அவர்களுக்கு திருமணமாகி இத்தனை ஆண்டுகளில் இளங்கோ வெளிமாநிலங்கள், வெளிநாடு செல்வது வாடிக்கையாகி இருந்தது. அவன் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு முறையும் வானதி விழிப்புடனே இருப்பாள். இம்முறையும் அதுவே தொடர்ந்தது.
கணவனின் கேள்விக்கு, “உங்க மெஸேஜ் சத்தத்தில்தான் முழிச்சேன்.” என்று பதில் சொன்னாள் வானதி.
“ஓகே. நாளைக்கு ஆபீஸ் இருக்குல்ல? நீ தூங்கு. நான் மார்னிங் பேசுறேன்”
“ம்ம்” இருவரும் அழைப்பைத் துண்டிக்காமல் ஒருவரையொருவர் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“உனக்கு ரெண்டு வாரம் டைம் இருக்கு. உன்னால முடியுமான்னு நல்லா யோசிச்சு பாரு. அப்புறமும் உன் முடிவு மாறலைன்னா, எனக்கும் ஓகே” திடீரென்று இளங்கோ சொல்லவும், அதை எதிர்பார்த்திராத வானதி ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன் கணவனைப் பார்த்தாள்.
“நிஜமாவா சொல்றீங்க?” கிட்டத்தட்ட கத்தினாள்.
இதற்காகதான் சண்டையிட்டு பேசாமல் திரிந்தார்கள். இப்பொழுது வேறொரு நாட்டில் அமர்ந்து அவன் சம்மதம் சொல்லவும், அவளால் தன் மகிழ்ச்சியை கூட முழுதாக வெளிப்படுத்த முடியவில்லை.
“முதல்ல நல்லா யோசின்னு சொன்னேன் வானதி”
“யோசிச்சா? வேணாம்னு சொல்லிடுவேன்னு சொல்ல வர்றீங்களா?”
“வானதி” அவன் குரலில் கோபத்தின் சாயல் தெரிய, காணொளியில் அவன் கண்களை கூர்ந்தாள் வானதி.
அதிகாலையில் அலாரம் ஒலிக்க, அவளால் கண்களைத் திறக்கவே முடியவில்லை. ஒரு ஐந்து நிமிடம் என நினைத்து புரண்டு படுத்து உறங்கி, அவள் மீண்டும் கண் விழிக்கையில் மணி ஏழு என்றது கடிகாரம்.
“அச்சோ, லேட்டாகிடுச்சு” பதறி அடித்துக் கொண்டு மகனிடம் ஓடினாள்.
அவனை எழுப்பி குளியலறைக்குள் அனுப்பி விட்டு, தானும் முகம் கழுவி சமையல் அறைக்குள் நுழைந்தாள்.
7.45 க்கு நேத்ரனின் பள்ளி வாகனம் வந்து விடும். அதற்குள் அவன் குளித்து, பள்ளி சீருடை அணிந்து, காலை உணவு முடித்து கீழே சென்று நிற்க வேண்டும்.
அதற்கு முன் வானதி காலை, மதிய உணவு இரண்டையும் தயாரிக்க வேண்டும். எப்போதும் முன்தின இரவே மறுநாளுக்கான சமையலை முடிவு செய்து விடுவாள்.
ஆனால், இன்றைக்கு தாமதமாக எழுந்ததால் அவள் திட்டமிட்டது போல எதையும் செய்ய நேரம் வாய்க்கவில்லை. அவரசமாக குக்கரில் சோறு வைத்து, இன்னொரு அடுப்பில் பாலை காய்ச்சி பிள்ளைகளுக்கு சூடு பொறுக்க ஆற்றி எடுத்துச் சென்று மகளை எழுப்பி, பாலை குடிக்க வைத்தாள்.
“நேத்ரா, வெளில வாடா. வந்து இந்த பாலை குடிச்சுட்டு குளிக்கப் போ” என்று சத்தம் கொடுத்து விட்டு, அவசர அவசரமாக அவளுக்கான காஃபியை குடித்து முடித்தாள்.
மகன் பாத்ரூமில் இருக்க, நட்சத்திரா முகம் சுருக்கி, “அம்மா சுச்சூ வருது” என்றாள்.
“டேய், நேத்ரா. வெளில வாடா. நீ இன்னும் குளிக்கலை வேற” என்று கத்திக் கொண்டே மகளை அவர்களின் அறைக்கு அழைத்துச் சென்றாள்.
மகளையும், அடுப்படியையும் அடுத்த பத்து நிமிடங்கள் மாறி மாறி அவள் கவனித்துக் கொண்டிருக்க, “ம்மா, நான் குளிக்கப் போறேன்” என்ற மகனையும், கடிகாரத்தையும் ஒன்றாக பார்த்தவளுக்கு ரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிறி போனது.
அவளுக்கு காலை நேர பரபரப்பு இத்தனை வருடங்களில் பழகி இருந்தாலும் மனம் தானாக இளங்கோவைத் தேடியது. இரவு எவ்வளவு தாமதமாக உறங்கச் சென்றாலும் காலையில் அலாரம் வைக்காமலே ஐந்தரைக்கு எழுந்து விடுவான் அவன். வீட்டிலேயே உடற்பயிற்சி முடித்து, குளித்து விட்டு அவன் வரும் போது பிள்ளைகள் எழுந்திருப்பார்கள். அலுவலக வேலைகள் இல்லையென்றால் அவளுக்கு பிள்ளைகளை கிளப்ப உதவுவான். ஆனால், மகள் பிறந்ததில் இருந்து அவனுக்கு அலுவலக வேலைகள் கொஞ்சம் அதிகம்தான்.
வானதி பெருமூச்சுடன், “சீக்கிரம் குளிச்சுட்டு வா” என்று மகனிடம் கத்தி விட்டு, அவனுக்கு தோசை ஊற்றினாள். மறுபக்கம் மதியத்திற்கு எலுமிச்சை சாதம் தாளித்து, உருளைக் கிழங்கு பொரியல் செய்து, டப்பாவில் அடைத்து வைத்தாள்.
மகளுக்கு குட்டி கரடி தோசை ஊற்றி அதன் மேலே வெல்லம் தூவி அவளிடம் கொடுத்து விட்டு, மகனிடம் ஓடினாள். அவனுக்கு சீருடையை அணிவித்து, தாமதமானதால் அவளே தோசையையும் ஊட்டி விட்டாள். மகன் தண்ணீர் குடித்து குடித்து அதை முழுங்குவதைப் பார்க்கையில் அவளுக்கு தன் மேலே கோபமாக வந்தது.
ஒருவழியாக பரபரப்பாக கிளம்பி மகனின் பள்ளிப் பையுடன் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது 7.40 என்றது கடிகாரம்.
வீட்டுக்குள் ஓடி அலைபேசியை எடுத்து பள்ளி வாகனத்தின் ஓட்டுநரை அழைத்து, “அண்ணா, கொஞ்சம் லேட்டாகிடுச்சு. நேத்ரனுக்கு வெயிட் பண்ணுங்க, பிளீஸ்” என்று பதட்டத்துடன் கீழிறங்கி கொண்டே பேசினாள்.
பள்ளி வாகனம் அவர்களுக்காக காத்திருக்க, நேத்ரனை அதில் ஏற்றி விட்டு, “பை தம்பி” என்றவள், உள்ளுக்குள், “சாரி” என்று சொல்லிக் கொண்டாள்.
இனி மகளை கிளப்பி அம்மா வீட்டில் கொண்டு விட வேண்டும். அடுத்து அவள் அலுவலகம் செல்ல வேண்டும். வேக எட்டுக்கள் வைத்து அவள் வீட்டுக்குள் நுழைய, காணொளி அழைப்பில் வந்தான் இளங்கோ.
“நேத்ரன் ஸ்கூல் போயாச்சா? செல்லம் என்ன பண்றா?” என்று கேட்டவன், மனைவியின் முகம் பார்த்து, “என்னாச்சு? உன் முகம் ஏன் இப்படி இருக்கு?” என்று கேட்டான். அந்த அக்கறை அந்நேரம் அவளுக்குத் தேவையாக இருந்தது.
“லேட்டாகிடுச்சு”
“இட்ஸ் ஓகே வானதி. முதல்ல கொஞ்சம் தண்ணி குடிச்சுட்டு பேசு”
“ம்ம்” அவனையே பார்த்தபடி வாயில் காற்றை குவித்து ஊதினாள்.
“ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற? ரிலாக்ஸ். நேத்ரன் ஒருநாள் ஸ்கூல் மிஸ் பண்ணா ஒன்னும் மிஸ்ஸாகாது. ஓகே?”
“உங்களுக்கு மீட்டிங் இல்லையா? அங்க இப்போ பதினொரு மணியாகி இருக்கும் இல்ல?”
“ம்ம். கம்பெனி ஹெட்ஆபீஸ்லதான் இருக்கேன்.” என்றான்.
“ப்பா..” என்று மகள் கத்தவும், “அவகிட்ட பேசிட்டு போனை வைங்க. எனக்கு ஆபீஸிக்கு நேரமாச்சு” என்று கணவனிடம் சொல்லி, மகளிடம் அலைபேசியை கொடுத்து விட்டு உள்ளேச் சென்றாள்.
அன்று மகளையும் தாமதமாகதான் அம்மா வீட்டில் விட்டாள். அங்கிருந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கி அலுவலகத்தை அடையும் போது வானதி அரை மணி நேரம் தாமதமாக வந்திருந்தாள்.
அன்றைய நாள் முழுவதும் அவள் உடலில் அட்ரலின் சுரப்பு அதிகமாக இருந்தது.
இரவு உணவை அம்மாவின் வற்புறுத்தலில் அங்கேயே முடித்து எட்டு மணிக்கு வீடு வந்தாள். இளங்கோவிற்கு இரவு 11.30 என்றாலும் அந்நேரம் மனைவிக்கு அழைத்து அவர்களிடம் பத்து நிமிடங்கள் பேசி விட்டே படுக்கச் சென்றான்.
வானதிக்கு முன்தினம் உறங்காததில் விளைந்த சோர்வினால் அன்றிரவு நன்றாக உறங்கி, மறுநாள் மிக தாமதமாகத்தான் எழுந்தாள். நேத்ரன் பள்ளி வாகனத்தை தவற விட, அவளே பள்ளியில் சென்று விட்டுவிட்டு அம்மா வீடு சென்றாள்.
“புருஷன் ஊர்ல இல்லன்னா இப்படியா பொறுப்பில்லாம இருப்பாங்க வானதி? நீ எதுக்கு இப்படி கண்ணை கட்டின குதிரை மாதிரி ஓடுறன்னு எனக்குப் புரியல. பேசாம இன்னைக்கு லீவ் போட்டு வீட்ல இருந்திருக்கலாம் இல்ல? உன் மூஞ்சியை நீயே கண்ணாடியில பார்த்தியா? இல்லையா? நல்லா பேயறைஞ்சா மாதிரி இருக்க”
நட்சத்திராவை சோஃபாவில் அமர வைத்து அவளின் கன்னத்தில் முத்தமிட்டு கொண்டிருந்த வானதி, அம்மாவை அப்பாவியாக பார்த்து புன்னகைத்தாள்.
“லீவ் போடுன்னு சொன்னேன்” பாக்கியம் குரலை உயர்த்த, “முடியாது ம்மா” என்று எழுந்து கொண்டாள் வானதி.
“வானதி…”
“எனக்கு முக்கியமான வேலையிருக்கு மா. பிளீஸ், சொன்னா புரிஞ்சிக்கோங்க” மகளின் கன்னம் வருடி, “பை” சொல்லி, அம்மாவை திரும்பி பார்க்காமல் சென்று தன் வண்டியில் ஏறினாள். ஆனால், அலுவலகம் சென்ற பின்னர் உடலும், மனமும் சோர்ந்து துவள, அவளால் வேலையில் ஒன்ற முடியவில்லை. அன்றைக்கு அவள் பார்த்து முடிக்க வேண்டிய வேலைகளை எல்லாம் விரைவாக முடித்து, மதியத்திற்கு மேல் அனுமதி பெற்று வீடு வந்து விட்டாள்.
அவளைப் பார்த்ததும் அம்மாவின் முகத்தில் படர்ந்த நிம்மதியையும், மகள் தாவி அணைத்து வெளிப்படுத்திய மகிழ்ச்சியையும் கண்டு முகம் மலர புன்னகைத்தாள்.
“நீயில்லன்னா நான் என்னம்மா பண்ணுவேன்? நேத்ரனை, பாப்பாவை, ஹரிணியை எல்லாம் யார் பார்த்துப்பா?” பல நாட்களாக மனதில் ஓடியதை அவள் கேட்க, “இப்படிச் சொல்லியே என்னை பிள்ளை பார்த்துக்கற ஆயாம்மா ஆக்கிட்டீங்க நீயும், உங்கண்ணனும்” என்று அம்மா கிண்டலாக சொல்லவும், அவள் முகம் சுணங்க, சிரித்தார் பாக்கியம்.
நட்சத்திராவிற்கு வானதி உணவை ஊட்டி விட்டு உறங்க வைத்தாள். அம்மாவுடன் அமர்ந்து தானும் மதிய உணவை உண்டாள்.
“எப்போ பாரு லெமன் ரைஸ், தக்காளி சோறு, தயிர் சாதம், வெஜ் பிரியாணி, இதே தானா?” பாக்கியம் அவளின் மதிய உணவு டப்பாவை பார்த்து முகம் சுளித்து கேட்க, “நீங்க எங்களுக்கும் இதையேதான் மா ஸ்கூலுக்கு கொடுத்து விட்டீங்க” என்று கிண்டலாக சொல்லி சிரித்தாள் வானதி.
“சோம்பேறி கழுத. நான் சாம்பார், காரக் குழம்பு, ஏன் பூரி, சப்பாத்தி கூட உங்களுக்கு லஞ்ச்சுக்கு கொடுத்திருக்கேன்” என்று பெருமை பேசினார் பாக்கியம்.
“சரி விடு மா. நான் நல்ல அம்மா இல்லதான்” சட்டென எழுந்து சென்று கை கழுவினாள்.
வானதி வீட்டின் பின் பக்கம் செல்ல, ஐந்து நிமிடங்கள் கழித்து அவளுக்கு பக்கத்தில் வந்து அமர்ந்தார் பாக்கியம்.
“இந்தா காஃபி” அவள் கையில் காஃபி கோப்பையை கொடுத்து, “எதுக்கு உனக்கு இவ்வளவு கோபம் வருது?” என்று அவர் கேட்க, வானதியிடம் பதிலில்லை.
“மாப்பிள்ளை கூட இன்னும் பேசாமதான் இருக்கியா? என்னதான் சண்டை உங்க ரெண்டு பேருக்கும்?”
“ம்மா..” என்று அவள் கத்த, “என்ன சண்டை?” என்று மீண்டும் அழுத்தமாக கேட்டார் பாக்கியம்.
“சண்டை எல்லாம் ஒன்னுமில்ல. அச்சோ, நான் வீட்டுக்கு வந்துட்டேன்னு அவர்கிட்ட சொல்லணும். இருங்கம்மா, என் போனை எடுத்துட்டு வர்றேன்” என்று எழுந்த மகளின் கைப் பிடித்து, “உன்னை புரிஞ்சிக்கவே முடியல வானு” என்றவர், மகளை கோபமாக பார்த்து, “போனை கையில் வச்சுட்டு அதை எங்க போய் தேடப் போற?” என்று நக்கலாக கேட்டார்.
“ஓ..” என்று இடக்கரத்தில் இருந்த அலைபேசியை பார்த்து மொத்த பற்களையும் காட்டி சங்கடமாக சிரித்த வானதி, கணவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு அம்மாவை பார்த்தாள்.
பாக்கியம் கண்கள் கலங்க, “என்னதான் உன் பிரச்சனை வானு. கையில போனை வச்சுட்டு அதைக் காணோம்னு தேடுற. அன்னைக்கு ஷாப்பிங் மால்ல பில் போடும் போது உன் போன் நம்பரையே மறந்துட்டு என்னைச் சொல்ல சொல்ற. ஹரிணிகிட்ட கூட அப்படித்தான், எதையோ மறந்து.. சின்னப்பிள்ளை அத்தை மறந்துட்டீங்களான்னு கேட்கிற அளவுக்கு..” என்று அவர் அடுக்கிக் கொண்டே போக, “அம்மா, பிளீஸ்” என்று அவரின் கைப் பிடித்து தடுத்தாள்.
“இன்னொரு டைம் போய் டாக்டரை பார்ப்போமா?”
“எதுக்கும்மா? அதான் ஏற்கனவே பார்த்தாச்சே”
“ஆமா, ஒன்னுமில்லன்னு சொல்லிட்டாங்க. ஆனா, நீ இன்னும் மோசமா இல்ல போய்ட்டு இருக்க”
“அம்மா நிஜமா எனக்கு ஒன்னும் இல்லம்மா. ஞாபக மறதின்னா உடனே அம்னீஷியா, அல்சைமர்னு கூகிள் சொல்லவும் நானும் பயந்துதான் டாக்டர் பார்க்கப் போனேன்.”
“வேற நல்ல டாக்டர்..”
“ம்மா, எனக்கு ஒன்னுமில்ல மா. இது ஸ்ட்ரெஸ்னால வர்ற மறதி.”
“இந்த வயசுல உனக்கெல்லாம் என்ன ஸ்ட்ரெஸ்? அப்படியென்ன கவலை உனக்கு? நல்ல தங்கமான புருஷன், பிள்ளைங்க ரெண்டும் அவரை போலவே சொக்கத்தங்கம்” என்ற அம்மாவை முறைத்து, “உங்க கண்ணாடி எங்கம்மா? அதைப் போட்டு இதை படிங்க” என்று அலைபேசியை அவரிடம் நீட்டினாள்.
“என் கண்ணாடி டீவி டேபிள் மேல இருக்கும். போய் எடுத்துட்டு வா” என்று சொல்லி அலைபேசியை அவர் கூர்ந்து பார்க்க, சத்தமாக சிரித்தாள் வானதி.
பாக்கியம் அவளைத திரும்பிப் பார்க்க, “உங்க கண்ணாடி உங்க மூக்கு மேல இருக்கு மா. மறந்துட்டீங்க, பாருங்க” என்று சிரிப்புடன் சொன்னாள்.
பாக்கியம் அதைத் தொட்டுப் பார்த்து தானும் மகளோடு சேர்ந்து சிரித்தார்.
“இதுக்கு பேர் மறக்குறது இல்ல” என்று அவர் சொல்ல,
“எனக்கும் அப்படித்தான் மா. அது மறதி கிடையாது. அது ஒரு மாதிரி ஸ்ட்ரெஸ்னால வர்ற கவனக்குறைவு. அவ்ளோதான்.” மகளை அதிருப்தியுடன் பார்த்தார் பாக்கியம்.
“ஸ்ட்ரெஸ், டிப்ரஷன்னு நாங்க எல்லாம் கேள்விப்படாத வார்த்தையா சொல்லி எங்களை பயமுறுத்தறீங்க நீங்க. அப்படியென்ன கவலை உங்களுக்கு? எனக்குப் புரியல?” அம்மா கேட்க அமைதியாக அமர்ந்திருந்தாள்.
“உங்கண்ணியை பாரு, எந்நேரமும் இது இல்ல. அது வேணும்னு புருஷன்கிட்ட கத்தி சண்டை போட்டு அவளும் நிம்மதியில்லாம, வீட்ல இருக்க எங்க நிம்மதியையும் கெடுத்து, என்ன சாதிக்கப் போறான்னு எனக்கு சத்தியமா தெரியல. என் பிள்ளைக்கு என்ன குறைச்சல்? நீயே சொல்லு. மாதவன் நல்லா கை நிறைய சம்பாதிக்கிறான். சொந்த வீடு, ஒரே மக, வீட்டையும், மகளையும் பார்த்துக்க மாமியார்னு அவளுக்கு என்ன இந்த வாழ்க்கையில் குறையா இருக்குன்னு எனக்குத் தெரியல. உன்னைப் பார்க்கும் போதெல்லாம் வேற மாப்பிள்ள வேலையை சொல்லி சொல்லி காமிச்சு உங்க அண்ணனை கரிச்சு கொட்டுறா..”
“அம்மா, அவர் ஒன்னும் எடுத்ததும் ஒரு பெரிய கார் கம்பெனில சிஎஃப்ஓ பதவியில இருந்து வேலையை ஆரம்பிக்கல. இந்த இடத்துக்கு வர அவர் பதினைஞ்சு வருஷத்துக்கு மேல போராடி உழைச்சுருக்கார் மா”
“எனக்குத் தெரியாதா வானு? அது அர்ச்சனாக்கும் தெரியும். ஆனாலும், அவளால அதை சொல்லி பெருமூச்சு விடாம இருக்க முடியாது. உங்க அண்ணன் வெளிநாடு போய் பெட்டி பெட்டியா பணம் கொண்டு வரணும் அவளுக்கு.”
“ம்ம். ஆனா, அண்ணா போக மாட்டான். இல்லம்மா?”
“உங்கப்பா இல்லாம, அம்மா, பொண்டாட்டி, மகள்ன்னு எங்க மூனு பேரையும் தனியா விட்டுப் போக அவனுக்கு விருப்பமில்ல. ஆனா, அது அவன் பொண்டாட்டிக்கு புரியணும் இல்ல?”
“அண்ணிக்கிட்ட நான் பேசவா மா?”
“யாரு நீ?” என்று மகளை முறைத்து, “அவ்ளோதான். மாப்பிள்ளை வேலையை சொல்லியே உன்னை பிரிச்சு மேஞ்சிடுவா” என்றார்.
“உங்கண்ணா, அண்ணி ரெண்டு பேரும் வேலைக்கு போறாங்க. அவங்க சம்பளத்தை அவங்களேதான் பிளான் பண்ணி என்னமோ பண்றாங்க. நான் உங்கப்பா பென்ஷன் பணத்தை வச்சுதான் வீட்டை ஓட்டுறேன். இது சொந்த வீடு, அவங்களுக்கு வாடகை கவலை இல்லை. இந்த வீடும் நாளைக்கு முழுசா அவங்களுக்குத்தான் போக போகுது. அர்ச்சனா போட்டு வந்த நகை, என் நகை எல்லாம் அவங்க மக ஹரிணிக்கு தான். அப்புறம் எதுக்கு கிடந்து இப்படி அல்லாடுறான்னு எனக்குத் தெரியல. நாம இன்னும் செட்டில் ஆகல. உங்க தங்கச்சியை பாருங்க. இப்போவே வீடு, கார், நகைன்னு உங்கண்ணன் கிட்ட புலம்பியே..”
“ஏன் மா, உன் நகையுமா ஹரிணிக்கு கொடுக்கப் போற? அப்போ எனக்கு? என் பொண்ணுக்கு?” என்று கள்ளச் சிரிப்புடன் வானதி கேட்கவும், அவளின் முதுகில் அடித்தார் பாக்கியம்.
“அண்ணனுக்கு வீடும் கொடுத்து, நகையும் கொடுத்து, நீங்க என்ன பண்ணாலும், எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லம்மா. அண்ணி சந்தோசமா இருந்தா சரி. இளங்கோவும் ஒன்னும் சொல்ல மாட்டார்”
மகளை பெருமிதமும் அன்பும் நிறைய பார்த்தாலும், “இதையே சத்தமாக உங்கண்ணி முன்னாடி சொல்லிடாத” என்று எச்சரித்தார் பாக்கியம்.