இருவரும் ஒன்று போல அதிர்ச்சியாகி, அவளை கேள்விகளால் துளைத்தெடுத்தார்கள்.
“அண்ணா எங்க? நீங்க இன்னுமா அங்க போகாம இருக்கீங்க? நீங்க டாக்டர் பார்த்து பேசும் போது எங்களுக்கும் கால் பண்ணுங்க” என்று படபடத்து பேசினார்களே ஒழிய, அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை அவர்கள்.
“மைனர் அட்டாக் தானே அண்ணி? பெருசா ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டாங்க தானே? இங்க இவருக்கு லீவ் கிடைக்காது வேற. அதுவும் இல்லாம, அண்ணா ஊர்ல இல்லைனாலும் அப்பாவை பார்த்துக்க நீங்க இருக்கீங்க இல்ல? அப்புறம் நாங்க வேற எதுக்கு அங்க வந்துட்டு?” என்று மலேசியாவில் வசிக்கும் இளங்கோவின் தங்கை மதியழகி கேட்க,
அமெரிக்காவில் வசிக்கும் தம்பி அருள்செல்வன், “எங்களுக்கு ஃப்ளைட் டிக்கெட் கிடைக்காது அண்ணி. நாங்க நாலு பேரும் வரணும்னா மூனு லட்சத்துக்கு மேல ஆகும். அதுக்கு..” என்று தொடர, “உங்க அண்ணா நெக்ஸ்ட் வீக் வந்துடுவாங்க. நாங்க பார்த்துக்கறோம்” என்று முடித்தாள் வானதி.
தாமரை கடந்த சில வருடங்களாக இந்த இரண்டு பிள்ளைகளின் வீட்டிற்கு தான் மாறி மாறி பயணித்துக் கொண்டிருந்தார். மகள், மருமகள் இருவரின் பிரசவத்திற்கும் கண்டம் மாறி கண்டம் பயணித்திருந்தார். ஆனால், பெற்றோருக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் அந்த பிள்ளைகளுக்கு விடுமுறையும், விமான டிக்கெட்டும் கிடைக்கவில்லை என்று நினைக்கையில் மீண்டும் அவள் மனதில் வெறுமை படர்ந்தது.
இளங்கோ, அவனது தம்பி, தங்கை என அனைவருக்கும் அவள்தான் பதில் சொல்லும் பெரும் பொறுப்பில் இருக்க, தானாய் ஒருவித பயம் அவள் மனதில் சூழ்ந்தது.
இப்போது நேத்ரனும் முன்னிருக்கையில் சாய்ந்து உறங்கியிருக்க, காரில் பாடலை ஒலிக்க விட்டு, காரை நகர்த்தினாள்.
“தொடு தொடுவெனவே வானவில் என்னை…” பாடல் ஒலிக்க, இசை அவளை இளக்கியது.
“உருகிய துளிகளை ஒன்றாக்கி
என்னுயிர் தந்தே உயிர் தருவேன். ஏ ராஜா, இது மெய் தானா?” பாடல் வரிகள் சட்டென அவளை பல ஆண்டுகளுக்கு முன்னோக்கி பயணிக்கச் செய்திருந்தது.
இளங்கோவின் நண்பனின் திருமண வீட்டில் இந்த பாடல் ஒலித்த போது அவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்திருந்தார்கள்.
பச்சை பட்டுச்சேலை, நகை, பூ, கூடவே புன்னகை முகமாக அமர்ந்திருந்த வானதியை ஆளை விழுங்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் இளங்கோ.
மணமகன் அவர்களுடன் சிஏ படித்தவன் என்பதால் நண்பர்கள் நிறைய பேர் அந்த திருமணத்திற்கு வந்திருக்க, அந்தக் கூட்டத்தில் இளங்கோ, வானதி காதல் தெரிந்த பலரும் அவர்களை குறுகுறுவென கண்காணித்து கொண்டே இருந்தார்கள்.
இளங்கோவின் பார்வையை இயல்பாக சந்திக்க முடிந்தவளால் மற்றவர்களின் பார்வையை அப்படி எதிர்கொள்ள முடியவில்லை.
“என்னடா இளங்கோ? உன் கல்யாணம் எப்போ?” என்று நண்பர்கள் வேறு அவனை கேலி செய்ய, அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை இளங்கோ.
“இந்த ரீதியில் அன்பு செய்தால்
என்னவாகுமோ என் பாடு.?” இந்த வரிகள் ஒலிக்கும் போது வானதியின் கைப் பிடித்து, “என் நிலைமை மோசமாகுறதுக்கு முன்னாடி, என்னை கல்யாணம் பண்ணிக்கோயேன் வானதி” அவள் கண்களைப் பார்த்து இளங்கோ கேட்டதை இப்போது நினைக்கையிலும் அவளுக்கு உடல் சிலிர்த்தது.
இருவரும் காதலை பரஸ்பரம் தெரிவித்து, வீட்டினரின் சம்மதத்திற்காக காத்திருந்த காலம் அது. வானதி பொறுமையுடன் காத்திருக்க, இளங்கோ அவளின்றி நாட்களை நகர்த்த முடியாது என்று காதலில் தவித்த காலமது.
அந்த இளங்கோவைதான் இன்று தேடுகிறாள் வானதி.
இருவரும் சிஏ படிக்கும் போதுதான் சந்தித்தார்கள். வானதி இன்டர்மிடியேட் முடித்து ஒரு பெரிய ஆடிட்டர் அலுவலகத்தில் இன்டன்ஷிப் கடைசி வருடம் செய்துக் கொண்டிருந்தாள். அப்போது இளங்கோ சிஏ இறுதி தேர்வில் இருந்தான். அதில் தேர்ச்சி பெற்று அவன் தற்போது சிஎஃப்ஓ பதவியை அடைந்திருக்க, இந்த இடைப்பட்ட காலத்தில் வானதி இளங்கோவின் மனைவியாகி, நேத்ரன், நட்சத்திரா என இரு பிள்ளைகளுக்கு தாயாகி, இறுதி வரை சிஏ இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை அவள்.
அதில் அவளுக்கு எந்த வருத்தமும் இல்லை. அவள் நேசித்த இளங்கோ. அவளுக்கு பிடித்த வாழ்க்கை என எல்லாமே சிறப்பாகதான் சென்று கொண்டிருந்தது.
மகளைக் குறித்த ஏமாற்றத்தில் கிருஷ்ணமூர்த்தி தான் எப்போதும் வருந்தி புலம்புவார். அதைக் கூட அவள் அலட்சியம் செய்து விடுவாள்.
இப்பொழுது கூட அவளுக்கு திடீர் லட்சியம் எல்லாம் முளைத்து விடவில்லை. அவளை சுற்றியிருக்கும் அனைவரும் சொல்வது போல, வாழ்க்கையில் அவளுக்கு எந்தக் குறையும் இல்லை. இளங்கோ பெரிய நிறுவனத்தில் மிக முக்கிய பதவியில் இருக்க, அவன் ஒருவனின் வருமானமே நிறைவானது நிஜம்.
பலரும் அவளுக்கு வழங்கும் அறிவுரை, “அவள் வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன?” என்பதுதான்.
“இனி படிச்சு என்ன சாதிக்கப் போற?” என்ற கேள்வியும் இனி அவள் எதிர்கொள்ள வேண்டி வரும் என்று அவளுக்குத் தெரியும்.
அதெல்லாம் அவளுக்கு பொருட்டே அல்ல. வேலையோ, வாழ்க்கையோ, படிப்போ அவள் வாழ்வில் எல்லா முடிவுகளையும், நிறைய யோசித்து, விரும்பிதான் அவள் எடுப்பது.
வீடு, வேலை, இரண்டு பிள்ளைகளை கவனிப்பது என எதுவும் அவளுக்கு பாரமாக இதுவரை தோன்றியதில்லை. மிக நேர்த்தியாகதான் அனைத்தையும் கையாண்டாள். ஆனால், நட்சத்திரா பிறந்ததும் அவளுக்கு பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் மனஅழுத்தம் வந்ததை அவள் உணரவே சில காலம் பிடித்தது. அந்நேரம் அவளின் அப்பாவையும் இழந்தது அவளுக்கு மனதளவில் மிகப் பெரிய அடி.
நேத்ரன் பிறந்த போது, இளங்கோ நேரம் வாய்க்கும் போதெல்லாம் அவளுடன் இருந்திருக்கிறான். ஆனால், பதவி உயர்வு, பணி அழுத்தம் காரணமாக இப்போது அவனால் மனைவிக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. அவர்களுக்கு ஏற்பட்ட இடைவெளி அவளை அதிகமாக தாக்கியது.
அவர்களுக்குள் நெருக்கமும் குறைந்து போனது அந்தக் காலக்கட்டம் தான்.
சிஏ இறுதி தேர்வு எழுதும் ஆவல் திடீரென்று தோன்றிய எண்ணமாக இருக்கலாம். ஆனால், சிஏ இறுதித் தேர்வை தனக்காக மட்டுமே எழுத விரும்பினாள் வானதி. யாரிடமும் தன்னை நிரூபிக்க முயலவில்லை அவள். வேலை, பதவி உயர்வு என எதைப் பற்றியும் அவள் சிந்தனை செல்லவில்லை.
ஒரு காலத்தில் சார்ட்டர்ட் அக்கவுண்ட்ண்ட் அவளது கனவாக இருந்திருக்கிறது. இப்போதும் அடிமனதில் அந்த ஆசை மறைந்திருப்பதை அவளால் மறுக்க முடியாது. அவள் மனதின் விருப்பத்தை நிறைவேற்ற விரும்பினாள் அவள். அதனாலேயே அந்த தேர்வை எழுத திட்டமிட்டாள்.
ஒருவேளை அதை எழுத முடியாமல் போனாலும் அவள் மகிழ்ச்சியாக தான் இருப்பாள். இளங்கோவும், அவர்களின் இரண்டு பிள்ளைகளும் அவளுக்காக இருக்கையில் வாழ்க்கையில் அவளுக்கு மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.
இளங்கோ முன்னர் இதே தேர்விற்காக அவளை வற்புறுத்திய போதெல்லாம்.. அந்நேரம் இளங்கோ அழைக்க சாலையில் கவனமும், சிதறி ஓடிக் கொண்டிருந்த சிந்தனையுமாக இருந்தவள், சட்டென கலைந்து அழைப்பை ஏற்றாள்.
“நீ டிரைவிங்ல இருக்கும் போது டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு தான் நினைச்சேன். ஆனா, என்னால அங்க டின்னர்ல நிம்மதியா உட்கார முடியல வானதி” இளங்கோ குரல் ப்ளூ டூத் வழியே அவள் காதில் ஒலிக்க, “டிஸ்டர்ப்லாம் இல்ல. ப்ளூ டூத் போட்டுருக்கேன். நீங்க பேசுங்க” என்றாள்.
“ஒருவழியா டின்னர் முடிஞ்சது. அப்பாவுக்கு எப்படியிருக்கோ? அம்மாகிட்ட பேசினா எதுவும் பேசாம அழுறாங்க, எனக்கு என்ன சமாதானம் சொல்றதுன்னே தெரியல வானதி” என்று ஆரம்பித்தவன் சட்டென பேச்சை நிறுத்தி, “சாரி, சாரி, வேற பேசலாம்” என்றான்.
அந்நேரம் அதைப் பேசி அவள் கவனத்தை சிதற விட விரும்பவில்லை அவன்.
“காஞ்சிபுரம் எண்டராகிட்டேன். இருபது நிமிஷத்துல அங்க இருப்பேங்க” என்றாள் வானதி.
“நீ கார் ஓட்டி ரொம்ப நாள் ஆச்சுல்ல? நான் யோசிக்கவே..” அவன் கேள்வியை முடிக்கும் முன்பே இடையிட்டு,
“ம்ம், எஸ். நாம ஃபர்ஸ்ட் டைம் கார் வாங்கிட்டு ஊருக்கு போனது உனக்கு ஞாபகம் இருக்கா வானதி?”
“ம்ம், இதே ரூட்ல தானே போனோம்.”
“பாதிக்கு மேல காரை நீதான் ஓட்டின. இப்போ நீ கேட்கிற மாதிரியே நயன்ட்டீஸ்ல வந்த சாங்ஸ் கேட்டுட்டு போனோம். இல்ல?”
“ம்ம்” என்றவள் கண் முன்னே பத்து வருடங்களுக்கு முந்தைய சாலை விரிந்தது.
இளங்கோவின் அமைதியை வானதியின் வார்த்தைகள் சரிக்கட்டிய நாட்கள் அவை. காதல் காலத்தை இனிமையாக்கிய பொழுதுகள் அவை.
இளங்கோவின் கண்கள், அவளை விழுங்க முயற்சிக்கும் அந்தப் பார்வை ஒன்றே அவளுக்கு போதுமானது.
“வானதி..”
“ம்ம்”
“என் மேல உனக்கிருந்த கோபம் போச்சா? எப்போ சமாதானம் ஆகலாம்?” இளங்கோ கேட்க, அதிர்ச்சியுடன் கண் விரித்து, அவன் பார்க்க முடியாது என்பது புரிந்தாலும் புன்னகைத்தாள் வானதி. அப்பொழுது அவள் கார் மருத்துவமனை இருந்த பகுதியில் நுழைந்தது.