வானதி பார்த்துக் கொண்டிருக்கும் போதே உணவகத்தின் ஊழியர் ஒருவர் வந்து இளங்கோவின் கையில் பூங்கொத்தை கொடுக்க, அதை வாங்கிக் கொண்டவனின் கைகளில் முன்பிருந்த பரிசு பொருள் காணாமல் போய் இருந்தது.
“ஹரிணி, இந்தா நீ கேட்ட மசாலா பாப்பாட்” என்று மாதவன் அழைக்க, அவளின் கவனமும் மாமாவின் மீதிருந்து விலகி உணவின் மீது திரும்பியது.
“இது என்னது ப்பா?” என்று தாமரை கேட்க, “அப்பளம் தான் அத்த. அதுக்கு மேல காரசாரமா மசாலா போட்டு குடுத்துருக்காங்க. நல்லாருக்கும், சாப்பிட்டு பாருங்க” என்று வானதி சொல்ல, அவளுக்கு முன்னே பாட்டியின் தட்டில் அதைப் பரிமாறி, சாப்பிடச் சொன்னான் நேத்ரன்.
“ப்பா..” என்று கத்தி, மாதவனின் கைகளில் இருந்து இறங்கி, இளங்கோவை நோக்கி ஓடினாள் நட்சத்திரா.
அங்கே உணவகத்தின் உரிமையாளருடன் பேசிக் கொண்டிருந்த இளங்கோ, தன் காலைக் கட்டிய மகளை தூக்கிக் கொண்டான்.
“மாறன், இவங்க என் செல்லக் குட்டி பொண்ணு நட்சத்திரா” என்று இளங்கோ அந்த உணவகத்தின் உரிமையாளரான செஃப் இளமாறனுக்கு தன் மகளை அறிமுகப்படுத்தினான்.
“ஹல்லோ, நட்சத்திரா. ஸ்டாரா நீங்க?” என்று ராகம் இழுத்து கேட்டபடி குழந்தைக்கு கை நீட்டினான் இளமாறன்.
“ஆமா, அப்பா ஸ்டார் நான்” என்று துளி வெட்கமும், நிரம்ப மகிழ்ச்சியும் பொங்கி வழிந்த குரலில் கிளுக்கி சிரித்தபடி சொன்னாள் நட்சத்திரா.
இளமாறன் குழந்தையின் கைப் பற்றி குலுக்க, மகளை அவனிடம் நீட்டினான் இளங்கோ.
அவளை வாங்கிக் கொண்டு, “இப்போ யார் ஸ்டார் நீங்க?” என்று இளமாறன் புருவம் உயர்த்தி கேட்க, நட்சத்திரா பதில் சொல்லும் முன் அவர்களுக்கு பின்னே இருந்த கதவு திறந்தது.
இளமாறனின் பார்வையைத் தொடர்ந்து நட்சத்திராவின் பார்வையும் அங்கே சென்றது.
“அப்பா, பீச் ப்பா” என்று இளங்கோவை பார்த்து அவள் ஆச்சரியத்துடன் சொல்ல, இளமாறனின் கண்கள் அப்போது உணவகத்திற்குள் நுழைந்தவர்களின் மேல் அழுத்தமாய் படிந்தது.
ஒரு கையில் இரண்டு வயது மகனை தூக்கியபடி, மறுகையில் ஐந்து வயது மகளுடன் நடந்து உள்ளே வந்து கொண்டிருந்தாள் இளமாறனின் மனைவி.
“சர், இவங்க என் வைஃப் ரோஜா.” என்று இளமாறன் அறிமுகப்படுத்த, “தெரியுமே. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு மாறன்.” என்ற இளங்கோ, “எப்படி இருக்கீங்க ரோஜா?” என்று கேட்டான்.
“நல்லாருக்கேன் சார். இன்னைக்கு டேபிள் புக் பண்ணி இருந்தீங்க இல்ல? மேம்க்கு சர்ப்ரைஸ் கொடுத்தாச்சா? எங்க டீம் ஹெல்ப் பண்ண ரெடியா இருக்கோம்” என்று குரலில் ஆர்வம் மிளிர சொன்னாள் ரோஜா.
“எஸ். ஃபேமிலி ஆல்ரெடி வந்து வெயிட் பண்றாங்க. அவங்களுக்கு சர்ப்ரைஸ் இனிமே தான் கொடுக்கணும்” என்ற இளங்கோ, “சாரி உங்களோட புது பிராஞ்ச் ஓபனிங்க்கு வர முடியல” என்று இருவரையும் பொதுவாகப் பார்த்துச் சொல்ல,
“நீங்க பிஸின்னு தெரியும் சர். உங்க கிஃப்ட் அண்ட் மெஸேஜ் வந்ததே. ஐ வாஸ் ஹேப்பி டு ரிசீவ் தட்” என்று இளமாறனும்,
“அதான் இப்போ வந்துட்டீங்களே, அதுவும் ஃபேமிலியோட” என்று திரும்பி இளங்கோவின் குடும்பத்தை பார்த்து ரோஜாவும் சொல்ல, வானதி எழுந்து அவர்களிடம் வந்தாள்.
“அப்பா” என்று எக்கி இளமாறனின் கைப் பிடித்து இழுத்து, கண்களால் இளங்கோவை காட்டி யாரென்று கேட்டாள் அவன் மகள் ஆதினி.
அவளைப் புன்சிரிப்புடன் பார்த்து, அவள் முன் மண்டியிட்டு, “ஹாய், ஐ அம் இளங்கோ” என்று கை நீட்டினான் இளங்கோ.
“நான் ஆதினி, ரோஜாம்மா கையில இருக்கறது என் தம்பி ஆகாஷ். அப்புறம் எங்க நித்திம்மா பாப்பா பேர்..” என்று வரிசையாக சொல்லிக் கொண்டே போனாள் ஆதினி. அனைவரும் அவளை புன்னகையுடன் பார்க்க, அவளின் கண்கள் மீண்டும் அப்பாவை பார்த்தது.
“இளங்கோ அங்கிள் தான் அப்பாவுக்கு மனி எப்படி சேவ் பண்ணனும்னு சொல்லிக் கொடுத்தாங்க. ரகு அங்கிள் ப்ரெண்ட் இவங்க” என்று இளங்கோவை மகளுக்கு அறிமுகப்படுத்தினான் இளமாறன்.
“நான் உங்களுக்கு அப்பாவோட டாக்ஸ் ஃபைல் அனுப்பறேன். நீங்க பார்த்திட்டு ஐடியா சொன்னீங்கன்னா, எங்க ஆடிட்டர்கிட்ட பேச எனக்கு ஈஸியா இருக்கும்” என்று ரோஜா சொல்ல, “கண்டிப்பா, நான் பார்த்திட்டு சொல்றேன். ஒரு வாரம் டைம் கொடுங்க ரோஜா” என்றாள் வானதி.
“செஃப்” என்று உள்ளிருந்து இளமாறனுக்கு அழைப்பு வர, “சாரி” என்றவன், “அண்ட் பிளீஸ் உட்காருங்க. நான் கொஞ்ச நேரத்துல உங்க கூட ஜாயின் பண்றேன்” என்று உள்ளே சென்றான்.
“பிளீஸ், என்ஜாய் அவர் புஃட்” என்று ரோஜாவும் சொல்லி, பிள்ளைகளுடன் உள்ளே சென்றாள்.
மனைவி, மகளுடன் தங்களின் மேஜையை நோக்கி நடந்தான் இளங்கோ.
மனைவியின் கையை தொட்டும் தொடாமலும் உரசி நடந்தவனுக்கு, எதிரே தெரிந்த தன் ஒட்டு மொத்த குடும்பத்தையும், அவர்களின் கண்களில் தெரிந்த மகிழ்ச்சியையும் காண்கையில் அத்தனை நிறைவாக இருந்தது.
அவர்கள் இருக்கையில் அமர்ந்ததும், “கங்கிராட்ஸ் மாதவன்” என்று வாழ்த்தி பூங்கொத்தை மனைவியின் கைப் பிடித்து மாதவனிடம் நீட்டினான் இளங்கோ.
“தேங்க்யூ” மாதவனின் முகம் முழுவதையும் மென்நகை நிறைக்க, பூங்கொத்தை வாங்கிக் கொண்டான் அவன்.
“என்ன நடக்குது இங்க?” வானதி மேஜைக்கு அடியில் கணவனின் கைப் பிடித்து கேட்க,
“இவருக்கு புரோமோஷன் கிடைச்சிருக்கு” என்று கணவனை பார்த்து பெருமிதத்துடன் சொன்னாள் அர்ச்சனா.
“வாவ் அண்ணா, கங்கிராட்ஸ்” என்று வானதியும் வாழ்த்த, பெரியவர்கள், குழந்தைகள் என மாறி மாறி அவனுக்கு வாழ்த்து மழை பொழிந்தார்கள்.
“உங்கண்ணா தான் உன்கிட்ட சொல்ல வேணாம்னு சொன்னான் வானு” என்றார் பாக்கியம்.
“ஓ..” என்ற வானதி, தாமரை மிளகுத் தூள் கேட்கவும், மேஜையில் இருந்ததை எடுத்து அவரிடம் நீட்டினாள். அதற்குள் இளங்கோவிடம் இருந்த பரிசு பொருள் வேகவேகமாக கை மாறி பாக்கியத்திடம் வந்திருந்தது. மேஜைக்கு அடியில் மருமகளிடம் எதையோ கொடுத்தார் பாக்கியம்.
“என்ன பண்றீங்க? ஏன் எல்லோரும் என்னையே குறுகுறுன்னு பார்க்கறீங்க?” வானதி சந்தேகமாக கேட்க, சிரித்தான் இளங்கோ.
ஒரு மழை நாளில் சிறு சிறு தூறலாய் அவன் பார்வையை நனைத்து, பெரு மழையாய் அவன் மனதில் விழுந்தாள் வானதி.
அவளின் மேல் காதலில் விழாமல் இருக்க அவன் எடுத்த முயற்சிகள் அனைத்தும் அவளின் ஒற்றைப் புன்னகையில் மழை பட்டதும் கரைந்தோடும் மண் போல தடயமின்றி கரைந்தோடி போனது.
காதல் மழையால் அவன் மனதை நனைத்து, மெல்ல மெல்ல வேரூன்றி விருட்சமாய் வளர்ந்து நின்றவளை பிடுங்கி எரிய நினைக்காமல் பிரியம் வளர்த்துக் கொண்டான் இளங்கோ.
பார்வை மட்டுமே அவனது. பேச்சு எப்போதும் பாவையினது தான். அவனை கேள்விகளால் துளைத்து, காஃபியோடு காதலையும் பகிர்ந்து, அவனது கனவுகள் அனைத்தையும் கை வர செய்தவள்.
அவளின் ஒற்றைக் கனவை அவனால் நனவாக்க முடியாத வருத்தம் அவனுக்கு எப்போதும் உண்டு.
இப்போது அந்தக் கனவு கிட்டத்தட்ட நனவாகும் தருணம் நெருங்கியிருக்க, மனைவியை விட அவன் தான் அதிக எதிர்பார்ப்புடன் நகத்துடன் விரலையும் சேர்த்தே கடித்து காத்திருந்தான்.
அவன் கனவை நனவாக்கியவள். அவளின் உதவியின்றி அவனால் வேலை, வாழ்க்கை என எதிலும் சாதித்திருக்க முடியாது.
தம்பதிகளில் ஒருவரின் மதிப்பும் மரியாதையும் மற்றவரை கொண்டே என்பதில் அவனுக்கு அதிக நம்பிக்கை உண்டு.
“உனக்கு நாளைக்கு ரிசல்ட் வருது இல்லம்மா. அதான், நீ பதட்டமா இருக்கியான்னு எல்லாரும் பார்க்கறாங்க” என்று சந்திரசேகர் சொல்ல, “அப்படியா? நான் ஒன்னும் டென்ஷனாலாம் இல்ல மாமா. நார்மலா தான் இருக்கேன்” என்றவளின் குரலில் துளி கூட பதட்டமில்லை, பயமுமில்லை.
“வானதி” மீண்டும் இளங்கோ அழைக்க, “என்னங்க நீங்க? என்னனு சொல்லாம கூப்பிட்டுட்டே இருக்கீங்க?” என்று அவள் கேட்க, தலைக் கோதி புன்னகைத்தான் இளங்கோ. அவ்வளவு தான். வேறொன்றும் சொல்லவில்லை அவன்.
மனைவி அவனை நன்கு அறிவாள் என்பது அவனுக்கும் தெரியும் தானே.
“ஓகே. புரிஞ்சுது” என்று சொல்லி வானதி புன்னகைக்க, “அப்படியா?” என்று புன்னகையுடன் கேட்டவனின் கண்களில் அத்தனை விஷமம்.
மனைவி கண்ணை உருட்டி குடும்பத்தை காண்பிக்க, இளங்கோவிற்கு அத்தனை சுவாரசியமாக இருந்தது.
மெல்ல இருக்கையில் இருந்து எழுந்து, மனைவியை நோக்கி திரும்பினான்.
“என்ன பண்றீங்க? சாப்பிடும் போது பாதியில எழுந்துட்டு, உட்காருங்க” என்று வானதி அவனை நோக்கி கை நீட்ட, தன்னை நோக்கி நீண்டிருந்த அவளின் கரத்தை இறுக்கமாக பற்றி எழுப்பி விட்டான் இளங்கோ.
“என்ன..” என்று ஆரம்பித்தவளின் குரல் சட்டென ஒளிக் கற்றைகள் அவர்களை சுற்றி மாறி மாறி விழவும் பேச்சு மறந்து சுற்றம் பார்த்தாள்.
பாக்கியம் அவளிடம் வந்து நிற்க, “அம்மா” என்று அவரை ஆச்சரியமாக பார்க்க, “வானதி” என்று அவளை மாதவன் அழைத்தான்.
பாக்கியமும், மாதவனும் ஒன்றாக நிற்க, அர்ச்சனாவும் கணவனுடன் இணைந்துக் கொண்டாள்.
“மருமகளை காக்க வைக்காம குடுங்கண்ணி” என்று தாமரை சொல்ல, மாமியாரை பார்வையால் தொட்ட வானதியின் கண்களில் கேள்வியும், மகிழ்ச்சியும் கலந்தே இருந்தது.
“அத்த கங்கிராட்ஸ்” என்று ஹரிணி எல்லோரையும் முந்திக் கொண்டு சத்தமாக சொல்ல, “அம்மா..” என்று நேத்ரனும், நட்சத்திராவும் ஒன்றாக கத்தினார்கள்.
“எனக்கு நாளைக்கு தான் ரிசல்ட்..” என்றவளின் பேச்சு, அம்மா அவளின் கைப் பிடிக்கவும் நின்று போனது.