“நீ ஓகே தானே வானதி?” இளங்கோ மீண்டும் அழுத்தமாய் கேட்க, அந்த ஒற்றைக் கேள்வி அவள் மனத்தில் ஆழ்ந்த அமைதியை தந்தது.
அவளுக்கு அருகில் இருக்கும் போதெல்லாம் மடிக்கணினி, அலைபேசி என்று தலையை எதிலாவது விட்டுக் கொண்டுதான் பேசுவான் இளங்கோ. இப்போது காணொளி அழைப்பில் ஆளை முழுங்குவதை போல அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தவனை அவளுக்கு வாரி சுருட்டி வைத்துக் கொள்ளத்தான் தோன்றியது. ஒரு காலத்தில் செய்தும் இருக்கிறாள். அந்த நெருக்கத்தை காலத்தின் ஓட்டத்தில் எங்கோ தொலைத்து விட்டதாக, அதனால் தங்களின் காதலே தொலைந்து விட்டதாக அவள் வருந்திக் கொண்டிருக்க, இப்போது மனதில் சிறியதாக மாற்றம். இந்த நெருக்கடி நேரம் அவர்களை நெருங்க வைப்பது போல தோன்ற, “ஐ ஆம் ஓகே. நீங்க அத்தைக்கிட்ட பேசுங்க முதல்ல” என்றாள் வானதி.
“ஓகே.” என்று இளங்கோ அழைப்பை துண்டிக்க, பாக்கியம் மகளைப் பிடித்துக் கொண்டார்.
“மாமாக்கு நெஞ்சுவலின்னு அத்தை சொல்றாங்க மா. வீட்டுக்கு பக்கத்துல இருக்க கவர்மென்ட் ஹாஸ்பிடல்ல காட்டிட்டு, அங்கருந்து காஞ்சிபுரம் போய்ட்டு இருக்காங்க. அத்தை பாவம், தனியா பயந்துட்டு இருப்பாங்க. நான் காரை எடுத்துட்டு இப்பவே ஊருக்கு போறேன்”
“வானதி, இங்க பாரு. காரை நீயே ஓட்டிட்டு போறது எல்லாம் சரி வராது. நீ போன் பண்ணி டிரைவரை வரச் சொல்லு”
“ம்மா, அவர் டிரைவர் வேணாம்னு சொல்லிட்டார் மா.”
“மாப்பிள்ளைகிட்ட நான் சொல்லிக்கிறேன். நீ டிரைவரை கூப்பிடு” பாக்கியம் தீர்க்கமாக சொல்ல, வானதி சுவரில் சாய்ந்து நின்று அவர்கள் அவ்வப்போது தேவைக்கு பணிக்கு அழைக்கும் ஓட்டுநரை அழைத்தாள்.
“ரிங் போயிட்டே இருக்கு. அந்தண்ணா எடுக்கலம்மா”
“ஏதாவது வேலையா இருப்பாரா இருக்கும். இல்லனா, வண்டி ஓட்டிட்டு இருக்கலாம். நீ எதுக்கும் திரும்ப கூப்பிடு”
“ப்ச், ம்மா. எனக்கு அதுக்கெல்லாம் நேரமில்லம்மா.” என்று அலுத்துக் கொண்டவள், “நாங்க கூப்பிடும் போதெல்லாம் அவர் ஒழுங்கா வர்றதில்லைன்னு தான் இளங்கோ அவரை கூப்பிடுறதை நிப்பாட்டினார்” என்று சொல்ல,
“சரி சரி. போன வருஷம் வீட்டு வேலை செய்ய உதவிக்கு ஒரு பொண்ணு வச்சிருந்தியே, அவ ஹஸ்பண்ட் மாப்பிள்ளைக்கு டிரைவரா இருந்தார் தானே? அவரைக் கூப்பிடு” என்ற அம்மாவை பொறுமையின்றி பார்த்தாள் வானதி.
“அப்பவே அவங்க ரெண்டு பேருமே பாதி நாள் வேலைக்கு வர மாட்டாங்க. அவங்களை நம்பி நாங்க இருக்க முடியலைன்னு தான், வேலையை விட்டு நிறுத்தினது. இப்போ அவசரத்துக்கு கூப்பிட்டா மட்டும் ஓடி வரவா போறாங்க? எல்லாம் தெரிஞ்சுட்டே ஏன்மா இப்படி பண்றீங்க?” வானதி புலம்பிக் கொண்டே முன்னே நடக்க, “என் கவலை எனக்கு. என் மகளை பத்தி நான் கவலைப்பட மாட்டேனா?” என்று பொரிந்தார் பாக்கியம்.
“நான் நேத்ரனுக்கு வெயிட் பண்ற நேரத்துல வீட்டுக்கு போய் எங்களுக்கு தேவையான ட்ரெஸ், கொஞ்சம் பணம் எடுத்துட்டு, வீட்டை ஒதுக்கி வச்சுட்டு வர்றேன் மா. நீ அதுவரைக்கும் பாப்பாவை பார்த்துக்கோ” என்று வானதி வாசலுக்கு செல்ல,
“மாதவனுக்கு போன் பண்ணி வரச் சொல்றேன். அண்ணா கூட போ நீ”
“அம்மா, ஏற்கனவே இருக்க டென்ஷன்ல நீங்க வேற ஏன் மா? நான் நேத்ரனை இங்கேயே விட்டுட்டு பாப்பாவை மட்டும் என் கூட கூட்டிட்டு போறேன். ரெண்டரை மணி நேர ட்ரைவ் தானே மா? நான் கவனமா ஓட்டுவேன்” அம்மாவின் இரு பக்க தோளிலும் கைப் போட்டு, அவரின் முகம் பார்த்து அவள் சொல்ல, பாக்கியம் மகளை கலக்கமாகத் தான் பார்த்தார்.
வானதி விரைவாக வீடு சென்று இரண்டு நாட்களுக்கு தேவையானதை எடுத்து வைக்க, இளங்கோ அழைத்தான்.
“நான் அப்பாகிட்ட பேசினேன் வானதி. அவர் முகமும், குரலும் எனக்கு அப்பாகிட்ட பேசுறது மாதிரியே இல்ல. அம்மாவும் அழுறாங்க. ரெண்டு பேரும் ரொம்ப பயப்படுறாங்க. நான் இப்போ பார்த்தா ஜாப்பன் வரணும். பேசாம..”
“நான் பார்த்துக்கறேன். நீங்க வொர்ரி பண்ணாதீங்க. மாமாக்கு ஒன்னும் இருக்காது. ஓகே?”
“வந்திடவா வானதி?” அவன் குரலில் மறைந்திருந்த நடுக்கத்தை உணர்ந்தவள், “நான் அங்க போய் சிட்டுவேஷன் பார்த்திட்டு சொல்லவா? அதுவரை ரொம்ப வொர்ரி பண்ணாம வெயிட் பண்றீங்களா பிளீஸ்?” அவன் கண்களைப் பார்த்து கனிவாக அவள் கேட்க,
“ம்ம், எனக்கு இப்போ பார்த்து முக்கியமான டின்னர் இருக்கு வானதி. நான் போயே ஆகணும். எப்பவும் போல உன்னைத் தனியா விட்டுட்டு.. ஐ ஃபீல் பேட்” அச்சமயம் அதை எதிர்பார்க்காதவள், ஆழ்ந்த மூச்செடுத்து, “உங்களுக்கு நேவி ப்ளூ சூட் எடுத்து வச்சேன். அதைப் போட்டு டின்னருக்கு போங்க. இங்க என்ன நடந்தாலும் நான் உங்களுக்கு அப்டேட் பண்றேன்.” என்றாள்.
பல மைல் தூரங்களுக்கு அப்பால் இருந்து கொண்டு அவனால் வேறென்ன செய்திட முடியும்? அவள் கிளம்பும் வரை பேசிக் கொண்டே இருந்தான்.
“சரி” என்று இரு மனதாக தயக்கத்துடன் அழைப்பை துண்டித்தான் இளங்கோ.
அவள் அம்மா வீடு வந்த ஐந்து நிமிடங்களில் பள்ளியில் இருந்து நேத்ரனும் வந்து விட்டான்.
“நேத்ரா, நீ அம்மாச்சி கூட இங்க இரு. ஊர்ல தாத்தாக்கு உடம்பு முடியல. நானும், பாப்பாவும் மட்டும் போய் என்னனு பார்த்திட்டு வர்றோம்” என்று அவள் மகனிடம் சொல்ல,
“நானும் வர்றேன் மா. உங்களை பார்த்துக்கச் சொல்லி அப்பா என்கிட்ட சொல்லியிருக்காங்க” என்று அவளின் முன்னே வந்து நின்ற மகனை பார்க்கையில் அவளுக்கு அந்த நிமிடமும் மெல்லிய புன்னகை துளிர்த்தது.
“இங்க பாரு வானதி. உங்க அண்ணனை கூட்டிட்டு போய்ட்டு வா. இல்லனா பஸ்ஸோ, வாடகை காரோ எடுத்துட்டோ போ. அதுதான் சரி வரும். நீ தனியா போறது எனக்கு சரின்னு..”
“அம்மா…” என்று வானதி கத்த,
“எனக்கு மனசு கேட்கல வானு. என்ன பண்ண சொல்ற?” என்று பதிலுக்கு கத்தினார் பாக்கியம்.
“முதல்ல நான் அத்தைக்கிட்ட பேசுறேன். இப்படி பேசியே பாதி நேரம் போய்டும் போல…” புலம்பிக் கொண்டே ஒதுங்கிச் சென்றாள்.
ஐந்து நிமிடங்கள் கழித்து வந்தவள், “இப்போதான் மீனாட்சி மிஷன் ஹாஸ்பிடல் போய் இருக்காங்க மா. அத்தை ரொம்ப பயந்து புலம்புறாங்க. நான் லேட் பண்ணாம கிளம்பறேன்” என்று அவள் முடிவாக சொல்ல, “அப்போ நேத்ரனையும் கூட்டிட்டு போ. உங்க மாமாக்கு எதுவும் இருக்காது. ஆனா, பேரன் பேத்தியை பார்க்க ஆசைப்படுவாங்க. கூட்டிட்டு போ வானதி” என்றார் பாக்கியம்.
அவர் சொன்னதின் அர்த்தம் புரிந்து சட்டென அவள் கண்கள் கலங்கி, பதில் பேச முடியாத அளவுக்கு தொண்டை அடைத்து வலித்தது. இளங்கோவிற்கு அப்பாவை நிரம்ப பிடிக்கும். அவர் மேல் மிகுந்த மரியாதையும், அன்பும் அவனுக்கு உண்டு. அவருக்கு எதுவும் ஆகி விடக் கூடாது என்று மனதில் மானசீகமாக பிரார்த்தித்துக் கொண்டாள்.
இதே போல திடீரென்று ஒரு நாள் தன் அப்பாவை இழந்ததையே அவள் இன்னும் கடந்து வராத நிலையில், இன்னொரு இழப்பை எல்லாம் அவளால் தாங்கவே முடியாது. அதிலும் இளங்கோ மனம் உடைந்தால், சத்தியமாய் அவளால் முடியாது.
“வானதி, பையனை கூட்டிட்டு போன்னு சொன்னேன்”
“சரிம்மா” என்று அம்மாவிடம் தலையசைத்தாள். மகனுக்கு தனியாக எடுத்து வந்திருந்த பையையும் சேர்த்தெடுத்து காரை நோக்கி நடந்தாள். பத்து நிமிடங்களில் நேத்ரன் குளித்து, உடை மாற்றி வர, அம்மாவுக்கு கையசைத்து விட்டு காரை நகர்த்தினாள்.
“நான் அண்ணனை கூட்டிட்டு காலைல வர்றேன் வானு” மீண்டும் ஒருமுறை சொன்னார் பாக்கியம்.
காரில் இருந்து அம்மாவிற்கு அவள் கையசைத்து பார்வையை சாலைக்கு திரும்ப, அலைபேசி அடித்தது. அந்த பிரத்தியேக அலைப்பொலியை கவனித்து, “அப்பா கால் பண்றாங்க” என்றான் நேத்ரன்.
“நான் அட்டெண்ட் பண்ணி பேசவா மா?”
“இல்ல தங்கம், வேணாம்” வாகனத்தின் வேகத்தை குறைத்து சாலை ஓரம் சென்று, அழைப்பை ஏற்று, காதில் ப்ளூடூத் மாட்டினாள்.
“நீ டிரைவிங்ல இருக்கன்னு தெரியும் வானதி. பட்..”
“ப்ளூ டூத் போட்டுட்டு தான் பேசுறேன். சொல்லுங்க” என்றவள், காரின் வேகத்தை மெதுவாக கூட்டினாள்.
“தம்பி, தங்கச்சிகிட்ட அம்மா சொல்லிட்டாங்களான்னு தெரியல. உன்கிட்ட எதுவும் சொன்னாங்களா? அப்புறம் எங்களுக்கு ஏன் சொல்லலன்னு அவங்க..”
“அவங்க ரெண்டு பேரும் நம்ம மேலதான் பாய்வாங்க.” கணவன் சொல்ல வந்ததை சொல்லி முடித்தாள் வானதி.
“அவங்களுக்கு அத்தை சொன்னாங்களான்னு தெரியலங்க. நான் சிட்டி விட்டு வெளில போனதும், அவங்ககிட்ட பேசிட்டு சொல்றேன். ஓகே?” என்று கேட்டாள்.
“காஞ்சீபுரம் போய்ட்டு பேசு. ட்ரைவ் பண்ணும் போது பேச வேணாம்” என்றான் இளங்கோ.
“ஓகே”
“கவனம் வானதி. பத்திரம்” அவன் குரலில் ஓடிய மெல்லிய நடுக்கத்தை உணர்ந்து, “ஃபர்ஸ்ட் நீங்க தைரியமா இருங்க. நான் அங்க போய்ட்டு டாக்டர் பார்த்திட்டு கால் பண்றேன்” என்றாள் வானதி.
இளங்கோவிற்கு தவிர்க்க முடியாத அலுவல் இருக்க, அதைப் பார்க்கச் சென்றான் அவன்.
குழந்தைகள் இருவரும் சலசலத்து கொண்டே வந்ததில், அவளின் சிந்தனை சிதறிக் கலையாமல் இருந்தது. சாலையில் அவர்களைக் கடக்கும் ஒவ்வொரு காரின் பெயரையும் சொல்லிக் கொண்டே வந்தான் நேத்ரன்.
“பாப்பா, இது அப்பாவோட கம்பெனி கார். பாரு, பாரு.”
“ஹேய், இது அம்மா கம்பெனி பஸ், இந்த டிரக் கூட உங்க கம்பெனியோடது தானே மா?” என்று நேத்ரன் உற்சாக குரல் எழுப்பிக் கொண்டு வர, மனதின் இறுக்கம் அவளுக்கு மெல்ல தளர்ந்தது.
சென்னை மாநகரத்தின் வெளியே வந்ததும், காரை ஓரமாக நிறுத்தி அத்தைக்கு அழைத்தாள்.
“ஈசிஜி எடுக்க சொல்லியிருக்காங்க வானதி. நீ வர நேரமாகுமா?” அவளின் அத்தை தாமரை கேட்க, “நான் வந்துட்டே இருக்கேன் த்த. நீங்க ஈசிஜி எடுங்க. டாக்டர் பார்க்க கண்டிப்பா நான் வந்துடுவேன். மாமாக்கு ஒன்னும் இருக்காது. பயப்படாம இருங்கத்த. நீங்க கிளம்புற அவசரத்துல கைல பணம் எடுத்தீங்களா, இல்லையான்னு தெரியல. நான் எடுத்துட்டு வர்றேன். அதுனால யார், எது கேட்டாலும், என்ன டெஸ்ட் எடுக்கச் சொன்னாலும் தயங்காம எடுங்கத்தை”
“சரி, சரி. நீ சீக்கிரம் வந்திடு போதும்.” தாமரை கண்ணீர் குரலில் சொல்ல, “ஒரு மணி நேரத்தில் வந்திடுவோம் அத்தை” என்றாள்.
அவரிடம் பேசி முடித்து சில நொடிகள் கண் மூடி அமர்ந்து விட்டாள்.
தாமரைக்கு அவளைப் பிடிக்கவே பிடிக்காது. இது நாள் வரை அவளிடம் அதீதமாக வெறுப்பை காட்டியது இல்லையென்றாலும், ஒரு போதும் அன்பாக நடந்துக் கொண்டதும் கிடையாது. பெரிதாக மரியாதை கொடுத்ததும் கிடையாது. இத்தனைக்கும் அவள்தான் மூத்த மருமகள். அவரின் விருப்பமின்றி வீட்டிற்கு வந்த மூத்த மருமகள்.
அதுதான் அவரின் கோபத்திற்கான காரணம்.
தன் மகன் காதலிக்கும் பெண் என்ற எண்ணமே, வானதியை வெறுக்க அவருக்கு போதுமானதாக இருந்தது.
ஆனால், இளங்கோவின் அப்பா சந்திரசேகரன் அப்படியில்லை. அவர் தான் மகனின் காதலுக்கு முதலில் சம்மதம் சொல்லி, அவர்களின் திருமணத்தை சிறப்பாக நடத்தியவர். மருமகள், பேரப் பிள்ளைகள் என எப்போதும் அன்பாகத்தான் இருப்பார்.
பின் இருக்கையில் சீட் பெல்ட் போட்டு அமர்ந்திருந்த நட்சத்திரா இப்போது இருக்கையில் சாய்ந்து உறங்கியிருந்தாள். அவளை நன்றாக படுக்க வைத்து விட்டு, மகனிடம் பேசியபடி காரை நகர்த்தி, பயணத்தை மீண்டும் தொடர்ந்தாள். பாதி வழியில் தாமரை அவளை அழைக்க, பாதுகாப்பான ஓரம் வந்து, வேகம் குறைத்து அழைப்பை ப்ளூ டூத்தில் ஏற்றாள்.
“இங்க ஹாஸ்பிடல்ல ஈசிஜி பார்த்து உங்க மாமாக்கு நெஞ்சு வலின்னு சொல்லிட்டாங்க வானதி. மதியம் எல்லாம் சாப்பிட்டுட்டு நல்லாதான் பேசிட்டு இருந்தார். இப்போ கூட நல்லாதான் இருக்கார். அவருக்கு எப்படி நெஞ்சு வலி வரும்? டாக்டர் என்னமோ சொல்றார். எனக்கு ஒன்னும் புரியல. இப்படி பிள்ளைங்க யாரும் கூட இல்லாம நாங்க கஷ்டப்படணும்னு எழுதி…” தாமரை அழுகையுடன் கத்தி புலம்ப,
“அத்தை.. அத்தை… பிளீஸ், போனை டாக்டர்கிட்ட கொடுங்க” என்று கெஞ்சினாள் வானதி.
“இந்தா கொடுக்கறேன். பேசிட்டு என்னானு எனக்கு புரியற மாதிரி சொல்லு”
“ம்ம்” என்றாள்.
அவளிடம் மருத்துவர் மைனர் அட்டாக்தான், அவர்கள் அச்சப்பட தேவையில்லை என்று சொன்னதும்தான் அவளுக்கு மனதில் இருந்து பெரும் பாரம் இறங்கியது போலிருந்தது.
அடுத்து அவர்கள் அளிக்கப் போகும் சிகிச்சை, எடுக்கப்பட வேண்டிய பரிசோதனைகள் என அனைத்தையும் விலாவரியாக விசாரித்து விட்டு, மருத்துவருக்கு நன்றி சொன்னாள் வானதி. அதையே தாமரையிடம் விளக்கி சொல்லி அவரிடம் ஆறுதலாக பேசி, தைரியம் தந்தவள், உடனடியாக இளங்கோவிற்கு குறுஞ்செய்தி அனுப்பி வைத்து, அம்மாவை அழைத்து விவரம் சொன்னாள்.
“நாங்க விடி காலையில கிளம்பி வர்றோம் வானு. மாப்பிள்ளையோட தம்பி, தங்கச்சிக்கு விஷயம் தெரியுமா? அவங்களுக்கு தகவல் சொல்லியாச்சா? அவங்க வர்றாங்களா?” என்று கேட்டார் பாக்கியம்.
இளங்கோவும் சற்று முன்னர் அதையே கேட்டிருக்க, “அங்க போய்ட்டு பேசலாம்னு இருக்கேன் மா. எங்க அத்தையை விட்டு அவங்ககிட்ட சொல்லிக்கலாம்னு…” என்று அவள் இழுக்க, “இல்ல. நீயே சொல்றதுதான் நல்லது” என்றார் பாக்கியம்.