வானதி சிரிக்க, “சரி, அதைவிடு. உன் பிரச்சனைக்கு வா. ஏன் கொஞ்ச மாசமாவே மந்திரிச்சு விட்ட மாதிரி இருக்க? உனக்கும், மாப்பிள்ளைக்கும் என்ன சண்டை?” என்று கேட்டார். முகத்தை நிமிர்த்தி வானத்தை வெறித்தாள் வானதி.
“வானு, கேட்கறேன் இல்ல? அதென்ன புருஷன்கிட்ட எவ்வளவு கோபமா இருந்தாலும், என்கிட்ட அவரை விட்டுக் கொடுக்க மாட்டேங்கறியே நீ”
“என் மேல எவ்ளோ கோபம் இருந்தாலும் என்னை என் மாமியார் கிட்ட விட்டுக் கொடுத்து பேசினதில்லம்மா அவர். என்னை எங்க மாமியார் பேசினாலும், உடனே அவங்களை பதிலுக்கு பேசிடுவார். அப்படியிருக்கும் போது அவரை நான் எப்படி அவர் மாமியார் கிட்ட போட்டுக் கொடுக்க முடியும்?”
வானதி என்ற முழுப் பெயர் சொல்லித்தான் மகளை அழைப்பார் கிருஷ்ணமூர்த்தி.
கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் புதினத்தின் மேலான பிடித்தத்தில் தான் மகளுக்கு வானதி என்று பெயரிட்டார்.
அவளுக்காக ராஜாராஜ சோழனை அவர் தேட, மகளுக்கு இளங்கோவைத் தான் பிடித்தது.
மகனின் காதலை ஏற்றுக் கொண்டவர், மகளின் காதலை முழு மனதுடன் அங்கீகரிக்க மறுத்தார்.
வானதி அப்பாவை மிரட்டிதான் தங்களின் திருமணத்திற்கு சம்மதம் வாங்கினாள். ஆரம்பத்தில் அசட்டையாக இருந்தாலும், மகளின் வாழ்வைப் பார்த்து இளங்கோவை அவருக்கு மிகவும் பிடித்துப் போனது.
மாமனார் மெச்சிய மருமகன்தான் இளங்கோ.
“இப்போ நம்ம கூட அப்பா இருந்திருந்தா நல்லாருக்கும்னு டெய்லி நினைக்கிறேன் மா”
“நானும்தான். ஆனா, அதுக்காக அப்பாவை நினைச்சு ஏங்கி, நீ உன் வாழ்க்கையை கெடுத்துக்கிட்டா அப்பாவுக்கு அது பிடிக்கும்னா நினைக்கிற?”
“இல்லம்மா. அப்பாவுக்கு பிடிக்காதுதான். நட்சத்திரா வயித்துல இருக்கும் போதுதான் இவர் சிஎஃப்ஓ ஆனார். அதுக்கு முன்னாடியும் இவர் பிஸியாதான் இருந்தார். ஆனா, சிஎஃப்ஓ ஆனதும் சண்டே கூட வேலை பார்க்க ஆரம்பிச்சார். பாப்பா பொறந்து ஆறு மாசத்துல அப்பாவை இழந்தது எனக்கு இன்னமும் கஷ்டமா இருக்கு மா. அப்படி முதல் அட்டாக்லயே அப்பா இறப்பாங்கன்னு நான் நினைச்சே பார்க்கலம்மா. பாப்பா பொறந்ததில் இருந்தே நான், நான்..”
“எனக்கு ஞாபகம் இருக்கு வானதி. நீ எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு விழுவ. தொட்டதுக்கு எல்லாம் கோபப்பட்ட, உன்னை நல்லா பார்த்துக்க சொல்லி உன் டாக்டர் சொன்னது கூட எனக்கு தெளிவா ஞாபகம் இருக்கு”
“ம்ம், எனக்கு அப்போ ஒரு மாதிரி மனஅழுத்தம் வந்தது. ஏன்னு தெரியல. எனக்கு காரணமும் சரியா சொல்லத் தெரியல மா. அந்நேரம் அப்பா இறந்து, இவரும் வேலையில பிசியாகி, பால் குடிச்சிட்டு இருந்த பாப்பாவை உன்கிட்ட விட்டுட்டு நான் வேலைக்கு போக ஆரம்பிச்சு.. அன்னைக்கு இருந்து இன்னைக்கு வரைக்கும் டெய்லி ஓடிட்டே இருக்கேன் மா. ஆனா, முன்னாடி மாதிரி சந்தோஷமா இருக்கேனா? சத்தியமா இல்லைனுதான் தோனுது. அவரை நான் குறை சொல்ல மாட்டேன் மா. கம்பெனில அவருக்கு நிறைய பொறுப்பு கூடிப் போச்சு. ஆனா, இப்போல்லாம் அப்பாவை போல அவரையும் மிஸ் பண்ண ஆரம்பிச்சிட்டேன் மா. நேத்ரன் குழந்தையா இருக்கும் போது, அவர் எங்க கூடவே இருந்தார். இப்போ…”
மகளுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியாமல் அவளின் பார்வையைத் தொடர்ந்து அவரும் வானை வெறித்தார்.
“எல்லாத்துக்கும் ஆசைப்படக் கூடாது வானு. உங்கண்ணன் கூடவே இருந்தாலும் உங்கண்ணிக்கு பிடிக்கல. பக்கம் பக்கமா குறை படிக்கிறா. ஓடு, சம்பாதின்னு அவனை விரட்டுறா. நீ என்னன்னா, ஓடி ஓடி சம்பாதிக்கிற மனுஷனை பார்த்து, வேலையை விட்டுட்டு என் கூட உட்கார மாட்டாரான்னு ஏங்கிட்டு இருக்க. இருக்கறதை வச்சு சந்தோஷமா இருக்க, எப்போதான் கத்துப்பீங்களோ நீங்கன்னு வருத்தமா இருக்கு எனக்கு”
“நான் அவர் வேலையை விடணும்னு சொல்லல மா. இந்த பதவிக்கு வர அவர் எவ்வளவு உழைச்சு இருக்கார்ன்னு, என்னை விட யாருக்குத் தெரியும்? அவர் சிஏ ஃபைனல் படிக்கும் போது தானே மா, நாங்க பேசி, பழகினது”
வானதி முடிக்கும் முன்பே இடையிட்டு, “இப்போவா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டார் பாக்கியம்.
“என்னம்மா நீ? இதையேதான் அவரும் கேட்டார். போங்கம்மா” கோபத்துடன் கேட்டு பட்டென்று எழுந்த மகளின் கைப் பிடித்து நிறுத்தினார் பாக்கியம்.
“இதுக்கா சண்டை போட்ட?” அம்மாவை முறைத்து கையை உதறினாள். சரியாக அந்நேரம் அவளது அலைபேசி அடித்தது.
“எங்கத்தை கால் பண்றாங்க மா. என்ன அதிசயம். அதுவும் இந்நேரம்..” சொல்லிக் கொண்டே அழைப்பை ஏற்றவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்துக் கொண்டே போனது.
“வானதி” பாக்கியம் மகளை உலுக்க, “உங்ககிட்ட அவசரமா பேசணும். கால் பண்ணுங்க, பிளீஸ்” என்று இளங்கோவிற்கு குறுஞ்செய்தி அனுப்பி வைத்து அவள் நிமிர, உடனடியாக அவளை அழைத்து விட்டான் இளங்கோ.
“மாமாக்கு உடம்பு முடியலையாம். ஹாஸ்பிடல் போய்ட்டு இருக்கோம்னு அத்தை கால் பண்ணாங்க” படபடப்புடன் அவள் சொல்ல, “அப்பாவுக்கா? ஹார்ட் அட்டாக்கா?” அதிர்ச்சியும், வலியுமாக கேட்டான் இளங்கோ.
“அத்தை எதுவும் தெளிவா சொல்லலங்க. செய்யாறு கவர்மென்ட் ஹாஸ்பிட்டல்ல பார்த்திட்டு இப்போ காஞ்சீபுரம் போறோம்னு அத்தை சொன்னாங்க. நான் மீனாட்சி மிஷன் ஹாஸ்பிட்டல் போக சொல்லியிருக்கேன். டிரைவரை கால் பண்ணி வரச் சொல்லி, நான் உடனே ஊருக்கு கிளம்பறேன். அங்க போய்ட்டு உங்களுக்கு கால் பண்றேன். அதுக்குள்ள நீங்க அத்தைக்கு பேசுங்க. உங்களுக்கு சொல்ல பயந்துதான் எனக்கு கால் பண்ணாங்க போல”
“நான் அம்மாகிட்ட பேசுறேன் வானதி. டிரைவர் கூப்பிட வேணாம். நீயே காரை எடுத்துட்டு போ. அப்பாக்கு சீரியஸ்னா கூட நீ இருக்கணும்.”
“இதோ, இப்பவே நான் கிளம்பறேன்”
“ஓகே. அப்புறம், நீ எப்படியிருக்க? உனக்கு உடம்புக்கு முடியலையா என்ன? ஹால்ஃப் டே லீவ் போட்டுருக்க, உனக்கு ஒன்னுமில்ல தானே வானதி?” இளங்கோ கவலையுடன் அவள் கண்களைப் பார்த்து கேட்க, மனதை இறுக்கும் அந்தச் சூழலிலும் அவள் மேலான அன்பை வார்த்தைகளில் அவன் வெளிப்படுத்த, அவள் மனம் நெகிழ்ந்தது. மெல்ல மறுப்புடன் தலையை அசைத்தாள் வானதி.