“இந்த மதி பொண்ணுக்கு போன் பண்ணி குடும்மா. பேசி நாலு நாள் ஆச்சு” அவளைப் பார்த்ததும் தாமரை சொல்ல, காணொளி அழைப்பில் மதியழகியை இணைத்து கொடுத்து விட்டு, தோசை ஊற்ற சமையல் அறை சென்றாள் அவள்.
உணவு மேஜையின் ஓரமாக மடிக் கணினி இருக்க, மதியுடன் பேசிக் கொண்டே மொத்த குடும்பமும் காலை உணவை உண்டார்கள்.
“அம்மா லேப்டாப் பத்திரம் நேத்ரா” என்று மகனிடம் எச்சரித்து விட்டு சமையல் அறை சென்றாள் வானதி.
அவளும் காலை உணவை முடித்து, அன்று விடுமுறை என வீட்டில் இருந்த பிள்ளைகளுடன் பேக்கிங் செய்துக் கொண்டிருந்தாள்.
“அம்மா, ம்மா, நான் மிக்ஸ் பண்றேன் ம்மா, பிளீஸ்” என்று நட்சத்திரா கத்த, மகளுக்கு சொல்லிக் கொடுத்து, அவள் கீழே மேலே சிந்துவதை துடைத்தபடி நின்றிருந்தாள் அவள்.
“உங்கண்ணியா? வேலைக்கா? என்னை கேட்டா? ஏன் நீ அவகிட்ட நல்லா தானே பேசுற? நீயே கேட்க வேண்டியது தானே?” என்று தாமரை மகளிடம் சொல்வது அவளின் காதில் லேசாக விழுந்தது.
“அதை விடு. உன் மூத்தார் பொண்ணு லவ் பண்ணுதுன்னு சொன்னியே? அந்தப் பிரச்சினை என்னாச்சு?” என்று கேட்டவர், “எனக்கு இந்த லவ், கிவ்வுனு யாராவது சொன்னாலே ஆத்திர ஆத்திரமா வந்துடுது” என்று அவர் கூடத்தில் அமர்ந்து கோபமாக சொன்னாலும், அவள் காதில் தெளிவாக விழுந்தது. அதைக் கேட்டதும் வானதிக்கு முன்பு போல வருத்தமாக இல்லை. மெலிதான புன்னகையுடன் பிள்ளைகளின் மேல் கவனத்தை வைத்தாள் அவள்.
“இந்தா, உன்கிட்ட மதி பேசணுமாம்” என்று மடிக் கணினியை அவளிடம் நீட்டினார் தாமரை.
“போதும், குட்டி. அம்மா, அத்தைகிட்ட பேசிட்டு உங்களை கூப்பிடுறேன். நீங்க ஹாலுக்கு போங்க” என்று வானதி சொல்ல, கைகளை கழுவி கொண்டு வெளியில் சென்றார்கள் பிள்ளைகள்.
“சொல்லுங்க அண்ணி” வானதி கேட்க, பொதுவான நல விசாரிப்புகளுக்கு பிறகு, “என் ப்ளவுஸ் இன்னுமா அண்ணி ரெடியாகல? இந்த பொட்டிக் ஆளுங்க என்ன இப்படி இழுத்து அடிக்கறாங்க. நீங்க நேரா போய் கொஞ்சம் சத்தம் போட்டுட்டு வரலாம், இல்ல? இவர் தம்பி பத்து நாள்ல இங்க வர்றார். அவர்கிட்ட நீங்க குடுத்து விடுவீங்கன்னு எதிர்பார்த்தேன்” என்று மதியழகி படபடவென பேச,
“நேத்து நானும் அத்தையும் போய்ட்டு வந்தோம். ரெண்டு நாள்ல தந்துடுறேன்னு சொல்லியிருக்காங்க. ப்ளவுஸ் அல்மோஸ்ட் ரெடி, நான் வாங்கிப் பார்த்திட்டு தான் வந்தேன்” என்று வானதி சொல்லவும்,
“அப்பாடா” என்று பெருமூச்சு விட்டாள் மதி.
“ஆமா, அம்மா கூட போனேன்னு சொன்னீங்க இல்லண்ணி. அம்மா, ப்ளவுஸ் பார்த்திட்டு என்ன சொன்னாங்க?”
“இதென்னம்மா இப்படி இருக்கு? ஒரு சட்டை துணிக்கு இவ்வளவு வேலையான்னு அசந்து போய்ட்டாங்க அத்தை”
“ஹாஹாஹா, அம்மா என் கல்யாண ப்ளவுஸ் பார்த்தே இதெல்லாம் எப்படி பண்ணாங்கன்னு ஆச்சர்யப்பட்டாங்க அண்ணி” என்றாள் மதியழகி.
“ம்ம், ஞாபகம் இருக்கு. நேத்து அத்தை சொல்லிட்டு இருக்கும் போதே ப்ளவுஸ் ரெடின்னு பேமெண்ட் கேட்டாங்க.”
“ஐயையோ, அம்மாகிட்ட மாட்டினேன்” என்று மதியழகி அலற, “நான் அவங்களுக்கு காசு கொடுத்து வீடு வர்ற வரைக்கும் பேசி தீர்த்துட்டாங்க அத்த” என்றாள் வானதி சிரிப்புடன்.
“இப்போ மறந்துட்டாங்க போல அண்ணி. அதான், என்னை திட்டல” என்று அவள் சொல்ல, “ஹலோ, அது என் ஜாக்கெட்னு நினைச்சு தான் அவ்ளோ திட்டு. ஒரு சேலைக்கு சட்டை துணி தைக்க, பன்னென்டாயிரம் யாராவது கொடுப்பாங்களா? அந்த காசுல பத்து சேலை எடுத்துடலாம். என் பிள்ளை சம்பாதிக்கிற காசை இப்படியா கரியாக்குவாங்க?…” என்று வானதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடையிட்டு,
“அச்சோ, சாரி அண்ணி” என்றாள் மதி.
“ம்ம். இட்ஸ் ஓகே. நான் பொறுமையா ரொம்ப நேரம் கழிச்சு அது உங்க பொண்ணு ஜாக்கெட்னு சொன்னதும்..”
“எங்கம்மா திருதிருனு முழிச்சுருப்பாங்களே” என்று சொல்லி மதியழகி சிரிக்க, வானதி புன்னகையுடன் திரும்ப அவள் முன்னே நின்றிருந்தார் தாமரை.
“நான் ஜாக்கெட் வாங்கி அத்தைகிட்ட கொடுக்கிறேன். உங்களுக்கு வேற எதுவும் வேணும்னாலும் சொல்லுங்க. நாங்க வாங்கி கொடுத்து விடுறோம்.” என்று வானதி பேச்சை மாற்ற, “சரிங்கண்ணி” என்றாள் மதி.
தாமரை, “இங்க குடும்மா” என்று வெடுக்கென மடிக் கணினியை அவளிடம் இருந்து வாங்கிக் கொண்டு மகளிடம் பேசச் சென்றார்.
அவர் மதியை வார்த்தையால் மிதிப்பது, வானதியின் காதில் விழ, அமைதியாய் தன் வேலையை கவனித்தாள் அவள்.
“12000. சும்மா வருதா உனக்கு? உன் முகூர்த்த புடவை விலை என்ன தெரியுமா?”
“சொத்து பிரிக்க அவ்ளோ சண்டை போட்டியே?”
“இப்பவும் உங்கண்ணி மாசம் எத்தனை லட்சம் சம்பளம் வாங்கப் போறான்னு என்கிட்ட கேட்டுட்டு.. இப்படி காசை வாரி இறைச்சுட்டு இருக்க. காசு அருமை தெரியல உனக்கு” மகளை கத்திக் கொண்டிருந்தார் தாமரை.
அரை மணி நேரம் சண்டையும், சமாதானமும் முடித்து, அழைப்பின் தொடர்பை துண்டித்து கணவரிடம் சென்று அமர்ந்தார் அவர்.
“இந்த அருள் பையன் என்னன்னா, அண்ணா இடத்தை எப்போ வித்து எனக்கு காசு தருவாருன்னு கேட்கறான். அவன் மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்கான்னு தெரியல”
“இங்க வந்திருந்தப்போ இளங்கோ, மதி, அவங்க பிள்ளைங்க கூட எல்லாம் நல்லா பேசினான். அதுங்க கேட்காததை எல்லாம் வாங்கிக் கொடுத்தான். ஆனா, அவன் பொண்டாட்டிகிட்ட ஃப்ளைட் டிக்கெட் இத்தனை லட்சம் ஆச்சு. இப்போ வரை செலவு இவ்வளவு ஆச்சுன்னு எப்போ பார்த்தாலும் எகிறிட்டு திரிஞ்சான். ஆனா, என்னைப் பார்த்ததும் வாயை மூடிக்கிட்டான்” என்று அவர் புலம்ப, மெலிதாக புன்னகைத்தார் சந்திரசேகர்.
“என்னடா, நாங்க உனக்கு நியாயமா செய்யலன்னு நினைக்கிறியான்னு நான் கேட்டா, என்னம்மா பேசுற, அந்த இடம் இருபது லட்சம் வருமா? அது என் நாலு மாச சம்பளம்னு சொல்றான். அப்படி சம்பளம் வாங்குறவன் தான், நம்மை பார்க்க வந்ததுக்கு ஃப்ளைட் டிக்கெட் கணக்கு பாக்கறான். நம்ம பிள்ளைங்க என்ன இப்படியாகிட்டாங்க? நான் தான் சரியா வளர்க்கலையோ?” மனதில் உள்ளதை எல்லாம் சொல்லி அவர் அங்கலாய்க்க, அதை பத்தாவது முறையாக கேட்கும் சந்திரசேகர்,
“விடு தாமர. அவனுக்கு பாசமும் இருக்கு. ஆனா, பணத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கறான். அதுக்காக தங்கச்சியை திட்டவும் செஞ்சிருக்கான். எல்லாம் அவங்களுக்கு தெரியும். அவங்களை, அவங்க போக்குல விடு” என்றார் முடிவாக.
“அதுங்க ஒரு பக்கம்னா, இதுங்க ஒரு பக்கம். என்னமோ மாத்தி மாத்தி மூஞ்சியை பார்த்திட்டு பேசாம இருக்குதுங்க” என்று இளங்கோவையும், வானதியையும் அவர் சொல்ல, அதைக் கேட்டவளின் இதழ்களில் புன்னகை நெளிந்தது.
“என்ன தான் உன் முடிவு?” அன்றிரவு இளங்கோ அவளை நகர விடாமல் நிறுத்தி கேட்க, “நீங்க சொல்லுங்க” என்றாள் அவள்.
இளங்கோ அவளை இமைக்காமல் பார்க்க, வானதியின் இதழ்கள் அவளையும் அறியாமல் பிரிந்தது.
“சிரிக்காத..” அதட்டினான்.
அப்போது தான் சத்தமாக சிரித்தாள்.
அவளின் தேர்வு முடிவுகள் வெளிவந்ததும், அவள் பணிபுரிந்த நிறுவனத்தில் இருந்து பலரும் அவளை வாழ்த்தினார்கள்.
இரண்டே வாரங்களில் அவளின் முன்னாள் நிறுவனத்தில் இருந்து அவளுக்கு அலுவல் ரீதியான மெயில் வந்திருந்தது. அதில் திரும்பவும் தங்களுடன் இணைந்து பணி புரிய விருப்பமா என்று அவளை கேட்டிருந்தார்கள்.
அவள், “யோசிக்கிறேன்” என்று பதில் அனுப்பவும், அவர்களின் நிறுவனத்தில் அவள் பத்தாண்டுகள் பணி புரிந்த அனுபவத்தை, திறமையை குறிப்பிட்டு, “அசிஸ்டன்ட் ஜெனரல் மேனேஜர்” பதவியை அவளுக்கு அளிப்பதாக உறுதி செய்து கடிதத்தை (ஆஃபர் லெட்டர்) அனுப்பி வைத்தார்கள்.
அதைக் கண்டதும், “என்னங்க இது?” என்று வானதி அதிர, “போஸ்டிங் ஓகே. ஆனா, பேக்கேஜ் கம்மி தான்” என்று அவர்கள் குறிப்பிட்டிருந்த பல லட்சங்களை பார்த்து அதிருப்தியாக சொன்னான் இளங்கோ.
“என்னது?” என்று அதிர்ந்த வானதி, “எங்கது இந்திய நிறுவனம். உங்களை போல ஜப்பான் கார் கம்பெனி இல்ல” என்று சிலிர்த்துக் கொண்டாள் வானதி.
“அப்போ நீ எங்க கம்பெனி வந்திடு” என்று இளங்கோ கண் சிமிட்ட, “ஆ, வேலை பார்க்கிற ஐடியா இல்லையா, உங்களுக்கு?” என்று அவன் இடுப்பில் இடித்தாள் அவள்.
சிரித்தான் அவன்.
பலரும் அவளுக்கு சொந்த தணிக்கை நிறுவனம் தொடங்கும் ஆலோசனையை வழங்க, “அது பிசினஸ் போல வானதி. நிறைய டென்ஷன் இருக்கும். நல்ல கிளையண்ட்ஸ் அமைய சில வருஷம் ஆகும். நான் சொல்லி தான் உனக்கு இது தெரியணும்னு இல்ல. யூ நோ இட். அதையெல்லாம் விட நீ நாலு பேருக்கு வேலை கொடுத்து, நடத்தணும். முடியுமா?” என்று கேட்டான் மாதவன்.
“அதெல்லாம் அவளால முடியும். பொறுப்பா அவளுக்கு அண்ணன் மாதிரி பேசுங்க” என்று அதட்டிய அர்ச்சனா, “நீ பிளஸ் அண்ட் மைனஸ் ரெண்டையும் யோசிச்சுக்கோ வானதி” என்றாள்.
இளங்கோ கிட்டத்தட்ட அதையே அவளிடம் சொல்லி, “நீ முடிவெடு” என்றிருக்க, அவளுக்கு வேலைக்கு செல்லவே விருப்பம் எனினும் தன் முடிவை கணவனும் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்தாள்.
அவனோ, “உன் முடிவுதான்” என்று சொல்லிவிட, முட்டிக் கொண்டார்கள்.
இப்போது அவளை இறுக்கமாய் பற்றி, அவளின் முகம் நிமிர்த்தி, “என்ன?” என்று பல்லைக் கடித்தான்.
“நான் வேலைக்கு போறேன். இன்னைக்கே கம்பெனிக்கு ஓகேன்னு சொல்லி ரிப்ளை போட்டுடுறேன்” கணவனின் கண்ணை பார்த்து வானதி நிதானமாக சொல்ல, “இல்ல, நேர்ல போய் பேக்கேஜ் பேசு. இன்னும் பெட்டர் பேக்கேஜ் அவங்க தரலாம். ஏன்னா உனக்கு அவங்க ஆஃபர் பண்ற போஸ்டிங் பெருசு. அதுக்கு அப்புறம் நீ ஓகே சொல்லலாம்” என்றான் தீர்க்கமாக.
“ஓகே” என்றவள், அப்போதும் முகம் திருப்பிக் கொண்டாள்.
“என்ன?” இளங்கோ கோபமாக கேட்க, “இத்தனை நாள் பதில் சொல்லாம, எனக்கு முடிவெடுக்க ஹெல்ப் பண்ணாம இருந்தீங்க இல்ல?” என்று கோபமாக சொன்னவள், விலகி படுத்தாள்.
இளங்கோ சிரிப்புடன் கண்ணை மூடினான்.
“டைம்மாச்சு வானதி” ஒரு வாரம் கழித்து இளங்கோ கைக் கடிகாரத்தை பார்த்தபடி கத்த, அவனுக்கு பதிலே சொல்லாமல் பின்னால் வந்து நின்றாள் வானதி.
“ஆல் த பெஸ்ட்ம்மா” என்று சந்திரசேகர் சொல்ல, மருமகளை பார்த்து தலையசைத்தார் தாமரை.
அவர்கள் நேராக அம்மா வீடு செல்ல, மனைவியை இறக்கி விட்டு, “சீக்கிரம்” என்று கத்தினான் இளங்கோ.
“அம்மா..” என்று கத்திக் கொண்டே உள்ளே போன வானதி, “இந்தம்மா, அண்ணி டிரை க்ளீனிங் கொடுத்த சேலைங்க. அவங்க வந்ததும் கொடுத்திடு. அண்ணா ஷர்ட்ஸ் இதுல இருக்கு.” என்று பரபரப்புடன் அவள் நீட்டியதை வாங்கிக் கொண்டார் பாக்கியம்.
“மூச்சு விட்டு பேசு” பாக்கியம் மகளை அதட்ட, “இதுல உனக்கு களி இருக்கு மா. அத்த கொடுத்தாங்க. அதுக்கு கீரை கடையல் நான் பண்ணேன். இந்தா” என்று அவள் நீட்ட, “நீயா செஞ்ச?” என்று பாக்கியம் ஆரம்பிக்க, “ம்மா, இப்பவே ஆரம்பிக்காத. நான் சமையல் உன்கிட்ட இருந்து தான் கத்துக்கிட்டேன். நல்லா இல்லனா அதுக்கு நீ தானபொறுப்பு” என்ற மகளை கண்ணை சுருக்கி பார்த்தார் அவர்.
“இரும்மா. அப்புறமா கோபப்படுவ, இப்ப நான் சொல்றதை கேளு” என்றவள்,
“வீட்டு வேலைக்கு கோமதி வருவாங்க. அவங்க வர்ற வரைக்கும் நீ எதுவும் செய்யாம உட்காரு போதும். பதினொரு மணிக்கு கவிதாஞ்சலி வர்றேன்னு சொல்லியிருக்காங்க. கோலம் போடுறதுன்னா போடு. இல்லையா ஏதாவது சமையல் பண்ணு. அந்த பொண்ணு வீடியோ எடுத்துட்டு போவாங்க. ரெண்டு நாளைக்கு முன்னாடி எடுத்தது எடிட் பண்ணி ஈவ்னிங் தர்றேன்னு சொல்லி இருக்காங்க. அண்ணி, ஹரிணி ரெண்டு பேரும் பார்த்து ஓகே சொல்லிட்டா, வீடியோ அப்லோட் பண்ணிடலாம். அப்புறம்..”
“இந்தா தண்ணியை குடி” பாக்கியம் மகளை கரிசனத்துடன் பார்த்து தண்ணீரை நீட்ட,
“இரும்மா. எங்கத்தை எள்ளு பொடி, கறிவேப்பிலை பொடி ரெண்டும் செஞ்ச வீடியோ ரெடியா இருக்குனு கவிதாஞ்சலி சொன்னாங்க. நீ ஒருமுறை பார்த்து ஓகேவான்னு சொல்லும்மா. அப்புறம் அத்தை நல்லா வந்திருக்குன்னு ஏற்கனவே பார்த்து சொல்லிட்டாங்க. நீ பார்த்திட்டு உன் ஓபினியன் மட்டும் சொல்லும்மா”
“சரி, சரி. நீ முதல்ல மூச்சு விட்டுப் பேசு” என்றவர், மகளின் கையில் இருந்ததை வாங்கிக் கொண்டு, வேகமாக உள்ளே சென்று வந்து அவளின் நெற்றியில் திருநீறும், குங்குமமும் பூசி விட்டார்.
“வரேன் ம்மா” என்று சிட்டாக பறந்தாள் வானதி.
அதுவரை, “எனக்கு நேரமாச்சு” என்று பதறிய இளங்கோ, மனைவி திரும்பி வந்து அமர்ந்ததும், மிக நிதானமாக காரை செலுத்தினான்.
“யூ கேன் டூ இட் வானதி, ரிலாக்ஸ்” என்று அவன் சொல்ல, ஆழ்ந்த மூச்செடுத்து இருக்கையில் கண் மூடி சாய்ந்தாள் வானதி.
அவளின் நிறுவனத்திற்கு சென்று வேலையை ஏற்றுக் கொள்வதாக கையெழுத்திட்டு கொடுத்து, தலைமை நிர்வாகத்தினரை சந்தித்து அவள் வெளிவரும் வரை அவளுக்காக காத்திருந்தான் இளங்கோ.
அலைபேசியை காதில் இருந்து எடுக்காமல் அலுவலக அழைப்புகளில் அவன் இருக்க, “இப்போ வந்துடுறேன்” என்று கண்களால் கெஞ்சி மீண்டும் அலுவலகத்திற்குள் சென்று வந்தாள் வானதி.
அவள் காரில் ஏறி அமர்ந்ததும், அவளது பணி ஓப்பந்ததை அவனிடம் நீட்டினாள்.
அதை வாங்காமல் அவளின் முகத்தை இழுத்து நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான் இளங்கோ.
“அசிஸ்டன்ட் ஜெனரல் மேனேஜர் வானதி, வாழ்த்துகள்” என்றான் மனதார. அவளின் நிறுவனம் அவள் கேட்ட தொகையை இறுதியில் அவளுக்கு வழங்க சம்மதிக்கவும் தான் வேலையை ஏற்றுக் கொண்டாள் அவள்.
அவளை வீட்டில் விட்டுவிட்டு அலுவலகம் சென்றான் அவன்.
அம்மா, அண்ணா, அண்ணி, அத்தை, மாமா, மதியின் குடும்பம், அருளின் குடும்பம், அதிலும் முக்கியமாக நிகிதா மற்றும் பிள்ளைகள் என்று அவளுக்கு ஒரே வாழ்த்து மழை தான் அன்று.
இரவு இளங்கோ வீடு வர அப்போதும் முறைத்துக் கொண்டே கணவனுக்கு கதவை திறந்து விட்ட மருமகளை பார்த்து தோளில் இடித்து கொண்டார் தாமரை.
“எதுக்கு சண்டை போடுதுங்க, எதுக்கு சமாதானம் ஆகுதுங்கன்னே தெரியல” என்று அவர் புலம்ப, “அப்படியே உன்னைப் போல” என்று கிண்டலாக மனைவியை பேசினார் சந்திரசேகர்.
“என்னங்க, மகன் வீட்டுக்கு வந்ததுல இருந்து பேச்செல்லாம் பலமா இருக்கு” என்று இடுப்பில் கை வைத்து தாமரை நிற்க, “மருமகளை உன்னை போலவே நல்ல பிள்ளைன்னு சொன்னேன். அது தப்பா?” என்று மனைவியை சமாதானப்படுத்தும் வழியில் இறங்கினார் அவர்.
“ப்பா..” அப்போது தான் உறங்க சென்ற பிள்ளைகள் இருவரும் இளங்கோவின் குரல் கேட்டு ஓடி வந்தார்கள்.
“பசங்க தூங்க போகட்டும், அவங்களை விடுங்க” கணவனுக்கு இரவு உணவை பரிமாறிய படியே வானதி சொல்ல, அவளை கடுமையாக முறைத்தான் இளங்கோ.
“ஆ, இதில் எனக்கு ஏதோ செய்தி இருக்கிறதே” என்று அவள் சந்தேகமாக திரும்பி நின்று கணவனை பார்க்க, “நான் நாளைக்கு ஜப்பான், போறேன்” என்றான் இளங்கோ கடுப்புடன்.
“தெரியுமே. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. உங்க லக்கேஜ் பேக் பண்ணிட்டேன்” என்று முணுமுணுத்து சமையல் அறை சென்றாள் வானதி.
“நீங்க ஒன் வீக்ல வந்துடுவீங்களா ப்பா” நேத்ரன் கேட்க, “எஸ் தம்பி. அம்மா ஆஃபீஸ் ஜாயின் பண்றதுக்கு முன்னாடி அப்பா வந்துடுவேன்” என்று அவன் சொன்னது, வானதியின் காதில் தெளிவாக விழுந்தது. அவர்களையே கண்ணெடுக்காமல் ரசித்துப் பார்த்தாள் வானதி.
அது அவளின் அழகான உலகம். அவர்களை சுற்றியே அவள் உலகம் சுழலும். அவள் எவ்வளவு உயர சிறகு விரித்து பறந்தாலும், அவள் விரும்பி இளைப்பாறும் கூடு அவளின் குடும்பம்.
“ஓகே ப்பா. குட் நைட்” என்று பிள்ளைகள் உறங்க செல்ல, வானதி தன் வேலையை பார்த்தாள்.
சமையல் அறை வேலையை முடித்து விட்டு, அவள் திரும்ப, இளங்கோ அங்கிருந்த தனக்கான பாலை எடுத்து குடித்து கோப்பையை கழுவி வைத்து, மனைவி அங்கிருப்பதையே சட்டை செய்யாமல், படுக்கை அறைக்குள் சென்றான்.
“இவரை..” என்று அவனைப் பின் தொடர்ந்து உள்ளே சென்ற வானதி, “இந்த ஜப்பான் கம்பெனி காரனை” என்று கோபமாக ஆரம்பிக்க, ஒற்றை கை நீட்டி இழுத்து அவளை படுக்கையில் விழச் செய்தான் இளங்கோ.
“ஆ, என்னங்க…” என்று அவள் அதிர்ந்து கத்த, அவள் முகத்திற்கு நேராக தன் முகத்தை கொண்டு சென்று, “என்ன?” என்று கேட்டு புருவம் உயர்த்தினான் இளங்கோ.
அவள் முகம் திரும்ப, சட்டென அவளின் தாடையை அழுத்தமாக பற்றி தன்னை நோக்கி திருப்பினான்.
“உனக்கு இப்போ என்ன பிரச்சினை?” அவன் கேட்க, ம்ஹூம், அவள் பதில் சொல்லவில்லை.
“சரி. இப்போ என்ன பண்ணலாம்னு சொல்லு?” அவன் மீண்டும் கேட்க,
“என்ன பண்ணலாமா? நம்ம லைஃப்ல பதினாலு வருஷம் ரீவைண்ட் பண்ணி பின்னாடி போக முடியுமா?” என்று எதிர்கேள்வி கேட்டாள் வானதி.
இளங்கோ புதிதாக பிறந்த சுவாரசியத்துடன் மனைவியை பார்த்தான். அவன் கண்கள் குறும்பாக சிரிக்க, உதடுகள் குறுநகையில் பிரிந்திருந்தது.
“ம்ம்ம், பதினாலு வருஷம் பின்னாடி போய் என்ன பண்றதா உத்தேசம் வானதி மேடம்?” அவன் சீண்டலாக கேட்க, “ம்ம்ம்ம்ம், இதுவரைக்கும் நீங்க சொல்லாத ஐ லவ் யூவை சொல்ல வைக்கலாம்னு தான். அப்படி உங்களால சொல்ல முடியாதுன்னா, உங்களுக்கு காஃபி, காதல் எதுவும் கிடையாது” என்று அவள் போலி கோபத்துடன் கணவனை முறைத்து சொல்ல,
“அவ்ளோ தானே? பார்த்துக்கலாம் விடு. அப்பவும் நான் நேரா உன் வீட்டுக்கு வந்து, என் மாமனார் மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி கையை பிடிச்சு, பொண்ணு கேட்டு உன்னை கல்யாணம் பண்ணிடுவேன்”
“இது போங்காட்டம்” என்று அவன் மார்பில் அடித்து, “அப்ப கூட நான் கேட்ட அந்த வார்த்தையை சொல்ல மாட்டீங்க. அப்படித்தானே?” என்று அவள் சீற,
“என்ன பெரிய வார்த்தை? கல்யாணத்துக்கு அப்புறம் வர காதல் இருக்கே. அதுதான் பயங்கர ஸ்ட்ராங்கா இருக்கு வானதி. என் பொண்டாட்டி இவ. என் சொந்தம் இவன்னு, உன் மேல உறவும், உரிமையுமா ஒரு லவ் வருது தெரியுமா? ஐ லவ் தட். சோ, கல்யாணம் பண்ணிட்டு காதல் பண்ணுவேன் நான்” என்றான் தீவிரமாக அவள் முகம் பார்த்து,
“என்னது..? இன்னொரு முறை சொல்லுங்க?”
“கல்யாணத்துக்கு அப்புறம் வர்ற லவ் மக்கு. அதான், காதலின் இரண்டாம் அதிகாரம். அதைச் சொன்னேன் வானதி” என்றான் மயக்கும் புன்னகையுடன்.
“ஆஹா, காதல் அதிகாரம் இரண்டு. ம்ம்” என்றவளை இழுத்து அணைத்து முத்தமிட்டான்.
அவர்களின் காதலும் தன் இரண்டாம் அதிகாரத்தை, “ம்ம்ம்ம்ம்” என்று அவர்களை போலவே ரசித்து தொடர வைத்தது.
இந்த புரிதலும், அன்பும், அனுசரணையும், காதலும் அவர்களுக்கு நடுவில் இருக்கும் வரையில், எந்த பிரச்சினையையும் அவர்கள் எளிதாக கடந்து நிறைவாக வாழ்வார்கள்.