“உன் ரிசல்ட் பொறுமையா நாளைக்கு வரட்டும் வானதி. அது என்னவா இருந்தாலும் அம்மாக்கு சந்தோஷம் தான். நீ திரும்பவும் படிச்சு பரிட்சை எழுதினது தான் அம்மாவுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா, பெருமையா இருக்கு” என்று பாக்கியம், அவளின் கையை வருடி சொல்ல, “அம்மா.. என்னம்மா நீ..” என்றவளின் கரத்தை மருமகளிடம் கொடுத்தார் பாக்கியம்.
“யூ ட்ரைடு வானதி. இத்தனை வருஷத்துக்கு அப்புறமும், வீடு, வேலை, குடும்பம்ன்னு எத்தனையோ கமிட்மென்ட்ஸுக்கு நடுவுல படிப்பை மறக்காம, டிரை பண்ண பார்த்தியா? அது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா? உன்னை அதுக்கே பாரட்டணும்” என்று அர்ச்சனா சொல்ல,
“அண்ணி” என்றவளுக்கு வார்த்தைகளே வரவில்லை.
“இன்னைக்கு அப்பா நம்ம கூட இருந்திருந்தா இதைத்தான் சொல்லியிருப்பார் வானு.” என்றான் மாதவன். உணர்ச்சி மிகுதியில் சட்டென வானதியின் கண்கள் கலங்கிட, யாரின் கவனத்தையும் உறுத்தாத வண்ணம் மனைவியை நெருங்கி நின்றான் இளங்கோ.
அவன் தோள் அவள் தோளை உரசியது. அவனது பிரத்யேக வாசம் வானதியின் நாசியை நிறைக்க, மெல்ல தளர்ந்தாள்.
“இது உன்னோடது. உனக்கானது, அப்பா உனக்காக ஆசை ஆசையா வாங்கி வச்சது. அப்பா இருந்திருந்தா நீ இந்த முறை எக்ஸாம் எழுதப் போகும் போதே இதை உன்கிட்ட கொடுத்திருப்பார்.”
“அண்ணா..” என்றவள் தயங்கி அம்மாவை பார்க்க,
“அம்மா தான் எடுத்துக் கொடுத்தேன் வானு” என்றார் பாக்கியம்.
“இந்தா வானதி, உனக்காக அப்பாவின் பரிசு” என்று நீட்டினான் மாதவன்.
அவளால் ஒற்றை விரலை கூட அசைக்க முடியவில்லை. அம்மா, அண்ணா, அண்ணியை மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“வாங்கிக்கோம்மா” என்று சந்திரசேகர் சொல்ல, அவளுக்கு அப்பாவின் நினைவு மேலெழுந்து வந்தது.
பல வருடங்கள் அப்பா தான் அவளை பயிற்சி வகுப்பிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். முதல் இரு நிலைகள் தேர்வின் போது இரவெல்லாம் கண் விழித்து அவள் படிக்கும் போது பெரும்பாலான நேரம் அவளுடன் அமர்ந்திருக்கிறார்.
“வாங்கிக்கோ வானு” இப்போது பாக்கியமும் சொல்ல, அழுத்தமாய் அவளின் கைப் பிடித்து முன்னே நீட்டினான் இளங்கோ.
“அப்பாக்கு எப்பவும் நம்ம மேல நிறைய அன்பு தான். ஹீ வாஸ் வெரி பிரவ்ட்டு ஆஃப் அஸ். அதுல எனக்கு சந்தேகமே இல்ல. வாங்கிக்கோ, பிளீஸ்” மாதவன் அடர்ந்த குரலில் சொல்ல, அவளுக்கு அப்பா பேசுவது போலவே இருந்தது.
இளங்கோவின் கரத்தின் மேல் அவள் கரம் இருக்க, இருவரின் உள்ளங்கையும் ஒன்றாக விரிந்திருக்க, அதில் பேனாவை வைத்தான் மாதவன்.
தங்க முலாம் பூசிய பேனாவில், “வானதி இளங்கோ” என்று பொன்னிறத்தில் பொரிக்கப்பட்டிருக்க, ஆவென்று அதிர்ச்சியும், ஆச்சரியமும் நிறைந்த குரலில் மெல்ல கத்தி விட்டாள் வானதி.
அப்பாவிற்கு அவளை நன்கு தெரியும். ஆனாலும், இதை எதிர்பார்த்திருக்கவில்லை அவள்.
மனம் மகிழ்ச்சியில் நிறைந்தாலும், அந்த நிமிடம் அப்பாவின் அருகாமையை அதிகம் தேடினாள் அவள்.
மாதவன் அவளின் புறங்கையை மென்மையாய் பிடித்து அசைக்க, அதில் அப்பாவின் சாயல்.
“வாழ்த்துகள் வானதி” என்ற ஆர்ப்பரிப்பும், கரகோஷமும் அந்த உணவகத்தையே அதிர செய்ய, மெல்ல திரும்பிப் பார்த்தாள்.
இளமாறனுடன் அவனது ஒட்டு மொத்த பணியாளர்களும் நின்று அவளை வாழ்த்த, ஆங்காங்கு அமர்ந்திருந்த வாடிக்கையாளர்களும் எழுந்து நின்று, அவள் பெயர் சொல்லி வாழ்த்தினார்கள்.
“அத்த, கங்கிராட்ஸ்” என்று அவளுக்கு பூங்கொத்து கொடுத்த ஆதினி, அவளே சிறிய பூங்கொத்து போல தான் இருந்தாள்.
ரோஜாவின் கன்னங்களில் ரோஜாக்கள் மலர்ந்திருக்க, அங்கு நடக்கும் அனைத்தையும் கேமராவில் படம் பிடித்துக் கொண்டிருந்தாள் அவள்.
“தேங்க்யூ செல்லம்” என்று ஆதினியிடம் இருந்து பூங்கொத்தை வாங்கிக் கொண்டாள் வானதி.
“வானதி” என்று பாக்கியம் அழைக்க, “ம்மா” என்று அவரிடம் திரும்பினாள் அவள்.
மகளின் தலையில் கை வைத்து, அவளிடம் தானும் ஒரு பரிசு பொருளை நீட்டினார் பாக்கியம். வானதி அதை ஆவலாக வாங்கிப் பிரிக்க, கிருஷ்ணமூர்த்தி முதன் முதலாக அவளுக்கு வாங்கிய பேனா அதில் இருந்தது.
“வானதி” என்று மட்டுமே அதில் இருக்க, கண்கள் கலங்க அதை வருடிக் கொடுத்தாள் அவள்.
“நீ ரெண்டாவது தடவை எக்ஸாம் எழுதுறன்னு சொன்னப்போ, மாப்ள பேரையும் சேர்த்து அடிச்சு, அப்பா புது பேனா வாங்கிட்டு வந்தாங்க வானு” என்று தளுதளுத்த குரலில் பாக்கியம் சொல்ல, அம்மாவின் கைப் பிடித்து கொண்டாள் வானதி.
பாக்கியம் மருமகளை பார்த்து புன்னகைத்து மகனின் கைப் பிடித்துக் கொண்டார். தன் இரு பிள்ளைகளையும் பார்த்து மலர்ந்து புன்னகைத்தார். அவர் முகத்தில் இருந்த நிறைவுக்கு அவரால் வார்த்தைகள் கோர்க்க முடியவில்லை. அவரின் மக்களுக்கு அது தேவையாகவும் இருக்கவில்லை.
“அப்பா சந்தோஷப்படுவார். உங்களைப் பார்த்து பெருமைப்படுவார். அவருக்கும் சேர்த்து நான் பார்த்துக்கறேன்” என்றவரால் மேலே பேச முடியவில்லை.
“அத்த உட்காருங்க” அர்ச்சனா பாக்கியத்தின் தோள் பற்றி இருக்கையில் அமரச் செய்தாள். அவருக்கு ஹரிணி தண்ணீர் எடுத்து நீட்டினாள்.
ரோஜா அவர்களின் மேஜைக்கு வர, அவளிடம் இருந்த கேமராவை நன்றி சொல்லி வாங்கிக் கொண்டான் இளங்கோ. அவர்களை சுற்றியிருந்த கூட்டமும் மெல்ல கலைந்தது.
அனைவரையும் பார்த்து, “தேங்க்யூ” என்ற வானதி, ஏதோ சொல்ல வர, “எதுவும் சொல்லாத” என்று மிரட்டினான் இளங்கோ.
“ஓகே, நாளைக்கு..” என்று ஆரம்பித்த வானதி, இளங்கோவின் கண்களில் தெரிந்த செய்தியில் அமைதியானாள்.
அன்று உணவை காட்டிலும், அவளுக்கு உறவுகள் உணர்த்திய உணர்வே அதிகம் ருசித்தது.
அவர்களுக்குள் ஆயிரம் முரண்பாடுகள் இருக்கும். ஆனால், இறுதியில் அவர்கள் ஒரே குடும்பம். ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுத்து நிற்பார்கள். அவ்வளவுதான்.
அவர்களுக்கென்று சிறப்பாக தயாரிக்கப்பட்ட உணவும், இனிப்பும் பரிமாறப்பட, பேச்சும், சிரிப்புமாக ரசித்து, ருசித்து உண்டார்கள்.
“அண்ணா, தங்கச்சி ரெண்டு பேரையும் நல்லா வளர்த்த பெருமை எனக்குத்தான். படிப்பு, ப்ரோமோஷன்னு கலக்கறீங்க. வெரி குட்” என்று வானதி, மாதவன் இருவரின் தோளிலும் தட்டிக் கொடுத்து அர்ச்சனா சொல்ல, சிரித்தார் பாக்கியம். அர்ச்சனாவை அவர் பார்த்த பார்வையில் அத்தனை வாஞ்சை இருந்தது.
“நானும் உன்னை நினைச்சு பெருமைபடுறேன் ம்மா” என்று ஹரிணி ஆங்கிலத்தில் சொல்ல, “அடி வெளுக்கப் போறேன் உன்ன” என்று அர்ச்சனா ஆரம்பிக்க, ஹரிணியை தன் பக்கமாக இழுத்துக் கொண்டு சிரித்தார் தாமரை.