தாமரை மகளிடம் வந்து, “என்ன மதி, நீயென்ன சொல்ற?” என்று கேட்டார்.
“எனக்கு ஓகே தான் மா. அதான் உன் நகையை எனக்கு தர்றேன்னு சொல்லிட்டாங்க இல்ல. அப்புறம் என்ன?” என்றாள் அவள்.
“வீட்டை மூனு பேருக்கும் எழுதுங்க சொன்னேன். உங்கப்பா கேட்கல. உங்கண்ணன் உனக்கு விட்டுக் கொடுத்துடுவான்னு சொன்னா மனுஷன் எங்க கேட்கிறார்.” என்று அவர் புலம்ப, “விடுமா, வீடு உங்களுக்கும் வேணும் இல்ல?” என்றாள் மகள்.
“என்ன மதி, சொத்து பிரிக்கணும்னு பேச்சை ஆரம்பிச்சதே நீ தான். இப்போ இப்படி பேசுற?”
“ஆமா, நான் தான் ஸ்டார்ட் பண்ணேன். அப்புறம் யோசிச்சு பார்த்தா, அப்பாவை யோசிக்காம போனேன்னு ரொம்ப ஃபீல் பண்ணேன். அருள் அண்ணனும் உன்னால தான் நானும் இப்படி யோசிக்கிறேன்னு என்னை திட்டவும் கஷ்டமா போச்சு மா.” என்று அவள் சிறு குரலில் வருத்தத்துடன் சொல்ல, “சரி, சரி. விடு” என்றார் தாமரை.
“அண்ணா, என் பங்கு இடத்தை நீங்க எடுத்துட்டு எனக்கு பணமா கொடுத்துடுங்க” என்று அருள் செல்வன், இளங்கோவிடம் சொல்ல, “ஏன் ப்பா?” என்று தாமரையும், “அதெப்படி சரி வரும்?” என்று சந்திரசேகரும் கேட்க, “ஷோ ஸ்டார்டட் கா, உட்காருங்க” என்று வானதியின் கைப் பிடித்து தன் பக்கத்தில் அமர வைத்தாள் நிகிதா.
அருள்செல்வன் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து திரும்பி மனைவியை பார்க்க, “ம்க்கும்” என்றாள் வானதி.
“ஐயோ, இது வார்னிங் பார்வைக்கா” என்று அவசரமாக சொன்னாள் அவள். வானதி சிரிக்க, இளங்கோ திரும்பி மனைவியை பார்த்து கேள்வியாக புருவங்களை உயர்த்தினான்.
“ஒன்றுமில்லை” என்று தலையசைத்தாள் அவள்.
அவளும், நிகிதாவும் எழுந்து சென்று தூக்கக் கலக்கத்தில் இருந்த பிள்ளைகளை அவர்களின் படுக்கை அறையில் தூங்க வைத்தார்கள்.
அவர்கள் வெளியே வரும் போது, “என் காசுல வாங்கினது, உங்க காசுல வாங்கினதுன்னு பேச்சே வேணாம். உங்க பேர்ல தானேப்பா இருக்கு. அந்த இடத்தையும் பிரிச்சு கொடுங்க” என்றான் இளங்கோ.
“அதெப்படி தம்பி?” என்று சந்திரசேகர் கேட்க, “ஒரு தரம் சொன்னா சரின்னு சொல்லுங்களேன் ப்பா.” என்று இளங்கோ சொல்லியும் சம்மதிக்கவில்லை அவர்.
கண்ணனும், “அது நியாயமா இருக்காது” என்றான்.
அருள்செல்வனும் வேண்டாம் என்று சொல்ல, அரை மணி நேரம் வாக்குவாதம் நீண்டது. முடிவில் இளங்கோவின் பேச்சே ஏற்றுக் கொள்ளப்பட்டது.
“நீ இவ்வளவு வற்புறுத்தவும் வேற வழியில்லாம தான் நான் சரின்னு சொல்றேன் தம்பி” என்ற சந்திரசேகரின் குரலில் இருந்த அதிருப்தியை புரிந்துக் கொண்டு, “எங்களுக்கு வேணாம் மாமா” என்றான் கண்ணன்.
“அப்படி சட்டுன்னு வேணாம்னு சொல்லாதீங்க மாப்ள. தங்கச்சிக்கு ஆசையா அண்ணன் கொடுக்குறதை மதி ஏன் வேணாம்னு சொல்லணும்?” என்று தாமரை பேச, “அம்மா” என்று ஆட்சேபித்தாள் மதியழகி.
“அப்புறம் உன் இஷ்டம்” என்று மனைவியை கோபமாக பார்த்துச் சொன்னான் கண்ணன்.
“சரிப்பா. உங்க எல்லோருக்கும் என் முடிவுல சம்மதம் தானே? உங்கம்மா பொறந்த வீட்டு நகை மதிக்கு, மனைங்க உங்க எல்லோருக்கும் சரி பங்கு. மீதம் இருக்க உங்கம்மா நகை மூனு பேத்திக்கும் ஒரு பங்கு. அவ்வளவு தான், நான் இருக்கிறது வரை பார்த்து சொல்லிட்டேன். வேறேதாவது விட்டுப் போய் இருந்தாலும் மூனு பங்கு தான் ப்பா. வீடும், பேங்க்ல இருக்க பணமும் எங்களுக்கு” என்று மீண்டும் சொன்னார் சந்திரசேகர்.
“புரிஞ்சுது ப்பா, போதும். வாங்க, தூங்க போகலாம், நேரமாச்சு” என்று அப்பாவின் கைப் பிடித்து எழுப்பி விட்டான் இளங்கோ.
அப்படியொன்றும் சுலபமாக ஒரு முடிவிற்கு வரவில்லை அவர்கள். சிற்சில மனத்தாங்கல்கள், ஏமாற்றங்கள் அவர்களுக்கு நிச்சயம் இருக்கலாம். ஆனால், அவர்களின் வயதும், முதிர்ச்சியும், தற்போதைய வாழ்க்கை சூழலும் சட்டென கடின வார்த்தைகளை விட்டுவிட்டு பிரச்சினையாக்க விடவில்லை.
பல ஆயிரம் மைல்கள் தொலைவில் இருக்கும் போது இருந்த கோபத்தையும், வெளிப்படுத்திய நியாயமில்லா எதிர்பார்ப்பையும் நேரில் பார்க்கும் போது அவர்களால் முகத்திற்கு நேராக காண்பிக்க முடியவில்லை. ஆக, பெரியவர்களுக்கும், பாசத்திற்கும் கட்டுப்பட்டார்கள்.
அன்றிரவு படுக்கை அறை, ஹால் என தரையில் படுக்கை விரித்து கதை பேசிக் கொண்டு அப்படியே படுத்து உறங்கி விட்டார்கள்.
மேலும் ஒரு வாரம் அவர்கள் ஊரில் இருக்க, குடும்பமாக குல தெய்வக் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து படையலிட்டு மனதார ஒரே குடும்பமாக ஒற்றுமையாக சாமி கும்பிட்டு வந்தார்கள். இளங்கோ அலுவலக வேலையில் மூழ்க, அவனை வம்படியாக கட்டாயப்படுத்தி கெஞ்சி அழைத்துக் கொண்டு திருப்பதி சென்று வந்தார்கள். அங்கே அவர்களுக்கு நிறைவான சாமி தரிசனம் கிடைத்தது.
சனிக்கிழமை இரவு திட்டமிட்டபடி முதலில் அருள் செல்வன் குடும்பமும், அடுத்து மதியழகி குடும்பமும் அவரவர் நாடு நோக்கி செல்ல, நட்சத்திராவும், தாமரையும் ஒரே அழுகை.
“அடுத்த ஸ்கூல் வெக்கேஷன் அப்போ ஊருக்கு வர்றோம் அண்ணி” என்று மதியழகி விடைபெற,
“நாங்க அடுத்து எப்போ ஊருக்கு வருவோம்னு தெரியல கா” என்று நிகிதா சொல்லும் போதே அழுது விட்டாள். வானதி அவளுக்கு ஆறுதல் சொல்ல, “மாமியாரை பிரிய முடியாமயா இந்த அழுகை?” என்று மனைவியிடம் கேட்டான் அருள்.
கணவனை முறைத்தவள், “ஐ ஹேட் அமெரிக்கா” என்றாள். அதற்கு அனைவரும் சிரிக்க, “உங்க பெம்மா, பெப்பாக்கு பை சொல்லுங்க” என்று இளங்கோ, வானதியிடம் இருந்த பிள்ளைகளை அழைத்தாள் நிகிதா.
“சட்டுனு வெறுமையா ஆகிடுச்சு ம்மா” என்று சந்திரசேகர் வருந்த, “நீங்க ஊருக்கு வாங்க மாமா” என்று அழைத்து விட்டு சென்றாள் நிகிதா.
“ஸ்கூல் லீவ்ல வீட்டுக்கு வாங்கண்ணி” என்று வானதியிடம் சொல்லி, அண்ணனை பார்த்து புன்னகைத்து விடை பெற்றுக் கொண்டாள் மதியழகி.
அடுத்து வந்த நாட்களில் தாமரை, “வீடே வெறிச்சோடி போச்சு” என்று புலம்பி அடிக்கடி மகள் மற்றும் மகன் குடும்பத்துடன் காணொளி அழைப்பில் பேசினார்.
“அண்ணிக்கு இன்னும் ரிசல்ட் வரலம்மா?” என்று அவரிடம் கேட்டுக் கொண்டிருந்தாள் மதியழகி.
வானதி நாட்கள் நெருங்க நெருங்க மிகுந்த எதிர்பார்ப்புடன் தேர்வு முடிவு தேதிக்காக காத்திருந்தாள்.
அவன் அலுவகத்தில் இருந்தே இருக்கைகள் முன் பதிவு செய்து, இடம், நேரம், உணவகம் பெயர் என தகவல்கள் அனைத்தையும் மனைவிக்கு அனுப்பி வைத்தான்.
பின்மாலை ஏழு மணி போல அத்தை, மாமா, பிள்ளைகளை அழைத்துக் கொண்டு, “ஃபுட் அபேர்ஸ்” எனும் உயர்தர உணவகத்திற்கு சென்றாள் அவள்.
அங்கே வாயிலிலேயே பாக்கியம், மாதவன், அர்ச்சனா, ஹரிணி நின்றிருக்க, “என்னம்மா நீங்களும் வர்றீங்கன்னு சொல்லவேயில்ல” என்று வானதி ஆச்சரியப்பட,
“நீ தான் எங்களை கூப்பிடவேயில்லையே” என்று பொய்யாக கோபித்துக் கொண்டார் பாக்கியம்.
“என்னையும்” என்று அர்ச்சனா முகம் திருப்ப, “நாம போகலாம் வாங்கத்த. இங்க சைனீஸ், பாஸ்தா, பீஸா எல்லாம் செம்மயா இருக்கும்னு அப்பா சொன்னார்” என்று அவளின் கைப் பிடித்து இழுத்தாள் ஹரிணி.
“அம்மா, வாம்மா. சாரி. அண்ணி பிளீஸ்” என்று அம்மா, அண்ணி கைப் பிடித்து வானதி அழைக்க, “சரி, சரி. ரிசல்ட் டென்ஷன்ல இருப்ப. அதுனால மன்னிச்சு விடுறேன்” என்று பெருந்தன்மையாக பதில் சொன்னாள் அர்ச்சனா.
“நாம உள்ள போகலாம், வாங்க” தாமரை, பாக்கியத்தை அழைக்க உள்ளே சென்றார்கள்.
அவர்களை அழகாய் வரவேற்று, அவர்களின் மேஜையை தேடி அமர வைத்தார்கள். அவர்கள் குடிக்கத் தண்ணீரும், பழச் சாறும் வழங்கப்பட்டது.
வானதி அலைபேசியை எடுத்து கணவனை அழைக்கப் போனாள்.
அப்பொழுது அந்த உணவகத்தின் உரிமையாளருடன் பேசிக் கொண்டே உள்ளே நுழைந்தான் இளங்கோ.
கருநீல காற்சட்டை, சந்தன நிற சட்டையில் அத்தனை கம்பீரமாக இருந்தான். வயதும், முதிர்ச்சியும், அவனுக்கு கம்பீரமான கவர்ச்சியை தந்திருந்தது.
அலை அலையாய் படிந்திருந்த தலை முடியை கையால் கலைத்து கோதிக் கொண்டான். ஏதோ பேசியபடி அவன் சிரிக்க, வானதியின் கண்களில் பூத்தது சூரியகாந்தி பூ.
இமைக்கும் நேரத்திற்குள் வானதியின் கண்களில் கடலலையும் விழ, அந்த ஈரம் போர்த்திய கண்களுடன் இளங்கோவை பார்த்த கண்களில் அபரிதமான காதல் அலையடித்தது.
“மாமா கையில் என்னது?” என்று ஹரிணி கேட்க, வானதியின் கண்கள் கணவனின் கையில் இருந்த பரிசுப் பொருளை கலவையான உணர்வுகளுடன் ஆராய்ச்சியாக பார்த்தது.