“இந்தா, இதையும் உள்ள வை வானதி” என்று மற்ற இரண்டு பைகளையும் தூக்கிக் கொண்டு வந்து அவளிடம் தந்தாள் அர்ச்சனா.
“எங்க அம்மாகிட்ட வேலைக்கு ஆள் சொல்ல சொன்ன இல்ல. அம்மா, நம்ம வீட்ல ஹெல்ப்புக்கு இருக்க அக்காகிட்ட சொல்லி வச்சுருந்திருக்காங்க. அந்தக்கா விசாரிச்சு பார்த்து ரெண்டு பேரை கூட்டிட்டு வந்திருக்காங்க. ஆனா, அவங்க ஏரியால இருந்து, இங்க வந்து போக ரொம்ப தூரம், அதுனால முடியாதுன்னு ரெண்டு பேருமே சொல்லிட்டாங்களாம்” என்று அர்ச்சனா சொல்ல,
“அச்சோ. அவசரத்துக்கு யாருமே கிடைக்க மாட்டாங்க அண்ணி. எனக்கு பத்து மணிக்கு வந்து வீட்டு வேலை பார்த்துக் கொடுத்தா போதும்ண்ணி. சமையல் எல்லாம் நானே பார்த்துப்பேன்” வானதி சொல்ல, “புரியுது வானதி. அவங்களுக்கு வேலை, சம்பளம் எல்லாமே ஓகேதான். டெய்லி அவ்ளோ தூரம் வந்துட்டு போறது முடியாதேன்னு சொல்றாங்க. இங்க வரவே அவங்களுக்கு முக்கால் மணி நேரம் ஆகிடும். அப்புறம் வேலை முடிச்சு அவங்க திரும்பி போகணும்.” என்று அர்ச்சனா சொல்லும் போதே அவளுக்கு சோர்ந்து போனது.
“சரிங்க அண்ணி. வேற பார்ப்போம்” என்று பேசிக் கொண்டே இருவரும் உள்ளே சென்றார்கள்.
அர்ச்சனா பிள்ளைகளுக்கு இரவு உணவை எடுத்து வைக்க, அவ்வளவு நேரமும் அவளையே பார்வையால் தொடர்ந்து கொண்டிருந்த நட்சத்திரா அண்ணனின் கையை உதறி விட்டு, அம்மாவிடம் ஓடி வந்தாள்.
மகளை தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு அவளுக்கு இட்லி ஊட்டி விட்டாள் வானதி.
“ம்மா, எனக்கு ஒரு வாய், உனக்கு ஒரு வாய்” என்று நட்சத்திரா மழலையில் சொல்ல, “சரிங்க செல்லமே” என்று மகளின் மூக்கை, தன் மூக்கால் உரசினாள். நட்சத்திரா கிளுக்கி சிரித்தபடி சாப்பிட, வானதிக்கு திருமணமான புதிதில் நடந்தது எல்லாம் இப்போது நினைவில் வந்தது. இளங்கோவிற்கு இருவரும் ஒன்றாக அமர்ந்து உண்ண வேண்டும். அவள் வரும் வரை தட்டில் கை வைக்காமல் வீம்புடன் அமர்ந்திருப்பான்.
“ரொம்ப பண்ணாதீங்க. நீங்க சாப்பிட ஆரம்பிங்க. நான் வர்றேன்” என்று அவள் கத்தினாலும் காதிலே வாங்க மாட்டான். ஆனால், இன்று? அவன் இரவு வரும் வரைக்கும் அவள் காத்திருப்பது கிடையாது. அவளுக்கு அசதி, சோர்வு எனப் பல பல காரணங்கள். அதில் சில நேரம் கோபமும், அசட்டையும், அசதியும், பழி வாங்கலும் கூட சேர்ந்துக் கொள்ளும்.
“வானதி” மாதவன் அழைக்கவும், “என்னண்ணா?” என்று கேட்டாள்.
“நீ கேட்ட மாதிரி கட்டில் நேத்து வாங்கிட்டேன். பத்து நிமிஷத்துல உங்க வீட்டுக்கு டெலிவரி கொண்டு வர்றோம்னு இப்போ கால் பண்ணாங்க. சீக்கிரம் சாப்பிடு. கிளம்பலாம்” என்றான்.
“ஓகேண்ணா” என்றவள், மகளுக்கு உணவை கொடுத்தபடி ஹாலுக்கு சென்றாள்.
அத்தை, மாமா இருவருக்கும் இரவு உணவு பரிமாறி, அவர்கள் சாப்பிட்டதும், அம்மா வீட்டில் இருந்து பிள்ளைகளுடன் கிளம்பும் போது ஒரு மணி நேரத்திற்கு மேலாகி இருந்தது.
காரில் ஏறும் முன், “தேங்க்ஸ் அண்ணி” என்று அவள் அர்ச்சனாவிடம் சொல்ல, “ஹலோ, தேங்க்ஸ்லாம் வேணாம். எனக்கு டிரெண்ட்ஸ்ல ஆஃபீஸ் போட்டு போற மாதிரி ரெண்டு டாப்ஸ் வாங்கிக் கொடு. டீல்?” என்று கெத்து குறையாமல் சொன்னாள் அர்ச்சனா. “ஓகே. டீல்” என்ற வானதி புன்னகையுடன் காரை நகர்த்தினாள்.
மாதவன் அவளது காரை தன் இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்தான்.
இரண்டு படுக்கையறை கொண்ட அவர்கள் வீட்டில் மாமனார், மாமியார் வந்தால் பயன்படுத்த என தனியாக மெத்தைகள் இருந்தது. நட்சத்திரா பிறக்கும் முன்பு வரையிலும், அந்த அறையிலும் பெரிய கட்டில் இருந்தது. யார் வந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால், நட்சத்திரா பிறந்த பின்பு இரண்டு பிள்ளைகளும் பயன்படுத்தும் வகையில் பங்க் பெட் வாங்கியதால், அங்கே இடத்தை அடைத்துக் கொண்டிருந்த கட்டிலை எடுத்து விட்டார்கள்.
தற்போது மாமனாருக்கு தரையில் மெத்தை விரித்துப் படுக்க வசதிப்படாது என்பது புரிந்து அண்ணனிடம் சொல்லி புதிதாக கட்டில் வாங்கச் சொல்லியிருந்தாள் வானதி.
வீடு சென்றதும் டெலிவரி வந்தவர்களே கட்டிலை இடம் பார்த்து ஒழுங்கு செய்து தந்து விட்டு செல்ல, “போன தடவை அமெரிக்கா போய்ட்டு வந்ததுல இருந்து எங்களுக்கு ஏசி ஒத்துக்க மாட்டேங்குது மா. வீட்ல இந்த ஏர் கூலர் இல்ல? இல்லனா டேபிள் ஃபேன் வச்சுருப்பியே. அது இருந்தா எடுத்துக் கொடு, போதும்” என்று ஆரம்பித்தார் தாமரை.
மாதவன் தங்கையை முறைத்து விட்டு, “ஏர் கூலர் நம்ம வீட்ல இருக்குத்த. நான் போய் எடுத்துட்டு வர்றேன்” என்று கிளம்பினான்.
“அண்ணா இங்கேயே இருக்கு. எங்க ரூம்ல மேல போட்டு வச்சுருக்கேன். இல்லனா ஸ்டோர் ரூம்ல இருக்கும். வா, பார்த்து எடுப்போம்” என்று அண்ணனை அழைத்துக் கொண்டு அவள் நடக்க, “எனக்கு ஃபேன் இருந்தா போதும் மா. உங்கத்தை என்னத்தையாவது சொல்லிட்டு இருப்பா பொழுது போகாம, நீ பேசாம இரும்மா” என்று அவ்வளவு நேரமும் நடப்பதை அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்த சந்திர சேகர் சொல்ல, “இருக்கட்டும் மாமா. ஏசி சேராம போய் உங்களுக்கு சளி பிடிச்சா கஷ்டம். வீட்ல இருக்கறதை தானே எடுக்கப் போறோம். நான் எடுத்துட்டு வர்றேன்” என்று அண்ணனுடன் வெளியேறினாள்.
“ஐயோ இப்பவே கண்ணை கட்டுதே” என்று மாதவன் புலம்ப, “அண்ணா” என்று அடிக்குரலில் சீறியவளுக்கு சிரிப்பு வந்து விட்டது.
சரியாக அந்நேரம் இளங்கோ அவளை காணொளி அழைப்பில் அழைக்க, “ஹாய்” என்றவளின் சிரித்த முகத்தை கண்களால் களவாடினான் கணவன்.
“நாங்க வீட்டுக்கு வந்துட்டோம். அண்ணா புது காட் வாங்கியிருந்தது டைமுக்கு டெலிவரி கொடுத்திட்டாங்க. பசங்க ரூம்ல ஃபிக்ஸ் பண்ணியாச்சு. மாமா அதுலதான் படுத்திருக்காங்க. டின்னர் அம்மா வீட்ல சாப்பிட்டோம். மாமா டேப்லெட்ஸ் போட்டாச்சு, அண்ட் இப்போ அவங்களுக்கு டேபிள் ஃபேன் எடுக்கப் போறோம்.” என்று வானதி பேசிக் கொண்டிருக்க, “ம்ம்” என்றான் இளங்கோ.
“நீ சாப்பிட்டியா?” இளங்கோ கேட்க, நழுவிய அலைபேசியை சற்றே உயர்த்தி பிடித்து விழி விரித்துப் பார்த்தாள் வானதி.
“வானதி, சாப்பிட்டியான்னு கேட்டேன்?” இளங்கோ மீண்டும் கேட்க, மாதவன் நமுட்டு சிரிப்புடன் தங்கையை திரும்பிப் பார்த்து விட்டு ஸ்டோர் ரூமிற்குள் நுழைந்தான்.
இப்படி சின்ன சின்னதாய் அன்பை வெளிப்படுத்தும் வார்த்தைகளையும், கேள்விகளையும் கூட அவர்கள் மறந்து விட்டிருந்தது அந்த நொடி முகத்தில் அறைந்தது.
“நான் சாப்பிட்டேன். அம்மா இட்லி சாம்பார் செஞ்சிருந்தாங்க. நீங்க சாப்பிட்டீங்களா?” என்று அவள் கேட்க, அவள் முகத்தில் இருந்து கண்களை விலக்காமல், “ம்ம், டெம்புரா பிரான்ஸ். வெஜ் நூடுல்ஸ்” என்றான் இளங்கோ.
“ஃபேன்ஸி புட்ஸ்.” என்று வானதி கிண்டலாக சொல்ல, முறைத்தான். அவன் உதட்டில் இருந்த புன்னகையின் தடத்தை கண்டு பெரிதாக புன்னகைத்தாள் வானதி.
“ம்ம். இப்பவும் என் சமையல் அருமை உங்களுக்குத் தெரியல பாருங்க” மெல்ல முணுமுணுத்து அவள் நடக்க, இளங்கோ ஒன்றுமே சொல்லவில்லை.
“அப்புறம் சொல்ல மறந்துட்டேன் பாருங்க, வேலைக்கு ஆள் கிடைக்கலங்க. அம்மா, அண்ணி ரெண்டு பேரும் சொல்லி வச்ச இடத்தில இப்போ யாரும் இல்லைன்னு சொல்லிட்டாங்களாம். நீங்க ஏஜென்சில சொல்லி வச்சீங்களா? அவங்க என்ன பதில் சொன்னாங்க?” வானதி கேட்க, “நோ லக்” என்றான் இளங்கோ.
“ஏதாவது அரேஞ் பண்ணலாம். நீ டென்ஷனாகாத பிளீஸ்”
“ஓகே.” என்றாள். அவளை மாதவன் அழைக்க, “நீங்க பசங்ககிட்ட பேசுங்க” என்று அலைபேசியுடன் பிள்ளைகளின் அறைக்குச் செல்ல, “இளங்கோவா பேசுறான்? இங்க கொடு” என்று தாமரை வாங்கிக் கொண்டார்.
அவளும், மாதவனும் ஏர் கூலர், டேபிள் ஃபேன் இரண்டையும் தேடி எடுத்து, ஒன்றை ஹாலிலும், மற்றொன்றை படுக்கை அறையிலுமாக பொருத்தி வைத்தனர்.
“வானதி, உனக்கு வேற எதுவும் தேவைப்பட்டா கால் பண்ணு. நான் காலையில வேலைக்கு போறதுக்கு முன்னாடி வந்துட்டு போறேன். சரியா?” என்று மாதவன் கேட்க, மென்மையாய் தலையை அசைத்தாள் வானதி.
இளங்கோ தன்னை பெற்றவர்கள், தான் பெற்றவர்கள் என வரிசையாக பேசி முடித்து அவளிடம் வர, அதீத சோர்வில் இருந்த வானதி, “நாளைக்கு பேசுறேன்” என்று வைத்து விட்டாள்.
நட்சத்திரா மட்டும் அவளை விடாமல் பிடித்துக் கொண்டு அவளுடன் படுக்க வந்தாள். அவள் மேல் கால் போட்டு, பிஞ்சுக் கரங்களால் முகம் வருடி, மழலை குரலில் கதைப் பேசி, குழந்தை உறங்கிய பின்னும் விழித்தே இருந்தாள் வானதி.
அவள் மனதும், உடலும் அதீத சோர்வில் துவண்டு போய் இருந்தாலும் அச்சமயம் வானதிக்கு வெகுவாக கணவனைத் தேடியது. இளங்கோவின் இறுகிய அணைப்பில், அவன் தோள் வளைவில் முகம் புதைத்து, நுரையீரல் முழுவதும் அவனது வாசத்தை நிறைத்தப்படி கண்ணயற ஏங்கினாள். நட்சத்திரா பிறந்ததில் இருந்தே கணவனை அவளையும் அறியாமல் தவிர்த்து வந்தவள் மனது, இப்பொழுது அவனைத் தேடி தவித்தது.
அன்பும், அனுசரணையுமான இளங்கோவின் அணைப்பு தரும் ஆறுதலுக்காக ஏங்கியவளுக்கு பல நேரங்களில் அறியாமலேயே கணவனுக்கு நெருக்கத்தை மறுத்தது குற்ற உணர்ச்சியை தந்தது. இளங்கோ எதற்காகவும் மனைவியை நெருக்கியதில்லை. முதல் விலகலும், மன விரிசலும் அங்கிருந்து தான் தொடங்கியதோ? என்று யோசித்தபடி உறக்கத்தில் ஆழ்ந்தாள் வானதி.
“நீ நாளைக்கு ஆபீஸ் போகணும் இல்ல? லீவ் எக்ஸ்டெண்ட் பண்ண முடியுமா வானதி?” காலையில் கண் விழிக்கும் போதே முந்தைய இரவு கடைசியாக இளங்கோ அனுப்பியிருந்த செய்தியைதான் வாசித்தாள் வானதி.
“ஃபேமிலி எமர்ஜென்சி” என்று அலுவலகத்தில் அவசர விடுமுறை வெள்ளிக் கிழமை வரைக்குமே எடுத்திருந்தாள் அவள். இன்று கட்டாயமாக வேலைக்கு சென்றாக வேண்டும் அவள். அவளுக்கு முன்னே எழுந்திருந்து, “வானதி” என்று அறைக்குள் தலையை நீட்டி அவளை அழைத்தார் தாமரை. படுக்கையின் ஓரமாக அலைபேசியை வைத்து விட்டு, இரு கைகளாலும் முகத்தையும், கண்களையும் தேய்த்து தூக்கத்தை முழுவதுமாக உதறி எழுந்தாள். அவளின் நாள் ஐந்து மணிக்கேத் தொடங்கியது.