மறுநாள் பொழுது எப்போதும் போல நகர்ந்தது. இளங்கோ காலை எழுந்ததில் இருந்து அலுவலக அழைப்புகள், தம்பி, தங்கை அழைப்புகள் என நேரத்திற்கு இணையாக சுற்றினாலும், பிள்ளைகள் இருவரையும் பள்ளி கிளப்ப உதவினான்.
“நான் பார்த்துக்கறேன் ப்பா. நீ ஆபீஸ் கிளம்பு” என்று உதவிக்கு வந்த தாமரை, “என்ன நீ இன்னைக்கு வத்தக் குழம்பு வச்சுட்ட, உன் பிள்ளை சாப்பிட மாட்டானே. சாம்பார் வச்சிருக்கலாம் இல்ல? தள்ளு, நான் பத்து நிமிஷத்துல சாம்பார் வைக்கிறேன்” என்று அந்த பக்கம் மருமகளுக்கும் உதவிக்குப் போனார்.
“வத்தக் குழம்பு நமக்கு வச்சதுத்த. பிள்ளைங்களுக்கு பட்டாணி போட்டு புலாவ் பண்ணிட்டேன்” என்று குக்கரை திறந்து காண்பித்தாள் வானதி.
“அக்கா, மெஷின்ல போட துணி தனித்தனியா பிரிச்சு வச்சுருக்கேன். பார்த்து போடுங்க கா. இல்லனா சாயம் ஒட்டிக்கும்.” உதவி செய்யும் பெண்மணியிடம் சத்தமாக சொல்லியபடி சமையல் வேலையை தொடர்ந்தாள் அவள்.
“ஐய்ய் பூரி” என்று நட்சத்திரா, அவளுக்கு பிடித்த உணவை சமத்தாக சாப்பிட்டு, அண்ணன் கைப் பிடித்து பள்ளி செல்ல, அவர்களை பேருந்தில் ஏற்றி விட்டு வந்து அலுவலகம் கிளம்பினான் இளங்கோ.
“டேக் ரெஸ்ட்” என்று மனைவியை அணைத்து விலகி, அலுவலகம் கிளம்பிய இளங்கோவின் உதடுகள் குறும்பு சிரிப்பில் துடித்ததைக் கண்டு கண்ணை உருட்டினாள் வானதி.
“இந்த பெட்டியை கொஞ்சம் திறந்து கொடு மா”
“உங்க மாமா கீரை கூட்டு வேணும்னு சொல்றாரு. வா, கீழ இருக்க சூப்பர் மார்க்கெட்ல கீரை வாங்கிட்டு வருவோம்”
“இளங்கோ சட்டையை எப்படி அயர்ன் பண்றதுன்னு இவருக்கு சொல்லிக் கொடு மா.” என்று வரிசையாக அவளுக்கு வேலைக் கொடுத்து கொண்டே இருந்தார் தாமரை.
“கீரை நான் போய் வாங்கிட்டு வரேன் த்த” பத்து நிமிடங்களில் வாங்கி வந்து சமைத்து வைத்தவள், “மாமா எதுவும் செய்ய வேண்டாம்த்த. அயர்ன், அது வெளில குடுத்துக்கறது தான் வழக்கம்.” என்றாள் வானதி.
“சரி, நிகிதாக்கு போன் போட்டு குடு” என்றார் தாமரை.
நிகிதாவுடன் அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே பாக்கியம் மகளை அழைக்க, அவரிடம் பேசினாள் வானதி. அன்றைக்கு பார்த்து அவருக்கும் அவசரமாக கடைக்கு செல்ல வேண்டியிருந்தது.
ஒரு வழியாக மாலை பிள்ளைகள் வீடு வரும் நேரம் ஓய்ந்து, அசந்து படுத்திருந்தவள் நன்றாக உறங்கி விட்டிருந்தாள்.
“வானதி” ஒவ்வொரு எழுத்தாக உச்சரித்து இளங்கோ அழைக்க, “ம்ம்ம்” என்றவள், மெல்ல கரம் உயர்த்தி கணவனின் கழுத்தில் கரம் கோர்த்து, அவனையும் படுக்கையில் இழுத்துக் கொண்டாள்.
“வானதி..” என்று மீண்டும் மென்மையாய் அழைத்தான்.
“ம்ம்ம்ம்ம்”
“வானதி சிஏ, வாழ்த்துகள்.” என்று அவள் காதில் காதலாக சொன்னவன், “என் பொண்டாட்டி பாஸ் பண்ணிட்டா” என்று கத்த, அவளின் உறக்கம் மொத்தமாக விலகிப் போக, கண்களை சிமிட்டி சிமிட்டி கணவனைப் பயத்துடன், கொள்ளை எதிர்பார்ப்புடன் பார்த்தாள் வானதி.
“நீயே பாரு” என்று அவளிடம் நீட்டினான் இளங்கோ. அவன் கையில் இருந்த அலைபேசியில் ஐசிஏஐ இணையதளம் திறந்திருக்க, வானதியின் தேர்வு முடிவுகள் அதில் வெளியாகி இருந்தது.
“நீ எல்லா பேப்பரும் கிளியர் பண்ணிட்ட வானதி” இளங்கோ அவள் முகம் முழுவதும் முத்தமிட்டு சொன்னான்.
“அச்சோ இருங்க” என்று அவன் உதட்டில் விரல் வைத்து தடுத்து எழுந்துமர்ந்து கண்ணை கசக்கி அவள் திரும்ப திரையை பார்க்க, அவனுக்கு அப்படியொரு சிரிப்பு.
“மக்கு, வானதி இளங்கோன்னு உன் பேர் சரியா தானே போட்டிருக்கு? அப்படியே பக்கத்துல மார்க் பாரு” என்று அவன் சொல்ல, பார்த்தவள், பாய்ந்து அவனை அணைத்துக் கொண்டாள் வானதி.
அவள் மனம் நெகிழ்ந்திருக்க, புன்னகையும், கண்ணீரும் சேர்ந்தே வந்தது.
“வானதி சிஏ, வெல் டன் வானதி” என்ற இளங்கோ அவள் பதில் சொல்லும் முன் அழுத்தமாக சொல்லி முத்தமிட்டான்.
“முகம் கழுவிட்டு வா. வீட்ல எல்லோருக்கும் சொல்லலாம்” இளங்கோ சொல்ல, படுக்கையில் இருந்து எழுந்து கொண்டாள் வானதி. பதினைந்து நிமிடங்களில் புது சேலை மாற்றி வெளியில் வந்தாள்.
மருமகளுக்கு பூவை நீட்டிய தாமரையின் கண்கள் அவளை மேலிருந்து கீழாக ஓர் பார்வை பார்த்து விட்டே இயல்பானது.
அதை எதிர்பார்த்திராத தாமரை, “நல்லாரும்மா, எப்பவும் இதே போல சந்தோஷமா இரு” என்று கணவருக்கும் சேர்த்தே அவளை வாழ்த்தினார்.
“அம்மா, வாங்க” பிள்ளைகள் இருவரும் அவசரமாக அவளின் கைப் பிடித்து வெளியில் இழுத்துச் சென்றார்கள்.
பக்கத்து, அக்கத்து, எதிர்ப்பட்ட வீட்டு சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரிடமும், “எங்கம்மா சிஏ பாஸ் பண்ணிட்டாங்க.” என்று கத்தி பெருமையாக சொன்னான் நேத்ரன்.
“எங்கம்மா ஆடித்தர்” என்று அண்ணனுக்கு போட்டியாக சொல்லிக் கொண்டு வந்தாள் நட்சத்திரா.
இளங்கோ புன்னகையுடன் வர, வானதிக்கு கணவன், பிள்ளைகளின் முகத்தில் இருந்த பூரிப்பே அத்தனை மகிழ்ச்சியை கொடுத்தது.
“அப்பா..” என்று நேத்ரன் சமிக்ஞை கொடுக்க, மனைவியின் கண்களை மூடி அழைத்துச் சென்றான் இளங்கோ.
“என்னங்க பண்றீங்க?” என்று வானதி கேட்க, “வெயிட் அண்ட் சீ” என்றவன் குரலே அவளை சீண்டியது. அவளை மெல்ல நடத்திக் கொண்டு போய் நிறுத்தி, “ஓகே, ரெடி. அப்பா ஓபன்” என்று நேத்ரன் கத்தவும் மனைவியின் கண்களில் இருந்து கையை மெதுவாக பிரித்தான். கணவனின் கரம் நிழலாய் விலக விலக அவள் கண்களுக்கு எழுத்துகள் புலப்பட்டது.
“வானதி சிஏ, இளங்கோ சிஏ”
“வாவ்..” என்றவளுக்கு அடுத்து வார்த்தைகளே வரவில்லை.
அது அந்த குடியிருப்பு வளாகத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த வீட்டு உரிமையாளர்களின் பெயர் பலகை.
வீட்டு எண், அதன் பக்கத்தில் உரிமையாளர்களின் பெயர் என இருக்கும். மருத்துவர், பொறியாளர், வக்கீல், போலீஸ் என்று அவர்களின் பதவியும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், நேற்று வரை அவர்களின் பெயர்கள் வானதி, இளங்கோ என்று மட்டுமே இருக்க, இன்று அதில் இருந்த மாற்றம் அவளுக்கு ஆனந்த அதிர்ச்சி தான்.
தன்னை நோக்கி திரும்பிய மனைவியிடம், “நேத்தே புது போர்ட் ரெடி. ஆனா, உனக்காக இன்னைக்கு வரைக்கும் வெயிட் பண்ணோம்” என்று இளங்கோ சொல்ல, “எனக்கு ஒரே ஒரு பெர்செண்ட் பயம் இருந்தது. நல்லவேளை வெயிட்..” என்றவளின் பேச்சை முறைத்து நிறுத்தினான் இளங்கோ.
“ஹேய்ய்ய்ய்ய்” என்று கத்தி குதித்து கைத் தட்டிக் கொண்டிருந்தாள் நட்சத்திரா.
“ம்மா, கீழ வா” என்று சொல்லி அம்மாவின் கன்னத்தில் ஈரம் பதிய முத்தமிட்டாள் நட்சத்திரா.
நேத்ரன் நோட்டீஸ் ஃபோர்ட்டை பொறுப்பாக புகைப்படம் எடுத்து அத்தை, மாமாவிற்கு அனுப்பி வைத்து கொண்டிருந்தான்.
சந்திரசேகர், தாமரையிடம் சொல்லிக் கொண்டு அம்மா வீடு சென்றார்கள். அந்நேரத்திற்குள் அவர்களுக்கு முடிவும் தெரிந்திருந்தது.
“ஆ காட்டு, வானதி” என்று சந்தோஷ கூச்சலிட்டு, ஒரு முழு லட்டை அவள் வாயில் திணித்தாள் அர்ச்சனா. கண்களில் வராத கண்ணீரை துடைத்து கை உயர்த்தி அவளை ஆசீர்வாதம் செய்தாள் அவள்.
“தள்ளி போ, அப்படி” என்று மனைவியை பின்னே தள்ளி வந்து தங்கையின் கைப் பிடித்தான் மாதவன்.
“அம்மா, ரூம்ல இருக்காங்களா ண்ணா?”
“ம்ம், வா” என்று தங்கையை உள்ளே அழைத்துச் சென்றான்.
பாக்கியம் கணவர் கிருஷ்ணமூர்த்தியின் புகைப்படத்தின் முன்னே அமர்ந்திருக்க, இளங்கோ நீட்டிய அவளின் தேர்வு முடிவுகள் இருந்த தாளை அப்பாவின் முன் வைத்து கண் மூடி நின்றாள் வானதி.
“அப்பா, இந்த நிமிஷம் ரொம்ப சந்தோஷப்படுவார் வானதி” தளுதளுத்த குரலில் சொன்னார் பாக்கியம்.
இளங்கோ மனைவியின் கைப் பிடித்து மாமியாரின் பாதம் பணிய, அவர்களைப் பின் பற்றி அவர்களின் பிள்ளைகளும் அம்மாச்சியின் பாதம் தொட்டார்கள்.
“என் தங்கங்க நல்லா இருப்பீங்க. எழுந்துக்கோங்க” என்ற பாக்கியம் பேத்தியை முதலில் தூக்கினார்.
“வாங்க, எல்லோரும் காஃபி, ஸ்நாக்ஸ் சாப்பிடலாம்” என்று அழைத்த அர்ச்சனாவின் கரத்தில் காஃபி, பால், தேநீர் கோப்பைகளுடன் வடையும், கேசரியும் இருந்தது.
பாக்கியம், மாதவனை அழைத்து ஏதோ எடுத்து வரச் சொன்னார்.
மகன், மகள் என இரண்டு பிள்ளைகளின் குடும்பத்திற்கும் புது துணிகளும், மகள், மருமகளுக்கு தங்க நாணயமும், பூ, மஞ்சள், குங்குமமும் வைத்து கொடுத்தார் அவர்.
“ரெட், எனக்கு பிடிச்ச கலர். ஆமா, எப்போத்த ஷாப்பிங் போனீங்க? என்கிட்ட சொல்லவேயில்ல?” என்று அர்ச்சனா கேட்க, பாக்கியத்தின் கண்கள் அனிச்சையாக மகனை நோக்கவும், திரும்பி கணவனை முறைத்தாள் அவள்.
“ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாடியும் ஒரு பெண் இருக்கா. அப்படி பார்த்தா, உங்க ப்ரோமோஷனுக்கு மோட்டிவேஷன் நான் தான். எனக்கு கிஃப்ட் எங்க?” என்று அர்ச்சனா கேட்க, “இதோ..” என்று மலர்ந்த புன்னகையுடன் மனைவியின் கையில் நகைப் பெட்டியை திணித்தான் மாதவன்.
“என்னங்க இப்படி ஷாக் கொடுக்கறீங்க” என்று அர்ச்சனா விழிகளை வியப்பில் விரிக்க, “வாவ், அப்பா. அம்மா சூப்பரா இருக்கும்மா” என்று பெற்றோரிடம் வந்தாள் ஹரிணி.
அவளின் சேமிப்பில் இருந்து அத்தைக்கு சிறிய பரிசு பொருள் வாங்கித் தந்திருந்தாள் பெரிய மனுஷி.
அன்றிரவு உணவை அமிர்தா பவனில் உண்டு விட்டு நிறைந்த மனதுடன் வீடு சென்றார்கள் அவர்கள்.
மதியழகி, அருள் செல்வன், நிகிதா, அர்ச்சனாவின் பிறந்த வீடு, வானதியின் நட்புகள், உடன் பயின்றவர்கள், ஆசிரியர்கள், இளங்கோவின் நண்பர்கள் என அழைப்புகளும், வாழ்த்துகளும் அவர்களுக்கு வந்த வண்ணமிருந்தது.
ஊரே உறங்கிய பின்னரும் உறக்கம் வராமல் விழித்திருந்த வானதியை அணைத்தபடி இளங்கோவும் படுக்கையில் அமர்ந்திருந்தான். மனைவியின் எத்தனை வருட கனவு அது. அவளின் காதலை போலவே கனவையும் நிறைவேற்றி தந்ததில் அவன் மனம் முழுக்க ஆழ்ந்த அமைதி பரவியது.
“என்ன யோசனை?” காற்றை போலவே தீண்டியது அவன் குரல்.
“அடுத்து என்ன பண்றது? ஐடியா குடுங்களேன்” என்றாள் வானதி. கொடுத்தான்.
“என்ன நீங்க? கொஞ்சமாவது பொறுப்பா பதில் சொல்றீங்களா?. நீங்க முடிவை என் பக்கம் தள்றீங்க இளங்கோ” என்று அவள் குரல் உயர்த்தி கத்த, அன்றே சண்டையிட மனமில்லாமல் தன் மௌனத்தை மனைவிக்கும் கொடுத்து, அவளுடன் மெல்ல சரிந்து உறக்கத்தை தழுவினான் இளங்கோ.
ஒரு மாதம் ஓடியிருந்தது. அவளைத் தேடி நிறைய வேலை வாய்ப்புகள் வந்திருந்தது. சொந்தமாக தணிக்கை நிறுவனம் தொடங்கும் ஆலோசனை நிறைய பேர் வழங்கினார்கள். ஆனால், வானதியால் ஒரு முடிவிற்கும் வர முடியவில்லை.
அவளின் நிரந்தர கூடான குடும்பத்திற்குள் மூழ்கிப் போனாள் அவள்.
அத்தை, மாமாவுடன் கோவிலுக்கு செல்வது, பிள்ளைகளுடன் படிப்பு, விளையாட்டு, நீச்சல் பயிற்சி, அம்மா வீட்டுக்கு செல்வது, அம்மாவை கோவில், மருத்துவனை அழைத்துச் செல்வது, அண்ணியுடன் வெளியே செல்வது என மிக இனிமையாக கழிந்தது அவளின் நாட்கள்.
“வானு, என்ன?” என்று மாதவன் அவளை வலுக்கட்டாயமாக நிறுத்திக் கேட்க, “ஒன்னுமில்ல ண்ணா” என்று சமாளிக்க பார்த்தாள் அவள்.
“ஓகே” என்றவனும் முடிவை நோக்கி அவளை துரிதப்படுத்தவில்லை.
மேலும், ஒரு மாதம் கடந்திருந்தது.
“வானதி” இரு முறை அழைத்து விட்டான் இளங்கோ.
“ம்மா, அப்பா அவங்க மொபைல் எங்கன்னு கேட்டாங்க?” என்று நேத்ரன் வர, “நான் பார்க்கலையே தம்பி. அம்மா மொபைல் எடுத்து அப்பா மொபைலுக்கு கால் பண்ணி கண்டுப்பிடிக்க சொல்லு” சமையல் வேலையில் மூழ்கி இருந்தவள், அடுப்பில் இருந்து கண்களை அகற்றாமல் சொல்ல, “உங்க மொபைலும் அங்க இல்லைனு அப்பா சொன்னாங்க” என்றான் அவன்.
“இரு நானே வர்றேன்.” என்று அவள் அடுப்பை குறைத்து விட்டு உள்ளே செல்ல, “நான் குளிக்கப் போறேன் ம்மா” என்று ஓடினான் நேத்ரன்.
வானதி படுக்கை அறைக்குள் நுழைய, மார்பின் குறுக்கே கைகளை கட்டியபடி அவளையே முறைத்துக் கொண்டு நின்றிருந்தான் இளங்கோ.
“ஓ, சார் கோபமா இருக்காங்களா? நானும் கோபமா தான் இருக்கேன்” என்று அவனுக்கு கேட்கும் படி சொன்னவள், உதடு சுளித்து விட்டு, படுக்கைக்கு பக்கத்தில் இருந்த மேஜையில் இருந்து இளங்கோவின் அலைபேசியை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
“ம்க்கும்” என்று அவன் தொண்டையை செரும, காதில் வாங்காமல் வெளியில் சென்று விட்டாள்.
இளங்கோ காரில் ஏறும் போதும் மனைவியின் முகம் பார்த்தே அமர்ந்தான்.
“நான் ஆபீஸ் போய்ட்டு உனக்கு கார் அனுப்பறேன்” என்று அவன் சொல்ல, தலையை மட்டுமே அசைத்தாள் வானதி.
இளங்கோ, “திமிரு” என்று பல்லைக் கடித்துக்கொண்டு மனைவியை திட்ட, “பார்வையை பாரு, ஆள் முழுங்கி” என்று முணுமுணுத்தாள் வானதி. சடுதியில் ஈரமாய் அவன் உதடுகளில் புன்னகை தோன்றிட, அதை மறைக்க முயற்சிக்கவில்லை அவன்.
கண்களில் கணவனின் புன்னகை முகம் இருக்க, அப்படியே திரும்பி வீடு நோக்கி நடந்தாள்.