காலை ஒன்பது மணிக்கே வீட்டில் புயல் அடித்து ஓய்ந்தது போல ஒரு அமைதி. சூரிய வெளிச்சம் சமையல் அறை வழியே கூடம் முழுவதும் நிழலாய் விழுந்திருந்த வீட்டை ஒளி நிறைத்து பிரகாசமாக்கியது.
அத்தை, மாமா இருவருக்கும் காலை உணவிற்கு பின்னான அரை கோப்பை காஃபியை கொடுத்து விட்டு உணவு மேஜையின் இருக்கையை இழுத்து அமர்ந்தாள் வானதி.
அன்று உதவி செய்யும் பெண்மணி தாமதமாக வருவதாக சொல்லியிருந்தார். வானதி சமையலை மட்டும் முடித்திருக்க, வீட்டு வேலைகள் அப்படியே கிடந்தது.
“நீயும் சாப்பிடு. படிக்கிறேன், படிக்கிறேன்னு சாப்பிடாம, தூங்காம உடம்பை கெடுத்துக்க போற” என்று தாமரை அதட்டலாக சொல்ல, “இந்தா சாப்பிட தான் போறேன்த்த” என்றவளின் பார்வை வீடு முழுக்க சுற்றி வந்தது.
உணவு மேஜையின் மேல் நட்சத்திராவின் பார்பி கை உடைந்து போய் கிடந்தாள். அவளுக்கு பக்கத்தில் அவள் சாப்பிடாமல் விட்ட இட்லி துண்டும் அம்போவென்று அமர்ந்திருந்தது. கூடம் முழுவதும் பிளாக்ஸ் இறைந்து கிடந்தது. அவர்களின் படுக்கை அறை கதவையொட்டி கடலை உருண்டை டப்பா பாதி திறந்த நிலையில் இருக்க, சமையல் அறை முன்பு நட்சத்திரா எப்போதும் கொறிக்கும் உலர் திராட்சை சிதறி கிடந்தது.
காலை நேர பரபரப்பில் வானதி எதையும் ஒதுங்க வைத்திருக்கவில்லை. இப்போது வீட்டை சுத்தம் செய்ய அவள் கை பரபரக்க, “எந்த வேலைனாலும் சாப்பிட்டுட்டு பாரு” என்று சத்தம் போட்டார் தாமரை.
இந்த சில மாதங்களில் அவரது உதவியில்லாமல் அவளால் எதுவும் சாத்தியப்பட்டிருக்காது. இத்தனை வருடங்கள் கழித்து ஒருவிதமாக மனதை தேற்றி மருமகளை ஏற்றுக் கொண்டார் தாமரை.
வானதிக்கு முன்பு வேலை என்றால் இப்போது படிப்பு. வேலையில் கூட வார விடுமுறைகள் கிடைக்கும். ஆனால், படிப்பு அப்படியல்ல. அவள் வசம் குறைந்த கால அவகாசமே இருக்க, இரவெல்லாம் கண் விழித்து படித்தாள் அவள்.
அவள் படிப்பதற்காக காத்திருந்து பொறுப்புகள் பின்னால் போய் விடாதே. இளங்கோ படிப்பு விஷயத்தில் மட்டுமல்லாது வீட்டு விஷயங்களிலும், பிள்ளைகளின் படிப்பிலும் அவளுக்கு மிகுந்த உதவியாக இருந்தான். அவள் படிக்கையில் அமைதியாய் உடன் அமர்ந்து அவன் வேலையை பார்ப்பான்.
நட்சத்திராவும் பள்ளிச் செல்ல தொடங்கி இருந்தாள்.
“ஒரு குழந்தையை வளர்க்க ஒரு கிராமமே தேவைப்படுகிறது” என்கிறது பழமொழி. வானதிக்கு அவளின் ஒட்டு மொத்த குடும்பமும் கைக் கொடுத்தது. தாமரையும், பாக்கியமும் பிள்ளைகளை பார்த்துக் கொள்ள அவளால் முழுதாக படிப்பில் கவனம் செலுத்த முடிந்தது. சமையல் அவளுக்கு தியானம் போல, அதை மட்டும் என்றுமே நிறுத்தவில்லை அவள்.
காலை உணவை முடித்து, வீட்டை ஒதுங்க வைத்து அவள் நிமிர அர்ச்சனாவிடம் இருந்து அழைப்பு வந்தது.
“சொல்லுங்க அண்ணி”
“பிஸியா இருக்கியா வானதி? வீட்ல தானே இருக்க?”
“வீட்ல தான் இருக்கேன்ண்ணி. பிஸி எல்லாம் இல்ல. இப்போ தான் சாப்பிட்டு வீட்டை ஒதுங்க வச்சேன். ம்ம், இனி படிக்க உட்காரணும். ஆனா, மூட் இல்ல” என்று அவள் சொல்ல,
“ஓகே. பட் இந்த மாசம் எக்ஸாம் வச்சுட்டு படிக்க மூட் இல்லைன்னு சொல்ற?” என்று கேட்டாள் அர்ச்சனா.
“ஐ நீட் அ ப்ரேக் அண்ணி” என்றவளின் குரலில் அப்பட்டமான சோர்விருக்க, “ஷாப்பிங் போகலாமா?” என்று ரகசியம் போல கேட்டாள் அர்ச்சனா.
“நான் ரெடி” என்று உற்சாக குரல் எழுப்பினாள் வானதி.
“ஓகே. அப்போ நீ கிளம்பி இரு. நான் வந்து உன்னை பிக் அப் பண்ணிக்கிறேன்” என்ற அர்ச்சனா சிறிது நேரத்தில் வானதியின் வீடு வர, பெரியவர்களிடம் சொல்லி விட்டு இருவரின் வீட்டிற்கும் இடையில் இருந்த வணிக வளாகத்திற்கு சென்றார்கள் அவர்கள்.
“நாலு நாளா நானும், அவரும் வெளில போகணும்னு பிளான் பண்ணிட்டு இருந்தோம். நேரமே கிடைக்கல. நல்லவேளையா இப்போ நீங்க கூட்டிட்டு வந்தீங்க அண்ணி. இல்லனா, நாங்க ரெண்டு பேரும் மறந்துட்டிருப்போம். அப்புறம் இவர்கிட்ட டூ விட்டிருப்பா ஹரிணி.” என்று வானதி பேசிக் கொண்டே நடக்க, மகளை நினைத்து சிரித்தாள் அர்ச்சனா.
“ஹரிணி பர்த்டேக்கு வாட்ச் கேட்டிருந்தா, டிசைன் எல்லாம் ஆன்லைன்ல பார்த்து வச்சுட்டோம். நேரா வந்து வாங்க தான் நேரம் கிடைக்கல” வானதி சொல்ல,
“அவ கேட்கிறதை எல்லாம் வாங்கிக் கொடுக்காத வானதி” என்றாள் அர்ச்சனா.
“அச்சோ. அவ தேவையில்லாத எதையும் கேட்டு அடம் பண்ணி வாங்குற குழந்தை இல்லையே அண்ணி.”
“ம்ம், இந்த பர்த்டேக்கு நீங்க தான் அவளுக்கு பேங்க்ல சேவிங்ஸ் அக்கவுண்ட் ஓபன் பண்ணித் தர்றீங்க இல்ல? அப்புறமும் எதுக்கு வேற கிஃப்ட் எல்லாம்?”
“பணத்தை சேமிக்கணும்னு நாங்க சொல்ல விரும்பினோம். அவ வாட்ச் கேட்கவும், இளங்கோ நேரத்தை சேமிக்கவும் சொல்லிக் கொடுக்கும் வாட்ச். சோ வாங்கிக் கொடுக்கலாம்னு சொன்னார். பணத்தை விட நேரம் விலை மதிப்பில்லாதது இல்லையா அண்ணி?”
“அத்தை சொல்ற மாதிரி உனக்கு பேசவா சொல்லித் தரணும்” என்று கிண்டலாக சிரித்தபடியே அர்ச்சனா சொல்ல, அவளை சிரிப்புடன் முறைத்து நடந்தாள் வானதி.
“நாங்க போன வாரமே உங்கண்ணா, அத்தை கூட வந்து அவளுக்கு புது ட்ரெஸ் எடுத்தாச்சு. அத்தை அவளுக்கு புது சைக்கிள் கூட வாங்கி கொடுத்துட்டாங்க.”
“ம்ம், போன்ல சொன்னீங்களே”
“ம்ம், நான் அவளுக்கு எதுவும் தனியா, ஸ்பெஷலா வாங்காத ஃபீல். ரொம்ப நாளா வெள்ளில பிரேஸ்லெட் கேட்டுட்டே இருந்தா. அதை வாங்கிட்டு, அப்படியே இன்னொரு செட் ட்ரெஸ் வாங்கிட்டு போவோம்னு பிளான் பண்ணேன். கூட நீயும் இருந்தா செலக்ட் பண்ண ஈஸியா இருக்கும்ன்னு உன்னை கூப்பிட்டேன்”
“ஓ, ஓகே. இதுக்காக ஆஃபீஸ் லீவ் போட்டுட்டீங்களா?”
“இல்ல, புது புராஜக்ட் மாறுறேன். சோ, ப்ரேக்” என்றாள் அர்ச்சனா.
டைட்டன் கடிகார கடையை நெருங்கியவர்கள் முதலில் உள்ளே சென்று, ஹரிணிக்கு தேர்ந்தெடுத்து வைத்திருந்த கைக் கடிகாரத்தை காண்பித்து அதை வாங்கினார்கள்.
வானதி கணவனுக்கு புகைப்படம் அனுப்பி அவன் சரியென்று சொல்லி குறுஞ்செய்தி வரவும், பணம் செலுத்தி விட்டு ஹரிணியின் கை அளவுக்கு ஏற்ப மாற்றித் தர வேண்டுகோள் விடுத்து வெளியில் வந்தார்கள். அடுத்த ஒரு மணி நேரம் நகைக் கடையில் கழிந்திருந்தது.
அர்ச்சனா மகளுக்கு கை சங்கலியுடன் கணவனுக்கு கழுத்து சங்கிலியும் வாங்கிக் கொண்டாள்.
அடுத்து உடை வாங்கச் சென்றார்கள். ஹரிணிக்கு மட்டும் வாங்கச் சென்று ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் உடைகள் எடுத்தார்கள் இருவரும்.
அர்ச்சனாவிற்கு அலைபேசி அழைப்பு வரவும் அதில் மூழ்கிப் போனாள்.
ஆண்கள் உடைப் பகுதியில் இளங்கோவிற்கு சட்டைகள் தேர்ந்தெடுத்து அவள் வர, எதிரே அர்ச்சனா முனகிக் கொண்டே நடந்து வந்தாள்.
“பில் போட்டுடலாமா?” அர்ச்சனா கேட்க, “இருங்க அண்ணி. இவருக்கு வீட்ல கட்ட வேட்டி எடுத்துட்டு வர்றேன்” என்று நகர்ந்தாள் வானதி.
“எங்கம்மாக்கு, என் பொண்ணுக்கு, அவங்க பேத்திக்கு செய்ய உரிமையில்லையா? என் தம்பி பொண்டாட்டி அந்த பேச்சு பேசியிருக்கா” என்று அர்ச்சனா புலம்பிக் கொண்டே வர, வானதியின் கவனம் முழுவதும் அவளின் அலைபேசி திரையில் இருந்தது.
“போனை பார்த்துட்டே நடக்காத” என்று அவளை கண்டித்த அர்ச்சனா, “பேத்தி பிறந்த நாள்னு அவங்க ஆசையா வாங்கி கொடுத்தா அதுக்கு கூட பேசுறா” என்று விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தாள்.
வானதி பாதி கவனத்துடன், “ஏன் பேசினாங்க?” என்று கேட்க, “ஏன் பேசினான்னு என்னைக் கேட்டா? நான் வேணா அவகிட்ட போய் கேட்டு வந்து சொல்லவா?” என்று எரிந்து விழுந்தாள்.
“என் பேத்திக்கு அதுக்குள்ள பதினொரு வயசாகிடுச்சா, இனிமே அவளுக்கு நகை சேர்க்கணும்னு சொல்லி அவ பர்த்டேக்கு எங்கம்மா மூனு பவுன்ல சின்ன ஆரம் வாங்கி கொடுத்தாங்க. அதுக்கு எப்பவும் உங்க மகளுக்கும், பேத்திக்கும் மட்டும் செய்ங்க. இவர் எல்லாம் நீங்க பெத்த புள்ளை இல்லையா? எங்க புள்ளைங்க உங்க பேரன் பேத்தி இல்லையான்னு, என் தம்பி பொண்டாட்டி சத்தம் போட்டுருக்கா”
“ஓ..”
“என்ன ஓ? என் தம்பிக்கு கோவிட் டைம்ல வேலை இல்லாம போனதில் இருந்து அம்மா, அப்பா தான் எல்லாம் பார்த்துக்கறாங்க. வேலைக்கு போகாம பிஸினஸ் பண்ண போறேன், காசு கொடுங்கன்னு அவங்ககிட்ட கேட்டுட்டு இருக்கான். உங்கண்ணா கூட ஹெல்ப் பண்ணார். ஆனா, அது எதுவுமே ஞாபகம் இல்லாம எப்படி பேசுறா பார்”
“ம்ம்”
“கதையா சொல்றேன் நான். ம்ம் கொட்டிட்டு இருக்க?” அர்ச்சனா கோபமாக கேட்க, அப்போதும் வானதியின் கண்கள் அலைபேசி திரையில் தான் இருந்தது.
“சாரிண்ணி. அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?”
“நான் என்ன சொல்லுவேன். ஒன்னும் சொல்லல. முன்னாடி எங்க அண்ணி தான் இப்படி பேசுவாங்க. இப்போ தம்பி பொண்டாட்டி கிளம்பிட்டா. எனக்கு பொண்ணு பொறந்துட்டா, நான் அந்த வீட்டு பொண்ணு இல்லைனு ஆகிடுமா?”
“ம்ம்”
“உங்க கூடவே இருந்து உங்களைப் பார்த்துக்கறது நாங்க. ஆனா, நீங்க செய்யுறது மகளுக்கு. அர்ச்சனா அண்ணி என்ன கஷ்டமா படுறாங்க. அவங்க வீட்டுக்காரர் ஒரே பையன், மாமியாரும் ரொம்ப நல்ல மாதிரி. பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்பத்துல நல்லா வசதியா தானே இருக்காங்க.” அந்த புகார் பட்டியல் நிற்காமல் நீண்டுக் கொண்டே போக,
“ஓ, சண்டையில் நாங்க எல்லாம் வர்றோமா? ஏன் அண்ணி, அம்மாவை விடுங்க. உங்களுக்கு நாத்தனார், அதான் என் தொல்லை இருக்குன்னு சொல்ல வேண்டியது தானே?”
ஒரு நொடி யோசித்து, “ஆமா, அதை நான் சொல்லி இருக்கலாம் இல்ல? அடுத்து முறைக்கு வச்சுக்கறேன் அந்த பாயிண்ட்” என்று அர்ச்சனா சொல்ல, வானதியின் முகம் சுருங்கவும் சிரித்து விட்டாள் அர்ச்சனா.
“ஹேய் அவளுக்கு நம்ம குடும்பத்தை பத்தி தெரியும் வானதி. இங்க வர போக இருக்கும் போது பார்த்திருக்கா தானே?”
“இப்போ அத்தை என்ன சொல்றாங்க?”
“உங்களுக்கு இனிமே நீங்க தான் சம்பாரிச்சு சேர்த்து வைக்கணும். எங்க ஆயுசு முழுக்க உங்களுக்கு செய்வோம்னு எதிர்பார்க்காதீங்கன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க. எனக்கும் சேர்த்து தான் சொன்னாங்க”
“ம்ம்”
“நீங்கல்லாம், அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா? அவ
ஆத்துக்காரர் கொஞ்சுறத்தக் கேட்டேளான்னு இருந்தீங்கன்னா எந்த காலத்துலயும் உருப்பட மாட்டீங்கன்னு எங்கம்மா ஒரே திட்டு.” அர்ச்சனா கையை வீசி சொல்ல, அவள் சொன்னதை காதில் வாங்கிய வானதிக்கு அது மூளைக்கு சென்றடையா வண்ணம் அலைபேசியில் மூழ்கி இருந்தாள் அவள்.
“அர்ச்சனாக்கு என்ன குறை, அவ லவ் மேரேஜ் பண்ணி கூட அவ மாமியார் வீட்ல அப்படி நல்லா பார்த்துக்கறாங்க அவளைன்னு முன்னாடி எங்கண்ணி அடிக்கடி சொல்லுவாங்க. இப்போ தம்பி பொண்டாட்டி அதை பிடிச்சுக்கிட்டா. இங்க நாங்க சண்டை போட்டு சட்டை கிழிச்சுக்கறது, எங்களுக்கு தானே தெரியும்” என்று கடுப்புடன் சொன்னவள், தான் சொன்ன உதாரணத்திற்கு தானே சிரித்துக் கொண்டாள்.
அதே எதிர்வினை வானதியிடம் இல்லாமல் போக, அவளைத் திரும்பி பார்த்து, “சரி, இப்போ சொல்லு. நான் இவ்வளவு நேரம் என்ன சொன்னேன்?” என்று கேட்க,
ஒருநொடி முழித்த வானதி, “உங்களை அத்தை திட்டினாங்க” என்று சொல்ல, “அது மட்டும் தான் கேட்டுச்சா உனக்கு?” என்று அலுத்தபடி முன்னே நடந்தாள் அர்ச்சனா.
திடிரென்று, “என்ன பிரச்சினை?” என்று வானதியின் வழியை மறித்து அர்ச்சனா கேட்க, “பிரச்சினை எல்லாம் இல்லண்ணி. இவங்க தம்பி, தங்கச்சி ஊருக்கு வர்றாங்க. நம்ம பக்கத்து அபார்ட்மெண்ட் பத்மா மாமி இல்ல? அவங்களோட இன்னொரு அபார்ட்மெண்ட் நம்ம பில்டிங்கில் இருக்கு. அதை சர்வீஸ் அபார்ட்மெண்ட்டா வாடகைக்கு கொடுக்குறாங்க இல்ல? அதை இருபது நாளுக்கு பேச சொல்றாங்க அத்தை. அவங்க தம்பி, தங்கச்சி ஃபேமிலி கம்பர்ட் யோசிச்சு இவரும் புக் பண்ணலாம்னு சொல்றார். அதைப் பத்தி தான் மெஸேஜ் பண்ணிட்டு இருந்தோம்.”
“ஓகே. முன்னல்லாம் வீட்ல எல்லோரும் கூடினா வரிசையா ஹால்ல படுத்து கதை பேசுவோம். அதுவொரு காலம்” என்று பெருமூச்சுடன் சொன்ன அர்ச்சனா, “மதி ஃபேமிலி வர்றாங்க இல்ல? அவங்களை நல்லா பார்த்துக்கோ நீ” என்று சொல்ல, அவளை கேள்வியாக பார்த்தாள் வானதி.
“நான் முன்னாடியே சொன்னேன் இல்ல? நாங்க மலேசியா போனப்போ, அவங்க அப்படி பார்த்துக்கிட்டாங்க. உன்கிட்ட சொன்னேனே, எங்களுக்காக விடிய காலைல ஏர்போர்ட் வந்ததில் இருந்து லாஸ்ட் ரெண்டு நாள் எங்களை அவங்க வீட்ல தங்க வச்சு ஊரெல்லாம் சுத்தி காட்டி, எனக்கு ஷாப்பிங் கூட்டிட்டு போய்னு நல்லா பார்த்துக்கிட்டாங்க. அதுனால, அவங்ககிட்ட சண்டை போடாம சொத்து பிரிச்சுக்கோ, சரியா?” என்றாள் தீவிரமாக.
“அண்ணி” என்று வானதி சிரிக்க, “நாங்க திரும்ப ஊருக்கு வரும் போதும் சாக்லேட், பெர்ஃப்யூம், அவ்வளவு ஏன் நான் அங்க விரும்பி சாப்பிட்ட சம்பல் எல்லாம் கொடுத்து விட்டாங்க தெரியுமா?” என்று அடுக்கிக் கொண்டே போனாள் அர்ச்சனா.
“இத்தனைக்கும் எங்களோட அவ்வளவா பேசி பழகினது கூட இல்ல. எங்களுக்காக காலையில் வந்து நின்னது, சத்தியமா நான் எதிர்பார்க்கல.”
“இவர் ஊருக்கு போய்ட்டு வந்தா அண்ணா கூட தான் ஏர்போர்ட் போறான்”
“அது ரெண்டு ஃப்ளைட் மாறி 19, 20 மணி நேரத்துக்கு மேல டிராவல் பண்ணி வர்றவரை உங்கண்ணா ரிசீவ் பண்ண போறதும், அஞ்சாறு மணி நேரம் நாங்க பண்ண ஃப்ளைட் டிராவலும் ஒன்னா?”
“அதில்ல, அவங்க இருக்க நாட்டுக்கு போய் இருக்கீங்க. மதி அண்ணி அவங்க அண்ணாக்காக செஞ்சுருக்கலாம் இல்ல? இவர் தங்கைகிட்ட சொல்லியிருக்கார்னா, அவங்க உங்களை பார்த்துப்பாங்கன்னு தானே? இல்லைனாலும் அவங்க செய்வாங்க அண்ணி. நாங்க என்ன எப்பவுமே முட்டிக்கிட்டு மோதிக்கிட்டேவா இருக்கோம்? ஒரு நேரம் முறைச்சா, இன்னொரு நேரம் சிரிச்சுப்போம்”
“ரைட்டு, நம்மளை போல” என்று அர்ச்சனா சொல்லவும் சிரித்தாள் வானதி.
இருவரும் பேசிக் கொண்டே தேவையான பொருட்களை வாங்கி முடித்திருந்தார்கள். வானதி மறக்காமல் சென்று ஹரிணிக்கான கடிகாரத்தை வாங்கிக் கொண்டாள்.
“சரியா உன்னோட எக்ஸாம் டைம் வர்றதா தம்பி சொல்றான்.” என்று முன் தினம் கணவன் சொன்னது அவள் காதில் எதிரொலித்தது.
“அவங்க தம்பி தான் டிக்கெட் புக் பண்ண போறதா சொல்லியிருக்கார் போல. மதி அண்ணி இன்னும் ஊருக்கு வர்றது பத்தி கன்பார்மா சொல்லலன்னு இவர் சொன்னார்” என்றாள் வானதி.
“ஓகே, ஓகே. எப்போ வர்றாங்கன்னு சொல்லு. அவங்க வந்ததும் ஒரு நாள் நம்ம வீட்டுக்கு லஞ்ச்சுக்கு கூப்பிடணும்”
“ம்ம், சொல்றேன் அண்ணி. உங்ககிட்ட நம்பர் இருக்கும் இல்ல? நீங்களே பேசுங்க. சந்தோஷப்படுவாங்க”
“அதுவும் நல்ல ஐடியா தான். ஊருக்கு வந்ததும் தேங்க்ஸ் சொன்னதோட பேசவேயில்ல. இன்னைக்கு நைட் வாட்ஸ்அப்ல் மெஸேஜ் பண்றேன். எப்படி, உன் நாத்தனார் நாங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ் ஆகப் போறோம் பாரு” என்று அர்ச்சனா கிண்டலாக சொல்ல, சிரித்தபடியே வெளியே வந்தார்கள்.
வானதியை வீட்டில் விட்டுவிட்டு தன் வீடு சென்றாள் அர்ச்சனா.
நான்கு நாட்கள் கழித்து ஹரிணியின் பிறந்தநாளை வீட்டிலேயே இரவு விருந்துடன் கொண்டாடினார்கள் அவர்கள். அப்போது ஹரிணிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல அழைத்த மதியழகி, “இங்க பசங்க ஸ்கூல் லீவ் விடும் போது தான் என்னால ஊருக்கு வர முடியும் ண்ணா.” என்று இளங்கோவிடம் சொன்னாள்.
அவள் குறிப்பிட்ட தேதி வானதிக்கு தேர்வு முடிந்து மூன்று வாரங்கள் தள்ளியே இருந்தது.
அதை தம்பியிடம் அவன் குறிப்பிட, “ஓ, நான் இன்னும் டிக்கெட் புக் பண்ணல ண்ணா. அப்போ அந்த வாரமே நானும் வரப் பார்க்கறேன். எல்லோரும் ஒன்னா இருந்தா மாதிரி இருக்கும்” என்றான் அருள் செல்வன்.
“ம்ம், சரி. டிக்கெட் புக் பண்ணிட்டு எனக்கு ஒரு காப்பி அனுப்பு” என்று சொன்ன இளங்கோ, தம்பியிடம் பொதுவான விஷயங்கள் பேசி வைத்தான்.