காலை ஐந்து மணிக்கு எழுந்து தயாராகி, பெற்றோருடன் ஆறு மணிக்கு செய்யாறு புறப்பட்டு விட்டான் இளங்கோ.
வானதி எட்டு மணி போல பிள்ளைகளை கிளப்பி விட, அவர்களை அழைக்க மாதவன் வந்து விட்டான்.
“நானே வந்திருப்பேன் இல்லண்ணா?”
“உங்க வீட்டுக்கார் ஆர்டர். அவர் போன் பண்ணி சொல்லவும் தான் வந்தேன்.” நட்சத்திராவை தூக்கிக் கொண்டு சொன்னான் மாதவன்.
“ம்ம், அப்போ ஓகே” என்ற தங்கையை பார்த்து மாதவன் புன்னகைக்க, பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அண்ணனோடு அம்மா வீடு சென்றாள் அவள்.
“மாமா, நாம மூவி தானே போறோம்?” என்று நேத்ரன் கேட்க, “மூவியா போறோம்?” என்று பதில் கேள்வி கேட்டான் மாதவன்.
“ஓகே, மால்” என்றான் நேத்ரன்.
“எப்போ பாரு மால், மூவின்னுட்டு.. நாம இன்னைக்கு எங்கயேயும் போகல. வீட்ல தான்டா இருக்கோம்” என்று மாதவன் சொல்ல, அண்ணனை ஆராய்ச்சி பார்வை பாத்தாள் வானதி.
“வீட்லயா?” என்று முகத்தை சுளித்த நேத்ரன், அம்மாவை பார்த்ததும் அமைதியானான்.
அவர்கள் அம்மா வீடு சென்றதும், “வா, வானதி” என்று பெரிதான புன்னகையுடன் வரவேற்ற அர்ச்சனாவை கண்ணை சுருக்கி பார்த்தாள் வானதி.
“சாப்பிட்டீங்களா குட்டீஸ்? அத்தை உங்களுக்கு பொம்மை தோசை ஊத்தித் தரவா?” என்று அர்ச்சனா, நட்சத்திராவிடம் விசாரிக்க, “நா கரடி தோசை சாப்டேன்” என்று அத்தைக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் நட்சத்திரா.
“காஃபி தரவா வானு” என்று கேட்டபடி பாக்கியம் வர, அர்ச்சனாவை கண் காட்டினாள் வானதி.
“நீ, வா முதல்ல” என்று மகளை உள்ளே இழுத்துக் கொண்டு போனார் அவர்.
“என்னம்மா..”
“அதை ஏன் கேட்கிற, அவ எங்கேயோ போய் போதி மரத்துக்கு அடியில உட்கார்ந்துட்டு வந்திருப்பா போல. உங்கண்ணன் கூட ராசியாகிட்டா. அதிசயமா சிரிச்சு பேசுறா” என்று அதிசயம் போல அவர் சொல்ல,
“சும்மா மருமகளை குறை சொல்லாத மா. அதெப்படி மாமியாரானதும் இப்படி மாறிடுறீங்களோ தெரியல” அம்மாவை வம்பிழுக்கவென்றே வானதி சொல்ல,
“என் நேரம் உன் பேச்சை கேட்க வேண்டியதா இருக்கு” என்று மகளை பேசினார் பாக்கியம்.
“எனக்கு பேச சொல்லிக் கொடுத்தது நீ தானே மா?”
“நானில்ல, உங்கப்பா. அந்த மனுஷனை சொல்லணும்” என்று பாக்கியம் திரும்பி சுவரில் இருந்த கணவரின் புகைப்படத்தை பார்க்க, “எனக்கு காஃபி தாம்மா” என்று பேச்சை மாற்றி அம்மாவை சமையல் அறைக்குள் தள்ளிக் கொண்டு போனாள் வானதி.
“மாப்பிள்ளை வர ஈவ்னிங் ஆகிடுமா? இல்ல நாளைக்கு தான் வருவாங்களா?”
“நைட் வந்துடுவாங்க மா. எவ்வளவு லேட்டானாலும் வந்திடுவோம்னு சொல்லிட்டு தான் போனார். நாளைக்கு அவருக்கு ஆஃபீஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கறதா சொன்னார். அதுனால அங்க நைட் தங்க மாட்டாங்க”
“சரி, சரி. ஊருக்கு போய்ட்டு வந்தா திரும்பவும் உங்கத்தை சொத்து பிரிக்கிற பேச்சை ஆரம்பிச்சுடுவாங்க தானே?”
“ம்ம், அப்படித்தான் மா நினைக்கிறேன்”
“நானும் ஒரு வாரமா அதையே தான் யோசிச்சிட்டு இருக்கேன் வானு. அன்னைக்கு ஹாஸ்பிடல் போய்ட்டு வந்ததுல இருந்து இதுவே தான் மனசுல ஓடிட்டு இருக்கு. நானும் நல்லா இருக்கும் போதே வீடு, இடம், என் நகைன்னு எல்லாத்தையும் உனக்கும், மாதவனுக்கும் பிரிச்சு கொடுத்துட்டா, நாளைக்கு உங்களுக்குள்ள பிரச்சினை வராம இருக்கும் இல்ல?” என்று பாக்கியம் கேட்க, அவருக்கு காஃபி கலந்து கொண்டிருந்த வானதி கையில் இருந்த கோப்பையை மேடையில் வைத்து விட்டு அம்மாவை திரும்பிப் பார்த்தாள்.
“ஏன் முறைக்கிற?” பாக்கியம் கேட்க,
“ம்மா, பிளீஸ். என்னை ஆளை விட்டுடு மா. எங்க வீட்ல தான் இந்த பஞ்சாயத்துன்னு பார்த்தா, நம்ம வீட்லயுமா?” கடுப்புடன் பதில் சொன்னாள் வானதி.
“என்னை வேறென்ன பண்ண சொல்ற? இத்தனை நாள் அர்ச்சனா ஏதோ பணம் பணம்னு புலம்புறான்னு நினைச்சேன். உன்னைப் பார்த்து பொறாமை படுறான்னு கூட நினைச்சேன்.”
“என்னம்மா சொல்ல வர்ற?”
“வாயாடாத கழுத. நம்ம வீட்டுக்கு முன்னாடி என்ன போர்ட் இருக்கு? வானதி இல்லம். அதைப் பார்க்கும் போதெல்லாம் இந்த வீடு நம்மது இல்லன்னு அவளுக்குத் தோனும் இல்ல?”
“என் பேர் வச்சா, அது என் வீடாகிடுமா மா? அப்பா ஏதோ ஆசையா என் பேரை வச்சுருக்கார்”
“அந்த கதையெல்லாம் உங்க அண்ணிக்கும் தெரியும்.”
“அப்புறம் என்னம்மா?”
“நாம வீட்டை உங்கண்ணா பேருக்கு மாத்திட்டா, உங்கண்ணிக்கும் இது என் வீடுன்னு நிம்மதியா இருக்கும். நான் சொல்றது சரிதானே? வீட்டை அவங்களுக்கு கொடுத்திடவா? நீ மாப்பிள்ளை கிட்ட பேசிட்டு சொல்றியா?”
“சரிம்மா.ஆனா, எனக்கு என்ன தருவ?” சிரிப்பை கன்னச் சதை கடித்து அடக்கியபடி வானதி கேட்க, “நல்லா நாலு அடி கொடுப்பேன் கழுத” என்றார் பாக்கியம்.
“எல்லோருக்கும் வானதின்னா மட்டும் ஏமாளி” என்று அவள் பாவம் போல முகத்தை வைத்து சொல்ல, “அம்மா அப்படியெல்லாம் உன்னை விட மாட்டேன் வானு. இந்த வீட்டு மதிப்புல உனக்கு இடமும், நகையும் கொடுத்துடுறேன். சரியா? உங்கப்பா, அப்பவே தெளிவா எழுதி வச்சுருக்கார் வானு. இந்த வீடு உனக்கு கொடுக்கணும்னு அவர் விருப்பம். ஆனா, அவர் இருந்தா என் முடிவை புரிஞ்சுப்பார். கோபப்பட மாட்டார். ஆமா, தானே?” என்று மகளின் முகத்தை எதிர்பார்ப்புடன் பார்த்துக் கேட்டார் அவர்.
“கண்டிப்பா மா. நீ அண்ணா கிட்ட சொல்லு. அவன் சந்தோஷப்படுவான்.” என்றாள் வானதி புன்னகையுடன்.
“முதல்ல உங்கண்ணிகிட்ட சொல்லணும்.” என்ற பாக்கியம் மகள் நீட்டிய காஃபி கோப்பையை வாங்கிக் கொண்டார்.
“நீ எதுக்கும் மாப்பிள்ளைகிட்ட பேசிட்டு சொல்றியா?” என்று அவர் கேட்க, “உங்கம்மா, உங்கண்ணா முடிவெடுக்க வேண்டியதை என்கிட்ட ஏன் கேட்கிறேன்னு கேட்பார் அவர். இருந்தாலும், நான் அவர் கிட்ட சொல்றேன். நீ போய் அண்ணா கிட்ட பேசு மா” என்று வானதி சொல்ல, மகனிடம் பேச சென்றார் பாக்கியம்.
அன்று நாள் முழுக்க அவர்கள் வீட்டில் அந்தப் பேச்சு தான் ஓடியது. மாதவன் நேர்மையாக தங்கைக்கு சொத்தில் சரி பங்கு கொடுக்க விரும்பினான். எல்லாவற்றையும் முறையாக, சரி பார்த்து, மதிப்பிட்டு பங்கு பிரிக்க அவன் விரும்ப, பாக்கியம் மகிழ்ச்சியுடன் மகனுக்கு சம்மதம் சொன்னார்.
“நாங்க லேண்ட், ஸ்டாக்ஸ்ன்னு நிறைய இன்வெஸ்ட்மெண்ட் பண்ணியிருக்கோம் வானதி. ஆனா, சொந்தமா நமக்கு வீடு இல்லையேன்னு எனக்கு உறுத்திட்டே இருந்தது. இது மாமியார் வீடுன்னு மனசுல பதிஞ்சுடுச்சு.” அப்போது அங்கு வந்த பாக்கியம் மருமகளின் பேச்சை கேட்டு விட, “இனிமே இது உன் வீடு அர்ச்சனா.” என்றார் அழுத்தமாக.
“சாரி அத்த. நான் தப்பா எதுவும் சொல்லிட்டேனா?”
“அட இல்லம்மா. நீ வேற..” என்று மருமகளின் பக்கத்தில் அமர்ந்தார் அவர்.
அவர்களின் பேச்சைக் கேட்டபடியே கணவனுக்கு செய்தி அனுப்பினாள் வானதி.
மறுநாளில் இருந்து மீண்டும் அவளின் ஓட்டம் தொடங்கியது. வேலைக்கு நடுவில் வார இறுதி நாட்களில் பயிற்சி வகுப்புகளுக்கு செல்லத் தொடங்கினாள்.
அந்த மாத இறுதியில் பணியில் இருந்து முற்றிலுமாக அவளை விடுவித்து விட, அன்றிலிருந்து தினமும் வேலைக்கு பதிலாக காலை தொடங்கி மாலை வரை பயிற்சி வகுப்புகளுக்கு செல்லத் தொடங்கினாள்.
இப்பொழுது வீடு, பிள்ளைகள், கணவன், படிப்பு என மீண்டுமொரு வித்தியாசமான ஓட்டத்தை அவள் தொடர, அவளைப் பிடித்து நிறுத்தினான் இளங்கோ.
“நாளைக்கு கூர்க் போறோம். ஞாபகம் இருக்கு தானே வானதி?”
“எஸ் எஸ். எப்படி மறக்கும். நான் ஒரு வாரம் கிளாஸுக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டேன். முக்கியமான நோட்ஸ் வாட்ஸ்அப் பண்ண சொல்லியிருக்கேன். அப்புறம்..”
“ரிலாக்ஸ், நாம ஒரு ப்ரேக்குக்காக டிரிப் போறோம். அங்க வந்து படிப்பா? திரும்பி வந்து படிக்கலாம். இப்போ ஃப்ரீயா இரு” என்று அவன் சொல்ல, “ஓகே” என்று இரண்டு கைகளையும் காற்றில் வீசி, புன்னகைத்தாள் வானதி.
“நீ நாளைக்கு பசங்களோட ஏர்போர்ட் வந்திடு. எனக்கு ஆஃபீஸ்ல முக்கியமான வேலை இருக்கு. அதை முடிச்சுட்டு நான் நேரா அங்க வந்து உங்க கூட ஜாயின் பண்ணிக்கிறேன்.”
“அதெப்படிங்க, இப்படி கடைசி நேரத்துல குண்டு போடுறீங்க?” என்று கோபமாய் ஆரம்பித்த மனைவியை கெஞ்சி, கொஞ்சி சரிக் கட்டினான் இளங்கோ.
சென்னையில் இருந்து விமானம் பெங்களூரு நகரத்தை நோக்கி பறக்கத் தொடங்க, இளங்கோ பின்னால் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தான்.
பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு பொறுமையிழந்து இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான் அவன். அப்போது அவனுக்கு பக்கத்தில் வந்து நின்ற விமான பணிப்பெண், “காஃபி ஃபார் யூ சார்” என்று நீட்டினார்.
“நான் கேட்கலயே?” என்று அவன் புருவம் சுருக்கி புரியாமல் கேட்க, “இதுவும் உங்களுக்குதான் சார்” என்று ஒரு கடிதத்தை நீட்டினார் அவர்.
சட்டென பதிமூன்று வருடங்களுக்கு பின்னால் சென்றது அவன் மனது.