இளங்கோ, வானதி இருவரும் அவர்களின் படிப்பு, பயிற்சியின் காரணமாக அடிக்கடி சந்திக்கும் சூழல் இருந்தாலும், கண்டதும் காதலில் விழுந்து விடவில்லை அவர்கள்.
பார்வை பரிமாறிக் கொள்ளவே பல மாதங்கள் ஆனது. அதன் பின்னரும் இளங்கோ தான் முதலில் பேசினான். ஒரே தாவலில் திருமணம் பற்றி அவன் பேசியிருக்க வானதி பதிலே சொல்லவில்லை.
ஒரு மாத காத்திருப்பிற்கு பின் இதே போல ஒரு அழகிய காகிதத்தில், “காஃபி?” என்று எழுதி அவனிடம் நீட்டினாள்.
காஃபி சந்திப்பில் காதலை பருகி, கல்யாணமும் செய்து கொண்டார்கள்.
“முதல்ல காஃபில இருந்து தான் ஆரம்பிக்கணும்னு கூடவா தெரியாது. எடுத்ததும் கல்யாணம் பத்தி பேசுறீங்க?” என்று எத்தனையோ முறை அவனை கிண்டல் செய்திருக்கிறாள் வானதி.
கல்யாணத்திற்கு முன்பே நிறைய பேசியிருக்கிறார்கள். இளங்கோ அப்போதே அவர்களின் எதிர்காலம் குறித்த நிறைய திட்டங்களை அவளிடம் பகிர்ந்திருக்கிறான். ஆனாலும், அவள் பெரிதும் எதிர்பார்த்த வார்த்தைகளை அவன் சொன்னதே கிடையாது.
அவர்களின் திருமண இரவிலும் இதையே தான் செய்தாள் வானதி.
“என்ன இந்த பேப்பர்ல ஒன்னும் எழுதல?” காகிதத்தை திருப்பி திருப்பிப் பார்த்து அவன் கேட்க, “நீங்க தான் ஃபில் பண்ணணும். எழுதுங்க” என்றாள் வானதி.
“என்னது? எழுதணுமா? ஒரு வருஷத்துக்கு மேல வெயிட் பண்ணி கல்யாணம் பண்ணிட்டு..”
அவனை முடிக்க விடாமல், இடுப்பில் கை வைத்து கோபத்தில் மார்பு ஏறியிறங்க வானதி நிற்க, இளங்கோவின் பார்வையே மாறிப் போனது.
ஊதாவில் வெள்ளி பூக்களும் கொடிகளும் படர்ந்திருந்த மென்பட்டு அவளின் உடலை சுற்றியிருக்க, புது மணப் பெண்ணுக்கே உரிய அத்தனை அலங்காரங்களுடன் இருந்த மனைவியை தலை முதல் கால் வரை நிதானமாக கண்களால் வலம் வந்தான் இளங்கோ. பின் கைகளாலும், சுவாசத்தாலும் சுற்றி வளைத்துக் கொண்டான்.
நள்ளிரவில் அவன் கைகளுக்குள் இருந்தவள், “உங்ககிட்ட நான் என்ன கேட்டேன்?” என்று கூச்சத்துடன் கேட்க, “அதைத் தான் இவ்வளவு நேரமும் சொன்னேன் மக்கு. உனக்கு புரியலைன்னா, இன்னொரு முறை சொல்லவா?” என்று அவன் கண் சிமிட்ட, அதிர்ச்சியில் பிரிந்த அவளின் இதழ்களை தன் இதழ்களால் சேர்த்தான் இளங்கோ.
நினைவுகள் அலையலையாக மேலேழும்பி வர அவனுக்கு குப்பென்று வியர்த்தது. அவனது இருக்கைக்கு மேலே இருந்த விமானத்தின் குளிர்சாதன பகுதியை தன்னை நோக்கித் திருப்பினான். உடலில் குளிர்ந்த காற்றுப் படவும் கொஞ்சம் லகுவாக உணர்ந்தவன், அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் எழுந்து பின்னால் சென்றான்.
இப்போது நட்சத்திரா உறங்கியிருக்க, நேத்ரன் அவனுக்கு கைக் காட்டி அழைத்தான்.
அவர்களை நெருங்கி, மனைவிக்கு பக்கத்து இருக்கையில் அவளை இடித்துக் கொண்டு அமர்ந்தான் இளங்கோ.
“ப்ச்” என்று வானதி சலிக்க, “ஃப்ளைட்டை மிஸ் பண்ண மாட்டேன்னு சொன்ன வார்த்தையை காப்பாத்தினேன் தானே?” என்று அவள் முகம் நோக்கி குனிந்து கேட்டான் இளங்கோ.
“ஜப்பான்ல இருந்து பேசும் போது டிரிப் கூட்டிட்டு போறேன்னு பெருசா பிராமிஸ் எல்லாம் பண்ணீங்க. அதையே காப்பத்தல. அதை சுத்தமா மறந்துட்டீங்க தானே?” என்று வானதி கேட்க, “தூக்கம் வருது வானதி” என்று அவளின் தோளில் தலை சாய்த்து கண் மூடியவனை முறைக்க மட்டுமே அவளால் முடிந்தது.
பெங்களூரை அடைந்ததும் நட்சத்திரா கண் விழித்து விட்டாள். அப்பாவின் கை பிடிப்பதும், அம்மாவிடம் வருவதும், எல்லோருக்கும் முன் ஓடுவதுமாக இருந்தாள் அவள்.
விமான நிலையத்தின் உள்ளே மரத்தினால் செய்யப்பட்ட இரண்டு யானைகள், இரு குட்டிகளுடன் இருக்க, “அப்பா, அப்பா” என்று பரவசத்துடன் ஆர்ப்பரித்த நட்சத்திராவிற்கு அக்கணம் யானை என சொல்ல வரவில்லை.
“எலிபாண்ட் பாப்பா” என்று நேத்ரன் சொல்ல, “அண்ணா, வா” என்று அவன் கைப் பிடித்து இழுத்தாள் நட்சத்திரா.
நேத்ரன் பக்கத்தில் சென்று யானைகளை தொட, ஆவென்று மிரண்டு போய் பார்த்தாள் குழந்தை.
“நீயும் போ குட்டி” என்று வானதி சொல்ல, “அது பொம்மை டா செல்லம்” என்று மகளை கையில் தூக்கி சொன்னான் இளங்கோ.
“பொம்மை ப்பா” என்று நட்சத்திரா சிரிக்க, “பயந்துட்டு பேச்சை பாரு. அவங்கம்மாவை போல” என்று பாக்கியம் சொல்ல, அம்மாவை ஓரக் கண்ணால் முறைத்து விட்டு தன் அலைபேசியில் பிள்ளைகளை யானைக்கு அருகில் நிற்க சொல்லி புகைப்படம் எடுத்தாள் வானதி.
“நாம போற இடத்தில எலிபாண்ட் கேம்ப் இருக்கு நேத்ரா. நிஜ யானை பார்ப்போம், வா” என்று மகனிடம் சொல்லிக் கொண்டே அவர்களை வெளியில் அழைத்துச் சென்றான் இளங்கோ.
அங்கேயே நிதானமாக இரவு உணவை முடித்துக் கொண்டார்கள். அவர்களுக்காக மாதவன் முன் பதிவு செய்திருந்த வாடகை கார் வரவும், அதில் கூர்க் சென்றார்கள்.
அவர்கள் முன்னரே வந்த இடம் தான் அது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் காஃபி, டீ எஸ்டேட்டுகள் பசுமையாய் கண்ணை குளிவிர்க்க, பார்வையை மறைத்த பனி படர்ந்த சூழல் மனதை இதமாக்கியது. எங்கும் நிறைந்திருந்த அமைதி அவர்களின் மனதிலும் எதிரொலித்தது.
படிப்பு படிப்பு என புத்தகங்களில் மூழ்கி கண்ணெரிச்சலால் அவதிப்பட்ட வானதிக்கு அங்கிருந்த குளிர்ச்சி இதமான மாற்றமாக இருந்தது. மனைவியின் அலைபேசியை எடுத்து தன்னிடம் பத்திரப்படுத்தினான் இளங்கோ.
“மெயில், வாட்ஸ்அப் நோட்ஸ் எதுவும் பார்க்கக் கூடாது நீ. எதுவும் இம்பார்ட்டென்ட்டான தகவல்னா உனக்கு நானே சொல்றேன்” என்று அவன் சொல்ல, “உங்க போனை பிடிங்கி வைக்க தான் ஆளில்ல” என்று முணுமுணுத்தாள் வானதி.
“தூங்கு” என்று அவன் அதட்ட, பயண அலுப்பில் கண் மூடியதும் உறங்கி விட்டாள் வானதி.
முதல் இரண்டு நாட்களும் எந்தவித அவசரமும் இன்றி வாடகை காரில் கூர்க்கை சுற்றி வந்தார்கள்.
காவேரியின் பிறப்பிடமான தலைக் காவேரிக்கு சென்று அதன் பிரம்மாண்டத்தை கண்டு பிரம்மித்தார்கள். அங்கிருந்த தலைக் காவேரி கோவிலுக்கும் சென்று வணங்கினார்கள்.
ஊரையே குளிர் போர்த்தியிருக்க, கம்பளி அணிந்து நீர் வீழ்ச்சிகள் காண சென்றார்கள்.
துபாரே யானைகள் முகாமிற்கு சென்றதும் பிள்ளைகளை கையில் பிடிக்க முடியவில்லை.
நட்சத்திரா அப்பாவின் கைப் பிடித்து நின்று யானைகளின் விளையாட்டுக்களை கண் இமைக்காமல் பார்த்து கேள்விகள் கேட்டாள்.
மூன்றாவது நாள் அதிகாலையில் கிளம்பி உடுப்பி சென்று வந்தார்கள். அம்மாவின் நெடுநாளைய ஆசையான உடுப்பி கிருஷ்ணன் கோவில் காண பாக்கியத்தை அழைத்துச் சென்றாள் வானதி.
அன்றைய நாளின் முடிவில் கூர்க் அறைக்கு திரும்பும் போது அவள் மனமே நிர்மலமாக இருந்தது.
இளங்கோவின் மொத்த கவனமும் குழந்தைகளின் மேலேயே இருந்தது. வானதி, அம்மாவின் கைப் பிடித்து ஹோட்டலை சுற்றியிருந்த தோட்டத்தை சுற்றி வந்தாள்.
பிள்ளைகளுடன் இளங்கோ அவ்விடம் வர, “நான் ரூமுக்கு போறேன் வானு. நீ நடந்துட்டு வா” என்று பேரனை மட்டும் அழைத்துக் கொண்டு பாக்கியம் அறைக்குத் திரும்பி சென்று விட்டார்.
இளங்கோவின் மேல் தோள்கள் உரச புன்னகையுடன் நடந்தாள் வானதி.
வாழ்க்கையை நாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது சூட்சுமம். நம் பார்வையின் கோணம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.
“நாம லைஃப் ஸ்டார்ட் பண்ணும் போது நிறைய பிளான் பண்ணோம். அதுல நிறைய நடக்காம போய் இருக்கு. நடந்தது நிறைய நமக்கு பிடிக்காம போய் இருக்கு. பட் இட்ஸ் ஓகே வானதி. வீ வில் ஃபேஸ் இட் டுகேதர். லைக் ஆல்வேஸ்” காஃபி செடிகளை ரசித்தபடி நடந்துக் கொண்டிருந்த இளங்கோ, நடையை நிறுத்தி வானதியை பார்த்து சொல்ல, பதிலேதும் சொல்லத் தோன்றாமல் புன்னகைத்தாள் வானதி.
அவர்கள் திட்டமிட்டபடி நான்கு நாட்கள் கழித்து சென்னை திரும்பினார்கள்.
மாதங்கள் விரைந்து செல்ல, வானதிக்கு தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு, அந்த நாளும் வந்து சேர்ந்தது.
இளங்கோவை அழைத்த அருள் செல்வன், “ஊருக்கு வரலாம்னு இருக்கேன் ண்ணா.” என்று சொன்னான். அவர்கள் வருவதாக சொன்ன தேதியில் இருந்து ஒரு வாரம் கழித்து வானதிக்கு இறுதித் தேர்வு தொடங்குவதாக இருந்தது.