இளங்கோ தன் கையில் இருந்த கடிதத்தை பிரித்துப் பார்க்காமலேயே உள்ளே என்ன இருக்கும் என்று அவனால் அனுமானிக்க முடிந்தது.
பயணத்தில் இருந்ததால் பார்ப்பதற்கு எந்த வேலையும் இல்லாமல், அதனால் உண்டாகும் பதட்டமும் இல்லாமல் லகுவாய் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான் அவன்.
அவன் மனம் முழுவதையும் நிறைத்தாள் மனைவி. இருக்கையில் இருந்து எழுந்து நின்று அவளைப் பார்த்திட வேண்டும் என்ற உந்துதலை கடினப்பட்டு உள்ளே தள்ளி அமர்ந்திருந்தான். இடக் கரத்தில் இருந்த காஃபியை அதன் சுவை பிடிக்கா விட்டாலும் அருந்தியவனின் உதடுகள் குறுநகையில் பிரிய, மெல்ல கரம் உயர்த்தி தலைக் கோதி கொண்டான். இரு விரல் கொண்டு மீசை வருடியவனுக்கு, பதிமூன்று வயது குறைந்தது போன்ற பிரம்மை. அவன் மீசையை கள்ளப் பார்வை பார்த்து காதலாய் முத்தமிட்ட வானதி நினைவிற்கு வர, அன்று போல இன்றும் அவன் முகத்தில் மந்தகாசப் புன்னகை படர்ந்தது.
நினைவுகளுக்கு என்றே ஒரு தனி சுகம் இருக்க அதில் மூழ்கினான்.
இருபது நாட்களுக்கு முன்பு, இரவு பத்து மணிக்கு வீட்டிற்கு வந்து உணவை முடித்து விட்டு முக்கிய வேலையாக இருந்த இளங்கோவின் அலுவல் அறைக்குள் நுழைந்தாள் வானதி.
“வேலையா இருக்கீங்களா?” என்று அவள் கேட்க,
“ம்ம். ப்ரெண்ட் ஒரு ஹெல்ப் கேட்டான். ஒரு வாரமா செய்யணும்னு நினைச்சு இன்னைக்கு தான் உட்கார்ந்திருக்கேன். நீ தூங்கு, நான் வர லேட்ட்டாகும்” கணினியில் இருந்து பார்வையை திருப்பாமல் பதில் சொன்னான்.
வானதி அவனுக்கு நெருக்கமாக சென்று நின்று, “ஓகே” என்றாள்.
அவளை மெல்ல நிமிர்ந்து பார்த்து, “என்ன?” என்றான் புருவம் உயர்த்தி, அவள் நெருக்கமாக நிற்பதை சுட்டிக் காட்டி.
“நீங்க வேலையை பாருங்க.” என்று அவள் நகரப் போக, “ஏதோ சொல்ல வந்தியே, என்னனு சொல்லிட்டு போ” என்று அவளின் கைப் பிடித்து நிறுத்தினான்.
“சாரி, வானதி. நான் புக் பண்ண மறக்கல. ஆனா, புக் பண்ணிட்டேன்னு உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்” என்றவனை கிண்டலாக பார்த்து சிரித்தாள் வானதி.
“ஃபைவ் மினிட்ஸ் குடு, வந்துடுறேன்” என்றவன், ஐந்து நிமிடங்கள் கழித்து அவள் கையில் ஒரு காகித உறையை கொடுத்தான்.
அவளின் வாட்ஸ்அப், மெயில் என அனைத்திலும் விமான பயணச் சீட்டு, தங்கும் விடுதி முன் பதிவு நகல் என அனைத்தையும் அனுப்பி வைத்தான்.
“மாதவன்கிட்ட பேசி, தேதி கன்பார்ம் பண்ணிட்டு தான் புக் பண்ணேன். அப்போ ஹரிணிக்கும் ஸ்கூல் லீவ்னு சொன்னார். உங்க அண்ணிகிட்ட எதுவும் சொல்லலைன்னு சொன்னார். அவங்களுக்கு நீயே சர்ப்ரைஸா கொடுத்துடு” என்று அவன் சொல்லவும், உறையை பிரித்து பார்த்தவளின் கண்கள் மலர்ந்துப் போனது.
“தேங்க்யூ” என்றாள் மனதார. அவளை அசட்டையாக முறைத்து விட்டு தன் கவனத்தை வேலைக்குத் திருப்பினான் இளங்கோ. சட்டென குனிந்து அவன் கன்னத்தில் அழுத்தமாக இதழ் தடம் பதித்து விட்டுப் போனாள் வானதி. மென்நகையுடன் வேலையில் மூழ்கினான் இளங்கோ.
மறுநாள் மாலை, “ம்மா” என்று அழைத்துக் கொண்டே வீட்டினுள் நுழைந்தாள் வானதி.
பதிலுக்கு, “ம்மா” என்று கத்தி ஓடி வந்து அவளின் காலைக் கட்டிக் கொண்டாள் நட்சத்திரா. மகளை தூக்கிக் கொண்டு அம்மாவிடம் சென்றாள் வானதி.
“ம்மா, ம்மா, சித்திரேய், ஆனி, மாகளி..” என்று அண்ணன் சொல்லித் தந்ததை மறக்கும் முன் அம்மாவிடம் சொல்லி விடும் அவசரத்தில் வேகமாக நட்சத்திரா சொல்ல, மகளின் மழலையை ரசித்து சிரித்தாள் அவள்.
“செல்லக் குட்டிக்கு தமிழ் மாசம் எல்லாம் தெரியுமா?” அவள் கேட்கவும்,
“அண்ணா, சொன்னா” என்றாள் குழந்தை.
“உன்னை விட வாய் பேசுறா உன் பொண்ணு” என்றபடி வந்தார் பாக்கியம்.
“நானு வாய் பேசுறேனா? இப்படி ஊமையா இருக்காத, உன்னை ஏய்ச்சுட்டு போய்டுவாங்கன்னு நீ தானே மா எப்பவும் எனக்கு சொல்லுவ?” என்று அவள் சடைக்க, “அது தெரியாம சொல்லிட்டேன். இப்போ சொல்றது தான் உண்மை” என்ற அம்மாவை அவள் முறைக்க, சிரித்துக் கொண்டே, “வா, காஃபி போட்டுத் தர்றேன்” என்று தன் வழியில் மகளை சமாதானப்படுத்தினார் பாக்கியம்.
அம்மாவிற்கும் தனக்கும் காஃபி கலந்த வானதி, சமையல் அறை மேடையில் சாய்ந்து நின்றாள். சமையல் அறையை கண்களால் சுழற்றி, “நைட்டுக்கு சிக்கன் குழம்பும், சப்பாத்தியுமா ம்மா?” என்று அவள் கேட்க,
“ம்ம். மாவு பிசைஞ்சு ஊறட்டும்னு வச்சேன். குழம்பு வைக்கும் போது சப்பாத்தி போடணும்” என்று பாக்கியம் சொல்ல, கையை கழுவி விட்டு வேலையில் இறங்கினாள் வானதி.
“வானு நீயேன் இப்படி வேலையை இழுத்துக்கற, நான் பொறுமையா செஞ்சுக்க மாட்டேனா? வா, இப்படி” என்று மகளை பிடித்து அவர் இழுக்க,
“எப்பவும் நீ தானே மா எனக்கு செய்ற. இன்னைக்கு நான் உனக்கு செய்யறேன்” என்றவள், வேக வேகமாக தக்காளி, வெங்காயத்தை நறுக்கினாள்.
“இப்பத்தான் கிளாஸ்ல இருந்து வந்த, இனி வீட்டுக்கு ஒடனும். இதுல இந்த வேலையை நீ பார்த்தே ஆகணுமா?” என்று மகளை கோபித்து கடுமையாக பார்த்தாலும் அதில் பாசமும், அக்கறையுமே கொட்டிக் கிடந்தது.
“நான் என்ன டெய்லியா செய்யப் போறேன் மா? பிளீஸ். அமைதியா இரும்மா” என்றபடி, வேலையைத் தொடர்ந்தாள். அரை மணி நேரத்தில் சிக்கன் குழம்பும், சப்பாத்தியும் செய்து வைத்து விட்டு கையில் காஃபியுடன் நேத்ரன், ஹரிணியிடம் சென்று அமர்ந்தாள் வானதி. அவர்கள் இருவரும் பாடங்களில் சந்தேகங்கள் கேட்க, அதை விளக்கி புரிய வைத்தாள். அப்போது மாதவன், அர்ச்சனா இருவரும் வீடு வந்தார்கள்.
“வாம்மா, வானதி. எங்களை பாரு, கண்ணு வலிக்க கம்பியூட்டர் வேலை பார்த்திட்டு வீட்டுக்கு வர்றோம். நீ வீட்ல உட்கார்ந்து, பிள்ளைங்களுக்கு வீட்டுப் பாடம் சொல்லிக் கொடுத்துட்டு இருக்க” என்று அவளைப் பார்த்ததும் அர்ச்சனா கிண்டலாக சொல்ல, “அவளுக்கு பிடிச்சதை அவ செய்யுறா, உனக்கு பிடிச்சதை நீ செய்ற.” என்று மனைவியிடம் சொல்லி விட்டு உள்ளே போனான் மாதவன்.
“நாம எப்பவும் இப்படித்தான் பேசிப்போம்னு இவருக்கு தெரியாதா? என்னமோ புதுசா கேட்கிற மாதிரி கோபப்படுறார்?” என்று அர்ச்சனா சொல்ல, அந்நேரம்
“வானு, எனக்கும் காஃபி” என்று உள்ளிருந்து குரல் கொடுத்தான் மாதவன்.
“ஓகே ண்ணா” என்றாள் வானதி. பாக்கியம் மகளுக்கு கைக் காட்டி விட்டு தான் எழுந்துச் சென்று காஃபி கலந்து மகன், மருமகள் இருவருக்கும் கொடுத்தார்.
“இந்தாங்க அண்ணி” என்று வானதி காகித உறையை எடுத்து அர்ச்சனாவிடம் கொடுத்தாள். அதை வாங்கிப் பிரித்த அர்ச்சனாவின் கண்கள் அதிர்ச்சியில் பிரிந்து நிலைக் குத்தி நின்றது.
“என்ன வானதி, நான் கோவா, இல்லனா குலு மணாலி தானே கேட்டேன். நீ என்னன்னா..” என்று அவள் அதிர்ச்சி நீங்கா குரலில் கேட்க, “அவர் புக் பண்ணார் அண்ணி” என்றாள் வானதி.
மாதவனும் வெளியில் வந்தவன், மனைவி கையில் இருந்ததை வாங்கிப் பார்த்து, “ஓ, மாப்ள நம்ம பாஸ்போர்ட் டீட்டேயில் கேட்கும் போதே எனக்கு சந்தேகம் தான்” என்றான்.
“என்ன சந்தேகம்? சந்தோஷமா இல்லையா அதைச் சொல்லுண்ணா?” என்று வானதி கேட்க, தலையசைத்து புன்னகைத்தான் மாதவன்.
“ஹரிணி, நாம அடுத்த மாசம் ஸ்கூல் லீவ்ல மலேசியா போறோம். முதல்ல மலேசியா போய் அப்புறம் அங்கருந்து க்ரூஸ் ஷிப்ல க்ராபி, புக்கெட் ஐலன்ட் போறோம். முழுசா ஒரு வாரம் அங்க இருக்கப் போறோம்” என்று அர்ச்சனா மகளிடம் சொல்லி ஆர்ப்பரிக்க, “சூப்பர் மா” என்றவள், பொறுப்பாக திரும்பி, “தேங்க்ஸ் அத்த” என்று வானதியிடம் சொன்னாள். பாக்கியம் சிரிப்பை அடக்க, அர்ச்சனா மகளை சிரிப்புடன் முறைத்தாள்.
அர்ச்சனா, வானதியிடம் திரும்ப, “பிளீஸ், வேணாம்ண்ணி. இந்த பிளான் உங்களோடது. எங்களுக்கு இந்த ப்ரேக் ரொம்ப தேவைப்படுது. சோ, நான் தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்” என்று முந்திக் கொண்டு சொன்னாள் வானதி.
“ஆனாலும், இது ரொம்ப அதிகம்” என்று அர்ச்சனா புலம்ப, “ஆரம்பிச்சுட்டா..” என்றான் மாதவன்.
“அப்போ நான் வீட்டுக்கு கிளம்பறேன்” என்று வானதி எழுந்து கொள்ள, பிள்ளைகள் அவளை பின் தொடர்ந்தார்கள்.
இரண்டு நாட்கள் முன்னே மாதவன், அர்ச்சனா, ஹரிணி மூவரும் மலேசியா சென்று விட்டனர்.
வானதி மாமனார், மாமியாரை தங்களுடன் வரச் சொல்லி ஒரு மாதத்திற்கு முன்பே வலியுறுத்த, அவர்களோ மறுத்து விட்டார்கள்.
இளங்கோ பேசி பார்த்ததும் சம்மதிக்கவில்லை அவர்கள்.
“நீங்க குடும்பமா போய்ட்டு வாங்கப்பா” என்று சந்திரசேகர் மறுக்க, “எங்கம்மாவையும் கூப்பிடுறதா இருக்கோம் மாமா. அதுனால நீங்களும் வாங்க. அங்க டூரிஸ்ட் பிளேஸஸ் கூடவே நிறைய பழைய கோவில்லாம் இருக்கு. அத்தை போக ஆசைப்படுவாங்க. நீங்க தலைக் காவேரி கோவில் பார்த்தது இல்லைல்ல? அதுவும் அங்க தான் இருக்கு” என்று சொன்னாள் வானதி.
“நாங்க அந்த கோவில் எல்லாம் பார்த்தது இல்லை தான். ஆனா, இந்த முறை நீங்க போய்ட்டு வாங்கம்மா” என்று சந்திரசேகர் சோர்வுடன் சொல்ல, தாமரையின் முகத்தைப் பார்த்தாள் வானதி.
அப்போதைக்கு பெரியவர்களின் பேச்சைக் கேட்டு கொண்ட இருவரும், பின்னர் தங்களுக்குள் பேசி முடிவெடுத்து, அவர்களின் நெடுநாளைய ஆசையான காசி புனித யாத்திரைக்கு அவர்களை அனுப்பி வைத்தார்கள்.
இப்போது பாக்கியம் மட்டும் தனியாக இருக்க, வானதிக்கு அம்மாவை சமாளிப்பது எல்லாம் ஒரு விஷயமா என்ன? அவரை தங்களுடன் கூர்க் வர சம்மதிக்க செய்திருந்தாள்.
அம்மா, பிள்ளைகள் இருவருடன் வானதி விமான நிலையம் செல்ல, இளங்கோ நேராக அங்கு வந்து அவர்களுடன் இணைந்து கொள்வது தான் அவனின் திட்டம்.
“இது ரெண்டு மாசத்துக்கு முன்னாடி பிளான் பண்ண டிரிப். அப்பவே உங்க காலண்டர் கிளியர் பண்ண சொன்னேன் இல்ல? இன்னைக்கு வந்துட்டு முக்கியமான மீட்டிங் இருக்குன்னு சொல்றீங்க?” அன்று காலையிலேயே வானதி கோபிக்க, “நாலு நாள் நான் ஊர்ல இருக்க மாட்டேன்னா அதுக்கு எத்தனை ஏற்பாடு பண்ணனும்னு உனக்கு தெரியாதா?” என்று இளங்கோவும் பதிலுக்கு கோபப்பட, “ஆமா, எனக்குத் தெரியாதா என்ன? அப்படியே நாலு நாள் போன், லேப் டாப்பை எடுக்காம தான் இருக்கப் போறீங்க, பாருங்க” என்று அவள் உதடு சுளிக்கவும், அவளின் உதட்டை வலிக்காமல் சுண்டி விட்டு சென்றான் இளங்கோ.
உள்நாட்டு பயணம் என்றாலும் இரண்டரை மணி நேரங்களுக்கு முன்னரே விமான நிலையம் வந்து விட்டாள் வானதி. நேத்ரன், பாக்கியம் கைப் பிடித்து ஒவ்வொன்றையும் அவருக்கு விளக்கி உள்ளே அழைத்துச் செல்ல, பட்டாம் பூச்சியாய் பறந்த மகளின் பின்னே போனாள் வானதி.
அவர்கள் ஒரு மணி நேரத்தில் விமான பயணத்திற்கான நடைமுறைகள் அனைத்தையும் முடித்து காத்திருக்கும் பகுதிக்கு வந்து விட்டார்கள்.
“நான் வந்துட்டே இருக்கேன் வானதி. நீங்க எனக்காக வெயிட் பண்ண வேணாம். கேட்ல வெயிட் பண்ணுங்க, நான் வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்” என்று இளங்கோ குறுஞ்செய்தி அனுப்பவும், அவனுக்காக காத்திருக்காமல் வந்து விட்டாள் வானதி. பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுவிட்டு கால் நீட்டி அமர்ந்து அம்மாவிடம் கதைப் பேசிக் கொண்டிருந்தாள் வானதி.
“ஏன் வானு, நம்ம ஃப்ளைட்டுக்கு நேரமாகல? மாப்ளையை இன்னும் காணோம். அவருக்கு போன் போடு” என்று பாக்கியம் சொல்லவும் தான் நேரத்தை கவனித்து கணவனை அழைத்தாள்.
சரியாக இன்னும் ஒரு மணி நேரமே இருந்தது.
“வந்துட்டேன், மீனம்பாக்கம் கிட்ட வந்துட்டேன்” என்று இளங்கோ சொல்லவும், “என்னது? கிட்டவா?” என்று கத்தினாள் வானதி.
“டோமஸ்டிக் ஃப்ளைட் தானே வானதி? நான் போர்டிங் பாஸ் மட்டும் தானே வாங்கணும்? இருபது நிமிஷத்துல வந்துடுவேன்” என்றவன், பயணிகள் விமானத்திற்குள் ஏறத் தொடங்கும் போது தான் வந்து சேர்ந்தான்.
அவனைப் போல இன்னும் மூவர் தாமதமாகத் தான் வந்தார்கள்.
“இன்னும் பத்து நிமிஷம் டைம் இருக்கு வானதி. பதறாத, நான் கேட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன்” என்று அலைபேசியில் இளங்கோ சொல்லும் போதே கோபத்தில் அழைப்பை துண்டித்து விட்டாள் வானதி.
“அதான் வந்துட்டார் இல்ல. அப்புறம் ஏன் கோபப்படுற? அமைதியா இரு” என்று மகளை கடிந்தார் பாக்கியம்.
நட்சத்திரா வேறு, “அப்பா, அப்பா” என்று ராகம் பாடி அம்மாவின் கோபத்திற்கு தூபம் போட, சிரிப்புடன் பேத்தியின் வாயை மூடினார் பாக்கியம்.
விமானத்தின் பின் இருக்கைகள் காலியாக இருக்க, பணிப் பெண்ணிடம் கேட்டு அங்கு சென்று அமர்ந்து விட்டாள் வானதி.
இளங்கோ விமானத்திற்குள் நுழையவும், “அப்பா” என்று கத்தினாள் நட்சத்திரா. ஒட்டு மொத்த பயணிகளும் அவர்களை திரும்பி பார்க்க, இளங்கோவின் கண்கள் லேசர் துல்லியத்தில் மகளை தேடியது.
“சார், பிளீஸ். உட்காருங்க.” என்று பணிப்பெண் எரிச்சலை மறைத்த குரலில் சொல்ல, பட்டென்று அவனுக்குரிய இருக்கையில் அமர்ந்து விட்டான். அவனுக்கு பக்கத்து இருக்கை, பின் இருக்கைகள் நான்கும் காலியாக இருக்கவும், பின்னால் திரும்பி திரும்பி குடும்பத்தைத் தேடினான்.
வானதி வேண்டுமென்றே அவனுடன் கண்ணாமூச்சி ஆடினாள். ஐந்து நிமிடங்களில் விமானம் மெல்ல மெல்ல மேலேறியது. சில நிமிடங்களில் ஒரு நிலைக்கு வந்து சீராக பயணிக்க, அவனோ நிலைக் கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
இன்னமும், “சீட் பெல்ட்” எச்சரிக்கை ஒளிர்ந்து கொண்டிருக்க, இருக்கையில் இருந்து எழுந்து கொள்ளவும் அவனுக்கு தயக்கமாக இருந்தது. ஒரு கட்டத்தில் அவன் பொறுமையிழந்திட, அவனுக்காக காஃபியும், கடிதமும் வந்தது.
இளங்கோவின் கண்களில் இமைக்கும் நொடிக்குள் அதிர்ச்சியும், உதடுகளில் ரசனையான புன்னகையும் தோன்றியது.
அவன் கையில் இருந்த கடிதத்தை பிரித்துப் பார்த்தான். அதில் ஒன்றுமே எழுதி இருக்கவில்லை.
அந்த வெற்று காகிதம் அவன் மனம் முழுக்க நிறைந்திருந்த, மறைந்திருந்த காதல் காலங்களை அவனுக்கு நினைவூட்டியது.