அன்றிரவு மருத்துவமனையிலேயே தனியாக அறை எடுத்து குழந்தைகளுடன் தங்கி விட்டாள் வானதி.
வீட்டின் தினசரி நடைமுறை அனைத்தையும் அவள்தான் செய்வது. ஆனால், இப்படி பதட்டச் சூழல் அவளுக்கு புதிது. அதிலும் இளங்கோ ஊரில் இல்லாமல் சமாளித்தது, உடலையும் மனதையும் ஒருசேர சோர்வடைய செய்திருந்தது.
அந்த நள்ளிரவு நேரத்திலும் அவளுக்கு தொடர்ச்சியாக குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான் இளங்கோ. ஒவ்வொன்றாக வாசித்தாள். ஆனால், எதுவுமே மனதில் பதியவில்லை. புன்னகைக்கும் ஒற்றை ஸ்மைலியை பதிலாக அனுப்பி வைத்தவளுக்கு அக்கணம் கணவனின் அணைப்பு அத்தியாவசியமாக தேவைப்பட்டது.
நட்சத்திரா அவள் கழுத்தில் கைப் போட்டு உறங்க, குழந்தையின் ஸ்பரிசம் பெரும் ஆறுதலைத் தர, ஆழ்ந்த உறக்கத்தினுள் அமிழ்ந்தாள் அவள்.
மறுநாள் விரைவாக எழுந்து குளித்து, பிள்ளைகள் இருவரையும் குளிக்க வைத்து மாமனாரின் அறைக்குச் சென்றாள்.
சந்திரசேகர் கண் விழித்திருப்பதை பார்த்து, “எப்படியிருக்கீங்க மாமா?” என்று அக்கறையுடன் கேட்டாள் வானதி.
“நல்லாருக்கேன் சொல்ல ஆசைதான் மா. ஆனா, இப்படி படுத்துட்டு உங்களை பயமுறுத்துறேனே” என்று அங்கலாய்த்தவர், “நீங்க நைட்டே வந்துட்டீங்களாம் என்னை எழுப்பி இருக்கலாம் இல்ல?” என்றவர், பேரன், பேத்தி இருவரையும் பார்த்து, “தாத்தாகிட்ட வாங்க செல்லங்களா. என்னைய பார்த்துக்க வந்தீங்களாக்கும் பெரிய மனுஷங்க” என்று வானதியின் பதிலை எதிர்பாராமல் பேரப் பிள்ளைகளுடன் பேச ஆரம்பித்து விட்டார் அவர்.
“சரிம்மா” என்று அவர் நேத்ரனிடம் பேச, தாமரையிடம் திரும்பினாள் வானதி.
“உங்களுக்கு சேலை எடுத்துட்டு வந்தேன் அத்த. இந்தாங்க, குளிச்சுட்டு மாத்துங்க. நான் கேன்டீன் போய் எல்லோருக்கும் காஃபி வாங்கிட்டு வர்றேன். அப்புறம் உங்க மகனோட வேட்டி சட்டை இதுல இருக்கு. மாமாவுக்கு மாத்திக்க கொடுங்க” என்று அவள் துணிப் பையை தாமரையிடம் கொடுக்க, “பரவாயில்ல, நீ எடுத்துட்டு வந்துட்டியா? பத்து மணிக்கு மேல இங்க கடைங்க தொறந்ததும் துணி வாங்கிட்டு வரச் சொல்லணும்னு நினைச்சுட்டு இருந்தேன். நல்லதா போச்சு” என்றார் தாமரை.
வானதி சென்று அனைவருக்கும் காஃபி, பால் என வாங்கி வர, மருத்துவமனைக்குள் நுழைந்தது அவளது பிறந்த வீடு. மாதவன் நலம் விசாரித்து விட்டு, அனைவருக்கும் சென்று காலை உணவு வாங்கி வந்தான்.
மதியம் போல வானதியின் காரில் தாமரையை செய்யாறு அழைத்துச் சென்றான். சந்திரசேகரனின் சிகிச்சை முடிந்து சென்னை வந்து மகன் வீட்டில் சில மாதங்கள் அவர்கள் தங்க தேவையானவற்றை எடுத்துக் கொண்டு நான்கு மணி நேரத்தில் மருத்துவமனை திரும்பி வந்தார்கள்.
பாக்கியத்தின் தங்கை மகள் காஞ்சிபுரத்தில் இருக்க அங்கிருந்து அவர்களுக்கு மதிய, இரவு உணவு வந்தது. இரவும் அங்கேயே தங்கி மறுநாள் காலை வரை அவளுக்குத் துணையாய் அவளுடன் நின்றது அவள் குடும்பம்.
அதற்கடுத்த நாள் காலை பத்து மணியளவில் ஏற்கனவே திட்டமிட்டபடி மருத்துவர்கள் சந்திரசேகரருக்கு ஆஞ்சியோகிராம் செய்தார்கள். அதன் மூலம் சிறிய அடைப்பிருந்ததை கண்டறிந்து, ஆஞ்சியோபிளாஸ்டி செய்து அந்த அடைப்பை நீக்கினார்கள்.
ஒன்றரை மணி நேரத்தில் சிகிச்சை சிறப்பான முறையில் முடிந்து சந்திரசேகரை தீவிர சிகிக்கை பிரிவுக்கு மாற்றினார்கள்.
சிகிச்சை நடைபெறும் போது பாக்கியம், தாமரையுடன் அமர்ந்து அவரிடம் ஆதரவாக பேசிக் கொண்டிருந்தார்.
“நாங்க அமெரிக்கா போயிருந்தப்பவே எங்க ரெண்டு பேருக்கும் முழுசா ஒரு செக்கப் பண்ணிடலாம்னு எங்க சின்ன பையன் சொன்னான். நான்தான் ஒன்னும் இருக்காதுன்னு வேணாம்னு சொல்லிட்டேன்”
“மலேசியால பெரிய ஹாஸ்பிடல் நிறைய இருக்கு. இங்க கிளம்பி வாங்க. நான் பார்த்துக்கறேன்னு நேத்து மக கூட சொன்னா. நான் தான் இங்கேயே பார்த்துக்கறோம்னு சொல்லிட்டேன்” என்று தாமரை பேசியதை அமைதியாக கேட்ட வானதி, “முன்னாடி ஒரு டைம் உங்க ரெண்டு பேருக்கும் ஃபுல் பாடி செக்கப் பண்ணோம் இல்லத்த? அப்போ ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டாங்க தானே. இப்போ தம்பி சொன்னார்னா, நீங்க அமெரிக்கால செக்கப் பண்ணியிருக்கலாம். அப்பவே பிளாக் தெரிய வந்திருக்கும்..” வானதி எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் இயல்பாக சொல்ல,
“அங்க சின்னவனுக்கு இன்சூரன்ஸ் இல்லைனு சொல்லிட்டு இருந்தான். நிறைய டாலர் செலவாகும்னு சொன்னான். அதான் வேணாம்னு வந்துட்டோம். இங்கன்னா எங்க செலவை இளங்கோ பார்த்துப்பான்” என்றார் தாமரை.
அதற்கு வானதி புன்னகைக்க, சம்பந்தியை முறைக்க முடியாமல், கோபத்துடன் மகளை முறைத்தார் பாக்கியம். வானதி அதற்கும் புன்னகைக்கத் தான் செய்தாள்.
அதன் பிறகு இளங்கோ அவளை அழைக்க அவனுக்கும், அவனது உடன் பிறப்புகளுக்கும் இங்கு நடப்பதை நேரலை விளக்கம் அளித்தே சோர்ந்து போனாள் அவள்.
இளங்கோ முக்கிய அலுவல் வேலையாக வெளிநாட்டில் இருந்தாலும், அவனது இருப்பை அலைபேசி வழியே அவளுக்கு உணர்த்திக் கொண்டேயிருந்தான்.
ஒரு கட்டத்திற்கு மேல் தம்பி, தங்கைக்கு அவனே பதில் சொன்னான்.
அன்று மாலை பாக்கியம் சென்னை செல்கையில் வானதி பலமாக எதிர்ப்பு தெரிவித்து, மறுத்தும் கேளாமல், மாதவன் மூலமாக இளங்கோவிடம் பேசி அனுமதி வாங்கி, நேத்ரன், நட்சத்திராவை அவர்களோடு வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
ஹரிணியை அம்மா வீட்டில் விட்டு வந்திருந்த அர்ச்சனா, ஓரப் பார்வையோடு அமைதியாக காரில் ஏறினாள்.
வானதி, தாமரை இருவர் மட்டுமே அங்கிருந்தார்கள்.
இளங்கோவும், பிள்ளைகளும் இல்லாமல் அவள் தனித்திருந்ததே கிடையாது. சட்டென ஒருவித வெறுமை அவளை நிறைத்து கொள்ள, பக்கத்தில் அத்தையை வைத்துக் கொண்டு கணவனிடமும் அவளால் அதிகம் பேச முடியவில்லை.
இளங்கோவிற்கு நேர வித்தியாசம், பணி சூழல் என பல நெருக்கடி. ஆனாலும், அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான். ஆனால், அவள் எதிர்பார்த்த செய்தியை அது தாங்கி வரவில்லை.
மறுநாள் சாதாரண அறைக்கு மாற்றப்பட்டு, இரண்டு நாட்கள் கழித்து வீட்டுக்கு அனுப்பப்பட்டார் சந்திரசேகர்.
வானதிக்கு திட்டமிடாமல் வாய்த்த இந்த தனிமையும், அமைதியும் அவளின் வாழ்க்கை குறித்து சிந்திக்க நிறைய நேரத்தை வழங்கியது.
காதலித்த காலங்களில் இளங்கோவை மணந்து கொள்வது மட்டுமே எதிர்காலம் என்று நினைத்திருக்கிறாள் வானதி. அவர்களின் காதலுக்கு கல்யாணம் ஒரு அழகான முடிவாக, ஹேப்பி எண்டிங்கை தரும் என்பதுதான் அவளது கனவாக இருந்தது. அதுதான் முதல் அத்தியாயம் என்று நினைத்தாள்.
நிஜ வாழ்க்கையின் அடுத்தடுத்த அத்தியாயங்கள் அதற்கு பிறகு தானே தொடங்கும்?
காலத்தின் ஓட்டத்தில் காதலை தொலைத்து விட்டதாக நினைத்து தேடிக் கொண்டிருக்கிறாள்.
அந்த காதல் மறைந்து விடவில்லை என்பதை தம்பதிகள் இருவரும் உணர வேண்டுமே.
இந்த மத்திம வயதில் அனைவரும் கடந்து வரும் எதிர்காலம், வாழ்க்கை குறித்த பயமும், மனதை சூழும் வெறுமையும், விரக்தி மனப்பான்மையையும் தங்களால் கடக்க முடியுமா? என்று ஆழமாக யோசித்தாள் வானதி.
இளங்கோ ஊருக்கு வந்ததும், அவனிடம் மனம் திறந்து பேச வேண்டும் என்ற முடிவுடன் மூன்று நாட்கள் கழித்து மாமனார், மாமியாரை தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்னை நோக்கி காரைச் செலுத்தினாள்.
இங்கு பல குடும்பங்களை கலைத்து போடும் குடும்ப அரசியலை பற்றி யோசிக்காமல் தாமரை கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்லியபடியே பயணத்தை தொடர்ந்தாள் வானதி.