தான் சிக்கினீங்க. உங்களோடது லவ் மேரேஜ் இல்லையா?” என்று முதலில் இருந்து அவள் தொடங்க,
“போதும், போதும். ஊருக்கு எப்ப வர்றீங்க?” என்று பேச்சை மாற்றினாள் வானதி.
“வரணும் கா. மாமாவை பார்க்க வராதது வருத்தமா இருக்கு. ஆனா, நினைச்ச உடனே கிளம்பி வர்ற தூரத்துலயா இருக்கோம் நாங்க?”
“ஏன்க்கா, உங்கப்பாவை நான் தான் பார்த்துக்கிட்டேன். எனக்கு பெரிய பங்கா பிரிங்கன்னு டிமாண்ட் பண்ணுங்கக்கா. இவங்க என்ன பண்ணுறாங்கன்னு பார்ப்போம்” என்று சவாலாக சொன்னாள் நிகிதா.
“நீ என்ன இப்படி இறங்கிட்ட நிகிதா?”
“பின்ன என்னக்கா கடுப்பேத்துறாங்க. மூனு வருஷத்துக்கு முன்னாடி எங்க வீட்ல சொத்து பிரிக்கும் போது எனக்கு பெருசா செய்யலைன்னு எங்கம்மாக்கு ஒரே ஃபீலிங் கா. இப்பவரை அதையே சொல்லி சொல்லி எங்க அன்ணனுங்களை திட்டி, புலம்பி உடம்பை கெடுத்துக்கறாங்க. நம்ம ஆளுங்களுக்கு பங்கு பிரிக்கணும்னு போது பாசம் எல்லாம் பறந்து போயிடுது” நிகிதா ராகம் இழுத்து பாவனையாக சொல்ல, சிரித்தாள் வானதி.
“விடு நிகிதா. நம்ம வீட்ல இன்னும் பாசம் பறக்காம தான் இருக்கு. சோ, பிரச்சினையாகாது.”
“சரிங்க, தங்கச்சி. போனை உங்க பொண்ணுக்கிட்ட கொடுங்க” என்று வானதி நக்கலாக சொல்ல, சிரித்துக் கொண்டே அலைபேசியை மகளிடம் கொடுத்தாள் நிகிதா. பத்து நிமிடங்கள் பிள்ளைகளுடன் பேசி அழைப்பை துண்டித்தாள் வானதி.
இப்போது, “நாங்க வேற வேலையா போறோம் மதி” என்று மாமியார் மகளுடன் பேசுவதை கேட்டபடியே வெளியே வந்தாள்.
அந்நேரம் நிகிதா தன்னைப் போலவே யோசிப்பது அவளுக்கு அத்தனை நிம்மதியாக இருந்தது.