அதிகாலையில் எழுவது வானதியின் அன்றாட நிகழ்வு. அவள் படுக்கையில் எழுந்தமர்ந்ததும் பறவைகளின் கீச்சொலி காதில் விழுவது வாடிக்கை. இன்றைக்கு அறை முழுவதும் நிசப்தமும், குளிரும் நிரம்பியிருக்க, பறவைகளின் கானமே அவளுக்குக் கேட்கவில்லை.
“முகம் கழுவிட்டு வர்றேன்த்த” கதவைத் திறந்து பிடித்தபடி நின்றிருந்த தாமரையிடம் சொல்லி விட்டு தரையில் கால் வைத்தாள். தரை சில்லிட்டு உள்ளங்காலில் பரவிய குளிர் மெல்ல மெல்ல உச்சந்தலை வரை ஊடுருவி சிலிர்க்க வைத்தது. மெதுவாக நடந்து சென்று சந்தேகத்துடன் திரைச்சீலையை விலக்கினாள் வானதி. வெளிச்சக் கீற்றின் அடையாளமே இன்றி மழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது.
அதை நின்று ரசிக்க நேரமின்றி ஓய்வறைக்குள் நுழைந்தாள்.
பதினைந்து நிமிடங்கள் கழித்து அங்கிருந்த கண்ணாடியில் தன் முகம் பார்த்தவளுக்கு, மழை நாளின் முத்தங்கள் நினைவு வந்தது.
மழைக் காலங்களில் வானதி போர்வையை உதறி, விலகினால் போதும், “குளிருது வானதி, படு” என்று அவள் கழுத்தில் முத்தமிட்டு, இழுத்து இறுக்கிக் கொள்வான் இளங்கோ.
“டைம் என்னாச்சு பாருங்க? ஆபீஸிக்கு லேட்டாகலையா?”
“மழை, ரோடு பிளாக், டிராபிக் ஜாம் இப்படி சொல்ல நிறைய காரணம் இருக்கு. ஆபீஸ் பொறுமையா போகலாம்” முத்தங்களுக்கு நடுவில் மூச்சு வாங்கிக் கொண்டு பதில் சொல்வான்.
“உங்களுக்கு என்ன? உங்களை யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க. ஆனா, எனக்கு லேட்டானா..” அவளை பேச விடாமல் தீவிரமாக முத்தமிடுவான்.
“பேசாம லீவ் போடுவோம். என்ன சொல்ற?”
“என்னது?” வானதி அதிர்ச்சியில் விழி விரித்தால், “ம்ம், என்னதுதான்” என்று அவளை மொத்தமாய் தன் வசம் இழுத்துக் கொள்வான்.
அன்றைக்கு தாமதமாகதான் இருவரும் அலுவலகம் செல்வார்கள். மழை நாட்களில் மட்டுமல்ல, மற்ற நாட்களிலும் நேரம் காலம் பார்க்காமல் நெருக்கம் வாய்த்து, நெருங்கி இருந்த காலம் அது.
இதெல்லாம் எப்போது நிகழ்ந்தது? என்று வானதி கண்ணாடியை வெறித்து நின்று யோசிக்க, ம்ஹும் எதுவுமே நினைவில் வரவில்லை. நான்கைந்து வருடங்கள் இருக்குமா? இல்லையென அதற்கும் முந்தைய காலப் பொழுது மங்கலாய் மனதில் வந்து போனது.
“ஆள் முழுங்கி, இவர் ஜப்பான்ல போய் சொகுசா உட்கார்ந்திட்டு இங்க என்னை புலம்ப விட்டுட்டார். ஐ மிஸ் யூ இளங்கோ” கண்ணாடியை பார்த்து கத்தி விட்டு, வெளியில் சென்றாள்.
“எனக்கு காலையில காஃபி குடிக்கலைன்னா வேலையே ஓட மாட்டேங்குது வானதி. ஃப்ரிட்ஜ்ல பால் தேடினேன், காணோம். பால் வாங்கி வைக்கலையா?” தாமரை அவளைப் பார்த்ததும் படபடக்க, அவர் முன்னேயே குளிர்சாதனப் பெட்டியை திறந்து, பாலை வெளியில் எடுத்தாள் வானதி.
“நீங்க ஹால்ல உட்காருங்கத்த. நான் காஃபி போட்டு எடுத்துட்டு வர்றேன்” என்றவளை பார்த்து, “பால் இருக்கா? நான்தான் சரியா பார்க்கலை போல” என்றார் அவர்.
வானதி ஒரு பக்கம் பாலை அடுப்பில் ஏற்றி, மறுபக்கம் காலை, மதிய உணவிற்கான ஆயத்தங்களை பார்க்கத் தொடங்கினாள்.
தாமரைக்கு காஃபி கொடுத்து, வேலைக்கு நடுவில் சூடு குறைந்த காஃபியை சகித்துக் கொண்டு குடித்து முடித்தாள்.
காலை உணவாக மீண்டும் இட்லி, சாம்பார் செய்யும் போதே நேத்ரனின் சுளித்த முகம் நினைவில் வர சிரித்துக் கொண்டாள்.
“அம்மா, இன்னைக்கும் இட்லியா?” கடுப்பாக கேட்டு கண்ணை குறுக்கி அவளைப் பார்ப்பான்.
“நேத்ரா..” என்று இளங்கோ ஒரு முறை அழைத்தால் உடனேயே, “இதோ சாப்பிடுறேன் ப்பா” என்று சமத்தாக பதில் வரும். அதே இட்லி வேகவேகமாக உள்ளே செல்லும். அதுவே இளங்கோ இல்லாத இரவு உணவு நேரமாக இருந்தால், “ஏம்மா, பாப்பாவுக்கு குடுக்கற இட்லியே எனக்கும் கொடுக்கறீங்க? ஐ ஆம் பிக் பாய் நவ். எனக்கு தோசை இல்லனா பூரி வேணும்.” என்று கையை கட்டிக் கொண்டு சொல்வான் நேத்ரன்.
“ஓ? பிக் பாய்? சரிங்க, பெரியவரே. உங்களுக்கு நாளைக்கு காலைல டிஃபனுக்கு பூரி செஞ்சு தரேன். இப்போ இட்லியை அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடுங்க, பிளீஸ்”
“நேத்து காலைலயும் இட்லி தான் சாப்பிட்டேன். போன வாரம் கூட நாலு நாள்..” என்று கணக்குச் சொல்லி பெரிதாய் புலம்புவான்.
வானதி குரலை சற்றே உயர்த்தினாலும், “சாரி மா” என்பான்.
“அப்பாவுக்கும் இட்லிதான்” என்றதும், அவன் தலை தட்டை நோக்கி குனிந்து விடும். அதற்கு மேல் அவளிடம் வாதாடாமல் சாப்பிட தொடங்கி விடுவான்.
இன்றைக்கும் பெரியவர்கள் முன் வாதாட மாட்டான் என்பது அவளுக்கு நிச்சயம். ஆனாலும், மதிய உணவாவது மகனுக்கு பிடித்ததாக சமைக்க எண்ணினாள்.
அதனால் குழந்தைகளுக்கு மட்டுமாக வெஜிடபிள் பிரியாணி செய்தாள்.
சமையல் வேலை பரபரப்புக்கு இடையில் சென்று மகனை எழுப்பி விட்டாள்.
“ஸ்கூலுக்கு லேட்டாக போகுது நேத்ரா, எழுந்துக்கோ தம்பி” மகனின் கைப் பிடித்து எழுப்பி, படுக்கையில் இருந்து அவன் இறங்கவும்தான் ஆசுவாச மூச்சுடன் திரும்பினாள். அந்த சத்தத்தில் சந்திரசேகர் எழுந்து கொள்ள, அவருக்கு ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த சத்து மாவு கஞ்சியை டம்ளரில் ஊற்றி தாமரையிடம் கொடுத்தாள்.
அதைக் கையில் வாங்கிக் கொண்டு, “மதியத்துக்கும் இப்பவே சமைக்கிற போல?” என்று அவர் கேட்க, “ஆமாத்த.” என்றாள்.
“நான் ஆபீஸ் போகணும் அத்த. அதான்” அந்த பதிலில் அதிர்ச்சியாகி, “ஆஃபீஸ் போறியா? நீ லீவ் போடலையா? நீ லீவ் போட்டுருக்கேன்னு இல்ல நினைச்சேன். உங்க மாமாவுக்கு உடம்புக்கு முடியாம இருக்கும் போது நீ ஆபீஸ் போய்ட்டா, நான் ஒத்தையா எப்படி அவரை பார்த்துப்பேன்?” என்று சரமாரியாக கேள்விக் கணைகளை தொடுத்தார் அவர்.
“தாமர..” உள்ளிருந்து சந்திரசேகர் அழைக்க, “இந்தா வர்றேங்க.” என்றவர், வானதியை பார்த்து, “என்னவோ பண்ணுங்க. வீட்டு பெரியவங்க மேல கொஞ்சமாவது அக்கறை இருந்தா இப்படி இருப்பீங்களா ரெண்டு பேரும்? உன் புருஷன் பொறுப்பை தட்டி கழிச்சுட்டு ஜப்பானுக்கு போயாச்சு. நீ எங்களை வீட்ல விட்டுட்டு வேலைக்கு கிளம்பறேன்ற, ஒரு அவசரம்னா நான் என்ன பண்ணுவேன்?” என்று புலம்பிக் கொண்டே அவர் கேள்வி கேட்க, எல்லாம் தெரிந்தும் கேள்வி கேட்பவருக்கு விளக்கம் சொல்வதே வீண் என்று விலகி செல்லவே நினைத்தாள் வானதி.
ஆனால், இளங்கோவை பொறுப்பில்லாதவன் என்று சொன்னது கோபத்தை ஏற்படுத்த, “ஜப்பான்ல இருந்தாலும் அவர்தான் எல்லாத்தையும் பொறுப்பா செஞ்சார் அத்த. இப்பவும் ஆபீஸ் போய் என்னை லீவ் போட்டு வர சொன்னார். அதுக்காகதான் ஆபீஸ் போறேன்” என்று சூடான பதிலை குளிர்ந்த குரலில் சொல்லி விட்டு சமையல் அறைக்குச் சென்றாள்.
சத்தமில்லாமல் அவள் பின்னே வந்து நின்று, “அம்மா, மழை பெய்யுது” என்றான் நேத்ரன்.
“ம்ம், நனையாம இருக்க ரெயின் கோட் போட்டுக்கலாம். போய் குளி ஓடு. மணி ஏழாக போகுது”
“ம்மா, ஹெவி ரெயின் மா”
“சரி டா. நானும் பார்த்தேன். அதுக்கு என்ன பண்ண இப்போ?” சமையலை கவனித்தபடி அவள் அலுப்புடன் கேட்க, “நியூஸ் பார்க்கவா? லீவ் சொல்லுவாங்க” அவள் கையைப் பிடித்துக் கொண்டு மலர்ந்த முகத்துடன் ஒட்டு மொத்த பற்களையும் சிரிப்பில் காட்டி நேத்ரன் கேட்க, “பாலை குடிச்சுட்டு குளிக்கப் போ” என்று கண்ணை உருட்டினாள் வானதி.
“போங்கம்மா” சலிப்புடன் பாலை குடித்து விட்டு, “உங்க போன் எங்கம்மா? லீவ்னா ஸ்கூல்ல இருந்து உங்களுக்குதானே மெசேஜ் வரும்?” என்று விடுமுறை ஒன்றே குறிக்கோளாக அவன் கேட்க, இடுப்பில் கை வைத்து மகனை முறைத்து பார்த்தாள் வானதி.
“சாரிம்மா. நான் போய் குளிச்சு ரெடியாகுறேன். நீங்க சிரிங்க, பிளீஸ்” என்றவன், சட்டென அறைக்குள் ஓடிப் போனான். புன்னகைத்தாள் வானதி.
“தாத்தாவுக்கு டீவி போட்டு விடு. நான் நியூஸ் பார்த்து சொல்றேன்” சந்திர சேகர் அவனிடம் சொல்வது கேட்டது. சற்று நேரத்தில் ஹாலில் தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருந்தார் அவர்.
கதம்ப சாம்பார், மிளகு ரசம், புடலங்காய் கூட்டு, அவரைக்காய் பொரியல் என மதிய உணவுக்கான சமையலை அவள் செய்துக் கொண்டிருக்க, “ம்மா” என்று நட்சத்திராவின் குரல் கேட்டது.
அடுப்பை குறைத்து வைத்து விட்டு சென்று மகளை தூக்கினாள் வானதி. அவளை ஓய்வறை செல்ல வைத்து, பல் துலக்கி, முகம் கழுவி, உடை மாற்றி வெளியில் தூக்கி வந்தாள். நேத்ரன் பள்ளிக்கு தயாராகி வர அவனுக்கு காலை உணவை கொடுத்தாள்.
“லஞ்ச்க்கு என்னம்மா?” இட்லியை சாப்பிட்டபடி கேட்டவனின் கவனம் முழுவதும் தொலைகாட்சியில் ஓடிக் கொண்டிருந்த செய்தியில்தான் பதிந்திருந்தது.
அந்நேரம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அறிவிக்கப்பட, “ஹே..” என்று உற்சாகத்துடன் கத்தினான்.
“லீவா? ரொம்ப நல்லதா போச்சு. இப்ப நீயும் வீட்ல இருக்கணுமே.” என்ற புலம்பலுடன் தலையில் கை வைத்தாள் வானதி.
அவளுக்கு அந்த காலை வேளையிலேயே தலை வலியின் அறிகுறி தெரிந்தது.
“தாத்தா, பாட்டியை நான் பார்த்துக்கிறேன் மா. நீங்க ஆபீஸ் போய்ட்டு வாங்க” என்று நேத்ரன் சொல்ல, மகனைப் பார்த்து புன்னகைத்தாள். அவளின் அலைபேசி ஒலியெழுப்ப, ஓடி போய் எடுத்து வந்து அவள் கையில் தந்தான் நேத்ரன்.
“அப்பா பேசுறாங்கம்மா” அலைபேசி திரையில் அலுவல் உடையில் பளிச்சென்று அவர்களுக்கு காட்சி தந்தான் இளங்கோ.
“குட் மார்னிங்” பொதுவாக சொன்னான். “ஸ்கூல் லீவ் போல, மெஸேஜ் வந்தது” என்று அவன் சொன்னதும் கண்களால் அவனை எரித்தாள் வானதி.
“என்னாச்சு?” அவளின் பார்வையை கவனித்து அவன் கேட்க, வேக வேகமாக தங்களின் அறைக்குள் சென்று கதவடைத்தாள். “என்னைக்காவது நான் அனுப்பற மெசேஜை இவ்வளவு வேகமா பார்த்திருக்கீங்களா?” கடுப்புடன் கேட்டாள்.
“ஓ, பார்க்க மட்டுமில்ல. மின்னல் வேகத்தில பதிலும் அனுப்பியிருக்கேன்” குறுஞ்சிரிப்புடன் குறும்பாக ஒற்றை கண் சிமிட்டி சொன்னான் இளங்கோ.
“எப்போ?”
“எப்போவா? ம்ம், நீ எப்பவும் போல மறந்துட்ட வானதி. விடிய, விடிய மணிக்கணக்கா, நோக்கியா பட்டன் வச்ச செல்போன்ல, என் விரல் ரேகை தேஞ்சு போற அளவுக்கு உனக்கு மெசேஜ் அனுப்பியிருக்கேன். ஞாபகம் இருக்கா?” அவள் விழிகளில் இருந்து விழிகளை விலக்காமல் அவன் சொல்ல, வெட்கப் புன்னகையுடன் இளங்கோவை முறைத்தாள் வானதி.
“ஜிமெயில் வந்த புதுசுல எவ்வளவு சாட் பண்ணியிருப்போம். என் கம்ப்யூட்டர்ல எப்பவும் அந்த விண்டோ ஓபன்ல தான் இருக்கும்.” இளங்கோ ரசனையுடன் மனைவியை பார்த்து, காதல் காலங்கள் தந்த காதலை கண்களில் தேக்கி அந்த நாள் நினைவுகளை பகிர்ந்து கொள்ள, “இங்க மழை பெய்யுது” புன்னகையை இதழ்களுக்குள் மறைத்தபடி சொன்னாள் வானதி.
“அடி சக்க. ம்ம். ரெண்டு மணி நேரம் பெர்மிஷன் போட்டிருக்கலாம். மிஸ் ஆகிடுச்சு வானதி.” என்றான் இளங்கோ. வானதி பதிலே சொல்லவில்லை.
“லீவ், பெர்மிஷன் இதெல்லாம் எடுத்து எவ்ளோ நாளாச்சு வானதி” திடீர் ஞானோதயம் வந்தது போல இளங்கோ சொல்ல, “நீங்க இப்படி பேசிக் கூட எவ்ளோ நாளாச்சு தெரியுமா?” என்று எதிர்க்கேள்வி கேட்டு நாக்கை கடித்தாள் வானதி.
மறுகணம் இருவரின் பார்வையும் தொட்டு உறைந்து நின்றது. பால்கனி கதவை பிடித்தபடி நின்றிருந்தாள் வானதி. மழைச் சத்தம் இருவரின் செவியிலும் விழுந்து மனதை ஈரமாக்கியது.
அந்நேரம், “வானதி” என்று வெளியில் இருந்து தாமரையும் அழைக்க, “அப்புறமா பேசவா?” என்று கேட்டாள் வானதி.
“ம்ம், நானும் மீட்டிங் போகணும். ஒரு ரெண்டு நாளைக்கு மட்டும் லீவ் போட முடியுதான்னு பாரேன் வானதி பிளீஸ். அதுக்குள்ள ஏஜென்சி ஆள் அனுப்பிடுவோம்னு சொல்லியிருக்காங்க.”
“ஓகே” என்றாள். வெளியில் வந்து அலைபேசியை மகன் கையில் கொடுத்து விட்டு, அழைப்பு மணியோசை கேட்கவும், அவளை வால் பிடித்த மகளை தூக்கிக் கொண்டு கதவை திறக்கப் போனாள்.
“அத்த.. நட்சத்திரா..” என்று கத்திக் கொண்டு ஹரிணி நிற்க, அவளுக்கு பின்னால் பாக்கியம் நின்றிருந்தார்.
“என்னம்மா இந்நேரம் வந்திருக்க?” வானதி அம்மாவை ஆச்சரியமாக பார்த்து கேட்க, “ஏன், என் பொண்ணு வீட்டுக்கு நான் வரக் கூடாதா வானு” என்று எதிர்கேள்வி கேட்டபடி உள்ளே வந்தார் பாக்கியம்.
“பசங்களுக்கு ஸ்கூல் லீவ் விட்டுட்டாங்க இல்ல? உங்கத்தை, மாமா வேற தனியா இருப்பாங்க. நீயும் ஆபீஸ் போகணும்னு சொன்ன. அதான் மாதவன்கிட்ட சொன்னேன். அவன்தான் எங்களை கூட்டிட்டு வந்து கீழ விட்டுட்டு அவனுக்கு லேட்டாச்சுன்னு அப்படியே போயிட்டான்”
என்றார் பாக்கியம். வானதி புன்னகைக்க, “வாய் பேசாம, போய் வேலைக்கு கிளம்புற வழியை பாரு” என்று மகளை பேச விடாமல் உள்ளே தள்ளினார் அவர்.
“அப்பா, ஆச்சி வந்திருக்காங்க” நேத்ரன் இளங்கோவிடம் கத்துவது கேட்டது. மகளை அம்மாவிடம் கொடுத்து விட்டு அலுவலம் கிளம்பினாள் வானதி.
அத்தை, மாமா இருவருக்கும் காலை உணவு கொடுத்து, மாமா மாத்திரை எடுத்துக் கொண்டதை உறுதி செய்துக் கொண்டு கார் சாவியுடன், “நான் மதியம் வந்துடுவேன் மாமா. நீங்க அதுவரைக்கும் ரெஸ்ட் எடுங்க” என்று வாசலை நோக்கி நடந்தாள்.
பாக்கியம் அவள் பின்னாலேயே வர, “ஒருவேளை வேலை நிறைய இருந்தா நான் வர லேட்டாகும். நீ பார்த்துக்குவ தானேம்மா?” குரலை தழைத்து கெஞ்சுதலாக அவள் கேட்க, திரும்பி தாமரையை பார்த்து ஏதோ சொல்ல வந்தவர், “நான் பார்த்துக்கறேன். நீ பொறுமையா வா” என்று முடித்தார்.
அம்மாவின் பார்வையின் பொருள் அவளுக்கும் விளங்கவே செய்தது. ஆனாலும், எதுவும் சொல்லவில்லை வானதி.
“ம்மா..” என்று கை நீட்டி நட்சத்திரா கத்தி அழ, “ஈவ்னிங் கார்ல டிரைவ் கூட்டிட்டு போறேன் அம்மா. ஓகே? அழ கூடாது செல்லம்” மகளிடம் சொல்லிக் கொண்டே பின்னோக்கி நடந்தாள்.
“நானும் வர்றேன் ம்மா..” மழலையில் மகள் கதற, மனமின்றி அலுவலகம் சென்றாள் வானதி. மழை, போக்குவரத்து நெரிசல் என தாமதமாகதான் அலுவலகம் சென்றாள்.
அவளுக்கு பணி அக்கவுண்ட்ஸ் பிரிவில் என்பதால், வேலைகள் எதுவும் அவளுக்காக காத்திருக்கவில்லை. ஆனால், அவளின் பார்வைக்காக, அனுமதிக்காக, கையொப்பத்திற்காக ஒரு கட்டு கோப்புகள் அவள் மேஜை மேலிருந்தது. கணினியை திறக்க, எண்ணற்ற ஈமெயில்கள் இன்பாக்ஸை நிறைத்திருந்தது.
சக பணியாளர்கள், அலுவலக நண்பர்கள் என அனைவரும் விசாரிக்க, அவர்களுக்கு பதில் சொல்லி விட்டு வேலையில் மூழ்கினாள். மதியம் ஒரு மணியாகும் போது அறையில் சட்டென அமைதி படர, நிமிர்ந்து பார்த்தாள். பாதி இருக்கைகள் காலியாக இருந்தது.
“ஹேய் வானதி, வந்தாச்சா? உங்க மாமாக்கு எப்படியிருக்கு இப்போ?” லாவண்யா அவர்கள் பகுதிக்கு வந்து கேட்க, “ம்ம், இப்போ பெட்டர் லாவண்யா.” கவனம் கணினியில் இருக்க பதில் சொன்னாள் வானதி.
“ம்ம், இளங்கோ வர இன்னும் ஆறு நாள் ஆகும். அத்தை மாமாவை தனியா விட்டு வரலப்பா, வீட்ல எங்கம்மா இருக்காங்க.” என்றவள், “அம்மாவையும், அத்தையையும் ஃபுல் ஹெல்த் செக்கப்புக்கு கூட்டிட்டு போகணும். ரெண்டு நாளா அதுவே மனசுல ஓடிட்டு இருக்கு” வானதி சொல்லவும், “ம்ம், நானும் பண்ணணும்னு நினைச்சேன் பா. அவங்களுக்கு மட்டுமில்ல நமக்கும் சேர்த்து பார்க்கணும் நாம” என்றாள் லாவண்யா அழுத்தமாக.
வானதி கணினியில் இருந்து கண்களை திருப்பி அவளை அதிர்ச்சியுடன் பார்க்க, “ஹேய் என்னப்பா அப்படி பார்க்கற? நமக்கும் 35 ஆகுது இல்ல? டாக்டர்ஸ் வருஷத்துக்கு ஒருமுறை ஸ்கேன், மெமோகிராம் எல்லாம் எடுக்க சொல்றாங்கதானே? சுகர், பிரஸர், தைராய்டு எல்லாம் டெஸ்ட் பண்ணனும் வேற” வானதியின் தோளில் கைப் போட்டு சொன்னாள் லாவண்யா.
“நமக்கு வயசாகுதா லாவண்யா?” வானதி கவலையுடன் முகத்தை தீவிரமாக வைத்துக் கேட்க, “எஸ். உனக்கு முதல்ல பையனா போயிட்டான். அதுனால தப்பிச்ச. என் பொண்ணுக்கு இப்பவே பதிமூனு வயசாகுது. ஸ்கூல்ல இருந்து கால் வந்தாலே கை, கால் எல்லாம் உதறுது தெரியுமா” அதைச் சொல்லும் போதே உதறிய அவள் கரத்தைப் பார்த்து, அவளின் கைப் பிடித்து அழுத்திக் கொடுத்து சிரித்தாள் வானதி.
“சரி, வா. லஞ்ச் போவோம். மீதி வேலையை வந்து பாரு” வானதியை கட்டாயப்படுத்தி இழுத்துக் கொண்டு போனாள் லாவண்யா.
“ஏன் லாவண்யா, இன்னும் நாலு நாள் லீவ் கேட்டா மேலிடம் முடியாதுன்னு சொல்லிடுவாங்களா?”
“வாய்ப்பிருக்கு”
“ஆனா, நான் லீவ் எடுத்தே ஆகணுமே. காலையில போன் பண்ணி வானதி வந்துட்டீங்களா? இனி வேலை வேகமா நடக்கும்னு மட்டும் சொன்னார் சீஃப். அதான் அப்பவே லீவ் கேட்கல. இனிமேல் தான் லீவ் கேட்டு மெயில் பண்ணலாம்னு இருக்கேன்.”
“ம்ம். ஒருநாள் எடுத்துக்கோங்க. அப்படினு பெருந்தன்மையோட பதில் வரும், பாரேன்” லாவண்யா நக்கல் சிரிப்புடன் சொல்ல, “பேப்பர் போட்டுடுவேன்..” என்று சிரிப்புடன் வானதி சொல்லி முடிக்கும் முன்பே, “என்னது வேலையை விடப் போறீங்களா?” என்று அதிர்ச்சியுடன் கத்தினாள். அந்நேரம் அவர்களை கடந்த, அவளுக்கு கீழ் பணிபுரியும் பிரமிளா.
வானதி பதில் சொல்லும் முன், “உங்க ஹஸ்பண்ட் கம்பெனிக்கு மாற போறீங்களா?” என்று அவள் கேட்க, இல்லையென்று தலையசைத்தாள் வானதி.
பிரமிளா ஏதோ முணுமுணுத்து கொண்டு நகரவும், “அந்த ஜப்பான் கார் கம்பெனி பேரை கேட்டாலே எனக்குப் பிடிக்காது. இளங்கோவை அவனுங்க தத்தெடுத்துக்கிட்டானுங்க. இதுல நானும் அங்க போகணுமா? நெவர்” கடுப்புடன் சொன்னாள் வானதி.
கலகலவென்று சிரித்த லாவண்யா, “அதுவொரு நல்ல ஐடியா தெரியுமா?, பேசாம நீயும் அங்கேயே வேலைக்கு போயேன். வீட்லதான் அவங்க முகத்தை பார்க்க முடியல. ஆபீஸ்லயாவது பத்து மணி நேரம் நிதானமா அவங்களை பார்த்து பேசுவோம். என்ன சொல்ற வானதி?” லாவண்யா கேட்கவும், அந்தக் கேள்வியில் இருந்த உண்மையில், கேலியில், வருத்தத்தில் பதில் பேச முடியாது சமாளிப்பாக புன்னகைத்தாள் வானதி. வேலையை சாக்கிட்டு சட்டென உணவை முடித்து எழுந்து கொண்டாள்.