தொட்டு விடும் தூரத்தில் இருக்கும் போது புரியா அன்பும், தெரியாத அருமையும் தொலைவு அதிகரிக்கும் போதுதான் பலருக்கு புரிகிறது.
இளங்கோவிற்கு மிகுந்த குற்ற உணர்ச்சியாக இருந்தது. வீடு, பிள்ளைகள், உறவுகள், வெளிவேலைகள் என அவனது உலகத்தை, ஏன் அவனையும் சேர்த்தே வானதி தான் இத்தனை வருடங்களாக பொறுப்பாக இயக்குகிறாள் என்ற நிதர்சனம், பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் மனைவியை விட்டு தனித்திருக்கும் போதுதான் அவனது புத்திக்கு புலனாகியது.
“வானதி..” என்ற ஒரே குரலில் அவன் கேட்டது கையில் கிடைத்து விடும், அதற்காக நின்று நிதானித்து, நன்றி என்ற ஒற்றை வார்த்தையை அவன் உச்சரிக்க மறந்து பல காலமாகிறது.
அவன் கேட்டதை கையில் திணித்து, அவன் கண்களைப் பார்த்து வானதியே, “தேங்க்ஸ்” என்று அவன் சொல்ல வேண்டிய நன்றியை அவளே நக்கலாக சொல்லி விட்டு செல்வது இப்போது அவனுக்கு நினைவுக்கு வந்தது.
மனைவியை கவனிக்க அடியோடு மறந்து விட்டோமோ? என்ற கவலை அவனை அரிக்கத் தொடங்கியதின் விளைவே அந்தக் கேள்வி.
“எப்போ சமாதானம் ஆகலாம்?” இந்தக் கேள்வி திருமணமான புதிதில் செல்லச் சண்டைகள் தொடங்கி சீரியஸ் சண்டைகள் வரைக்குமான தீர்வாக அவர்களுக்கு இடையில் இருந்திருக்கிறது.
இப்போதும் அதே கேள்வியை அவன் கேட்க, மருத்துவமனையை நோக்கி காரை செலுத்தினாள் அவள்.
“வானதி?” இளங்கோ கேள்வியாக அழைக்க,
“ஹாஸ்பிடல் வந்துட்டேன்” என்று அவனுக்கு பதில் சொல்லாமல் சாமர்த்தியமாக தவிர்த்தாள். அவனது கேள்வியை அவளால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் விளக்கம் கொடுக்காமல் விடுத்தாள்.
“சரி. நான் லைன்ல இருக்கேன். நீ உள்ள போய் டாக்டர்கிட்ட பேசு”
“பாப்பாவும், தம்பியும் தூங்கிட்டு இருக்காங்க. அவங்களை எழுப்பி உள்ள கூட்டிட்டு போகணும் நான். அத்தைக்கு கால் பண்ணி எங்க இருக்காங்கன்னு விசாரிச்சு போகணும். உங்களை லைன்ல வச்சுட்டே எப்படி இதையெல்லாம் செய்யறது? வெயிட் பண்ணுங்க. நான் திரும்ப கூப்பிடுறேன்”
“ஓகே” என்று மனதில்லாமல் அழைப்பைத் துண்டித்தான்.
காரை இடம் பார்த்து நிறுத்தி, மகனை எழுப்பினாள். நேத்ரன், சோம்பல் முறித்துக் கொண்டே கண் திறந்து, “ஹாஸ்பிடல் வந்துட்டோமா ம்மா? தாத்தா இப்போ ஓகேவா?” என்று கேட்டான்.
அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டே இறங்கி, மகளை அவளின் உறக்கம் கலைக்காமல் தூக்கினாள். மெல்ல சிணுங்கி குரங்கு குட்டி போல அம்மாவின் இரு பக்கமும் கால் போட்டு அணைத்து தொற்றிக் கொண்டு மீண்டும் தன் உறக்கத்தைத் தொடர்ந்தாள் நட்சத்திரா.
வானதி காரை பூட்ட, அவளின் கைப்பையை எடுத்துக் கொண்டு உடன் நடந்தான் நேத்ரன்.
மருத்துவமனை வரவேற்பறையில் விசாரித்து மாமனாரின் அறைக்குச் சென்றாள். மருந்துகளின் உபயத்தில் அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அதே அறையில் இருந்த சிறிய கட்டிலில் படுத்திருந்தார் தாமரை.
“அத்தை” வானதி மெதுவாக அழைக்க, அடித்துப் பிடித்து எழுந்து கொண்டார்.
“வானதி, வந்திட்டியா? ஏன் இவ்வளவு நேரம்? உனக்கு 4 மணிக்கு போன் பண்ணி சொன்னேன் தானே? இந்தா இருக்க சென்னையில் இருந்து வர இவ்வளவு நேரமா? எட்டு மணி இப்போ” படபடவென்று பொரிந்தார் தாமரை. கணவரை தனியாளாக மருத்துவமனைக்கு அழைத்து வந்து, மருத்துவர்கள் அவருக்கு நெஞ்சு வலி என்று சொன்னதும் வந்த பயமும், பதட்டமும் தான் அவரை இப்படி பேச வைக்கிறது என்பதை அவளால் நன்கு உணர முடிந்தது.
அதனால், “பசங்க இருந்ததால காரை மெதுவாகதான் ஓட்டிட்டு வந்தேன் அத்த.” என்று அமைதியாக பதில் சொன்னாள். அப்போதும் தாமரை முகம் தெளியாமல் இருக்க, “நேத்ரா, நீ பாட்டி கூட இரு. அம்மா கேன்டீன் போய் பாட்டிக்கு காஃபி வாங்கிட்டு வர்றேன்” என்றவள், மாமியாரிடம் திரும்பி, “நீங்க பாத்ரூம் போய் முகம் கழுவிட்டு வாங்கத்த. நான் பத்து நிமிஷத்துல வந்துடுறேன். ரூமுக்கு வெளில நர்ஸ் இருக்காங்க. நேத்ரன், ரூம்ல இருக்கான். நீங்க போய்ட்டு வாங்க” என்று வற்புறுத்தலாக சொல்ல, அவர்கள் மூவரையும் பார்த்து விட்டு தயக்கத்துடன் அறையில் இருந்த ஓய்வறைக்குள் சென்றார் தாமரை.
மகனுக்கு கண் காட்டி விட்டு, மகளைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனை வளாகத்தில் இருந்த உணவகம் நோக்கி நடந்தாள் வானதி. நட்சத்திரா இப்போது கண் விழித்து, அவளிடம் பார்க்கும் அனைத்தையும் கைக் காட்டி கேள்விக் கேட்டு கொண்டு வந்தாள். வானதிக்கு இருந்த மன அழுத்தத்தில் அந்நேரம் தேவதையின் கேள்விகள் தேவையானதாக இருந்தது.
குழந்தைகளுக்கு இட்லி, பால், மாமியாருக்கு இடியாப்பம் என வாங்கி வந்த இரவு உணவை தாமரை, நேத்ரன் இருவரும் உண்ண வசதியாக பிரித்துக் கொடுத்து, மகளுக்கு பாலை ஆற்றி குடிக்க வைத்தப் பின், அறைக்கு வெளியில் இருந்த செவிலியிடம் சென்றாள் வானதி.
“டாக்டர் பார்க்கணும் சிஸ்டர்”
அவள் கேட்கவும், அவள் யாரென கேட்டறிந்து உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்.
“உங்க அத்தை பாவம். நாங்க சொல்ற எதையும் கேட்க ரெடியா இல்ல அவங்க. ஒரே அழுகை. என் சின்ன பையன்கிட்ட பேசுங்க. என் பொண்ணுகிட்ட பேசுங்கன்னு போனை கையில வச்சுட்டு அல்லாடிட்டு இருந்தாங்க. நல்லவேளை நீங்க வந்தீங்க” செவிலி சொல்லவும், “சாரி” என்றாள் அனிச்சையாக.
“டெய்லி இது போல எத்தனைப் பேரை பார்க்கறோம்” என்று ஆரம்பித்த செவிலி, அவளின் முகத்தில் தெரிந்த வருத்தத்தை பார்த்து அமைதியானார்.
இளங்கோ வேறு, “டாக்டர் பார்த்தாச்சா? என்ன சொன்னாங்க? மைனர் அட்டாக்னா அடுத்து என்ன டீரீட்மெண்ட் ப்ராசஸ்னு கேளு. சர்ஜெரி பண்ண சொன்னாங்கன்னா, நான் இமீடியட்டா கிளம்பி வர்றேன். வானதி, ரிப்ளை மீ” என்று நிமிடத்துக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி அவளின் இரத்த அழுத்தத்தை எக்கச்சக்கமாக உயர்த்தினான். போதாக்குறைக்கு நான்கு முறை அழைத்து விட்டான்.
“வெயிட், பிளீஸ்” என்று சுருக்கமாக பதில் அனுப்பினாள் அவள்.
கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு மேல் ஈசிஜி, இரத்தப் பரிசோதனை முடிவுகள் வைத்து மாமனாரின் உடல்நிலை குறித்து அவர் சொன்னதை நிதானமாக ஊன்றி கவனித்து, தனக்குத் தோன்றிய அத்தனை கேள்விகளையும் கேட்டு தெளிவுப்படுத்திக் கொண்டு, நன்றி சொல்லி வெளியில் வந்தாள்.
அங்கிருந்து நேராக அறைக்குச் செல்லாமல் காலியாக இருந்த காத்திருப்போர் அறைக்குச் சென்று கணவனை அழைத்தாள்.
“டாக்டர் என்ன சொன்னார்?” இளங்கோ பதற, “ஆஞ்சியோகிராம் பண்ணனும்னு சொல்றாங்க.” என்று அவள் ஆரம்பிக்கவும், “எதுக்கு?” என்று இன்னும் பதறினான் அவன்.
“மாமாவோட ஈசிஜில சின்ன வேரியேஷன் தான் காட்டியிருக்கு. அதுனால பிளாக் எதுவும் இருக்கா, இல்லையான்னு பார்க்க, ஆஞ்சியோகிராம் பண்ணனும்னு சொல்றாங்க.”
“ஒருவேளை பிளாக் இருந்தா?”
“என்னைப் பேச விடுங்களேன்” அசதியுடன் அவள் சொல்ல, “சாரி” என்றான்.
“ஆஞ்சியோகிராம் பார்த்துதான் மாமாவுக்கு மேல என்ன ட்ரீட்மெண்ட் கொடுக்கிறதுன்னு முடிவு பண்ணுவோம்னு சொன்னாங்க. ஆஞ்சியோகிராம் பண்ணும் போதே பிளாக் இருக்கறது தெரிஞ்சா, அது சின்னதா இருந்தா அப்பவே ஆஞ்சியோபிளாஸ்டி பண்ணி பிளாக்கை ரிமூவ் பண்ணிடுவாங்களாம்.”
“ஓ, ஓகே. கடவுளே..” என்ற இளங்கோ, “வானதி, டாக்டரை பார்த்து இமீடியட்டா, இன்னைக்கு நைட்டே அப்பாக்கு ஆஞ்சியோகிராம் பண்ணச் சொல்லு” என்று பரபரத்தான்.
“இன்னைக்கு முடியாதுங்க”
“ஏன்?” என்று அவன் கத்த, “ஹார்ட் அட்டாக்னு தெரிஞ்சதும் மாமாக்கு இன்ஜெக்க்ஷன் கொடுத்திருக்காங்க. அது பிளட் தின்னர். அதுனால மினிமம் டுவென்டி போஃர் ஹவர்ஸ் கழிச்சுதான் ஆஞ்சியோ பண்ண முடியும்னு சொன்னாங்க. அதுக்கு முன்னாடி பண்ணா பிளட் லாஸ் அதிகமா இருக்கும்னு பண்ண மாட்டாங்க” என்றாள் முடிவாக.
“டாக்டர் நாளைக்கு ஒரு நாள் ரெஸ்ட் கொடுத்துட்டு, நாளை மறுநாள் காலையில பண்ணலாம்னு சொன்னார். நான் உங்ககிட்ட பேசிட்டு சொல்றேன்னு சொல்லியிருக்கேன்”
“முழுசா ஒரு நாள் வெயிட் பண்ணனுமா? எப்படி வானதி? அப்பாவுக்கு அதுக்குள்ள..” எதிர்மறையாக எதையும் கேட்க பயந்து அவன் கேள்வியை முடிக்காமல் நிறுத்த, “ஹாஸ்பிடல்ல தானேங்க இருக்கோம்? டாக்டர் நம்மளை பயப்பட வேண்டாம்னு சொன்னார். அதுவுமில்லாம ரூமுக்கு வெளியவே நர்ஸ் இருக்காங்க. அவங்க பார்த்துப்பாங்க” என்று வானதி அழுத்தமாக சொல்ல,
“இல்ல, நான் நாளைக்கே கிளம்பி வர்றேன். நீயும், அம்மாவும் தனியா எப்படி சமாளிப்பீங்க? ஒருவேளை ஆஞ்சியோ பார்த்திட்டு, அப்பாவுக்கு பெருசா பிளாக் இருந்து சர்ஜெரி பண்ண சொல்லிட்டா என்ன பண்றது?” என்று கேள்விக் கேட்டான் இளங்கோ.
“பிளீஸ், முதல்ல இப்படி பேசுறதை நிறுத்துங்க. நீங்க ஜப்பான்ல இருந்து இங்க வர்றதுக்குள்ள மாமாவுக்கு ஆஞ்சியோவே பண்ணி முடிச்சுடுவாங்க.” என்றவள், “இதுல உங்க தப்பு எதுவும் இல்ல. நீங்க வேலை விஷயமா தான் ஜப்பான் போய் இருக்கீங்க. இங்க நான் பார்த்துக்கறேன், ஓகே?” என்று கேட்டாள்.
அப்பா, அம்மா, மனைவி, பிள்ளைகள் என்று அவனது எண்ணவோட்டம் முழுவதையும் குடும்பமே நிறைத்திருந்தது.
நீண்ட யோசனைக்கு பிறகு, “ம்ம்” என்றான். அவன் மீண்டும் முதலில் இருந்து கேள்விகளை கேட்க ஆரம்பிக்க, வானதி மருத்துவர் சொன்னதை, அவள் புரிந்து கொண்ட அளவில் தெளிவாக கணவனுக்கு விளக்கினாள்.
உறவில், நண்பர்கள் வட்டத்தில், அறிந்தவர், தெரிந்தவர்களில் பலருக்கும், “ஹார்ட் அட்டாக்” வந்து கேள்விப்பட்டிருக்கிறார்கள் தான். ஆனால், சிகிச்சை முறைகள் பற்றிய அரிச்சுவடி கூட அவர்களுக்குத் தெரியாது.
“ஆஞ்சியோகிராம், ஓபன் ஹார்ட் சர்ஜெரி, பைபாஸ் சர்ஜெரி” என்ற மருத்துவ வார்த்தைகள் மட்டுமே பரிச்சயம். அதன் பின் இருக்கும் சிகிச்சை முறைகள் பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை. இப்போது கேட்பவை அனைத்தும் மிரட்டுவதாக இருந்தது.
வானதியின் அப்பாவே நெஞ்சுவலி வந்து மருத்துவமனை செல்லும் வழியில்தான் மரணித்திருந்தார். இருவரையும் அதுதான் இன்னும் அச்சமடைய செய்தது.
இளங்கோ தன்னை திடப்படுத்தி கொண்டு, “சரி வானதி. ஓகே சொல்லிடு.” என்றான்.
“அத்தைக்கும், உங்க தம்பிக்கும், மதிக்கும் நான் சொல்லிக்கிறேன். நீங்க போய் படுங்க. அங்க இப்போ டைம் என்ன ஒரு மணியாச்சுல்ல?”
“தூக்கம் வரும்னு தோனல வானதி” என்றான் இளங்கோ கலக்கம் நிறைந்த குரலில். சமீப ஆண்டுகளில் அப்பா, அம்மா இருவருக்கும் வயதின் காரணமாக எப்போதாவது சிறிய உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனை அழைத்துச் சென்றிருக்கிறான் தான். அவ்வளவு ஏன் முழு உடல் பரிசோதனை கூட செய்ய வைத்திருக்கிறான். அப்போது முழு உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவர் சொல்லியிருந்தார்கள். இப்போது திடீரென்று அப்பாவுக்கு நெஞ்சு வலி என்பது அவனுக்கு பயமூட்டுவதாகவே இருந்தது.
அவனிடம் மேலும் சில நிமிடங்கள் பேசி விட்டு அறைக்குச் சென்றாள் வானதி. நட்சத்திராவுக்கு இட்லி ஊட்டியபடி மாமியாரிடம் பேசினாள்.
அவரோ சேலை தலைப்பால் வாயை பொத்திக் கொண்டு அழ, தன்னால் இயன்ற அளவில் அவருக்கு ஆறுதல் சொன்னாள் வானதி. தாமரை நடுங்கும் கரங்களால் முதலில் மகளுக்கு அழைத்தார்.
“ஆஞ்சியோகிராம் பண்ணனுமா? அதையும் ஒரு நாள் வெயிட் பண்ணி தான் பண்ணனுமா? உடனே பண்ண முடியாதா? எங்க சின்னத்தைக்கு போன வருஷம் பண்ணாங்க அண்ணி. இப்படி வெயிட் பண்ண மாதிரி எங்கத்தை சொல்லலியே?” வானதியை பேச விடாமல் மதியழகி அடுத்தடுத்த கேள்விகளை அடுக்க, அவளிடமும் பொறுமையாக விளக்கம் தந்தாள் வானதி.
ஒரு கட்டத்திற்கு மேல் அந்தப் பொறுமையும் நீர்த்து போய் விட, “நான் நர்ஸ்கிட்ட கொடுக்கறேன். நீங்களே உங்க டவுட்டை கேட்டு கிளியர் பண்ணிக்கோங்க” என்று வெளியில் சென்று, செவிலியிடம் நிலைமையை விளக்கி, அவரிடம் அலைபேசியை நீட்டினாள் வானதி.
அவரிடமும் பதினைந்து நிமிடங்கள் பேசிய பின்னரே, “ஓகே அண்ணி. அப்பாவை கவனமா பார்த்துக்கோங்க. நான் நாளைக்கு கால் பண்றேன்” என்று வைத்தாள் அவள்.
வானதி பெருமூச்சுடன் மகளை மடியில் படுக்கச் செய்து, அவளும் சுவரில் சாய்ந்து அமர்ந்தாள். அன்றைய நாளின் பரபரப்பும், அசதியும், அவளுக்கு அதிக சோர்வை அளிக்க, தலையை வலிப்பது போலிருந்தது. மெதுவாக கண்களை மூடித் திறந்தாள்.
அவளுக்கு பக்கத்தில் வந்தமர்ந்து, “அம்மா, நீங்க டின்னர் சாப்பிடல?” என்று நேத்ரன் கேட்க, அப்போதுதான் பசியை உணர்ந்தாள் வானதி.
“நான் கேண்டீன் போய் இட்லி வாங்கிட்டு வரவாம்மா?” என்று கேட்ட மகனின் கன்னம் கிள்ளி முத்தம் கொடுத்தாள்.
“அப்படியே அவங்க அப்பா போல பொறுப்பான பையன்” என்று பேரனை புகழ்ந்தார் தாமரை.
அப்போதும் அவருக்கு மருமகள் உண்ணாதது உறுத்தவேயில்லை.
வானதி அன்றிரவு அவளும், குழந்தைகளும் மருத்துவமனையில் தங்குவதா, இல்லை காஞ்சிபுரத்தில் இருக்கும் உறவினர் வீடு செல்வதா? இல்லை, மருத்துவமனைக்கு அருகிலேயே இருக்கும் ஹோட்டலில் அறை எடுப்பதா? என்று குழம்பிக் கொண்டிருந்தாள்.
இளங்கோவிற்கும் அந்நேரம் அதே சிந்தனைதான். “ஹாஸ்பிடல்லயே ரூம் எடுத்திடு” என்று அவன் சொல்ல, சரியென்றவள் அலைபேசியை தாமரையிடம் கொடுத்தாள்.
அவர் பேசி விட்டு வைக்கவும், அருள்செல்வன் அவளை அழைத்து விட்டான். அவனிடமும் அதையே அவள் சொல்ல, “ம்ம், அண்ணா சொன்னாங்க அண்ணி” என்றவன், கூகுள் உதவியோடு இணையத்தின் வாயிலாக அறிந்துக் கொண்டதை வைத்து அவளுக்கு பாடம் எடுத்தான்.
இறுதியில், “அங்க அப்பா கூட நீங்க இருக்கீங்கன்ற தைரியத்தில் தான் நாங்க இங்க பயமில்லாம இருக்கோம் அண்ணி. நீங்க அவரை பார்த்துப்பீங்கன்னு தான் பதறியடுச்சு நாங்க கிளம்பி வரல.” என்று அவன் சொல்ல, “சரிங்க தம்பி” என்பதை தவிர வேறொன்றும் சொல்லவில்லை வானதி.
“என்கிட்ட அண்ணா அக்கவுண்ட் நம்பர் தான் இருக்கு. அதுனால அம்மா நம்பருக்கு பணம் அனுப்பறேன். அதை எடுத்து…” மேலே அவனை பேச விடாமல், “நீங்க பண விஷயம் எல்லாம் உங்கண்ணாகிட்ட பேசிக்கோங்க” என்று விட்டாள்.
“அத்தைக்கு பணம் அனுப்பறீங்கன்னா, அதை அவங்ககிட்ட சொல்லிடுங்க.” அவனது பதிலை கேட்க விரும்பாமல் அலைபேசியை தாமரையிடம் நீட்டினாள்.
“காசா? அதெல்லாம் ஒன்னும் வேணாம் அருளு. அண்ணா பார்த்துப்பான்.” என்று தாமரை மகனிடம் சொல்வதை கேட்டபடியே மடியில் இருந்த மகளை தட்டிக் கொடுத்தாள்.
அருள்செல்வன், மதியழகி இருவரையும் அவள் தவறாக நினைக்கவில்லை. அவர்களை குற்றம் சாட்டி, குறை சொல்லவும் விரும்பவில்லை. ஒரு அவசரத்திற்கு பதறினாலும், பயந்தாலும், ஆசைப்பட்டாலும் அவசரமாக கிளம்பி வர முடியாத தூரத்தில் கடல் தாண்டி இருப்பவர்களை எவ்வாறு குற்றம் சாட்டுவது?
ஆனாலும், முதலில் பணத்தை பற்றி குறிப்பிட்டது அவளுக்கு எரிச்சலூட்டியது என்னவோ உண்மைதான். பணத்தை கொண்டு பாசத்தை நிறைத்து சரி கட்டிவிட முடியாது என்று யாரேனும் இவர்களுக்கு எடுத்துச் சொன்னால் நல்லது என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
தாமரை பேசி முடித்து அலைபேசியை நீட்ட, அம்மா, அண்ணா, அண்ணிக்கு தகவல் தெரிவித்தாள். அவர்கள் முன்னரே தாமரையிடம் பேசியிருந்தார்கள்.