அது ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிர்ட்ஷவசமாக இளங்கோவின் வசம் நேரமிருந்தது. அன்று கண் விழித்ததில் இருந்து வானதியுடன் பேசிக் கொண்டேயிருந்தான் அவன். மருத்துவமனை கட்டணம், மருத்துவர்களிடம் ஆலோசிக்க வேண்டிய விஷயங்கள், மேற்கொண்டு அப்பாவின் பராமரிப்பு, டிஸ்சார்ஜ் ப்ரோசீஜர் என அனைத்தையும் வானதி செய்ய அவளோடு துணை நின்றான் இளங்கோ.
அவனைப் போலவே வெளிநாட்டில் அமர்ந்துக் கொண்டு அப்பாவின் உடல் நிலையை நினைத்து பயங்கொண்ட அவனது உடன்பிறப்புகளிடமும் அவனே உடனுக்குடன் தகவல்களை பரிமாறினான்.
பெற்றோருடன் வானதி சென்னை நோக்கி பயணிக்க, தனியாக தவித்தான் இளங்கோ.
“நான் டிரைவிங்ல பேச முடியாது. நீங்க போனை வச்சுட்டு போய் ரெஸ்ட் எடுங்க. நான் வீட்டுக்கு போய்ட்டு உங்களுக்கு கால் பண்றேன்” வானதி சொல்ல, அவனுக்கு அழைப்பை துண்டிப்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை.
ப்ளூ டூத் வழியாக வானதி பேசிக் கொண்டே வண்டியோட்டினால், நிச்சயமாய் தாமரை சத்தம் போடுவார் என்பதை அவன் அறிவான். வானதி தயங்குவதின் காரணமும் அதுதான் என்பது அறியாதவன் அல்ல அவன்.
அவளுக்கு வண்டியை கவனமாக, விழிப்பாக ஓட்ட சொல்லி ஆயிரம் அறிவுரை தர அவன் விரும்பினாலும், அது எதையும் சொல்லாமல், “ஓகே” என்று வைத்து விட்டான்.
அலைபேசியில் இருந்த குடும்பப் புகைப்படத்தை தொட்டு விரிவாக்கிப் பார்த்தான். மயக்கும் சிரிப்புடன் அவனை இடித்துக் கொண்டு நின்றிருந்த மனைவியை பார்வையால் வருடினான். மனைவியை இப்படி சோம்பலுடன் வருடி ரசித்து பல நாட்களான உணர்வு அவனுக்கு. ஊருக்கு சென்றதும் இறுக்கி அணைத்து முத்தமிடும் கனவுகளில் இப்போதே மூழ்கினான் இளங்கோ.
பின் இருக்கையில் மாமனார் கால் நீட்டி படுத்திருக்க, முன்னிருக்கையில் அமர்ந்திருந்தார் மாமியார்.
தாமரையிடம் கலகலப்பாக எதையும் பேசும் மனநிலை நிச்சயமாய் அவளுக்கில்லை.
மருத்துவமனையில் இருந்து கிளம்பும் போது கூட, “பணம் மொத்தமும் கட்டியாச்சா வானதி? எவ்ளோ ஆச்சு?” என்று அவளிடம் விசாரித்தார் தாமரை.
“பணம் கட்டியாச்சுத்த. நாம கிளம்பலாம்” என்று வானதி மலுப்பலாக பதில் சொல்லி முடித்து விட்டாள். ஆனால், இளங்கோ பெற்றோரிடம் மறைக்காமல் மருத்துவமனையில் செலவான தொகையை தெரிவித்திருந்தான்.
அருள்செல்வன், மதியழகி இருவரும் அடுத்தடுத்து அம்மாவை அழைக்க, சின்ன மகனிடம், பாதி தொகையை மட்டுமே சொல்லி, “அவ்ளோதான் ஆச்சாம் அருளு. அண்ணா பணம் மொத்தமும் கட்டிட்டான். அதான் உங்கண்ணன் நீ காசு அனுப்ப வேணாம்னு சொல்லிட்டான் இல்ல? அப்புறமும் ஏன் அதையே கேட்டு மண்டையை உடைச்சுக்கற? ம்ம். சரி, சரி. செய்யாறு இல்ல. சென்னைக்கு உங்கண்ணா வீட்டுக்குத்தான் போறோம். ஆமா, ஆமா. அவன் பார்த்துப்பான். நீ கவலைப்படாத” என்று அவர் பேசியதை கேட்க நேர்கையில் ஏனோ வருத்தமாக உணர்ந்தாள் வானதி.
மகளிடமும் தாமரை அதையே சொல்ல, அவளுக்கு சிரிப்பு கூட வந்தது. பெரும்பாலும் கூடவே இருக்கும் பிள்ளைகளின் அருமை பெற்றோருக்கு தெரிவதே இல்லை. தெரிந்தாலும் பாசத்தைக் கூட திருப்பித் தருவதில்லை அவர்கள்.
“பாவம் ரெண்டு பேரும் கஷ்டப்பட்டு வெளிநாட்ல வேலைப் பார்க்கறாங்க. சம்பாதிக்கிற பணம் எல்லாம் அங்க செலவுக்கே சரியா போகுதுன்னு புலம்புறாங்க. நாமளும் அங்கப் போயிருந்தப்போ பார்த்தோம் தானே இளங்கோப்பா. நீங்களே சொல்லுங்க, அவங்களுக்கு எவ்வளவு செலவு. இப்போ இதுக்காக பணம் கேட்டு அவங்களை தொல்லை பண்ணனுமா? பெரியவன் இருக்கும் போது, சின்ன பிள்ளைங்ககிட்ட எதுக்கு பணம் கேட்டுக்கிட்டு..” அவளையும், மாமனாரையும் பார்த்து தாமரை சொல்ல, “நீ கேட்டாலும் சின்னதுங்க ரெண்டும் பணம் கொடுக்காதுங்க. உன்னை மாதிரி சக்கரையா பேசியே சரி கட்டிடுங்க ரெண்டும்” என்று சந்திர சேகர் சொல்ல, கணவரை முறைத்தார் தாமரை.
இப்போது அந்த நினைவுகளோடு காரை செலுத்திய வானதிக்கு மிக சமீபமாக அருள்செல்வன் குடும்பம் நயாகரா நீர்வீழ்ச்சி காணச் சென்றதும், மதியழகி குடும்பம் ஒரு வாரம் தாய்லாந்தில் இருக்கும் புக்கெட் தீவிற்கு சுற்றுலா சென்றதும், அந்தப் புகைப்படங்களை பேஸ்புக்கில் இளங்கோவையும், அவளையும் டேக் செய்து பதிவிட்டதும் நினைவில் வந்தது.
பணம், விடுமுறை, பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள் என எதுவாகினும் காலப் போக்கில் மனிதர்களுக்கு முக்கியத்துவங்கள் மாறி விடுகின்றன என்ற எதார்த்தம் விளங்கியது.
அவ்வளவு ஏன், அவர்கள் வாழ்விலேயே தற்போது முக்கியத்துவங்கள் மாறிப் போனது தானே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அடிநாதம்.
“ம்ம்” ஒரு பெருமூச்சுடன் தாமரையை திரும்பிப் பார்த்தாள். அவர் இருக்கையில் தலை சாய்த்து உறங்குவதைக் கண்டு, காரில் பாடலை ஒலிக்க விட்டு சத்தத்தைக் குறைத்தாள்.
“என்னவோ என்னவோ என் வசம் நானில்லை” என்ற பாடல் ஒலிக்க, வெடித்து வெளிவரவிருந்த சிரிப்பை அடக்க பெரும்பாடுப்பட்டாள் வானதி.
“ஆள் முழுங்கி, திருடன்” இளங்கோவை மனதிற்குள் செல்லமாய் திட்டிக் கொண்டாள். காரில் பொருத்தியிருந்த இளங்கோவின் யூஎஸ்பி டிரைவ்வின் மேல் ரசனையாய் பதிந்து விலகியது அவள் பார்வை.
காதலித்த காலங்களில் அவர்கள் கள்ளப் புன்னகையுடன், காதல் பார்வையுடன் ரசித்த பாடல் அது. “என்னோடு நீயாக, உன்னோடு நானாகவா? பிாியமானவனே…” என்ற வரிகளை மனதிற்குள் ராகம் இழுக்கும் போதே இருவரின் விழிகளும் பிரியம் பரிமாறி விலகும்.
“பிரியாத வரம் ஒன்றை தரவேண்டும் சம்மதமா?” அந்த பாடல் முழுவதும் எதையெதையோ விவரித்து சம்மதம் கேட்பார்கள் தலைவனும், தலைவியும். ஆனால், பிரிவு? ஓ, இந்த வரிகள் அவளுக்கு அப்போதே அவ்வளவு பிடிக்கும். பிரிவை பற்றி கனவாக கூட நினைத்துப் பார்க்க விரும்பவில்லை அவள்.
இளங்கோ இறுதியாக, “ஓகே” என்று மட்டுமே சொல்லி அழைப்பை துண்டித்தது, அவளுக்கு இப்போது நினைக்கையிலும் வருத்தமாகத்தான் இருந்தது.
“பரவாயில்ல வானதி. நான் இல்லாம மேனேஜ் பண்ணிட்டியே, குட்” குறைந்த பட்சமாக இதையாவது சொல்லி இருக்கலாம் இளங்கோ என்று அவள் எதிர்பார்த்ததில் தவறிருப்பதாக அவளுக்குத் தோன்றவில்லை.
அதிகபட்சமாக, “ஐ லவ் யூ. ஐ மிஸ் யூ” இரண்டையும் எதிர்பார்த்தாள் வானதி. மனதின் ஓரத்தில் லேசாய் ஒரு முணுமுணுப்பு இருந்ததை அவளால் மறுக்க முடியாது.
இந்த வார்த்தைகள் எல்லாம் கேட்டும், சொல்லியும் எத்தனை காலமாகி விட்டது. மனதாலும், உடலாலும் இருவரும் மிக தூரமாய் விலகிச் சென்று விட்டது அவளுக்கு புரிபட, தீர்வுகளை யோசிக்கத் தொடங்கினாள்.
நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் கடந்தப் பின், நல்ல உணவகமாக பார்த்து நிறுத்தினாள். பெரியவர்கள் ஓய்வறை சென்று வந்தார்கள். அங்கேயே மாலை சிற்றுண்டி முடித்து மீண்டும் சென்னை நோக்கி பயணித்தார்கள்.
சென்னையை நெருங்க நெருங்க வானதிக்கு பிள்ளைகளை எப்போது பார்ப்போம் என்று மனது ஆவலுடன் அலைபாய்ந்தது.
நேத்ரன் தினமும் அங்கிருந்தே பள்ளிக்கு சென்று வந்தான். நட்சத்திராவிற்கு பகலெல்லாம் பாட்டியிடம் இருந்து பழக்கம் என்பதால் பாக்கியத்திடம் இருந்து கொண்டாள். வானதி மட்டுமல்ல இளங்கோவும் காணொளி அழைப்பில் அவளிடம் பேச ஓரளவு அமைதியாகதான் இருந்தாள் குழந்தை. ஆனால், இரவானால் போதும் அவளைக் கட்டுப்படுத்த முடியாது திண்டாடிப் போனார்கள் பாக்கியமும், மாதவனும்.
மாதவன், ஐஸ்கிரீம் எல்லாம் வாங்கிக் கொடுத்து ஐஸ் வைத்தும், குளிராமல் அடுத்த நிமிடமே, “அம்மாகிட்ட போணும்” என்று உதடு பிதுக்கி அழுது கரைந்து உருகும் நட்சத்திரா, அப்படியே அழுகையில் தேம்பிக் கொண்டே உறங்கியும் போனது கேட்டும், பார்த்தும் வானதிக்கு உறக்கமே வரவில்லை.
“அம்மா காலையில வந்துடுவேன் செல்லக் குட்டி. நீங்க பாட்டி கூட சமத்தா தூங்குங்க, பிளீஸ்” என்று வானதி எத்தனை சமாதானம் சொன்னாலும், “இப்ப வாம்மா” என்று உதடு பிதுக்கி, மாலை மாலையாய் கண்ணீர் விடும் மகளை பார்க்கையில் அவளுக்கு மனது இறுகி போனது.
“இன்னைக்கு நைட் இவ ஒன்னுமே சாப்பிடல தெரியுமா? பால் கூட குடிக்காம உன்னைக் கேட்டு அழுகையா அழுது அடம். இவளை உன் கூடவே வச்சுட்டு இருந்திருக்கலாம் நீ” என்று அவளிடம் சொன்ன அர்ச்சனா, அவள் பொருட்டு மாதவனையும், பாக்கியத்தையும் நன்றாக அர்ச்சனை செய்ததும் அவளுக்குத் தெரியும். நேத்ரன் சூழலுக்கு தகுந்தது போல மாறிக் கொண்டான்.
அவன் கண்களில் அம்மாவுக்கான ஏக்கம் இருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவளிடம் உற்சமாக பேசும் மகனை உச்சி முகர முடியாது குறுக்கே நின்ற தூரத்தை சபித்தாள் வானதி.
அம்மா வீட்டின் முன் சென்று காரை நிறுத்தியதும், கார் சத்தம் கேட்டு ஓடி வந்தனர் பிள்ளைகள் மூவரும். வானதி, மகளைத் தூக்கி அணைத்து முகமெங்கும் முத்தமிட்டாள்.
“ம்மா..” என்று நட்சத்திரா கதைப் பேசத் தொடங்க, நேத்ரன் கார் கதவை தாத்தாவிற்காக விரிய திறந்துப் பிடித்து நின்றான். ஹரிணி, “பாட்டி, வாங்க” என்று தாமரைக்கு உதவினாள்.
அதற்குள் வீட்டிற்குள் இருந்து வெளிவந்த மாதவன், “வாங்க மாமா, இப்போ உடம்புக்கு எப்படி இருக்கு?” என்று நலம் விசாரித்து, அவரை உள்ளே அழைத்துச் சென்றான்.
பாக்கியம், அர்ச்சனா என அனைவரும் வெளியே வந்து தாமரையிடம் பேசினார்கள். இந்த வரவேற்பு, மரியாதை இதையெல்லாம் நிறையவே எதிர்பார்ப்பார் அவர். ஆக, பாக்கியம் அவருடன் பேசிக் கொண்டே மகளுக்கு கண் காட்டினார்.
“நீங்க பாத்ரூம் போய் முகம் கழுவிட்டு வாங்க. நான், உங்களுக்கு டிஃபன் எடுத்து வைக்கறேன் சம்பந்தி” என்ற பாக்கியம், “மாமாவை உள்ள ரூமுக்கு கூட்டிட்டு போ மாதவா.” என்று மகனிடம் சொன்னார்.
“வாங்க மாமா. கார்ல இவ்வளவு தூரம் வந்தது டையர்டா இருக்கும் உங்களுக்கு. கொஞ்ச நேரம் கால் நீட்டிப் படுங்க” என்று அவரை உள்ளே அழைத்துச் சென்றான் மாதவன்.
“நீ வா வானதி.” என்று மகளை கையோடு சமையல் அறைக்குள் அழைத்துச் சென்றார் பாக்கியம்.
“இட்லி, சாம்பார், சட்னி பண்ணேன் போதும் தானே? மதியம் உங்கண்ணி கேட்டான்னு சிக்கன் பிரியாணியும், மட்டன் குழம்பும் பண்ணேன். உங்க மாமா அதெல்லாம் சாப்பிடக் கூடாது இல்ல? நீ மட்டும் இங்கேயே நின்னு கொஞ்சமா சாப்பிடுறியா? ஒரு தட்டுல வச்சுத் தரவா?” பாக்கியம் வேலை பார்த்துக் கொண்டே பரபரக்க, “ம்மா, எனக்கும் இட்லி போதும். எப்படா வீட்டுக்கு போய் தூங்குவோம்னு இருக்குமா. இதுல மட்டன் சாப்பிட்டு செரிக்க எல்லாம் எனக்குத் தெம்பில்ல” என்று வானதி சலிப்புடன் சுவரில் சாய்ந்து சொல்ல,
“உன் முகத்தில அருளே இல்ல வானு. இங்கேயே இருந்துட்டு நாளைக்கு வீட்டுக்குப் போயேன்” என்று அக்கறையாய் அவர் சொல்ல, “அத்தை ஏதாவது சொல்லுவாங்கம்மா, வேணாம். மாமாவுக்கும் இங்க வசதியா இருக்காது” என்றாள் வானதி.
“அப்படியென்ன வசதி குறைவாம் நம்ம வீட்ல? நீ கல்யாணம் பண்ணிட்டு போகும் போது அவங்க வீடு எப்படி இருந்துச்சுன்னு உனக்கு ஞாபகம் இருக்கா? எல்லாம் இப்ப வந்த வசதியை வச்சுட்டு உங்கத்தை பெருமை பேசினா அவங்களை போலவே நீயும் பேசுற?” பாக்கியம் கோபமாக சுள்ளென்று கேட்க,
“ஐயோ அம்மா. நான் வசதின்னு சொன்னது மாமாக்கு இங்க கம்பர்ட்டபிளா இருக்காதுன்ற அர்த்தத்தில. அதை நீங்களா வேற மாதிரி புரிஞ்சிட்டு..”
“சரி சரி. விடு, விடு” என்று பாக்கியம் சிரித்து விட, வானதியும் புன்னகைத்தாள்.
“இந்தா, இதையெல்லாம் எடுத்துட்டு போய் கார்ல வை. கவனமா எடுத்துட்டு போ. கீழ மேல சிந்திட போகுது” என்று பாக்கியம் மகளிடம் பெரிய பையை தந்து எச்சரிக்க, அதைக் கையில் வாங்கி, “என்னம்மா வச்சிருக்க பையில?” என்று பையை அசைத்து அவதானிக்க முயன்றாள் அவள்.
“உனக்கு ஒரு வாரத்துக்கு வர்ற மாதிரி இட்லி மாவு அரைச்சு வச்சுருக்கேன். கொஞ்சம் இடியாப்ப மாவு எடுத்து வச்சேன். அப்புறம் இந்த பையில் காய்கறி இருக்கு. இதுல பால், தயிர், பிள்ளைங்களுக்கு நொறுக்கு தீனி” என்று அவர் நீட்டி முழக்க, “ம்மா, நீயில்லைன்னா நான் என்னம்மா பண்ணுவேன்?” என்று வசனம் பேசினாள் வானதி.
“பையை கையில தூக்கிட்டு வாய் பேசாம போ கழுதை” என்று சிரிப்புடன் சொன்னார் பாக்கியம்
“நீயில்லைன்னா நான் என்ன பண்ணுவேன் வானதி?” இதைத்தான் இளங்கோவிடம் எதிர்பார்த்தோமா? சட்டென அந்த எண்ணம் அவள் மனதில் தோன்றி மறைய, மாமனாரை பார்க்கும் கடமை தனக்கும் இருக்கிறது என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு காரை நோக்கி நடந்தாள்.