அடுத்து வந்த நாள்கள் மிக தீவிரமாக தேர்வுக்காக படித்தாள் வானதி. தோல்வி என்ற எண்ணத்தையே தொலைவில் எறிந்திருந்தாள் அவள்.
அவளின் தேர்வு நாளும் வந்தது. அம்மா, மாமனார், மாமியார் என்று பெரியவர்கள் ஆசீர்வதிக்க, “ஆல் த பெஸ்ட் அம்மா” என்று நேத்ரன் வாழ்த்தினான். அண்ணனைப் பார்த்து, “ஆ பெஸ்ட் மா” என்று நட்சத்திராவும் வாழ்த்த, அகமும், முகமும் மலர மகளை அணைத்து முத்தமிட்டாள் அவள்.
“எக்ஸாம் முடிச்சுட்டு வந்து என் டாக்ஸ் பைலிங் பார்க்குற, ஓகே?” என்று அர்ச்சனா சொல்ல, மாதவன் ஒன்றுமே சொல்லாமல் புன்னகையுடன் நின்றான். அவளுக்கு அதுவே நிறைவாக இருந்தது.
இளங்கோ ஒன்றுமே சொல்லவில்லை. அன்று அதிகாலையிலேயே, “ரிலாக்ஸாக எழுது. பதட்டமானீன்னா கேள்வியே புரியாது. புரிஞ்சுதா?” என்று சொல்லி அழுத்தமாய் அணைத்துக் கொண்டான். வானதி கணவனின் அணைப்பில் தளர்ந்து நிற்க, அவனது இதயத் துடிப்பில் வேகம் கூடியிருந்ததை அவளால் துல்லியமாக கேட்டு உணர முடிந்தது.
இளங்கோ அன்றைக்கு தன் வேலைகளை எல்லாம் ஒதுக்கி விட்டு மனைவியோடு தேர்வு நடத்தும் இடத்திற்கு சென்றான். காரில் இருந்து இறங்கி, அவனோடு பேசி விட்டு, கையசைத்து வளாகத்தினுள் சென்றாள் வானதி.
இரண்டே நிமிடங்களில் அவள் முன்னே வேகமாக ஓடி வந்து நின்றான் இளங்கோ.
“என்னங்க?”
“இதை கொடுக்க மறந்துட்டேன் வானதி.” என்று அவன் நீட்டியதை புன்னகையுடன் விழிகள் வியப்பில் விரிய பார்த்தாள் வானதி.
இளங்கோ இறுதி தேர்வு எழுதும் போது வானதி பரிசளித்த பார்க்கர் பேனா அது. சற்றே நிறம் மங்கியிருந்தாலும் நன்றாகவே எழுதும் என்று அவளுக்குத் தெரியும்.
“தேங்க்யூ” அவள் குரலில் இருந்த உணர்ச்சி அவனை சரியாக சென்றடைந்தது. மெல்ல கண்களை மூடித் திறந்து, “நல்லா எழுது” என்றான். அவன் விரல் பிடித்து அந்தப் பேனாவை வாங்கிக் கொண்டாள் வானதி.
எல்லா தேர்வுகளையும் முழு முயற்சியுடன் படித்து மிக நன்றாகவே எழுதினாள்.
அவளுக்கு தேர்வுகள் முடிந்த இரவு, “எனக்கு எக்ஸாம் முடிஞ்சுடுச்சே” என்று அவள் கத்த, அவளோடு சேர்ந்து பிள்ளைகளும் ஆர்ப்பரித்தார்கள்.
“நல்லா எழுதியிருக்க இல்லம்மா?” என்று சந்திரசேகர் திரும்பவும் கேட்க, “ரொம்ப நல்லா எழுதியிருக்கேன் மாமா” என்றாள்.
“அதான் ஸ்வீட் பண்றேன்”
“சரிம்மா” என்றார் அவர். இரவு உணவுடன் பெரியவர்களும் சாப்பிடும் விதமாக இனிப்பு குறைவாக சேர்த்து பால் பாயசம் செய்தாள்.
“போதும், போய் படு. இத்தனை நாள் தூங்காம படிச்சுட்டு இப்பவும் அடுப்படியில் நின்னுட்டு இருக்க” என்று அவளை அதட்டினார் தாமரை.
அன்றைய இரவு அடித்து போட்டது போல அப்படியொரு உறக்கம் உறங்கினாள் வானதி.
மறுநாள் அலுவலகம் செல்லும் வரை இளங்கோ அவளை எழுப்பவே இல்லை.
மாலை அவன் விரைவாக வீடு வந்திட, பிள்ளைகளுடன் கால் நீட்டி பால்கனியில் அமர்ந்திருந்தாள் வானதி.
நேத்ரன் பள்ளியில் நடந்ததை சுவாரசியமாக விவரிக்க, அதைக் கேட்டு சிரித்துக் கொண்டிருந்தாள். அம்மாவின் சிரிப்பை பார்த்து தானும் சத்தமாக சிரித்தாள் நட்சத்திரா.
மாலை வெயிலில் வசீகரித்த தனக்கு மிகவும் நெருக்கமான, பிடித்தமான புன்னகை முகங்களை காண்கையில் அவன் கண்கள் குளிர, இதயத்தில் வெம்மையாய் ஓர் உணர்வு பரவியது. தன் கையில் இருந்த பையை ஓரமாக வைத்து விட்டு, சத்தமில்லாமல் சென்று மனைவியின் பக்கத்தில் அமர்ந்தான் அவன்.
“அப்பா” என்று மகள் அவன் மீது பாய, ஒரு கையால் மகளை அணைத்து பிடித்து, மனைவியின் கையில் இருந்த காஃபி கோப்பையை கைப் பற்றினான்.
மெல்ல மெல்ல காஃபியை ரசித்து அருந்தியவன், கண்களால் மனைவியையும் சேர்த்தே பருகினான்.
“என்ன சீக்கிரம் வந்துட்டீங்க?”
“ம்ம், உன் கூட இப்படி உட்காரத் தான்” என்றவனை புன்னகையுடன் கோபமாக பார்த்தாள் வானதி.
“ரிசல்ட் வர்ற வரைக்கும் என்ன பண்ணலாம்னு இருக்க வானு?” பாக்கியம் கேட்க, “ரிசல்ட் வந்த பின்னாடி என்ன பண்ணலாம்னு யோசிக்க போறேன் மா” என்றாள் வானதி.
அத்தனை வருடங்கள் இருந்த பரபரப்பு விலகி, அமைதியாய், நிதானமாய் நாட்களை கடத்தினாள்.
மூன்று வாரங்கள் கழித்து அருள்செல்வன், மதியழகி இருவரும் குடும்பத்தோடு வீடு வந்தார்கள்.
சந்திரசேகர், தாமரை இருவரும் நெடுநாட்கள் கழித்து பிள்ளைகளை பார்க்கவும், அகமகிழ்ந்து போனார்கள்.
சட்டென அவர்கள் வீடு திருவிழா கோலம் பூண்டிருந்தது. வீட்டில் எப்போதும் பேச்சும், சிரிப்பு சத்தமுமாக இருந்தது.
இளங்கோ அலுவலகமும், நேத்ரன், நட்சத்திரா பள்ளி சென்றாலும், பிள்ளைகள் மாலை வந்ததும், அருள் மற்றும் மதி இருவரின் இரண்டு பிள்ளைகளுடன் இணைந்து விளையாடினார்கள்.
அவர்கள் இருவருக்கும் இவர்களை போலவே ஆணும், பெண்ணுமாக இரண்டு பிள்ளைகள். அனைவருக்கும் நேத்ரன் பெரியவனாக இருந்தான். மதியழகியின் மகள் நட்சத்திராவை விட ஒரு வயது இளையவள். ஆக, வீடு சிறு பிள்ளைகளின் விளையாட்டு கூடம் போலானது.
வானதி, நிகிதா இருவரும் சமைக்க, மதியழகி அவர்களுடன் இணைந்து கொண்டாள்.
அந்த சமையல் அறை தான் அவர்களுக்கு இடையில் இருந்த சில வருட இடைவெளியை உப்பும், சக்கரையும் இட்டு நிரப்பி நெருங்கி வரச் செய்தது.
“என் பையன் இது சாப்பிட மாட்டான் அண்ணி.”
“என் பொண்ணுக்கு வெண்டைக்காய் ரொம்ப பிடிக்கும் கா. அதை பொரியல் பண்ணிடலாம்”
“இட்லிக்கு கத்திரிக்காய் கடையல் பண்ணுங்கக்கா. பசங்களுக்கு மட்டும் பாசிப்பருப்பு சாம்பார் வைப்போம், என்ன?”
“இவர் நாட்டுக் கோழி கேட்டார் அண்ணி. நாம போய் வாங்கிட்டு வரலாமா?” மதியும், நிகிதாவும் ஆளுக்கொன்றாய் வானதியிடம் பேசிட, சமையலை போலவே அவர்களின் உறவும் ருசிக்கத் தொடங்கியது.
அருள் செல்வனும், மதியின் கணவர் கண்ணனும் எப்போதும் சந்திர சேகருடன் அமர்ந்து, அவருடனே நேரம் செலவழித்தார்கள்.
தாமரை, மதியழகி அவ்வப்போது தனியாக அறைக்குள் சென்று பேசினாலும், அது வீட்டிற்குள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
அந்த வார இறுதியில் திருச்சியில் இருந்த மாமியார் வீட்டிற்கு சென்று விட்டது மதியழகி குடும்பம்.
அருள் செல்வன் அம்மா, அப்பாவை அவர்களின் மாதாந்திர பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல, வானதி, நிகிதா இருவரும் பிள்ளைகளை வெளியில் அழைத்துச் சென்றார்கள்.
நிகிதா அமெரிக்கா எடுத்துச் செல்ல மிகப் பெரிய லிஸ்ட் வைத்திருக்க, அதில் இருந்த பொருட்களை எல்லாம் தேடியலைந்து வாங்கி வந்தார்கள். இளங்கோ காரை தம்பியிடம் தந்து விட, வானதியின் வண்டியில் அவ்வளவு உற்சாகத்துடன் பயணம் செய்தாள் நிகிதா.
“ஐ மிஸ் நம்ம ஊரு கா” என்று குழந்தை போல கத்தினாள் அவள்.
அதன் பின் நிகிதா பெற்றோரை காண நான்கு நாட்கள் கோயம்பத்தூர் சென்று வந்தார்கள்.
இரண்டு குடும்பங்களும் திரும்ப வீடு வந்ததும், தன் அம்மா வீட்டிற்கு அவர்களை அழைத்துச் சென்றாள் வானதி. அவர்கள் ஊருக்கு வந்ததும் அங்கு சம்பிரதாய நலம் விசாரிக்க சென்றிருந்தாலும், இப்போது ஒரு முழு நாளை அங்கே செலவழிக்க சென்றார்கள். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அனைவரும் வீட்டில் இருக்க, பார்ப்பதற்கு கல்யாண வீடு போலிருந்தது.
அன்றிரவு வீடு வந்ததும் அத்தனை நாட்கள் தள்ளிப் போட்ட பேச்சை மெதுவாக ஆரம்பித்தார் சந்திரசேகர்.
“இளங்கோ, அருள், மதி இப்படி வந்து உட்காருங்கப்பா” என்று சந்திரசேகர் அழைக்க, பிள்ளைகள் மூவரும் அவர் முன் சென்று அமர்ந்தார்கள்.
அருள்செல்வன் பின்னால் திரும்பி சமையல் அறையில் இருந்த மனைவியை பார்க்க, “நான் வரல” என்று அவனுக்கு செய்கை செய்தாள் நிகிதா. வானதி காய்ச்சிய பாலை நன்றாக ஆற்றி பிள்ளைகளுக்கு தனியாக கோப்பைகளில் ஊற்றி வைத்து விட்டு, பெரியவர்களுக்கு தேநீர் தயாரித்து எடுத்துப் போய் கொடுத்தாள். நிகிதா பிள்ளைகளை மிரட்டி பாலை அருந்தச் செய்தாள்.
சந்திரசேகர் பிள்ளைகளிடம் சொத்து விவரங்கள் அனைத்தையும் பகிர்ந்து, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்லி, பத்திரங்களை பார்க்கக் கொடுத்தார்.
“உங்கண்ணா காசுல வாங்கின இடத்தை பங்குல சேர்க்கல நான். அதை அப்படியே அவனுக்கு கொடுத்திட போறேன்.” என்றவர், நிதானமாக பிள்ளைகளின் முகபாவங்களை அளவிட்டார்.
“அப்பா” என்று இளங்கோ ஏதோ சொல்ல வர, அவன் முன்னே கை நீட்டி பேச வேண்டாம் என்றார் அவர்.
“நம்ம கிராமத்திலயும், செய்யாறுலயும் இருக்கற மனைகளை சரி சமமா உங்களுக்கு பிரிச்சு எழுதிடுறேன். உங்க ஒவ்வொருத்தருக்கும் செய்யாறுல ஒன்னு, கிராமத்துல ஒன்னுன்னு தான் எழுத போறேன். அதுனால சொத்து மதிப்பும் ஒரே போல இருக்கும்”
“உங்கம்மா பிறந்த வீட்டு நகையை மதிக்கு கொடுக்கப் போறோம். உங்களுக்கு ஆட்சேபனை இல்லையே?” என்றவரின் பார்வை மருமகள்களின் மீது படிய, “அவங்க என்ன..” என்று ஆரம்பித்த தாமரை கணவர் திரும்பிப் பார்க்கவும் அமைதியானார்.
“நீங்க சொல்லுங்கப்பா” அருள் சொல்ல,
“உங்கம்மா கிட்ட இருக்க மூத்த மருமக நகை அவங்ககிட்டயே திருப்பி கொடுத்துடுவோம்”
“அதெப்படி? அண்ணி நகையா அது?” என்று மதியழகி கேட்க, “அவங்களுக்கு கல்யாணமான புதுசுல என்கிட்ட கொடுத்தது. அப்படியே என்கிட்டயே தங்கி போச்சு” என்றார் தாமரை.
“அம்மாவோட மீதி நகையை பேத்திங்க மூனு பேருக்கும் பிரிச்சு கொடுத்துடுறோம். அப்புறம் வேறென்ன நம்ம வீடு, உங்கண்ணன் செலவு பண்ணி எடுத்துக் கட்டினது.”
“அதை மதிக்கு கொடுத்துடுங்கப்பா. உனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே அருள்?” என்று இளங்கோ கேட்க, தயக்கத்துடன் தலையசைத்தான் அருள்செல்வன்.
“இல்லப்பா. நான் அதை யாருக்கும் கொடுக்கல. அது என் பேர்லயே இருக்கட்டும். எங்க அக்கவுண்ட்ல இருக்க பணமும், வீடும் எங்களுக்கு இருக்கட்டும். இன்னும் கொஞ்சம் வருஷம் போனதும் முடிவு பண்ணிக்கலாம்” என்று முடிவாக சந்திரசேகர் சொல்ல, “சரியான முடிவு மாமா” என்றான் மதியழகியின் கணவன் கண்ணன்.
சற்று நேரம் அங்கே விவாதமும், சத்தமும், சலசலப்புமாக இருந்தது.